13 September 2017

மைக்ரோசிப் : அனுசரணையா? ஆபத்தா?

பத்திரிக்கை.காம் இதழில் வெளியான கட்டுரையின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட வடிவம். என் கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை.காம் இதழுக்கு என் மனமார்ந்த நன்றி.


அமெரிக்காவில் விஸ்கான்சில் உள்ள த்ரி ஸ்கொயர் மார்க்கெட் (Three Square Market) என்ற நிறுவனம் தம்மிடம் பணியாற்றும் 40 பணியாளர்களிடம் மைக்ரோசிப்புகளைச் செலுத்தியுள்ளது தொடர்பாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. 
அச்செய்தியைப் பற்றி முந்தைய ஒரு பதிவில் படித்தோம். அந்த மைக்ரோசிப்பைப் பற்றி சுவாரசியமான தகவல்களைக் காணமுடிந்தது. உரிய பணியாளர் அறைக்குள் செல்லும்போது அங்கு பணியாற்றும் சக பணியாளர்களுடைய மைக்ரோசிப்புகளுடன் இணைப்பு கிடைக்கும். திரையில் அவர்களைப் பார்க்கலாம், அவர்களுடைய பணிகள், குணநலன்கள், நடந்துகொள்ளும் முறை, குறைகள் நிறைகள் உள்ளிட்டவற்றை அறியலாம். 

"இது ஒரு மைக்ரோசிப் மட்டுமே. ஒருவர் நாள் முழுதும் 24 மணி நேரத்திற்கு ஒரு தொலைபேசியை வைத்திருந்தாலே அவர் மைக்ரோசிப் வைத்துள்ளதாக பொருள் கொள்ளலாம். அவ்வகையில் இதனைப் பற்றி எவரும் கவலை கொள்ளவேண்டாம்" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. (நன்றி : இன்டிபென்டன்ட்)
(நன்றி : https://www.sciencealert.com)
(நன்றி : https://www.usatoday.com) 
இதுவரை ரோபோக்கள் நம் பணிகளை மேற்கொள்வதைப் பார்த்துள்ளோம். இது சற்றே மாறுபட்டது.  கட்டை விரலுக்கும் பெருவிரலுக்குமிடையே பொருத்தப்படுகின்ற இந்த மைக்ரோசிப்பானது ஒரு அரிசி அளவானது. கையைத் தூக்காமலேயே பல பணிகளை எளிதாகச் செய்யமுடியும். இம்முறை அறிமுகப்படுத்தவுள்ளது என்று கேள்விப்பட்டபோது பல பணியாளர்கள் வியந்தார்களாம், சற்றே யோசித்தார்களாம். பின்னர் பலர் இந்த முறையை ஏற்றுக்கொண்டார்களாம். ஒரு நபருக்குப் பொருத்த 300 அமெரிக்க டாலர் செலவாவதாகவும், அச்செலவினை அந்நிறுவனமே ஏற்றுக்கொள்வதாகவும் இம்முறையினால் எந்த தீங்கும் கிடையாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த முறை பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பதற்காக முதலில் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பொருத்தப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் அலுவலர் தெரிவித்துள்ளார். பணியாளர்கள் மனம் மாறி தனக்கு அது தேவையில்லை என்று நினைத்தால் அதனை வெளியில் எடுத்துவிடலாம். இன்டர்நெட் இணைப்பு அதற்குக் கிடையாது என்றும் இதுவும் ஒரு வகையான கிரடிட் கார்ட் போலவே என்கிறது அந்நிறுவனம். அலுவலக அறையின் கதவைத் திறத்தல், நகலெடுக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்துதல், கணிப்பொறியில் புகுபதிகை (log in) செய்து உள்ளே செல்லல், தொலைபேசிகளைத் திறத்தல் (unlock), வணிக நோக்கிலான அட்டைகளை பரிமாறிக்கொள்ளல், மருத்துவ/உடல் நலம் பற்றிய தகவல்களைப் பதிந்துவைத்துக்கொள்ளல் என்ற பல நிலைகளில் இது உதவும்.  (நன்றி : For the first time, a US company is implanting microchips in its employees, https://www.sciencealert.com/for-the-first-time-a-us-company-is-implanting-microchips-in-its-employees)  இம்முறை மூலமாக பேரழிவினை நோக்கி நாம் செல்கின்றோமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. (நன்றி : 'Mark of the beast?' Microchipping employees raises apocalyptic questions, https://www.usatoday.com


