18 February 2016

மகாமகம் 1980 : குடந்தை மகாமக விழா மலர்

2016, 2004, 1992 மகாமக மலர்களைப் பார்த்ததும் 1980இல் வெளிவந்த மகாமகம் மலரைப் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி நாள்களில் அதிகம் நாங்கள் நேரத்தைச் செலவழித்த இடங்களில் ஒன்று கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்.  கும்பகோணத்தில் தனக்கென தனியான ஒரு இடத்தைப் பெற்று சிறந்த முறையில் சேவை செய்துகொண்டிருக்கிறது இந்நூலகம். இந்நூலகத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரையைத் தனியாக ஒரு பதிவில் பார்ப்போம். பொன்னியின் செல்வன் தொடங்கி பல வரலாற்றுப் புதினங்களை நான், நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு படிக்கக் களமாக இருந்தது இந்நூலகமே. 

இந்நூல் நிலையத்தில் 50 வருடங்களுக்கு முன்பு வந்த தீபாவளி மலர்களைப் பார்த்துள்ளேன்.  அவற்றுடன் 1980இல் வெளியான மகாமக மலரைப் பார்த்த நினைவு எனக்கு. நூல் நிலையத்தில் தொடர்புகொண்டு பேசியபோது அவர்கள் அப்போது தனியார் வெளியிட்ட மலர் இருப்பதாகக் கூறவே, அன்று (8 பிப்ரவரி 2016) மாலையே கும்பகோணம் சென்று மலரைப் பார்த்தேன்.

70 பக்கங்களைக் கொண்ட திம்மி 1/8 அளவில் இருந்த அம்மலரில் கும்பகோணம் தொடர்பான பல கட்டுரைகள் இருந்தன. ஆவலோடு வாங்கிப் பார்த்து சிறிதுநேரம் படித்தேன். விளம்பரங்களும் அதிகமாக இருந்தன. ஆசிரியர் புலவர் கி.ஞானசுந்தரம், தொகுப்பாசிரியர் கு.பாலசுப்பிரமணியன் என்று அம்மலரில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

முகப்பட்டையில் மகாமகக்குளம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. உள்ளே குடந்தை மகாமக மலர் என்ற தலைப்பின்கீழ் புகைவண்டி, பேருந்து கால அட்டவணையுடன் என்று அடைப்புக்குறிக்குள்  குறிப்பு காணப்பட்டது. கீழ்க்கண்ட  தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.


  • கும்பகோண ஷேத்ர ஆதி வரலாறு (தொகுப்பு: என்.சுந்தரராஜுலு நாயுடு, கும்பகோணம்)
  • குடந்தை மகாமக வரலாறு
  • மகாமகக்குளம்
  • குடந்தை மாநகரைச் சூழ்ந்துள்ள தெய்வ மணம் கமழும் திருத்தலங்கள் (தொகுப்பு: இரா.ரவிச்சந்திரன்)
  • மகாமகத்தின் மாண்பு (ஜி.சீனிவாசன்)
  • குடந்தை நகர் வாழ்ந்த கோமான்கள் (புலவர் இரா. சொக்கலிங்கம்)
  • குடந்தையின் பெருமை (தொகுப்பு: என்.சுந்தரராஜுலு நாயுடு, கும்பகோணம்)


ரத்தினச்சுருக்கமாக செய்திகளைக் கொண்டு மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்ட மகாமக மலரை மூன்று மகாமகங்கள் கழித்து பார்த்தபோது வியப்பாக இருந்தது.

அக்டோபர் 1980இல் அம்மலர் நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தரப்பட்டதற்கான குறிப்பு நூலின் முதல் பக்கத்தில் காணப்பட்டது. இந்நூல் கீதா வெளியீட்டகம், 90ஏ, அ, அரசலார் ரோடு, கும்பகோணம் என்ற முகவரியிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி :
நூலைப் பற்றிய விவரத்தைக் கூறிக் கேட்டபோது அதனைக் கண்டுபிடித்து (நூலக எண்.5884அ, 12860) தொலைபேசிமூலம் தெரிவித்து, அதனைப் பார்க்க உதவிய திரு தயாளன் மற்றும் நூலக அலுவலர்களுக்கு என் நன்றி.

பிற மகாமக மலர்கள் : 

4 comments:

  1. அருமையான தகவல் தந்த முனைவருக்கு நன்றி
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. பொக்கிஷம்.... தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. Mr selvapandian balasubramanian
    (thro email: selvapandianba@gmail.com)
    அருமை.

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete