29 September 2019

மறைந்த பனியாற்றுக்கு நினைவுச்சின்னம்

ஐஸ்லாந்தில் தடம்தெரியாமல் மறைந்துபோன ஒரு பனியாற்றுக்கு, முதன்முதலாக, ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பனியாற்றின் பெயர் ஓக்ஜோகல்  என்பதாகும். ஐஸ்லாந்தின் நிலப்பரப்பில் 11 விழுக்காடு பனியாறுகள் உள்ளன. ஒவ்வோராண்டும் ஐஸ்லாந்து 11 பில்லியன் டன் ஐஸை இழக்கிறது. 2200வாக்கில் ஐஸ்லாந்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட பனியாறுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.


ஓக்ஜோகல் பனியாறானது, பனியாறு என்ற நிலையை 2014இல் இழக்க ஆரம்பித்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். 1890இல் 16 சதுர கிமீ பரப்பளவில் இருந்த பனியாறு 2012இல் 0.7 சதுர கிமீ அளவிற்குச் சுருங்கிவிட்டதாகவும், 2014இல் எவ்வித நகர்ச்சியும் இல்லாத நிலையில் அது உயிருள்ள பனியாறு என்ற தன்மையை இழந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பருவ நிலை மாற்றத்தின் விளைவாகவே இப்பனியாறு மறைந்துவிட்டதாகவும், தொடர்ந்து பல பனியாறுகள் இவ்வாறாக மறைந்துவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேற்கு ஐஸ்லாந்தில் அந்தப் பனியாறு இருந்து மறைந்த இடத்தில் ஒரு செம்புத்தகட்டில்   “எதிர்காலத்திற்கான ஒரு கடிதம்” என்ற தலைப்பில் பின்வரும் சொற்கள் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. “அடுத்த 200 ஆண்டுகளில் அனைத்து பனியாறுகளுக்கும் இதே நிலைதான் ஏற்படும். என்ன நடந்துகொண்டிருக்கிறது, என்ன செய்யவேண்டும் என்பதை நாம் அறிவோம் என்பதை இந்த நினைவுச்சின்னம் உணர்த்துகிறது. நாம் தான் இதைச்செய்தோம் என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள்”. கடந்த மே மாதம் பதிவான கார்பன் டை ஆக்சைடின் அளவைக்குறிக்கின்ற “415 ppm CO2” என்ற சொற்களும் அதில் பதியப்பெற்றிருந்தன.
பனியாற்றுக்குப் பிரியாவிடையாக அமைந்த இறுதிச்சடங்கில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட தேவையை வலியுறுத்துகின்ற வகையில் கவிதை வாசிப்பு, சிறிது நேர மௌனம், அரசியல் தலைவர்கள் மற்றும் அறிவியலாளர்களின் உரைகள் இடம்பெற்றிருந்தன. ஐஸ்லாந்தின் பிரதமர் கத்ரோன் ஜாகோப்ஸ்டாட்டிர், முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் மேரி ராபின்சன் மற்றும் இந்த நினைவுச்சின்னத் திட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வானது ஐஸ்லாந்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ளோர் அனைவருக்குமே ஒரு தூண்டகோலாக அமையும் என்றும், பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று என்றும் பிரதமர் கூறினார்.  அந்நிகழ்வில் கலந்துகொண்டோரில் பலர் அதிக சோகத்துடன் காணப்பட்டனர்.  “பருவநிலை மாற்றத்தின் விளைவால் பனியாறு மறைந்ததைக் குறிக்க உலகிலேயே முதன்முதலாக வைக்கப்படுகின்ற நினைவுச்சின்னம் இதுவே” என்று டெக்சாஸைச் சேர்ந்த ரைஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறினார். ஐஸ்லாந்தின் புவியியல் நிபுணரான ஒட்டர் சிகரோசன், 10 வருடங்களுக்கு முன்பே இப்பனியாறு மறைந்துவிட்டது என்றும், ஊடங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு நினைவுப்பொறிப்பாக ஒரு இறப்புச் சான்றிதழைக் கொண்டு வந்ததாகவும் கூறினார். அந்த பனியாற்றில் இருந்த நீரைக் குடிநீராகப் பயன்படுத்தியதை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தனர்.

துணை நின்றவை
Iceland Builds First Monument In Memory of Glacier Lost To Climate Change, NDTV, 18 August 2019
Funeral for lost ice: Iceland bids farewell to glacier, abc news, 18 August 2019
Iceland holds funeral for first glacier lost to climate change, Guardian, 19 August 2019

21 September 2019

50 ஆண்டுகளாக பயணித்த பாட்டில் கடிதம்

விறகுக்காக அலைந்துகொண்டிருந்தபோது, அலாஸ்காவைச் சேர்ந்த 50வயதான ரஷ்யரான டயிலர் இவானாப், 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டில் வழியாக அனுப்பப்பட்ட ஒரு செய்தியை கண்டுபிடித்தார்.  ரஷ்ய மொழியில் இருந்த அதனை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அதற்கான மொழிபெயர்ப்பினை வேண்டியிருந்தார். அது 20 ஜுன் 1969இல் சுலாக் என்ற ரஷ்யக் கடற்படைக் கப்பலின் கடலோடியால் எழுதப்பட்டிருந்தது. ரஷ்ய ஊடகங்கள் அதனை எழுதியவரான கேப்டன் அனாடாலி போட்ஸானென்கோ எங்கிருக்கிறார் என்று தேட ஆரம்பித்தன.

