25 November 2017

கும்பகோணத்தில் ஓர் அறிவுத் திருக்கோயில் : முனைவர் ச.அ.சம்பத்குமார்

கும்பகோணம்சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலைய நிறுவனரின் நூற்றாண்டு விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் (அலைபேசி 9443677943) எழுதிய கும்பகோணத்தில் ஓர் அறிவுத்திருக்கோயில் என்ற நூலைக் குறிப்பிடலாம். நூலாசிரியரை நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நன்கறிவேன். இந்நூலகத்தைப் பற்றிய அவரது தேடல் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.  அறிவுத் திருக்கோயில் என்று அவர் குறிப்பிடுவது சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தையாகும். இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. நூலையும், வாழ்த்துரையையும் வாசிக்க அழைக்கிறேன். 



நூலக நிறுவனர் திரு சாமிநாத செட்டியார் அவர்களை, திருப்பனந்தாள் கல்லூரியில் தான் நூலகராகப் பணி ஏற்றது முதல் அறிந்ததாகவும், அவ்வப்போது இந்நூலகத்திற்கு வருகை தருவதாகவும், தமிழ் நூல்களைப் பற்றியும் நூலகத்தைப் பற்றியும் அவர் எடுத்துரைத்ததாகவும், அவர் கூறிய பல கருத்துகள் தன் நூலகப் பணிக்கு பயன்படும் வகையில் அமைந்திருந்ததாகவும் கூறும் நூலாசிரியர், நிறுவனரின் நூற்றாண்டில் இதனை எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுவதாகக் குறிப்பிடுகிறார்.

இந்நூலகம் தொடர்பாக வெளிவந்துள்ள பிற நூல்களை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
  •   ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் ஓர் அறிமுகம், நூல் நிலைய 13ஆவது ஆண்டு விழா அறிக்கை, சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், கும்பகோணம், 23.5.1971
  •       ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், வெள்ளி விழா அறிக்கை, 1.7.1979
  •  சி.கோடிலிங்கம், இரா.குருநாதன், ஆயிரம் பிறை கண்ட அண்ணல் கோபு.சு.சுவாமிநாத செட்டியார் அவர்களின் விழா மலர், சிதம்பரநாதர் பேரவை, 29, நாணயக்காரத் தெரு, கும்பகோணம், 23.6.1997
  •        விழிகள் நடராஜன், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் பொன் விழா ஆண்டு (1959-2009) தகவல் களஞ்சியம், விழிகள் பதிப்பகம், சென்னை, 27.2.2010
  •       இரா.குருநாதன், கே.சுவாமிநாதன், சில நினைவலைகள், நூற்றாண்டு தொடக்கம், 23.5.2016
முன்னுரை, நூலகத்தின் வகைகள், தனியார் பொது நூலகங்கள், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத் தோற்றம், சிவகுருநாதன் செட்டியார் அவர்கள் வாழ்க்கை வரலாறு, சுவாமிநாத செட்டியார் அவர்கள் வாழ்க்கை வரலாறு, சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் உருவாதல், ஆரம்ப கால நன்கொடையாளர்கள், பதிவேட்டுப் பட்டியல்கள், நூல் நிலையத்தில் புத்தகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள முறைகள், நூல் நிலைய விதி முறைகள், நூலகப் பராமரிப்பு, நூலகர்கள், எதிர்காலத் திட்டங்கள், நிர்வாகக்குழு, நூல் நிலையத்தில் நடைபெற்ற முக்கிய விழாக்கள், நிறுவனர் நூற்றாண்டு விழாத் தொடக்கம், நூலகத்தைப் பயன்படுத்திய சான்றோர்கள், நூலாலயம் கண்டு பாராட்டிய பெருமக்கள், நூல்கள் வெளியீடு, நூலகக்காவியம் என்ற தலைப்புகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. நூலகங்களைப் பற்றிய பொதுப் பார்வையிலும், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தைப் பற்றிய சிறப்புப் பார்வையிலும் அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது.   


