03 June 2026

பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தியின் ஆய்வுக் கருவூலம்

அண்மையில் கும்பகோணத்தில் "தமிழ் ஊற்று இலக்கியக்கூடல்" என்ற அமைப்பினைத் தொடங்கிவைக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். பல கவிஞர்களையும், எழுத்தாளர்களையும், மண்ணின் மைந்தர்களையும் ஒருசேரக் காணும் வாய்ப்பினையும், சிலருடன் உரையாடும் நல்வாய்ப்பினையும் பெற்றேன். 


தொடக்க விழாவிற்கு வந்திருந்த பேராசிரியர் முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய படைப்புகளை ஒருங்கிணைத்து அமைத்துள்ள "பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தியின் ஆய்வுக் கருவூலம்" என்ற நூலினை மேடையில் வந்து தந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். அன்னாருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.


அவர் தன்னுடைய உரையில் "குடந்தைக் கல்லூரித் தமிழறிஞர்கள்" என்னும் நூலை கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் போதிய தரவுகளைத் திரட்டி வெளிக்க் கொணர்ந்த அனுபவத்தைக் குறிப்பிட்டார். 

இந்நூலில் அவர் தான் எழுதிய நூல்கள் (16), அச்சில் வராத ஆய்வு நூல் (1), பதிப்பு நூல்கள் (19), அச்சில் வெளி வராத பதிப்பு நூல்கள் (5), கட்டுரைகள் (206), கருத்தரங்கக் கட்டுரைகள் (62) உள்ளிட்டவற்றை 1972 முதல் கால நிரல் வாரியாகத் தந்துள்ளார். ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் இந்த அடைவு பெரிதும் துணை நிற்கும். நம்மைப் பற்றியும், நம் மண்ணில் வாழ்ந்தோர் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ள அவரைப் போலவே நாமும் தொடர்ந்து அவ்வாறான பணிகளில் ஈடுபடும்போது அது வரலாற்றுக்கும், இலக்கியத்துக்கும் பெரிய பங்களிப்பாக அமையும். 

கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தது முதல் அண்மைக்காலம் வரை அவருடைய எழுத்துப்பணிகளை மிகவும் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளார்.  ஆங்காங்கே அவர் பகிர்ந்துள்ள அனுபவங்கள் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாகும். குறிப்பெடுத்தல், கட்டுரைகளை உருவாக்குதல், அவற்றிக்கு அச்சு வடிவம் தருதல் என்ற ஒவ்வொரு திறனும் தன்னுள் ஏற்பட்டதற்கான சூழலையும் காரணத்தையும் எளிமையாகத் தந்துள்ளார். எழுதுவது என்பதைவிட அதனை ஆவணப்படுத்துதலே மிகவும் முக்கியமானது என்பதை நான் அடிக்கடி கூறுவதுண்டு. அவ்வகையில் அன்னாரின் பணி போற்றத்தக்கதாகும். 

என்னுடைய உரையில் நான் அவர் பேசியதைக் குறிப்பிட்டு, பேராசிரியர் சத்தியமூர்த்தி அவர்கள் அடுத்து ஒரு தொகுதி இவ்வாறாக வெளியிடுவாரேயானால் அதில் என் பெயர் அடிக்குறிப்பாகவேனும் இடம்பெறும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டேன்.

என்னுடைய "முனைவர் ஜம்புலிங்கம்" (https://drbjambulingam.blogspot.com/) மற்றும் "சோழ நாட்டில் பௌத்தம்" (https://ponnibuddha.blogspot.com/) என்ற தலைப்பிலான வலைப்பூக்களில் இவ்வாறாக வகைப்படுத்தி பதிவுகளை உரிய தலைப்புகளில் பதிந்துவருகிறேன். 

நூலாசிரியரை அடியொற்றி, வளரும் ஆய்வாளர்கள் தம் படைப்புகளை இவ்வாறாக ஒருங்கிணைத்து ஓரிடத்தில் பதிவு செய்தால் வளரும் தலைமுறையினருக்கு நாம் செய்கின்ற பெரும் பங்களிப்பாக அமையும். 

நூல்: பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தியின் ஆய்வுக் கருவூலம்
ஆசிரியர்: பேராசிரியர் முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி (94430 86520)
பதிப்பகம்: மகேந்திரன் பதிப்பகம், 7/220ஏ, தலைமைச் சாலை, அம்மாச்சத்திரம் 612 103, தஞ்சாவூர் மாவட்டம்
பதிப்பு: அக்டோபர் 2022, முதல் பதிப்பு
விலை: ரூ.40

அந்த நாள் நினைவுகள்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்பில் வகுப்பிற்கு விண்ணப்பித்து, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டபோது நேர்காணல் குழுவின் தலைவரான பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியம், ஏதேனும் கட்டுரை எழுதி வெளியிட்டிருக்கிறாயா? என்று கேட்டதையும் இல்லை என்று தான் கூறியதையும், தான் தேர்வு செய்யப்படாமல் இருக்க இது ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்று பதிந்துள்ளார். பின்னர் எம்பில் வகுப்பு தொடங்கி 40 நாள்களுக்குப் பின்னர், ஒரு வகுப்பில் சி.பா.கூறியதன் மூலமாகவே கும்பகோணம் கல்லூரிப்பேராசிரியர் வா.இராமகிருட்டினன் மேற்கொண்ட முயற்சியை அறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் கேட்ட கேள்வியே தன்னை உறுத்திக்கொண்டிருந்ததாகவும், எப்படியாவது கட்டுரைகள் எழுதி அவற்றை இதழ்களில் வெளியிடவேண்டும் என்ற வேட்கை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக அவர் மேற்கொண்டு உருவாக்கிய படைப்புகளை எழுதி, பெரிய சாதனை படைத்துள்ளார். இதனைப் படித்தபோது என்னுடைய பல்கலைக்கழக அக்கால நினைவுகள் மனதின் முன்தோன்றின.

பேராசிரியர் சி.பா. அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது (1989-1992) நான் அவரிடம் நேர்முக உதவியாளரிடம் பணியாற்றியது (புகைப்படம் நாள் 16.8.1991) எனக்குக் கிடைத்தற்கரிய அனுபவமாகும். முதன்முதலில் உதவியாளர் நிலையில் நேர்முக உதவியாளர் என்ற பெரும் பொறுப்பினை நான் பெற்றதும், அப்பொறுப்பினை மிகவும் கவனமாக ஏற்றுச் சிறப்பாக நிறைவு செய்து அனைவருடைய வாழ்த்தினைப் பெற்றதும் மறக்கமுடியாததாகும். நேர்மையான மனிதர், அனைவருக்கும் நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர், அவரைக் காண்பதற்கு யார் சென்றாலும் முதலில் அமருங்கள் என்று கூறிவிட்டே பேசுவார். அவருடன் உதவியாளர் என்ற முறையில் பிற பல்கலைக்கழகங்களுக்குச் சென்றதுண்டு. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாங்கள் சந்தித்த அரிய மனிதர்களில் ஒருவர்.