05 September 2017

காவிரி புஷ்கரம் : மயிலாடுதுறை

அண்மைப்பதிவில் காவிரி புஷ்கரத்தைப் பற்றியும் இந்தியாவில் பிற இடங்களில் நடைபெறுகின்ற புஷ்கரங்களைப் பற்றியும் வாசித்தோம். தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற காவிரி புஷ்கரத்திற்காக மயிலாடுதுறை தயாராவதைக் காண அங்கு சென்றேன்.



அடுத்த வாரம் காவிரி புஷ்கரம் நிகழவுள்ள, மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்கு நேற்று மாலை சென்றேன். நகரெங்கும் இவ்விழா பற்றிய பதாகைகள் அதிகமாகக் காணப்பட்டன. பேருந்து நிலையத்திலிருந்து அருகில் சீர்காழி சாலையில் காவிரியாற்றங்கரையில் உள்ள துலாக்கட்டம் என்னுமிடத்தில் தற்போது வறண்டு கிடக்கின்ற காவிரியாற்றில் குளம் போன்ற அமைப்பு  செவ்வக வடிவில் கட்டப்பட்டு வருகிறது. அதிகமான எண்ணிக்கையிலான தொழிலாளர்களும், இயந்திரங்களும் அதில் ஈடுபடுவதைக் காணமுடிந்தது. தற்போது அமைக்கப்படுகின்ற அந்த நீர்த்தேக்கத்தில் ஆங்காங்கே கிணறுகளும் அமைத்து வருகின்றனர். முழுவீச்சில் பணி நடைபெறுகிறது.

உள்ளூரிலிருந்தும், வெளியூரிலிருந்தும் அங்கு பலர் வந்து கண்டு செல்வதைக் காணமுடிந்தது. கும்பகோணம் மகாமகத்தின்போது காணப்படுகின்ற ஓர் எதிர்பார்ப்பினை அவர்களுடைய முகத்தில் காணமுடிந்தது. காவிரியாற்றில் தண்ணீர் இல்லாததே பெரும்பாலானோரின் குறையாகக் காணப்பட்டது. இவ்வாறு அமைக்கப்படுகின்ற நீர்த்தேக்கத்தை ஒரு செயற்கைத் தன்மையுடையதாகவே அவர்கள் நோக்குகின்றார்கள்.

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியாற்றின் நிலை குறித்து வேதனையடைந்து கொண்டே வந்திருந்த அவர்களுடன் சிறிது நேரம் அங்கு நடைபெறுகின்ற பணிகளை கவனித்தேன். தம் ஊரில் மிக சிறப்பாக இவ்விழா நடைபெறவுள்ளது என்பதை உள்ளூரைச் சேர்ந்தோர் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். காவிரியாற்றின் தென் கரையில் சிறிது நேரம் அமர்ந்து அப்பணிகளைப் பார்த்துவிட்டு காவிரியாற்றில் நடந்து சென்று எதிரே உள்ள வட கரையிலிருந்தும் அப்பணிகளைப் பார்த்துவிட்டு அருகேயுள்ள காசி விசுவநாதர் கோயில்களையும் கண்டேன். 

  

அக்கோயில்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது இருட்டிவிட்டது. வருபவர்கள் கூட்டம் குறைந்தபோதிலும் பணி மும்முரமாகத் தொடர்ந்து விளக்கொளியில் நடைபெறுவதைக் காணமுடிந்தது.

கடந்த புஷ்கரம் 177 ஆண்டுகளுக்கு முன்பாக 12 செப்டம்பர் 1840இல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. (மாலை மலர், 26 ஆகஸ்டு 2017). 12 செப்டம்பர் 2017 (ஆவணி 27) அன்று கொடியேற்றத்துடன் மயிலாடுதுறையில் தொடங்கும் விழா 24 செப்டம்பர் 2017 அன்று விடையாற்றியுடன் நிறைவு பெறவுள்ளது.   இதே காலகட்டத்தில் (21 செப்டம்பர் 2017) நவராத்திரித் திருவிழாவும் தொடங்குகிறது. விழா நாட்களில் மயிலாடுதுறையின் சுற்றுப்புறக் கோயில்களிலிருந்து சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. இந்நாட்களில் திருமுறை ஓதுதல், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறவுள்ளன. 


நிலவொளியில் காவிரியாற்றில் (மண்ணில்) நின்று பார்க்கும்போது அழகாக இருந்தது. மறுபடியும் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு தஞ்சாவூரை நோக்கிக் கிளம்பினேன். அடுத்த வாரம் புஷ்கரம் நடைபெறும் நாட்களில், வாய்ப்பான நாளில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கோ வேறு ஏதாவது ஓர் இடத்திற்கோ செல்ல ஆவலோடு காத்திருக்கிறேன், 144 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகின்ற அவ்விழாவினைக் காண.   