தலைப்பு : கும்பகோணத்தில் ஓர் அறிவுத் திருக்கோயில்
ஆசிரியர் : முனைவர் ச.அ.சம்பத்குமார் (மின்னஞ்சல்: saskumar59@gmail.com)
பதிப்பம் : நட்சத்திரா பதிப்பகம், OA2, சென்னை சாலை, வேதபவனம் தெரு, கும்பகோணம் 612 002
ஆண்டு  : 25.10.2017
விலை  : ரூ.50


இந்நூலில் வெளியாகியுள்ள என்னுடைய வாழ்த்துரை 




தேவாரப்பாடல் பெற்ற கோயில்களையும், மங்களாசாசனம் பெற்ற கோயில்களையும், சமணக் கோயில்களையும், பௌத்த சமயம் இருந்ததற்கான சான்றையும் கோயில்களின் நகரம் கும்பகோணம் கொண்டுள்ளது. 12 ஆண்டுக்கொரு முறை நடைபெறுகின்ற மகாமகம் அனைவரும் அறிந்த பெரிய திருவிழா ஆகும். கல்வி, வணிகம், கலை போன்ற நிலைகளில் முன்னிலையாக உள்ள நகரங்களில் இந்நகரும் ஒன்றாகும். இந்நகருக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற இடமாக சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் அமைந்துள்ளது. இந்நூலகத்தைப் பற்றி கும்பகோணத்தில் ஓர் அறிவுத் திருக்கோயில் என்னும் நூலை முனைவர் ச.அ.சம்பத்குமார் எழுதியுள்ளார். இந்நூலகத்தின் நிறுவனர் திரு கோ.சு.சாமிநாத செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவாக இந்நூல் வெளியிடப்படுவது பாராட்டத்தக்கதாகும்.

தான் பணியாற்றிய துறை சார்ந்த நிலையில் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தைப் பற்றிய வரலாற்றை அதன் தொடக்கம் முதலாக அவர் தொகுத்தளித்துள்ள விதம் சிறப்பாக அமைந்துள்ளது. முடிந்த வரையில் தரவுகளைத் திரட்டி உரிய தலைப்புகளைத் தந்துள்ளார். நூலகத்தின் வரலாற்றை மிகவும் நுணுக்கமாக எடுத்துள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அவருடைய முயற்சியினை நூலை வாசிக்கும்போது நன்கு உணர முடியும். 

இந்நூலகத்தைப் பற்றி தமிழ் விக்கிபீடியாவிலும், ஆங்கில விக்கிபீடியாவிலும், என்னுடைய வலைப்பூவிலும் நான் பதிவு செய்தபோது இந்நூலகத்தைப் பற்றிய ஒரு நூல் முழுமையாக வரவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தேன். அது இந்நூலாசிரியரின் மூலமாக நிறைவேறியதை எண்ணி உவகையடைகின்றேன். நூலகம் கண்டு பாராட்டிய பெருமக்கள் என்ற தலைப்பில் உள்ள பதிவில் என் பெயரும் கருத்தும் இடம்பெற்றுள்ளது. 40 ஆண்டுக்கும் மேலான வாசகன் என்ற நிலையில், அந்நூலகத்துடனான என் தொடர்பினை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன். இந்நூலகத்திற்கு அனைவரும் சென்று வாசிக்கும் அவாவினைத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இந்த அரிய படைப்பினைத் தந்தமைக்கு நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.                         

19 comments:

  1. வணக்கம் முனைவர் அவர்களே...
    நூலின் விமர்சனமும், தங்களது வாழ்த்துரையும் படித்தேன்.

    நூலாசிரியர் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்...

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  3. அடுத்த விடுமுறையின் போது நிச்சயம் அந்த அறிவுத் திருக்கோயிலுக்குச் செல்வேவ்..

    நூலாசிரியர் அவர்களுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. அறியாத நல்ல விஷயம் பற்றி எடுத்துரைத்தற்கு நன்றி உங்கள் வாழ்த்துரையும் படித்தேன் சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சம்பத்குமார்.நவம்பர்25.2017
    நன்றிஅய்யாsas

    ReplyDelete
  6. நல்லதொரு ஆய்வு நூலாக இருக்கும் எனத் தோன்றுகிறது. நாடு திரும்பியதும் அதை வாங்கிப் படிப்பேன். நூல் அறிமுகம் அருமை. நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ஒரு முறை இந்த நூலகத்திற்குச் செல்ல வேண்டும் ஐயா.
    அடுத்த முறை செல்லும்போது கூறுங்கள் நானும் வருகின்றேன்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நூலாசிரியருக்கும்... வாழ்த்துரை வழங்கிய தங்களுக்கும்...

