28 December 2014

துளிர் விடும் விதைகள் : வி.கிரேஸ் பிரதிபா

மதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் விழாவில் சந்தித்த நண்பர்களில் ஒருவர் வி.கிரேஸ் பிரதிபா. அவருடைய வலைப்பூவினை நான் வாசித்த போதிலும் மதுரையில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. விழாவின்போது வெளியிடப்பட்ட நூல்களில் அவருடைய கவிதை நூலும் ஒன்று. அவர் தந்து சில நாள்களில் படித்து முடித்தபோதிலும் அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள தற்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. கடந்த வாரம் ஜி.எம்.பி. ஐயாவின் சிறுகதைகளைப்  படித்த நாம் இந்த வாரம்  கவிதைகளைப் படிப்போம்.



துளிர் விடும் விதைகள் என்று தலைப்பு அமைந்துள்ள போதிலும் கவிதையில் காணலாகும் கருத்துக்கள் பல விருட்சங்களாகக் காணப்படுகின்றன. கவிதைகளைவிட சிறுகதைகளின்பால் எனக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. ஆனால் இவரது கவிதைகளைப் படித்தவுடன் கவிதைகளின் மேலான ஈடுபாடு அதிகமாகிவிட்டது.

"பணி சார்ந்தும் மொழி
வேறாய் இருக்கலாம்
படிக்கும் நூற்கள் 
பன்மொழியினவாய் இருக்கலாம்.
ஆயினும்
இன்னுயிர்த் தமிழினும் இனியது உண்டோ?"

பிற மொழி குறித்து பெருமை பேசிக்கொள்பவர்கள் சற்று ஆழமாக இக்கவிதையை வாசிக்கவேண்டும். தாய்மொழியின் இனிமையை ரசிக்க இதைவிட சிறந்த சொற்கள் உண்டா என்பது வியப்பே.

"இலக்கியம் படித்தால் அன்றோ,
மருத்துவமும் விண்வெளியும்
பாட்டில் ஒளிந்திருப்பது தெரியும்?"

ஈராயிரமாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலக்கியம் இருக்க, அதைவிடுத்து தமிழில் இவ்வாறான சொல்லடைவு இல்லை, பயன்பாடு இல்லை, சொற்கள் இல்லை என்று கூறி பம்மாத்தாகப் பேசித்திரிபவர்க்கு இக்கவிதை ஒரு பாடம்.


"ஆறுகளும் காணாமல் போனால்
ஆழியும் என்ன ஆகுமோ?
வானம் எங்கிருந்து முகருமோ?
உயிர்கள் எங்ஙனம் தழைக்குமோ"

இயற்கை வளங்கள் பல நிலைகளில் வீணடிக்கப்படுவதை வேதனையோடு பகிர்ந்துகொள்கிறார் இக்கவிதையில். கவிஞருடைய சமூகப்பிரக்ஞையினை இக்கவிதையில் காணமுடிகிறது.

"புதிதல்ல என்றாலும்
உன் ஓசை கேட்டவுடன்
துள்ளும் என் உள்ளம்"

நன்கு லயித்து எழுதப்பட்ட வரிகள். இவ்வாறான எண்ணங்களைப் பலர் வாழ்வில் அனுபவித்திருப்பர். ஒவ்வொருவரும் தத்தம் துணைக்காக எழுதப்பட்டதைப் போல உணர்வர். என் உள்ளம் இவ்வாறாகத் துள்ளியுள்ளதை நான் அறிவேன்.

"வன்முறையும் வன்கொடுமையும்
வற்றிட வையகத்து வாழ்வோரெல்லாம்
வளமாய் வாழும் நாளே திருநாள்"

நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் காணப்படுகின்ற அதிர்ச்சி தருகின்ற சில நிகழ்வுகள் நம்மை வேதனைப்பட வைக்கின்றன. உண்மையில் அவ்வாறான செய்திகள் வராத, நடக்காத நாளே நல்ல நாள் என்ற இவருடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்துவது அவருடைய மனதின் பாரத்தை குறைக்க மட்டுமல்ல, நம்முடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தவும்தான்.
 