இவானாப் தன் கிராமத்திலிருந்து 32 கிமீ தொலைவில் விறகுக்காக அலைந்துகொண்டிருந்தபோது பிளாஸ்டிக் மூடியுடன் மிகவும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த அந்த பாட்டிலைக் கண்டார். சிரமப்பட்டு அதனைத் திறக்க முயன்று பின்னர், பற்களால் கடித்துத் திறந்துள்ளார். உள்ளே காய்ந்த நிலையில் ஒயினோ பழைய ஆல்கஹாலோ இருந்த வாசனை வந்ததாகவும், தாளில் எழுதப்பட்டிருந்த கடிதம் எவ்வித பாதிப்புமின்றி காணப்பட்டதாகவும் கூறினார். முகநூலில் அவர் விடுத்த வேண்டுகோளுக்குக் கிடைத்த மறுமொழி : "சுலாக் ரஷ்யக்கப்பலிலிருந்து வாழ்த்துக்கள்! இந்த பாட்டிலைக் கண்டுபிடிப்பவர்கள் அதனை, இந்தக் கப்பலைச் சார்ந்தோரிடம் தெரிவிக்கவும். உங்களின் நலனுக்கும், நீண்ட வாழ்க்கைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இனிய பயணம் தொடரட்டும். 20 ஜுன் 1969."


பனிப்போர் காலத்தில் எழுதப்பட்ட அக்கடிதம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை அறிந்த, தற்போது 86 வயதாகும்  கேப்டன் போட்ஸானென்கோ ஆனந்தக்கண்ணீரில் நனைந்தார். மிகக்குறைந்த வயதில் அவர் அப்போது கேப்டனாக இருந்துள்ளார். அப்போது அவருடைய வயது 33. ரஷ்ய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதில் உள்ளது தன் கையெழுத்தே என்றும், 1966இல் சுலாக் கட்டுமானப்பணியினை மேற்பார்வையிட்டதாகவும், 1970 வரை அதில் பயணித்துள்ளதாகவும் கூறினார்.

பாட்டிலைக் கண்டுபிடித்த இவானாப் தன் முகநூல் பதிவில் "ஒரு சிறிய புகைப்படம் ஓர் அருமையான கதையாக ஆகியுள்ளதை அறிந்து மகிழ்கின்றேன். இதுபோல் எனக்கும் பாட்டிலில் செய்தியை வைத்து அனுப்பும் ஆசை வந்துவிட்டது. எதிர்காலத்தில் என் பிள்ளைகளுடன் சேர்ந்து அவ்வாறான முயற்சியினை மேற்கொள்வேன். ஒரு செய்தியை மட்டும் அனுப்புவோம், அது எங்கே சென்று சேருகிறது என்று பார்ப்போம்". என்றார் ஆவலோடு.

இதற்கு முன்னரும் இதுபோன்று பாட்டிலில் அடைத்த செய்தி ஒன்று இவ்வாறாகக் கண்டுபிடிக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.

துணை நின்றவை
Russian sailor’s 1969 message in a bottle washes up in Alaska, BBC News, 19 August 2019
‘Greetings from Cold War’: Dated 1969, Alaska Man Discovers Message in Bottle from Russian Sailor, News 18, 18 August 2019
Alaska man discovers message in bottle from Russian Navy 50 years after it was sent, USA Today, 18 August 2019

14 September 2019

தமிழரின் நீர் மேலாண்மை : முனைவர் மணி.மாறன்

அண்மையில் நான் வாசித்த நூல் முனைவர் மணி.மாறன் எழுதியுள்ள தமிழரின் மேலாண்மை. அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றான, நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத, ஆனால் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு பொருளை தன் ஆய்வின் களமாக எடுத்துக்கொண்டு அதில் முழுக்க தன்னை ஈடுபடுத்தி நூல் வடிவம் வந்துள்ள நூலாசிரியரின் முயற்சியானது பிற ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.


 வாசிப்பவருக்கு அனைத்துமே முக்கியம் என்று தோன்றுமளவு ஒவ்வொரு பத்தியிலும், பக்கத்திலும் செறிவான செய்திகளைக் கொண்டுள்ள நீர் மேலாண்மைக்கான, தமிழரின் பல்லாயிரமாண்டு பெருமையினைப் பேசுகின்ற இந்நூல் இலக்கியத்தில் நீர் மேலாண்மை, தொல்லியல் சான்றுகளில் நீர் மேலாண்மை, கலைப்படைப்புகளில் நீர், கலையும் இலக்கியமும் என்ற உட்தலைப்புகளையும், துணைநூற்பட்டியலையும், அரிய புகைப்படங்களைப் பின்னிணைப்பாகவும் கொண்டு அமைந்துள்ளது. சங்க காலந்தொட்டு இலக்கியங்கள் தொடங்கி நீருக்கும், நீர் நிலைகளுக்கும், நீர் மேலாண்மைக்கும் அளித்த, அளிக்கப்பட்டுவருகின்ற முக்கியத்துவம் உள்ளிட்ட பல கூறுகளைக் கொண்டு அமைந்துள்ள அந்நூலின் சில பகுதிகளைக் காண்போம்.

