07 July 2018

டாலர் நகரம் : ஜோதிஜி

அண்மையில் நான் படித்து நிறைவு செய்த நூல் நண்பர் ஜோதிஜியின் டாலர் நகரமாகும். பல மாதங்களுக்கு முன்னரே அவர் அனுப்பியிருந்த போதிலும் சில தவிர்க்க இயலாத காரணங்களால் அதனைப் படித்து நிறைவு செய்ய சற்றுத் தாமதமானது. படித்து முடிந்தபின்னர்தான் ஒரு நல்ல நூலை மிகவும் தாமதமாக, நாள் கடந்து படித்தோமே என்று எண்ணத் தோன்றியது. அவர் எழுதிவருகின்ற தேவியர் இல்லம் என்ற வலைப்பூவின் மூலமாக அறிமுகமானவர் அவர். பரந்த மனம் கொண்டவர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஈடுபாட்டாளர், சிறந்த வாசிப்பாளர், மனிதாபிமானி, முன்னுதாரண உழைப்பாளி, குடும்பத்தையும் நண்பர்களையும் நேசிப்பவர் என்றெல்லாம் அவரைப் பற்றிக் கூறலாம். இந்நூலை அவர் மிகுந்த அசாத்திய துணிச்சலோடு எழுதியிருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். பணியில் ஆரம்ப காலத்தில் இவர் எதிர்கொண்ட பல நிகழ்வுகளை நான் என் பணிக்காலத்தில் எதிர்கொண்டதால் அவருடைய கோபத்தையும், ஆதங்கத்தையும் என்னால் நன்கு உணர முடிந்தது. நேர்மையாக இருந்து அவர் எதிர்கொண்ட சிரமங்களை உணர்வுபூர்வமாக எழுதியுள்ள விதம் நம் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
நூற்பாலைகளின் நிலை, முதலாளிகளின் ஆதிக்க உணர்வு, வெளிநாட்டு நிறுவனங்களின் அதீத நுழைவு, அரசியல்வாதிகளின் மெத்தனம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பாராமுகம், சுற்றுச்சூழல் பாதிப்பு என்பன போன்றவற்றை உள்ளது உள்ளபடி எழுதியுள்ளார். இந்நூலைப் படித்தபின் திருப்பூருக்குப் போனால் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் ஒரு புறமும், திருப்பூர் பக்கம் போகவே கூடாது என்ற எண்ணமும் ஒருசேர ஏற்படும். 1992இல் திருப்பூருக்குள் அடியெடுத்து வைத்த அவர் தான் எதிர்கொண்ட நிகழ்வுகளை இந்நூலில்  பகிர்ந்துள்ளார். "கையில் நயாபைசா இல்லாமல் அசாத்தியமான நம்பிக்கை என்னை நகர்த்திக் கொண்டிருந்தது." (ப.63)  என்று கூறும் ஆசிரியர் திருப்பூருக்கு பிழைப்புத் தேடி வருகின்ற சாமான்யர்களின் அனுபவத்தை உள்ளது உள்ளபடி ஒளிவுமறைவின்றி, பதிந்துள்ளார். ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு பத்தியும் உணர்வுகளின் வெளிப்பாடாக உள்ள நிலையில் எதை மேற்கோளாகக் காட்டுவது என்ற யோசனை எழுந்தது. அனைத்துமே சிறப்பாக இருந்தாலும் சிலவற்றைப் பகிர்கிறேன்.  
தொழிலாளியின் நிலை
நாம் மற்றவர்களுக்காக உழைக்கவேண்டும்.  நாம் உழைக்கும் உழைப்புக்குரிய அங்கீகாரமும் கிடைக்காது.(ப.98) ...ஒவ்வொரு நாளும் உயிர் போய் திரும்பி வரும் வாழ்க்கையைத்தான் ஏற்றுமதி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்.  நாம் பார்க்கும் வேலைக்கு எந்த உத்தரவாதமும் இருக்காது. சிங்கம், புலிகளுடன் வாழும் மற்ற மிருகங்களின் வாழ்க்கை போலத்தான் வாழ வேண்டும். (ப.99)
ஒரே இடத்தில் 20 இயந்திரங்கள் நெருக்கியடித்து மாட்டப்பட்டிருக்கும் பகுதிகளுக்குள் முறையான, மின் பாதுகாப்பு சாதனங்களோ, அவசர கால வழிகளோ இல்லை.  (ப156)

இடையிலுள்ளோர்
திருப்பூர் நிறுவனங்களில் நல்ல தொழிலாளிகள் இருப்பார்கள். ஆனால், அவர்களை மேய்க்கும் மேய்ப்பன் சுத்த சுரண்டலாகத்தான் இருப்பான். வேலை நடந்தால்போதும் என்று நிர்வாகமும் கண்டும் காணாமல் இருக்கும். (ப.70)

முதலாளியின் நிலை
தொழில் தெரிந்த முதலாளியிடம் கருணை இரக்காது. கண்ணியத்துடன் தொழிலை நடத்திக்கொண்டிருப்பவர்களிடம் நல்ல இறக்குமதியாளர்கள் இருக்க மாட்டார்கள். (ப.993)  

