30 December 2017

விக்கிபீடியாவில் 600ஆவது பதிவு

6 ஜுலை 2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, அண்மையில்  600 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமாக உள்ளதை நான் பதிவிடும்போது உணர்கிறேன். விக்கிபீடியாவில் நான் எழுதுகின்ற பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் என்னால் எடுக்கப் பட்டவையாகும். அனைத்துப் புகைப்படங்களையும் பொதுவகத்தில் (wikipedia commons) பதிந்துவிடுவேன். தொடர்ந்து கட்டுரையோடு இணைத்துவிடுவேன்.  

ஜனவரி 2017இல் விக்கிபீடியா நடத்திய விக்கிக்கோப்பைப் போட்டியில் கலந்துகொண்டு 253 பதிவுகளை மேற்கொண்டேன். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில், விக்கிபீடியாவில் இல்லாத கோயில்கள், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலுள்ள கோயில்கள், வைப்புத்தலங்கள் பட்டியலை முழுமையாக்கல், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள், அறிஞர்கள் அறிமுகம் போன்றவை அடங்கும். இப்போட்டியில்  மூன்றாம் இடத்தினைப் பெற்றேன். 

முக்கிய பிரமுகர்கள், அறிஞர்கள், இலக்கியவாதிகள் என்ற நிலைகளில் தங்கம் மூர்த்தி,  சு. நரேந்திரன்க. பாஸ்கரன்கிஅரங்கன்,  வீஜெயபால், வீஅரசு  ஆகியோரைப் பற்றிப் பதிந்தேன். முன்பே இருந்த நா.விச்வநாதன் கட்டுரையில், அவருடைய புகைப்படத்தினைச் சேர்த்து, கட்டுரையில் கூடுதல் செய்திகளைச் சேர்த்தேன். தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் பதிவில் தமிழ்ப்பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடம், நூலகக்கட்டடம் மற்றும் ஐந்து புலங்களின் கட்டடங்களைப் புகைப்படம் எடுத்து பதிவோடு இணைத்தேன். (ஆங்கில விக்கிபீடியாவில் Tamil University தலைப்பில் இக்கட்டடங்களின் புகைப்படங்களை இணைத்தேன்). அண்மையில் எழுதியவற்றில் குறிப்பிடத்தக்கனவற்றைப் பார்ப்போம்.


கல் நாதசுவரம்
கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த எனக்குக் கோயில்களின் மீதான ஈடுபாடு சற்றே அதிகம். பள்ளிக்காலத்தில் படிக்கும்போதே கும்பேஸ்வரர் கோயில், சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில் பிரகாரங்கள் எனக்கும் உடன் பயின்ற நண்பர்களுக்கும் அடைக்கலம் தந்தன. அதிகமாகப் படித்தது கும்பேஸ்வரர் கோயில் உள் பிரகாரத்தில்தான். அப்போது அக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் பார்த்ததில்லை. அண்மையில் இக்கோயிலில் உள்ள கல் நாதஸ்வரம் வாசிக்கப்பட்டதைப் பற்றிய செய்தியைப் படித்தபோது அதனைப் பற்றிய பதிவு விக்கிபீடியாவில் இருக்கிறதா என்று தேடினேன், இல்லையென்றதும் உடன் பதிந்தேன்.



காவிரி புஷ்கரம்
ஆகஸ்டு 2017 வாக்கில் காவிரியில் நடைபெறுகின்ற புஷ்கரம் பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படித்தேன். இதற்கு முன்னால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைபெறுகின்ற மகாமகம் பற்றியே கேள்விப்பட்ட நிலையில் இது எனக்குப் புதிதாகத் தெரிந்தது. விழாவில் முக்கியத்துவத்தினை அறிந்தபின் காவிரி புஷ்கரம் என்ற தலைப்பில் புதிய பதிவு ஆரம்பித்தேன். இதற்காக பல முறை மயிலாடுதுறை சென்றுவந்தேன். மகாமகம் 2016 பதிவினை விக்கிபீடியாவில் எழுதிவந்தபோது பயன்படுத்திய உத்தியை இதிலும் பயன்படுத்தினேன். முடிந்தவரை அவ்வப்போது செய்திகளைப் படித்து, உடன் பதிவுடன் இணைத்து பதிவினை மேம்படுத்தினேன். தொடர்ந்து கிருஷ்ணா, கங்கா, ப்ராணஹிதா, நர்மதா, சரஸ்வதி, யமுனா, துங்கபத்திரா, சிந்து உள்ளிட்ட அனைத்து புஷ்கரங்களைப் பற்றியும் 10க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தொடங்கினேன். பதிவில் இந்தியாவில் புஷ்கரங்கள் என்ற உட்தலைப்பினையும் தெளிவிற்காக எழுதினேன்.