மழையின் தோற்றம் கண்ட தமிழர்கள், எவ்வக்காலங்களில் மழைப்பொழிவு இராது எப்தனையும், வானில் உள்ள கோள் நிலை கண்டு தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். (ப.16).

ஓடை, ஆறு மட்டுமே இயற்கையாக அமையப்பெற்றவை. தடுப்பணை, மணற்போக்கி, ஏரி, குளம், கலிங்கு, மதகு, தூம்பு போன்றவையும், கொப்பு, கிளை, வாய்க்கால் போன்ற அனைத்தும் மக்களால் ஏற்படுத்தப்பட்டவையாகும். …நீரைத் திருப்பி ஏரிகள், குளங்களில் சேமித்து வைத்துக்கொள்ளும் வழக்கம் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழர்களிடம் இருந்துள்ளதற்கு ஏராளமான இலக்கிய, கல்வெட்டு, செப்பேட்டுச் சான்றுகள் காணப்படுகின்றன. (ப.18).

அணைகளைப் பழந்தமிழர்கள் ஆற்றின் குறுக்கே நேராகக் கட்டாமல் வளைவாகவே அமைத்துள்ளனர். வாத்து அலகு போல வளைவாக அமைவது சிறந்தது என்று இன்றைய நீரியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். (ப.21).

ஏரிகள் அமைக்கப் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள், தண்ணீரைப் பகிர்வதிலும், சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் தமிழர்கள் கடைப்பிடித்த நீர் மேலாண்மைக் கோட்பாடுகள் இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளன. (ப.21).

செம்மண் நிலத்தில் உள்ள கிணற்று நீரை முகந்து பெரிய வாயையுடைய சாடிகளில் வைத்துத் தெளியச் செய்து குற்றமற்ற தூய நீரைப் பெற்றனர் என்ற ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குடிநீர் மேலாண்மைத் திறத்தைப் பதிவு செய்துள்ளார் சங்ககாலப்புலவர். (ப.37).

தடம் மாறிய காவிரியின் போக்கை ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு (கரிகாலன் காலத்திற்கு முன்) ஒழுங்குபடுத்த நினைத்த சோழ மன்னன் ஒருவன் ஒகேனக்கல் மலைத்தொடர் பகுதியில் மலையை வெட்டித் தடம் அமைத்துச் சோழ நாட்டிற்குக் காவிரியைக் கொண்டுவந்துள்ளான்.  கரிகாலனின் முன்னவனாகிய சோழ மன்னன் ஒருவன் மலை திரித்துக் காவிரி ஆற்றின் போக்கைச் சோழ நாட்டிற்குத் திருப்பினான் என்பதைச் சோழர் கால இலக்கியங்கள் கூறுமாப் போலச் சோழர்தம் செப்பேடுகளும் அச்செய்தியை வலியுறுத்திக் கூறுகின்றன. (ப.59).

கி.பி.7ஆம் நூற்றாண்டில் வரையப்பெற்ற புண்ணியகுமாரனுடைய மேல்பாட்டுச் செப்பேடுகளிலும், கி.பி.11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளிவந்த கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும், வீரராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்து அதன் வெள்ளத்தை தடுத்து நாட்டிற்கு நலம் புரிந்தமை கூறப்பட்டுள்ளது. (ப.71).

கி.மு.முதல் நூற்றாண்டில் இருந்த சோழன் கரிகாற்பெருவளத்தானாகிய திருமாவளவனே முதலில் காவிரிக்கு கரை அமைத்துச் சோழ மண்டலத்தை வளப்படுத்தியவன் என்பது தெளிவாகத் தெரிகிறது. (ப.72).

தமிழக மன்னர்கள் ஒரு கோயிலை நிர்மாணிக்கும்போதும், ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு நகரத்தையோ அமைக்கும்போதும் முதலில் கவனம் செலுத்தியது நீர் நிலைகள் பற்றியே ஆகும். (ப.75).

இராஜேந்திர சோழன் தன் மகத்தான சாதனைப் படைப்பொன்றில் அவனுக்கு இறவாப் புகழ் தந்த கங்கை வற்றியை இணைத்துக் கூற நினைத்தான். நாடே கண்டிராத பரும் ஏரியாக அவன் வெட்டுவித்த கங்கை கொண்ட சோழபுரத்துப் பேரேரியைத் தன் வெற்றிச் சின்னமாக நிலைபெறச்செய்யவேண்டும் என்பது அவனது அவா. (ப.80).

தமிழ்நாட்டு வணிகர்கள், அலைகடல்களுக்கு அப்பால், நெடுந்தொலைவில் உள்ள சயாம் நாட்டிற்குச் சென்று, வைணவ சமயத்திற்குரிய திருமாலின் கோயில் எடுத்து, அங்கே குளமும் வெட்டியதை எண்ணும்போது நீரின்றி அமையாது உலகு எனும் தமிழரின் உயரிய நீர் மேலாண்மைத்திறம் வெளிப்படுகிறது. (ப.91).