(நன்றி : https://www.nytimes.com)
இத்திட்டமானது த்ரி ஸ்கொயர் மார்க்கெட் நிறுவனத்தாலும் ஸ்வீடன் நாட்டு நிறுவனமான பயோகாக்ஸ் இன்டர்னேஷனல் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவில் முதன்முறையாக இங்குதான் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டபோதிலும், ஸ்வீடனைச் சேர்ந்த எபிசென்ட்டர் என்ற நிறுவனம் இந்த முறையை முன்னரே அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரைவசி மற்றும் உடல் நலன் என்ற நிலையில் பல கேள்விகளை இந்த முறையானது எழுப்புகிறது. முதலில் ஏதோ சதி என்று நினைக்கப்பட்டபோதிலும் பின்னர் அது அவ்வாறல்ல என்பதும் பணியாளர்கள் இதனை ஏற்பதாகவும் கூறப்படுகிறது. (நன்றி : Microchip implants for employees? One company says yes, New York Times) 

கருப்புப்பூனை (Black Cat) திரைப்படம் 
இந்த மைக்ரோசிப் பற்றிய செய்தியைப் படித்தபோது 1991இல் நான் பார்த்த The Black Cat என்ற திரைப்படம் நிறைவிற்கு வந்தது. ஸ்டீபன் ஷீன் (Stephen Shin) தயாரித்த அத்திரைப்படத்தில் ஜேட் லியூங், காத்தரினாக நடித்துள்ளார். எதிர்பாரா விதமாக அவர் ஒரு டிரக் டிரைவரை கொன்றுவிடுகிறார். விசாரணையிலிருந்து தப்பிக்கும்போது அவர் பிடிக்கப்படுகிறார். அவருடைய மூளையில் கருப்புப்பூனை சிப் ("Black Cat" chip) செலுத்தப்படுகிறது. அவர் முழுக்க முழுக்க அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறாள். அது அவளை எரிக்கா எனப்படுகின்ற உளவுத்துறை ஏஜென்டாக மாற்றிவிடுகிறது.   (புகைப்படமும் செய்தியும் நன்றி : ஆங்கில விக்கிபீடியா). 
அவ்வப்போது கதாநாயகி, அவளுக்கு இடப்படுகின்ற ஆணைக்கேற்ப உரிய நபரைக் கொலை செய்வார். அவ்வாறான இலக்கில் ஒருவர் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருப்பார்.  சிறிது நேர இடைவெளியில் குளத்திற்கு வெளியே வந்து வெளியில் உட்கார்ந்துகொண்டு குளத்தில் இரு கால்களையும் விட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். கதாநாயகி நீச்சல் குளத்தில் நீரின் அடியாக வந்து யாரும் எதிர்பாராத வகையில் அவரைக் கொன்றுவிடுவார். அவருக்கோ அருகில் உள்ளவர்களுக்கோ என்ன நடந்தது என்றே தெரியாது. அதற்காக அவர் மேற்கொள்கின்ற உத்தி ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக இருக்கும். அப்பணி முடிந்தபின் சிப் மூலமாக பெறுகின்ற கட்டளையின்படி திரும்ப வந்துவிடுவார். ஒவ்வொரு முறையும் இவ்வாறாகக் பணியை முடித்த பின் தலையைப் பிடித்துக் கொண்டு அழுவார், துடிப்பார். பார்க்க வேதனையாக இருக்கும். அவள் செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யப்போவது அவளுக்கே தெரியாது. 
   
