09 July 2015

உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் கோயில்

தேவாரம் பாடாத கோயில் 


காவிரியின் வடகரையிலும், தென்கரையிலும் தேவாரப் பாடல் பெற்ற கோயில்களை அதிகமான எண்ணிக்கையில் காணமுடியும். தேவாரப் பாடல்கள் கிடைக்கப்பெறாத பல சிவன் கோயில்களும் உள்ளன. அவ்வாறான ஒரு கோயிலே கரவந்தீஸ்வரசுவாமி கோயில்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள உடையார்கோயில் என்னும் சிற்றூரில் கரவந்தீஸ்வரசுவாமி கோயில் என்னும் சிவன் கோயில் உள்ளது. தஞ்சாவூர் நாகப்பட்டினம் சாலையில் 18 கிலோமீட்டர் தொலைவில் அம்மாப்பேட்டைக்கு முதல் நிறுத்தத்தில் உள்ள இக்கோயில் இரு வகைகளில் சிறப்பு பெறும் கோயிலாகும். ஒரு காலத்தில் ஏரியின் நடுவில் இருந்த சிறப்பையும், சோழர் காலத்தில் கோயில்கள் கட்ட கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பதற்கான விடையையும் கொண்ட சிறப்பையும் கொண்டது இக்கோயில்.


தற்போது குளமாகிவிட்ட பேரேரி
இக்கோயில் முன்னர் திரிபுவனமாதேவிப் பேரேரியின் நடுவில் இருந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. அக்கல்வெட்டைப் பற்றி கரந்தைச் செப்பேடு மிகச் சிறப்பாகக் கூறுகிறது. இக்கோயில் முன்பு ஏரியின் நடுவில் தீவு போன்ற அமைப்பில் இருந்துள்ளது. திருக்கிளாஉடையார் மகாதேவர் கோயில் எனப்படும் இக்கோயிலின் ஒரு புறம் தூர்க்கப்பட்டு அக்கோயிலுக்குச் செல்வதற்கான வழித்தடத்தினை அமைத்துள்ளனர். நாளடைவில் ஏரி சுருங்கி, குளமாக ஆகிவிட்டது. இக்குளம், கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் முன்பாகக் காணப்படுகிறது.


கற்கள் வந்தது எப்படி?
பாறைகள், மலைகள் இல்லாத தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் கற்றளிகளை உருவாக்க புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த நொடியூர்ப்பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்ததற்கான சான்று இக்கோயிலில் உள்ளதாக வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் என்ற நூலில் கூறுகிறார்.

“தஞ்சைக்கு அருகேயுள்ள உடையார் கோயில் சிவாலயத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (18ஆம் ஆட்சியாண்டு, கி.பி.1196) கல் எங்கிருந்து கொணரப்பெற்றது என்பதனை, நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்தும் சிலை கொண்டு வந்து... என்ற கல்வெட்டுக்குறிப்பால் அறியலாம். நொடியூர் எனும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்னாண்டார் கோயில் பகுதியில் உள்ளதாகும். அனைத்தையும் நோக்கும்போது தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் நொடியூர்ப்பட்டணத்துக் கிள்ளியூர் மலைப்பகுதியிலிருந்து கற்கள் வந்திருக்கலாம் எனக் கொள்ளமுடிகிறது” என்கிறார் அவர்.

ஆட்கொண்டாரும் உய்யக்கொண்டாரும்
இத்தகு பெருமை பெற்ற இக்கோயிலின் வாயில் முகப்பைக் கடந்து உள்ளே பலிபீடமும், நந்தியும் உள்ளன. தொடர்ந்து ராஜகோபுரம். அதற்கடுத்து உள்ள முன் மண்டபத்தை அடுத்து கருவறை அமைந்துள்ளது. அங்குள்ள இறைவன் கரவந்தீஸ்வரர் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறையில் வலது புறம் ஆட்கொண்டாரும், இடது புறம் உய்யக்கொண்டாரும் உள்ளனர்.

கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தைச் சுற்றி வரும்போது வரிசையாக முக்குருணி அரிசி விநாயகர், பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தபுரீஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், வேதபுரீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர், பூலோகநாதர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். இப்பிராகாரத்தில் பிரதான விநாயகர் சன்னதி தனியாக உள்ளது.

அச்சன்னதியில் அனுராதா க்ரமன சரஸ்வதி உள்ளார். கருவறையின் பின்புறம் முறையே விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் தலவிருட்சமான களாச்செடி பிரகாரத்தில் காணப்படுகிறது.


