20 March 2015

அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம் : பதிப்பாசிரியர் மணி.மாறன்

அண்மையில் நான் படித்த நூல் அம்பலவாணக்கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம் (பதிப்பாசிரியர் மணி.மாறன்). 

தமிழில் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும். அவற்றில் ஒன்று 100 பாடல்களைக் கொண்டு அமைந்துள்ள சதகம் என்பதாகும். மக்களின் நல்வாழ்விற்குத் தேவையான நீதிகளையும், அறநூல் கருத்துக்களையும், ஒழுக்கக்கூறுகளையும் வழங்கி அவர்களை நன்கு வாழச் செய்வதே சதக இலக்கியம். இச்சதகம் கொல்லிமலையில் உள்ள அறப்பள்ளி ஈசுவரனைப் பற்றி அம்பலவாணக்கவிராயர் பாடியதாகும். (பக்.1-2)

சிறந்த நீதி இலக்கியமாகத் திகழும் இந்நூலில் ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும், சிறந்த மாணவன் எப்படித் திகழவேண்டும், ஒரு நல்ல நகரம் எவ்வாறு அமைதல் வேண்டும், நல்ல அரசும் அதற்கு ஆலோசனை வழங்குபவர்களும் எவ்வாறு இருக்கவேண்டும்? உடன்பிறப்பு என்பவர் எப்படி தியாக உள்ளத்தோடு திகழவேண்டும், பொருள் சேர்க்கும் வழிமுறையானது எப்படி நல்ல முறையில் அமையவேண்டும்  என்பன போன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.  நல்லோர்களின் இயல்பினையும், வாழ்க்கை நிலையாமையையும், வறுமையின் கொடுமை, நல்வினை, தீவினை செய்தோர் குறித்தும், ஒரு சிறந்த மருத்துவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் சிறந்த பல கருத்துக்களைப் பாடல்கள் வழி அறிவுறுத்தியுள்ளது சிறப்பாக அமைந்துள்ளது. (ப.1)

இந்நூலில் சில கருத்துக்கள் தற்போது பொருந்துவனவாகவோ ஏற்கக் கூடியனவாகவோ இல்லை. இருப்பினும் நீதி என்ற நிலையில் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களை இச்சதகத்தில் காணமுடிகிறது. காலத்திற்குப் பொருந்துவனவற்றை எடுத்து மற்றவற்றை விடுப்போம். முழுக்க நீதி நூலாக அமைந்துள்ள இந்நூலிலிருந்து இரு பாடல்களைப் பொருளுடன் காண்போம்.


நல்லோர் 
செய்ந்நன்றி மறவாத பேர்களு மொருவர்செய்
தீமையை மறந்த பேருந்
திரவியந் தரவரினு மொருவர்மனை யாட்டிமேற்
சித்தம்வை யாத பேரும்
கைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையிற் கொடுத்த பேருங்
காசியி லொருவர்செய் தருமங் கெடாதபடி
காத்தருள் செய்கின்ற பேரும்
பொய்யென்று நிதிகோடி வரினும் வழக்கழிவு
புகழாத நிலைகொள் பேரும்
புவிமீது தலைபோகு மென்னினுங் கனவிலும்
பொய்மையுரை யாத பேரும்
ஐயவிங் கிவரெலாஞ் சற்புருடரென் றுலகி
லகமகிழ்வ ரருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே (16)

பொருள்: அருமை தேவனே, ஒருவர் செய்த உதவியை மறவாதவரும், ஒருவர் செய்த தீமையை மறந்தவர்களும், பொருளைக் கொடுத்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச் செலுத்தாதவர்களும், கையிலே கண்டெடுத்த பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க் கொடுத்தவர்களும், உலகில் ஒருவர் செய்த அறம் கெடுதலுறாமல் காப்பாற்றுகின்றவரும், நிலையற்ற செல்வத்தைக் கோடிக்கணக்கில் ஒருவர் கொடுத்தாலும், அழிவழக்குக் கூறாத நிலையுடையவரும், உலகத்திலே தலையே போகும் என்றாலும் கனவிலேயேயும் பொய் கூறாதவரும், இவ்வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகிய நன்மக்கள் என்று உலக மாந்தர் மனம் களிப்பார்கள். 

