09 April 2026

யாவரும் கேளீர்: வாழ்க, வளர்க..

 அன்பு நண்பர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அனுப்பிவைத்த யாவரும் கேளீர் (ஏப்ரல் 2026) முதல் இதழ் கிடைக்கப்பெற்றேன். ஆசிரியர் உரையுடன் தொடங்கும் இவ்விதழ் பெண்ணியம் அறிதலும் புரிதலும், அமெரிக்க எழுத்தாளர் சக்தியின் தமிழ்மொழிப் பற்றும் படைப்புலகமும், ஒரு நிமிடக்கதை உணர்த்தும் பெண்ணியச் சிந்தனை, சாவித்திரிபாய் புலேயின் பெண் கல்வியை மையமிட்ட அறிவாயுத நுண்ணரசியல், பெண்ணிய நோக்கில் ஒப்பாரிப்பாடல்கள், ஆன்மீக வழி நடந்த ஆளுமை அன்னை தமிழ்ச்செல்வி தங்கம்மா, சில விலங்குகளின் பெயர்களில் சாதி பாரபட்சம், பொன்னாடை, அவர்கள் பெண் வீராங்கனைகளை, சங்க ஔவையார் பாடல்களில் வாழ்வியல் வெளிப்பாடுகள், எழுத்தாளர் கேத்தரீன் ஆரோக்கியசாமி, உடன்கட்டை ஏறுதல்-ஒழிக்கப்பட்ட வரலாறு, கழிகல மகளிர் கைம்பெண் குறித்த சிறுகதைகள் என்ற தலைப்புகளைக் கொண்ட ஆய்வுக்கட்டுரை, கதை, எழுத்தாளர் அறிமுகம் உள்ளிட்ட சிறப்பான பதிவுகளைக் கொண்டு பெண்ணிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

திருச்சியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற அங்குசம் சமூக நல அறக்கட்டளை சார்பில் பொதுக்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைளை உள்ளடக்கிய ஓர் இடைநிலை இதழாகக் கொண்டு வரும் முயற்சி இது என்று இதழாசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறார். அதன் வெளிப்பாடானது சிறந்த முறையில் இதழில் பிரதிபலிப்பதைப் படிக்கும்போது உணரமுடிந்தது.


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப்பணியாளராக அறிமுகமாகி பல்வேறு நிலைகளில் பரிணமித்து திருச்சி, தூய வளனார் கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணி நிறைவு பெற்ற நெடுஞ்செழியனின் முயற்சி மிகவும் போற்றத்தக்கதாகும். அவர் எடுக்கின்ற முன்னெடுப்பு ஒவ்வொன்றும் சிறப்பாக அமைவதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். கவனிக்கத்தக்க அவருடைய குணங்களில் ஒன்று வளரும் இளைஞர்களையும், ஆய்வாளர்களையும் அறிமுகப்படுத்தி முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதாகும். அவருடைய மன உறுதியும், தொடர் முயற்சியும் பல ஆக்கபூர்வமான படைப்புகளை சமூகத்திற்குத் தந்துள்ளது. மேற்கொள்ளும் பணியைச் செவ்வனே செய்யவேண்டும் என்ற அவருடைய கொள்கையானது இவ்விதழில் தெளிவாக வெளிப்படுகிறது. இதற்கு முன்னரே அவர் பல நூல்கள் எழுதியுள்ளார். அங்குசம் வார இதழும், அங்குசத்தின் யுடியூப் சேனல்களும் அவருடைய ஆத்மார்த்தமான பணிமீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.

ஒரு இதழ் நடத்துவது என்பது மிகச் சிரமமான காரியமாகும். படைப்புகளைப் பெறுதல், பரிசீலித்தல், தேர்ந்தெடுத்தல், இதழில் உரிய பக்க முறைப்படி அமைத்தல் என்ற வகையில் மிகக்கவனம் செலுத்தியுள்ளதைக் காணமுடிகிறது. கண்ணைக்கவரும் வகையில் மேலட்டை, அழகான வடிவமைப்பு, பக்க அமைப்பு, கண்களுக்கு அயற்சி தராத எழுத்துரு, தேவையான இடங்களில் படங்கள் என்றவாறு திட்டமிட்டு செயல்பட்டுள்ள குழுவினரின் முயற்சி சிறப்பானதாகும்.   இவ்வாறான ஒரு பெரும் பணியைச் சிரமேற்கொண்டு அனைவரும் வியக்கும் வகையில் இதழைக் கொண்டுவந்துள்ள அவருக்கும், அவருக்குத் துணைநிற்கும் நண்பர்களுக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.


தொடர்புக்கு: யாவரும் கேளீர், அங்குசம் சமூக நல அறக்கட்டளை, 16, முதல் மாடி, வில்லியம்ஸ் சாலை, திருச்சிராப்பள்ளி 620 001, மின்னஞ்சல் angusamorg@gmail.com, அலைபேசி 94432 14142, 94888 42045