12 November 2016

தந்தையின் இதயத்தைத் தானமாகப் பெற்றவருடன் நடந்து வந்த மணமகள் : கட்டி ரோஜர்ஸ்

பத்தாண்டு கால இடைவெளியில் நடைபெற்ற கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு திருமணம் : 10 ஆண்டுகளுக்கு முன் ஜேனி ஸ்டீபியன் என்பவரின் தந்தை மரணமடைந்தபோது அவரது  இதயத்தைத் தானமாகப் பெற்றவர் ஜேனியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நியூஜெர்சியிலிருந்து பென்சில்வேனியா வந்தார். திருமண நிகழ்வின்போது அவர் தேவாலயத்தில் ஜேனியுடன் நடந்துசென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். 
Photo courtesy: New York Times
ஆரம்பப்பள்ளியின் ஆசிரியையான ஜேனி தன்னுடைய தேனிலவிற்காக விமானத்தில் ஏறச்செல்லும்போது அளித்த பேட்டியில் ஸ்விஸ்வேல் நகரில் தன் தந்தை கொலை செய்யப்பட்ட இடமும், தனக்கு திருமணம் நடந்த இடமும் மிக அருகிலேயே இருந்தன என்றார். தன் தந்தையின் இதயத்தைத் தானமாகப் பெற்றவர் அங்கு வந்திருந்தபோது தன் தந்தையே தம்முடன் இருப்பதாக நினைத்துக்கொண்டதாக நெகிழ்ச்சியோடு கூறினார்.


ஏதோ புதிர் போல இருக்கிறதல்லவா? இதன் ஆரம்பத்தைத் தெரிந்துகொள்வதற்கு நாம் செப்டம்பர் 2006க்குச் செல்வோம். 53 வயதான மைக்கேல் ஸ்டீபியன் ஜேனியின் தந்தை ஆவார். அவர் ஒரு உணவகத்தில் தலைமை சமையல்காரராகப் பணியாற்றி வந்தார். ஒரு நாள் பணி முடிந்து தன் வீட்டிற்கு அவர் திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில் 16 வயதுள்ள ஒருவன் துப்பாக்கி முனையில் அவரிடம் திருடிவிட்டு அவருடைய தலையில் சுட்டான். இக்கொலைக்காக லெஸ்லி எல் பிரவுன் என்ற பெயருடைய அவன் 40 வருட தண்டனையை அனுபவித்துவருகிறான்.

