10 December 2016

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை : ஓவியர் தங்கம்

"குடந்தை ஜோசியர் வீட்டு வாசலில் குழப்பமான சத்தம் கேட்டது. ஜோசியரைப் பார்க்கவேண்டுமென்று வந்தியத்தேவன் படுவேகமாக உள்ளே புகுந்தான்....குந்தவை தேவியின் பொன்முகத்தை வந்தியத்தேவன் பார்த்தான். கம்பீரமும் வியப்பும் குறும்பும் சிரிப்பும் ததும்பிய கண்களையும் கரிய புருவங்களையும் தந்தவர்ண நெற்றியையும் பார்த்தான்"  என்ற எதிர்பார்ப்புடன் கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் முதல் பகுதியை நிறைவு செய்த ஓவியர் ப.தங்கம் (9159582467) அவர்கள் 8 நவம்பர் 2016 மாலை எங்கள் இல்லம் வந்திருந்தார். முதல் பகுதியைப் படித்து மகிழ்ந்தது நண்பர்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். முதல் பகுதி ஆடித்திருநாள் தொடங்கி திடும் பிரவேசம் வரை 11 அத்தியாயங்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்திருந்தது. கும்பகோணம் ஜோசியர் வீட்டிலிருந்து எங்களது பேச்சு ஆரம்பித்தது.
ஓவியர் தங்கம் அவர்களுடன் ஜம்புலிங்கம், 8 டிசம்பர் 2016
"....இவ்வளவு பிரமாதமான தடபுடலுடன் ஒரு வாலிபன் திடும் பிரவேசமாக உள்ளே வருகிறானே? இவனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்..... அவன் நிறுத்தப்பட உள்ள அதே நேரம் அவனை பின்னாலிருந்து தோள்களைப் பிடித்து இழுக்க சீடன் முயன்று கொண்டிருந்தான்....." சித்திரக்கதையின் முதற்பகுதி நிறைவுறும் இடத்தில் தொடங்கி அடுத்த பகுதிக்கான ஓவியங்கள் நிறைவு பெற்றுவிட்டதாகக் கூறினார்.  
முதல் பகுதியின் மேலட்டை
நிறைவு பெற்ற அந்த ஓவியங்கள் வரையப்பெற்று அச்சிற்கு தரப்பட்டதாகவும், டிசம்பர் 2016 இறுதிக்குள் நூல் அச்சு வடிவம் பெறவுள்ளதாகவும் மகிழ்ச்சியோடு கூறினார். பொன்னியின் செல்வனை ஓவியமாகக் கொணரும் தன் முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக அவர் கூறினார். முதல் பகுதி அச்சில் இருக்கும்போது அவர் வரைந்துகொண்டிருந்த ஓவியங்களைப் பார்த்துள்ளேன். 


நூல் வெளிவருவதற்கு முன்பாக நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் ஓவியங்களை இன்றைய சந்திப்பின்போது தந்தார். ஓவியங்களில் உள்ளவர்களைப் பற்றியும், அவர்களுக்கிடையே நடைபெறும் உரையாடல் பற்றியும் பொன்னியின் செல்வன் புதினத்தின் வாசகர்கள் நன்கு அறிவர். ஓவியரின் மதிநுட்பம், நினைவாற்றல், கதாபாத்திரங்களை ஆழ மனதில் பதியவைத்துள்ள உணர்வு, புதினத்தின்மீதான ஈடுபாடு அனைத்தும் ஒன்று சேர்ந்து நம் முன் ஓவியங்களாக இதோ காட்சியளிக்கின்றன. 

கீழே காணப்படுகின்ற ஓவியங்கள் அனைத்துமே வெளிவரவுள்ள நூலுக்காக வரையப்பட்ட ஓவியங்களாகும். 






