05 March 2026

சைவ சித்தாந்த நன்னெறி: ச.சௌரிராசன்

சித்தாந்தச் செம்மணி, சிவத் தமிழ்ச் செல்வர் ச.சௌரிராஜன் எழுதியுள்ள சைவ சித்தாந்த நன்னெறி என்னும் நூல் அருளாசியுரை, வாழ்த்துரை, அணிந்துரை, முன்னுரை ஆகியவற்றுடன் சைவ சித்தாந்தம், அடிப்படைச் செய்திகள், குரு மரபு, சைவ சித்தாந்த சாத்திரங்கள், பதி உண்மை-இயல்பு, பசு உண்மை-இயல்பு, ஆணவ மல உண்மை-இயல்பு, கன்ம மல உண்மை-இயல்பு, மாயா மல உண்மை-இயல்பு, இறைவன்-சிவசத்து, குருநாதர் ஞானத்தை உணர்த்தும் முறை, சீவன் முத்தரின் வாழ்வும் சாதனைகளும், பாச நீக்கம், சிவப்பேறு, அணைந்தோர் தன்மை என்னும் 15 தலைப்புகளையும் கொண்டு அமைந்துள்ளது.


திருவாவடுதுறை ஆதீனம் நடத்துகின்ற சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பின் ஆசிரியராக நூலாசிரியர் சைவ அன்பர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். இந்தப் பயிற்சி வகுப்பில் மாணவராக நானும் இருந்தது எனக்குக் கிடைத்தப் பெரும் பேறாகும். சைவ சித்தாந்தக் கருத்துகளை சரியான உதாரணங்களோடு மிகவும் நிதானமாக மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் வகுப்பில் அவர் கூறுவதைக் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. தொடர்ந்து சைவப்பணியாற்றிவருகின்ற அவர், தன்னுடைய பல்லாண்டு அனுபவத்தை அனைவருக்கும் சென்று சேரும் வகையில் நூலாக்கித் தந்துள்ளவிதம் போற்றத்தக்கதாகும். ஒரு பறவைப்பார்வையாக நூலைக் காண்போம்.

“….பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருள்களும் என்றும் உள்ள அனாதி நித்தியப் பொருள்கள் என்று சைவ சித்தாந்தம் ஆய்ந்து கூறுகிறது. இந்தக் கருத்தைத் திருமூலதேவ நாயனாரும் ‘பதியினைப் போல் பசு பாசம் அனாதி’ என்று அருளிச் செய்துள்ளார்.” (பக்கம்.9)

“தண்ணீரின் சிறப்பு இயல்பு குளிர்ச்சி. தண்ணீர் நெருப்போடு தொடர்பு கொள்வதன் காரணமாகச் சுடு நீர் ஆகிறது. குளிர்ந்த நீர் நெருப்போடு தொடர்பு கொண்டு சுடுநீர் ஆகிய நிலை நீரின் பொது இயல்பு. அந்தத் தன்மை நீண்ட நேரம் நிலைப்பது இல்லை. சிறிது நேரம் கழித்துத் தனது இயற்கை இயல்பான குளிர்ச்சி நிலையை அடைந்துவிடுகிறது. ஆகவே நீருக்குக் குளிர்ச்சி, சிறப்பு இயல்பாகவும், சூடு பொது இயல்பாகவும் அமைகிறது. இதுவே சைவ சித்தாந்தம் சிறப்பு, பொது இயல்புகளுக்குக் கூறும் இலக்கணம் ஆகும்.” (ப.17)

“காட்டில் மானைப் பிடிக்கச் செல்பவர்கள், தங்கள் வீட்டில் பழக்கிய மானைக் காட்டிற்குத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். அந்த மானைக் காட்டி, காட்டில் உள்ள மான்களைப் பிடிப்பார்கள். இவ்வாறு மானைக் காட்டி மானைப் பிடிப்பார் போல, உயிர்களை உய்விக்கச் சிவபெருமானே மானுடச் சட்டை தாங்கிக் குருநாதனாக வருகிறான்.” (ப.20)

