23 February 2019

இன்ஸ்டாகிராம் ஒரு நோய் : ரகு ராய்

55 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவைப் பற்றிய பல பதிவுகளை புகைப்படம் எடுத்துவருகின்ற புகைப்படக் கலைஞர் ரகு ராய், அன்னை தெரசா மற்றும் சத்தியஜித் ரே தொடங்கி செஃல்பி மற்றும் இன்ஸ்டாகிராம் வரை விவாதிக்கிறார். டெலிகிராப் இதழில் அபிஜித் மித்ராவிற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து சிலவற்றைக் காண்போம்.
முன்னாள் பிரதமர்வாஜ்பாயியின் பாகிஸ்தான் பயணத்தின்போது
காலம் மாற மாற நீங்கள் புகைப்படம் உத்தியில் மாறிவிட்டீர்கள் போலுள்ளது…
நான் தொழில்நுட்பத்தை மாற்றிக்கொண்டேன், தொடர்பு சாதனம் ஒன்றே. ஆரம்ப காலத்தில் கருப்பு வெள்ளையில் புகைப்படம் எடுத்தேன், ஏனென்றால் 60களிலும், 70களிலும் கருப்பு வெள்ளையே இருந்தது. பிறகு வண்ண பிலிம் வர ஆரம்பித்தது. அப்போது நாங்கள் இரு கேமராக்களை எடுத்துச்செல்ல ஆரம்பித்தோம். இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இரு கேமராக்களைக் கொண்ட செல்லவேண்டிய அவசியம் இல்லை.  ஒரு கேமராவில் புகைப்படம் எடுக்கின்றீர்கள், அது வண்ணத்தில் சரியில்லை என்றால் கருப்பு வெள்ளைக்கு மாற்றிவிடுகின்றீர்கள். இங்கு டிஜிட்டல் தொழில்நும்பம் உதவுகிறது. கேமராவை ஆட்டோ ஃபோகஸ் மற்றும் ஆட்டோ எக்ஸ்போசர் நிலையில் வைத்து தெளிவான புகைப்படத்தை எடுக்க முடிகிறது. அதைப் பார்த்துவிட்டு ‘மிகவும் அருமை’ என்கின்றீர்கள். அங்கு ஆத்மா தொலைந்துவிடுவதை நீங்கள் உணர்வதில்லை.

தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற மொபைல் தொலைபேசி கேமராவை கற்பனாரீதியாக புகைப்படம் எடுக்க எவ்வாறு பயன்படுத்தலாம்?
புகைப்படம் எடுப்பதற்காகவென்றே செல்வது என்பது ஒன்று. உணர்வுகளோடு மேற்கொள்வது என்பது மற்றொன்று. உங்கள் மனதைத் தொடும் சூழல் அமையும்போது நீங்கள் மகிழ்ச்சியடைகின்றீர்கள். அந்தப் பதிவும் சிறப்பாக அமைகிறது. வலுக்கட்டாயமாக புகைப்படமெடுக்கும்போது உங்களுக்கு சலிப்பு தட்டிவிட வாய்ப்புள்ளது.

மொபைல் போன் கேமராவில் புகைப்படம் எடுத்துவருவோருக்கு நீங்கள் ஏதேனும் உத்திகளைக் கூறமுடியுமா?
உங்களால் ஒரு நல்ல கேமரா வாங்கும் வசதி இருப்பின் நல்ல கேமராவினை வாங்குங்கள். தரம் என்பது சரியில்லாத நிலையில்….அவர்களால் எப்படி புகைப்படம் எடுக்க முடியும்?

இங்கு தரம் என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்?
படத்தின் தரம், பிக்சல்ஸ் போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்ற புகைப்படங்களுக்கோ பெரிய அளவிலான புகைப்படங்களுக்கோ சிறப்பானதாகப் பொருந்தியிராது. உண்மையிலேயே சிறந்த புகைப்படக்கலைஞராக ஆக விரும்பினால் நீங்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க முடியாது. சில மொபைல் போன்கள் தரமான கேமராக்களைக் கொண்டுள்ளன, ஆனால் எப்படி? இப்போதெல்லாம் மொபைல் போன்களைவிட கேமராக்களின் விலை குறைவாக உள்ளதே.