மலைச்சரிவுகள், ஏரிகள், குளங்களின் கரையில் மரம் வளர்ப்பதையும், அதனை வெட்டுவதைத் தவிர்ப்பதையும் முன்னோர்கள் பெரும் அறச்செயல்களாகப் பேணி வந்தனர். நீர் நிலைகளின் கரையில் உள்ள மரங்களை வெட்டுவதைக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகக் கொண்டனர். மேலும் பொதுக்குளங்கள் நீர் நிலைகளைச் சிதைப்பது பெரும் குற்றமாகக் கருதப்பெற்றது. (ப.99).
அரசனின் அதிகாரமோ, அச்சுறுத்தலோ இன்றி ஊர் மக்களே ஒன்றிணைந்து நீர் நிலைகளையும், மரங்களையும் குறிப்பாக ஏரிகளின் கரைகளைக் காக்கும் மரங்களையும் அழிக்கக்கூடாது என முடிவெடுத்து, அதனையும் மீறி அழிப்பவர்களை நிலமாகத் தண்டம் செலுத்த வேண்டியதை ஓர் உடன்பாடாக எழுதிப் பதிவு செய்துள்ளமை அறியமுடிகிறது. (ப.101).

கரிகாலன் காவிரியின் இரு கரைகளையும் வலிமையுடையதாகச் செய்ததோடு, பெரு வெள்ளங்களால் சோழ நாடு பேரழிவுகளுக்கு உட்படாதவண்ணம் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்ப்பெருக்கு வடியுமாறு வழிவகுத்தான். கல்லணை என்ற செயல்திட்டம் தொல்காப்பியம், பததுப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் நூல்களில் கற்சிறை என்ற பெயரால் விளக்கப்பெறுகின்றது. (ப.110).

ஆடல்வல்லப்பெருமானின் விரிசடையின் வலது புறம் உற்று நோக்குமாயின் விண்ணகத்தில் பிறக்கும் நீரின் பேராற்றல் விண்ணகக் கங்கையாக உருவகப்படுத்தப்பெற்று, ஒரு பெண் ஒருவில் காட்சியளிப்பதைக் காணலாம்.  இடுப்புக்கு மேலாக ஒரு பெண் தன் இரு கரங்களையும் கூப்பியவாறு இருக்க இடுப்புக்குக் கீழே விண்ணகத்தில் இருந்து கழன்றவாறு இறங்கும் பெருநீர்ச்சூழலைக் காணலாம். (ப.121).  

பொதுவாக சைவ, வைணவ ஆலயங்களில் திருக்கோபுரங்களின் நிலைக்கால்களில் கங்கை, யமுனை என்ற இரண்டு நதி தெய்வங்களைப் பெண் உருவில் காட்டுவர். ஆனால் தஞ்சைப்பெரிய கோயிலை உருவாக்கிய மாமன்னன் இராஜராஜன் நிலைக்கால்களில் மட்டுமே நதி தெய்வங்களைக் காட்டாது இரண்டாம் திருக்கோபுரமாகிய இராஜராஜன் திருவாயில் எனும் கோபுரத்தையே நீரின் வடிவமாகக் காட்டியுள்ளார்.  (ப.129) 

தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்தினை வான் கயிலாயம் என்ற மலையாகவே கலையியல் அடிப்படையில் படைத்த காரணத்தால் அக்கயிலாய மலை உள்ளடக்கிய இக்கோயில் வளாகம் முழுவதும் பெய்யும் மழை நீரினை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும்படிக் கடடடத்தை அமைத்து அங்கு இரு கால்வாய் திறப்புகளை அமைத்துள்ளான். மழை பெய்யத்தொடங்கியவுடன் சிவகங்கை குளத்திற்குச் செல்லும் கால்வாயினை மூடிவிட்டு கோயிலின் பின்புறம் உள்ள நந்தவனத்திற்குச் செல்லும் கால்வாயின் மதகினைத் திறந்து வைத்திருப்பர். (ப.131).

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலின் முன்புறத்தில் சாரபுட்கரணி என்ற தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளக்கரையின் தென்மேற்கு மூலையில் காவிரி அம்மனுக்கென ஒரு தனிக்கோயில் உள்ளது…..பொன்னி வள நாட்டில் காவிரித்தாயாருக்கு என எடுக்கப்பெற்ற ஒரே கோயில் இதுவேயாகும். (ப.137).

திருவிடைமருதூர், கங்கை கொண்ட சோழபுரம், விரிஞ்சபுரம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களின் திருச்சுற்றில் அத்திருக்கோயில் இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்வதற்குரிய திருமஞ்சன நீர் எடுப்பதற்காகவும், கோயில் பணிகளுக்காகவும், மக்களுக்குப் பயன்படும் வகையிலும் சிம்மக்கிணறுகளை அமைத்துள்ளனர். (ப.140).

திருவலஞ்சுழி திருக்கோயிலின் அம்மன் கோயில் திருச்சுற்று மண்டப வடபுற விதானத்தில் ஒரு நீண்ட நாயக்கர் கால ஓவியக்காட்சி உள்ளது. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி சோழ நாட்டில் பாய்ந்து கடலில் கலக்கும் காட்சியே இங்கு ஓவியமாகத் தீட்டப்பெற்றுள்ளது. (ப.144).

