22 August 2020

மனதில் நிற்கும் விநாயகர் சதுர்த்தி

எந்தவொரு விழா என்றாலும் இளமைக்கால நினைவுகள் இயல்பாக வந்துவிடுகின்றன. நம் ஆழ்ந்த மனதில் தங்கியிருப்பதால் அந்த நினைவு வருகிறதா அல்லது இயல்பான சூழலில் வருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் அந்நினைவு மனதிற்குத் தருகின்ற இன்பத்திற்கு ஈடாக எதனையும் ஒப்பிட முடியாது.

கும்பகோணத்தின் கோயில்களில் என்றுமே திருவிழாதான். தேரோட்டம், தெப்பம், விழா நாள்களில் இறைவனின் வீதியுலா போன்றவை மனதில் என்றென்றும் இருக்கின்ற வகையில் இல்லங்களில் ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களைக் கொண்டாடப்படும்போது நம்மையும் அறியாமல் இறையுணர்வு வெளிப்படுவதை உணர்ந்துள்ளேன்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாளே விநாயகர் வீட்டிற்கு வருவதைப் பற்றிய எண்ணங்கள் இருந்துகொண்டே இருக்கும். எங்கள் அப்பா சிறிய மண்ணாலான விநாயகரை வாங்க என்னையும், தங்கையையும், தம்பியையும் அழைத்துச் செல்வார்.  சில சமயங்களில் யாராவது ஒருவர் மட்டும் போவோம். கும்பேஸ்வரர் கோயில் வடக்கு வீதி, பெரிய தெரு, கீழ வீதி உள்ளிட்ட பல இடங்களில் தரையில் அழகாக களிமண்ணாலான விநாயகரை வரிசையாக அடுக்கி விற்பனைக்கு வைத்திருப்பார்கள். ஒவ்வொருவர் செய்திருப்பதும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருக்கும். விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விநாயகரை வாங்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும்.

எங்கள் வீடு இருந்த சம்பிரதி வைத்தியநாதன் தெருவினை அடுத்துள்ள சிங்காரம் செட்டித்தெருவிலிருந்தும் அவ்வாறான விநாயகர் சிலைகளை செய்து எடுத்துச்செல்வதைப் பார்த்துள்ளோம். மட்பாண்டங்கள் செய்பவர்களின் குடும்பங்கள் அங்கு இருந்த நினைவு. மண் சட்டிகள், அடுப்புகள் உள்ளிட்ட களிமண் பாண்டங்களை அங்கு தயாரிப்பதையும், சூளையில் இடுவதையும் பார்த்துள்ளேன். எங்கள் உடல்நிலை சரியில்லையென்றால் நெற்றியில் பத்து போடுவதற்காக எங்கள் ஆத்தா எங்களை அங்கு அழைத்துச் செல்வார். அங்கு ஒரு கலயத்தில் செம்மண் கலந்த நிலையில் உள்ள ஒரு திரவத்தை நெற்றியில் தடவுவர். வீட்டிற்கு வந்து சில மணி நேரங்களில் உடல்நிலை குணமாகிவிடும்.  

விழா நாளன்று காலை வீட்டிலிருந்து கிளம்பி, கும்பேஸ்வரர் வடக்கு வீதி வழியாக விநாயகரை வாங்கச் செல்வோம். எங்களுக்குப் பிடித்த விநாயகரை வாங்கி வீட்டிற்குக் கையில் எடுத்துக்கொண்டு வருவோம். கடையிலிருந்து அதனை வாங்கி, கீழே விழுந்துவிடாதபடி மார்பில் அணைத்தபடி எடுத்து வரும்போது கோயில்களில் உற்சவமூர்த்தி உலா வரும் நினைவிற்கு வந்துவிடும். ஒரு புறம் அது கீழே விழுந்துவிடக்கூடாது என்ற பயம். மறுபுறத்தில் இறைவனையே நாம் தூக்கி வருவது போன்ற எண்ணம். வரும் வழியிலேயே எங்கள் வயதையொத்த நண்பர்கள் அதனை வாங்கிச் செல்வதைப் பார்த்து ஒப்பு நோக்குவதும் உண்டு. அவ்வாறு வரும்போது ஆடிப்பெருக்கன்று வரிசையாக சப்பரம் ஓட்டிச் செல்லும் நினைவும் வருவதுண்டு.