மொபைல் போனைக் கையாள்வது எளிது என்ற நிலையில்கூட அது அமையலாம்.
தவம் முக்கியமா? வசதி முக்கியமா? தியானம் செய்கின்ற தபஸ்வியாக நீங்கள் இருக்க விரும்புகின்றீர்களா? அல்லது அவ்வப்போது புகைப்படங்களை எடுத்த இன்ஸ்டாகிராமில் பதிவிட விரும்புகின்றீர்களா? இன்ஸ்டாகிராம் என்பது ஒரு நோய்.

நீங்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளீர்களே?
பெரும்பாலான மக்கள் அதனைப் பயன்படுத்துகின்ற வழிமுறை..சற்றொப்ப நோயைப் போலவே. சில சமயங்களில் என் மகள் நான் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறாள். நான் அதில் தலையிடுவதில்லை. அதனைப் பார்ப்பதுகூட இல்லை.

செல்ஃபியைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
ஓ…இது ஒரு நோய். அனைவருமே செல்ஃபி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமய நிகழ்வுகள், மங்களகரமான நிகழ்வுகள், அமங்கல நிகழ்வுகள் என்று முக்கியமான இடங்களில்கூட செல்ஃபி எடுக்க ஆரம்பித்துவிடுகின்றார்கள், சுய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்காட்டுவதற்காக. போன்களில் உள்ள லென்ஸ்கள் அகல அளவுள்ளவையாகும். அவை உங்களின் முகத்தைத் திரித்துக்காட்டிவிடும். உங்கள் கற்பனாசக்தியைப் பயன்படுத்தாவிட்டாலொழிய அது நன்றாக அமையாது.

வாங்கக்கூடிய விலையில் டிஎஸ்எல்ஆர் கேமராக்கள் இப்போது விலைக்குக் கிடைக்கின்றன. அதன் காரணமாக மக்கள் எடுக்கும் புகைப்படங்களின் தரத்தில் ஏதேனும் மாற்றத்தைக் காணமுடிகிறதா?
அந்தப் படங்களின் தொழில்நுட்பத் தரம் மிகவும் சிறப்பானது என்று கூற விரும்புகிறேன்.

அது சரி, ரசனை என்ற நோக்கில் பார்க்கும்போது?
மக்கள் அதில் சோதனை முயற்சியாக இறங்க ஆரம்பித்துவிட்டனர். ஏனென்றால் பிலிமைவிட, டிஜிட்டல் தொழில்நுட்பம் அவர்களுக்கு அதிக சுதந்திரத்தைத் தருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கடலுக்கடியில் புகைப்படம் எடுக்கலாம், கும்மிருட்டில் தெருவின் விளக்குக் கம்பத்தின் அடியிலிருந்து புகைப்படம் எடுக்கலாம். அங்கு வெளிச்சம் என்பது பிரச்னையில்லை. உங்கள் வசதிக்குத் தக்கபடி வண்ணமேற்றிக்கொள்ளலாம். டிஜிட்டல் முறையில் பல உத்திகளை மேற்கொள்ளலாம். கணிப்பொறியில் செய்யும்போது மேலும் சில நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களில் மனதில் நின்றது என்று எதைக் கூறுவீர்கள்?
நான் எடுக்கப்போகின்ற அடுத்த புகைப்படமே. நான் உயிரற்று இருந்தாலோ, இறந்த காலத்தில் இருந்தாலோ என்னை இறந்தவனாகவே கருத முடியும். படைப்புத்திறன் என்றுமே பழமையானவற்றிற்கு பின்னோக்கி இழுத்துச்செல்லாது.  இன்றும்கூட வாழ்க்கையிலும், இயற்கையிலும் பல ஆச்சர்யங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. அப்படி இல்லாவிடில் உங்களால் எழுதமுடியாது, புகைப்படம் எடுக்க முடியாது, சிலர் இசையை உருவாக்க முடியாது. ஏனென்றால் இவையனைத்தும் செய்யப்பட்டுவிட்டன. இருந்தாலும் இதற்கு முடிவில்லை. முடிவற்ற ஆதாரத்தோடு நீங்கள் இயல்பாக இணைந்துவிடுகின்றீர்கள்.

