24 November 2015

சிங்கமடை அய்யனார் : ஜ.பாக்கியவதி

16.10.2015 நாளிட்ட தினமணி இதழில் என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள சிங்கமடை அய்யனார் என்ற தலைப்பிலான கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கின்றேன். இக்கட்டுரையை வெளியிட்ட தினமணி இதழுக்கு எங்களின் நன்றி.

தினமணி, 16.10.2015 நாளில் வெளியான கட்டுரை

சிங்கமடை அய்யனார் கோயில் கோயில்பட்டிக்கும் சாத்தூருக்கும் இடையே அமைந்துள்ளது. இக்கோயில் 150 ஆண்டுகள் பழமையானது. 30 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில் இருந்த இக்கோயில் பக்தர்களின் முயற்சியால் தற்பொழுது புதுப்பொலிவுடன் விளங்குகிறது. சிங்கமடை அய்யனார் சுவாமியை பல இனத்தவர்கள் தங்களது குலதெய்வமாகக் கொண்டு வழிபாடு செய்கின்றனர்.


தெய்வங்கள்
இக்கிராமக் கோயில் வளாகத்தில் உள்ள தெய்வங்களின் பெயர்கள் வித்தியாசமாக உள்ளன. கோயில் வளாகத்தில் சிங்கமடை அய்யனார் சன்னதி, நொண்டி கருப்பசாமி சன்னதி, பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னதி, பேச்சியம்மன் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.  கோயில் வளாகத்தில் இத்தெய்வங்களைத் தவிர விநாயகர், சப்தகன்னியர், கருப்பசாமி, பேச்சியம்மன், முனிவர், பாம்பு, லிங்கம், வைரசாமி, முருகன், நந்தி, நாகர், வீரபத்திரர், வில்லடி கருப்பசாமி, முத்துக்கருப்பன், லாட சன்னியாசி, வல்லடமுத்து ஆகியோர் உள்ளனர். 
 
இக்கோயிலில்  தேங்காய், பூ, மொந்தன் வாழைப்பழம், சந்தனம், மாலை ,அர்ச்சனைப் பொருள்களாக உள்ளன. சிலர் மாவிளக்கு இடுகின்றனர்.  பதினெட்டாம்படி கருப்பாசாமி சன்னதியில் இரு புறமும் வாழை மரங்களும், கரும்புக்கட்டுகளும் கட்டப்பட்டுள்ளன. மொட்டையடித்தல், காதுகுத்துதல், கடா வெட்டுதல் போன்றவை இக்கோயிலில் நடத்தப்பெறுகின்றன. விழா நாளன்று மகளிர் குத்துவிளக்கு பூஜை செய்கின்றனர். முடிந்தவுடன் பொதுப்பொங்கல் வைப்பதற்காக ஆண் பெண் வேறுபாடின்றி, வயது வேறுபாடின்றி, நெல்லை உரலில் குத்துகிறார்கள். அந்த அரிசியில் வெண் பொங்கல் வைத்து, உணவின்போது பரிமாறுகின்றனர். இரவு சாமி புறப்பாடு, பூசை, குறி சொல்வது போன்றவை நடைபெறுகின்றன. இரண்டாம் நாள் காலையில் கடாவெட்டுதல் நடைபெறுகிறது. முன்பு கருப்பண்ண சாமியின் முன்பாக வெட்டுவார்களாம். இப்போது பின்வாசலில் வெட்டுவதாகக் கூறுகின்றனர். அவரவர் வேண்டுதலுக்குத் தக்கபடி செய்கின்றனர். மதியம் உணவு முடிந்தபின் குழந்தைகளுக்கு  பொது அறிவுப் போட்டி, வினா விடை போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவற்றை நடத்துகின்றனர். விழாவிற்கு வந்துள்ள குழந்தைகள் அதில் ஆர்வமாகக் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. இரண்டாம் நாள் இரவு மேளதாளத்துடன் முளைப்பாரி, அக்னி சட்டியெடுத்தல், மூங்கில் குச்சியை வட்டமாக அமைத்து தீப்பந்தம் கொளுத்துதல் போன்றவை சிறப்பாக நடைபெற்றன. சாமி வடிவத்தில் முளைப்பாரியை வடிவமைத்திருந்தது பார்க்க அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. பார்க்க மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.  
மகள்கள் வழிபாடு
மகள்கள் (பொம்பளை மக்கள்) வழிபடும் தெய்வங்களான ராக்கச்சி, மாடான், மாடத்தி, பாதாளகண்டிகை ஆகிய தெய்வங்களும் இங்கு உள்ளன. மகள்கள் இத்தெய்வங்களுக்கு தனியாக வழிபாடு நடத்துகின்றனர். ஓலைக்கொட்டானில் தேங்காய், வாழைப்பழம் வைத்து பூஜை செய்கின்றனர்.  இதனைப் பெட்டிப்பழம் என்று கூறுகின்றனர். வேறு எந்த குலதெய்வக் கோயில்களிலும் இல்லாத சிறப்பு வழிபாடாக மகள்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
திருவிழா ஏற்பாடு
சுவாமி புறப்பாடு, பூசைகள்,    பங்காளிகள் நன்கொடை வசூலித்து கோயிலில் கட்டடப்பணியை மேற்கொள்கிறார்கள். அன்னதானமும் செய்கின்றார்கள். விழா நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கோயிலை சுத்தம் செய்வதற்காக குழு அமைத்து சுத்தம் செய்து, பந்தல் கட்டுதல், சுண்ணாம்பு அடித்தல், அன்னதானத்திற்கான ஏற்பாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். விழாவிற்கு வந்தவர்கள் எங்கெங்கெல்லாம இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் குடும்பத்துடன் சமையல் செய்து இரு நாள் அல்லது மூன்று நாள் தங்கிச் செல்கின்றனர். சிவன் ராத்திரியைக் கணக்கிட்டு ஒரு வாரத்திற்கு நள்ளிக்கோயில் கூட்டமாக இருக்கும் என்று அங்கு தற்காலிகமாகக் கடை வைத்துள்ளவர்கள் கூறினர். விழாக்காலத்தில் மட்டும் மக்கள் வந்து செல்வதாகவும், பிற நாள்களில் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், ஈ காக்கையைக் கூடப் பார்க்கமுடியாது என்றும் கூறினர்.  திருவிழா முடிந்தபின் இவர்கள் அங்கு தங்கி அதற்கான கணக்கினை ஒப்படைத்துவிட்டு வருவதாகக் கூறினர். திருவிழாவிற்கு காவலுக்கு வரும் பாதுகாவலரையும் குடும்ப உறுப்பினராக பாவிக்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வந்திருந்த போதிலும் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் விழா சிறப்பாக நடைபெற்றதைக் காணமுடிந்தது. விழா முடிந்தபின்னர் கோயில் முகவரியிட்ட மஞ்சட்பையில் கரும்பு, வாழைப்பழம், தேங்காய், விபூதி, குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை கோயில் பிரசாதமாகத் தந்தனர். கிராமத்தில் உறவினர்களுடன் கோயிலில் இரு நாள்கள் தங்கி விழா நிகழ்வுகளைக் கண்ணாரக் கண்டு ஊருக்குத் திரும்பினோம்.
நன்றி 
கோயிலின் முழு வளாக புகைப்படம் : திரு மணிகண்டன் ஏமராஜன்
களத்தில் உதவி : கும்பகோணம் திருமதி சிங்கதேவி லோகேஷ் 
-----------------------------------------------------------
தினமணி இதழில் இக்கட்டுரையைக் கீழ்க்கண்ட இணைப்பில் படிக்கலாம்:
-----------------------------------------------------------