    ReplyDelete
  9. நன்றி. சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நூலகத்தில் உள்ளே சென்று பார்த்து விட்டு நாமும் உறுப்பினர் ஆகலாம் என்ற எண்ணத்தில் அங்கிருந்த பொறுப்பில் இருந்த பெண்மணியுடன் பேசினேன். அவர் யாராவது ஒரு பச்சை இங்க் போடக்கூடிய அதிகாரி உங்களைத் தெரியும் என்று இந்த விண்ணப்ப படிவத்தில் கையெழுத்துயிட வேண்டும். இந்த விண்ணப்ப அட்டை இரண்டு ரூபாய் என்றார். ஏன் ஆதார் கார்டு நகல் போதாதா? என்ற போது இது தான் சார் முறை என்றார். உள்ளே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தாலும் நூற்றில் ஐந்து பேர்கள் தான் பயன்படுத்துகின்றார்கள். தமிழகம் முழுக்க உள்ள நூலகத்துறை என்பது எவருக்கும் பயன்படாத வருடந்தோறும் தூசி அடையும் துறையாகவே உள்ளது. காரணம் அரசாங்கம் இதில் ஆர்வம் செலுத்துவதே இல்லை. ஞானாலயா நூலகம் குறித்து முழுமையாகத் தெரிந்தவன் என்ற முறையில் இது போன்ற தனியார் நூலகத்தை காப்பாற்றுவதே பெரும்பாடு. இதற்கென ஒரு அதிகாரி ஆர்வத்துடன் செயல்பட்டு ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். தமிழகத்தில் கோவை, பல்லடம், புதுக்கோட்டை, திருச்சி, அப்புறம் நீங்கள் குறிப்பிட்ட நூலகம் என்று மொத்தமாக சேர்த்தால் ஏறக்குறைய 10 லட்சம் புத்தகங்கள் சேரக்கூடும். என்ன ஆகப் போகின்றதோ?

    ReplyDelete
  10. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி ஐயா.

    ReplyDelete
  11. மிகவும் நல்லதொரு பகிர்வு! நூல் அறிமுகம் அருமை நன்றியும் கூட.

    ReplyDelete
  12. இந்த அறிவுத் திருக்கோயிலில் கும்பகோணத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கின்றனவோ?..

    அப்படி இருப்பின், 'கும்பகோணத்து எழுத்தாளர்கள்' என்ற தலைப்பின் கீழ் தனி ஒரு ஷெல்பில் அவர்களின் புத்தகங்களை அடுக்கி பார்வைக்கும், வாசிப்புக்கும் வைக்கலாம்!.. அப்படிச் செய்தால் அவர்கள் பிறந்த மண்ணின் எழுத்துப் பெருமையை அவை எடுத்தோதும்!..

    முடிந்தால் அடுத்த தடவை அங்கு போகும் பொழுது இது பற்றிய ஆலோசனையை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவியுங்களேன்..

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஆலோசனை.நன்றி

      Delete
  13. Mr C. Appandairaj
    (c.appandairaj@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    அன்புள்ள அய்யா, வணக்கம்.
    நல்லதொரு பதிவு. நன்றி

    ReplyDelete
  14. 'அறிவுத்திருகோயில்' என்று நூல் ஆசிரியர் குறிப்பிட்ட சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்திற்கு
    என் கணவர் அடிக்கடி போவார் என்று முன்பே நீங்கள் இந்த நூல் நிலையத்தைப் பற்றி பதிவு எழுதி இருந்த போது குறிப்பிட்டேன்.
    நல்ல நூல் விமர்சனத்திற்கு நன்றி.
    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    பலருக்கு பயன்படும் இந்த நூல்.

    ReplyDelete