27 January 2018

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்

2017இன் சிறந்த சொல் என்ற தலைப்பில் தி இந்து நாளிதழில் 7 ஜனவரி 2018இல் வெளியான என் கட்டுரையைப் படித்து பல நண்பர்கள் கடிதங்கள் எழுதியிருந்தனர். அவை பெரும்பாலும் அகராதிகள், மொழிபெயர்ப்பு, சொல் என்ற அடிப்படையில் அவ்வவற்றின் இன்றியமையா நிலையைப் பற்றி எடுத்துரைத்தன.

அக்கட்டுயைப் படித்த, திருவிடைமருதூரைச் சேர்ந்த திரு தி.சிவசுப்ரமணியன் (80) என்பவர் கட்டுரைக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு, தான் கண்டுபிடித்த புதிய ஆங்கிலச்சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதியில் (OED - Oxford English Dictionary) சேர்ப்பது தொடர்பாக வினா எழுப்பியிருந்தார். அழகான கையெழுத்தால் இருந்த அவருடைய கடிதம் அலுவலக முகவரியிலிருந்து திருப்பிவிடப்பட்டு என் இல்ல முகவரிக்கு 13 ஜனவரி 2018 அன்று வந்து சேர்ந்தது.

கடிதம் வந்த நாளன்றே அவரோடு தொலைபேசிவழி தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தேன்.  


தொடர்ந்து ஆக்ஸ்போர்டு அகராதியின் தளத்தில் (https://en.oxforddictionaries.com/) நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சொல்லைத் சேர்ப்பது தொடர்பான நடைமுறையைத் தேடிக் கண்டுபிடித்தேன். அதனை அவருக்குத் தெரிவித்தேன். 

புதிய சொல்லைச் சேர்ப்பது தொடர்பான முறைகளை அத்தளத்தில் Oxford dictionaries FAQ  : New words FAQ என்ற பக்கத்தில் காணமுடிந்தது. அதில் வினா விடை உத்தியில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கமாக மறுமொழி தந்துள்ளனர்.

  • ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிய சொற்கள் எவ்வாறு சேர்க்கப்படுகின்றன?
  • புதிய சொற்களையும், அதற்கான பொருளையும் எவ்வாறு காண முடியும்?
  • ஆங்கில மொழியில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை புதிய சொற்கள் இடம்பெறுகின்றன?
  • OED/Oxford Dictionaries.com தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை புதிய சொற்கள் இடம்பெறுகின்றன?
  • நான் ஒரு புதிய சொல்லைக் கண்டுபிடித்துள்ளேன். அதனை உங்களுடைய அகராதியில் சேர்த்துக்கொள்ள முடியுமா?
மேற்கண்டவற்றில் இறுதி கேள்விக்கு கீழ்க்கண்ட மறுமொழியைத் தந்துள்ளனர்.
பொதுமக்கள் எங்களுக்கு, தாம் கண்டுபிடித்த சொற்களை அடிக்கடி அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அதனை எங்களது அகராதிகளில் சேர்த்துக்கொள்ளமுடியுமா என்று கேட்கிறார்கள். துரதிருஷ்டவசமாக, இக்கேள்விக்கான எங்களின் மறுமொழி இல்லை என்பதேயாகும். ஏனென்றால் முறைப்படியாக அந்த மொழியில் நுழைந்ததாகக் கருதப்படுகின்ற சொல்லையே நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம். இதற்கு சான்றாதாரமாக நாங்கள் எங்களது தகவல் தரவுதளங்களை (database) நாடுகிறோம். அதனடிப்படையில் மதிப்பிடுகிறோம். இடைவெளியினை நிரப்பும் நிலை அல்லது புதிய ஒன்றை விளக்குதல் என்ற நிலையில் சில புதிய சொற்கள்  மொழியின் முக்கிய அங்கமாக மாறிவிடுகின்றன. உதாரணமாக இவ்வாறாகக் கண்டுபிடிக்கப்பட்ட சொற்களாக quark, spoof மற்றும் hobbit போன்ற சொற்கள் உள்ளிட்டவற்றைக் கூறலாம்.

