24 March 2018

மைசூர் : மெழுகுச் சிலை அருங்காட்சியகம்

ஆகஸ்டு 2017 மைசூர் பயணத்தின்போது மெழுகு அருங்காட்சியகம் சென்றோம். மைசூர் அரண்மனையிலிருந்து மூன்று கி.மீ. தொலைவிலுள்ள இந்த அருங்காட்சியகம் Melody World Wax Museum என்றழைக்கப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்பத் துறை வல்லுநர்  திரு ஸ்ரீஜி பாஸ்கரன் என்பவரால் அக்டோபர் 2010இல் இது நிறுவப்பட்டதாகும். இதுபோன்ற மெழுகுச்சிலை அருங்காட்சியங்களை இவர் உதகமண்டலத்தில் மார்ச் 2007இலும், பழைய கோவாவில் சூலை 2008இலும் அமைத்துள்ளார்.  



வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் தலைவர்களையும், முக்கியப் பிரமுகர்களையும் மெழுகுச் சிலைகளாக, நேரில் பார்ப்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது போல படித்திருந்தபோதிலும் அவ்வாறான சிலைகளைக் காணும் வாய்ப்பு மைசூர் சென்றபோது எங்களுக்குக் கிடைத்தது.

90 வருடங்களுக்கு மேலாக உள்ள ஒரு கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. மெல்லிசை உலகம் என்றழைக்கப்படுகின்ற இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த பல வகையான இசைக்கருவிகள் காணப்படுகின்றன. கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையிலான இசைக் கருவிகளை இங்கு காணலாம். ஆளுயர (life size) சிலைகள் இங்குள்ளன. இசைக்கருவிகளை வாசிக்கின்ற இசைக்கலைஞர்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. 

19 பிரிவுகள் இங்கு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இசையின் நுணுக்கத்தையும், கலையின் சிறப்பான அனுபவத்தையும் காண முடியும். பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 110 ஆளுயர மெழுகுச் சிலைகள் இங்கு உள்ளன. இந்திய செவ்வியல் இசையான இந்துஸ்தானி, மற்றும் கர்நாடகா, பஞ்சாபி பங்கரா, மத்தியக் கிழக்கு, சீனா, மலையகம், ஜாஸ், ஹிப்ஹாப், ராக் உள்ளிட்ட பல குழுக்களைக் குறிக்கின்ற வகையில் இசைக்குழுக்கள் உள்ளன.

மைசூரின் அந்நாளைய மன்னரான நால்வடி கிருஷ்ணராஜ வாடியாரின் சிலை இங்குள்ளது. பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்ற முக்கிய சிலையாக அது உள்ளது. பல சிலைகள் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றன. ஆளுயர மெழுகுச் சிலையை இரண்டிலிருந்து நான்கு மாதத்தில் உருவாக்கலாம் என்றும் அதனை உருவாக்க 50 கிலோவிற்கு மேற்பட்ட மெழுகு தேவைப்படும் என்றும் தெரிவித்தனர். சிலை அமைக்கப்பட்டவுடன் அதற்குப் பொருந்தும் வகையில் உரிய ஆடையும், அணியும் அதற்கு அணிவிக்கப்படுகின்றனவாம்.

பல வகையான இசைக்குழுக்களும் மேடை அமைப்புகளும் காணப்படுகின்றன. மெழுகுச் சிலைகள் சிற்பியின் திறமையையும், சிற்பியின் கலை தாகத்தையும் வெளிப்படுத்துகின்றன. இளையோர் முதியோர் என அனைவரையும் கவர்கிறது இந்த அருங்காட்சியகம். ஒரு மெழுகுச்சிலையைத் தயாரிக்க ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.15 இலட்சம் வரை ஆகிறது. சிலையின் கண்களும் பற்களும் செயற்கையானவை. உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக பெரும்பாலும் சின்தெடிக் அல்லது உண்மையான முடி பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள சிலைகள் விற்பனைக்கு அல்ல. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு பகுதியில் பார்வையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு இசைக்கருவிகளை இசைக்கும் வசதி உள்ளது. நாங்கள் சென்றிருந்தபோது பலர் குழுவாகவும், தனியாகவும் அந்த இசைக் கருவிகளை இசைத்து மகிழ்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. அவ்வாறு உள்ளே செல்பவர்களுக்கு வெளியே வர மனமில்லாமல் உள்ளது. மாறிமாறி இசையெழுப்பிக்கொண்டு ரசனையாக அவர்கள் அதனை அனுபவிக்கின்றனர். 



மைசூர் மன்னர் நரசிம்மராஜ வாடியார்















மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ வாடியார்
அந்தந்த பிரிவுகளில் உள்ள காட்சிக்கூடங்களில் அந்த சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது ஒரு புதிய உலகிற்கு வந்த உணர்வு ஏற்படுகிறது. அவ்வாறே இசைக்கருவிகள் கண்ணாடிப்பேழைக்குள் உரிய குறிப்புகளோடு நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. அவற்றின் வேலைப்பாடும், நுணுக்கமும் நம்மை வியக்கவைக்கின்றன.

காலை 9.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். விடுமுறை நாள் கிடையாது. பார்வையாளருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஸ்டில் கேமராவிற்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது இந்த அருங்காட்சியகம் செல்லலாம்.

புகைப்படங்கள் எடுக்க உதவி : 
என் மனைவி திருமதி பாக்கியவதி, இளைய மகன் திரு சிவகுரு

நன்றி: 
------------------------------------------------
கர்நாடக உலா : இதற்கு முன் பார்த்த இடங்கள்/வாசித்த பதிவுகள்
------------------------------------------------

24 comments:

  1. மூன்றாவது படத்தில் இருப்பது யாருடைய சிலை?