19 comments:

  1. வணக்கம்
    ஐயா

    நிகழ்வை அழகாக சொல்லியுள்ளீர்கள் தினமணி இதழில் வெளிவந்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா... தொடர்ந்து சாதனைகள் தொடர எனது வாழ்த்துக்கள் த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. 90 களில் சாத்தூரில் வேலை பார்த்திருக்கிறேன். இந்தக் கோவில் பற்றி அறிந்ததில்லை. உங்கள் துணைவியாருக்குப் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி.
    தம +1

    ReplyDelete
  3. பாரம்பர்யப் பெருமை உடைய சிங்கமடை ஸ்ரீஐயனார் திருக்கோயிலைப் பற்றிய தகவல்கள் அருமை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. சிங்கமடை அய்யனார் கோயில் பற்றிய சிறப்புகளை அறிந்தேன் ஐயா... நன்றி... துணைவியாருக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. ஒரே வீட்டில் இருவருமே எழுத்தாளர்கள்,வாழ்த்துகள் அய்யா:)

    ReplyDelete
  6. தங்களுக்கு திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  7. கிராமியக் கோவில் ஒன்றினைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் நன்று. படங்களும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    தினமணி இதழில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு! உங்கள் துணைவியாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
  9. புதியதாக ஒரு தகவல் அதுவும் கிராமத்துக் கோயில் பற்றி. தினமணியில் வெளிவந்தமைக்குத் தங்கள் மனைவிக்கு வாழ்த்துகள். படங்களும் அழகு. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  10. அருமையான பகிர்வு ஐயா,,,,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வணக்கம் முனைவரின் எழுத்தாளும் குடும்பத்தினருக்கு எமது வாழ்த்துகள் தினமணி செய்தி அறிந்து மகிழ்ச்சி மீண்டும் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 6

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு ஐயா

    ReplyDelete
  13. எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

    ReplyDelete
  14. மாயவரத்தில் கோவில்பட்டியிலிருந்து வந்த ஒருவர் மிட்டாய் கடைக்கு(ஸ்வீட் ஸ்டால்) சிங்கமடை அய்யனார் ஸ்வீட் ஸ்டால் என்று பெயர் வைத்து இருக்கிறார்.
    கோவிலைப்பற்றி விவரங்கள் தெரிந்து கொண்டோம்.
    நன்றி.

    ReplyDelete
  15. உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வணக்கம் முனைவர் ஐயா !

    தங்களைப் போலவே தங்கள் இல்லத்தரசியாரும் எழுத்துலகில் பங்காற்றுவதை இட்டுப் பெருமை கொள்கிறேன் அருமையான பதிவு நிகழ்வுகளை நேரில் சென்று பார்த்ததுபோல் ஒரு திருப்தி ! தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !
    தம +1

    ReplyDelete
  17. முனைவர் சார்! கோவில் விவரங்கள் அற்புதம். தங்களுக்கும் உங்கள் இல்லத்தரசிக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. கருப்பனின் புகழ் பாடுவோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete