01 January 2014

மனிதரில் மாணிக்கங்கள் : தினமணி புத்தாண்டு மலர் 2014



பல இலக்கியவாதிகளும், அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் சுய சரிதை எழுதியுள்ளனர். அவ்வாறே தாம் வாழ்வில் சந்தித்த மனிதர்களையும், எதிர்கொண்ட நிகழ்வுகளையும் நினைவாற்றலுடன் அனைவருடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் பலர் வாழ்வியல் அனுபவங்களை எழுதியுள்ளனர். சந்தித்த மனிதர்களைப் பற்றி எழுதுவது என்பது கத்திமேல் நடப்பதைப்போல. ஏதாவது ஓரிடத்தில் விடுபாடோ, மிகைப்பாடோ இருப்பின் அவை பல எதிர் நிகழ்வுகளை உண்டாக்கிவிடும். கண்ணாடியைக் கையாளுவதைப் போல கையாளும் ஆசிரியர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதை உணர்த்துகிறது கே.நட்வர்சிங் எழுதியுள்ள "சிங்கங்களுடன் நடந்தபோது" (Walking with Lions : Tales from a Diplomatic Past, K.Natwar Singh) என்ற நூல். தன் வாழ்வில் பல அரிய மனிதர்களைச் சந்தித்ததாகவும், அது தனக்குக் கிடைத்த பெரும் பேறு என்றும் கூறும் ஆசிரியர், அவர்கள் மூலமாக தன் வாழ்வும், இலக்கும் மேம்பட்டது என்கிறார். 


50 கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலில் அவர் தான் தொடர்பு கொண்ட இந்திய மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இவ்வனுபவங்கள் வித்தியாசமானதாகவும், சுவாரசியமானதாகவும், ஆவலோடு ரசிக்கத்தக்கதாகவும் உள்ளன. சில வியப்பைத் தருகின்றன. ஆங்காங்கு அவருடைய எழுத்தின் ஆற்றல் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.   இந்நூலிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.
பலருடனான அனுபவங்களைப் பற்றி எழுதும் நட்வர்சிங், தான் மதிப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ஃபீடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா, வியட்நாம் அதிபர் வோ இங்குயென் கியாப், கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.  

ஃபீடல் காஸ்ட்ரோ
நட்வர்சிங் அதிகமாகப் பாராட்டுபவர்களில் ஒருவர் ஃபீடல் காஸ்ட்ரோ. வாழும் வரலாறு என்று அவருக்குப் புகழாரம் சூட்டும் நட்வர்சிங் அவருடனான நெருக்கத்தினை  விவாதிக்கும் விதம் படிப்பவர் மனதில் பதிந்துவிடும். "கூட்டு சேரா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காகத் திட்டமிட 1982 இறுதியில் நான் ஹவானா சென்றேன். ஆறாவது மாநாடு 1979இல் ஹவானாவில் நடைபெற்றது. அப்போது அவ்வியக்கத்தின் தலைவராக ஃபீடல் காஸ்ட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்....என்னைப் பொருத்தவரை அவர் அதிகம் மதிக்கத்தக்கவர்....1953இல் நடந்த புரட்சியின் விளைவாக அவர் சிறை செல்ல நேர்ந்தது. விசாரணையின்போது அவர் பேசிய பேச்சு அனைவருடைய மனதிலும் பதிந்த, மறக்கமுடியாத ஒன்று: 'எனக்குத் தெரியும், இந்த ஆட்சி அனைத்து வழிகளிலும் உண்மையை அடக்க முயற்சிக்கும்;  எனக்குத் தெரியும், என்னைச் சுவடின்றிப் புதைக்க சதி நடக்கும்; ஆனால் என் குரலை நெரித்துவிடமுடியாது; நான் தனியாக இருப்பதாக இருந்தால் கூட அது என் இதயத்திலிருந்து எழும்....என் இதயம் அதற்கு போதிய நெருப்பினைத் தரும், கோழைகள் இதனை மறுக்கலாம்...முடிவுகள் எனக்குப் பாதகமாக எடுக்கப்படலாம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. வரலாறு என்னை இவற்றிலிருந்து விடுவிக்கும்.' ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை. கற்பனை செய்து பாருங்கள். நினைக்க முடியாத ஒன்று நடந்தது. நான் தங்கியிருந்த கடைசி நாள் அவரது அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு. நான்கே சொற்கள். ஃபீடல் காஸ்ட்ரோ உங்களைக் காண உள்ளார். எனக்கோ ஒரு புறம் தயக்கம், மறுபுறம் மகிழ்ச்சி. அப்போது என் மனதில் உதித்தது இதுதான்: 'நான் அவரிடம் என்ன பேசப்போகிறேன்?'. நான் அனாவசியமாகக் கவலைப்பட்டிருக்க வேண்டியதில்லை. அவர் மிகவும் இலகுவாகக் கேட்டார், 'கூர்க்காக்கள் யார்?  பாக்லாந்து தீவுகளில் அவர்கள் என்ன செய்கின்றார்கள்?'. க்யூபாவின் அதிபரிடம் கூர்க்காக்களின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறினேன்...........நான் அவரிடம் கேட்டேன்: 'மேன்மை தங்கிய ஐயா, நீங்கள் கூர்க்காக்களைப் பற்றிக் கேட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது.' அதற்கு அவர், மௌரிஸ் கர்சாக் எழுதிய அன்னபூர்ண என்ற நூலை அண்மையில் படித்ததாகவும் அந்நூலில் அவர்களைப் பற்றிய குறிப்பு இருந்ததாகவும்  கூறினார்.  இம்மாமனிதருடன் இரு முறை சந்தித்துப் பேசும் வாய்ப்பினை நான் பெற்றேன்".    