தஞ்சை மாவட்டத்தில் கற்பாறையான நிலப்பகுதியே இல்லை எனப் பொதுவாகக் கூறுவர். ஆனால், இது தவறான கூற்றாகும். கச்சமங்கலத்திலிருந்து கிழக்கே 3 கிமீ தொலைவு வரை வெண்ணாறு ஓடும் பகுதி எவ்வாறு தொடர்ந்து கற்பாறை பூமியாகத் திகழ்கின்றதோ, அதே போன்று கச்சமங்கலத்திலிருந்து தெற்காகத் திருச்சி மாவட்டத்திலுள்ள திரு எறும்பியூர் மலைக்குன்றம் வரை பூமிக்கு அடியில் பாறை அமைப்புகள் இருப்பது கள ஆய்வில் அறியப்பெற்றது. (ப.147). 

நீர் மேலாண்மை இயலின் பல்வேறு கூறுகள் பற்றிக் கண்கூடாகக் காண்பதற்கு ஏற்றதொரு களமாக விளங்குது தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டத்திலுள்ள வெண்டையம்பட்டி பேரேரி ஆகும். (ப.179).

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் பண்டு திகழ்ந்த குமிழிகள் பெரும்பாலும் சுவடின்றி அழிந்துவிட்டன. குமிழியின் மதகுத் தூண்கள் ஒரு சில ஏரிகளில் காணப்பெற்றாலும் அவை பிற்காலத்தில் ஏற்படுத்தப்பெற்ற புதிய மதகு அமைப்பினால் பயனற்றவையாகவே காணப்படுகின்றன. ஆனால் சோழ நாட்டின் பகுதியாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள் பலவற்றில் பண்டைக்கால குமிழிகளின் அமைப்பு முறை மாறாமல் அப்படியே உள்ளது. (ப.182).

தூய நீர் மேலாண்மை குறித்தும், பழந்தமிழர்களின் நீரியல் சிந்தனையும், தொலைநோக்கு உணர்வினையும், நீர் மாசுபாடுகளைத் தவிர்க்கும் நெறிமுறைகள் பற்றியும், நீரின் சேமிப்பு அவசியம் குறித்தும் கற்பிக்க வேண்டிய கட்டாயச்சூழல் இன்று நிலவுகிறது என்பதே கள ஆய்வில் கண்ட உண்மையாகும். (ப.174).


நூல் : தமிழரின் நீர் மேலாண்மை
ஆசிரியர் : முனைவர் மணி.மாறன், (9443476597, 8248796105) தமிழ்ப்பண்டிதர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்
பதிப்பகம் : ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர்
பதிப்பு : ஆகஸ்டு 2019
விலை : ரூ.250

07 September 2019

மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க் : தினமணி

மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க் என்ற என் கட்டுரை 4 செப்டம்பர் 2019 தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அதன் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.

நோபல் அமைதிப் பரிசுக்காக ஸ்வீடன் பாராளுமன்ற இரு உறுப்பினர்களும், நார்வே பாராளுமன்ற மூன்று உறுப்பினர்களும் அவரது பெயரை பரிந்துரைக்கின்றனர். அப்பரிசினை அவர் பெறுவாரேயானால் உலகில் மிக இளம் வயதில் அதைப் பெற்ற பெருமையை அடைவார் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவியான கிரேட்டா தன்பர்க். தன் 15ஆம் வயதில், புவி வெப்பமயமாதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி உலகை தன் பக்கம் ஈர்த்தது முதல் பருவ நிலை ஆர்வலாகக் கருதப்படுகிறார்.

3 ஜனவரி 2003இல் பிறந்த அவர் 2018இன் உலகின் மிகச்சிறந்த 25 இளைஞர்களில் ஒருவர் (டைம், டிசம்பர் 2018), 2019இன் மிக முக்கியப் பெண்மணி (உலக மகளிர் தினம், ஸ்வீடன், 2019), 2019இன்  மிகப் பிரபலமான 100 பேரில் ஒருவர் (டைம், ஏப்ரல் 2019), அடுத்த தலைமுறைத்தலைவர்களில் ஒருவர் (16ஆவது வயதில் முகப்பட்டையில் புகைப்படம், டைம் இதழ், மே 2019) என்ற சிறப்புகளைப் பெற்றவர்.  பிரிட்டனிலிருந்து வெளிவரும் வோக் இதழின் செப்டம்பர் இதழ் முகப்பட்டையில் மாற்றத்திற்கான சக்திகள் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள 15 நபர்களில் இவரும் ஒருவராவார்.
அடுத்த தலைமுறைத்தலைவர்களில் ஒருவர் (16ஆவது வயதில் முகப்பட்டையில் புகைப்படம், டைம் இதழ், மே 2019)

வோக் செப்டம்பர் இதழ் முகப்பட்டையில் மாற்றத்திற்கான சக்திகள் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள 15 நபர்களில் ஒருவராக கிரேட்டா தன்பர்க்


  