வீட்டில் வந்தவுடன் அந்த விநாயகரை சாமியறையில் வைத்து, அதனை அலங்கரித்துப் பார்த்துக் கொண்டேயிருப்போம். நவராத்திரியின்போது கொலு பொம்மைகளை அலங்கரிக்கும் அனுபவத்தில் அந்த விநாயகரை அழகுபடுத்தி, பூ போட்டு வைப்போம். ஆரம்ப காலத்தில் எங்கள் ஆத்தாவும், பின்னர் எங்கள் அம்மாவும் அந்த விநாயகருக்காக கொழுக்கட்டை செய்து அருகில் இருந்து பார்த்துக் கொண்டேயிருப்போம். அவருக்குப் படைக்கும்போது அவருடைய வாயில், நாங்கள் தருவதை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்ற நம்பிக்கையில், தருவோம். நாங்கள் தந்ததை அவர் ஏற்றுக்கொண்டதாக மன நிறைவு. வீட்டில் பிறந்த ஒரு குழந்தையைச் சீராட்டுவதைப் போல அந்த விநாயகரைக் கவனிப்போம். மாலை நெருங்க நெருங்க அவ்விநாயகர் நம்மை விட்டுச் சென்று விடுவாரே என்ற ஏக்கம் வந்துவிடும்.

எங்கள் வீட்டில் கிணறு இருந்தது. அந்தக் கிணற்றில் விநாயகரைக் கரைப்பதற்கான நிகழ்வுகள் ஆரம்பிக்கும். அக்கிணற்று நீர் மிகவும் ருசியாக இருக்கும். எங்கள் கிணற்று நீரின் ருசியினை இதுவரை நான் எங்கும் கண்டதில்லை. மிக பக்தியோடு விநாயகரை எடுத்து வருவோம். எங்களுக்குள் யார் அந்த விநாயகரைக் கிணற்றில் போடுவது என்ற சிறு சலசலப்பு ஏற்படும். சிறிது நேரத்தில் அது மறைந்து அனைவரும் சேர்ந்தே போடுவோம் என்று முடிவெடுப்போம். ஒன்றாகச் சேர்ந்து விநாயகரைக் கிணற்றில் போடுவோம். “இந்த வருஷம் போய்ட்டு, அடுத்த வருஷம் வா, பிள்ளையாரப்பா” என்று கூறிக்கொண்டே போடுவோம். கிணற்றில் இட்டுவிட்டு உள்ளே வந்த சில மணி நேரங்கள் மனது என்னவோ போலிருக்கும். அடுத்த வருடம்தான் நாம் மறுபடியும் பார்க்கப்போகிறோமே என்ற எண்ணம் வந்தவுடன் மனதில் மகிழ்ச்சி தோன்றும். சாதாரணமாக கிணற்றுப்பக்கம் போகும்போதுகூட அவ்வப்போது விநாயகர் மனதில் தோன்றுவார்.

தஞ்சாவூருக்கு வந்த பின்னர் இரு மகன்களும் வளர்ந்து திருமணமாகி வேலைக்காக வெளியூர் சென்ற நிலையிலும் என் மனைவியும், மருமகள்களும் அந்தப் பழக்கத்தைக் கடைபிடித்து, தொடர்ந்து வருகின்றனர். இதுபோன்ற விழா நாள்களில் இளமைக்கால நினைவுகள் இயல்பாக வந்துவிடுகின்றன.

குடும்பத்தில் ஒருவராக இறைவனை வீட்டில் வணங்கிய காலம். கூட்டுக்குடும்பத்தின் மகிழ்ச்சி விரவியிருந்த காலம். ஆடம்பரம், பகட்டு என்றால் என்னவென்றே தெரியாத காலம்.  உண்மையான பக்தி வியாபித்திருந்த காலம். விநாயகரை விளம்பரப்பொருளாக ஆக்காத காலம். அந்த இளமைக்காலத்தையும், விநாயகரையும், கும்பகோணம் வீட்டுக் கிணற்றையும் மறக்கவும் முடியுமோ?     