தேங்காய் சுடும் விழா
தேங்காய் சுடும் விழா தமிழகத்தில் பல இடங்களில் கொண்டாடப்படுவதைப் பற்றி நாளிதழ்களில் படித்தேன். காவிரி, அமராவதி ஆற்றங்கரையோரங்களில் சிறப்பாக நடைபெறுவதாக அறிந்தேன். இதுவரை நான் கேள்விப்படாததாக இருந்த நிலையில் அவ்விழாவினைப் பற்றி புதிய பதிவினை ஆரம்பித்தேன்.


நவநீத சேவை
கும்பகோணத்தில் பெரிய தெருவில் ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை பார்த்துள்ளேன். தஞ்சாவூரில் கருட சேவை என்ற விழா நடைபெறுவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். வெண்ணெய்த்தாழி உற்சவம் என்றும் அழைக்கப்படுகின்ற இவ்விழாவின்போது தஞ்சாவூரில் 15 பெருமாள் கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் பல்லக்கில் வரிசையாக நான்கு வீதிகளையும் வலம் வருவதையறிந்து விழாவின்போது நான்கு வீதிகளையும் சுற்றி வந்து புகைப்படங்களை எடுத்து, உரிய செய்திகளை மேற்கோள்களுடன் இணைத்தேன். 

வெள்ளையாம்பட்டு சுந்தரம்

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பதிப்பாளரும், தமிழறிஞருமான திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் 31 மே 2017இல் இயற்கையெய்தினார். 1000க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்த இவர், பல எழுத்தாளர்களை உருவாக்கியவர். தானே முன்வந்து கேட்டு நூல்களைப் பதிப்பிப்பார். என் ஆய்வினைப் பாராட்டியவர்களில் இவரும் ஒருவர். அனைத்தும் வரலாற்றில் பதியப்படவேண்டும் என்றும் நூல் வடிவம் பெறவேண்டும் என்றும் விரும்பியவர். அவரைப் பற்றிய செய்திகளைத் திரட்டி பதிவை ஆரம்பித்தேன்.


துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
கும்பகோணம் வட்டத்தில் உள்ள துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் புகழ்பெற்றது. இக்கோயிலைக் காணவேண்டும் என்ற அவா இந்த ஆண்டு நிறைவேறியது. அதனைப் பார்த்து, உரிய விவரங்களுடன் பதிந்தேன். 

ஆங்கில விக்கிபீடியா அனுபவம்
இதே காலகட்டத்தில் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலைப் பற்றி ஆங்கில விக்கிபீடியாவிலும் பகிர்ந்தேன். 20 ஆகஸ்டு 2017 அன்று ஆங்கில விக்கிபீடியாவின் முதல் பக்கத்தில் நான் ஆரம்பித்த, ஆங்கில விக்கிபீடியா கட்டுரையிலிருந்து ஒரு வரி மேற்கோளாக, நான் எடுத்த புகைப்படத்துடன் "உங்களுக்குத் தெரியுமா" (Did You Know?) பகுதியில் இடம் பெற்றது. அதற்கு அடுத்த நாள் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்து, அந்த முதற்பக்கம் 6635 பேரால் பார்க்கப்பட்டதாக சக ஆகில விக்கிபீடியர் செய்தி அனுப்பியிருந்தார். 




என் எழுத்துப்பணிக்குத் துணைநிற்கும் சக விக்கிபீடியர்கள், வலைப்பூ நண்பர்கள், பிற நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்: 

24 December 2017

இந்தியாவின் மகள் (பாகம் 2) : இரா. சரவணன்

நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள், திரு இரா சரணவன் அவர்கள் (9820439010) எழுதியுள்ள இந்தியாவின் மகள் (பாகம் 2) என்னும் புதினத்தின் வெளியீட்டு விழாவிற்காக அழைப்பதற்காக அவருடன் எங்கள் இல்லத்திற்கு 22 டிசம்பர் 2017 அன்று வந்திருந்தார். தன்னை அறிமுகப்படுத்திப் பேசியபோதே சமூகத்தின்மீதான அவருடைய ஈடுபாட்டை அறிய முடிந்தது. இப்புதினத்தின் ஆசிரியர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். பணிநிமித்தம் மும்பையில் உள்ள இவர் இந்தியாவில் பல மாநிலங்களுக்குச் சென்று வந்தவர். பணியாற்றும் இடத்திலும், சென்ற இடங்களிலும் இவர் பார்த்த அனுபவங்களை முன்வைத்து, அதற்குத் தீர்வு காணும் வகையில் இந்த புதினத்தை எழுதியுள்ளதாகக் கூறினார். 

இன்று (24 டிசம்பர் 2017) மாலை கரந்தை தமிழ்ச்சங்கத்தில் அந்நூலின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் நூலைப் பற்றி அவருடைய நண்பர்களும், அவருக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களும், அறிஞர்களும் பேசிய உரைகளை கேட்டேன். 

