26 May 2018

அலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்

மகாபலிபுரம் (மாமல்லபுரம்) இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில்,  தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள பண்டைய கடற்கரை நகரமாகும். யுனெஸ்கோவால் பாரம்பரியச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள, 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, இவ்விடத்திற்கு அண்மைக்காலமாக சுற்றுலாப்பயணிகளும், யாத்ரீகர்களும் வந்து செல்கின்றனர்.  இப்போது இவ்வூர் அலைச்சறுக்குக்கு (சர்ஃபிங்) பெயர் பெற்ற இடமாக மாறிவருகிறது. 
அலைச்சறுக்குக்குத் தயாராகும் ராகுல் பன்னீர்செல்வம்

பத்தாண்டுகளுக்கு முன்பாக வெளிநாட்டு அலைச்சறுக்கு வீரர்கள் கண்டுபிடித்த நாள் முதல் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் அலைச்சறுக்கில் இங்கு அதிகமாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். மூமு என்றழைக்கப்படுகின்ற முகேஷ் பஞ்சநாதன் (32) அவர்களுக்கு அலைச்சறுக்கினைக் கற்றுக்கொடுக்கின்றார். மீனவக்குடும்பத்தில் பிறந்த அவர் 2007இல் அலைச்சறுக்கினை தானாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதற்காக வெளிநாட்டிலிருந்து அலைச்சறுக்கு விளையாட வந்தோரிடம் தக்கைப்பலகையினைப் பெற்றார். பின்னர் உள்ளூர் இளைஞர்களுக்கு இலவசமாக அதனைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். கடற்கரையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முன்வருவோருக்கு அவர் தாமாக முன்வந்து கற்றுத் தருகிறார். சர்பிங் பெடரேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பில் முதல் நிலைப் பயிற்றுவிப்பாளராக பயிற்றுவித்தல் திறனை இவர் முறைப்படுத்திக்கொண்டார். தற்போது சொந்தமாக மூமுசர்ப்இந்தியா என்ற ஒரு அலைச்சறுக்குப் பள்ளியினை நடத்தி வருகிறார். தான் வைத்துள்ள 30 அலைச்சறுக்குப்பலகைகளை வாடகைக்கு விடுவதோடு, தன் உள்ளூர் குழுவினை வைத்துக்கொண்டு தனியாகவும், கூட்டாகவும் வகுப்புகளை நடத்திவருகிறார்.
அலைச்சறுக்குப் பலகையுடன் அலைச்சறுக்காளர்கள்
கடலின் அரிமானத்தைத் தடுப்பதற்காகவும், கடற்கரைக் கோயிலைக் காப்பதற்காகவும் அரசால் கடற்கரைப்பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்தியாவைச் சேர்ந்த அலைச்சறுக்காளர்களுடன், ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாட்டிலிருந்து வந்தவர்களும் 2 மீட்டர் கடல் அலையை எதிர்கொண்டு சறுக்கி விளையாடுவதையும், அருகே தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் அலைச்சறுக்கினைப் பற்றி கற்பதையும் காணமுடிந்தது.


ஹோலி ஸ்டோக்ட் கட்டியுள்ள ஸ்கேட் பார்க்
காலையில் நான் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது அப்பலகை பழுதானதைக் கண்டேன். பின்னர் மூமூவின் பள்ளி அருகே 26 வயதான ராகுலைக் கண்டேன். அவர் அலைச்சறுக்கில் பயிற்சி பெற்றவர். கோவ்லாந்து பாயிண்ட்டில் 2017இல் கடற்கரையில் நடைபெற்ற 20 நிமிட அலைச்சறுக்குப் போட்டியில் அவருடைய வயதுப்பிரிவில் முதலிடம் பெற்றவர். முன்னாள் மாணவரான அவர் தற்போது பயிற்சியாளராக உள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, முன்பு ஒரு கடை வைத்திருந்த, அலைச்சறுக்காளரிடம் அவர் பயிற்சி பெற்றவராவார்.  அலைச்சறுக்கில் தேர்ந்தவரான அவர் அலைச்சறுக்குப் பலகைகளை சீர்செய்வதிலும் வல்லவர்.

