07 October 2017

அயலக வாசிப்பு : செப்டம்பர் 2017

நாய் வழிபாடு (சீனா), ஹார்வே சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய பெண்மணி (ஹுஸ்டன்), குறைவான தூக்கத்தின் விளைவு பற்றி ஆய்வாளர்கள் கருத்து (இங்கிலாந்து),  அடுத்த நாள் வெளிவரவுள்ள இதழின் முகப்புப் பக்கங்கள் (இங்கிலாந்து), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதும் முறை மாற்றம் (கேம்பிரிட்ஜ்), பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக ஒரு பெண்மணிக்கு அபராதம் விதிக்கப்படல் (நெதர்லாந்து), சே இறந்து 50 ஆம் ஆண்டு நினைவுகூறப்படல் (தென் பொலிவியா), புற்று நோயை எதிர்கொண்ட பெண்மணியின் புதிய வாழ்க்கை (ஜார்ஜியா),  நீதிமன்ற வளாகத்தில் பசியால் அழுத, குற்றம் சாட்டப்பட்டவரின் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டிய காவல் துறை அதிகாரியின் மனித நேயம் (சீனா) உள்ளிட்ட பல செய்திகளை அயலகச் செய்தியில் காண்போம், வாருங்கள். 
சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு திருவிழா. மனிதர்களுக்கு ஆடை அணிவிப்பதைப் போல நாய்க்கு அணிவித்து ஒரு நாற்காலியில் அமர வைத்து, கடவுளாக வழிபடுகின்றனர். கிசௌ மாகாணத்தில் (Guizhou province) உள்ள ஜியோபாங்க் (Jiaobang) கிராமத்தில் உள்ள மயாவோ (Miao) மக்கள் ஒவ்வோராண்டும் "நாயைத் தூக்கிச் செல்லும் விழா"வினைக் (The Dog Carrying Day festival) கொண்டாடுகின்றனர். முதன்முதலில் அப்பகுதியில் குடியேறியவர்கள் தாகத்திற்காகத் தவித்தபோது அப்பகுதியில் நீர் இருக்கும் இடத்தை ஒரு நாய் காட்டியதாம். அதனடிப்படையில் அந்நிகழ்வினை தெய்வீகத்தின் ஓர் அடையாளமாக அவர்கள் கருதினராம். (நன்றி : இன்டிபென்டன்ட்)



ஹார்வே சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய டேனியல் பால்மர் (Danielle Palmer) சமூக வலைதளங்களில் அதிகம் பாராட்டப்பட்டுள்ளார். ஹுஸ்டனில் வெள்ளத்தைக் கண்ட, மிசௌரியைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர் அனைத்தையும் இழந்து தவிப்பவர்களுக்கு ஏதாவது வகையில் உதவ விரும்பியுள்ளார். “அனைத்தையும் இழந்திருக்கும் நிலையை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும், குழந்தைகளுக்கும் என்னால் பிரார்த்தனை செய்ய மட்டுமே முடிந்தது “. என்று கூறிய அவர் உபரி தாய்ப்பாலை தானமாகத் தந்துள்ளார். (நன்றி : இன்டிபென்டன்ட்)



குறைவான தூக்கம் மன அளவிலான பிரச்சினைகளை உண்டாக்குவதாகவும், உறக்கத்திற்கும் மன நலனுக்கும் மிகுந்த நெருக்கம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 26 பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3,700 மாணவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். 3 வாரங்கள், 10 வாரங்கள், 22 வாரங்கள் என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக உளவியலாளர்கள் தெரிவித்தனர். (நன்றி : கார்டியன்)



பல வெளிநாட்டு இதழ்கள் அடுத்த நாள் வெளிவரவுள்ள தத்தம் இதழ்களின் முகப்புப்பக்கத்தை முதல் நாள் வெளியிடுகின்றன. பெரும்பாலான இதழ்களை அந்தந்த தளங்களில் காணமுடியும். இன்றைய முகப்புப்பக்கங்களை நேற்றே வெளியிட்டுள்ள சில இதழ்களைப் பார்ப்போம்.(புகைப்படங்கள் நன்றி :http://suttonnick.tumblr.com/) (ட்விட்டரில் இத்தளத்திலும் காணலாம் : https://twitter.com/hashtag/tomorrowspaperstoday)

