30 March 2019

நந்தி திருமணம் : 16 மார்ச் 2019

16.3.2019 கோயில் உலாவின்போது பயண நிறைவாக காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்றான திருமழபாடி வைத்தியநாதர் கோயிலில் நடைபெற்ற நந்தியெம்பெருமானின் திருமண நிகழ்வினைக் காணும் பேற்றினைப் பெற்றோம்.

பல ஆண்டுகளாக இவ்விழாவில் கலந்துகொள்ள விரும்பியபோதிலும் அதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. விழா நிகழ்வினை நேரில் பார்த்தபோது நம் இல்ல நண்பர்களின், உறவினர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டதுபோல இருந்தது. மணமகள் வரும்போது மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருத்தல், அடுத்து மணமகன் வருகையை எதிர்பார்த்தல், மணமக்களுக்கு மாலை எடுத்துவரல், அபிஷேகப் பொருள்களையும், விடுபட்ட பொருள்களையும் கோயில் பணியாளர்களும், பக்தர்களும், மாற்றி மாற்றி எடுத்துவரல், அப்போது அவர்களிடம் காணப்படுகின்ற ஒரு விதமான ஏக்கம், தவிப்பு, மாலைகளையும், திருமாங்கல்யத்தையும் அணிவிக்கும் முன்பாக கூடியுள்ளோரின் முன்பாக அதனை வானை நோக்கிக் காண்பித்து, அனைத்து திசையிலுள்ளோரும் காணும்படி செய்தல் என்பன உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. வெயில் மறைய ஆரம்பித்தபோது மழபாடி சேர்ந்தோம். திருமணம் நிறைவுற்றபோது இரவு சுமார் 9.00 மணியாகியிருந்தது. அங்கிருந்து திருவையாறு வழியாக தஞ்சாவூர் வந்தடைந்தோம். வாழ்வின் மறக்கமுடியாத ஒரு நாளாக இந்நாள் எனக்கும், உடன் வந்தோரும் அமைந்திருந்தது. நாங்கள் பெற்ற இறையனுபவத்தைக் காண உங்களையும் அழைக்கிறேன், வாருங்கள்.  முதலில் கோயிலுக்குச் செல்வோம், பின்னர் திருமணத்தைக் காண்போம்.

திருமழபாடி வைத்தியநாதசாமி கோயில்
அரியலூர் மாவட்டத்தில், திருவையாற்றுக்கு வடமேற்கில் 16 கிமீ தொலைவிலும், புள்ளம்பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தொலைவிலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள திருமழப்பாடியில்  வைத்தியநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாம் முன்னர் சென்றுள்ளோம். இங்குள்ள இறைவி சுந்தராம்பிகை ஆவார். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற இத்தலம்  கொள்ளிடத்தின் வடகரையில் முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்ததால் ‘வடகரை மழபாடி’ என்றும், மழவர்கள் என்கிற பழங்குடியினர் வாழ்ந்ததாலும்,  சிறந்த போர்வீரர்களான மழவர்களின் சேனைகள் தங்கியிருந்ததாலும் ‘மழவர்பாடி’ என்றும் அழைக்கப்பட்ட இத்தலம் பின்னாளில் திருமழப்பாடி என்றானது. மார்க்கண்டேய முனிவருக்கு சிவபெருமான் காட்சி தந்து, மழு எனும் படையை தாங்கி ஆடல் செய்தருளிய தலம் இது என்பதால் ‘மழுபாடி’ என்றும் கூறப்படுகிறது. கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேஸ்வரர், தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார்.





  