அருகில் உள்ள ஸ்விரல் நெஸ்ட் என்னும் மீனவரால் நடத்தப்படுகின்ற ஒரு தங்கும் விடுதி கடல் திமிங்கிலங்கள் என்ற அலைச்சறுக்குக்குழுவினைக் கொண்டுள்ளது. மகாபலிபுரத்தைச் சேர்ந்த, ஆறு வருடங்களாக அலைச்சறுக்கில் பயணிக்கின்ற, தற்போது 16 வயதாகும் நிதீஷ் என்பவரால் நடத்தப்படுகிறது. நான் அவரைச் சந்தித்தபோது கோவ்லாந்து போட்டிக்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
கடல் திமிங்கிலங்கள் அமைப்பின் உறுப்பினர் சஞ்சய்
மகாபலிபுரத்தில் ஸ்கேட்டிங் பார்க் ஒன்றைக் காணமுடிந்தது. பெங்களூரைச் சேர்ந்த ஹோலி ஸ்டோக்ட் 2015இல் இந்த பார்க்கினை அமைத்துள்ளது. இந்தியாவின் பிற இடங்களிலும் அவர்கள் இவ்வாறான ஸ்கேட்டிங் பார்க்கினை அமைத்துள்ளனர்.  அலைச்சறுக்கு இந்தியாவில் மேற்கு கடற்கரைப் பகுதியில் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் நன்கு வளர்ந்துவருகின்றபோதிலும் மகாபலிபுரம் இதற்கான மணிமகுடமாகத் திகழ்கிறது.

நன்றி : தி கார்டியன்
சுருக்கமாக தமிழில் :  பா.ஜம்புலிங்கம்
கார்டியன் இதழின் இக்கட்டுரையினை New waves : make a break for the 'crown jewel' of India's surf scene in Tamil Nadu : Ozzie Hoppe என்ற இணைப்பில் வாசிக்கலாம். 

19 May 2018

புத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்

நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள கும்பகோணத்தில் ஒரு அறிவு திருக்கோயில்  நூலை முன்பு வாசித்துள்ளோம். அந்நூல் ஒரு குறிப்பிட்ட நூலகத்தைப் பற்றி முழுமையாக விவாதிக்கிறது. இந்நூல் வாசிப்பு மற்றும் நூல் தொடர்பாக, ராமகிருஷ்ண விஜயம், தினமணி, புதிய தலைமுறை-கல்வி, தினமலர் போன்ற இதழ்களில் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் எழுதியுள்ள கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாக அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட தொடர்பான பொருண்மைகளில் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சிரமமானதாகும். திரு சம்பத்குமார் மிகவும் முயன்று அவ்வாறான கட்டுரைகளைத் தொகுத்து வாசிப்பு தொடர்பானவற்றிற்கு முக்கியத்துவம் தந்து, ஒரே இடத்தில் அவ்விதமான கட்டுரைகள் அமையவேண்டும் என்ற நன்னோக்கில் இந்நூலைப் படைத்துள்ளார். இந்திய நூலகவியலின் தந்தையான டாக்டர் எஸ்.ஆர்.ரெங்கநாதன் அவர்களின் 125ஆவது பிறந்த நாள் நினைவாக வெளியிடப்பட்ட இந்நூலில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

இளைஞர்கள் எதை வாசிக்க வேண்டும் :  இறையன்பு ஐ.ஏ.எஸ்
புத்தகங்கள் அழிவதில்லை : சா.கந்தசாமி
புத்தகங்களைத் தேடித்தேடி : தஞ்சாவூர் கவிராயர்
வாசிக்கும் சமூகமே வளரும் : த.ஸ்டாலின் குணசேகரன்
திருக்குறளும் தேசப்பிதாவும் : கவிஞர் முத்துலிங்கம்
தமிழ் இலக்கியத் தொடரடைவுகள் : வாசி
தமிழ் இலக்கியக் கலை நூல்கள் : அவினாசி முருகேசன்
உலகறியச் செய்வோம் : ப.சேரலாதன்
கற்றணைத்து ஊறும் அறிவு : பாரதிபாலன்
வாசிக்கும் பழக்கமும் நேசிக்கும் வழக்கமும் : உதயை மு வீரையன்
சுதந்திரப் போராட்டத்தில் நூலகத்தின் பங்கு 
உறுதிமொழி எடுக்கும் தருணம் : இடைமருதூர் கி.மஞ்சுளா
நூலகமும் மாணவரும் : சி.சரவணன்

மேலும் புத்தக உலகம், மின்னணு உலகம், நவீன நூலகம், தேசிய டிஜிட்டல் நூலகம், ATM நூலகம், சிங்கப்பூரில் பேருந்து நிறுத்தத்தில் நூலகம், உலகப் புத்தகத் தினக் கொண்டாட்டத்தின் பின்னணி ஆகிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. ஆங்காங்கே வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற அரிய மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பயனுள்ள இணைய தளங்களின் முகவரிகளும் தரப்பட்டுள்ளன.