இப்போது என்ன புகைப்படமெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?
வாழ்வின் பொருள் கொண்ட அனைத்தையும் நான் படம் பிடிக்கிறேன். படமெடுக்கப்பட்டபின் அது இறந்துவிடுகிறது. (சிரிக்கிறார்) ஆகாயம், குன்றுகள், நிர்வாணம், நிலப்பரப்பு என்று அனைத்தையும் படமெடுக்கிறேன்.

பல ஆண்டுகளாக நீங்கள் நிலப்பரப்பு, நகரங்கள், இயற்கை, மக்கள் என்று பலநிலைகளில் புகைப்படம் எடுத்துள்ளீர்கள். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இன்னும் நீங்கள் செய்ய விரும்புகின்றீர்களா..அதாவது நீங்கள் விடுபட்டது ஏதாவது உள்ளதா?
என்றுமே மாற்றம் கொண்டது வாழ்க்கை. வாழ்க்கையும் இயற்கையும் மாறிவருவதோடு சவாலாக உள்ளனவாகும். மாற்றம் தவிர்க்கமுடியாதது. சவால் தொடர்ந்து வருவது. இவ்வகையான சவால்களுக்கு முடிவேயில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பல இதழ்களில் பணியாற்றியுள்ளீர்கள். அக்காலத்தில் உங்களின் அனுபவம் என்ன?
தலையங்கத் தேவைக்கான கட்டுப்பாட்டிற்குள் நான் இருந்ததில்லை. அவர்கள் கூறும் சூழலுக்கேற்ப சமூக மற்றும் அரசியல் நிலைகளைப் புரிந்துகொள்வேன். யாருக்காகவும் எவ்வித திட்டத்தினையும் நான் மேற்கொண்டதில்லை. அதனால்தான் என் பணியில் உங்களால் உண்மைத்தன்மையையும், ஒரு புதுவிதமான கண்டுபிடிப்பு நிலையையும் காணமுடியும். எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் நான் ஆட்படாதததற்குக் காரணம் புகைப்படக்கலையின் நோக்கமானது ஒரு பொருளின் உள்ளார்ந்த உண்மையை என்பதே. ஆகையால் தொழிலுக்காகச் செய்கின்றேனோ, எனக்காகச் செய்கின்றேனோ செய்துகொண்டேயிருப்பேன்.
அன்னை தெரசாவை முதன்முதலாகச் சந்தித்தபோது அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டேயிருந்தேன். எத்தனை முறை நீங்கள் புகைப்படமெடுப்பீர்கள் என்று அவர் கேட்பதுபோலிருந்தது. “அன்னையே நீங்கள் எத்தனை முறை பிரார்த்தனை செய்துகொண்டேயிருப்பீர்கள்? பிரார்த்தனை செய்வதற்கான மற்றும் வாழ்க்கையைக் கண்டுபிடிப்பதற்கான வழி இது” என்றேன். அவ்வாறாயின் சரி என்றார் அன்னை.

காலத்தால் பின்னோக்கிச் செல்வதாக வைத்துக்கொள்வோம். அச்சூழலில் நீங்கள் யாரை புகைப்படம் எடுக்க விரும்புவீர்கள்?
பண்டிதர் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, ரவீந்திரநாத தாகூர் ஆகியோரைப் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன்.