இதனடிப்படையில் நோக்கும்போது புதிதாக நம்மால் கண்டுபிடிக்கப்படுகின்ற சொற்கள் அகராதியில் இடம்பெறுவது சற்று சிரமமே என்று தோன்றுகிறது. இருந்தபோதிலும் அகராதியின் முயற்சியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

மேற்கண்ட அனைத்து விவரங்களையும் தட்டச்சு செய்து, உரிய பக்கங்களை அச்செடுத்து அவர் படிக்க வசதியாக அவருக்கு உரிய முகப்புக்கடிதம் எழுதி மறுமொழியினை அன்றே அனுப்பினேன். இவர்களைப் போன்ற ஆர்வமுள்ள வாசகர்களின் எழுத்துக்கள் என்னை மென்மேலும் எழுதவைக்கின்றன என்பதைப் பெருமையாக நினைக்கிறேன். ஆங்கில அகராதியில் புதிய சொல்லைச் சேர்ப்பது தொடர்பாக சிந்திக்க வைத்த அவருக்கு நன்றி. 

20 January 2018

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : முதல் திருவந்தாதி : பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் அருளிய முதல் திருவந்தாதியை (2082-2181) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



வாய் அவனை அல்லது வாழ்த்தாது; கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா; - பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா கண், கேளா செவி. (2092)
என் வாயானது எம்பெருமானைத் தவிர வேறு யாரையும் புகழாது. என் கைகள் உலகங்களைத் தாவி அளந்த திருவிக்கிரமனை அல்லது வேறு ஒருவனைத் தொழமாட்டாது. பேயான பூதனையின் நஞ்சை உணவாக அமுது செய்த கண்ணபிரானுடைய திருமேனியையும் திருநாமத்தையும் அல்லது மற்றெதையும் என் கண்கள் காணா; காதுகள் கேட்கமாட்டா.

புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி,
அரி உருவும் ஆள் உருவும் ஆகி; - எரி உருவ
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால், மாற்று
எண்ணத்தான் ஆமோ, இமை? (2112)
ஒரு திருக்கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி மற்றொன்றில் திருவாழியை ஏந்தி நரசிங்க உருக்கொண்டு நெருப்பு உருவம் கொண்ட இரணியனின் மார்பை நகத்தால் பிளந்து போட்ட திருமாலினுடைய திருவடிகளைத் தவிர வேறொரு பொருளைக் கண நேரமெனும் நினைக்க முடியுமோ? (முடியாது.) 

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்,
சேரி திரியாமல் செந்நிறீ இ, -  கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒரு நாள்
கைந் நாகம் காத்தான் கழல். (2128)
மதம் பிடித்த ஐந்து யானைகள்போன்ற ஐம்பொறிகளையும், ஐம்புலன் வழிச் செல்லாமல் இழுத்துப் பிடித்து, கண்ட இடங்களிலும் திரியவொட்டாமல் செம்மையாக நிலைநிறுத்தி, மிகவும் சூட்சுமமான உண்மையான ஞானத்தால் அவனை உள்ளபடி உணர வல்லவர்கள் முன்பொரு காலத்தில் கஜேந்திர ஆழ்வானைப் பாதுகாத்தவனான அப்பெருமானுடைய திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெறுவர்.

நன்று பிணி மூப்புக் கையகற்றி, நான்கு ஊழி,
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும், என்றும்
விடல், ஆழி நெஞ்சமே! வேண்டினேன் கண்டாய்
அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு. (2152)
எம்பெருமனிடத்தில் ஆழ்ந்திருக்கிற நெஞ்சே! நோயையும், கிழத்தனத்தையும் அடியோடு தொலையும்படி விட்டு கைவல்ய மோட்சத்தைப் பெற்றாலும் நான்கு யுகங்களிலும் நிலையாக இருந்து இவ்வுலகம் முழுவதையும் ஆண்டாலும், சக்கரப் படையை உடைய பெருமானிடத்தில் கொண்ட அன்பை விடாமலிரு. உன்னை வணங்குகிறேன் காண்.

வேங்கடமும், விண்ணகரும், வெஃகாவும், அஃகாத
பூங்கிடங்கில் நீள் கோவல் பொன் நகரும், - நான்கு
நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே
என்றால், கெடுமாம் இடர். (2158)
திருமலையும், வைகுந்த மாநகரும், திருவெஃகாவும், பூமாறாத நீர் நிலைகளை உடைய சிறந்த திருக்கோவலூர் என்கிற திருத்தலமும் ஆகிய நான்கு திருப்பதிகளிலும், (முறையாக எம்பெருமான்) நிற்பதும், வீற்றிருப்பதும், பள்ளிகொண்டிருப்பதும், நடப்பதுமாய் இருக்கிறான் என்று கூறித் துதித்தால் துன்பங்களெல்லாம் நம்மை விட்டு நீங்கும்.