கட்டுரைகளின் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் விவாதிக்கும் பொருண்மைகளை அறியமுடிகிறது. வாசிப்பு நிலையில் அகராதி, இலக்கியம், வரலாறு, இந்திய விடுதலை போன்ற  பல்துறைகளோடு தொடர்புடைய வாசிப்பு சார்ந்த இடத்தினையும் முன்னேற்றத்தினையும் இக்கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. பல ஆசிரியர்களின் கட்டுரைகளை ஒரே சமயத்தில் படிக்கும்போது பற்பல புதிய கருத்துகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. தொகுப்பாசிரியர் அரிதின் முயன்று கட்டுரைகளை வாசகர்களின் நலனுக்காகத் தெரிவு செய்து ஒன்றுசேர்த்துத் தந்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. 

புத்தகங்கள் மூலமாக நம்மை புது யுகத்திற்கு அழைத்துச் செல்கின்ற நூலாசிரியரின் முயற்சியைப் பாராட்டுவோம். நமக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், வாசிப்பின் மீது ஆர்வத்தினை உண்டாக்கவும் அவர் எழுதியுள்ள இந்நூலை வாசிப்போம். 
11 மார்ச் 2018இல் நூலாசிரியர் எங்கள் இல்லத்தில் சந்தித்து, பௌத்த ஆய்விற்காகவும் களப்பணிக்காகவும், விக்கிபீடியாவிற்காகவும் பாராட்டியபோது

நூல் : புத்தகமும் புதுயுகமும் 
ஆசிரியர் : முனைவர் ச.அ.சம்பத்குமார் (9443677943)
பதிப்பகம் : வெங்கடேஷ் பதிப்பகம், OA2 சென்னை சாலை, வேதபவனம் தெரு, கும்பகோணம் 612 002
ஆண்டு : 2017
விலை : ரூ.50   

12 May 2018

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதியை (2182-2281) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும்; 
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய்; - படிநின்ற
நீர் ஓத மேனி நெடு மாலே! நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து?  (2182)
பூமியிலே அவதரித்து நின்ற கடல் வண்ணனான பெருமானே! முன்பு ஒரு காலத்தில் இவ்வுலகத்தை மூவடியாலே அளந்துகொள்பவன் போலே மூவடி நிலத்தை யாசித்துப் பெற்றாய்; இப்படிப்பட்ட உனது திருவடிகளை நன்றாகத் தெரிந்து கொண்டு பேசவல்லவர் யாவர் உளர்? (ஒருவருமில்லை).

திரிந்தது வெம் சமத்துத் தேர் கடவி; அன்று
பிரிந்தது சீதையை, மான் பின் போய்; புரிந்ததுவும்
பண் பள்ளி கொள்ள - அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் - தனக்கு. (2196)
கொடிய பாரதப் போரிலே தேரை நடத்திக் கொண்டு அலைந்ததும், இராமனாகத் திருவவதரித்த காலத்து மாயமானின் பின்னே சென்று பிராட்டியைப் பிரிந்து அலைச்சல்பட்டதும், தரையிலே படுத்துக் கொள்ளும்படி ஆசை கொண்டதும் (ஆகிய இச்செயல்கள் யாவும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொண்டிருக்கும் பெருமானுக்கு ஏற்றவையோ?

சுருக்காக வாங்கிச், சுவாவி நின்று, ஐயார்
நெருக்கா முன், நீர் நினைமின் கண்டீர் - திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம்; அறிந்தும், அறியாத
போகத்தால் இல்லை பொருள். (2221)
கோழையானது உடலைச் சுருங்க வலித்து, உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று (உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே, பிராட்டி விளங்கும் திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை நீங்கள் சிந்தியுங்கள். பகவத் விஷயத்தை அறிந்தவர்களாய் இருந்தும் அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல ஐம்பொறிகளால் உண்டாகும் இன்பங்களால் ஒரு பயனுமில்லை. 

கண்டேன் திருமேனி யான் கனவில்; ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி; - கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டு வித்து, பின்னும்,
மறு நோய் செறுவான் வலி. (2248)
அடியேன் கனவு போன்ற சுய அனுபவத்திலே திருமேனியைச் சேவிக்கப் பெற்றேன். அப்போது அவனது திருக்கையிலே ஒளிவீசும் சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்; மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ணிய பாவங்களென்கின்ற இரு கருமங்களையும் தொலைத்துவிட்டுப் பின்னையும் ருசி வாசனைகளையும் அகன்றொழிந்தன; இவற்றைத் தொலைத்து அருளுபவனான எம்பெருமானுடைய மிடுக்கையும் காணப் பெற்றேன். 