“மானிடப் பிறவியின் பயன் சிவ வழிபாடே ஆகும். வழிபாட்டிற்காக அமைந்துள்ள மகேசுவரத் திருமேனிகளின் மேன்மையை அறிந்து வழிபடுவது அளவில்லாத நன்மைகளைத் தரும்.” (ப.104)

“உடம்பைத் தனக்கு இடமாகக் கொண்டு, உடம்பிற்கு வேறாய், இன்ப துன்பங்களை அறிந்து அனுபவித்து வருகின்ற அறிவுப்பொருளே உயிர் அல்லது ஆன்மா என்று சைவ சித்தாந்தம் தெளிவாகக் கூறுகிறது.” (ப.151)

“சித்தாந்த சைவம் பேச்சுக்குரிய தத்துவங்களைக் கொண்டது அல்ல; வாழ்வுக்குரிய நெறிகளைப் போதித்து, வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவது ஆகும். எனவேதான் வழிபாட்டிற்கு அடிப்படையாக ஒழுக்க நெறி நிற்றலைச் சைவம் வலியுறுத்துகிறது.” (ப.236)

“சைவ சாதனங்களில் நாம ஜபம் மிகச் சுலபமானது. அம்மையப்பரின் திருப்பெயரைச் சொல்லக் குழந்தைகளாகிய நம் எல்லோருக்கும் உரிமை உண்டு. அம்மையப்பரின் திருப்பெயரைச் சொல்வது குழந்தைகளாகிய நமக்குக் கடமையாகிறது.….சிவாயநம சிவாயநம என்று அவனது திருப்பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் ‘இவன் என்னைப் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டே இருக்கிறான். நாம் தரிசனம் தரும் வரை அழைப்பதை நிறுத்தமாட்டான். இவனுக்குத் தரிசனம் தந்து அருள் புரிய வேண்டும்’ என்று நினைத்துச் சிவபெருமான் நேரே வந்து தரிசனம் தருவார்…” (ப.458)

“…திருநீறு அணிந்து கொள்பவர்களை வினைகள் அணுகாது; உடல் சுத்தமாகும்; நெற்றியிலே சிவபெருமான் சக்தியோடு இருந்தருள்வார்; முகத்திலே திருமகள் (லட்சுமி) தாண்டவம் செய்வாள். மனத்திலே சஞ்சலம் வராது; நித்தியமான பேரானந்தப் பெருவாழ்வு கிடைக்கும். மேலும், திருநீறை அணிபவரைச் சிவசக்தி வடிவம் என்றே கூறலாம்…..” (ப.500)

சித்தாந்தத்தைக் கற்று அதன்படி நடந்தால் முத்திப்பேறு மட்டுமல்லாமல் இவ்வுலக வாழ்வும் கூட அமைதி நிறைந்ததாக அமையும் என்று முன்னுரையில் கூறும் நூலாசிரியர், சைவ சித்தாந்தக் கருத்துகள் அனைவருக்கும் சென்றுசேரவேண்டும் என்ற நன்னோக்கில் மிக எளிமையாக நூலைப் படைத்துள்ளார். அவருடைய எழுத்துப்பணியும், சைவப்பணியும் தொடர்ந்து சிறக்க எல்லாம்வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.

தலைப்பு : சைவ சித்தாந்த நன்னெறி
ஆசிரியர் : சித்தாந்தச் செம்மணி, சிவத் தமிழ்ச் செல்வர் ச.சௌரிராஜன்
பதிப்பகம் : மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை, 13/37, மேல சாலைக்காரத் தெரு, அம்மாப்பேட்டை 614 401, தஞ்சாவூர் மாவட்டம், அலைபேசி 94865-76561/99440-13133
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, 2017
விலை : ரூ.350
--------------------------------------------------------------------

இடமிருந்து: நூலாசிரியர் ச.சௌரிராஜன், பா.ஜம்புலிங்கம், பா.சக்திவேல்
(அம்மாபேட்டை, அருணாசலேஸ்வரர் கோயில், 6.6.2022)
--------------------------------------------------------------------