நாடிலும் நின் அடியே நாடுவன்;  நாள்தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன்; சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு,
என் ஆகில் என்னே எனக்கு? (2169)
(மனத்தினால்) தேடும் போது உனது திருவடிகளையே தேடுவேன்; எப்போதும் வாய்விட்டு ஏதாவது சொல்லும் போதும் உனது புகழையே பாடுவேன். (ஏதாவதொன்றைத்) தலையில் அணிவதாயிருப்பினும், திருவாழியைத் தரித்துக் கொண்டிருக்கின்ற உன்னுடைய அழகிய திருவடிகளையே சூடுகின்ற எனக்கு எது எப்படியானாலென்ன?

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,

13 January 2018

அயலக வாசிப்பு : டிசம்பர் 2017

கடந்த பதிவில் 2017இன் சிறந்த ஆங்கிலச் சொல்லைப் பற்றி விவாதித்தோம். இப்பதிவில் டிசம்பர் 2017இல் அயல்நாட்டு இதழ்களில் வாசித்தவற்றில் சில செய்திகளைக் காண்போம். வெள்ளை மாளிகையில் கரப்பான் பூச்சி முதல் கார்டியன் அளவு மாற்றப்படுவது வரை பல செய்திகள் இவற்றில் உள்ளன. கார்டியன், நியூயார்க்கர், இன்டிபென்டன்ட் ஆகிய இதழ்களில் இச்செய்திகள் வெளிவந்துள்ளன. 


வெள்ளை மாளிகையில் கரப்பான்பூச்சிகளும், எலிகளும், எறும்புகளும் அதிகமாகக் காணப்படுகின்றனவாம். கட்டடப் பராமரிப்புக் கோப்புகள் மூலமாக இது தெரிய வந்துள்ளது.

தென்னிந்தியாவில் ஆன்மாவைத் தொடும்வகையிலான பயணம் மேற்கொள்வோமா? பழமையான கோயில்கள், வனங்கள், நீர்நிலைகள், அழகான நகரங்கள். சென்னைக்குஅருகே யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னமான மகாபலிபுரம். கடலை நோக்கியமைந்துள்ள 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோயில்கள். ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட பஞ்சரதங்கள். அருச்சுனன் தவம். யுனெஸ்கோவின் மற்றொரு உலகப்பாரம்பரியச் சின்னமான, சோழப்பெருமையை செம்மாந்து வெளிப்படுத்த நிற்கின்ற தஞ்சாவூர் பெரிய கோயில். ஆயிரக்கணக்கான சிற்பங்களைத் தாங்கி நிற்கின்ற மதுரைக் கோயில்.


2017இல் அதிகம் வாசிக்கப்பட்டுள்ள கட்டுரைகளாக 25 கட்டுரைகளை நியூயார்க் டைம்ஸ் தெரிவு செய்துள்ளது. பக்கப்பார்வையா, பார்வையாளர்களா, வேறு காரணியா எதனை அடிப்படையாகக் கொள்வது என்று யோசிக்கும்போது நிதிநிலை என்ற அடிப்படையில் தம் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்துக்கொண்டு அதே சமயம் சந்தா செலுத்துகின்ற வாசகர்களைச் சார்ந்துள்ளதாக அவ்விதழ் கூறுகிறது. ஒவ்வொரு கட்டுரையினையும் படிக்க வாசகர்கள் எடுத்துக்கொண்ட நிமிடங்களின் அடிப்படையில் இந்த 25 கட்டுரைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவ்விதழ் கூறுகிறது.

அரசியல், விளையாட்டு, பண்பாடு, வாழ்வியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பணம், பயணம் என்ற தலைப்புகளில் கார்டியனில் 2017இல் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தலைப்புவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன.