அவருடைய இந்த புதினம் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களும், பிற பெருமக்களும் அருமையாக நூலை மதிப்பிட்டுள்ளனர்.  





217 பக்கங்களைக் கொண்ட அப்புதினம் 55 அத்தியாயங்களைக் கொண்டமைந்துள்ளது. சமூக அவலங்களுக்குத் தீர்வு என்ற கருவினைப் பின்புலமாகக் கொண்டு அவர் இப்புதினத்தைப் படைத்துள்ளார். மோனிகா, ஜெயகாந்தன், பிரபு, கார்த்தி, சுதிர், ரோஹிணி, சோனம், ராமுலு, நஞ்சப்பா, அர்ஜுன் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துதல், அறிமுகச்சூழல், கதாசிரியர்களின் குணாபாத்திரங்கள், புதினம் செல்லும் போக்கு, ஆற்றொழுக்கமான நடை, என்ற பல நிலைகளில் செறிவாகப் பதிந்துள்ள விதமாக அமைந்துள்ளது. வட மாநிலத்தில் பிறந்த மோனிகா தென் மாநிலமான தமிழகத்தின் முன்னேற்றத்தில் தன் ஈடுபாட்டைக் காட்டி வெளிப்படுத்தும் நிலையில் புதினத்திற்கு இந்தியாவின் மகள் என்று பெயரிட்டுள்ளார்.

ஒழுங்கமைவு
நடிகை மோனிகா தன் வாழ்நாளின் திட்டங்களைக் கூறும்போது அவர் தினமும் காலையில் யோகா செய்வதையும், பின்னர் ஒரு மணி நேரம் தமிழ் கற்பதையும் கூறுகிறார். ஒவ்வொரு பாத்திரத்தின் அமைப்பிலும் இவ்வாறான குணாதிசயங்களைக் கூறுகிறார். வட இந்தியாவைச் சேர்ந்த அந்த நடிகை தமிழக மக்களின் மனதை வென்றதற்கான காரணத்தை அவர் தமிழகத்திற்கு தந்த காற்றாலை சூரிய ஒளி மூலம் மின்சாரத் திட்டத்தினைக் கூறுகிறார். இவரை அடியொற்றி நடிகர் ஜெயகாந்தனும் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்த முனைந்து, அரசின் துணையுடன் நிறைவேற்றுகிறார். 

கணபதி விழா
மும்பையில் நடக்கின்ற விநாயகர் சதுர்த்தி கணபதி விழாவினையும் அங்கு அனைவரும் ஆர்வமாகக் கூடுவதையும் கூறும் அவர், 30 அடி வரையிலான கணபதி காணப்படுவதையும், விழாவின்போது ஐந்து தினங்கள் பூசை நடப்பதையும் கூறுகிறார். புதினத்தில் வரும் கதாபாத்திரம் பூசைக்காக இரண்டு சிலைகளை வாங்கும்போது அங்கு தமிழர் கைவண்ணத்தில் உருவான மாலையைப் பற்றி மண்ணின் மணத்தோடு பேசுகிறார். லால் பாக்சா ராஜாவில் உள்ள பெரிய கணபதியைக் காண நம்மை அழைத்துச் செல்கிறார். மும்பையில் திருப்பதி என்றழைக்கப்படுகின்ற பாலாஜி கோயிலுக்கும் அவரது பயணம் தொடர்கிறது, கதாபாத்திரங்கள் மூலமாக.
        
தஞ்சாவூர் படப்பிடிப்பு
படப்பிடிப்பின் குழுவினரோடு நாம் பயணிப்பதைப் போன்ற உணர்வை அப்படியே கொண்டுவந்துவிடுகிறார். தமிழ்ப்பெண் பாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகையுடன் அக்குழு தஞ்சாவூர், கரந்தை, வடவாறு வழியாகச் செல்லும்போது கரையோரமாக வகுப்பறைகளை நோக்குதல். தொடர்ந்து பல பேரறிஞர்களை உருவாக்கிய 100 ஆண்டு கரந்தைத் தமிழ்ச்சங்கக்கல்லூரியைக் காணல், தஞ்சாவூரில் 3 கல்லூரி இருந்த இடத்தில் 30 கல்லூரி இருந்தாலும் அப்போது இருந்த சுத்தம், இப்போது இல்லையே குப்பை கூளம்தானே என்று ஏங்கல். தஞ்சாவூர் ராஜ வீதி கிருஷ்ணன் கோயிலைக் கடந்து செல்லும்போது, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அடுத்த இடமாக திருவையாறு தியாகராஜர் நினைவிடம், அரசர் கல்லூரி, திருவையாறு அருகே மகாபெரியவரின் தாயாரும், மகாபெரியவரும் பிறந்த இடமான ஈச்சங்குடிக்குச் செல்லல். படப்பிடிப்பு முடிந்து…வடவாறு பாலம் வழியாகப் பயணிக்கும்போது சடுகாட்டின் நிலையை அப்போது இறுதி யாத்திரை சென்று கொண்டிருக்கும் நிலையோடு ஒப்பிடல். எங்கு பார்த்தாலும் கருவேல மரங்கள் தற்போது நிறைந்துள்ள நிலையினை வருத்தத்தோடு கூறுதல் என்ற நிலையில் மண்ணின் ஏற்ற இறக்கங்களை முன்வைக்கிறார். 

