18 March 2017

சிவ வடிவங்கள் : மா. சிவகுருநாத பிள்ளை

அண்மையில் நான் மறுமுறை படித்த நூல் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடுகளில் ஒன்றான, சைவத்தமிழ்மணி வித்துவான் மா.சிவகுருநாத பிள்ளை எழுதியுள்ள சிவ வடிவங்கள் என்னும் நூல். 

சிவ வடிவங்கள், அருஉருவம், உருவம், அருவம், இலக்கிய வடிவம் என்ற முதன்மைத் தலைப்புகளைக் கொண்டுள்ள இந்நூலின் பின்னிணைப்பாக சிவ வடிவங்கள் பற்றிய பல்வகைச்செய்திகள், பரத கண்டத்திற்கு வெளியில் உள்ள நாடுகளிலுள்ள சிவ வடிவங்கள் என்ற தலைப்பிலான பதிவுகள் உள்ளன.
இந்நூலைப் பற்றி துணைவேந்தர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன்: 
"சைவத் தமிழ்மணி அவர்கள் தம் இளமைக் காலந்தொட்டு ஈடுபாடு கொண்டுள்ள சிவநெறி பற்றியும் சிவநெறியின் மூல முதற்பொருளான சிவம் பற்றியும் அவர்க்குக் குறியீடாக விளங்கும் சிவலிங்கம் பற்றியும் தெளிவான ஒரு பேராய்வு செய்தே இந்நூலினைத் தமிழக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். சிவலிங்கம் பற்றிய தத்துவக் கருத்துகள், நின்ற, இருந்த, கிடந்த கோலத்து சிவலிங்கங்கள், சிவலிங்க அமைப்பு பற்றிய விவரங்கள் ஆகியவை பற்றி நுண்மாண் நுழைபுலம் கொண்டு இந்நூலில் ஆய்வு மேற்கொள்ளப் பெற்றுள்ளது...... காவியச்செல்வராக விளங்கும் இந்நூலாசிரியர் அவர்கள் ஓவியச் செல்வராகவும் விளங்கும் தன்மையை இந்நூலிலுள்ள ஓவியங்கள் நம்மை உணர்த்துகின்றன....."

இந்நூலில் ஆசிரியர் சிவலிங்கத்தின் தத்துவக் கருத்துகள், அமைப்பு, கூறுகள், அறிவியல் தத்துவம், அளவு, மூவகைக்கோலம், மூவகை, நால்வகை, ஐவகை, எண்வகை லிங்கங்கள், மண், நீர், அனல், காற்று, வெளி வடிவம், ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒரு முகம், முகலிங்க அமைப்பு, கோடி லிங்கம், நவலிங்கங்கள், பன்னிரு சோதி லிங்கங்கள்,  சிவலிங்கத் தோற்றங்கள், சிவாலயங்களில் லிங்கத் தொகுதிகள், மூவகைச் சிற்பங்கள், சிவ வடிவத் திருமுகங்கள், மகேசுவர வடிவங்கள் 25, சிவ பராக்கிரமத்தில் 64 வடிவங்கள், தியான வடிவம், மந்திர வடிவம் என்பன போன்ற பல தலைப்புகளில் ஆழ்ந்து எழுதியுள்ளார். உரிய இடங்களில் புகைப்படங்களை இணைத்துள்ளார். பல இடங்களில் தான் வரைந்த படங்களையும் தந்துள்ளார். இந்நூலின் குறிப்பிடத்தக்கனவற்றில் சிலவற்றைக் காண்போம். 


சிவலிங்கம் என்ற சொல்லில் லிங்கம் என்னும் தொடர் சித்தரித்தல் என்று பொருள்படும். சிவபிரான் படைப்பு முதலான ஐந்தொழில்களாலும் பிரபஞ்சத்தைச் சித்தரிக்கின்றதால் சிவலிங்கம் எனப் பெயர் பெற்றது என்பர். (ப.5)  

குடந்தையாகிய கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இங்குக் கருவறையில் உள்ள மூல லிங்கம் கோடிலிங்கம், கோடிச்சுரர் என்ற பெயருடன் விளங்குகிறது. இவ்விலிங்க சிவபாகத்தில் சிறுசிறுவடிவில் (பலாப்பழம் போல) பல காணப்படுகிறது.  (ப.71)

ஆதிகும்பேசுவரர் எனச் சிறப்புடன் அழைக்கப்பெறும் (கும்பகோணம் கும்பேசுவரர்) கும்ப லிங்கம் மண் வடிவில் உள்ளதாகும். (ப.80)

குடிமல்லத்தில் அமைந்துள்ள கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதான புகழ் வாய்ந்த இலிங்க மீதான சிவ வடிவம் தன்னிகரற்ற முற்பட்ட சாலிவாகன கலைத்திறத்திற்கோர் எடுத்துக்காட்டாகும். (ப.82)

சிவ வடிவில் கிடந்த கோல நிலை குறிப்பாக ஒரு இடத்தில் உள்ளது. சென்னை மாநகரத்திலிருந்து திருப்பதி செல்லும் வழியில் 60 கிமீ. தொலைவில் தமிழகத்து எல்லையில், ஊத்துக்கோட்டை என்ற ஊருக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் ஆந்திர மாநிலச் சோதனைச் சாவடியை அடுத்துள்ள சுருட்டப்பள்ளி என்ற சிற்றூரில் விளங்கும் சிவாலயத்தில் இருக்கும் நஞ்சுண்ட கடவுள் (விடாபகரணர்) வடிவ சயனக் கோலத்தில் இருக்கிறது. (ப.101)