 2018இல் கார்டியன் மற்றும் அப்சர்வர் இதழ்கள் டேப்ளாய்ட் வடிவிற்கு மறுபடியும் மாறவுள்ளன. 2005 முதல் இருந்த ஐரோப்பிய பாணியிலான பெர்லினர் வடிவமானது இதன் மூலம் முடிவிற்கு வருகிறது. மாற்றம் விரைவில் நிகழவுள்ள நிலையில் இதுவரை இருந்து வந்த பெர்லினர் வடிவத்தினைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறது கார்டியன். "ஒரு குறிப்பிட்ட கார்டியன் இதழையோ, அப்சர்வர் இதழையோ நீங்கள் பாதுகாத்து வைத்துள்ளீர்களா? குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நிகழ்வோ, நீங்கள் ரசி்த்த ரு குறிப்பிட்ட முக்கிய பிரமுகரைப் பற்றிய நினைவு தொடர்பான செய்தியோ அவ்விதழில் வெளியாகி இருக்கலாம். இவையனைத்திற்கும் அப்பால் - தனிப்பட்ட சொந்தக் காரணம்கூட இருக்கலாம் - நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ இந்த இதழ்களில் இடம் பெற்றிருக்கலாம். உங்களுடைய கடிதமோ, புகைப்படங்களோகூட வெளியாகியிருக்கலாம்" என்கிறது கார்டியன்.
பெர்லினர் வடிவம் என்பதானது நாம் வழக்கமாக வாசிக்கின்ற ப்ராட்ஷீட் வடிவிற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டதாகும். இந்த வடிவமானது டேப்ளாய்டைவிட உயரத்தில் சற்று நீண்டும், சற்றே அகலமாகவும் காணப்படும். அதேசமயம் ப்ராட்ஷீட்டை விட குறுகியதாகவும், சிறியதாகவும் இருக்கும்.

ஆ்ண்டின் 12 மாதங்களை ஒரே சொல்லில் கொணர முடியுமா? 2017இன் இறுதியில் சொல் (expletive) அசைநிலை என்பதற்கப்பால் நினைத்துப்பார்ப்பது சற்றுசிரமம்தான். அதே நேரத்தில் உலக நிகழ்வுகளில் ஓர் ஆண்டு என்பதானது அவற்றை விவரிக்க ஓராண்டில் பயன்படுத்தப்பட்ட மொழியின் நிலையிலும் அமையும் என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறதல்லவா? இச்சூழலில் Feminism தொடங்கி broflake வரை 2017இன் சொற்களாக அலசப்பட்டவற்றைக் காண்போமா? 

09 January 2018

2017இன் சிறந்த சொல் : தி இந்து

7 ஜனவரி 2018 நாளிட்ட தி இந்து இதழில் வெளியான என் கட்டுரையினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.
2017ன் சிறந்த சொல் 
பா.ஜம்புலிங்கம்
ஒவ்வோர் ஆண்டும் சிறந்த சொல்லாக முன்னணி ஆங்கில அகராதிகளால் ஒரு சொல் கடந்த சுமார் 10 ஆண்டுகளாகத் தெரிவுசெய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2016-ன் சிறந்த சொற்களாக முறையே ‘போஸ்ட்-ட்ரூத்’ (ஆக்ஸ்போர்டு அகராதி), ‘பிரெக்ஸிட்’ (காலின்ஸ் அகராதி), சர்ரியல் (மெரியம் வெப்ஸ்டர் அகராதி) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ‘போஸ்ட்-ட்ரூத்’ எனும் வார்த்தைக்கு இணையாக, தமிழில் ‘உண்மை கடந்த’ எனும் வார்த்தையை ‘தி இந்து’ நாளிதழ் கடந்த ஆண்டு உருவாக்கியது. 2013-ன் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

2017-ன் சிறந்த சொற்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை: ‘யூத்க்வேக்’ (youthquake) - ஆக்ஸ்போர்டு அகராதி, ‘ஃபேக் நியூஸ்’ (fake news) -காலின்ஸ் அகராதி, ‘ஃபெமினிசம்’ (feminism) -மெரியம் வெப்ஸ்டர் அகராதி. இந்தச் சொற்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களையும் அந்த அகராதிகள் விவாதிக்கின்றன.