ரசனை
நடிகை மோனிகா வீட்டில் சுவரில் காந்தியின் படம், மும்பையில் காமராஜர் நினைவுப்பள்ளி, மும்பை ரயிலில் 50 வயது பெரியவர் ஒரு காலம் தெரியும்படி நாளிதழ் படித்தல் அனுபவம், மாஸ்டர் டீ அடிக்கும் அழகு, மும்பையில் பயணிக்கும்போது தமிழ்நாட்டிலிருந்துவரும் போனை எதிர்கொள்பவரின் மன நிலை, கடற்கரையில் கரும்புச்சாறை குடிக்கும்போது கதாபாத்திரக்ளின் மன நிறைவு போன்றவற்றில் தன் ரசனைத் தன்மையை வெளிப்படுத்துகிறார்.

பண்பாடு
பெரியவர்களின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் பெறல், சாப்பிடுகின்ற நேரத்தில் அலுவலகத்தை நினைக்க வேண்டாம் என்று கூறல், சமையலைப் பற்றிக்கூறும்போது தமிழ்நாட்டுக் கைவண்ணம் சூப்பராக இருக்கு என்று பாராட்டல் போன்ற இடங்களில் பண்பாட்டு மரபுகளைப் பற்றிப் பெருமைப்படுகிறார்.

வாசகரை ஈடுபடுத்துதல்
கணவன் மனைவிக்கிடையே மூக்கை நாம் நுழைப்பானேன்? என்று கூறி பாத்திரங்களுக்கிடையேயான உரையாடலின்போது நம்மையும் ஈடுபடுத்திவிடுகின்றார்.

ஆதங்கம்
தமிழர்கள் அதிகம் காணப்படுகின்ற தாராவியில் தமிழகக் கட்சிக்கொடிகளும், கட் அவுட்களும் அதிகமாக இருப்பதைக் காணும்போதும், காலையில் சிலர் நெற்றியில் திருநீறு வைத்தால் மாலை வரை அவர்களின் நெற்றியில் காணமுடிகிறது, தன்னால் முடியவில்லை என மோனிகா ஏங்கும்போதும், டாஸ்மாக்கில் மக்கள் கூட்டம் மோதுவதை ஒரு கதாபாத்திரம் வேதனையோடு காணும்போதும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

உணவு
தமிழகத்தில் இரவு 12 மணி வரை உணவகங்கள் இயங்குவதை ஒரு நோக்கில் ஆச்சர்யத்துடனும் அதே சமயத்தில் அவர்களுக்கு வீடில்லையா, இல்லை சோம்பேறித்தனமா என்று கேட்டு வினாவினை முன்வைக்கிறார். ஒரு புறம் மதராசிகளின் விரும்பிச் சாப்பிடுகின்ற இட்லி, தோசை, வடை பொங்கல், உப்புமா, அப்பம், ஆப்பம் உணவையும் மறுபுறம் மராத்தியர்களின் சப்பாத்தி,பொகா, சிக்கடியுடன் பருப்பு, கொண்டைக்கடலை, மொச்சைப்பயறு, பயத்தம்பருப்பின் உணவையும் மாற்றி மாற்றி ஒப்புநோக்கிவிட்டு, கதாபாத்திரக்ள் தமக்குள் மதராசிகளுக்கு அரிசி சாதத்தினால்  சுகர் வருவதாகவும் வட இந்தியர்களுக்கு அவ்வாறு வர வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்.

தஞ்சையிலிருந்து மும்பை சென்று அங்கு வாழ்கின்ற நிலையில் அங்கு காணப்படுகின்ற ரயில் பயணப்பிரச்னையை முன்வைத்து அதற்கான தீர்வினை தன்னுடைய இந்த புதினத்தில் தந்துள்ளார். இவ்வாறாக அவர் பல சிக்கல்களுக்கு விடையளித்துள்ளார். கலைகளைப் பாதுகாக்கவேண்டும் என்று கூறும் அவர் அதற்கான உத்தியைத் தரும் விதம் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.