"நானாக நான் இருத்தல் எப்பொழுது?
நானாக நான் இருத்தல் பிழையா?"

நம்மில் பலர் செய்யும் தவறுகளை மிகவும் அழகாக இக்கவிதையில் கொணர்ந்துள்ளார் ஆசிரியர். ஒப்புமை காட்டியே நாம் பழக்கப்பட்டுவிட்டோம். இத் தவறினை குறிப்பிட்ட காலம் வரை நானும் செய்துள்ளேன். ஒருகாலகட்டத்தில் திருத்திக்கொண்டேன். மிக இயல்பான எண்ணத்தை நச்சென்று கூறிய விதம் அருமை.

   
தந்தை, தாய், கணவன், நட்பு, இயற்கை, கலைகள், சமூகம், தாய்மை என்ற பல பொருண்மைகளில் வித்தியாசமான கோணங்களில் அவர் எழுதியுள்ள கவிதைகள் படிப்பவர் மனதில் நன்கு பதிந்துவிடும். இந்த கவிதை நூலை வாங்கி, கவிதைகளை வாசிப்போமே?

துளிர்விடும் விதைகள், வி. கிரேஸ் பிரதிபா, அகரம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, தொலைபேசி 04362-239289, 104 பக்கங்கள், ரூ.100

20 December 2014

வாழ்வின் விளிம்பில் : G.M. பாலசுப்ரமணியம்

மதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் சந்திப்பில் நண்பர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அப்போது வலைப்பதிவர்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் நிகழவுள்ள வலைப்பதிவர்களின் சந்திப்பில் மேலும் பல புதியவர்களைச் சந்திப்போம். சந்திப்பின்போது  பெற்ற அனுபவத்தில் ஒன்று அவர்களைச் சந்தித்ததும், அவர்களுடைய நூல்களைப் படித்ததும் ஆகும். மதுரை விழாவில் மூத்த வலைப்பதிவர்களில் ஒருவரான ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவருடைய நூலை அவர் தந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.  


அவருடைய வாழ்வின் விளிம்பில் 16 சிறுகதைகளைக் கொண்ட அருமையான நூல். இதனை நூல் என்பதைவிட வாழ்க்கைப் பதிவு என்று கூறலாம். மிகவும் இயல்பாக அவர் எழுதியுள்ள விதம் படிப்பவர்களை மிகவும் ஈர்க்கச் செய்யும். நகாசு இல்லாமல் நறுக்காகவும் உள்ளன இவரது எழுத்துக்கள். 

"அப்பா, உங்கள் வாழ்க்கையில் என்னவோ நடந்திருக்கிறது. சொந்தங்கள் எல்லாம் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். நீங்களும் எதையோ மறைக்கறாப்போலத் தோன்றுகிறது. என்னவென்று சொல்லலாமில்லையா, நானும் வளர்ந்துவிட்டேன் இல்லையா." (ப.126) என்ற வரிகளைப் படிக்கும்போது ஏதோ நம் வீட்டில் நம் மகள் நேரில் நம்மைப் பார்த்துக் கேட்பதைப் போலத் தோன்றும். இதுவரை நாம் நம் மகளிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று உணரும் அளவு ஒரு குற்ற உணர்வு படிக்கும் வாசகர் மனதில் எழுகிறது. இதுதான் அவருடைய வெற்றி எனலாம். இவ்வாறான, அன்றாட வாழ்வில் காணலாகும் நிகழ்வுகளை அவர் நம்முடன் பகிர்ந்துள்ளார்.

கதை கதையாக இருந்துவிட்டால் அதில் விறுவிறுப்பு ஏது? அவ்வாறே வாழ்க்கை வாழ்க்கையாக அமைந்துவிட்டாலும்தான். ஏற்றஇறக்கங்கள், இன்ப துன்பங்கள் என்ற நிலைகளில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்பது எண்ணிலடங்கா. சில நிகழ்வுகள் நம்மை அதிகம் பாதிக்கும். சில நிகழ்வுகள் எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காது. என்ற நிலையில் அவருடைய சிறுகதைகள் உள்ளன.