ஆக்ஸ்போர்டு அகராதி
2004 முதல் அந்தந்த ஆண்டின் சிறந்த சொல்லாக, பண்பாட்டு முக்கியத்துவம் பெறும் வகையில் அமைகின்ற, ஒரு சொல்லைத் தெரிவுசெய்கிறது ஆக்ஸ்போர்டு அகராதி. 2017-ல் பண்பாடு, மனநிலை, முன்முடிபு போன்றவற்றை எதிரொலிக்கும் விதமாக ஆக்ஸ்போர்டு அகராதி கருதிய சொல் ‘யூத்க்வேக்’ என்பதாகும். இந்தச் சொல்லின் பெயர்ச்சொல் ‘இளைஞர்களின் நடவடிக்கைகளாலோ தாக்கத்தாலோ வெளிப்படுகின்ற ஒரு குறிப்பிடத்தக்க பண்பாட்டு, அரசியல் அல்லது சமூக மாற்றம்’ என்ற பொருளைக் கொண்டு அமைகின்றது. 2016-ல் தெரிவுசெய்யப்பட்ட சொல்லுடன் ஒப்புநோக்கும்போது 2017-ன் தெரிவுசெய்யப்பட்ட ‘யூத்க்வேக்’ என்ற சொல் ஐந்து மடங்கு அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

பிரிட்டனில் ஜூன் 2017-ல் தேர்தல் உச்சகட்டத்தில் இருந்தபோது ‘யூத்க்வேக்’ சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வாக்களித்ததன் காரணமாக தொழிலாளர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. இளைஞர்களின் அந்த எழுச்சியான ‘யூத்க்வேக்’கே இதற்குக் காரணம் என்பதை உணர்த்தியது. 2017 செப்டம்பரில் ரஷ்ய அரசியல்வாதியான நிகிடா இசாவ் தொலைக்காட்சியில் டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்வதாக மிரட்டியபோது, இச்சொல்லின் பயன்பாடு சூடுபிடித்தது.

செப்டம்பர் 2017-ல் இச்சொல் இரண்டாவது முறையாக அதிகபட்சமாகப் பயன்படுத்தப்பட்டதை நியூசிலாந்தில் உணர முடிந்தது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் அரசியலில் ஆர்வம் காட்டினர். அதனை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டனர்.

‘யூத்க்வேக்’ சொல் இதற்கு முன்னரே பயன்பாட்டில் உள்ளது. உலகம் முழுவதும் பிரிட்டிஷ் இளைஞர்கள் பேஷனையும் இசையையும் மாற்றிக்கொண்டு வருவதைக் குறிக்கும் வகையில் 1960-களில் ‘வோக்’ இதழின் ஆசிரியர் டயானா ப்ரீலேண்ட் இந்தச் சொல்லை முதன்முதலாக உருவாக்கினார். 1965-ல் போருக்கான பிந்தைய மாற்றத்தின்போது ‘வோக்’ ஆசிரியர் அவ்வாண்டை ‘யூத்க்வேக்’ என்று குறிப்பிட்டு, ஜனவரி மாதம் வெளியான தலையங்கத்தில், “அதிகம் கனவு காண்பவர்கள். அதிகம் செயல்பாட்டாளர்கள். இதோ இங்கே. இப்போதே. யூத்க்வேக் 1965” என்று எழுதியிருந்தார்.