தனியொருவன் திரைப்படம்
அண்மையில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனியொருவன் திரைப்படத்திலும் இதுபோன்ற கதையமைப்பினைக் காணமுடிந்தது. அவருக்குத் தெரியாமல் அவருடைய உடம்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு அவர் படாத பாடு படுவார். கதை விறுவிறுப்பாக இருக்கும்.

இவ்வாறான மைக்ரோசிப் தொடர்பான திரைப்படங்களோடு ஒப்புநோக்கும்போது இந்த முறையானது சாதகங்களைவிட அதிகமான பாதகங்களையே தருமோ என சிந்திக்கத் தோன்றுகிறது. மனிதர்களை இயந்திரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் பிரைவசி என்று ஒரு பக்கம் கூப்பாடு போட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.  ஆபத்து இல்லை என்று நிறுவனங்கள் கூறும்போதிலும்கூட இம்மாதிரியான உத்திகளால் ஏற்படுகின்ற விளைவினை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அணுகுண்டு கண்டுபிடிப்பு முதல் க்ளோனிங் எனப்படுகின்ற படியாக்கம் வரை அறிவியல் கண்டுபிடிப்புகளும் உத்திகளும் அறிமுகமாகும்போது எதிர்மறைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டன.  இப்போதும் நாம் அவ்வாறே அணுகும் கண்ணோட்டத்தில் உள்ளோம். இருந்தாலும் இதன் விளைவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.
----------------------------------------------------------------------
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 
செப்டம்பர் 2017 மாதப் பதிவு
----------------------------------------------------------------------

19 comments:

  1. ஒரு காலத்தில், இன்றைய ஆதாரைப் போல அனைவரும் இதைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை வரலாம் .சுயசிந்தனை அற்ற கொத்தடிமைகளாக மக்கள் மாற்றப் படலாம் :)

    ReplyDelete
  2. இதைப் பற்றி ஏற்கனவே எனது நண்பர்களிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தேன் - தனி ஒருவன் திரைப்படம் வருவதற்கு முன்பே..

    இனிவரும் நாட்களில் எதுவும் நடக்கலாம்!..

    ReplyDelete
  3. மனிதன் சுயநலத்திற்காக விஞ்ஞான வளர்ச்சி நன்மைதான் என்று பொய் சொல்வான்.

    பொதுநலமாய் யோசித்தால் இது மனிதவாழ்வுக்கு சாபக்கேடுதான்.

    அறிவுப்பூர்வமான விடயங்களை எங்களுக்கும் பகிர்ந்தளித்த முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. இது போன்ற மைக்ரோ சிப் இங்கு நாய்களுக்கு பொருத்தப்படும் ஒரு வேளை நாய் சொதலைந்து போனால் அதை எலிதில் கண்டுபிடிக்க இது உதவுகிறது அது போல சில கைதிகளுக்கும் இது மறைமுகமாக பொருத்தப்படுகிறது என்று முன்பு படித்தாக ஞாபகம் அதன் மூலம் கைதிகளை கண் காணிக்க உதவுகிறதாம்

    ReplyDelete
  5. தகவல்கள்.... புதிது புதிதாக கண்டுபிடிப்புகள். பெரும்பாலான கண்டுபிடிப்புகள் தவறான வழியில் பயன்படுகிறது என்பது தான் யோசிக்க வைக்கிறது.

    தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வியப்பாகவும் வேதனையாகவும்இருக்கிறது ஐயா

    ReplyDelete
  7. நண்பர் பகவான்ஜி சொல்வது போல... எதிர்காலத்தில்..நடப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது அய்யா...

    ReplyDelete
  8. டெக்னாலஜி வளர வளர பாதகங்களும் அதிகமாகின்றன என்பதோடு தவறான பாதையிலும் பயணிக்கிறது என்பது நிதர்சனம். மிக மிக யோசிக்க வைக்கிறது. நல்ல பகிர்வு ஐயா.