ஃபீடல் காஸ்ட்ரோ தன்னைக் காணவருகிறார் என்றவுடன் பெற்ற மன நிறைவைவிட ஒரு பிரச்சினையை அவர் தீர்த்த விதத்தை  நட்வர்சிங் பகிர்ந்துகொள்ளும்விதம் நம்மைவிட்டு ஒரு சுமை இறங்கியதைப் போல உணரவைக்கும். அதனை நட்வர்சிங் கூறக் கேட்போம். "7.3.1983 அன்று கூட்டுசேரா இயக்க மாநாட்டை அதிபர் ஃபீடல் காஸ்ட்ரோ தொடங்கிவைத்தார். அவரது வலப்புறம் இந்திரா காந்தி. இடப்புறம் நான். அந்தப் புகைப்படம் உலகில் ஆயிரக்கணக்கான செய்தித்தாள்களில் வெளியானது. காஸ்ட்ரோவிற்கு எதிரான கொள்கை கொண்ட நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள்கூட அப்புகைப்படத்தை வெளியிட்டது....தொடக்க விழா நிகழ்வுகள் முடிந்ததும், ஐந்து குழுக்களின் தலைவர்கள் முதன்மை அமர்வில் உரையாற்றினர். அவர்களில் ஜோர்டான் மன்னரும், பாலஸ்தீன விடுதலை இயக்க யாசர் அராஃபத்தும் இருந்தனர். அந்த அமர்வு மிக எழுச்சியான குறிப்புடன் நிறைவடைந்தது....
அப்போது ஓர் எதிர்பாராத சிக்கல்....மதிய உணவு இடைவேளையின்போது துணை பொதுச்செயலர் எஸ்.கே.லம்பா என்னை அழைத்தார். 'ஐயா! நாம் இப்போது ஒரு சிக்கலில் இருக்கிறோம். காலை அமர்வின்போது ஜோர்டான் நாட்டு மன்னர் பேசியபின்பு தான் பேச அழைக்கப்பட்ட நிலையில் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதுவதாக அராஃபத் இப்போதுதான் கூறினார். அவர் ஆகாய விமானத்தைத் தயார் நிலையில் வைக்கக் கூறியுள்ளார். அவர் புதுதில்லியை விட்டு விரைவில் கிளம்பவுள்ளார்'.  நான் உடனே இதனை இந்திரா காந்தியிடம் தெரிவித்தேன். மதிய அமர்வு வரை காஸ்ட்ரோ தலைவராக இருப்பதால் அவரிடம் இதுபற்றித் தெரிவிக்கவேண்டும் என்றேன். இந்திரா காந்தியும் அவ்வாறே செய்தார். சிறிது நேரத்தில் காஸ்ட்ரோவும் வந்துவிட்டார். காஸ்ட்ரோ அராஃபத்தை அழைக்க, அராஃபத்தும் விரைவாக  வந்துசேர்ந்தார். உணர்ச்சிவசப்பட்ட அராஃபத்தை ஃபீடல் காஸ்ட்ரோ கையாண்ட விதம் ஒரு பாடம் எனலாம். காஸ்ட்ரோ சற்றுக் கோபமாக இருந்தாலும், நிதானமாக இருந்தார்..... காஸ்ட்ரோ அராஃபத்திடம், 'நீங்கள் இந்திரா காந்தியின் நண்பர்தானே?' என்று கேட்டார். அராஃபத் இதமான, தெளிவான பதிலை  காஸ்ட்ரோவிடம் கூறினார்:  'நண்பரே, இந்திரா காந்தி என் மூத்த சகோதரி. நான் அவருக்காக எதையும் செய்வேன்.'...  காஸ்ட்ரோ, அராஃபத்தை ஒரு கல்லூரி மாணவரை எச்சரிப்பதைப் போல எச்சரித்துவிட்டு, 'ஒரு தம்பியைப் போல நடந்துகொள்ளுங்கள். மதிய அமர்வில் கலந்துகொள்ளுங்கள்' என்றார். அராஃபத், காஸ்ட்ரோவின் கருத்தை ஏற்றுக்கொண்டார்". காஸ்ட்ரோவின் சமயோசிதப் பேச்சால் இப்பிரச்சினை மிகவும் சுமுகமாக முடிந்தது.