டெக்கான் க்ரானிக்கல் இதழில் 11 செப்டம்பர் 2017இல் வந்த செய்தியை இன்றுதான் கண்டேன், பகிர்வதில் மகிழ்கிறேன். 
"144 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படுகின்ற நிலையில் காவிரி புஷ்கரம் முக்கியத்துவம் பெறுகிறது என்று கும்பகோணத்தைச் சேர்ந்தவரும், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவு பெற்ற உதவிப்பதிவாளருமான ஜம்புலிங்கம் கூறினார்." (நன்றி : டெக்கான் க்ரானிக்கல், 11 செப்டம்பர் 2017) Welcoming the Cauvery Mahapushkaram, B. Jambulingam, a resident of Kumbakonam and former assistant registrar of Tamil University here, said that the festival assumes importance as it is celebrated after 144 years (Courtesy: The Deccan Chronicle, 11 September 2017). 
--------------------------------------------------------------------------------------
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 
இம்மாதப் பதிவு
--------------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்

updated on 26th Sep 2017

15 comments:

  1. அழகிய புகைப்ளடங்களும், விபரங்களும் தந்த முனைவருக்கு நன்றி

    ReplyDelete
  2. படங்கள் கண்ணைக் கவர்ந்தாலும் -
    காவிரியின் நிலை கண்டு மனம் கலங்குகின்றது..

    ReplyDelete
  3. புஷ்கரம் என்றால் என்ன என்று தெரிந்துகொண்டேன் அய்யா

    ReplyDelete
  4. நல்ல விவரமாகத் தந்துள்ளீர்கள். படங்களும் ரொம்ப நல்லா இருக்கு, எப்போதும்போல். தொடருங்கள் ஐயா.

    ReplyDelete
  5. புகைப்படங்களுடன் அழகான விவரங்கள்! மிக்க நன்றி ஐயா!

    கீதா

    ReplyDelete
  6. அழகு படங்களுடன் அருமையான விளக்கம்! காவிரியில் நீர் சீக்கிரம் விரியட்டும்!!

    ReplyDelete
  7. காவிரியில் தளும்பும் நீரை நம் கண்கள் காணுமா?

    ReplyDelete
  8. அழகிய புகைப்படங்கள்
    நன்றி ஐயா

    ReplyDelete
  9. அழகிய புகைப்படங்கள் மற்றும் சிறப்பான விவரங்கள்.... நன்றி.

    த.ம. ஏழாம் வாக்கு.

    ReplyDelete
  10. Mr Mandakolathur Subramanian (thro' email:
    mks27516@gmail.com)
    Dear Dr. Jambulingam, Greetings. I wish to join and contribute in your blog. Your contributions are indeed wonderful.With regards, Truly yours,
    M.K. Subramanian, Asst. Registrar (Retd.),
    Anna University,Chennai.

    ReplyDelete
  11. இந்த விழாவைப் பார்க்க மயிலாடுதுறையிலிருந்து அழைப்பு வந்து விட்டது. இறைவன் அருள் இருந்தால் கலந்து கொள்வோம்.
    படங்கள் எல்லாம் அழகு.
    திருக்குடந்தைத் திருமுறை மன்றத்தில்
    44ம் ஆம் ஆண்டு நிறவு விழாவில் 11ம் தேதி என் கணவர் மாலை 4 மணிக்கு 'நாவுக்கரசரின் சமுதாய்ச்சிந்தனை' என்ற தலைப்பில் பேச இருக்கிறார்கள் . அப்படியே மயிலாடுதுறை போய் வரலாம் என்று சொல்கிறார்கள்.
    படங்கள் விழா காணும் ஆவலை ஏற்படுத்துகிறது.
    நன்றி.

    ReplyDelete
  12. இத்தனை வருடம் நடக்காத விழா ,இப்போது நடக்கும் அதிசயம் ,இல்லை இல்லை ,அரசியல் புரிகிறது :)

    ReplyDelete
  13. ஆந்திராவிலும், தெலுங்காநாவிலும் வருடந்தோறும் நடக்கிறது. இங்கு இப்பொழுதுதான் நடக்கிறது பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  14. கருத்துக்கு பின் த.ம வாக்கு பதிவிட்டுள்ளேன் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  15. Mr K.Srinivasan (thro email: kanvas3@yahoo.co.in)
    Dear Dr. Jambulingam,
    I wish to congratulate you for your neverending valuable service at all times. This time your article about Puskaram is also very precious one. It induces one and all to see the very famous festival immediately. Our younger generation will also have a historic and cultural knowledge by your sincere effort. Thank you very much for your service to our society. I hope it will enhance our society. SRINIVASAN K

    ReplyDelete