பிரச்னைகள், தீர்வு
1) மும்பை உள்ளூர் ரயிலில் வருடத்திற்கு 2000க்கு மேல் பயணிக்கின்றார்கள். நாளைக்கு ஆறு பேர் மரணக்கின்றார்கள் என்று வேதனைப்படும் அவர் மும்பை ரயில் பயணத்தில் தினமும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைக்கிறார். தினமும் பம்பாயிலிருந்து பூனாவிற்கு வந்துசெல்வோரைப் பற்றியும்கூட விவாதிக்கிறார். அவர்கள் தம் பயணத்தின்போது காய்கறி நறுக்கல், கீரை ஆய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதாகவும், வாழ்க்கையின் பல மணி நேரங்கள் ரயில் பயணத்திலேயே செல்வதாகவும் கூறுகிறார். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மேம்பாடாக தரை வழியாகவும், கடல்வழியாகவும் பாதை அமைக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

2) தமிழகத்தில் நீருக்காக மக்கள் அவதிப்படுவதைக் கண்டு வேதனைப்படுகின்ற அவர் வரிசையாக தண்ணீர் பிடிக்க பிளாஸ்டிக் குடங்களில் மக்கள் நிற்பதை தன் கதாபாத்திரம் மூலமாக வெளிப்படுத்துகிறார். ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளைச் செப்பனிடலை தீர்வாகக் காண்கிறார். சூரிய ஒளி மின்சாரத்தின் முக்கியத்துவத்தினை நுணுக்கமாகக் கூறுகிறார்.

3) வெளிநாட்டில் நம் மக்கள் பணிக்குச் சென்று படும் அவதியை எடுத்துக்கூறும்போது அதிக வட்டிக்குக் கடன் வாங்கி நம்மவர் படும் பாட்டினை மற்றொரு கதாபாத்திரம் மூலமாக எடுத்துக் கூறுகிறார்.  அவ்வாறான ஒரு கதாபாத்திரத்தின் பெயர் நஞ்சப்பா என்று உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல அவருடைய குணமும் அமைந்துள்ளதைக் கூறுகிறார். இவர்களைக் போன்றவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைக்க மாற்று ஏற்பாடு, வழிகள் செய்யப்படுவேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கிறார். 

இவ்வாறாக தஞ்சை மண்ணின் கலைகளைப் பாதுகாக்கவும் செயல்படுத்தவும் முன்வைக்கும் திட்டங்களை அறியவும், புதினம் என்பதற்கு அப்பால் அவர் சமூகத்தின்மீது கொண்ட ஆர்வத்தையும், சமூக அவலங்களை தீர்க்க அவர் தரும் விடைகளையும், யுத்திகளையும் அறிந்துகொள்ள வாருங்கள். அவருடைய இந்நூலை வாசிப்போம். இதுபோன்ற மேலும் பல நூல்களை அவர் எழுத வாழ்த்துவோம்.

நூல் : இந்தியாவின் மகள் பாகம் 2
ஆசிரியர் : இரா. சரவணன் (மும்பை சரவணன்)
பதிப்பாண்டு : 2017
விலை : ரூ.260
மின்னஞ்சல் : rsaravananmum@gmail.com

21 December 2017

காலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள் : தேவரசிகன்

கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலக நிறுவனரின் நூற்றாண்டு விழாவிற்குச் சென்றபோது அறிமுகமானவர் திரு தேவரசிகன். விழா நிகழ்வு நிறைவுற்றதும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தான் எழுதிய காலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள் என்ற கவிதைத் தொகுப்பினை அன்பளிப்பாகத் தந்தார். அவருடைய நூலை முழுமையாக வாசித்தேன். அவர், முன்னுரையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்.
  • கவிதையின் ஸ்திதி, கவிஞனின் செயல்பாடுகள், கவிஞனின் நிலைப்பாடுகள் என்பது குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துகள் 
  • வாசிப்பு, படைப்பு, இலக்கியத்தை அணுகுதல், அதற்குத் தேவையான அடிப்படை முயற்சிகள் குறித்த ஜவஹர்லால் நேருவின் கருத்துகள்
  • தற்கால இலக்கியச்சூழலில் கவிதைக்கு இடமில்லை கவிதை இறந்துவிட்டது எனப் பிரகடனப்படுத்தும் பேர்வழிகளுக்கு...மலையாளக்கவிஞர் சச்சிதானந்தனின் கவிதை  


"நூலின் சில கவிதைகளை மட்டும் இம்முன்னுரையில் குறிப்பிட்டு அதன் உணர்வுத்தளம் பற்றிய அபிமானத்தை வாசகர்களிடம் ஏற்படுத்துவதை நான் வேண்டுமென்றே தவிர்க்கிறேன். ஒட்டுமொத்தமாக இக்கவிதைகளைப் படிக்கையில் நான் வந்தடையும் மனப்பதிவை இவ்வறிமுகத்தில் பதிவு செய்யவே விரும்புகிறேன்" (ப.7) என்று நூலின் முன்னுரையில் திரு ஜி.காரல்மார்க்ஸ் கூறுவதிலிருந்து திரு தேவரசிகன் எழுத்தினைப் பற்றி உணரமுடிகிறது.