நெல்சன் மண்டேலா
ஒரு பெரும் கதாநாயகராக உலகம் முழுதும் மதிக்கப்பட்டு போற்றப்படும் மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா என்று கூறும் நட்வர் சிங், மண்டேலா சிறைவாசம் முடித்து 11.2.1990 அன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்தபோது இந்தியா சார்பாக அவருக்கு வாழ்த்து அனுப்ப வெளியுறவுத்துறையிலிருந்து கூடுதல் செயலர் நிலையில் ஒருவர் அப்போதைய அரசால் அனுப்பப்பட்டது போதுமானதல்ல என்றும்,  அந்த மறக்கமுடியா நிகழ்வினை நினைவுகூறும் வகையில் ராஜீவ்காந்தி தலைமையிலான குழு அனுப்பப்படவேண்டும் என கட்சியில் பலர் பரிந்துரைத்ததன் பேரில் ராஜீவ் காந்தி அனுப்பப்பட்டார் என்றும் கூறுகிறார். அவர் எழுதுவதைப் படிக்கும்போது அக்குழுவில் நாமும் இருப்பதைப்போன்ற உணர்வு ஏற்படும்.  "ராஜீவ் காந்தி, நெல்சன் மண்டேலாவை 21.3.1990 அன்று சந்தித்தார். மண்டேலா அவரை அன்போடு வரவேற்றார். ராஜீவ் காந்தி பேச்சின் ஆரம்பம் இவ்வாறு இருந்தது. 'திரு மண்டேலா அவர்களே, நான் உங்களைச் சந்திக்கப் போகிறேன் என்று கூறியவுடன் என் மகள், நான் உங்களுடன் கைகுலுக்கும்போது அவளை நினைத்துக்கொள்ளவேண்டும் என்று உறுதியாகக் கேட்டுக்கொண்டாள். இப்போது அதை நான் செய்கிறேன்' என்றார் ராஜீவ்.  மண்டேலா அதனை அதிகம் ரசித்தார். பரஸ்பர அறிமுகத்திற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ராஜீவ் காந்தி தென்னாப்பிரிக்காவின் நிலையைக் கேட்டார். அதற்கு பதில் தரும் முன்பாக  தன் சிறைவாசத்தின்போது காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை மண்டேலா நினைவு கூர்ந்தார்.......ராஜீவ் காந்தி இந்தியாவின் நிலையை எடுததுக்கூறினார்........அப்போது மண்டேலாவுக்கு வயது 72, ராஜீவ் காந்திக்கு வயது 45. பேச ஆரம்பித்த சில மணித்துளிகளில் வயது வித்தியாசம் எல்லை கடந்துவிட்டது. மண்டேலா ராஜீவின் மகிழ்வுந்து வரை துணைக்கு வந்தார். பின்னர் வின்னி மண்டேலாவும் சேர்ந்துகொண்டார்....திரும்பும் வழியில் ராஜீவ் காந்தியும் நானும் பேசவேயில்லை. நாங்கள் இன்னும் மண்டேலாவின் நினைவுகளையே சுவாசித்துக் கொண்டிருந்தோம்".         