நந்தியெம்பெருமான் பிறப்பும், திருமணமும்
திருவையாறு அருகே அந்தணபுரம் என்னும் ஊரில் வசித்த சிலாத முனிவர் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்ததால் குழந்தைப்பேற்றிற்காக திருவையாற்றுள் உறையும் ஐயாறப்பரை நோக்கித் தவம் செய்தார். இறைவன் அவர் முன் தோன்றி ஒரு யாகம் செய்யக் கூறுகிறார். யாகபூமியை உழும்போது கிடைக்கின்ற பெட்டகத்தில் ஒரு புத்திரன் இருப்பான் என்றும் அவன் 16 வயது வரை மட்டுமே உன்னுடன் இருப்பான் என்றும் அருளினார். அவ்வாறு பெற்ற குழந்தைக்கு செப்பேசன் என்று பெயரிட்டார். அவன் 14 வயதிற்குள் அனைத்து வித்தைகளையும் கற்றான். தந்தை, தன் மகனின் அற்ப ஆயுள் பற்றி கவலையடைந்தார். ஆயுளின் உண்மையை உணர்ந்த செப்பேசன், ஐயாறப்பர் கோயிலில் உள்ள குளத்தில் இறங்கி தவம் செய்தபோது, இறைவன் காட்சி தந்ததோடு மட்டுமன்றி 16 பேறுகளையும் தந்தார். பின்னர் அவன் இறைவன் மீது கொண்ட பற்றால் பல உபதேசங்களை அறிந்து சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியைப் பெற்றதோடு, ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் பெற்றார். இவரே நந்தியெம்பெருமான் என்றழைக்கப்படுகிறார். 
உரிய நேரத்தில் பரமேஸ்வரன் அவருக்கு திருமணம் செய்ய விழைகிறார். திருமழபாடியில் உறையும் வைத்தியநாத சுவாமியை சாட்சியாக வைத்து ஐயாப்பரே நந்தியெம்பெருமானுக்கும் வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகைக்கும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

நந்தியெம்பெருமான் சுயசாம்பிகை திருமண நிகழ்வு
ந்தணர்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  விழாவின்போது சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் போன்றவற்றால்  நந்தியெம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அன்று  மாலையில்  திருவையாறு கோயிலில் அவருக்குப் பட்டாபிஷேகம் நடத்தப்பெறுகிறது. அடுத்து சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
மறுநாள் காலையில் ஐயாறப்பர்  அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடிப் பல்லக்கிலும், நந்தியெம்பெருமான் பட்டு வேட்டி, பட்டுச்சட்டை அணிந்து மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வாண வேடிக்கை, இன்னிசைக் கச்சேரியுடன் புறப்படுகிறார்.  தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அன்று மாலை திருமழபாடி வந்தடைகின்றார். அங்கு இறைவனும், இறைவியும் மங்கல வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு அழைக்கின்றனர்.  அவர்களை வரவேற்று கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வருகிறார்.
திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும், நந்தியெம்பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் கோயிலின் முன்பு கண்ணாடிப்பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய அய்யாறப்பர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட பக்தர்கள் அட்சதை தூவ திருமணம் நடைபெறுகிறது. தாலி கட்டும் நிகழ்ச்சியுடன் திருமணம் நிறைவுறுகிறது. திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து இருவரும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றார்கள். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். இறைவனே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததால் நந்தியெம்பெருமான் திருமணத்தைக் காணும் இளைஞர்களுக்கும் கன்னியர்களுக்கும் திருமணத் தடைகள் நீங்கிக் காலத்தே திருமணம் கைகூடி வரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. ‘நந்தி’ கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்’ என்ற சொல் வழக்கு இன்றளவும் மக்களிடம் செல்வாக்குடன் இருக்கிறது.

நன்றி
வழக்கம்போல உலா ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்றபோது, எங்களின் விருப்பப்படி பயணத்திட்டத்தில் நந்தி திருமண விழாவினைச் சேர்த்த முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

12 comments:

  1. நேர்த்தியானப் படங்களோடு கூடிய அருமையான பகிர்வு
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. திருமழபாடியில் நடந்த நந்தியம்பெருமான் திருமண நிகழ்வினை நேரில் சந்தித்த உணர்வு. நன்றி முனைவர் ஐயா.

    ReplyDelete
  3. நேரில் கண்டு களித்த மகிழ்ச்சி.
    படங்களும், செய்திகளும் அருமை.

    ReplyDelete
  4. அழகிய விவரிப்பு, அருமையான படங்களோடு தந்த முனைவருக்கு நன்றி.

    ReplyDelete
  5. மிக அருமையாக உள்ளது. ஒரு முறையாவது காணும் ஆவலும் அதிகரிக்கிறது!

    ReplyDelete
  6. பயணங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  7. படங்களும் செய்தியும் அருமை.

    ReplyDelete
  8. ￰நேரில் இல்லாத குறையை தங்கள் பதிவு தீர்த்து விட்டது.படங்களை நீங்கள் தொகுத்த விதம் அருமை

    ReplyDelete
  9. மிகவும் சிறப்பானப் பதிவு.

    ReplyDelete
  10. படங்களும் செய்திகளும் அருமை. இதுவும் ஒரு சிறந்த சேவைதான். நேரில் பார்த்த அனுபவத்தைத் தருகின்றது. நன்றி

    ReplyDelete