தமிழ்ப்பற்று, சமூக அவலங்களை எதிர்த்தல், இயற்கையின் மீதான ரசனை, யதார்த்தங்களின் வெளிப்பாடு, தத்துவ உணர்தல், மொழிபெயர்ப்பாற்றல் என்ற பல நிலைகளில் இவரது கவிதைகள் காணப்படுகின்றன. அவருடைய பரந்துபட்ட வாசிப்பினை அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அவர் எழுதியுள்ள கவிதைகள், பிற இதழ்களில் வெளியான இவரது கவிதைகள், அவர் மொழிபெயர்த்த கவிதைகள் என்ற வகையில் காணப்படுகின்றன. அக்கவிதைகளில் சிலவற்றைப் பார்ப்போம். 

மனிதன் 
உற்றுப்பார்க்கவில்லை
இயற்கை
இருந்தது.
இயற்கை
உற்றுப் பார்த்தது
மனிதனைக் 
காணவில்லை. (சுனாமி, ப.20)

.... .... .... ....
தமிழும் ஆங்கிலமும் கலந்து
இரு மொழிக்கும் பழிகள் சேர்த்து
இரு மொழியும் குழியில் வீழ
ஒரு வழியும் புலப்படாமல்
கரு விழிகள் இருள் சுமந்து
போலிப் பெருமையும்
பொய்யான பண்டிதமும்
காலிப்பெட்டிக்குள்
கை கோர்த்து ஒலியெழுப்ப
தமிழா! நீ பேசுவது தமிழா? (தமிழா நீ பேசுவது தமிழா, ப.27)

.... .... .... ....
இவர்கள்
அங்காடித் தெருக்களிலும்
சமூக விரோதிகளின் கரங்களிலும்
அரை வேக்காட்டு அரசியல் வாதிகளின்
ஆதாய பாசறைகளிலும்
சிறுநீரக தரகர்களின்
கழுகுப் பார்வைகளிலும்
பட்டுத் தெறித்து
செத்து விழும்
பட்டினத்து விட்டில் பூச்சிகள். (பட்டினத்து விட்டில் பூச்சிகள், ப.31)

படுத்தவுடனே
தூங்கி விடுபவர்கள்
பாக்கியவான்கள். 
.... .... .... ....(நித்ரா, ப.39)

மிருகங்கள் 
தத்தமது விஷங்களைப்
பாதுகாத்து
வைத்திருக்கின்றன.
மனிதர்கள் மட்டும்
எப்பொழுதும்
விஷங்களைத் துஷ்பிரயோகம்
செய்து கொண்டோ,
பரிமாறிக் கொண்டோ
இருக்கிறார்கள்.
.... .... .... .... (ஒரு பாதி உண்மை, ப.72)

வாழ்க்கை
தெரிந்த கேள்விகளும்
தெரியாத கேள்விகளும்
நிரம்பிய ஓர் வினோத தேர்வரங்கம்.
.... .... .... .... (நீயா?, நானா?, ப.81)

அனுபவ அடுப்பைப் பற்றவைத்து
வாழ்க்கையெனும் சட்டிதனில்
எண்ணமெனும் எண்ணெய் ஊற்றி
இன்பத்தையும் துன்பத்தையும்
உதிர்த்துப்போட்டு
இதயமெனும் கரண்டியாலே வறுத்தெடுத்தால்
அதுதான் ஞானம். (அவிந்தடங்கல், ப.117)

நெடுநாள்களுக்குப் பின்னர் அருமையான கவிதை நூலை வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன் இவர் மூலமாக. இந்நூல் இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும். இவர் இன்னும் பல நூல்களை வெளியிட்டு, தமிழுக்கும், கவிதைக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.

நூல் : காலம், வெளி, மற்றும் ஒரு பறவையின் துடுப்பு
ஆசிரியர் : தேவரசிகன் (9994564972)
பதிப்பகம் : தமிழாசை பதிப்பகம், 14, முல்லை வீதி, இரண்டாம் குறுக்கு,  நேரு நகர் விரிவு, மேல அம்மாசத்திரம், திருபுவனம் 612 103
ஆண்டு : 2014
விலை : :ரூ.80   
திரு தேவரசிகன் தெரிவித்த பின் 12 ஜூலை 2022இல் 
ஆலாவில் பதிவினைக் கண்டேன், நன்றி ஆலா.

12 ஜூலை 2022இல் மேம்படுத்தப்பட்டது.