அவர் இளைஞர்களுக்கான ஃப்ரைஷுசெட் மாதிரி விருது (ஸ்டாக்ஹோம், நவம்பர் 2018), ஜெர்மனின் கோல்டன் காமரா சிறப்பு பருவநிலை பாதுகாப்பு விருது (ஜெர்மனி, 31 மார்ச் 2019), 15 முதல் 25 வயது இளைஞருக்கான விடுதலை விருது (நார்மாண்டி, பிரான்ஸ், 1 ஏப்ரல் 2019), பேச்சு சுதந்திரத்திற்கான ஃப்ரிட் ஆர்ட் விருது (பிறிதொரு அமைப்புடன் இணைந்து, நார்வே, 12 ஏப்ரல் 2019), லாடாடோ சி விருது (மிலேரேப்பா பவுன்டேஷன், சிலி,  ஏப்ரல் 2019), மனசாட்சிக்கான தூதுவர் விருது (பன்னாட்டு மன்னிப்பு அவை, லண்டன், 7 ஜுன் 2019), மதிப்புறு முனைவர் பட்டம் (மோன்ஸ் பல்கலைக்கழகம், பெல்ஜியம், ஜுன் 2019), கெட்டிஸ் சுற்றுச்சூழல் விருது (ராயல் ஸ்காட்டிஷ் ஜியாபிரபிகல் சொசைட்டி, ஸ்காட்லாந்து, 12 ஜுலை 2019) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிப்ரவரி 2018இல் அமெரிக்காவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின்போது அவருக்கு பருவநிலையினைப் பாதுகாப்பதற்காகப் போராட்டம் மேற்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உதயமானது. அதன் விளைவாக அப்போதே சில மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத்தனர். அதுமுதல் அவருடைய கவனம் பருவநிலையைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டது.

மே 2018இல் ஸ்வீடனின் ஸ்வென்ஸ்கா டாக்லாடெட் இதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்றவர்களில் இவரும் ஒருவர். கட்டுரை வெளியானபின் பருவநிலை மாற்றத்துக்காகப் பாடுபடும் குழுவினர் அவரோடு தொடர்புகொள்ளவே, அவர்களுடைய கூட்டங்களில் கலந்துகொண்டார். அவர்கள், பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்திற்காக போராட்டம் செய்யலாம் என்றபோது அவர் பலரை அம்முயற்சியில் ஈடுபடுத்த முயன்றார். எவரும் முன்வராத நிலையில் தானே களத்தில் இறங்கினார்.

20 ஆகஸ்டு 2018இல், ஒன்பதாம் வகுப்பு படித்தபோது அவருடைய தனிப்பட்ட ஈடுபாடு தொடங்கியது.  ஸ்வீடனில் தேர்தல் நடைபெறவிருந்த 9 செப்டம்பர் 2018 வரை பள்ளி செல்வதில்லை என முடிவெடுத்தார். அப்போது ஸ்வீடன் 262 ஆண்டுகளில் மிகக்கொடிய வெப்பத்தை எதிர்கொண்டது. அக்காலகட்டத்தில் பாராளுமன்றக்கட்டடத்தின் முன்பாக தனியாக, போராட்டத்தை ஆரம்பித்து, பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டுள்ள அளவு கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். மூன்று வாரங்கள் தினமும் பள்ளி நேரத்தில் பருவநிலையைக்காக்க பள்ளிப்போராட்டம் என்ற பதாகையுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

8 செப்டம்பர் 2018இல் ஏழு கண்டங்களில் 95 நாடுகளில் நடைபெற்றபோது புருஸ்ஸேல்சில், ஐரோப்பிய பாராளுமன்றத்தின்முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார்.

31 அக்டோபர் 2018இல் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில், காந்தி சிலையின் முன்பாக எக்ஸ்டின்சன் ரெபெல்லியன் அமைப்பு நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு “நம் தலைவர்கள் குழந்தைகளைப் போல நடந்துகொள்கின்றனர். நாம் விழிப்புணர்வினை உண்டாக்கி அனைத்தையும் மாற்றவேண்டும்” என்றார்.

24 நவம்பர் 2018இல் ஸ்டாக்ஹோமில் டெட் மாநாட்டில் பேசும்போது அவர், பருவநிலை மாற்றத்தைப் பற்றி முதன்முதலில் தன் எட்டு வயதில் கேள்விப்பட்டதாகவும், அதற்கு முக்கியத்துவம் தராப்படாததற்குக் காரணம் புரியவில்லை என்றும் கூறினார். 

டிசம்பர் 2018இல் போலந்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டில், பள்ளியில் போராட்டம் ஆரம்பமானதற்கான காரணங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அதே மாதத்தில் 270 நகரங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வகையான போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.

23 ஜனவரி 2019இல் டாவோஸில் உலகப்பொருளாதார மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேராளர்கள் 1500க்கும் மேற்பட்ட தனியார் சொந்த விமானங்களில் வந்தபோது அவர் 32 மணி நேர பயணித்து ரயிலில் வந்தார். கூட்டத்தில், "சில நபர்களும், சில நிறுவனங்களும், குறிப்பாக, கொள்கை முடிவு எடுப்போர் சிலரும் கற்பனைக் கெட்டாத அளவிலான பணத்தைச் சம்பாதிக்க விலைமதிக்க முடியாத பலவற்றை இழக்கிறார்கள். உங்களில் பலர் அவ்வகையினர் என நினைக்கிறேன்" என்றார்.