    துளசி, கீதா

    ReplyDelete
  9. ஒருவரது மருத்துவ வரலாறை இது போல சிப்பில் அவர்கள் உடலுக்குள் வைத்துக் கொள்வார்கள். போகுமிடம் எல்லாம் ஃபைல் தூக்கிக்கொண்டு அலையவேண்டாம் என்று படித்திருக்கிறேன். இன்னும் என்னென்ன கண்டுபிடிப்பார்களோ..

    ஆரம்பத்தில் பயம் இல்லை, ஆபத்தில்லை என்றாலும், பின்னர் அபாய வேலைகளுக்கு இதை உபயோகிப்பார்கள் என்பதில் சந்தேகம் இருக்காது!

    ReplyDelete
  10. வளரும் விஞ்ஞானத்தால் ஆபத்தே அதிகம்! த ம 8

    ReplyDelete
  11. தொழில் நுட்பங்கள் என்பது எந்தக் காலத்திலும் மனித வளர்ச்சிக்கு மட்டும் உதவும். ஆனால் அதனை சந்தைப்படுத்தும் போது உருவாகும் போட்டியில் தான் மற்ற எல்லாமே இங்கு நடக்கும்.

    ReplyDelete
  12. சிப் நமது அடையாள அட்டையாக வந்து விடுமென நினைக்கிறார்களே!

    ReplyDelete
  13. mikavum arumai. ithupatri oru kathai eluthi aaru matham aagapogirathu. potikku anupi iruken. parisu kidaikuma therila. :)

    ReplyDelete
  14. இப்பொதே மக்கள் சுயமாக சிந்திக்க இயலவில்லை இது போல் சிப்கள் வந்து விட்டால் மேலும் மேலும் சிந்திக்கும் சக்தியை இழப்போம் ஆதார் அட்டைகளே ப்ரைவசிக்கு நல்லதல்ல எனும்போதுஇது முற்றிலும் எதிர்க்கப்பட வேண்டும்

    ReplyDelete
  15. அற்புதமானப் பதிவு.பல ஆண்டுகளுக்குமுன் படித்த கதை.ஒரு நிறுவனம் நகரத்தின் பிரபல மருத்துவர்களை இலவசமான கடற் பயணத்திற்கு அழைத்துச்சென்று குறிப்பிட்ட மருத்துவர்களுக்கு இந்த மைக்கிரோ சிப்ப்ஸ் பொருந்துகிறது.கடற்பயணத்திலிருந்து திரும்பிய மருத்துவர்கள் குறிப்பிட்ட கம்பெனிகளின் மருந்துகளையே நோயாளிக்குப் பரிந்துரைக்கின்றனர். பின்னர் கதாநாயகன் இந்த கொடுமையைக் கண்டுபிடிக்கிறான்.
    விஞ்ஞானம் ஆக்க வேலைகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பெரும்பாலும் அழிவுகளுக்கே பயன்படுகிறது.

    ReplyDelete
  16. Mr K.Srinivasan (thro email: kanvas3@yahoo.co.in) Well. Dr. Jambulingam, I am very much impressed your report that Microchip implanting is very much in force. Of course it is a scientific development, but it is very sorry to tell that human being is also treated as just like animals. These things are not acceptable one for human beings. Our scientific approach is only for supporting our activities without any harm to the society. So, our developmental activities should be in the form of positive nature. Everybody should know our precious life span. Thank you so much for your information.

    ReplyDelete
  17. புதிய தொழில் நுட்பம் என்பது இரு பக்கமும் வெட்டத்தக்க கத்தியைப் போன்றது. கவனமாகக் கையாளா விட்டால் ஆபத்தே யாகும்.நல்ல விழிப்புணர்வைத் தந்த பதிவு.

    ReplyDelete