ஆட்சியாளர்கள்
உழைப்பாளர்களின் உலகமான திருப்பூர் இன்று ஒப்பாரி வைத்தாலும் கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களை மனதில் திட்டிக்கொண்டிருக்கிறது. (ப.241)
நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக என்று சொல்லி புதிதாக எந்த திட்டங்களையும் இங்கு கொண்டுவரத் தேவையில்லை. இந்தியாவின் உள்ளே இருக்கும் அடிப்படை வளத்தை இவர்களின் சுய லாபத்துக்காக ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே போதுமானது. (ப.150)

அயல்நாட்டுத் தொழில்நுட்பங்களை உள்ளே கொண்டு வர விரும்பிய நம் அரசாங்கம், உள்ளூர் தொழிலை வளர்க்க விரும்பவில்லை. (ப.229)

எப்படியும் பிழைக்கலாம்
பல கோடி ரூபாய் முதலீடு போட்டு தொழில் செய்பவர்கள் முதல் சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு தொழில் செய்பவர்கள் வரைக்கும் அத்தனை பேர்களுக்கும் காமதேனு போல, அவரவர் உழைப்புக்கேற்றவாறு வசதிகளை இந்த பனியன் ஏற்றுமதித் தொழில் உருவாக்கித் தருகின்றது. (ப.236)

உலகப்பிரச்னை உள்ளூர் பாதிப்பு
உலகில் எந்த மூலையில் என்ன பிரச்சனை நடந்தாலும், அது உடனடியாக ஏற்றுமதி தொழிலில் பிரதிபலிக்கும். நிலையில்லாத டாலரின் மதிப்பு, வங்கிகளின் கெடுபிடித்தனம், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம் பூரண ஆயுசுதான்... (ப.236)
அந்நியத் தொழில்நுட்பம் திருப்பூருக்குத் தேவை. அந்நிய நிர்வாகத் திறன் தேவை. ஆனால், அந்நிய முதலீடு தவைதானா?  (ப.230)

தடையற்ற பொருளாதாரம்
தடையற்ற பொருளாதாரக் கொள்கை யாருக்குப் பயன்பட்டதோ இல்லையோ, திருப்பூர் தொழில் துறையினருக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல் இருந்தது. (ப.228)

இயற்கைச்சீரழிவு

பவானி ஆற்றில் இவர்கள் போட்டுள்ள ஆழ் குழாய் கிணறு பூமியிலி உள்ள நெபுலா தீக்கோளம் வரைக்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்தது. பவானி ஆற்றை நம்பி, விவசாயம் செய்தவர்கள் பாவமாகிப் போனார்கள். (ப.199)

நம் குறைகள்
நம்மிடமும் பிரச்னைகள் இருக்கின்றன. ஆய்வு மனப்பான்மை என்பதே இல்லால் போய்விட்டது. எநதவொரு தொழிலையும் குடும்பத்தொழிலாகவும், குறுந்தொழிலாகவும் மட்டுமே பார்க்கப் பழகியிருக்கிறோம். பணியில் இருப்பவர்களை அடிமைகளைப் போல நடத்துகிறோம். புதிய விஷயங்களை ஏற்பதில்லை. தொழில் நுட்ப வளர்ச்சி வெள்ளமாக மாறி நம்மை அடித்துக்கொண்டு செல்லும்போது கடைசி நேரத்தில் விழித்துக்கொள்கிறோம். அதற்குள் நம் தொழிலை இழந்துவிடுகிறோம். (பக்.229-30)


சாதாரண நிலையில் பணியில் நுழைந்து அசாத்தியத் திறமையின் காரணமாக முன்னுக்கு வந்த நூலாசிரியரின் மன உறுதியும், தைரியமும் போற்றத்தக்கது.  திருப்பூருக்கு பிழைப்பு தேடி செல்பவர்களுக்கு இந்நூல் ஒரு பாடமாக அமைவதோடு, பல பாடங்களை அவர்களுக்கு கற்பிக்கும் என்பதில் ஐயமில்லை.  இத்துறையில் உள்ள நெழிவு சுழிவுகளை அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் துணை புரியும். தொழிலாளியாக இருந்து முதலாளியாக வருபவர்களுக்குத்தான் அனைத்து சிரமங்களும் உண்மையாகப் புரியும் என்பதை நூலாசிரியரின் எழுத்துகள் நமக்கு உணர்த்துகின்றன. நூலாசிரியரின் துணிச்சலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து, நூலை வாசிக்க வாருங்கள்.

நூல் : டாலர் நகரம்
ஆசிரியர் : ஜோதிஜி
பதிப்பகம் : 4TamilMedia.com
நூல் கிடைக்குமிடம் : Maheswari Book Stall, Tirupur தொலைபேசி : 944-200-4254
ஆண்டு : 2016
விலை : ரூ.200

7 ஜலை 2018அன்று மேம்படுத்தப்பட்டது.   

9 comments:

  1. முனைவர் அவர்களின் ரத்தின வரிகள் நூலை படிக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விடுகிறது.

    நண்பர் திரு.ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம். நூலைப படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகிறது

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம் ஐயா.

    ReplyDelete
  5. அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    ReplyDelete
  6. அருமை . நன்றி

    ReplyDelete
  7. நல்லதொரு பகிர்வு. தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன் - படிக்க வேண்டும்.

    ReplyDelete
  8. தங்களின் விரிவான விமர்சனமும் அருமை ஐயா...

    ReplyDelete
  9. படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் புத்தகம். கண்டிப்பாக படித்தே தீர வேண்டும் என்னும் எண்ணத்தை உங்கள் விமர்சனம் உருவாக்கி விட்டது. நன்றி.

    ReplyDelete