15 August 2020

15 ஆகஸ்டு 1947 : தி இந்து (ஆங்கிலம்) சுதந்திர தின இதழ்

சந்தாதாரர் என்ற வகையில், 15 ஆகஸ்டு 1947ஆம் நாளன்று வெளியான இதழினை மின்னஞ்சலில் The Hindu எனக்கு அனுப்பியிருந்தது. வரலாற்றுப் பக்கங்களைத் திரும்பிப் பார்க்கின்ற நல்ல வாய்ப்பினை அதன்மூலம் பெற்றேன். முன்னுரை மற்றும் முகப்புப்பக்கத்துடன், அந்நாளில் வெளிவந்த The Hindu 12 (1-12) முதன்மைப்பக்கங்களையும் +20 (I-XX) இணைப்புப்பக்கங்களையும் அவ்விதழ் கொண்டிருந்தது. முதல் மூன்று பக்கங்கள் முழுக்க விளம்பரங்களைக் காணமுடிந்தது. 74ஆவது இந்திய சுதந்திர தின நாளில், இந்த சிறப்பிதழின் சில பக்கங்களைக் காண்போம். 











நகரம் முழுவதும் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே சென்னையிலும் சுதந்திர இந்தியாவின் பிறப்பினைக் காண விழாக்கோலம் பூண்டது. நகரில் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வணிகள் போட்டி போட்டுக்கொண்டு தம் வளாகங்களை அலங்கரித்திருந்தனர். அரசுக்கட்டடங்களில் காலை தேசியக்கொடி ஏற்றப்படவிருந்தபோதிலும், வணிக நிறுவனங்கள் நேற்று மாலையே கொடியை ஏற்றிவைத்திருந்ததைக் காணமுடிந்தது.  தேசியக்கொடி அணியாத எவரையும் காணமுடியவில்லை. (Celebration in Madras, p.4) 

சென்னை அரசின் பிரதமரும் பிற அமைச்சர்களும் நாளை காலை 9.00 மணியளவில் பதவிப்பிரமாணம் மேற்கொள்ள உள்ளார்கள். (Ministers to take oath, p.4) 

சென்னை மாநகராட்சியின் ஆணையர், மேயருடன் விவாதித்தன் அடிப்படையில், ரிப்பன் கட்டடத்தில், மேற்கொள்ளப்படவுள்ள நிகழ்ச்சி நிரலைத் தெரிவித்தார். (Corporation Programme, p.4) 

சுதந்திர தின விழாவினை நாளை துறைமுகத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்படுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக துறைமுகம் திறந்துவிடப்படும். கொடி ஏற்றப்படும்போது துறைமுகத்திலும், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களிலிருந்தும் ஒலி எழுப்பப்படும். கப்பல்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.  (Arrangements at Port Trust, p.4) 

மைலாப்பூரிலுள்ள இந்துஸ்தான் சாரணியர் அமைப்பின் தலைமையகத்தில் தேசியக்கொடி ஏற்றிவைத்த தொழில்துறை அமைச்சர் சீதாராம ரெட்டி வெற்றியைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் நம் நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்த தியாகசீலர்களை நினைவில்கொள்வதோடு, தேசத்திற்காக அவர்கள் ஆற்றிய தியாகத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். (Ministers’ advice to scouts, p.4) 

இந்திய சுதந்திர தினத்திற்காக ஆகஸ்டு 15 வெள்ளிக்கிழமை அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. (Holiday for post offices, p.4)

கல்கத்தாவில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உள்ள அனைத்துப்பகுதிகளிலும், முழுவதிலும் எங்கும் கொடி ஏற்றப்பட்டிருந்தது. மின் விளக்குகளால் எங்கும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கல்கத்தா முழுவதும் விழாக்கோலமாகக் காட்சியளித்தது. (Calcutta en fete, p.4) 