அடங்காதவற்றை அடக்கும் வழி 
கொடியபொலி யெருதையிரு மூக்கிலுங் கயிறொன்று
கோர்த்துவச விர்த்தி கொள்வர்
குவலயந் தனின்மதக் களிதனை யங்குசங்
கொண்டுவச விர்த்தி கொள்வர்
படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்
பற்றிவச விர்த்தி கொள்வார்
பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை
பழக்கிவச விர்த்தி கொள்வார்
விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
வீசிவச விர்த்தி கொள்வார்
மிக்கபெரி யோர்களும் கோபத்தை யறிவால்
விலக்கிவச விர்த்தி கொள்வார்
அடியவர் துதிக்கவரு செந்தாமரைப் பதத்
தையனே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே (42)

பொருள்: திரு அடியார்கள் வாழ்த்த வருகின்ற செந்தாமரை மலரைனைய திருவடிகளை உடைய தலைவனே, அருமை தேவனே, கொடிய தன்மையுடைய பொலிகாளையை அதன் இரண்டு மூக்கிலும் ஒரு கயிற்றைக் கோர்த்து வசப்படுத்துவர். உலகத்தில் மத யானையை அங்குசம் கொண்டு வசப்படுத்துவர். உலகில் நஞ்சுடைய நாகத்தை மந்திரத்தாலும், தந்திரத்தாலும் பிடித்து வசப்படுத்துவர். தாவும் குதிரையினை நீண்ட கடிவாளத்தைக் கொண்டு நடைப்பழக்கி வசப்படுத்துவர். நஞ்சுடைய தீயவரை சவுக்கைக் கொண்டு அடித்து வசப்படுத்துவர். பெரிய சான்றோர்களும் தம் கோபத்தை அறிவின் திறனால் நீக்கிக்கொண்டு அடங்கி நடந்து மனதை வசப்படுத்துவர்.

---------------------------------------------------------------------------------------------------
நூல் : அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம்
பதிப்பாசிரியர் : மணி.மாறன் (அலைபேசி 9443476597) 
பதிப்பகம் : சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்
ஆண்டு : 2014
விலை : ரூ.150
---------------------------------------------------------------------------------------------------

நாம் முன்பு வாசித்த மணி.மாறன் நூல்கள்:
தமிழ் எண்ணும் எழுத்தும், தமிழ் ஆய்வுக்கட்டுரைகள், தமிழறிமடந்தை கதை

29 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    புத்தகம் பற்றி வெகு சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.... படிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது...த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சில எடுத்துக்காட்டுகளே நூலில் சிறப்பை அறிய முடிகிறது... (அடுத்தமுறை சந்திக்கும் போது) இந்த நூலை வாங்க வேண்டும்... நன்றி ஐயா...

    ReplyDelete
  3. சிறப்பானதொரு பாடலைக் கண்டு மகிழ்ச்சி!..

    அறப்பளீசுர சதகத்தைப் பற்றிய அழகான விமர்சனம்!..

    ReplyDelete
  4. இரண்டாவது பத்தியை படித்ததும் இந்நூல் எப்படி இருக்கும் என்று அறிய முடிகிறது ஐயா.
    சிறப்பான விமர்சனம்.

    ReplyDelete
  5. நல்ல கருத்துகனை உள்ளடக்கிய சிறப்பான விமர்சனம்.

    ReplyDelete
  6. சிறந்ததொரு நூலினை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  7. பதினான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களில் இது போன்ற பாடல்களை நாம் சதகங்களில் தான் அதிகமாகக் காணமுடியும்.
    இப்பொழுது இந்த வடிவங்களில் எழுதுவோர் குறைவே.
    நூல் விமர்சனத்தின் ஊடே தகுந்த பாடலை எடுத்துக்காட்டி குறைநிறைகளை விமர்சித்த தங்களின் பதிவு அருமை அய்யா.

    த ம கூடுதல் 1

    ReplyDelete
  8. என்னவரின் மாமா திரு மணி,மாறன் அவர்கள் பதிப்பித்த நூல் பற்றிய தங்கள் விமர்சனம் அருமை அய்யா, நான் இன்னும் படிக்கவில்லை, வாசிக்கிறேன்.நன்றி அய்யா,

    ReplyDelete
  9. அறப்பளீசுர சதகத்திலிருந்து எக்காலத்திலும் பொருந்தும் நீதி கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  10. வணக்கம்!