தெளிவற்ற கையெழுத்து காரணமாக 800 வருடப் பாரம்பரியான எழுதுதல் என்பதனை விடுத்து இனி தேர்வுக்கு மடிக்கணினியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். எழுதும் திறமையினை மாணவர்கள் இழந்துகொண்டிருப்பதாக ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். முழுக்க அவர்கள் மடிக்கணினியை நம்பியுள்ளார்கள். 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு மாணவர்கள் ஒரு நாளைக்கு பல மணி நேரம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போதோ தேர்வினைத் தவிர பிற நேரங்களில் பெரும்பாலும் எழுதுவதே இல்லை என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்தின் மூத்த பேராசிரியர் மூத்த ஆசிரியர். (நன்றி : கார்டியன்)

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் கீர்ட் பெனிங் (Geerte Piening, 23) என்ற பெண்மணி பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக அபராதம் செலுத்தும்படி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சற்றே சங்கடமாக இருந்தாலும் அவர் ஆடவர் கழிவறையைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார். இப்பிரச்னை பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தையும் விவாதத்தையும் உண்டாக்கியுள்ளது. கழிவறை அருகே சுமார் 10,000 மகளிர் ஒன்றுசேர்ந்து தம் எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளனர். ஆம்ஸ்டர்டாமில் 35 பொது கழிவறைகள் ஆடவருக்காகவும், மூன்றே மூன்று கழிவறைகள் மகளிருக்காகவும் உள்ளன. பெனிங் கூறுகிறார்: “இது மகளிர் எதிர்கொள்ளும் பெரிய பிரச்னை...இப்பிரச்னை வெளியே தெரியப்படவேண்டும்...மகளிர் எங்குமே செல்ல வழியில்லை என்பது ஒரு தர்மசங்கடமான நிலையே.” (நன்றி : கார்டியன்)

தென் பொலிவியா – வெள்ளையடிக்கப்பட்ட வீடுகள். முன்னர் வகுப்பறையாக இருந்து தற்போது கிட்டத்தட்ட புனித இடமாகக் கருதப்படும் இடம். இந்த பள்ளி வீட்டில்தான் 50 வருடங்களுக்கு முன் உலகின் மிகப் புகழ்பெற்ற புரட்சிவீரர் சே கொல்லப்பட்டார். 9 அக்டோபர் 1967இல் சே குவாரா (39) கொல்லப்பட்ட அந்த இடம் இப்போது படங்களாலும், செய்திகளாலும், கொடிகளாலும், வாகன உரிமங்களாலும் அங்கு வருகின்ற பார்வையாளர்களால் நிரப்பப்பட்டுள்ளது. 50 வருடங்களுக்கு முன் சே இறந்தாலும் அவருடைய இருப்பை தக்க வைத்துள்ளார் ஈவா மொரேல்ஸ். சேயின் பெயர் பொலிவியாவில் எங்கும் உச்சரிக்கப்படுகிறது. : “சே, எப்போதையும்விட இப்போது மிகவும் நெருக்கமாக இருப்பதாகவே உணரப்படுகிறார்.” (நன்றி : கார்டியன்)

புற்று நோயை எதிர்கொண்ட மொன்டானா பிரவுன் என்ற பெண்மணி, ஜார்ஜியாவில் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் செவிலியராகச் சேர்ந்துள்ளார். இரண்டு வயதிலும், தொடர்ந்து 15 வயதிலும் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தன் அடையாள அட்டையைக் காட்டி அவர் பெருமைபட்டுக் கொள்கிறார். தன் கண்களில் கண்ணீர் வந்துவிட்டன என்கிறார். இறைவன் தனக்கு இந்த வாழ்வை அளித்துள்ளதாகவும், 24 வயதில் இவ்வாறான ஒரு கனவு நினைவாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், குழந்தையாகவும், பருவப்பெண்ணாகவும் இருந்தபோது தான் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையில் இப்பணியைப் பெற்றுள்ளதைப் பெருமையாக உள்ளது என்றும் கூறுகிறார். (நன்றி : இன்டிபென்டன்ட்)