நாளை நாம் அந்நியப் பிடியிலிருந்து வெளியேறுகின்ற நாள் என்ற வகையில் கொண்டாடுவதற்கான நாளாகும் என்று இன்று மாலை நடைபெற்ற பிரார்த்தனைக்கூட்டத்தில், மகாத்மா காந்தி கல்கத்தாவில் கூறினார். இந்தியாவின் நலனுக்காக அந்த நாள் 24 மணி நேரமும் நாம் பிரார்த்தனையையும் விரதத்தினையும் கடைபிடிப்பதோடு, இயலும் வரையில் நூல் நூற்போம் என்றார். கையால் நூற்றல் என்பதானது ஏழையையும் பணக்காரரையும் ஒன்றிணைப்பதோடு தொழிலில்லாத எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் கையால் நூல் நூற்றல் பெரும் தொழிலாக அமைந்துள்ளது என்றார். பிரார்த்தனைக்கூட்டத்தில் இருந்த மக்கள் எந்தவித சிறு இடையூறுமின்றி அமைதியாக அவருடைய பேச்சைக் கேட்டனர். (Day of prayer and fast, p.4) 

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக, இந்திய தேசிய காங்கிரஸால் முதல் விதை விதைக்கப்பட்ட இடமான பம்பாய் விழாக்கோலமாகக் காட்சியளித்தது. மேகத்தைக் கிழித்துக்கொண்டு மின்னொளி எங்கும் பரவியிருந்ததைக் காணமுடிந்தது. பாமரனுக்கு சிறிதே வித்தியாசமாகத் தெரிந்த காங்கிரஸ் கொடியிலிருந்து சற்றே மாறுபட்ட, இந்தியாவின் மூவர்ணக்கொடியானது பம்பாயின் புகழ் பெற்ற கட்டடங்களின் உச்சியில் பட்டொளிவீசிப் பறந்தது. (Celebrations in Bombay, p.4) 

வியாழக்கிழமை நள்ளிரவில் புதிய இந்தியா (Dominion) பிறந்தது. வரலாற்றுச்சிறப்புமிக்க கூட்டு அவையானது நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பெற்றதோடு, லூயி மௌண்ட்பேட்டன் பிரபுவை டொமினியனின் முதல் கவர்னர் ஜெனரலாகத் தேர்வு செய்ததற்கான ஒப்புதலை வழங்கியது. அதற்கு முன்னதாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிர் ஈந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர், “நம் அன்பினையும் மரியாதையையும் மகாத்மா காந்திக்குச் செலுத்துவோம். அவர் நமக்கு ஒரு கலங்கரை விளக்காக, வழிகாட்டியாக, தத்துவஞானியாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்துள்ளார்.” இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் நல்லமுறையில் நடத்தப்படுவர் என்ற உறுதிமொழியைத் தந்தார். குடிமகனுக்குரிய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என்றும், அதே சமயம் அவர்கள் தாம் வாழும் நாட்டிற்கும், சட்ட அமைப்புக்கும் நன்றியுணர்வோடு நடந்துகொள்ளவேண்டும் என்றும் கூறினார். அவை உறுப்பினர்கள் இந்தியாவிற்காகவும், அதன் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்துக்கொள்வதான தீர்மானத்தை நேரு கொண்டுவந்தபோது தன் எழுச்சிமிகு உரையில் இந்தியாவிற்கான சேவை என்பதானது பாதிக்கப்பட்ட கோடானு கோடி பேருக்கான சேவை என்பதே என்றும், நம் தலைமுறையினரின் மாமனிதரின் இலக்கானது ஒவ்வொருவர் கண்ணிலிருந்து ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் துடைக்க வேண்டும் என்பதே என்றும், அது நமக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் கண்ணீரும் கம்பலையும் இருக்கும் வரை நம் பணியானது தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்றும் கூறினார். ஒருமித்த வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டடபின் உறுப்பினர்கள் சரியாக 12.00 மணிக்கு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திருமதி ஹன்சா மேதாவால், இந்திய மகளிர் சார்பாக வழங்கப்பட்ட தேசியக்கொடியைப் பெற்றபின் அவையானது ஒத்திவைக்கப்பட்டு. வெள்ளிக்கிழமை காலை கூடுவதாக அறிவிக்கப்பட்டது.  (Free India is born, p.5)