முதன் முதலாக நீங்கள் பயன்படுத்திய கேமராவைப் பற்றி நினைவிருக்கிறதா?
நன்றாக நினைவிருக்கிறது. என் சகோதரர் எனக்குத் தந்த அக்பா சூப்பர் சில்லட். லென்ஸ் பொருத்தப்பட்ட சிறிய கேமரா. அவர் ஒரு புகைப்படக் கலைஞர். அவரிடம், “அனைவரும் புகைப்படம் எடுக்கின்றார்கள். எனக்கொரு கேமரா தாருங்கள், நானும் புகைப்படம் எடுக்கிறேன்” என்றேன். அவர் அதில் பிலிம் சுருளை வைத்து, அதனை எப்படிக் கையாளுவது என்று கூறினார். கிராமத்துக்குச் சென்றேன். கழுதைக்குட்டி ஒன்றை புகைப்படமெடுத்தேன். பிலிமை டெவலப் செய்தபோது என் சகோதரர் அதைப் பார்த்துவிட்டுக் கூறினார்: “ஆகா.. மிக அருமையான படம்.” நான் கேட்டேன்: “உண்மையாகவா?” அப்படத்தினை அவர் லண்டனிலிருந்து வெளிவருகின்ற தி டைம்ஸ் இதழுக்கு அனுப்பினார். வார இறுதியில் அவ்விதழ் அரை பக்கத்திற்கு புகைப்படம் வெளியிடுவது வழக்கம். அவற்றில் சில வேடிக்கையானதாக இருக்கும், சில புதியனவாக இருக்கும், சில குறிப்பிடத்தக்கனவாக இருக்கும். நான் எடுத்த முதல் புகைப்படம் தி டைம்ஸ் இதழில் அரைப்பக்கத்தில் என்னுடைய பெயரோடு 1965வாக்கில்  வெளியானது.
அனைவரும் என்னைப் பாராட்ட ஆரம்பித்தனர்: “ரகு, பெரிய சாதனை.” பெரிய சாதனை என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அப்போது நான் தில்லியில் இருந்தேன். புகைப்படக்கலைஞராகும் எண்ணம் எனக்கு எழவில்லை. அனைவரும் என் சகோதரிடம் இதனைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், நான் என் சகோதரரிடம் கேட்டேன், ‘எனக்கு ஒரு நல்ல கேமரா தாருங்கள்’. அவர் எனக்கு ஒரு நிக்கான் கேமரா வாங்கித்தந்தார். நிக்கான் எப் கேமராவில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன்.

கொல்கத்தாவில் இப்போது என்ன வகையான புகைப்படமெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?
55 ஆண்டுகளுக்கு மேலாக நான் புகைப்படமெடுத்து வருகிறேன். இவ்விடத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு நான் நன்றி கூறவிரும்புகிறேன். நான் எடுத்த புகைப்படங்களில் முக்கியமானவற்றை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாதுகாத்துவைக்க ஆரம்பித்துள்ளேன். என் அடுத்த நூல் பூஜையைப் பற்றியதாகும்.

அன்னையைத் தவிர, நீங்கள் எடுத்த மனதில் நிற்பவரின் புகைப்படம் யாருடையது?
டாடு. ஓ. டாடு என்றால் புரியவில்லையா? (சிரிக்கிறார்) சத்யஜித் ரே. அவரை நாங்கள் மணிக்டா என்றே அழைப்போம். மக்கள் அவரை டாடா என்கிறார்கள். அவர் டாடா அல்ல, டாடு. பல டாடாக்கள் இருக்கலாம். ஒரு டாடுதான் இருக்கமுடியும், அதாவது மாமனிதர். அவர் ஒரு அதிசயிக்கத்தக்க மனிதர். மக்கள் பல திரைப்பட இயக்குநர்களைப் பற்றிப் பேசலாம். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு படம் எடுத்தால்கூட டாடு எடுக்கின்ற திரைப்படத்திற்கு நிகராகாது. அவருடைய உணர்திறனும், நுண்ணறிவும் வியக்கத்தக்கன.  

நன்றி : டெலிகிராப்
அவருடைய பேட்டியின் சில பகுதிகளே இதில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான மூலப்பேட்டியை பின்வரும் இணைப்பில் காணலாம்.
Instagram is a disease: Photographer Raghu Rai, Abhijit Mitra, Telegraph, 17 February 2019


புகைப்படக்கலைஞர் ரகு ராயைப் பற்றிய முந்தைய பதிவு:
இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு 

16 February 2019

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவிருத்தம் : நம்மாழ்வார்

நம்மாழ்வார் அருளிய திருவிருத்தத்தினை (2478-2577) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! இமையோர் தலைவா!
மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே. (2478)
எல்லா உயிர்களையும் பாதுகாப்பதற்காகப் பலவகைப்பட்ட பிறப்புகளையும் உடையவனாய் திரு அவதரித்தவனே! தேவர்களுக்குத் தலைவனே! பொய்ம்மை நிலைபெற்ற அறிவுடம, தீய நடத்தையும் அசுத்தங்களோடு கூடிய உடலும் (ஆகிய இவற்றோடு) இவ்வண்ணமான இயல்பை (பிறப்புத் துன்பத்தை) இனிமேல் நாங்கள் அடையாதபடி உனது அடியவனாகிய நான் சொல்லும் உண்மையான விண்ணப்பத்தை நின்று நீ கேட்டருள வேண்டும்.