லினா என்ற சீனப்பெண்மணி உலகளாவிய நிலையில் பலருடைய இதயத்தைத் தொட்டுவிட்டார். எப்படி? நீதிமன்றத்தில், சந்தேகத்திற்கிடமானவர் என்று கைது செய்யப்பட்ட ஒரு பெண்மணியினுடைய, பசியால் அழுத குழந்தைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தாய்ப்பாலூட்டினார் அவர். சீனாவில் நான்கு மாத குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நின்றபோது அன்பு மனம் படைத்த காவல் துறை அதிகாரியான லினா அக்குழந்தைக்குப் பாலூட்டிய புகைப்படம் அனைவருடைய இதயத்தையும் தொட்டுவிட்டது. நீதிமன்ற அறையில் குழந்தை அழ ஆரம்பித்தபோது அவர், அக்குழந்தையின் தாயிடம் அனுமதி பெற்று பாலூட்டியுள்ளார். உடன் பணியாற்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் அந்நிகழ்வினை படமெடுத்துள்ளார். நீதிமன்ற சமூக ஊடகத் தளங்களில் அந்த புகைப்படம் பதியப்பட்டபோது பலரால் பகிரப்பட்டுள்ளது. அண்மையில் குழந்தை பெற்றெடுத்த லினா குழந்தை அழுவதை நிறுத்தவேயில்லை என்றும், அனைவரும் கவலையடைந்தார்கள் என்றும், தானும் தாய் என்ற நிலையில் குழந்தையின் தாயின் உணர்வை அறிந்ததாகவும், தன்னால் முடிந்த வரை அந்தக் குட்டிக் குழந்தையின அழுகையை நிறுத்த நினைத்ததாகவும் அவர் கூறினார். (நன்றி : டெலிகிராப்)

15 comments:

  1. நாயை நன்றிக்கடனுக்காக வணங்குவது தொடங்கி அனைத்து செய்திகளும் பிரமிக்க வைத்தன...

    ReplyDelete
  2. மிகுந்த சுவாரஸ்யமான செய்திகள். நெகிழ்த்தும் தகவல்கள். கடைசித் தகவல் உலகளாவிய பாஸிட்டிவ் செய்தி.

    ReplyDelete
  3. அருமையான தவல்களின் சங்கமம் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  4. #குறைவான தூக்கம் மன அளவிலான பிரச்சினை#
    உலகளாவிய பிரச்சினை, இந்த ஆராய்சசியால் ஒரு முடிவுக்கு வந்தால் நல்லது :)

    ReplyDelete
  5. சுவை மிக்க அரிய தகவல்களின் தொகுப்பு.

    பாராட்டும் நன்றியும் டாக்டர்.

    ReplyDelete
  6. அறியாத செய்திகள்...
    அனைத்தும் அருமையான செய்திகள்.
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  7. anaiththume arumaiyana thagavalgal Jambu sir. manithaneyam mikkavai.

    ReplyDelete
  8. தேனம்மை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாமே?

    ReplyDelete
  9. பெண் காவல் அதிகாரி கைதியின் குழந்தைக்குப் பாலூட்டிய செய்தி நெஞ்சை நெகிழ வைத்தது! உங்களுடைய தேடலும் போடலும் அருமை!

    ReplyDelete
  10. மிகவும் சுவாரஸ்யமான செய்திகள்! நாயை வணங்குவதிலிருந்து மனதை நெகிழ்த்திய இறுதிச் செய்தி வரை...அருமை...இறுதிச் செய்தி உலகளாவிய தாய்மையைப் பெருமைப்படவைக்கும் செய்தி!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  11. பல நல்ல தகவல்களுக்கு வோட்டும் போட்டுவிட்டேன்.

    ReplyDelete
  12. சுவையான செய்திகள். அயலக வாசிப்பு தொடரட்டும்.

    ReplyDelete
  13. அருமை!தொடருங்கள்! வாசிப்பை ! த ம12

    ReplyDelete
  14. கடைசியில் பதிவு திறந்தது பகிரப்பட்டவை அனைத்டுமே சுவாரசியமான தகவல்கள் சீனாவும்நம் நாட்டைப்போல் புராதன கலாச்சாரம் மிகுந்தது நம் நாட்டைப்போலவே சில நம்பிக்கைகளும் . குழந்தைகளுக்கு 30 லிட்டர் தாய்ப்பால் ஆச்சரியமடைய வைத்தது பகிர்வுக்கு நன்றி சார்

    ReplyDelete