"ரங்கசாமிக்கு சாவைக் கண்டு பயம் கிடையாது. சாவது என்பது என்ன...? நிரந்தரத் தூக்கம்...அவ்வளவுதானே. ஆனால், சாவின் முழு வீச்சையும் அதை எதிர்கொள்பவன் எப்படித் தாங்குகிறான்...- யாருக்குத் தெரியும்? செத்தவர் அனுபவங்களைச் சொல்ல முடியுமா?.... " (ப.7) என்ற வரிகளில் கதாபாத்திரத்தின் மூலமாக மரணத்தை எதிர்கொள்ள உள்ளவர் கொள்ளும் மன நிலையை நம் முன் கொணர்கிறார்.

"பகுத்தறிவு என்று பேசினாலேயே அது கடவுள் மறுப்பைக் குறிப்பதுதான் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் இடத்தில் சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களில், அது எவ்வளவுதான் கூடுதல் புரிதலும், நட்பும் இருக்கும் நண்பனிடம்கூட விவாதிக்க முடிவதில்லை....." (ப.25) இது கதாபாத்திரத்திற்கும் மட்டுமல்ல நமக்கும் முற்றிலுமாகப் பொருந்துவன.  அன்றாடம் நாம் எதிர்கொள்வன.

"எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல் இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே என்று கவலை கொள்வதில் எந்தப் பலனும் இல்லை...." (ப.33) என்ற வரிகள் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் படிப்பதை நினைவூட்டுகின்றன.  காலங்கடந்து சிந்திக்கப்படுபவையால் எந்த பயனும் இல்லை என்பதை இவ்வரிகளில் அனாயசமாக எடுத்துரைக்கிறார்.  

"அவள் ஏன் அழவேண்டும்? அழுகை என்பதே ஒரு வடிகால்தானே. அழட்டும் நன்றாக அழட்டும். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ. எல்லோருக்கும் தெரிந்ததுதானே. மனித உணர்வுகளுக்கு அழுகையும் அதன் பின் வரும் மறதியும் வரம்தானே. இருந்தாலும் ஏறத்தாழ 50 வருட தாம்பத்திய வாழ்வில் கைகோத்துக் கூடவே வந்தவர் திடீரென்று இல்லை என்றாகிவிட்டால்....எத்தனை எத்தனை நினைவுகள். எத்தனை எத்தனை கனவுகள். ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து வருகிறதே...." (ப.115). ஏக்கம், வருத்தம், சோகம் என்ற பல்வேறு வகையான மன உணர்வுகளைப் பதியும் ஆசிரியர், படிப்பவர் மனத்தை நெருடுவதைப் போல சொற்றொடர்களைக் கையாண்டுள்ள விதம் நம்முடைய பாட்டியின் மடியில் நாம் படுத்துக்கொண்டிருக்கும்போது நமக்கு ஆதரவாக நம்மை வருடுவதைப் போல மனதுக்கு சுகமாக உள்ளது.   

அந்தந்த இடத்திற்கேற்ற வழக்குச்சொற்களை பயன்படுத்தும்போது அடைப்புக்குறிக்குள்ளோ, வெளியிலோ ஆசிரியர் தந்துள்ளவிதம் பாராட்டத்தக்கது. 
"அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள நாயர் மேனோன் குடும்பங்களில் சம்பந்தம் (தொடுப்பு) வைத்துக்கொள்வார்கள். அது அனுமதிக்கப்பட்ட ஒரு வழக்கம்......" (ப.69)
"ஏஏஏய்ய்ய், அதெல்லாம் பதுவில்லை (வழக்கமில்லை). அவர் நம் வீட்டில் சம்பந்தம் வைப்பதே பெருமை அல்லவா?......" (ப.72)

இந்த அருமையான நூலை, வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதற்காக வாசிக்க அழைக்கிறேன். வாசிப்போம். வாருங்கள்.