மேகங்களே! உரையீர் - திருமால் திருமேனி ஒக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்? உயிர் அளிப்பான்
மேகங்கள் எல்லாம் திரிந்து, நல் நீர்கள் சுமந்து ;  நும் தம்
ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள் பெற்றதே? (2509)
மேகங்களே! திருமகள் கணவனான பெருமானது திருமேனியை ஒக்கும் படியான உபாயங்களை நீங்கள் எவ்விதத்தில் அடைந்தீர்கள்? அது பற்றிச் சொல்லுங்கள். உலகத்து உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நீங்கள் நல்ல தண்ணீரைச் சுமக்கிறீர்கள். பெரிய வானங்களிலெல்லாம் திரிந்து உங்களுடய உடம்பு நோகும்படி வருத்தித் தவம் செய்தீர்களோ? ஆதனால் அப்பெருமானது அருளை நீங்கள் பெற்றீர்களோ?

மெல்லியல் ஆக்கைக் கிருமி, குருவில் மிளிர் தந்து ஆங்கே
செல்லிய செல்கைத்து :  உலகை என் காணும்? என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமால் -  அவன் கவியாது கற்றேன்;
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ உண்டு, பண்டு பண்டே. (2525)
மென்மையான உடலை உடைய புழுவானது புண்ணிலே வெளிப்பட்டு, அவ்விடத்திலேயே நடமாடும்படியான இயல்பை உடையது. அது உலக இயல்பை, நடத்தையை எங்ஙனம் அறியும்? (அறியமாட்டாது. அதுபோல) என்னைக் கொண்டு பெருமானான தன்னைப் பாடுவித்த சூழ்ச்சியை உடைய திருமகள் கேள்வனுடைய புகழுரையை நான் யாதென்று அறிவேன்? பல்லியின் சொல்லையும் (பின் நிகழ்ச்சியை முன்குறிக்கும்) சொல்லாகக் கொள்வது மிகப் பழைய காலம் தொடங்கி நடந்து வருவதன்றோ?

இடம் போய் விரிந்து இவ் உலகு அளந்தான் எழில் ஆர் தண் துழாய்,
வடம் போது இனையும் மட நெஞ்சமே! நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே - வியன் தாமரையின்
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே. (2553)

மடப்பக் குணமுடைய நெஞ்சமே!  எம் பெருமான் எல்லா இடங்களிலும் போய் வளர்ந்து இவ்வுலகத்தை அளந்துகொண்டவனுடைய குளிர்ந்த திருத்துழாய் மாலைக்கு நீ வருந்துகிறாய். தாமரை குவியவும் மென்மையான ஆம்பல் மலரவும் வரும் வெண்மையான சந்திரனை நம் வெளுத்த வளைகளைக் கழலச் செய்வதை நோக்கமாக உடையவன். அதற்காகவே தன் ஒளியை விஷம்போலப் பரவச் செய்கிறான். இது ஒரு ஆச்சரியமே!

ஈனச் சொல் ஆயினும் ஆக, எறி திரை வையம் முற்றும்
ஏனத்து உருவாய் இடந்த பிரான், இருங் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும்
ஞானப் பிரானை அல்லால், இல்லை நான் கண்ட நல்லதுவே. (2576)

நான் வெளியிடுகிற பேச்சு சிலரால் பழிக்கப்படும் சொல்லாக இருந்தாலும் இருக்கட்டும். என் இதயத்தைக் கவர்ந்த பெருமானாகிய ஞானப்பிரான் பிரளய வெள்ளத்தில் ஆழ்ந்த பூமியை கோட்டால் குத்தி எடுத்து வந்தவன்...அவனே என் நாயகனாவான். கற்பக மரங்கள் பொருந்திய சொர்க்கத்தில் பொருந்திய தேவர்களுக்குத் தலைவன் அவனே. மேலும் மனிதர்களுக்கும் நரகர் முதலியவர்களுக்கும் ஞானத்தைக் கொடுக்கும சுவாமி அவனே ஆவான். அந்த எம்பெருமானே அன்றி நானறிந்த நல்ல பொருள் வேறு இல்லை.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: திருமழிசையாழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி

02 February 2019

கோடியக்கரை : "அழகான பிரதேசம்"

"கோடிக்கரையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. அந்தப் பிரதேசம் மிக அழகாயிருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இச்சந்தர்ப்பத்தில் அதையும் பார்த்துவிடலாம்" என்று நந்தினி ஆசைப்பட்டதைப் போல கோடியக்கரை மீது அனைவருக்கும் ஆசை வருவது இயல்பே. அண்மையில் கோடியக்கரைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கோடியக்கரையைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையைக் காண்பதற்கு முன்பாக கோடியக்கரை பற்றி கல்கி பொன்னியின் செல்வனில் கூறுவதைப் பார்ப்போம்.  பின் கோடியக்கரை செல்வோம், வாருங்கள்.

“கோடிக்கரையிலிருந்து காவேரிப்பூம்பட்டினம் வரையில் சோழ நாட்டுக் கடற்கரையோரங்களில் வாயு பகவானின் லீலை செய்த வேலைகளை நன்கு பார்க்கும்படியிருந்தது. எத்தனையோ மரங்கள் வேரோடு பெயர்ந்தும், கிளைகள் முறிந்தும் கிடந்தன. வீடுகளின் கூரைகளைச் சுழிக்காற்று அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டு போய்த் தூர தூரங்களில் தூள் தூளாக்கி எறிந்து விட்டிருந்தது. குடிசைகள் குட்டிச் சுவர்களாயிருந்தன. கோடிக்கரைப் பகுதியில் எங்கே பார்த்தாலும் வெள்ளக் காடாயிருந்தது. கடல் பொங்கி வந்து பூமிக்குள் புகுந்து விட்டதோ என்று தோன்றியது. ஆனால் பூமிக்கும் கடலுக்கும் மத்தியில் இருந்த வெண்மணல் பிரதேசம் அந்தக் கொள்கையைப் பொய்ப்படுத்தியது. அந்த வெண்மணல் பிரதேசத்தில் ஆங்காங்குப் புதைசேறு இருந்த இடங்களில் மட்டும் இப்போது அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படிப்பட்ட இடங்களில் இப்போது மனிதனோ மிருகமோ இறங்கி விட்டால், உயிரோடு சமாதிதான்! யானைகளைக் கூட அப்புதை சேற்றுக் குழிகள் இப்போது விழுங்கி ஏப்பம் விட்டு விடும்!... சுழிக்காற்று அடித்த இரண்டு நாளைக்குப் பிறகு கோடிக்கரைக்குப் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய பரிவாரங்களும் வந்து சேர்ந்தார்கள்.”
 






 
கோடியக்கரை வன உயிரனச் சரணாலயம், (Point Calimere Wildlife and Bird Sanctuary) நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி,   நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள சரணாலயமாகும்.

17.26 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்தச் சரணாலயத்தில் பல வகையான 100க்கும் மேற்பட்ட அரிய பறவை இனங்களும், கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு போன்ற விலங்குகளும் காணப்படுகின்றன. அண்டார்டிக்கா பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருவதாகக் கூறுகின்றனர். இங்குள்ள காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் என்ற வகையினைச் சார்ந்தவையாகும். 150 வகையான தாவர வகைகளையும் இங்கு காணலாம். இங்கு 1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது.