வோ இங்குயென் கியாப்
தன் அனுபவ அறிவின் ஒரு பகுதியினைப் பெறக் காரணமாக இருந்தவர் அதிபர் வோ இங்குயென் கியாப் என்று வெளிப்படையாகக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் நட்வர்சிங்.  "அதிபர் வோ இங்குயென் கியாப்பை நான் பல முறை ஹனோய், தில்லி மற்றும் கல்கத்தாவில் சந்தித்துள்ளேன்...மே 1954இல் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்த வகையில் என்றும் நிலைத்திருக்கும் புகழ் பெற்றவர் அவர்....போரில் அவர் மாசேதுங்கின் கொரில்லாப் போர் முறையைக் கையாண்டார்: 'எதிரி முன்னுக்குச் செல்லும்போது பின்வாங்கு, நிற்க ஆரம்பித்தால் தொல்லை கொடு, சோர்ந்துபோனால் தாக்கு, ஒதுங்க ஆரம்பித்தால் பின் தொடர்'. போரில் வெல்வது என்பது முதல் படி. போருக்குப் பின்னான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். அவர் என்னிடம் கூறினார்: 'போருக்குப் பின் நிர்வாகத்தில் ஒழுங்கு, பொருளாதாரத் திட்டம், உதவி மற்றும் புனரமைப்பு என்ற நிலையில் ஒரு நாளைக் கூட நாங்கள் வீணடிக்கவில்லை. போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இவற்றைப் பற்றியெல்லாம் நாங்கள் திட்டமிடாமல் போயிருந்தால் நாங்கள் தோற்றுப்போயிருப்போம். இறுதியாக, எங்கள் சிந்தனை வென்றது'....நெப்போலியன் ஒரு முறை புகழ்பெற்ற இச்சொற்றொடரைக் கூறிப் பெருமைபட்டுக் கொண்டார். : 'சூழ்நிலை! நான் சூழ்நிலையை உண்டாக்குகிறேன்'. அவ்வாறே வோ இங்குயென் கியாப் சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொண்டார், ஆனால் எவ்வித பகட்டுமின்றி. 2005இல் கடைசியாக நான் அதிபரை ஹனோயில் சந்தித்தேன். என் துணைவியாரும் உடனிருந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை கௌரவிக்கும் முகத்தான் அவர் முழு ராணுவ உடையில் இருந்தார். அவரது மனைவி எங்களை உபசரித்தார். அவர் எங்களுக்கு அவருடைய கையொப்பமிட்ட நூல்களைத் தந்தார். புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 95. ....நான் என் வாழ்க்கையில் மிகவும் தாமதமாக அனுபவ அறிவினைப் பெற்றேன். அவற்றில் சில நான் வோ இங்குயென் கியாப்பிடமிருந்து பெற்றதென்றால் அது மிகையல்ல". 