வாழ்வின் விளிம்பில்  (சிறுகதைகள்), G.M. பாலசுப்ரமணியம், மணிமேகலைப் பிரசுரம், 7 (ப.எண்.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017, தொலைபேசி 24342926, 24346082

14 December 2014

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு

 தொண்டரடிப்பொடியாழ்வார்  அருளிய திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சியைத் தொடர்ந்து திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் (10 பாடல்கள்) மற்றும் மதுரகவியாழ்வார் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பு (11 பாடல்கள்) ஆகிய இருவருடைய பாசுரங்களையும் அண்மையில் நிறைவு செய்தேன். இவ்விரு ஆழ்வார்களுடைய வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவும், அவருடைய பாடல்களில் சிலவற்றைப் பொருளுடனும் வாசிப்போம்.

அமலனாதிபிரான்
பாணர் குலத்தில் அவதரித்த திருப்பாணாழ்வார் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு பாடும்போது, பெருமாளுக்குத் திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவர அங்குவந்த லோகசாரங்க மகாமுனிவர் இவரைக்கண்டு தூரப்போ என்று சொல்ல, கானத்திலாழ்ந்த இவருக்கு அச்சொல் காதில் விழவில்லை.  முனிவர் ஒரு கல்லை எடுத்து எறிய, அம்முகத்தில் பட்ட அடி நெஞ்சில் பட்டது. உறக்கம் இன்றி இருந்த முனிவர் கனவில் காட்சியளித்த அரங்கன் நமக்கு அந்தரங்கனான பாண் பெருமாளை நீர் தாழ்வாக நினையாமல் உன் தோளிலே ஏற்றிக்கொண்டு  நம்மிடம் அழைத்துவாரும் என்று கூற, அவரும் அவ்வாறே செய்தார். ஆழ்வாரும் கண்களாரக் கண்டு  திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்து  அமலனாதிபிரான் என்ற திவ்யப்பிரபந்தத்தில் 10 பாடல்களைப் பாடினார்.
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான்; வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்;
கோர மாதவம் செய்தனன் கொல்?
அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது, அன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(எண்.931)
 
மிகவும் பொறுக்கமுடியாத சுமையாகிற அனாதையான பாவங்களின் தொடர்பைத் தொலைத்து அதனால் பாவம் நீங்கப் பெற்ற அடியேனைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான் ஸ்ரீரங்கநாதன். இவ்வாறு செய்ததும் அல்லாமல் என் மனத்திலும் நுழைந்துவிட்டான். இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுவதற்கு உறுப்பாக நான் உக்கிரமானதொரு தவத்தை முற்பிறவியில் செய்திருப்பேனோ என்னவோ? அறிகினேன் இல்லை. ஸ்ரீரங்கநாதனுடைய பிராட்டியும், முத்தாரத்தையும் உடையதான அத்திருமார்பு அன்றோ அடியவனான என்னை  அடிமைப்படுத்திக் கொண்டது.

கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீள் வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய், ஐயோ! என்னைச் சிந்தைக் கவர்ந்ததுவே! 
(எண்.933)
 
திருவரங்கன் தனது திருக்கைகளில் சுழியை உடைய சங்கையும், தீ வீசுகின்ற திருவாழியையும் ஏந்தி நிற்கின்றான். அவனுடைய திருமேனி பெரியதொரு மலை போன்றது. அவன் திருத்துழாய்ப் பரிமளம் வீசும் திருமுடியை உடையவன். எனக்கு சுவாமி. அரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவன். திருவனந்தானாகிய திருப்பள்ளியின் மீது சாய்ந்து கிடக்கின்றான். ஆச்சரிய பூதனான அவனது சிவந்த திருப்பவளவாய் பெண்களுடைய சிவந்த அதரத்திலே ஈடுபட்டிருந்த என் மனத்தைப் தன் பக்கலிலே இழுத்துக் கொண்டது. 
 


