28 March 2020

தமிழகத்தின் முன்னணி நூலகங்கள் : முனைவர் கே.செந்தில்நாயகம், முனைவர் எஸ்.ஏ.சம்பத்குமார்

கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் 16.2.2020இல் நடத்திய பன்னாட்டுக்கருத்தரங்கில் நூலை வெளியிட்டு, கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மருதம் அமைப்பிற்கும், நூலாசிரியர்களுக்கும் நன்றி.



மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் நடத்தும் “சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள்” என்ற கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த  பொறுப்பாளர்களுக்கு என் நன்றி. ஐந்திணைகளில் ஒன்றான மருதத்தின் பெயரைக் கொண்டு அமைந்துள்ள இந்த மையம் கல்வி முன்னேற்றத்திற்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் அரிய பணிகளைச் செய்து வருவதோடு பேராசிரியர் பெருந்தகை, ஆசிரியர் பெருந்தகை என்ற விருதுகளையும் வழங்கிவருகிறது. அவ்வப்போது கருத்தரங்குகளை நடத்தி பதிவுகளை ஆவணப்படுத்தும் வகையில் 2019இல் “சோழ மண்டலப் படைப்பாளர்கள்” என்ற நூலினை வெளியிட்டுள்ளது.

தற்போது “சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள்” என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கினை நடத்தி கட்டுரைகளைத் தொகுப்பாக வெளியிடுகிறது. முனைவர் கே.செந்தில்நாயகம், முனைவர் எஸ்.ஏ.சம்பத்குமார் இணைந்து எழுதியுள்ள “தமிழகத்தின் முன்னணி நூலகங்கள்” (Pioneering Libraries in Tamil Nadu) என்ற ஆங்கில நூலையும் வெளியிடுகிறது. இந்நூலைப் பற்றிய கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 



அச்சு உலகைத் தாண்டி நூல்கள் மின்னூல் வடிவம் பெற்று வருகின்ற இந்த காலகட்டத்தில் அச்சு வடிவில் வெளியாகின்ற நூல்களைப் படிப்போரும் இருந்துவருவதைக் காணமுடிகிறது. இச்சூழலில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த நூல் வெளியாவது இத்துறை சார்ந்தோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் தமிழகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க  நூலகங்களைப் பற்றிய பறவைப்பார்வையைக் கொண்டு அமைந்துள்ளது. கோயில் நூலகங்கள், ஆதீன மற்றும் மடத்தின் நூலகங்கள்,  மைய மற்றும் மாநில அரசின் நூலகங்கள், தனியார் நூலகங்கள் ஆகியவை அடங்கும். நூலகத்தில் உள்ள நூல்கள், இதழ்கள், மைக்ரோபிலிம், டிஜிட்டல் வடிவம், பிரெய்லி, குறுந்தகடுகளின் எண்ணிக்கை, நூல்களின் பொருண்மை, வாசகர்களுக்கான வசதி, உறுப்பினர் ஆவதற்கான முறை, நூலகத்தின் பணி நேரம் போன்ற விவரங்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. நூல்கள் மட்டுமன்றி செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களும், நூலகத்தின் தொடக்கம், வளர்ச்சி நிலை, நூலகம் மென்மேலும் வளர்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் என்ற வகையிலான விவரங்களும் இந்நூலில் உள்ளன. ஆங்காங்கே வாசிப்பு மற்றும் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்த ஆன்றோர்களின் மேற்கோள்கள் பெட்டிச்செய்திகளாகத் தரப்பட்டுள்ளன. சில நூலகங்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட நூலகத்தின் பொதுக்கூறுகளும், சிறப்புக்கூறுகளும் பொருத்தமான இடங்களில் உள்ளன.