முன்மண்டபச் சிற்பங்கள்
பிராகாரத்தைச் சுற்றி உள்ளே வரும்போது அங்கே உள்ள முன்மண்டபத்தில் பள்ளியறை உள்ளது. அதனைத் தொடரந்து பைரவர், திருமறைக்கோயில், சேக்கிழார், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், அனுமார், சூரியன், சந்திரனைக் காண முடியும்.
இம்மண்டபத்தில் நவக்கிரகச் சன்னதி உள்ளது. கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அங்குள்ள இறைவி தர்மவல்லி என்றழைக்கப்படுகிறார். அம்மன் சன்னதி அருகே நர்த்தன விநாயகர் உள்ளார்.





அண்மையில் திருப்பணி நிறைவுற்ற இக்கோயில், வரலாற்றின் சுவடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பெருமையுடையதாகும். ஆயிரமாண்டு கால வரலாற்றைத் தன்னுள் கொண்டிருக்கும் இக்கோயிலின் இறைவன் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார், ஏரி, குளமாகச் சுருங்கிய நிலையிலும்.
















இன்றைய தி இந்து நாளிதழில் தேவாரம் பாடாத கோயில் என்ற தலைப்பில் வெளியான இக்கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கின்றேன், கூடுதல் படங்களுடன். தி இந்து நாளிதழுக்கு நன்றி.
-----------------------------------------------------------------
புதுக்கோட்டையில் திரு முத்துநிலவன் இல்லத்தில், நண்பர் திரு கில்லர்ஜியின் வருகையையொட்டி 8.7.2015 மாலை நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பைப் பகிர்ந்துகொண்ட நண்பர்களின் தளங்களுக்கு அன்போடு அழைக்கிறேன். 

தென்றல் கீதா : 
வலைப்பதிவர்கள் சந்திப்பு
வளரும் கவிதை முத்துநிலவன் : 
முனைவர் பா.ஜம்புலிங்கம், கவிஞர் கில்லர்ஜியைக் கௌரவித்து மகிழ்ந்தோம்
எனது எண்ணங்கள், தி. தமிழ் இளங்கோ : 
புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள்
கரந்தை ஜெயக்குமார் :
கவிஞரின் இல்லத்தில்



-----------------------------------------------------------------

46 comments:

  1. சோழர் காலத்தில் கோயில்கள் கட்ட கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பதற்கான விடை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள உடையார்கோயில் என்னும் சிற்றூரில் கரவந்தீஸ்வரசுவாமி கோயில் என்னும் சிவன் கோயிலில் உள்ளது என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியை தங்களது பதிவின் மூல்ம் அறியப் பெற்றேன். தகவலை நல்லதொரு பக்தி பதிவின் மூலம் எடுத்து வந்து சேர்த்துள்ளீர்கள். தங்களது திருப் பணி தொடரட்டும். நன்றி முனைவர் அய்யா!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்திற்கும் அன்பான நன்றி. தங்களின் ஊக்கத்தோடு திருப்பணி தொடரும்.

      Delete
  2. Email received from Mr.K.Sridharan: Sir, vanakkam. today I read your article on Uayalur temple in Tamil Hindu. very much useful to all.--write more with regards.k.sridaran

    ReplyDelete
  3. Replies
    1. தாய் மண்ணில் பயணித்துக்கொண்டு, நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு, அதே சமயம் பதிவுகளையும், பதிவுகளுக்கு மறுமொழிகளையும் இடும் தங்களின் அன்பிற்கு நன்றி.

      Delete
  4. தஞ்சைக்கு அருகில் இருந்தும் ஸ்ரீகரவந்தீஸ்வரர் திருக்கோயிலைத் தரிசித்ததில்லை.. திருப்பணி நிறைவேறி திருக்குடமுழுக்கு நிகழ்ந்தது குறித்து மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. தங்களின் ஆவல் பூர்த்தியடையும்.

      Delete
  5. lதங்கள் பதிவு அனைத்தும் வராலாற்றுப் பதிவுகளாகும்! வருங்கால சந்ததி அறிய!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படித்து கருத்துரை இடும் தங்களின் அன்பிற்கு நன்றி.

      Delete
  6. அறியாத கோவில் முழுமையாக அறிய தந்து இருக்கிறீர்கள்.புகைப்படம் அழகு நன்றி

    தம +1

    ReplyDelete
    Replies
    1. 20 ஆண்டுகளுக்கு முன்பே சென்றுள்ளேன். தற்போது மறுபடியும் சென்றேன். அதன் தாக்கமே இக்கட்டுரை.