"கொள்ளிடக்கரையில் படகில் ஏற்றி நாம் விட்டுவிட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை ஜோதிடரின் வீட்டிற்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதைச் சொல்லவேண்டும் அல்லவா?"  என்று கல்கி 12ஆம் அத்தியாயத்தைத் தொடங்குகிறார். தற்போது அச்சாகி வெளிவரவுள்ள நூலில் இவ்வினாவிற்கு விடையளிப்பது தொடங்கி 41ஆம் அத்தியாயத்தோடு இப்பகுதி நிறைவு பெறவுள்ளது என்ற அவர் "இரு கோஷ்டியினரும் சந்திக்கும்போது என்ன நடக்கும்? ஏதாவது விபரீதமாக நடக்குமா? அல்லது ஒருவருக்கொருவர் வழி விட்டுவிட்டுச் சாவதானமாகப் போய்விடுவார்களா? வந்தியத்தேவன் அந்தப் பரபரப்பில் மூச்சு விடுவதைக் கூட நிறுத்திக் கொண்டு அத்தனை கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்" என்று கல்கி நம்மை வந்தியத்தேவனோடு காக்க வைக்கும் நிலவறையில் நம்மை காக்கவைக்கிறார் ஓவியர்.

ஒரே இடத்தில் நந்தினியை வந்தியத்தேவனும், ரவிதாசனும், பழுவேட்டரையரும் தனித்தனியாக சந்திக்கும் நிகழ்வினை வரைய ஆரம்பித்தபோது மாறுபட்ட எண்ண உணர்வுகளை முகபாவனைகளில் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டதாக ஓவியர் கூறினார். இவ்வாறாக பல சூழல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்றார் அவர். 

இவ்வாறான மாறுபட்ட உணர்வுப்பெருக்குகளுக்கிடையே ஓவியங்கள், உரிய உரையாடல்களுடன் தற்போது அச்சுக்குத் தரப்பட்டுள்ளதாக ஓவியர் கூறினார். முதல் தொகுதியை மிகவும் சிறப்பாக வடிவமைத்துத் தந்த திரு முல்லைபாரதி, இந்த ஓவியங்களும், உரையாடல்களுக்கும் உயிரூட்டப்பட உள்ளதாகப் பெருமையோடு கூறினார். அண்ணனின் கைவைண்ணத்தில், முல்லைபாரதியின் நுட்பமான அச்சில் கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் அடுத்த தொகுதி விரைவில் வெளிவரவுள்ளது அவர்களுடைய முயற்சியைப் பாராட்டுவோம். வாழ்த்துவோம்.  தமிழகத்தில் ஓவியம் வழியாக கல்கியின் அருமையான புதினத்தை நமக்கு வழங்கும் ஓவியரின் பெருமுயற்சிக்குத் தலைவணங்குவோம்.  

விக்கிபீடியாவில் என்னால் துவங்கப்பட்ட அவரது பக்கம்

24 சூலை 2016இல் முதல் தொகுதி வெளியீடு

முதல் தொகுதி அறிமுகம் 
-------------------------------------------------------------------------------------------
தமிழகத்தின் இரும்புப்பெண்மணிக்கு அஞ்சலி 
சிறந்த ஆளுமையைக் கொண்டு பரிணமித்த தமிழகத்தின் இரும்புப்பெண்மணி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் (24 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016) பிரிவு தமிழகத்திற்குப் பேரிழப்பு. அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட விரும்பியவர், அவர்களின் அன்பால் ஈர்க்கப்பட்டவர். வெளிவுலகத்தொடர்பின்றி சுமார் 75 நாள்கள் தன்னந்தனியாக தன் இறுதி நாள்களைக் கொண்டிருந்தது மிகவும் வேதனையே. அவர்மீது மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள்கூட அவரைப் பற்றி பேசவும், நினைக்கவும், பகிர்ந்துகொள்ளவும் அளவிற்கு ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கியவர். இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பெற்ற அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி

வெளிநாட்டு இதழ்களின் புகழாரம்
Courtesy: Guardian

Courtesy: New York Times
Courtesy: Dawn

Courtesy: Aljazeera

14 comments:

  1. ஓவியர் தங்கம் அவர்களுடன் அலைபேசியில் சிலமுறை பேசியிருக்கிறேன் ஐயா
    ஆனாலும் நேரில் சந்திக்க இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை ஐயா
    விரைவில் சந்திக்க வேண்டும்
    தமிழக முதல்வரின் மறைவிற்கு ஆழ்ந்தஇரங்கல்கள் ஐயா

    ReplyDelete
  2. போற்றத்தக்க,சுவாரஸ்ய எதிர்பார்ப்பைத் தோற்றுவிக்கும் முயற்சி. அதை வாங்கும் ஆவலில் இருக்கிறேன். படங்கள் அருமை.