    தமிழ்மணம் 8

    அடங்காத நெஞ்சத்தை ஆட்கொண்டு நாமாள
    அழகான பாதை சொன்னார்!
    அன்பான அமுதீந்தும் அறமான அருளீந்தும்
       அகிலத்து மேதை ஆனார்!

    முடங்காத வழி..காட்டும் முன்னேற்றத் திறமூட்டும்
    முக்கண்ணன் சதகம் செய்தார்!
    முத்தாக இப்பாக்கள் மூளைக்குள் எந்நாளும்
    முத்தங்கள் நல்கும் என்பேன்!

    மடங்காத கொள்கையும் மணியான செய்கையும்
    மலைபோல வன்மை ஊட்டும்!
    மகிழ்வோடு வாழ்வெய்த மாண்போடு குலமோங்க
    மங்காத செல்வம் கூட்டும்!

    விடங்கொண்ட பித்தனின் தடங்கண்ட கவிராசர்
    அம்பல வாணர் வாழ்க!
    வெல்கின்ற தமிழாலே சொல்கின்ற சீரெல்லாம்
    உலகத்தை ஆண்டு வெல்க!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  11. தமிழில் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் அதில் சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்டது என்ற விபரமறிந்தேன். அம்பலவாணக்கவிராயர் இயற்றிய சதகத்திலிருந்து இரு பாடல்களை எடுத்து விளக்கம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி. சிறப்பான விமர்சனத்துக்குப் பாராட்டுக்கள்!.

    ReplyDelete
  12. அன்புள்ள அய்யா,

    அண்மையில் நான் படித்த நூல் அம்பலவாணக்கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம் பற்றி அறியத் தந்ததற்கு மிக்க நன்றி.
    த.ம. 9.

    ReplyDelete
  13. நல்லதொரு விமர்சனம் ஐயா! தாங்கள் சொல்லியது போல் எந்தப் புத்தகம் ஆனாலும், //காலத்திற்குப் பொருந்துவனவற்றை எடுத்து மற்றவற்றை விடுப்போம்.// என்ற உயரியக் கருத்தை முன்வைத்தமை அருமை. இது எல்லாவற்றிற்கும் கூட பொருந்துமோ...வாழ்க்கைக்கும் கூட !! நல்ல பாடல் விளக்கங்களுடன், புத்தகத்தை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி! ஐயா!

    ReplyDelete
  14. ஆரம்பப்பள்ளியில் ஐந்தாவது படிக்கும்போது ‘அறப்பளீசுர சதகம்’ முழுதையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கவேண்டும். செய்திருக்கிறேன். திரும்பவும் 62 ஆண்டுகளுக்குப் பிறகு படிக்கும் வாய்ப்பைத் தந்த தங்களுக்குநன்றி!

    பி.கு. நான் படித்த சிற்றூர் பள்ளியில் உலக நீதி, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நன்னெறி, நல்வழி,விவேக சிந்தாமணி. குமரேச சதகம், அறப்பளீசுர சதகம் முதலியவைகளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கவேண்டும்

    ReplyDelete
  15. புலவர் வகுப்பில் அப்போது படித்தது! எடுத்துக் காட்டிய பாடல் இரண்டும் அருமை!

    ReplyDelete
  16. அறப்பளிசுர சதகம் சிறுவயதில் படித்த ஞாபகம்! படிக்க வேண்டும் குறித்துக் கொள்கிறேன்! நூல் பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  17. அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுவர சதகத்தை புத்தகக் பதிவாக மணிமாறன் செய்திருப்பதை அறிகிறேன் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு, என்பதைச் சொல்லாமல் சொல்லியதற்கு நன்றி பாராட்டு.

    ReplyDelete
  18. அறப்பளீஸ்வரர் சதகம் என்றொரு நூல் உள்ளதைக் கேளவிப் பட்டிருக்கிறேன். இன்றுதான் இரு பாடல்களைக் கண்ணுற்றேன்.