பிப்ரவரி 2019இல் 224 கல்வியாளர்கள் இணைந்து அவருடைய முயற்சியாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் செயலாலும் கவரப்பட்டதாகவும், அவர்களுக்கு மரியாதை தரப்படவேண்டும் என்றும் கூறினர். 21 பிப்ரவரி 2019இல் ஐரோப்பிய பொருளாதார மற்றும் சமூகக்குழுவின் மாநாட்டிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரிடமும் அவர், “பாரிஸ் பருவநிலை ஒப்பந்தப்படி உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்ஷியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த  ஐரோப்பிய ஒன்றியம் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வினை 2030க்குள் 80 விழுக்காட்டிற்கு அதாவது பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட இலக்கான 40 விழுக்காட்டின் இரு பங்காகக் குறைக்கவேண்டும். அதில் நாம் தவறினால் நம் அரசியல் தலைவர்களின் மரபார்ந்த கொள்கைகள் மனிதகுல வரலாற்றின் பெரும் தோல்வியாகக் கருதப்படும்” என்றார்.

மார்ச் 2019இல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவ்வப்போது சில மாணவர்கள் அவருடன் சேர்ந்துகொண்டனர்.

15 மார்ச் 2019இல்  112 நாடுகளைச் சேர்ந்த 1.4 மில்லியன் பள்ளி மாணவ மாணவியர்கள் பருவ நிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி தம் வகுப்புகளைப் புறக்கணித்து அடையாளப் போராட்டம் நடத்தினர்.

மார்ச் 2019இல் பெர்லினில் பிரான்டென்போர்க் வாயிலின்முன் கூடியிருந்த 25,000 பேருக்குமுன் "எதிர்காலம் அழியப்படுவதை எதிர்ப்பதற்காக குழந்தைகள் தம் படிப்பையே தியாகம் செய்யவேண்டிய ஒரு வித்தியாசமான உலகில் வாழ்கிறோம்” என்று பேசினார். 

ஏப்ரல் 2019இல் ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “பிரிக்ஸிட்டுக்காக மூன்று அவசரக் கூட்டங்களைக் கூட்டுகின்றார்கள், ஆனால் பருவநிலை மாற்றத்தையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்ற எவ்வித அவசரக்கூட்டமும் கூட்டப்படவில்லை” என்று பேசினார்.

24 மே 2019இல் 125 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட போராட்டம் நடைபெற்றது.  மே 2019இல், பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை துரிதப்படுத்த ஆஸ்திரியாவில் நடத்தப்பட்ட, 30 நாடுகளைச் சேர்ந்த 17,000 பேர் கலந்துகொண்ட மாநாட்டில் கால நிலை மாற்றம் தொடர்பான இடை அரசின் இடைக்கால அறிக்கையை மேற்கோள் காட்டிப் பேசும்போது, “தோராயமாக 2030க்குள் எதிர்பார்த்த மாற்றங்களைச் செய்யாவிடில், மனித சக்தியால் கட்டுப்படுத்த முடியாத பேரழிவினைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாவோம்" என்றார்.
ஆகஸ்டு 2019இல் ஜெர்மனியில் உள்ள ஹம்பாச் காடுகளுக்குப் பயணித்த அவர், நிலக்கரிச்சுரங்கத்திற்காக அங்கு மரங்கள் வெட்டப்பட்டு அக்காடு அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று குரலெழுப்பினார்.


“2018வாக்கிலேயே நீங்கள் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தன் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் என்னை நோக்கிக் கேட்பர்” என்ற தன்பர்க், உரையின் நிறைவாக  “விதிமுறைகளுடன் விளையாடிக்கொண்டு நாம் உலகை மாற்றமுடியாது. ஏனென்றால் விதிகள் மாற்றப்படவேண்டும்” என்றார்.
“என் எதிர்ப்பைத் தெரிவிக்காவிட்டால் நான் இறந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன்” என்ற அவர் ஸ்வீடன் பாராளுமன்றத்தின் வெளியே துண்டறிக்கைகளை விநியோகித்தார். அதில் “நான் இதை ஏன் செய்கின்றேன் என்றால் பெரியவர்களாகிய நீங்கள் எங்களின் எதிர்காலத்தைப் பாழடித்துக்கொண்டிருக்கின்றீர்கள்”.
அவள் வகுப்பிற்குப் போகாமல் இருப்பதை அவளுடைய தந்தையார் விரும்பவில்லை. இருந்தாலும் அவளுடைய நிலைப்பாட்டை அவர் மதிக்கின்றார். அவள் வீட்டில் இருந்துகொண்டு மகிழ்ச்சியின்றி இருக்கலாம் அல்லது தன் எதிர்ப்பைத் தெரிவித்து மகிழ்ச்சியோடு இருக்கலாம். வீட்டிலுள்ளோர்  இறைச்சி உண்பதை விட்டுவிடவேண்டும் என்பதில் கவளமாக இருந்தாள். எங்களுடைய எதிர்காலத்தை அவர்கள் திருடிக்கொண்டிருக்கின்றார்கள் என்று கூறினாள். உலகளவில் அவளைப் பேசுவதற்கு அழைத்தபோதிலும் வெளிநாட்டிற்கு அவள் செல்லவில்லை.
அவள் வகுப்பினைத் தவிர்ப்பதை பற்றி அவளுடைய ஆசிரியர்கள் பலவாறான கருத்துகளைக் கூறுகின்றனர். "பொதுமக்கள் என்ற நிலையில் பார்க்கும்போது நான் செய்வது அவர்களுக்கு நல்லதாகத் தெரிகிறது. ஆசிரியர்கள் என்ற நிலையில் அவர்கள் என்னிடம் இதுபோன்றவற்றில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்". அவளுக்கு ஆதரவாகப் பேசும் ஆசிரியர் கூறுகிறார்: "கிரேட்டா தொந்தரவு தருபவளாகத் தெரிகிறாள். பெரியவர்கள் கூறுவதை அவள் கேட்பதில்லை. ஆனால் நாம் ஒரு பேரழிவினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதை உணரவேண்டும். அந்த வகையில்  சரியில்லாதது என நாம் நினைப்பதை சரி என்றே கொள்வோம். "


14 ஆகஸ்டு 2019இல் அமெரிக்காவிற்குப் படகில் புறப்பட்டார் கிரேட்டா தன்பர்க். 23 செப்டம்பர் 2019இல் நியூயார்க்கிலும், 2-13 டிசம்பர் 2019இல் சான்டியாகோவிலும் நடைபெறவுள்ள பருவநிலை மாநாடுகளில் கலந்துகொள்ள அமெரிக்கா பயணத்தை மேற்கொண்டார்.   

பயணித்துகொண்டிருக்கும்போதே தன் கடல் அனுபவங்களை டிவிட்டரில் பதிந்துகொண்டே வந்தார். தன் போராட்டம் தொடங்கி ஓராண்டு ஆனதையும் அதில் பதிந்திருந்தார்.  
விமானப்பயணத்தைத் தவிர்க்க படகில் பயணித்த அவர், 28 ஆகஸ்டு 2019 அன்று நியூயார்க் வந்தடைந்தார்.

30ஆகஸ்டு 2019இல் ஐ.நா.சபையின் முன்பாக போராட்டம்

மே 2019இல் பெங்குவின், கிரேட்டா தன்பர்க்கின் உரைகளைத் தொகுத்து No One Is Too Small to Make a Difference  நூலாக வெளியிட்டுள்ளது. கிரேட்டா தன்பர்க்கின் குடும்பக் கதை Scenes from the Heart என்ற தலைப்பில்  ஆங்கிலத்தில் 2019 இறுதிக்குள் வெளிவரவுள்ளது. 2018இல் ஸ்வீடிய மொழியில் தன்பர்க்கின் பெற்றோர், அவருடைய சகோதரி மற்றும் தன்பர்க்கால் எழுதப்பட்ட அந்நூலில் தன்பர்க்கின் தாயாரின் படம் இடம்பெற்றிருந்தது. ஜெர்மன் மொழியில் வெளியான நூலில் தன்பர்க்கின் புகைப்படம் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.  மே 2019இல் ஓவியக்கலைஞர்  ஜோடி தாமஸ் பிரிஸ்டல் நகரில் தன்பர்க்கின் 50 அடி உயரமுள்ள ஓவியத்தினை வரைந்திருந்தார். அதில் அவருடைய பாதி முகம் கடல் அலையிலிருந்து எழுவதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது.  மே 2019இல் வைஸ் அமைப்பு Make The World Greta Again  என்ற, ஐரோப்பாவின் இளம் போராட்டத் தலைவர்களின் பேட்டிகளைக்கொண்ட 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. 


தன்பர்க்கும் அவளுடைய சகோதரியும் அஸ்பெர்கர் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்களுடைய தாயார் கூறியுள்ளார். இக்குறைபாடு உள்ளோர் மற்றவர்களை புரிந்து கொள்வதிலும் மற்றவர்களுடன் பேசுவதிலும் எதிர்வினையாற்றுவதிலும் துன்பமுறுவர் என்றும், தங்கள் செயல்களில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருப்பர் என்றும், இது ஓர் வளர்ச்சிக் குறைபாடே அன்றி நோயல்ல என்றும், இக்குறைபாடு உள்ளவர்களால் பின்னர் நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளவும், பயனுள்ள பணிகளை ஆற்றவும் வெற்றிகரமான வாழ்க்கை மேற்கொள்ளவும் இயலும் என்றும் கூறுவர்.

நிறமற்றதையும், காற்றில் வெளிப்படுத்தப்படுகின்ற கண்ணுக்குப் புலனாகாத கார்பன் டை ஆக்ஸைடை கண்களால் காணும் அரிய சக்தி அவருக்குள்ளதாகவும், புகைபோக்கியிலிருந்து வெளியே வந்து அது சுற்றுச்சூழலை குப்பைமயமாக்குவதையும் அவளால் பார்க்க முடிவதாகவும், அதனால் அவர் பருவநிலைமாற்றத்திற்கு பங்களிக்கிறார் என்றும் அவருடைய தாயார் கூறுகிறார்.

பல பள்ளி மாணவர்கள் பருவநிலைப் போராளிகளாக ஆவதற்கு தூண்டுகோலாக அவர் ஏற்படுத்திய தாக்கத்தை, கிரேட்டா தன்பர்க் விளைவு என்று கூறுகின்றனர். பலவித சோதனைகளை எதிர்கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார்.