04 June 2026

மன்னிய சீர் மாதேவருக்கு மதிப்புறு மடல்: கவிஞர் இளையதீபன்

அண்மையில் கும்பகோணத்தில் "தமிழ் ஊற்று இலக்கியக்கூடல்" என்ற அமைப்பினைத் தொடங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது கவிஞர் இளையதீபன் என்னைச் சந்தித்து, தான் எழுதியுள்ள "மன்னிய சீர் மாதேவருக்கு மதிப்புறு மடல்" என்னும் நூலை வழங்கினார்.  அந்நூலினை வாசித்துப் பெற்ற அனுபவத்தைக் காண்போம்.



எம்பெருமானுக்கு நூலாசிரியர் 17 மடல்களைக் கவிதையாக வடித்துள்ளார். இவற்றைப் படித்தபோது ஈசனுக்கு அருகில் செல்கின்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. ஒரு நண்பருக்கோ, உறவினருக்கோ எழுதும் கடிதத்தைப் போல ஓர் அணுக்கத்தை இக்கடிதங்கள் ஏற்படுத்துகின்றன. திருமுறைகளிலிருந்தும், பிற இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள்களைத் திரட்டி இவர் வைக்கும் கேள்விகள் ரசிக்கும்படியும், லயிக்கும்படியும் உள்ளன.  

நூலாசிரியர், நிகழ்வு நடந்த இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். எம்பெருமானிடம் தன் வேண்டுகோளை வைக்கிறார். தன் ஐயங்களையும், ஆங்காங்கே மொழியின் ரசனையையும் வெளிப்படுத்துகிறார். ஈசனின் பெருமையை அனைவரும் உணரும் வகையில் பல்லாற்றானும் பதிகின்றார்.  

சில இடங்களில் வேண்டுகோள் தெரிகிறது. சில இடங்களில் ஆதங்கம் வெளிப்படுகிறது. நூலாசிரியரின் இலக்கு இறைவனை உரிமையோடு நெருங்குவதே. அவர் அதை உணர்வதோடு வாசிப்போரையும் அந்நிலைக்கு இட்டுச்செல்கிறார். ஒவ்வொரு கடிதத்திற்கும் நாள் குறிப்பிட்டு அனுப்புவதோடு அடியவர்க்கு அடியவன் என நிறைவு செய்த பாங்கு போற்றுதற்குரியது.

எங்கும் எல்லாமுமாக இருக்கும் இறைவனின் பெருமை, திருவிளையாடல்கள், திருவடியின் சிறப்பு, ஐந்து தாண்டவங்கள், கொடிகளின் தொகுப்பு,  என்ற வகையில் பன்முகநோக்கில் விவாதிக்கும் நூலாசிரியர் தன்னுடைய பல ஐயங்களை அவனிடம் கேட்பதன் மூலமாகத் தன்னை தெளிவுபடுத்திக்கொள்வதோடு, வாசகர்களையும் தெளிவுபடுத்திக்கொள்ள வைக்கிறார்.

"கணக்கற்ற வேலை உமக்கு, நேரம் கிடைக்கும்பொழுது இக்கடிதத்தின்மீதும் சற்று கடைக்கண் சாத்தியருளுவாய் என்று நம்புகிறேன்" (ப.3)

"சீற்றம் கொள்ளற்க, கொஞ்சமேனும் நியாயம் இருப்பதாகத் தோன்றினால், ஏற்றருள்க, பரிசீலனை செய்க." (ப.6)

"சிறுமையேன்; உனைப் பற்றும் பாங்கறியேன். பண்பிலேன். உன்பால் அளளவற்ற ஆசையால் மடல் எழுதத் துணிந்தேன். அதை நீ ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உம்முடைய விருப்பம்." (ப.16)

தன்னுடைய கடிதங்களுக்குப் பரம்பொருளின் மறுமொழியை ஆவலோடு எதிர்பார்க்கும் நூலாசிரியர் அவற்றை எதிர்பார்த்து தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

அனைத்திற்கும் மேலாக அவனே ஆட்டுவிப்பவன் என்பதைப் பதியும்போது அவனிடம் நியாயம் கேட்கும் பாங்கு வாசிப்போரை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் என்பதே உண்மை.

"நீ ஆட்டுவிக்கின்றாய்; நாங்கள் ஆடுகிறோம். எங்கள் செயலென்று ஏதும் இல்லையே!! எங்கள் பங்கென்று ஏதும் இல்லாதபோது வினைகள் மட்டும் எங்கள் கணக்கில் வைக்கின்றாயே, இது என்ன தர்மம்? வினையின் மூட்டையை எங்கள் முதுகில் ஏற்றுகின்றாயே, எந்த வகையில் நியாயம்?" (ப.26) 

தம்பிரான் தோழரைப் போல நம்மை ஆக்கியது மட்டுமன்றி, ஈசனுக்கு நெருக்கமாக நம்மை இட்டுச்செல்கின்ற  நல்வாய்ப்பினைத் தந்த நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.  மென்மேலும் பல நூல்களைப் படைத்து அவனருளைப் பெற ஈசனை வேண்டுகிறேன்.


நூல்: மன்னிய சீர் மாதேவருக்கு மதிப்புறு மடல்
ஆசிரியர்: கவிஞர் இளையதீபன் மகாலிங்கம்
உரிமைப்பதிவு: இந்து சமய தத்துவ விசாரணை மையம், மயிலாடுதுறை
பதிப்பு: 2025, முதல் பதிப்பு
விலை: ரூ.100
கிடைக்குமிடம்: சு.தட்சிணாமூர்த்தி, 55, வடக்கு வீதி, அறுபத்துமூவர் பேட்டை, கூறைநாடு மயிலாடுதுறை 609 002, அலைபேசி 9442392021
சபா.ப.மகாலிங்கம், 20, பு.சன்னதித்தெரு, திருவிடைமருதூர் 612 104, அலைபேசி 99409 79641