2017-ல் பல சொற்கள் விவாதிக்கப்பட்டாலும் ஒன்பது சொற்களே இறுதிச்சுற்றில் இடம்பெற்றதாகவும், இறுதியில், அவற்றில் ‘யூத்க்வேக்’ என்ற சொல் இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தெரிவுசெய்யப்பட்டதாகவும், ஆக்ஸ்போர்டு அகராதியினர் தெரிவித்துள்ளனர். பொதுவாக, இவ்வாறாகப் புதிய சொல் தெரிவுசெய்யப்படும்போது, பின்னர் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்படும். ஆனால் ‘யூத்க்வேக்’ என்ற சொல் முன்னரே அந்த அகராதியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காலின்ஸ் அகராதி
2017-ன் பிரபலமான சொல்லாக ‘ஃபேக் நியூஸ்’ என்பதை காலின்ஸ் அகராதி தெரிவுசெய்துள்ளது. 2017-ல் இந்தச் சொல்லின் பயன்பாடு 365% அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இச்சொல் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. செய்திகளைத் தருவதுபோலவே பொய்யான தகவல்களைத் தருவது ‘ஃபேக் நியூஸ்’ என்பதாகும். அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள காலின்ஸ் அகராதியில் ‘ ஃபேக் நியூஸ்’ என்ற சொல்லும், அதற்கான விளக்கமும் இடம்பெறும் என்று காலின்ஸ் அகராதியினர் தெரிவித்துள்ளனர்.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி
2003 முதல் மெரியம் வெப்ஸ்டர் அகராதி ஆண்டின் சிறந்த சொல்லாக ஒரு சொல்லைத் தெரிவுசெய்கிறது. இந்த ஆண்டு ‘ஃபெமினிசம்’ (Feminism) என்ற சொல்லைத் தெரிவுசெய்துள்ளது. 2017-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் இது. பல நிகழ்வுகள் இத்துடன் தொடர்புடையனவாக உள்ளன. பலர் இச்சொல்லை அதிகம் விரும்புகின்றனர். ஜனவரி 2017-ல் வாஷிங்டனில் நடைபெற்ற மகளிர் அணிவகுப்பு செய்திகளைத் தொடர்ந்து இச்சொல் பிரபலமானது. இதுதொடர்பான அணிவகுப்புகள் அமெரிக்காவிலும் அணிவகுப்புகள் உலகளவிலும் நடத்தப்பட்டபோது இச்சொல் பிரபலமானது. ஏற்பட்டாளர்களும், கலந்துகொண்டோரும் பெண்ணியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததைப் பற்றியும், பெண்ணியம் என்பதானது அந்த அணிவகுப்பில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் தொடர் விவாதங்கள் நடைபெற்றன. ‘மீ டூ (#MeToo movement)’ என்ற இயக்கம் விறுவிறுப்பாகக் காணப்படும் இந்த ஆண்டின் சிறந்த சொல்லாக ‘ஃபெமினிசம்’ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அகராதியும் தத்தம் நிலைப்படி ஒரு சொல்லைப் புதிய சொல்லாகத் தேர்ந்தெடுத்து, அதற்கான காரணங்களை முன்வைக்கின்றன. அரசியல், சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளின் அடிப்படையிலும், பயன்பாட்டு நிலையிலும் இவ்வாறாக சொற்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் ‘யூத்க்வேக்’ மற்றும் ‘ஃபேக் நியூஸ்’ அந்தந்த இடத்தைச் சார்ந்துள்ள நிலையிலும் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையிலும் அமைகின்றன. ஆனால் ‘ஃபெமினிசம்’ என்பது பொதுவில் அமைந்துள்ளதைக் காண முடிகிறது. ‘டைம்’ இதழ் தன் முகப்பட்டையில் இந்த ஆண்டு சிறந்த நபராக ‘மீ டூ’ இயக்கம் இடம்பெற்று சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த மூன்று அகராதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சொற்களில் ஃபெமினிசம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்று கொள்ளலாம்.

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் செப்டம்பர் 2017 பதிப்பில் தமிழ்ச் சொற்களான அப்பா, அண்ணா உள்ளிட்ட சொற்களுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் 70 சொற்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வகராதியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த 70 சொற்களும் இந்திய வரலாற்றினை மட்டுமின்றி, இந்தியாவில் ஆங்கில மொழியில் பல வகையான பண்பாட்டு, மொழியியல் தாக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன என்றும், அவை இந்தியாவில் ஆங்கில மொழியை வடிவமைக்கவும் மாற்றவும் உதவுகின்றன என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

அந்தந்த ஆண்டின் சிறந்த தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க கல்வி நிலையங்களோ, தமிழ் ஊடகமோ ஒரு முயற்சியினை மேற்கொண்டால், அந்த ஆண்டில் தமிழ்நாட்டின் சமூக, அரசியல், பண்பாட்டு நிலையில் அந்தச் சொல் மூலமாக ஏற்படுத்திய தாக்கத்தினை அறியவும், ஒரு சுய மதிப்பீடு செய்துகொள்ளவும் உதவியாக அமையும்!

- பா. ஜம்புலிங்கம், முனைவர், 
உதவிப் பதிவாளர் (ஓய்வு), தமிழ்ப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: drbjambulingam@gmail.com


06 January 2018

திருமங்கலம் பூலோகநாதஸ்வாமி கோயில் Tirumangalam Boologanathaswamy Temple

19 டிசம்பர் 2017 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருமங்கலம் என்னுமிடத்தில் உள்ள பூலோகநாதஸ்வாமி கோயிலுக்கு முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுடன் செல்கின்ற வாய்ப்பு கிடைத்தது. உடன் நண்பர் திரு மணி.மாறன் வந்திருந்தார். நுழைவாயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலை நினைவுபடுத்தியது. நுழைவுவாயிலை அடுத்து உள்ளே கோயிலின் இடது புறத்தில் நடராஜர் சபை உள்ளது. 