சிவ வடிவங்களில் சதாசிவ வடிவமே எல்லா வடிவத் தோற்றங்களுக்கும் பிறப்பிடமாகும். ஆறு ஆதாரங்களுள் ஆறாவது ஆதாரத்தில் மனோன்மணி என்ற சக்தியுடன் விளங்குவது சதாசிவமாகும்....சதாசிவவடிவத் திருமேனி மற்ற சிவ வடிவங்களை ஒப்ப எங்கும் கோயில்களில் இருப்பதில்லை. விரல்விட்டு எண்ணிச் சொல்லும் வகையில் சில இடங்களில் கருங்கல், சுதை, உலோகம் இவற்றால் ஆனவை உள. இவ்வாறு உள்ள வடிவங்களும் நித்திய வழிபாட்டில் இல்லாது காட்சிப் பொருளாகத்தான் உள்ளது. ஒரு சில அருங்காட்சியகங்களிலும் இருக்கிறது. (ப.122)

தமிழ்நாட்டில் திருமணஞ்சேரி, திருவேள்விக்குடி, திருவீழிமிழலை, பந்தணைநல்லூர் முதலிய தலங்களில் கலியாணசுந்தரரைக் காணலாம்.  (ப.151) 

வலப்பாதி சிவ வடிவமாயும், இடப்பாதி உமையாகவும் இருக்கும் கோலம் மாதொருபாகன். சிவ பாகத்தில் தோலாடை, காதில் குழை, பால் வெண்ணீறு, கையில் சூலம் காணப்படும். உமை பாகத்தில் துகில் ஆடை, சுருள் தோடு, பசுஞ்சாந்து, கிளி கையில் வளை காணப்படும். இக்கோல வடிவு நான்கு திருக்கரங்களுடனும், மூன்று திருக்கரங்களுடனும், இடபத்தின் அருகில் நிற்கும் நிலையில் பலவிதமாகக் காணப்படும். சில சிவத்தலங்களில் வலப்பால் உமையாகவும, இடப்பால் சிவமாகவும் திருவேள்விக்குடியில் இருக்கிறது. (ப.178)

பெருமான் ஒற்றைக்காலில் நான்கு திருக்கரங்களுடன், இவரது பாதத்தின் வலப்பக்கம் பிரமனும், இடப்பக்கம் திருமாலும் நான்கு கரங்களுடன் இருக்கும் தோற்றம் ஏகபாத திரிமூர்த்தி ஆகும். (ப.190)

காண வீடுபேறளிக்கும் சிதம்பரத்தின்கண் சிற்பர வியோமமாகிய பரவெளியில் ஆனந்தக் கூத்தியற்றும் ஆடவல்லானின் திருவடிவம் திருவைந்தெழுந்தால் ஆனதாகும். சிதம்பரம் அல்லாத மற்றத் திருத்தலங்களில் உள்ள ஆடல்வல்லானது திருவடிவம் மகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்துள் ஒன்றாகுமே தவிர அறிவுவெளி (ஞானகாய) சிதம்பர சிற்சபாநாதரல்லர். மகேசுவர வடிவங்களில் ஒன்றாக விளங்கும் நடராசரது வடிவம் பஞ்சப் பிரத சடாங்க மத்திரத்தால் அமைந்தது. ஆனால் தத்துவங்கடந்த கடவுளாகிய தில்லை நடராசர் திருவைந்தெழுத்தே வடிவானவர். (ப.219)

சிவாலயங்களில் மூலவடிவாய்க் கருவறையில் இருப்பது அருஉருவ வடிவாகிய சிவலிங்கமே. ஆனால ஒரே ஒரு தலத்தில் மட்டும் உருவமூர்த்தியாக இருக்கிறது. அதுதான் மாதொருபாகன் (அர்த்தநாரீச்சரன்) இருக்கும் திருக்கொடிமாடச்செங்குன்றூர் என்னும் திருச்செங்கோட்டு மலையில் ஆகும். (ப.304)

சிவ வடிவங்களைப் பல கோணங்களில் ஆய்ந்து நோக்கி அரிய புகைப்படங்களைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலைப் பார்ப்போம், படிப்போம், அவனைப் பற்றி அரியன அறிவோம், வாருங்கள்.  

நூல் : சிவ வடிவங்கள்
ஆசிரியர் :  மா.சிவகுருநாத பிள்ளை
பதிப்பகம் : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ஆண்டு : திசம்பர் 1991
விலை : ரூ.50

12 comments:

  1. ஏதோ கோவிலுக்குப் போனோம், வணங்கினோம், வந்தோம் என்று வந்து விடும் பலபேர்களில் நானும் ஒருவன்! அதுவும் கோவிலுக்கே எப்போதாவதுதான் செல்வேன்!! கோவில் சிலைகளில் இவளவு விவரங்களா! சுவாரஸ்யம்.

    ReplyDelete
  2. நூலைக்குறித்த விரிவான விடயம் அருமை பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. நூல் அறிமுகம் அருமை
    நன்றி ஐயா

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    நூல் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  6. மண் பயனுற வேண்டும்..
    நல்லதொரு நூல் அறிமுகம்.. நன்று..

    ReplyDelete
  7. இனிய நூலை இன்புற்றுப் படித்து
    பலரறியப் பணிவோடு பகிர்ந்த
    நூலறிமுகம் நன்று!

    ReplyDelete
  8. திருச்செங்கோட்டின் சிறப்பு இப்போதுதான் எனக்கே தெரிந்தது. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  9. எவ்வளவு நலல நல்ல புத்தகங்கள் வந்திருக்கின்றன! இவை எல்லாவற்றையும் படிக்கவேண்டுமானால் ஓர் ஆயுள் போதுமா என்ற கவலை உண்டாகிறது.
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  10. அருமையான நூல் விமர்சனம் நனறி.

    ReplyDelete
  11. நல்ல அறிமுகம் அய்யா

    ReplyDelete