சிறந்த புவியலாளரும், வானவியலாளருமான தாலமி 1968க்கு முன் இதனைப் பற்றிப் பேசியுள்ளார். 
போர்த்துக்கீசிய வணிகர்கள் நாகப்பட்டினத்தில் தம் வணிகத்தை ஆரம்பித்த காலகட்டமான 16ஆம் நூற்றாண்டின் இடையில் கோடியக்கரை என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்ததாகும்.
1892க்கு முன்பாக கோடியக்கரையைச் சுற்றியுள்ள காடுகள் வருவாய்த்துறை மற்றும் கோயில் டிரஸ்டிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. வன நிர்வாகம் தொடர்பாக செயல்பாடுகள் 1892இல் ஆரம்பித்தன. அப்பகுதியில் இருந்த சன்யாசி முனிவர் கோயிலுக்கு அருகிலிருந்த இடம் ஆங்கிலேயர்களால் வேட்டையாடும் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
1911இல் அப்பகுதி திருச்சி தஞ்சாவூர் வனப்பிரிவு கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.  1922இல் சென்னை அரசின் மன்னார்குடி வருவாய்த்துறை அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
1938இல் கோடியக்கரை விரிவாக்கப்பகுதிகள் தற்போதுள்ள பகுதிகளோடு இணைக்கப்பட்டன.
1950இல் இதன் கட்டுப்பாடு திருச்சிராப்பள்ளி வனப் பிரிவின்கீழும், 1957இல் தஞ்சாவூர் பிரிவின் கீழும், 1965இல் சென்னை மாநில வனத்துறை அலுவலர் அலுவலகத்தின் கட்டுபாட்டிலும் வந்தது.
1962இல் பறவையியலாளர் சலீம் அலி இப்பகுதியின் முக்கியத்துவத்தினை வெளியுலகிற்கு எடுத்துரைத்தார்.
1967இல் காப்பகம் அமைக்கப்பட்டு, தஞ்சாவூர் வனப்பிரிவின் கட்டுப்பாட்டிலும், தொடர்ந்து 1986இல் நாகப்பட்டினம் வனப்பிரிவின் கட்டுப்பாட்டிலும் செயல்பட ஆரம்பித்தது.
வேதாரண்யத்திலிருந்து உப்பினை ஏற்றுமதி செய்ய 1936இல் ரயில்வே லைன் அமைக்கப்பட்டது. 1988இல் ரயில் சர்வீஸ் நிறுத்தப்பட்டு, 1995இல் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன.  இரண்டாம் உலகப்போரின்போது ராடார் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது.
1991 முதல் ஒவ்வோராண்டும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது.
1959 முதல் பம்பாய் இயற்கை வரலாற்று அமைப்பு (The Bombay Natural History Society) பறவைகளின் வருகை குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
9 மார்ச் 1998இல் 45 மீ. (148 அடி) உயரமுள்ள புதிய கலங்கரை விளக்கம் கோடியக்கரை கடற்கரை அருகே அமைக்கப்பட்டது.
வேகமாக வருகின்ற வாகனங்களால் விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1999இல் வேதாரண்யம் கோடியக்கரை சாலையில் அதிகமான வேகத்தடுப்பான்கள் அமைக்கப்பட்டன.
26 டிசம்பர் 2004 சுனாமியின்போது 3 மீ (10 அடி) உயர கடலலைகள் கடற்கரையைத் தாக்கின. அப்பகுதி முழுவதும் கடலால் சூழப்பட்டிருந்தது. சரணாலயம் பெரிய பாதிப்பின்றி இதனை எதிர்கொண்டபோதும், பெரிய அலைகளால் 5525 பேர் நாகப்பட்டின மாவட்டத்தின் பகுதிகளில் இறந்தனர்.

கோடியக்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தை பார்வையாளர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இப்பகுதிக்கு வர ஏற்ற மாதங்களாகும். பறவைகளைப் பார்க்க விரும்புவோர் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலும், விலங்குகளைப் பார்க்க விரும்புவோர் மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலும் இங்கு வரலாம்.
கோடியக்கரை கடற்கரையில் மனைவி திருமதி பாக்யவதியுடன்
சோழர் கால கலங்கரை விளக்கத்தில் ஆசிரியர் திரு சித்திரவேலுவுடன் 
கடற்கரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாவது தொடங்கி, தொடர்ந்து கோடியக்கரை சரணாலயம் பயணித்தோம். அங்கிருந்த பசுமையான செடிகளும், இயற்கைச்சூழலும் மனதிற்கு நிறைவாக இருந்தது. ஆங்காங்கே பறவைகளையும், சில விலங்குகளையும் காணமுடிந்தது. தமிழகத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இந்த சரணாலயம் இருப்பதை அறியமுடிந்தது.