    ReplyDelete
  3. ஓவியர் அவர்கள் சந்திப்பு, சித்திரக்கதை படங்கள் எல்லாம் அருமை.

    தமிழக முதல்வரின் மறைவுக்கு அஞ்சலிகள்.

    ReplyDelete
  4. பொன்னியின் செல்வன் சித்திரக்கதையாக.... மிகவும் மகிழ்ச்சி. ஓவியங்கள் மிக அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  5. ஆர்வமூட்டும் செய்தி பொன்னியின் செல்வன் சித்திரக்கதையாக மிளிர்வது. இது எவ்வளவு கடினமான பணி என்பது தெரிகிறது. அவர்களைக் கார்ட்டூனாக்கி வரைவது ஓரளவு சுலபம். ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வரைவது சுலபமல்ல. மிகவும் கடினம். அதுவும் ஒவ்வொரு படத்திலும் உணர்ச்சிகளைக் கொண்டுவருவது, கிட்டத்தட்ட மலையத்தனை பணி. ஓவியரைத் தாராளமாகப் பாராட்டலாம். நிச்சயம் ஆங்கிலத்திலும் இது வெளிவரும் என நம்புகிறேன். வந்தால் அடுத்த தலைமுறைக்கு நல்லது. (இது சுலபமான வேலை. ஓவியத்தில் வசனத்துக்கு இடம் விட்டுத்தான் வரைந்துள்ளார். அதில் சரியான (இது முக்கியம்) ஆங்கில வசனத்தை அச்சிட்டால் நிறையபேரை இது சென்றடைவதுமட்டுமல்ல, தமிழகத்தின் புகழையும் உயர்த்தும்.

    ReplyDelete
  6. வரவிருக்கும் மகத்தான சித்திர காவியத்தை இப்போதே வரவேற்கிறேன்..

    ஓவியர் தங்கம் அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்..

    தங்கம் அவர்களை அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  7. மக்கள் முதல்வர்..
    அவரது புகழ் என்றென்றூம் நிலைத்திருக்கும்..

    ReplyDelete
  8. ஓவியர் தங்கம் அவர்களின்பணி
    பிரமிப்பூட்டுகிறது
    படங்களுடன் அற்புதமான பதிவாக்கி
    அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்க

    ReplyDelete
  9. பொன்னியின் செல்வன் சித்திரக்கதையாக வருவது குறித்து பிரமிப்பும் மகிழ்வும்...படங்களுடன் இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன...

    ReplyDelete
  10. ஆஹா... சித்திரக்கதையா... ஓவியருக்கு வாழ்த்துக்கள்.

    முதல்வர் இழப்பு பேரிழப்பு...

    ReplyDelete
  11. தமிழகத்தின் பொற்காலங்களைப்பற்றி அறிந்து கொள்ளவும் நில வளம் நீர் வளம் பற்றி அறிந்துகொள்ளவும் பொன்னியின் செல்வன் போன்ற நூல்கள் நிச்சயம் உதவும்.இதை மதிப்பிற்குரிய தங்கமுத்து அவர்கள் சித்திரக் கதையாகக் கொண்டுவருவது மகிழ்ச்சிக்குரியது.பாராட்டப் படவேண்டியது.நூல் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நாவலை படிக்காதவர்கள்... சித்தரக்கதையில் படம் பார்த்து தெரிந்து தெரிந்து கொள்ளலாம்..........

    ReplyDelete
  13. நாவலை படிக்காதவர்கள்... சித்தரக்கதையில் படம் பார்த்து தெரிந்து தெரிந்து கொள்ளலாம்..........

    ReplyDelete
  14. ஓவியரின் ஆர்வம் அவர் கைவண்ணத்தில் மிளிர்கிறது :)

    ReplyDelete