மறக்க முடியாத நாள் என்ற தலைப்பில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு, மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் பங்களிப்பு, இரு உலகப்போர்களின் தாக்கம், பிரிவினையின் சோகம் உள்ளிட்டவை  மிகவும் சிறப்பாக விவாதிக்கப்பட்டுள்ளன. (The Red letter day, p.5)  இந்திய அமைச்சரவையின் இடம்பெறும் அமைச்சர்கள், பாகிஸ்தான் உதயம், உலக உரிமைகளில் இந்தியாவின் பங்கு, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் உள்ளிட்ட பல செய்திகள் இப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளன. நேரு, ஆச்சார்ய கிருபளானி, சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரி, சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், மௌலானா ஆஸாத், சர் டெரன்ஸ் ஷோன், ஹென்றி கிராடி, பிரதமர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் வாழ்த்துச் செய்திகள், (Independence Day: Leaders messages, p.7, Dominion of Indian Government, p.8)  இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி என்ற தலைப்பிலான செய்தியில் அவருக்குப் புகழாரம் (Father of the Nation: India’s debt to Mahatma Gandhi, p.12, Greatness of Bharathi: Contribution to culture, p.12) உள்ளிட்ட பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. சுதந்திர தின செய்திகளைத் தவிர பிற செய்திகளையும் காணமுடிந்தது.     

முதல் பக்கத்தில் ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி மற்றும் நாம் இருவர் திரைப்படங்களுக்கான விளம்பரம் வெளிவந்துள்ளது. பல நிறுவனங்கள் சுதந்திர நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து தேசியக்கொடி, வந்தே மாதரம், தியாகிகளைப் போற்றல், சுதந்திர உதயம், புதிய விண்மீன் பிறந்தது, அடிமைத்தளையிலிருந்து விடுதலை, உறுதியேற்போம், ஆசியாவின் ஜோதி நம் தேசியக்கொடி, நாட்டை வணங்குவோம், தேசியக்கொடிக்கு வணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை, நாட்டிற்கு வெற்றி, இறுதியாக சுதந்திரம், சுதந்திரத்தின் அடையாளம், வரலாற்றின் சிறப்புமிக்க நாள் 15 ஆகஸ்டு 1947 என்பன போன்ற பொருண்மைகளையும் சொற்களையும் தேசியக்கொடி மற்றும் இந்தியாவின் வரைபடங்களின் பின்புலத்தோடு விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளுக்கான ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் விளம்பரங்கள் உள்ளிட்ட பல விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

இவ்விதழில் வெளியான தமிழ்க்கலைக்களஞ்சியம் தொடர்பான செய்தி (Encyclopaedia in Tamil: One lakh fund to be collected, The Hindu, 15 August 1947, p.10): “தமிழில் கலைக்களஞ்சியம் : ஒரு இலட்ச ரூபாய் திரட்டப்படவுள்ளது” தமிழில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளிக்கொணர ஒரு இலட்ச ரூபாய் திரட்டுவதற்கான ஓர் இயக்கத்தை கல்வியமைச்சர் திரு டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் ஆரம்பித்துள்ளார். நிதி கேட்ட அவருடைய வேண்டுகோளின் அடிப்படையில் இதுவரை ஏழு நபர்களிடமிருந்து ரூ.33,000 பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் விவரம் : டாக்டர் ஆர்எம்.அழகப்ப செட்டியார் மற்றும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் (ஒவ்வொருவரும் ரூ.10,001), திருவாரூர் திரு விஎஸ்.தியாகராஜ முதலியார் மற்றும் சிவகங்கை ராஜா (ஒவ்வொருவரும் ரூ.5,000), கொட்டையூர் திரு கேவி ஏஎல்எம் ராமநாதன் செட்டியார்,  தேவக்கோட்டை திரு ஏஎல் ஏஆர் சோமநாதன் செட்டியார் மற்றும் கண்டனூர் வி.டி.வீரப்ப செட்டியார் (ஒவ்வொருவரும் ரூ.1,001). 

15 ஆகஸ்ட் 1947இல் வெளியான இந்த முழு இதழையும் பெற விரும்புவோர் விருப்பம் தெரிவித்தால் புலனவழி (9487355314) அவர்களுக்கு அனுப்புவேன். இதுவரை பல நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் இதனை அனுப்பியுள்ளேன். 