    சுவாரஸ்யமான தகவல்கள், சுவாரஸ்யமான படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தற்போது மன்னரின் பெயரை, புகைப்படத்தின்கீழ் தந்துள்ளேன்.

      Delete
  2. தகவல்கள் அருமை அழகான புகைப்படங்களோடு எங்களையும் காண வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தின படங்கள்.
    நாங்கள் அமெரிக்காவில் மெழுகு சிலை அருகாட்சியம் போய் பார்த்து புகைபடங்கள் எடுத்து வந்தது நினைவு வருது.

    ReplyDelete
  4. நேரில் கண்ட உணர்வு ஐயா
    இரண்டு மூன்று முறை சென்றும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்காமல் இருந்திருக்கிறேன்

    ReplyDelete
  5. ஓ வக்ஸ் மியூசியம் அங்கும் உண்டோ?.. காந்தித்தாத்தா சிலை இங்கு ம் எல்லா வக்ஸ் மியூசிங்களிலும் இருக்கு... என்னிடமும் படங்கள் இருக்கு ஒரு தடவை போடுறேன்.

    உங்கள் மனைவியும் மகனும் அழகாகப் படங்கள் எடுத்திருக்கினம்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. படங்களும் தகவல்களும் சிறப்பு ஐயா! நன்றி!

    ReplyDelete
  7. சிறப்பான படங்களுடன் ..நல்ல தகவல்கள்...

    மிக அருமை ஐயா

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே

    அருமையான புகைப்படங்களுடன் நல்லதொரு தகவல்களையும் தந்துள்ளீர்கள்.மெழுகுச் சிலைகள் நேரில் மனிதர்களை பார்ப்பது போன்ற உணர்வினைத் தருகிறது. காந்தியடிகளின் சிலை,மஹா ராஜாக்களின் சிலைகளும
    தத்ரூபமாக அமைந்துள்ளது. புகைப்படம் எடுக்க உதவிய தங்கள் குடும்பத்துக்கும், சேய்திகளை பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. படங்களைப் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. மைசூர் அருங்காட்சியகத்தின் மெழுகுச் சிலைகள் பிரமாதம். அந்த அரியாசனம்? அந்த அரசன்? வெகு அழகான படைப்பு.

    ReplyDelete
    Replies
    1. தற்போது மன்னரின் பெயரை, புகைப்படத்தின்கீழ் தந்துள்ளேன்.

      Delete
  10. இப்போது தான் முதல் முறையாக அறிகின்றேன்.

    ReplyDelete
  11. அறியாத தகவல்கள் மைசூர் மன்னர்களின் பெயர்கள் உடையார் என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  12. மிக அருமை ஐயா, நேரில் சென்று பார்த்த நிறைவு

    ReplyDelete
  13. மிக அருமை ஊட்டியிலும் ஒரு மெழுகு சிலை கண்காட்சி உள்ளது பாராட்டுகள்

    ReplyDelete
  14. படங்கள் அத்தனையும் அருமை! தத்ரூபமாக இருக்கிறது...அறியாத தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. பார்க்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாயிற்று....

    கீதா

    ReplyDelete
  15. இத்தகைய அரிய மெழுகுச் சிலைகளை வடிப்போர் நம் நாட்டுச் சிற்பிகளா?
    பலமுறைகள் மைசூர் சென்ற நான் இங்கே செல்லவில்லை. பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு. பதிந்துள்ள படங்கள் அருமை!
    காந்தி சிலை...அப்பப்பா! என்ன நேர்த்தி!

    ReplyDelete
  16. பகிர்வும் படங்களும் அருமை

    ReplyDelete
  17. //..இந்த அருங்காட்சியகம் Melody World Wax Museum என்றழைக்கப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்பத் துறை வல்லுநர் திரு ஸ்ரீஜி பாஸ்கரன் என்பவரால் அக்டோபர் 2010இல் இது நிறுவப்பட்டதாகும். //

    //..90 வருடங்களுக்கு மேலாக இயங்கிவருகிறது.//

    தகவல்கள் ஒத்துப்போக முரண்டுபிடிக்கிறதே..

    ReplyDelete
    Replies
    1. "90 வருடங்களுக்கு மேலாக உள்ள ஒரு கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் இயங்கி வருகிறது" என்றிருக்கவேண்டும்.தற்போது பதிவில் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

      Delete
  18. இதுவரை கேள்விப் பட்டதில்லை. வாய்ப்பு தவறாமல் நேரும்போது பார்க்கவேண்டும்

    ReplyDelete
  19. எனக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று அருங்காட்சியகங்கள். நான் எந்த ஊருக்கு போனாலும் அங்கு அருங்காட்சியகம் இருந்தால் முதலில் அதை பார்த்துவிட்டு தான் அடுத்த வேலையே. உங்கள் அனுபவத்தை அழகிய புகைப்படங்களுடன் விளக்கமாக எடுத்துக்கூறியது நேரில் கண்ட உணர்வை ஏற்படுத்தியது.

    அய்யா! சென்ற வாரம் எழுத்தாளர். முத்துக்கிருஷ்ணன் அவர்களும் நானும் அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகம் சென்று வந்தோம். பிரமாண்டத்தின் உச்சம்.

    உங்கள் இந்தப் பதிவை பார்த்தபின் நானும் அந்த அனுபவத்தை எழுதலாம் என்ற எண்ணம் வந்தது.

    ReplyDelete
  20. மிகவும் நன்றாக உள்ளது .. வாழ்த்துக்கள் ..

    ReplyDelete