டான் பிராட்மேன்
ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தபோது பெற்றதைவிட அதிக ஒரு மன மகிழ்ச்சியை டான் பிராட்மேனைச் சந்தித்தபோதுப் பெற்றதாகக் கூறும் நட்வர்சிங், அச்சந்திப்பின் மூலம் தன் நீண்ட நாள் கனவு நனவானதாகக் கூறி மகிழ்ச்சியடைகிறார். அதேசமயம் அவருடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தான் இல்லை என்பதையறிந்து வேதனைப்படுகிறார்.  "நான் அதிபர் வோ இங்குயென் கியாப்பையும் நெல்சன் மண்டேலாவையும் பல முறை சந்தித்துள்ளேன். பிராட்மேனை ஒரே ஒரு முறைதான் சந்தித்தேன். அக்டோபர் 1989இல் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடிதங்களை நியூசிலாந்து பிரதமர்  டேவிட் லாங்கேக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் பாப் காக்கேவுக்கும் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது....பாப் காக்கேவிடம் கடிதத்தை நான் கொடுத்தேன்.... அன்று மாலை காக்கே டான் பிராட்மேனுடனான விருந்திற்காக சிட்னி செல்வதாகக் கேள்விப்பட்டேன்....விமானப் பயணத்தின்போது காக்கே நட்புடன் நடந்துகொண்டார். அவர் விருந்திற்கான பிரத்தியேக ஆடையுடன் இருந்தார். விருந்தில் பேசவேண்டிய பேச்சு அடங்கிய தாளை வைத்திருந்தார். என் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் நான் அவரிடம், பிராட்மேனை சந்திக்கமுடியுமா எனக் கேட்க எத்தனித்தேன். நான் அவ்வாறு கேட்பதற்குள் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்: 'அமைச்சர் அவர்களே, நீங்கள் பிராட்மேன் விருந்தில் கலந்துகொள்ள விரும்புகிறீர்களா?' பிராட்மேனைச் சந்திப்பது என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தது....காக்கேவுக்கு நன்றி கூறினேன். தங்கும் விடுதிக்கு வந்துசேர்ந்தோம். நாங்கள் பிரதமரின் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவரும் அவருடைய மனைவியும் அங்கிருந்தனர். சர் காலின் கௌட்ரேயும் உடனிருந்தார். 5 அடி 7 அங்குலம் உயரமான கதாநாயகனை ஆழ்ந்த ஈடுபாட்டோடு என் கண்கள் உற்றுநோக்கின. விருந்துக்கான ஆடையில் அவர். வழுக்கைத்தலை. 81 வயது. 'டான், இவர் இந்தியாவிலிருந்து வந்துள்ள அமைச்சர் சிங்'  என்றார் பாப் காக்கே. என் நாடித்துடிப்பின் வேகம் அதிகமானது. ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தபோதுகூட இவ்வாறாக எனக்கு நடந்திருக்கவில்லை. அவர் கையை நீட்டினார். நானும். ஒரே அமைதி. பின்னர் அம்மாமனிதர் பேச ஆரம்பித்தார். 'அண்மையில் நான் உங்களது ரயில்வேத்துறை அமைச்சரைச் சந்தித்தேன். அவருடைய பெயரை மறந்துவிட்டேன். மிக நல்ல மனிதர்'. அவர் மாதவராவ் சிந்தியாவைக் குறிப்பிட்டார் எனப் புரிந்துகொண்டேன். 'ஐயா, நான் உங்களை என் பள்ளி நாள் முதல் கதாநாயக நிலையில் வைத்து வழிபடுகிறேன். உங்களைச் சந்தித்ததை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்' என்றேன் நான். இவ்வாறான பேச்சினை அவர் எத்தனை முறை கேட்டிருப்பார் என நினைத்துக்கொண்டேன். ஒரு புகைப்படக்காரர் வந்தார். சற்றுத் தயங்கி,  பின் அவரிடம் உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். 'ஏன் கூடாது?' என்றார் காக்கே. புகைப்படம் எடுக்கப்பட்டது. பிரதமர், பிராட்மேன் மற்றும் அவரது மனைவி, சர் சாலின் ஆகியோரோடு நான்.  மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும் அந்த புகைப்படம் வெளியானது. அதில் நான் இல்லை. நான் இருந்த பகுதி வெட்டப்பட்டிருந்தது". 