கோயில் நூலகங்களாக தற்போது இயங்கி வருகின்ற 1878இல் வெளியான ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் உள்ளிட்ட அரிய நூல்களைக்கொண்ட திருவரங்கம் கோயில் நூலகம்;  சிதம்பரம் கோயிலில் உள்ள பாண்டியர் கல்வெட்டினையும், திருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் உள்ள கல்வெட்டினையும் அடிப்படையாகக் கொண்டமைந்த, 13ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் கோயிலில் சுப்ரமணியர் சன்னதிக்கு வடபுறம் இருந்த சரஸ்வதி பண்டாரம்;

சுவடிகள் நூலகங்களாக காலின் மெக்கன்சி, லேடன், சி.பி.பிரௌன் உள்ளிட்டோரின் சுவடிகளைப் பாதுகாப்பதோடு கோயில் சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் படிகளைப் பாதுகாத்து, வெளியிட முயற்சி மேற்கொள்ளும் அரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம்; சாமிநாதையர் சேகரித்த நூல்கள், அவர் தம் கைப்பட எழுதிய கடிதங்கள், நாட்குறிப்புகள், மற்றும் பதிப்பிற்காகக் காத்திருக்கின்ற கையெழுத்துப்படிகளைக் கொண்ட டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகம்; சுவடிகள், நூல்கள், ஓவியங்கள், வரைபடங்கள் பாதுகாப்பு. சுவடிகள் நூலாக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம்;

மடங்கள் மற்றும் ஆதீனங்களின் நூலகங்களாக தம்பிரானின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவிய செப்பேடு உள்ளிட்ட, 14ஆம் நூற்றாண்டு கால செப்பேடுகள், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை படியெடுத்த காசி ரகசியத்தின் கையெழுத்துப்படி உள்ளிட்ட  ஓலைச்சுவடிகளைக் கொண்ட திருவாவடுதுறை ஆதீனம்; நூல்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பல தமிழறிஞர்களின் கையெழுத்துப்படிகளைக் கொண்டு, ஆவணங்களைப் பாதுகாப்பவதோடு ஞானசம்பந்தம் இதழை வெளியிடும் தருமபுரம் ஆதீனம்;  நூல்கள், ஓலைச்சுவடிகள், 1654-1827 காலச் செப்பேடுகளைப் பாதுகாப்பதோடு, குமரகுருபரர் இதழை வெளியிடும் திருப்பனந்தாள் காசி மடம்

அரசு மற்றும் தனியார்  நூலகங்களாக ஆங்கில, பிரெஞ்சு செவ்வியல் நூல் முதல் பதிப்புகளைக் கொண்ட சென்னை இலக்கியக் கழகம்; இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நடத்திய போர்களைப் பற்றிய 1861 நூல், அகழாய்வு அறிக்கைகளைக் கொண்ட இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை நூலகம்; இந்தியாவில் அதிக எண்ணிகையில் பௌத்த இலக்கிய சேகரிப்புகளைக் கொண்ட அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம்; 1553ஆம் ஆண்டைச் சேர்ந்த நூல் முதல் பல அரிய நூல்களுடன், சென்னைவாசிகளை உறுப்பினர்களாகக் கொண்ட வார நாட்களில் 9.00- 7.30 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30-6.00 வரையும் இயங்கி, ஆண்டுக்கு மூன்று  தேசிய விடுமுறைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விழா நாள்களைக் கொண்ட கன்னிமாரா நூலகம்; ஆரம்ப காலத்தில் அரசு வெளியீடுகள், அறிக்கைகள், சில நூல்கள்.  நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் மாதம் ரூ.250 ஊதியத்தில் 1924இல் பணியில் சேர்ந்த பெருமையைக் கொண்ட, அவரால் நூலகப்பகுப்பில் அகரவரிசைக்குப் பதிலாக பொருண்மைக்கு ஏற்றவாறு புதிய உத்தியான கோலன் பகுப்பினைக் கொண்ட சென்னைப்பல்கலைக்கழக நூலகம்; ஆவணங்களின் படிகளை வழங்குதல். தனியாருக்குத் தேவைப்படும் முன்னோரின் பிறப்பு, இறப்பு, திருமணம், தேசியம் உள்ளிட்ட ஆவண படிகளைத் தேடி வழங்குவதோடு  ஆவணங்களைக் காத்து வரும்  தமிழ்நாடு ஆவணக்காப்பகம்;  ஆங்கில மொழி கற்பிப்பதோடு, தற்காலிக ஆங்கில இலக்கியம் தொடர்பாக காலாண்டிதழ் வெளியிட்டு வரும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம்; ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம்; காப்புரிமை தொடர்பான ஆவணங்களைக் கொண்டுள்ளதோடு, தகவல் மையமாகச் செயல்பட்டுவருகின்ற காப்புரிமை அலுவலக நூலகம் (பேடண்ட் ஆபீஸ் லைப்ரரி); ரோஜா முத்தையாவின் சேகரிப்புகள் உள்ளிட்ட நூல்களைக் கொண்டு,  ஆவணக்காப்பகமாக இயங்கிவருகிற ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆகிய நூலகங்களைப் பற்றி இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது.