தமர் உள்ளம், தஞ்சை, தலை அரங்கம், தண் கால்,
தமர் உள்ளும் தண் பொருப்பு, வேலை, தமர் உள்ளும்
மாமல்லை, கோவல் மதிள் குடந்தை என்பரே,
ஏ வல்ல எந்தைக்கு இடம். (2251)
பக்தர்களுடைய இதயம் - தஞ்சை மாமணிக் கோயில், சிறந்ததான திருவரங்கம், திருத்தண்கால், பக்தர்கள் தியானிக்கின்ற அழகிய திருமலை, திருப்பாற்கடல், பக்தர்கள் சிந்திக்கிற திருக்கடல்மல்லை, திருக்கோவலூர், திருமதில்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்) எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு இருப்பிடமென்பர். 

பின்னல் அரு நரகம் சேராமல், பேதுறுவீர்!
முன்னால் வணங்க முயல்மினோ - பல் நூல்
அளந்தானைக் கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் 
அளந்தான் - அவன் சேவடி. (2272)
உடல் விழுந்த பின்பு கடினமான நரகத்தை அடையாமலிருக்கும்படிக்கு மனம் கலங்கியிருக்கும் மனிதர்களே! பலவகைப்பட்ட சாத்திரங்களினால் நிச்சயிக்கப் படுபவனும் கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம் அளந்த கொண்டவனுமான எம்பெருமானுடைய செவ்விய திருவடிகளை இப்போதே வணங்குமாறு செய்யுங்கள்.

எங்கள் பெருமான், இமையேர் தலைமகன் நீ!
செங்கண் நெடு மால்! திருமார்பா! - பொங்கு
பட மூக்கின் ஆயிரவாய்ப் பாம்பு அணைமேல் சேர்ந்தாய்
குடமூக்கில் கோயிலாக் கொண்டு. (2278)
சிவந்த திருக்கண்களை உடைய பெருமானே! பிராட்டியைத் திருமார்பில் உடையவனே! நித்தியசூரிகளுக்கத் தலைவனான நீ எங்களைப் பாதுகாப்பவனாய்க் கும்பகோணத் திருத்தலத்திலே கோயில் கொள்ளத் திருவுள்ளம் பற்றி, விளங்கும் படங்களையும் மூக்கையும் உடையவனும் ஆயிரம் வாயையுடையவனுமான ஆதிசேனடாகிய படுக்கையின் மீது பள்ளி கொண்டருளினாய்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: முதல் திருவந்தாதி : பொய்கையாழ்வார்

பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி
திரு செந்தில்குமார் அவர்களுடன், 14 மே 2018

தமிழை நேசிக்கும் இதயத்துடன் (தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில் குமார் அவர்களுடன்) இனிய மாலைப்பொழுது. பரந்துபட்ட அவருடைய வாசிப்பும், பேச்சும் வியக்க வைத்தன. வாழ்வியல் களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் உள்ளிட்ட தமிழ்ப்பல்கலைக்கழகப் பல்கலைக்கழக வெளியீடுகளின் முக்கியத்துவம், தமிழ் இலக்கியங்களை தமிழார்வத்தை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லும் பரந்துபட்ட எண்ணம், மாணவர்களை ஊக்குவிக்கின்ற பேச்சு ஆகியவற்றில் தொடங்கி விக்கிபீடியா தொடர்பான என் பதிவுகள், பௌத்தக் களப்பணி மற்றும் ஆய்வு தொடர்பாக நல்லதொரு விவாதம். (நன்றி: திரு கரந்தை ஜெயக்குமார்)


14 மே 2018இல் மேம்படுத்தப்பட்டது

05 May 2018

சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு

திருவாவடுதுறை ஆதீனம் நடத்திவருகின்ற சைவ சித்தாந்த வகுப்பில் அறிமுகமானவரும், முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் தலைமையில் நாங்கள் செல்கின்ற கோயில் உலாவின்போது உடன் பயணிப்பவருமான திரு அ.கு.செல்வராசன், புலவர் வ.குமாரவேலு (அலைபேசி 7373276051) எழுதியுள்ள சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் என்ற நூலினைத் தந்தார். அந்நூலை வாசிக்க அழைக்கிறேன்.

பொன்றும் உலகில் பொன்றாப் பொருள்களாக இருப்பவை இறை, உயிர், தளை (பதி, பசு, பாசம்) ஆகியன. இம்முப்பொருள்களும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாகும். இம்மூன்று பொருள்களும் எவராலும் படைக்கப்படாதவை, தோற்றமில்லாப் பொருள்கள். (ப.xviii) இந்த முப்பொருளின் விளக்கமே திருக்கோயில்களாகும். மூலவர் (பதி), நந்தி (பசு), பலி பீடம் (பாசம்) என்னும் செய்தி வழிபாட்டின் உண்மையை உணர்த்துகிறது. (ப.ix)   நூலாசிரியர் தன் பார்வையில் சித்தாந்தத்தை அணுகி முப்பொருள் விளக்கத்தினை பொது இயல், பதி இயல், பசு இயல், பாச இயல் என்ற நான்கு தலைப்புகளில் மிகவும் சிறப்பான முறையில் தந்துள்ளார். 
பொது இயலில் (பக்.1-51) சமயம், சிவனும் செந்தமிழும், செந்நெறி, சைவ நூல்கள், சைவ சமயத் தொன்மை, முப்பொருள், மெய்கண்ட சாத்திரங்கள் உள்ளிட்ட பல உள் தலைப்புகளில் விவாதிக்கிறார்.  

பதி இயலில் (பக்.52-135) பதிக்கொள்கை, குணகுணி பாவம், பதி உண்மை, பதியின் பொது இயல்பு, சிறப்பு இயல்பு, இறைவன் உண்மையும் தன்மையும், சொரூப இலக்கணம், தடத்த இலக்கணம், அருட்சத்தி இலக்கணம், சிவனும் அருளும் ஒன்றே, இறைவன் எண்குணத்தான், ஒன்றாதல், வேறாதல், உடனாதல், அவற்றுக்கான காரணங்கள், பலன்கள், இறை வடிவ நிலைகள், இறை வடிவம் என்பன போன்ற தலைப்புகளில் விவாதிக்கிறார்.

பசு இயலில் (பக்.136-194) உயிர்க்கொள்கை, உயிர்த் தோற்றுமுறை, கடவுளின் வடிவம், உயிர் உணர்த்த உணர்வது, உயிர் பெறும் மூவகை நிலை (கேவல அவத்தை, சகலாவத்தை, சுத்த அவத்தை), இவற்றில் உயிரின் சிறப்பு இயல்புகள், இறைவன் உயிர்களுக்கு அருளும் தன்மை, உயிரின் குணங்கள் போன்ற பல தலைப்புகளில் ஆராய்கிறார்.

பாச இயலில் (பக்.195-278) பாச இலக்கணம், பாசத்தின் காரணிகள், மும்மலங்களின் இயல்பு, குணம் உள்ளிட்ட பல தலைப்புகள் எடுத்துரைக்கிறார்.

தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த கருத்துகள், சைவ சித்தாந்தம் தொடர்பாக முன்னர் வெளியான நூல்களிலிருந்து மேற்கோள்கள், வெளிநாட்டு மற்றும் இந்திய அறிஞர்களின் கருத்துகள் ஆகியவற்றை உரிய இடங்களில் சிறப்பான முறையில் அமைத்துத் தந்துள்ளார். கருத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் மேற்கோள்களைச் சிறப்பாக கையாண்டுள்ளார். சொல்லவந்த கருத்தினை, எளிமையாக அதே சமயத்தில் நுட்பமாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலும் மனதில் பதியும் வகையிலும் தந்துள்ளார். சைவம் மற்றும் சிவனின் பெருமை தொடங்கி இக்காலத்திற்கு சைவ சித்தாந்தம் பொருந்தி வருகின்ற சூழல் வரை பரந்துபட்டு  எழுதியுள்ளார்.  

சிவசிவ, உழவாரம், நால்வர் நெறி, மணிநாதம் உள்ளிட்ட பல ஆன்மீக இதழ்களில் கட்டுரைகளையும், பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ள இவருடைய இந்நூல் சைவ சித்தாந்தத்தினை எளிதாக நமக்கு எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது. ஆசிரியரின் முயற்சியைப் பாராட்டுவோம். இந்நூலை வாசிப்போம்.



27 பிப்ரவரி 2018இல் திரு அ.கு.செல்வராஜ் உடன்
நூல் : சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் 
ஆசிரியர் : புலவர் வ.குமாரவேலு
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்.1447, 7 (ப.எண்.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017 (தொலைபேசி 24342926, 24346082, மின்னஞ்சல் manimekalaiprasuram@gmail.com)
ஆண்டு : 2016
விலை : ரூ.200