      Delete
  7. உடையார் கோயில் சென்றதில்லை ஐயா
    அவசியம் ஒரு முறை சென்று வர வேண்டும்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தஞ்சைக்கு மிக அருகில் உள்ளது. தங்களுக்கு வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

      Delete
  8. கரவந்தீஸ்வரசுவாமி கோயில் பற்றிய சிறப்பான பல தகவல்களுக்கு நன்றி ஐயா...

    "தி இந்து" நாளிதழில் வந்தமைக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் வருகையும், பின்னூட்டங்களும் என் எழுத்துக்கு ஊக்கம் தருகின்றன. நன்றி.

      Delete
  9. அறியாத கோவிலைப்பற்றி உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். எனது வலைப்பூவில் கேரட் ஜூஸ் ருசிக்க வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அறியாத கோயிலைப் பற்றி அறிந்தமையறிந்து மகிழ்ச்சி. ஜுஸ் பருகிவிட்டேன்.

      Delete
  10. அறியாத தகவல்கள் தங்கள் பதிவு மூலம் அறிந்தேன், தேவாரப் பாடல் இல்லா கோயில் எனும் போது ஆச்சிரியம் தான், புகைப்படங்கள் அனைத்தும் அழகு,
    தங்கள் புதுக்கோட்டைச் சந்திப்பு வாசித்தோம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. புதுக்கோட்டை சந்திப்பு வித்தியாசமான அனுபவம்.

      Delete
  11. அறியாத கோவிலைப் பற்றி அரிய தகவல்களுடன் அறியத் தந்தீர்கள ஐயா...

    ReplyDelete
  12. வணக்கம்
    ஐயா
    ஆலயம் பற்றிய தகவல் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தெர்டர் வருகைக்கு அன்பான நன்றி.

      Delete
  13. உடையார் கோவில் கரவந்தீஸ்வரர் ஆலயம் பற்றிய அரிய தகவல்கள் அறிந்தேன்! படங்கள் சிறப்பு சேர்த்தன! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இப்பகுதியில் உள்ள பார்க்கவேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. வருகைக்கு நன்றி.

      Delete
  14. அருமையான வரலாற்றுப் பதிவு

    ReplyDelete
  15. உடையார் கோயில் கரந்தீஸ்வரர் பற்றி அவ்வளவாக அறிந்ததில்லை. தங்கள் பதிவிலிருந்து பல தகவல்களை அறிந்தோம்....படங்கள் மிக அழகு. மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் அன்பான நன்றி.

      Delete
  16. படங்களுடன் தலம் பற்ரிய தகவல்களுக்கு நன்றி.சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது உங்களுக்கு.நன்று

    ReplyDelete
    Replies
    1. சந்திப்பு அனுபவம் வித்தியாசமானதே. நன்றி.

      Delete
  17. உடையார் கோயில் பற்றி தகவல்களை வரலாற்றுத் தகவல்களுடன் பகிர்ந்த விதம் சிறப்புங்க ஐயா.

    ReplyDelete
  18. 18ஆம் நூற்றாண்டு வரலாற்றுத் தடயங்களைத் தந்தமைக்கு நன்றியும் பாராட்டும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  19. அழகான படங்கள்
    தமிழ் ஹிந்துவில் அந்தக் கட்டுரை படித்தேன். வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கமே என் எழுத்துக்குக் காரணம். நன்றி.

      Delete
  20. ஆய்வாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள்/ நன்றி

    ReplyDelete
  21. அன்பின் அய்யாவிற்கு,
    உடையார்கோவில் கரந்தீஸ்வர் கோவில் பற்றிய தங்களது தகவல்கள் இது வரை அக்கோவிலை பார்த்திராத எங்களுக்கு உடன் அங்கு செல்ல வேண்டும் என்ற உணர்வினை ஏற்படுத்தி விட்டன. நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. தஞ்சைக்கு மிக அருகில் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது செல்லலாம். வருகைக்கு நன்றி.

      Delete
  22. உடையார்கோவில் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. கற்கள் எங்கிருந்து வந்தன என்ற வரலாற்றுச் செய்தியைத் தெரிவிக்கும் கோவில் என்றும் தேவாரம் பாடாத கோவில் என்றும் உங்கள் பதிவால் அறிந்தேன். புதிய செய்திகள். மிக்க நன்றி ஜம்பு சார்!

    ReplyDelete
  23. தங்களின் அன்பான வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  24. Can some one share the English write up of Karavandheeswarar kovil for incorporating in my blog

    ReplyDelete