16 December 2017

அயலக வாசிப்பு : நவம்பர் 2017

நவம்பர் 2017 வெளியான அயலக வாசிப்பில் ஈர்த்த செய்திகளாக கீழ்க்கண்ட செய்திகள் அமைகின்றன. அவற்றைச் சுருக்கமாகக் காண்போம். 
  • சீனாவில் தேர்வுக்காக ஆயத்தப்படுத்த தேர்வுக்கூடத்தில் இடம் பிடிப்பதற்காக வேகமாக ஓடும் மாணவர்கள் (டெய்லி மெயில்) 
  • மின்னஞ்சலை சமாளிப்பதற்கான உத்திகள் (கார்டியன்) 
  • வடகிழக்குச் சீனாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய நூலகம் (டெய்லி மெயில்) 
  • கொந்தளிப்பான காலத்தில் தன் கொள்கைகளை ஊடகம் வரையறுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் (கார்டியன்) 
  • போலியோவை எதிர்கொண்டு 60 வருடங்களாக ஒரு மிஷினில் தன் வாழ்நாளைக் கழிக்கின்ற அலெக்சான்டர் (இன்டிபென்டன்ட்) 
  • மைக்ரோசாப்ட் வின்டோஸ் எக்ஸ்பியில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வால்பேப்பராக அமைந்துள்ள Bliss புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் அடையும் பெருமிதம் (இன்டிபென்டன்ட்
  • உலகில் முதன்முதலாக குடியுரிமை பெற்ற ரோபோவான சோஃபியா அளித்த பேட்டி (டெய்லி மெயில்) 

சீனாவிலுள்ள மாணவர்களுக்கு வெற்றிக்கான வழி அவர்களுடைய கடின உழைப்பில் மட்டுமல்ல, அவர்களுடைய வேகமான ஓட்டத்திலும்கூட உள்ளதை நிரூபிக்கும் நிகழ்வு. அண்மையில் வெளியான ஒரு வீடியோவில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக நூலகத்தில்இடம் பிடிப்பதற்காக ஓடுவதைக் காணமுடிந்தது. வரிசையில் முன்பாக இடம் பிடிப்பதற்காக சில மாணவர்கள் விடியற்காலையில் 5.00 மணிக்கே எழுந்துவிட்டார்கள் என்று பியூப்பில்ஸ் டெய்லி நாளிதழ் கூறுகிறது. சீனாவின் வீடியோ இணையதளமான பியர் வீடியோ வெளியிட்ட அந்த 30 நொடி வீடியோ அக்டோபர் 27இல் கேனான் பகுதியில் உள்ள சுமாடின் நகரிலுள்ள குவான்குவாய் கல்லூரியில் (Huanghuai College, Zhumadian, Henan) எடுக்கப்பட்டதாகும். நூலகக் கதவுகள் திறக்கப்பட்டவுடன் அவர்கள் முண்டியடித்துக்கொண்டு உள்ளே ஓடுவதை அதில் காணமுடிந்தது. வேகமாக வரும் மர்ணவர்களைத் தடுக்க ஓர் ஆசிரியர் முயல்கிறார். அதிகமான கூட்டம் காரணமாக அவருடைய தன் முயற்சியில் தோற்கிறார். தோற்கிறது. அந்த மாணவர்கள் டிசம்பர் 24 முதல் 26 வரை நடைபெறவுள்ள தேசிய பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்விற்காகத் (National Postgraduate Admission Examination) தம்மை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.பல இளைஞர்கள் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவதால் இந்தத் தேர்வுக்கு மிகவும் போட்டி காணப்படுகிறது. (நன்றி :டெய்லி மெயில்)


மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு வந்து 30 வருடங்களாகின்றன. அது நம் வாழ்வை முழுக்க ஆக்கிரமித்துவிட்டது. ஆரம்பகாலத்தில் எலக்டிரானிக் முறையில் செய்திகளை மட்டுமே அனுப்பப் பயன்படுத்தினோம். ஆனால் இப்போதோ அனைத்திலுமே அதனைப் பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். அலுவலகத்தில் அடுத்த இருக்கையில் உள்ளவரோடு நேருக்கு நேராக பேசுவதைத் தவிர்த்து அஞ்சல் அனுப்பும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஒரு நாளைக்கு 269 பில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றனவாம். அதாவது ஒரு நொடிக்கு 2.4 மில்லியன் மின்னஞ்சல்கள். அதிகமான மின்னஞ்சல்கள் நமக்கு இப்போது சுமையாகிவிட்டது. இவற்றை சமாளிக்க உள்ள சில உத்திகளை நாம் காண்போம். (நன்றி : கார்டியன்)



வடகிழக்குச் சீனாவில் உள்ள தியன்சின் பின்காய் பொது நூலகத்தைக் (Tianjin Binhai Public Library) காண்போம். 3,62,744 சதுர அடியில் 33,700 சதுர மீட்டர் அமைந்துள்ள கண் விழி அமைப்பினைப் போன்ற, மூன்று வருடங்களில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1.2 மில்லியன் நூல்களைக் கொண்டு அமைந்துள்ள இக்கட்டடம் டென்மார்க் கட்டட நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். ஐந்து மாடிகளைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலகம் நூல் வாசிப்போரின் சொர்க்கமாக உள்ளது.