வழக்கம்போல எங்கள் இல்லத்தில் இன்று (15 ஆகஸ்டு 2020) சுதந்திர தின நாளையொட்டி கொடியேற்றினோம்.



08 August 2020

முதல் மொழியாக்க அனுபவம்

The Hindu இதழில் வெளியான (“Cooperation, not confrontation”, Alladi Kuppuswami, 16.8.1999, p.12) கட்டுரை 1999இல் முதன் முதலாக நேரடியாக மொழியாக்கம் செய்தது மறக்கமுடியாத அனுபவம் ஆகும்.

1970களின் இடையில் The Hindu வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் புதிய சொற்களுக்கான பொருளைத் தேட ஆரம்பித்தேன். பின்னர் சிறு சிறு பத்திகளை அவ்வப்போது மொழியாக்கம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். சோதனை முயற்சியாக, பெரிய கட்டுரை ஒன்றை மொழியாக்கம் செய்ய எண்ணி இக்கட்டுரையை எடுத்துக்கொண்டேன்.

முதன்முதலாக ஆங்கிலக்கட்டுரையை நேரில் பார்த்துத் தட்டச்சு, தமிழ்த் தட்டச்சுப் பொறியில் தொடர்ந்து, இடைவெளியின்றி ஒரே அமர்வு, தவறு வந்துவிட்டால் திருத்தமுடியாத நிலையில் கவனம் செலுத்துதல், அகராதிகளைப் பார்க்காமல் நேரடியாக மொழியாக்கம், முடிந்தவரை எளிய சொற்களைப் பயன்படுத்தியது என்ற வகையில் மொழியாக்கம் அமைந்தது. ஒவ்வொரு பத்தி ஆரம்பிக்கும்போதும் இடைவெளி, ஒவ்வொரு வாக்கியமும் முடிந்தபின் ஒற்றை எழுத்து இடைவெளி, தேவையான இடங்களில் இடைக்கோடு, வலது பக்கம் தாளுக்கு வெளியே சென்றுவிடாமல் தட்டச்சு போன்றவற்றை மனதில் வைத்துக்கொண்டு இதனைச் செய்தேன். இதற்காக முன்வரைவோ, தற்காலிகப் பதிவோ எடுக்கவில்லை. இது முதலில் நேரடியாக (original) தட்டச்சிடப்பட்டதாகும். இதனை 65 நிமிடங்களில் தட்டச்சு செய்து அதனையும் குறிப்பிட்டுள்ளேன். சுமார் 10 இடங்களில் தட்டச்சுப்பிழை இருந்தது. அதனை திருத்தும் வெண்மை மை (correcting fluid) கொண்டு சில இடங்களில் திருத்தினேன். என்னைப் பொருத்தவரை இதனை ஒரு சாதனையாகவே அப்போது எண்ணினேன். அதனை இன்னும் பாதுகாத்து வருகிறேன்.

முந்தைய மொழியாக்கத்தைப் பார்க்காமல் தற்போது நான் மொழியாக்கம் செய்த முதல் பத்தி : “மகாத்மா காந்தியின் தலைமையின்கீழ் அகிம்சை என்ற ஆயுதத்தோடு நாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தபோது நாம் நமக்கிடையே இருந்த ஜாதி, இனம், சமயம், இடம், பாலினம் உள்ளிட்ட அனைத்து வேற்றுமைகளையும் மறந்தோம். மிக மோசமான போலீசாரின் லத்தியை பலர் எதிர்கொண்டார்கள். பலர் சிறைக்குச் சென்றனர். அவர்கள் தம் சுதந்திரத்தை மட்டுமன்றி தம் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் இழந்தார்கள். இந்த வெற்றிக்கு ஆடவர்-மகளிர், பணக்காரன்-ஏழை, கல்லாதவர்-கற்றவர் என்ற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இருந்தது.”






நாளடைவில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழியாக்கம் செய்வதற்கும் இதுபோன்ற அனுபவம் உதவியது. தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், பொறியியல் போன்ற துறை தொடர்பானவற்றை மொழியாக்கம் செய்வதில் சற்றே சிரமம் உள்ளதால் அதில் கவனம் செலுத்துவதில்லை.  மொழியாக்கம் தொடர்பான பிற அனுபவங்களைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.