நூலகங்களுக்கு இந்நூலாசிரியர்கள் நேரில் சென்று உரிய தகவல்களைத் திரட்டியும், பிற ஆதாரங்களைத் தொகுத்தும் அளித்துள்ள விதம் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. பொதுமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும், நூலகத்துறையினருக்கும் பயன்படும் வகையில்  மிகவும் நுணுக்கமான தகவல்களைக் கொண்டு அமைந்த இந்நூல் ஒவ்வொரு நூலகத்திலும் இடம் பெறவேண்டிய நூலாகும். பெருமுயற்சி மேற்கொண்டு அருமையான நூலை போதிய தரவுகளைத் திரட்டித் தந்துள்ள ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 

"சமய இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகள்" என்ற தலைப்பில் இதே நாளில் வெளியான கருத்தரங்கத் தொகுப்பினைப் பற்றிப் பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.  
நூல் : Pioneering Libraries in Tamil Nadu
ஆசிரியர்கள் : Dr K.Senthilnayagam (96987 64708, senthilavcauto@gmail.com)
Dr S.A.Sambathkumar (94436 77943, saskumar59@gmail.com)
பதிப்பகம் : Nakshatra Pathipagam, Kumbakonam
பதிப்பாண்டு : November 2019
விலை : Rs.100


மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் நடத்தவுள்ள சித்திரைப்பெருவிழாவிற்கான பன்னாட்டுக் கவியரங்க அழைப்பிதழ். கவிதைகள் 30 ஏப்ரல் 2020க்குள் அனுப்பப்படவேண்டும். பிற விவரங்கள் அழைப்பிதழில் உள்ளன. ஆர்வம் உள்ளோர் கலந்துகொள்ள வேண்டுகிறேன். 


15 comments:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  2. நல்ல தகவல்களை நாங்களும் அறியத் தந்த முனைவர் அவர்களுக்கு எமது நன்றி

    தங்களது தொண்டுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள்.

    தொடரட்டும் உங்கள் சீரிய பணிகள்.

    ReplyDelete
  4. அரிய செய்திகளுடன் சிறப்பான பதிவு...

    மேலும் பல சிறப்புகளைத் தாங்கள் எய்த வேண்டும்...

    ReplyDelete
  5. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    தற்போது, தங்களது தமிழகத்தின் முன்னணி நூலகங்கள் : முனைவர் கே.செந்தில்நாயகம், முனைவர் எஸ்.ஏ.சம்பத்குமார் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    ReplyDelete
  6. மகிழ்ந்தேன்
    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  7. Thank you my dear for posting in your website elaborately I once again appreciate your active role in writing and publishing

    ReplyDelete
  8. மகிழ்ச்சி ஐயா...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. வாழ்த்துகள் அய்யா

    ReplyDelete
  10. கற்க வேண்டியது ஏராளம் ஆனால் முடியுமா என்பதே ஐயம்

    ReplyDelete
  11. நிறைய நல்ல தகவல்கள் ஐயா

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    கீதா

    ReplyDelete
  12. மருதம் கலை இலக்கிய ஆய்வு மையத்தின் தமிழ்ப் பணிகள் பற்றி எழுதியமைக்கு பேரா.ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கு நன்றி.

    மருதம் கோமகன்
    முனைவர் மா.கோ.பெரியசாமி
    குடந்தை

    ReplyDelete
  13. நூலகங்கள் ஒரு நாட்டின் அறிவைப் பெருக்கும் கோவில்கள்
    அருமையான தகவல் திரட்டு
    பாராட்டுகள்

    ReplyDelete
  14. அருமையான தகவல்கள், தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். தஞ்சை அப்பாண்டை ராஜ்

    ReplyDelete
  15. அய்யா,
    வணக்கம்.தங்களது தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete