24 February 2018

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் : தமிழக சமணத் தளங்கள் குறுந்தகடு வெளியீடு

ஜனவரி 2018 இறுதி வாரத்தில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் (French Institute of Pondicherry) புகைப்பட ஆவணப்பிரிவின் தலைவர் திரு கே.ரமேஷ்குமார் அவர்கள், பிப்ரவரி 2018இல் Jain Sites of Tamil Nadu என்ற குறுந்தகட்டினை வெளியிடவுள்ளதாகக் கூறி, அதில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அந்நிறுனத்தானரிடமிருந்து விழாவிற்கான அழைப்பிதழ் மின்னஞ்சலில் வந்தது.  விழாவில் நானும் திரு.தில்லை கோவிந்தராஜன் அவர்களும் கலந்துகொள்வதாகத் திட்டமிட்டிருந்தோம். தவிர்க்க இயலாத காரணங்களால் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்கள் வர இயலா நிலை ஏற்பட்டது.  

விழா நாளான 5 பிப்ரவரி 2018 அன்று பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றேன். விழாவில் கலந்துகொண்டேன். விழாவினைப் பற்றிய அனுபவங்களைப் பார்ப்பதற்கு முன்பாக சுவடிப்பிரிவையும், நூலகத்தையும் சுற்றிப் பார்ப்போம். அங்கிருந்து கடலின் பேரழகினை ரசிப்போம். தொடர்ந்து நிகழ்வுக்குச் செல்வோம். 

















குறுந்தகடு வெளியீடு
குறுந்தகடு அன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது. குறுந்தகட்டினை பிரான்ஸ் தூதரக சமூக விவகாரங்கள் துறைத் தலைவர் இசபெல்லா மர்குரே வெளியிட முதல் படிகளை மேல்சித்தாமூர் சமணக்காஞ்சி சமண மடத்தின் தலைவர் ஸ்வஸ்திஸ்ரீ இலட்சுமிசேனா பட்டாரக பட்டாசார்யவர்ய மகாசுவாமிகள், திரு பி.தில்லைவேல், திரு எஸ்.கணேசன் மற்றும் லக்னோ மற்றும் சென்னையைச் சார்ந்த சமணப் பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் புதுச்சேரி சமண சங்க உறுப்பினர் திரு குகாமி சந்த் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழக சமணர் தளங்களைக் கொண்ட இந்த புகைப்படத் தொகுப்பில் தமிழகத்தில் உள்ள 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சமணர் கால கட்டடங்கள், குகைக் கோயில்கள், பாறை படுக்கைகள், குகை ஓவியங்கள், கல்வெட்டுகள், தனிச் சிற்பங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. குறுந்தகட்டின் சிறப்புகளையும், அது வடிவம் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும், எதிர்கொண்ட சிரமங்களையும் திரு ரமேஷ்குமார், காணொளிக்காட்சி மூலமாக பார்வையாளர்களுக்கு விளக்கினார். 
 அறிமுக உரையாற்றும் பிரட்ரிக் லேண்டி (வலது) இசபெல்லா மர்குரே 
 குறுந்தகட்டைப் பெறும்  இலட்சுமிசேனா பட்டாரக பட்டாசார்யவர்ய மகாசுவாமிகள் 
குறுந்தகட்டின் கூறுகளை விளக்கும் திரு ரமேஷ்குமார்

இந்த குறுந்தகட்டை வெளியிட்ட பிரான்ஸ் தூதரக சமூக விவகாரங்கள் துறைத் தலைவர் இசபெல்லா மர்குரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

"தமிழகத்தில் உள்ள 464-க்கும் மேற்பட்ட சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் கலாசார வளர்ச்சிக்கு சமணர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், அவர்களது நினைவுச் சின்னங்கள் இடிபாடுகளாக உள்ளன. அவை பராமரிப்பின்றி தொடர்ந்து மறைந்து வருகின்றன. தற்போது ஓரளவு பாதுகாப்பாக இருக்கும் சமணர் நினைவுச் சின்னங்கள் தொகுக்கப்பட்டது. அவற்றை எண்ம மயமாக்கினால் (டிஜிட்டல் மயம்) பாதுகாக்க முடியும். இதன்மூலம் நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்க முடியும். சமணர் தளங்களில் உள்ள பாரம்பரிய இலக்கியம், கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது".


பிரெஞ்சு ஆய்வு நிறுவன இயக்குநர் பிரட்ரிக் லேண்டி கூறியதாவது: "இந்த ஆய்வில் சமணர்களின் 13 வகை சடங்குகள், திருவிழாக்கள் தொடர்பான புகைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோயில்கள், குகைக் கோயில்கள், பாறை தங்குமிடம் தளங்கள் மற்றும் பாழடைந்த கோயில்களின் 7,873 புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் சமணர்களின் கட்டடக் கலை, கலாசாரம் உள்ளிட்டவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு சமணர்களின் பங்கு, சமுதாயச் சடங்குகள், திருவிழாக்கள், கோயில் சடங்குகள் உள்ளிட்டவற்றை இந்தப் புகைப்படங்கள் சித்திரிக்கின்றன. சமணர் தளங்களில் 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆபத்தான இடங்களுக்குச் சென்று சமணர் படுக்கைகள், நினைவுச் சின்னங்கள் குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறுந்தகட்டில் சமணர் தளங்களின் வரைபடங்கள், இருப்பிடங்களை காண முடியும். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கள ஆய்வு செய்து இவை ஆவணப் படுத்தப்பட்டுள்ளன".

விழாவில் முனைவர் கனக. அஜிததாஸ், திரு ஸ்ரீதரன் அப்பாண்டைராஜன், திரு வில்லியனூர் வெங்கடேசன், திரு வீரராகவன் திருமதி மங்கையர்க்கரசி, திரு ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரைக் கண்டேன். 1999 முதல் பல முறை பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்கு வந்துள்ளபோதிலும் இது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.


நிகழ்விற்குப் பின் நண்பர்களுடனும், அறிஞர்களோடும் சில தருணங்கள்


  



இத்திட்டம் தொடர்பாக 3 நவம்பர் 2011இல் முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினரோடு நானும், எனது மேற்பார்வையில் "தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம்" என்ற தலைப்பில் திட்டத்தை மேற்கொண்ட திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் சென்று,  களப்பணியின்போது நாங்கள் கண்டுபிடித்த பல புதிய சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காண்பித்தோம். அந்த சிலைகளின் புகைப்படங்கள் இந்த குறுந்தகட்டில் உரிய ஒப்புகையுடன் இடம்பெற்றுள்ளதைக் கண்டேன். அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.

நன்றி : 
ஆய்வாளர்களுடன் சந்திப்பு
திரு அழகானந்தன், 15 பிப்ரவரி 2018

திரு பாலமுருகன், 15 பிப்ரவரி 2018
திரு அன்வர், 26 பிப்ரவரி 2018
திரு அ.கு.செல்வராசன், 27 பிப்ரவரி 2018
For English version visit: 
The French Institute of Pondicherry: Release of DVD on Jain sites of Tamil Nadu 
1 மார்ச் 2018இல் மேம்படுத்தப்பட்டது.

12 comments:

  1. அழகிய புகைப்படங்களுடன் தங்களது அனுபவத்தை நாங்களும் அறிய வைத்த முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அழகான புகைப்படங்களுடன் அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஜம்பு சார். :)

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி அய்யா. தஞ்சை ச.அப்பா ண்டை ராஜ் (ச மணன்)

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி. த்மிழகம் முழுதும் உள்ள 464 சமணத் தளங்கள் பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டது அரிய பணி. பொதுத் தளத்தில் இணையத்தில் எல்லாரும் பார்க்கும்/படிக்கும் வண்ணம் அப்பதிவுகள் வெளியிடப்பட்டால் சிறப்பாக அமையும்.

    ReplyDelete
  5. தமிழக சமணத் தடயங்களை அறிய அரும் பணியாற்றிய பிரெஞ்ச் இன்ஸ்டியூட் மின்பதிவு தகட்டு வெளியீட்டு விழாவிற்கு கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு முழு விபரங்களையும் தந்துதவிய தங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. அழகிய படங்களுடன் நிகழ்வினை விவரித்த விதம் அருமை ஐயா! தொடரட்டும் உங்கள் ஆய்வுப்பணிகள்! நன்றி!

    ReplyDelete
  8. எனக்கு புத்த சமண வித்தியாசங்கள் சரியாகப்[ புரிவதில்லை இது குறித்து விரிவாக ஒரு பதிவு இட வேண்டுகிறேன்

    ReplyDelete