1821  முதல் (அப்போது மான்சென்ஸடர் கார்டியன்) வெளிவந்துகொண்டிருக்கின்ற கார்டியன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் நெருக்கடியான காலகட்டத்தில் இதழியலின் பணித்திட்டத்திற்கான இலக்கு எவ்வகையில் அமைய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கொந்தளிப்பான காலத்தில் தன் கொள்கைகளை ஊடகம் வரையறுத்துக் கொள்ளவேண்டிய அவசியமும், எப்போதையும்விட இப்போது இது பெறும் முக்கியத்துவமும் குறித்து இக்கட்டுரையில் விரிவாக அலசப்படுகிறது.


60 வருடங்களாக ஒரு மிஷினில் தன் வாழ்நாளைக் கழிக்கிறார் 70 வயதாகும் பால் அலெக்சான்டர். வழக்கிழந்த வென்டிலேட்டரில் இவருடைய வாழ்க்கைப் பயணம் ஓடிக்கொண்டிருக்கிறது. இவரைப் போல வாழ்பவர்கள் ஒக்லகோமாவைச் சேர்ந்த மார்த்தா லில்லார்ட் (69) மற்றும் கான்காஸ் சிட்டியைச் சேர்ந்த மோனா ரான் டால்ப் (81) காலாவதியாகிவிட்ட இந்த மிஷினைப் பயன்படுத்துபவர்கள் இந்த மூவர் மட்டுமே. Iron Lung என்றழைக்கப்படுகின்ற மிஷின் மூலமாக போலியோவை இவர்கள் எதிர்கொண்டுள்ளனர். அனைத்து வகையான வென்ட்டிலேட்டரைப் பயன்படுத்தியபோதிலும் இதுதான் இயற்கையாக மூச்சுவிடுவதற்கு வசதியாக உள்ளது என்கிறார் அலெக்சான்டர். 1952இல், தன்னுடைய ஆறு வயதில் போலியாவால் பாதிக்கப்பட்ட இவர் தன் வாழ்நாளை இந்த மிஷினில்தான் கழிக்கிறார். இதில் இருந்துகொண்டே தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கூறுகிறார். தன் வாயில் இணைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் இணைப்பு மூலமாக தட்டச்சு செய்கிறார். இந்த மிஷினை முழுக்க முழுக்கச் சார்ந்த நிலையில் இவர் சட்டப் பள்ளியில் படித்துள்ளார். வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.


Bliss உலகின் மிகப் புகழ் பெற்ற புகைப்படமாகும். Bliss என்பது மைக்ரோசாப்ட் வின்டோஸ் எக்ஸ்பியில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வால்பேப்பர். பச்சை நிற மலை போன்ற அமைப்பினை ஒட்டி நீல நில ஆகாயத்தைக் கொண்ட எடிட் செய்யப்படாத புகைப்படமாகும். உள்ளது உள்ளபடியே நம் முன் அதனைக் கொண்டு வந்து நிறுத்திய பெருமைக்குரிய புகைப்படக்காரர் Chuck O'Rear என்பவர் ஆவார். 21 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் சோனாமா நெடுஞ்சலையில் இந்தக் காட்சியை புகைப்படமாக எடுத்தாராம். "எனக்கு இப்போது 76 வயதாகிறது. இப்புகைப்படம் மூலமாக மைக்ரோசாப்ட் என் வாழ்வில் ஒரு புதிய அர்த்தத்தினையே தந்துவிட்டது. வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் என்ற நிலையில் புகழின் ஒவ்வொரு நொடியையும் என்னால் உணரமுடிகிறது" என்கிறார் அவர்.


உலகில் முதன்முதலாக ஒரு ரோபோ குடியுரிமை பெற்றுள்ளது என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறதல்லவா? அந்த ரோபோவின் பெயர் சோஃபியா. அந்த ரோபோ ஒரு பேட்டி அளித்தது என்பதை நினைத்தால் இன்னும் வியப்பு மேலிடும். அந்த ரோபோவான சோஃபியா அளித்துள்ள பேட்டியில் (?) தனக்கு ஒரு ரோபோ மகள் இருந்தால் தன் பெயரையே அவருக்கு (அதற்கு) வைக்கப்போவதோகவும், குடும்பம் என்ற அமைப்பு முக்கியமானது என்றும் கூறுகிறார் (கூறுகிறது). இந்த ரோபோ ஹாங்காங்கைச் சேர்ந்த ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். சவுதி அரேபியாவில், சர்ச்சைக்கிடையே, கடந்த மாதம் இந்த ரோபோவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.