இக்கோயிலின் மூலவர் பூலோகநாதஸ்வாமி ஆவார். அவர் லிங்கத் திருமேனியாக உள்ளார். கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி தனிக்கோயிலாக உள்ளது. இக்கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகின்ற நிலையில் மூலவர் உள்ளிட்ட அனைத்து சிற்பங்களையும் கோயிலுக்கு வெளியே வடப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலாலயத்தில் வைத்துள்ளனர். 

நுழைவாயிலில் உள்ள தூண்களும், முன் மண்டபத்தில் காணப்படுகின்ற வேலைப்பாடுள்ள தூண்களும், அங்கு காணப்படுகின்ற நாட்டியக்கலைஞர்களின் சிற்பங்களும், நடராஜர் சபையில் உள்ள சிவன், பார்வதி, தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன் ஆகியோரின் நுணுக்கமான சிற்பங்களும், மூலவருடைய கருவறையைச் சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி இருக்கின்ற இடத்தில் உள்ள கட்டட அமைப்பும், பூக்களால் காணப்படுகின்ற வரிகளும் இக்கோயிலின் சிறப்பான கூறுகளாகும். திருப்பணி நடைபெற்றதும் ஒரு முறை இக்கோயிலுக்குச் செல்வோம், அங்குள்ள சிற்பங்களை ரசிப்போம், வாருங்கள்.

அழகான தூண்களைக் கொண்ட நுழைவாயில்

வேலைப்பாடமைந்த தூண்களைக் கொண்ட முன் மண்டபம்
நடராஜர் சபையின் முன்புறம் அமைந்துள்ள சிவன், பார்வதி, தட்சிணாமூர்த்தி

நடராஜர் சபையின் முன்புறம் அமைந்துள்ள விநாயகர், முருகன்
 

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கின்ற இடத்தில் சிங்கங்கள் தாங்கி நிற்க தூண்களைக் கொண்ட மண்டப அமைப்பு 


திருமங்கலத்தின் பழைய பெயர் ராஜராஜன் திருமங்கலம் என்றும், கி.பி.1128ஆம் ஆண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாகவும் கூறும் வரலாற்று அறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் இங்குள்ள சில சிற்பங்களைப் பற்றியும், கட்டட நுட்பங்களைப் பற்றியும்  கூறியுள்ள செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன.  









முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் உடன்
(இடமிருந்து) திருமதி கல்யாணராமன், திரு கல்யாணராமன், திரு மோகன் குருக்கள், முனைவர் ஜம்புலிங்கம், திரு மணி.மாறன்
இதே நாளில் இக்கோயிலுக்குச் செல்லும் முன்பாக ஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற தலமான தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்திலுள்ள வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். 




நன்றி : 
இக்கோயில்களுக்கு எங்களை அழைத்துச் சென்ற முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும், உடன் வந்த நண்பர் திரு மணி.மாறன் அவர்களுக்கும், கண்டுபிடிப்பு பற்றிய செய்திகளை வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி.


English version of the article:
On 19th December 2017 I went to Boologanathaswamy Temple at Tirumangalam near Mayiladuthurai in Nagapattinam district of Tamil Nadu, alongwith Dr Kudavayil Balasubramanian. Mr Mani. Maaran also came with us. The entrance of the temple reminded me the Iravathesvarar Temple of Darasuram near Kumbakonam. Next to the entrance in the left side, Nataraja Sabha is found.  

The presiding deity of the temple is known as Boologanathaswamy. He is in linga form. At the left side of the temple, the shrine of the the consort of the deity, is found as a separate temple. As the temple is under renovation, the sculptures were kept outside the temple, in the balalaya.  

The pillars found at the entrance, the aesthetically designed pillars of the front mandapa, the sculptures of artists and dancers, the miniature sculptures of Siva, Parvathi, Dakshinamurti, Vinayaka, Muruga in the Nataraja sabha, the beautiful kosta of the Dakshinamurti and flower rows around the sanctum sanctorum exposes the speciality of the temple. Let us visit the temple after renovation.

On the same we went to Dayanitheesvarar Temple at Vadakurankaduthurai in Papanasam taluk of Thanjavur district of Tamil Nadu, sung by Gnanasambandar.