    ReplyDelete
  19. வணக்கம்.
    அருமையானதொரு நூல்தான். ஆனால், இதிலுள்ள சில நீதிகளைத் தற்காலத்தில் ஏற்க இயலாது (ஏற்புடையதன்று) என்று கூறியுள்ளீர்கள். தற்போது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருப்பது ஆசிரியர்-மாணவர் உறவுதான். அதைத்தான் நாம் சரி செய்தாக வேண்டும். இந்நூலில் அதைப்பற்றிய செய்திகள் இருப்பதால், இதை ஆசிரியர்-மாணவர் இருவரையும் படிக்கத்தூண்ட ஏதாவது வழி ஏற்படுத்த வேண்டும்.
    திரு.மணி.மாறன் அவர்களின் நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன். காரணம், அவர் நூல்களை அடியேன்தான் விமர்சனம் செய்துள்ளேன். இது அவருக்குத் தெரியுமோ தெரியாதோ!!!! (எங்கள் பத்திரிகை விமர்சனத்தில் பெயர் வெளிவராது). அதனால் அவர் எழுத்தும், பதிப்பும் எனக்குப் பரிச்சயமானதுதான். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பிக்கும் அவருக்குக் காலம் நல்ல பதில் கூறக் காத்திருக்கிறது.
    இந்த நூல் இதுவரை என் பார்வைக்கு வரலில்லையே…… ஏன்… “வரும்” என நம்புகிறேன்….. தாங்கள் தேர்ந்தெடுத்த நூலும் தங்கள் விமர்சனப் பார்வையும் நன்று! நன்று! மீண்டும் ஒரு சிறந்த பதிவுக்கான காத்திருப்புடன்……

    இடைமருதூர் கி.மஞ்சுளா

    ReplyDelete
  20. அய்யா,

    இன்றைய வாழ்வுக்கு மிக அவசியமான ஒரு நூலை மிக அருமையாக விளக்கி அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  21. கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர படித்ததில்லை நல்ல பாடலை அறிந்தோம் நன்றி

    ReplyDelete
  22. பள்ளி நாட்களில் மனப்பாடப் பகுதியாக இருந்த சதகம், அறப்பளீசுர சதகம். மனம் கவரும் சந்தநடை கொண்டது. நினைவூட்டியதற்கு மிக்க நன்றி ! - இராய செல்லப்பா

    ReplyDelete
  23. பள்ளி நாட்களில் மனப்பாடப் பகுதியாக இருந்த சதகம், அறப்பளீசுர சதகம். மனம் கவரும் சந்தநடை கொண்டது. நினைவூட்டியதற்கு மிக்க நன்றி ! - இராய செல்லப்பா

    ReplyDelete
  24. சிற்றிலக்கியங்களுக்கும் எனக்கும் வெகு தூரம். இருந்தாலும் தங்களின் பொருள் விளக்கத்தால் படித்து வருகிறேன் அய்யா....

    ReplyDelete
  25. சிற்றிலக்கியங்களுக்கும் எனக்கும் வெகு தூரம். இருந்தாலும் தங்களின் பொருள் விளக்கத்தால் படித்து வருகிறேன் அய்யா....

    ReplyDelete
  26. கொல்லிமலையில் உள்ள அறப்பள்ளி ஈசுவரனைப் பற்றி அம்பலவாணக்கவிராயர் பாடிய சதக இலக்கியமாகத் திகழும் இந்நூலில்,
    ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும்,
    சிறந்த மாணவன் எப்படித் திகழவேண்டும்,
    ஒரு நல்ல நகரம் எவ்வாறு அமைதல் வேண்டும்,
    நல்ல அரசும் அதற்கு ஆலோசனை வழங்குபவர்களும் எவ்வாறு இருக்கவேண்டும்? உடன்பிறப்பு என்பவர் எப்படி தியாக உள்ளத்தோடு திகழவேண்டும்,
    பொருள் சேர்க்கும் வழிமுறையானது எப்படி நல்ல முறையில் அமையவேண்டும் என்பதை உணத்தியபோதே!
    நூலின் சிறப்பை அறிவானது ஆராதணை செய்ய வேண்டும் என்பது உண்மை ஆகிறது.
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  27. அன்பின் அய்யா,
    தங்களின் நூல் விமர்சனத்தில் ஒரு நல்ல ஆசிரியரும் மாணவரும் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற செய்தி இருப்பதாக குறிப்பிட்டு காட்டியதால் ஆசிரியர் என்ற முறையில் உடன் அந்த புத்தகத்தினை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. நன்றி அய்யா,

    ReplyDelete