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிக்கும் வாசகர்கள் கதை நடந்த இடத்திற்கே, அக்காலகட்டத்திற்கே சென்றுவிடுவர். அத்தகைய தாக்கத்தை உண்டாக்கியவர் கல்கி. அவ்வாறே நேருவின் உலக வரலாறு (Glimpses of World History) நூலைப் படிக்கும்போது, அந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ள அரிய செய்திகள், அவரது மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு மட்டுமல்ல, படிக்கும் வாசகர்களுக்கும் பொருந்துவதாக இருக்கும். அவ்வாறே நட்வர்சிங்கின் இந்நூலைப் படிக்கும்போது இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு வானில் பல தூரம் சென்றும், கடல் கடந்து சென்றும் பல பெரும் தலைவர்களைச் சந்தித்ததைப் போன்ற உணர்வை இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் கிடைக்கின்றது என்பது முற்றிலும் உண்மை.     

இக்கட்டுரை தினமணி புத்தாண்டு மலர் 2014 திருச்சி பதிப்பில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையை அம்மலரில் வெளியிட்ட தினமணி இதழுக்கு நன்றி-பா.ஜம்புலிங்கம்.

13 comments:

  1. ரசித்துப் படித்தேன்..பகிர்வுக்கு நன்றி ஐயா. இந்த வெரிஃபிகேஷன் தேவையை நீக்கினால் நலமாயிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்து என் பதிவிற்கு முத்தாய்ப்பாக உள்ளது. நன்றி. தாங்கள் கூறும் வெரிஃபிகேஷன் தேவை எது எனப் புரியவில்லை. அன்புகூர்ந்து தெளிவிக்கவேண்டுகிறேன்.

      Delete
    2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

      (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

      Delete
    3. தாங்கள் சொல்லியவாறு (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No') நீக்கிவிட்டேன். Comment Approval (Comment Moderation) ஐயும் நீக்கிவிட்டேன். (Comment Moderation-never) வலைப்பூ சிறப்புற அமைய தாங்கள் தந்துள்ள கருத்திற்கு நன்றி.

      Delete
  2. அவசியம் இந்நூலை வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  3. இந்தியாவில் 1983 கூட்டுசேரா நாடுகள் மாநாடு (Summit of Non Aligned Movement) நடைபெற்றபோது முதன்முதலாக ஃபீடல் காஸ்ட்ரோவைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். அப்போதுமுதல் எழுதவேண்டும் என்ற ஆசை இக்கட்டுரையின் மூலம் நிறைவேறியது. நன்றி.

    ReplyDelete
  4. Dear Dr Jambulingam, well. Your Sincere effort would always appreciated by all and it is very nice to hear such unfamilier words. Why don't you trace out the Tamil words also. I think that there is so many new unfamiler words are also available. In this day I take previledge to wish you all ever success.


    ReplyDelete
    Replies
    1. Selfie தொடர்பான கட்டுரைக்கான தங்களது கருத்தை ஏற்கிறேன். தாங்கள் கூறியபடி முயற்சிப்பேன். நன்றி.

      Delete
  5. Dear Dr. Well. I often see your valuable articles and tips, which is very much impressed by all. How can you spend your precious time with only in academically. You can spare your time in other activities also. It will certainly refresh you and your health also. It is my request. My best wishes.

    ReplyDelete
  6. தாங்கள் கூறியபடி பிற நிலைகளிலும் செயலாற்றுவேன். அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  7. தங்கள் எழுத்து, உண்மையைப் பிரதிபலிக்கும் எழுத்து. வலைப்பூக்களில் 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற கொள்கையைக் கடைபிடிக்கிறீர்கள். அது மற்ற இளம் பதிவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது. தொடருங்கள்!

    ReplyDelete
  8. தங்களின் பாராட்டுக்கள் என் எழுத்துமீதான ஈர்ப்பை உணர்த்துகின்றன. தொடர்ந்து எழுதுவேன். நன்றி.

    ReplyDelete
  9. well your article is very interesting i cometo know many informations keep up your good work sir.

    ReplyDelete