 


மதுரகவியாழ்வார் 

ஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் பிராமண குலத்தில் பிறந்த இவர் அனைத்துக்கலைகளையும் கற்று மதுரகவி என்னும் பெயர் பெற்றார். ஒரு நாள் திருக்கோளூர் பெருமானைத் திசை நோக்கித் தொழக் கருதித் தெற்குத் திக்கில் கண் செலுத்தியபோது பேரொளி இவர் கண்ணுக்குப் புலப்பட, அது எங்கிருந்து வருகிறது என்று அறிந்து ஆராய்ந்த அளவில் திருப்புளி ஆழ்வார் அடியில்  விளங்கிய நம்மாழ்வாரைக் கண்டு அவருக்குக் கைங்கர்யம் செய்தார். அவருக்காகத் தான் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தத்தையும், பிற பிரபந்தங்களையும் இசையோடு பாடிப் பரப்பினார்.


கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்,
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே. 
(எண்.937)

உடம்பிலே உறுத்தும்படி பல முடிகளை உடையதாய், உடம்பிலே அழுந்தும்படி நுட்பமாய், காட்டப் போதாதபடி சிறிதாயிருக்கிற கயிற்றினால் யசோதைப் பிராட்டித் தன்னைக் கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட பெரிய ஆச்சர்ய சக்தியை உடையவன். எனக்குச் சுவாமியான எம்பெருமானை விட்டு ஆழ்வானை அணுகி அடைந்து, தெற்குத் திசையிலுள்ள ஆழ்வார் என்று அவரது திருநாமத்தைச் சொன்னால் மிக இனிமைதாய் இருக்கும். என் ஒருவனுடைய நாவுக்கே அமுதம் ஊறும்.


அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.
(எண்.947)

அடியாரிடம் அன்பு பூண்ட எம்பெருமானை அடைந்த எல்லா பாகவதர் பக்கலிலும் பக்தியுடையவரான நம்மாழ்வார் விஷயத்திலே பக்தனாயிருந்து கொண்டு மதுரகவி அருள் செய்த இந்தத் திவ்வியப் பிரபந்தத்தைத் தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பவர்களுக்கு இடம் பரமபதம்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011, (நான்கு தொகுதிகள்) ரூ.1200, தொலைபேசி: 9941863542, 9094963125, 9380630192, 28144995, 28140347, 43502995

இதுவரை நாம் நிறைவு செய்த பிரபந்தங்கள்
 பெரியாழ்வார் திருமொழி

07 December 2014

அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை : ஜ. பாக்கியவதி

அண்மையில் நாங்கள் சென்ற தலப்பயணம் தொடர்பாக என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள கட்டுரை இன்றைய தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையைப் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இதனை வெளியிட்ட தினமணி இதழுக்கு நன்றி. 


காசி மற்றும் பிற தலங்களுக்குக் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தஞ்சையிலிருந்து ரயிலில் கிளம்பினோம்.

 8.10.2014 அன்று விடியற்காலை அலகாபாத் வந்து, திரிவேணி சங்கமத்தில் நீராடச் சென்றோம். கங்கா, யமுனா மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி சங்கமிக்கும் இடத்திற்குப் படகில் சென்று புனித நீராடிவிட்டுத் திரும்பினோம். மூன்று ஆறுகளும் சேரும் அவ்விடத்திலிருந்து சூரிய உதயம் பார்த்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தொடர்ந்து ஆனந்த பவனம்.

 கயா: 9.10.2014 காலை கயா வந்தடைந்தோம். காலையில் விஷ்ணுதத் கோயில் சென்றோம். அங்கு ஒரு நபருக்கு ரூ.270 வீதம் எங்கள் குழுவில் பலர் இறந்தவர்களுக்குத் திதி கொடுத்தனர். தொடர்ந்து மங்களகெüரி கோயிலுக்கும் சக்திபீடத்திற்கும் சென்றோம்.