சுடப்பட்ட நிலையில் அவளுடைய தந்தை மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போது அவளுடைய குடும்பம் தவிர்க்கமுடியாததைச் செய்ய ஒத்துக்கொள்ள முடிவெடுத்தது” என்று ஜேனி கூறினார். உறுப்பு மாற்ற மையம் என்ற நிறுவனத்தின் மூலமாக அவருடைய உடலுறுப்புகளைத் தானமாகத் தர அப்போது முடிவெடுக்கப்பட்டது.
உறுப்புதானத்திற்குப் பின்னர் தானம் கொடுத்த குடும்பமும் தானம் பெற்ற குடும்பமும் தொடர்பில் இருக்க அந்நிறுவனம் அனுமதிக்கிறது. மைக்கேல் ஸ்டீபியனின் இதயத்தை ஆர்தர் தாமஸ் பெற்றார். நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான அவர் நியூ ஜெர்சியில் லாரஸ்வில்லியில் வாழ்ந்துவந்தார். கொடிய இதய நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் மைக்கேல் ஸ்டீபியனின் இதயம் தாமஸுக்குப் பொருத்தப்பட்டதாக  ஜேனி கூறினார்.
இதயத்தை தானமாகப் பெறுவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டபோது  72 வயதான தாமஸின் இதயத்தில் இருந்த குறை தெரிய ஆரம்பித்தது. அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைத்த இனிய செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தனர்.  
உறுப்பு மாற்றம் பெறுவோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது சற்று சிக்கலாக இருந்ததாகவும் உறுப்பு மாற்றம் செய்யப்பட்டபின்பு அக்குடும்பத்தாருக்கு நன்றிக்கடிதம்  அனுப்ப விரும்பியதாகவும் தெரிவித்தார்.
புதிய நட்பிற்கான ஆரம்பம். தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், கடிதங்கள் என்ற நிலையில் இரு குடும்பத்தினரும் நட்புடன் பழக ஆரம்பித்தனர். ஸ்டீபியனின் தாயார் பெர்னிஸ் தாமஸுடம் அவ்வப்போது தொடர்பு கொண்டு நட்பை மேம்படுத்திக்கொண்டார். பிறந்த நாள்களுக்கு பூக்கள் அனுப்புதல், கிறிஸ்துமஸ் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுதல் என்ற நிலையில் அவ்விரு குடும்பத்தாரின் பிணைப்பு தொடர்ந்தது. சில நேரங்களில் அவர்கள் குழந்தை வளர்ப்பு தொடர்பான உத்திகளைக்கூட ஒத்துநோக்கிப் பகிர்ந்துகொண்டனர்.  ஆனால் அக்டோபர் மாதத்தில் 33 வயதான ஜேனிக்கு  34 வயதான பொறியாளரான பால் மேனரை திருமண உறுதி செய்யும் நாள் வரை அவ்விரு குடும்பத்தினரும் நேரில் சந்திக்கும் வாய்ப்பினைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை.
ஜேனியின் திருமணம் தொடர்பான பேச்சுகள் ஆரம்பித்த நிலையில் அவளுடைய சிந்தனைகளில் முதன்மையான இடத்தைப் பிடித்த சிந்தனை அவளுடைய திருமண நாளில் தேவாலயத்தில் அவளுடன் தன் தந்தையின் இதயம் தனக்கு மிக நெருக்கமாக இருக்கப்போவதை எண்ணி அவள் வியப்பில் ஆழ்ந்தாள்.
வருங்கால கணவருடைய ஆலோசனைப்படி ஜேனி, தாமஸ் குடும்பத்திற்குக் கடிதம் எழுதினார். அதில் திருமண நிச்சய நாளன்று அந்தப் பாதையில் அவருடன் நடந்து வர அவரைக் கேட்டுக்கொண்டார். அவளுடைய விருப்பத்தை தாமஸ் தன் மகள் ஜாக்கியிடம் பகிர்ந்துகொண்டபின், ஜேனியின்  விருப்பத்தை பூர்த்தி செய்யப்போவதாகச் சம்மதித்தார்.
அது ஒரு அருமையான யோசனை என்று தன் தந்தையிடம் கூறிய ஜாக்கி அவர் தேவாலயத்தில் நடந்துசெல்வதற்கு முன்கூட்டியே பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். (திருமணத்திற்கு முன்பாக ஒரு முறை இவ்வாறாக பயிற்சி எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.)
ஒரு கல்லூரியில் ஆலோசகராக இருந்து ஓய்வு பெற்ற தாமஸ் முன்னர் லாரன்ஸ்வில்லியில் ஒரு பள்ளியில் வேலை பார்த்தவர்.  அவர் ஜேனியிடம் தன்னுடைய அதிகபட்ச உணர்வுகள் அப்போது வெளிப்படும் என்று கூறினார்.
அவர் நினைத்தவாறே தானும் நினைப்பதாக கூறிய ஜேனி உறுதியாக அவரோடு அங்கு இருக்கப்போவதாகக் கூறினார்.
ஸ்வில்வேல் என்னுமிடத்தில் ஜேனின் பெற்றோருக்குத் திருமணம் ஆன அதே தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. தாமஸும் மணமகளும் ஒரு நாள் முன்னதாகச் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பின்போது அவர் தன் மணிக்கட்டை உறுதியாகப்  பிடித்துக்கொள்ளும்படி அவளிடம் கூறியபோது, அவருடைய நாடித்துடிப்பு அதிகமாக இருந்தது.
தந்தையுடைய இதயத்துடிப்பு என்ற நிலையில் அவள்  தன் தந்தைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்வதற்கு அது ஒரு நல்ல உத்தி  என்றார் தாமஸ்.
திருமண நாளில் தேவாலயத்தில், தாமஸின் மார்பினைத் தொட்டுக்கொண்டு நின்ற நிலையில் மணமகளைப் புகைப்படமெடுத்தனர். வரவேற்பு விழா நிகழ்வில் அவர்கள் இணைந்து நடனமாடினர். வந்த விருந்தனர்கள் தாமஸுடனும் அவருடைய மனைவி நான்சியுடனும் கலந்துகொண்டனர். இரு குடும்பத்தினரும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும் என்றும்,  முடிந்தவரை இறுக்கம் குறைவான சூழலாக அது அமையட்டும் என்றும் தம் எண்ணத்தை பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொண்டனர்.
அவளுடைய தந்தையின் இதயத்துடன் பிட்ஸ்பர்க்குக்கு வந்தது தனக்குப் பேரதிசயமாக இருந்தது என்ற தாமஸ், நடந்துவர வேண்டிய ஒரு சூழல் அமைந்திருந்தால் நடந்துகூட வந்திருப்பேன் என்றார் பெருமையுடன்.

தமிழாக்கம் : பா.ஜம்புலிங்கம்
நன்றி : The New York Times 

மூலக்கட்டுரையை நியூயார்க் டைம்ஸ் இதழில் வாசிக்க இணைப்பு :
Bride Is Walked Down Aisle by the Man Who Got Her Father’s DonatedHeart NYT 8 Aug 2016

19 நவம்பர் 2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

14 comments:

  1. நெகிழ்வான நிகழ்வு.

    ReplyDelete
  2. விழிப்புணர்வு தரும் பதிவு ,வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. நெகிழ்வான விடயத்தை தமிழாக்கம் செய்து தந்த முனைவருக்கு நன்றி
    த.ம.3

    ReplyDelete
  4. நெகிழ வைத்த பதிவு!
    த ம 3

    ReplyDelete
  5. நெகிழ வைத்த பதிவு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. முனைவரின் தமிழாக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  7. அருமையான நிகழ்வு! அழகான மொழியாக்கம்!

    ReplyDelete
  8. அருமையான மொழிபெயர்ப்புடன்
    சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

    ReplyDelete
  9. நெகிழ்ந்துதான் போனேன் ஐயா
    தம +1

    ReplyDelete
  10. ஒன்றுக்கு இரு முறை படித்தேன் யாருடைய இதயம் யாருக்குப் பொருத்தப்பட்டது என்று உறுதி செய்து கொள்ள வாழ்த்துகள்

    ReplyDelete
  11. நெகிழவைத்த பதிவு ஜம்பு சார்

    ReplyDelete
  12. மனதை நெகிழ வைத்தப் பதிவு, நிகழ்வு! தங்கள் தமிழாக்கமும் வெகு சிறப்பு ஐயா!

    ReplyDelete