 புத்தகயா: மதியம் புத்தகயா. அங்கிருந்த புத்தர் கோயிலான மகாபோதி கோயில் சென்றோம். அழகான புத்தரைப் பார்த்தோம். கோயில் வளாகத்தில் புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் புகழ் பெற்ற போதி மரத்தினைப் பார்த்தோம். மரத்தின் அருகில் யாரும் செல்லாமல் இருப்பதற்காக மரத்தைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவர் இருந்தது. போதி மரத்தருகே புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கோயிலைச் சுற்றியும் காணப்பட்ட அமைதியான சூழல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து தாய்லாந்து புத்தர் கோயிலைப் பார்த்தோம். அதற்குப் பின்னர் அமர்ந்த நிலையில் பார்க்க கம்பீரமாக இருந்த புத்தர் சிலையில் என்னவொரு சோகம்?

 காசி: 10.10.2014 காலை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த காசி மண்ணில் காலடி வைத்தோம். கங்கையில் நாங்கள் இருவரும், எங்கள் குழுவினருடன் புனித நீராடினோம். காலையில் காமகோடீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். பின்னர் கேதாரநாதர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலின் பின்புறம் கங்கை ஓடுவதைப் பார்க்க அழகாக இருந்தது. அடுத்தபடியாக காசி விசுவநாதர் கோயிலுக்கு நுழைவாயிலின் வழியாகச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் சோதனையிடப்பட்டே அனுப்பப்பட்டோம். பேனா, கேமரா, செல்பேசி என எதையும் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. வலப்புறத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்மன் கோயிலுக்குச் சென்றோம். தங்க அன்னபூரணியைக் கண்குளிரக் கண்டோம். அவர் அருகில் வெள்ளியால் ஆன சிவனை பிச்சாண்டவர் கோலத்தில் கண்டோம். அன்னபூரணி சிவனுக்கு அன்னம் இடுவதாக வரலாறு கூறினர். வரிசையில் தொடர்ந்து சென்று காசி விசுவநாதர் கோயிலை அடைந்தோம். கோயிலுக்குள் போகும்போது பக்தர்கள் பூ, பால், நீர் போன்ற ஏதாவது ஒன்றைக் கொண்டு செல்வதைக் காணமுடிந்தது. அதை வைத்து அவர்களே லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். நம்மூர் கோயில்களில் கருவறைக்குள் பக்தர்களை அனுமதிப்பதில்லை. இங்கு அவரவர் செய்வதால் இறைவனையே நேரில் சென்று அடைந்தது போன்ற ஓர் பேரின்பத்தை பக்தர்கள் மனதார  அடைகிறார்கள்.

 கங்கை: மாலை கங்கையாற்றில் படகிலிருந்தபடியே 64 கங்கைக்கரைகளில் மன்மந்திர் காட், அகில்பாய் காட், முன்ஷி காட், நாரதர் காட், மணிகர்ணீஸ்வரர் காட், அரிச்சந்திரா காட் உள்ளிட்ட சில கரைகளைப் பார்த்தோம். இவற்றில் மணிகர்ணீஸ்வரர் காட் மற்றும் அரிச்சந்திரா காட் என்ற இரு இடங்களிலும் சடலங்கள் எரியூட்டப்படுவதைக் கண்டோம். சடலங்கள் எரியும்போது எவ்வித துர்நாற்றமும் வீசாது என்று கூறினர். அதை நேரிலும் உணர்ந்தோம். அடுத்த இரு நாள்கள் காசியிலுள்ள பிற முக்கியமான கோயில்களுக்குச் சென்றோம். காசிப் பயண நிறைவாக இந்தியாவின் புகழ் பெற்ற காசி இந்து பல்கலைக்கழகம் சென்றோம். பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த காசிவிசுவநாதர் கோயிலுக்குச் சென்று அவரை  வணங்கினோம்.

 மிர்சாபூர்: 13.10.2014 அன்று மிர்சாபூரிலுள்ள முதல் சக்தி பீடம் என அழைக்கப்படும் பிந்திவாசினி கோயில் சென்றோம். அம்மனின் பல் விழுந்த வகையில் அவ்விடம் முக்கியத்துவம் பெற்றதாகக் கூறினர். மதியம் சீதாமடி சென்றோம். ரம்மியமான சூழலில் சுவரில் சீதையின் சிற்பத்தைக் காணமுடிந்தது.

 ஹரித்வார்: 14.10.2014 அன்று புறப்பட்டு 15.10.2014 அன்று ஹரித்வார் வந்தடைந்தோம். அங்கு காயத்ரி யாகசாலை, ஆனந்தமாயி ஆசிரமம், சீதளமாதா கோயில், சிவசக்தி பீடம், லட்சுமிநாராயணா கோயில், தட்சேஸ்வர மகாதேவ் கோயில், தட்சண் யாககுண்டம், வைஷ்ணவதேவி எனப்படும் மாதாலால் தேவி கோயில், பூமாநிகேதன் கோயில், படிக லிங்கம், ருட்திராட்ச மரம், மரண பயம் நீக்குபவர் எனப்படும் மிருத்துஞ்சேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். ஒரு நாள் முழுவதும் பல கோயில்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றோம். வைஷ்ணவதேவி எனப்படும் மாதாலால் தேவி கோயில் மற்றும் பூமாநிகேதன் கோயில் இருந்த இடத்தில் ஒரே தெருவில் அதிக எண்ணிக்கையிலான கோயில் களைக் காணமுடிந்தது.

 ரிஷிகேஷ்: 6.10.2014 அன்று ரிஷிகேஷுக்கு ரோப் காரில் சென்றோம். ராவணனைக் கொன்ற தோஷம் நீங்கிய லட்சுமண் கோயில், லட்சுமணன் ஜுலா எனப்படும் பெரிய தொங்கு பாலம், பத்ரிநாத் கோயில், பெரிய லிங்க பானத்தைக் கொண்ட அகிலேஸ்வர் கோயில், துர்கா கோயில், திரயம்பகேஸ்வரர் கோயில், ராமன் ஜுலா எனப்படும் மற்றொரு பெரிய தொங்கு பாலம், பத்ரி நாராயணன் என்கிற சத்ருகனன் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றோம். இவை அனைத்தும் ரிஷிகேஷில் மலைமீது இருந்தன. அனைத்துக் கோயில்களையும் பார்த்துவிட்டு ஹரித்வார் திரும்பினோம்.

இவ்வளவு கோயில்களைப் பார்த்த எங்களுக்கு நம்மூர்க் கோயில்களைப் பார்த்ததுபோன்ற உணர்வு இல்லை. இங்கே எல்லா சுவாமிகளும் மார்பிளில் இருக்கின்றன. நந்தி, லிங்கம் ஒழுங்கின்றி பக்கம் மாறி பல இடங்களில் இருந்தன. விபூதியோ, குங்குமமோ தரப்படவில்லை. காசியிலும் பிற இடங்களிலும் ஜிலேபி சூடாகப் போட்டுத் தருவது அப்பகுதியின் சிறப்பாக இருந்தது. இரு நாள்கள்கூட தாங்காது என்று கூறினர். அடுப்பிலிருந்து அவ்வப்போது போட்டு எடுத்து சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருந்தது. இங்கே பெரும்பாலும் கடுகு எண்ணெயில்தான் சமையல். நாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் சத்திரத்தில் தமிழக உணவு வகைகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. மக்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்களையும், ஆடை அணியும் முறைகளையும் காணமுடிந்தது. காசியில் தினமணி வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் செய்தித்தாளைப் பார்க்க எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்களது இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாததாக அமைந்தது.  - ஜ.பாக்கியவதி
---------------------------------------------------------------------------------------------------
 கட்டுரையை தினமணி இதழில் பின்வரும் இணைப்பில் காணலாம்.
அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, கொண்டாட்டம், 7.12.2014 
---------------------------------------------------------------------------------------------------