28 April 2023

தட்டச்சு ஒரு கலை

தட்டச்சு என்பது ஒரு கலை. தட்டச்சு கற்பது வளரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனளிக்கும். அதிக வேகம், அதே சமயம் நிதானம் போன்றவற்றை தட்டச்சுப்பயிற்சியில் பெறலாம். புதிய சொற்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். நினைவாற்றல் மேம்படும். மொழியறிவு வளரும். தட்டச்சுத் தேர்வினை எழுதிவிட்டு, கணினியில் தட்டச்சு செய்தால் இன்னும் பல உத்திகளைக் கைக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களும், பணிக்கு விண்ணப்பிப்போரும் தம் தகுதியை மேம்படுத்திக்கொள்ள தட்டச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்தக் கோடை விடுமுறையை நன்கு பயன்படுத்தும் விதமாக மாணவர்கள் தட்டச்சுப்பயிற்சியில் இப்போதே ஈடுபட ஆரம்பிக்கலாம்.

50 ஆண்டு கால தட்டச்சு இப்போது எனக்குத் தந்த ஓர் அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நான் தட்டச்சு பயின்ற கும்பகோணம் ஈஸ்வரன் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தையும், கும்பகோணம் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

சோழ நாட்டில் பௌத்தம் நூலின் மேலட்டை


2018இல் பாரத் தட்டெழுத்துப்பயிற்சி நிலையத்தில் நிறுவனர் திரு பாஸ்கரன் அவர்களுடன்

அண்மையில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் (புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் 635 112, செப்டம்பர் 2022, அலைபேசி: +91 9842647101, +91 6374230985, மின்னஞ்சல் : editorpudhuezuthu@gmail.com) வெளியானது. அந்நூலை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் எதிர்கொண்ட அனுபவங்களில் ஒன்று தட்டச்சு தொடர்பானது.

ஆங்கில நூலுக்கான முதல் மெய்ப்பினை (ஒரு பகுதி மட்டும்/சுமார் 80 பக்கங்கள்/ஏ4 தாள்) திருத்தும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். இதனை மொழிபெயர்த்துக் கணினித்தட்டச்சு செய்யும்போது நான் கூகுளையோ, ஸ்பெல்செக்கரையோ பயன்படுத்தவேயில்லை. முழுக்க முழுக்க நேரடியாக மொழிபெயர்த்துவருகிறேன். ஐயமேற்படும்போது அகராதிகளைத் துணைகொள்கிறேன். தேவைப்படும் இடங்களில் கூடுதலாகச் செய்தியைச் சேர்க்கிறேன். இவ்வாறாக 80 பக்கங்களின் மெய்ப்புத் திருத்தப்பணியை மேற்கொண்டபோது இரு இடங்களில் மட்டுமே தட்டச்சுப்பிழை (Only two words were found with spelling mistake) இருந்தது. இவ்விரு இடங்களைத் தவிர எங்கும் சொற்பிழை காணப்படவில்லை என்பதை எனக்கு வியப்பினைத் தந்தது. வந்த சொல் பலமுறை வருதல், கூறியது கூறல், சொற்கள் இடம் மாற்றம், சாய்வெழுத்து அமைப்பு, அடிக்கோடுடன் சொல் அமைப்பு, போன்றவற்றில் பல தவறுகளும், விடுபாடுகளும் காணப்பட்டாலும் மிகவும் குறைவான சொற்பிழையே இருந்தது. இதற்குக் காரணம் கடந்த 50 ஆண்டுகளாக நான் ஈடுபட்டுவரும் தட்டச்சுப்பணி அனுபவமே என நினைக்கிறேன்.

1970களின் இடையில் முதன்முதலாக ஆங்கிலத்தட்டச்சு சேர்ந்த காலகட்டத்திலேயே தட்டச்சுத்தேர்வுக்குத் தயாராகும்போது வைக்கப்படுகின்ற வகுப்புத்தேர்வில் பல முறை நான் பிழையே இன்றி தட்டச்சு (Typed matter with NIL mistake) செய்துள்ளேன். நான் தட்டச்சு செய்தவற்றில் எத்தனை பிழைகள் உள்ளன என்பதைக்கூட கூறிவிடுவேன். அப்போதெல்லாம் தட்டச்சு செய்யும்போதே எந்த இடத்தில் தவறு வருகிறது என்பதையும் மனதில் கொண்டு, தட்டச்சு செய்யப்பட்ட தாளில் இவ்வளவு எண்ணிக்கையில் தவறு உள்ளது என்று உறுதியாகக்கூறுவேன். நான் சொல்லுமளவிற்கு தட்டச்சுப்பிழையின் எண்ணிக்கை இருக்கும். அப்பழக்கம் என்னையும் அறியாமல் இன்னும் தொடர்கிறது.

25 April 2023

சென்று வாருங்கள், ராண்டார் கை

தி இந்து ஆங்கில நாளிதழில் நான் தொடர்ந்துவிரும்பி வாசித்த பத்திகளில் ஒன்று ராண்டார் கை எழுதிவந்த திரைப்படம் தொடர்பான மதிப்புரைகள். அப்பதிவுகள் மூலமாக அவருடைய நினைவாற்றலையும், மொழி ஆழத்தையும் அறிந்து வியந்தேன். தொடர்ந்து அடுத்த வாரம் அவருடைய பத்தி எப்பொழுது வெளியாகும், எந்தப் படமாக இருக்கும், எந்த வகையில் எழுதுவார் என்ற எண்ண ஓட்டங்களோடு காத்திருப்பேன். தி இந்து ஆங்கில நாளிதழை தொடர்ந்து 50 வருடங்களாக நான் படித்துவருவதற்குக்காரணம் இவரைப் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களும் முக்கியக் காரணம். அவருடைய அப்பதிவுகள் மூலமாக பல புதிய ஆங்கிலச்சொற்களைக் கண்டு வியந்ததுண்டு. As there is nobody to compete with him, he is competing with himself (இயக்குநர் பாலசந்தரின் திரைப்படம் பற்றிய ஒரு பதிவில்), The first scene will bring to you to the edge of the seat (பாலசந்தரின் புன்னகை மன்னன் திரைப்படம்), She had been to yonder blue (நடிகை பண்டரிபாய் இறந்தபோது என நினைக்கிறேன்), Reams have been written about him (நாகேஷ் பற்றிய பதிவில்), The title of film is spelt with capital V (referring to violence, வன்முறையை முதன்மையாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு). இவர் எழுதிய கட்டுரைகளில் ஒரே பதிவில் அதிகமான புதிய வார்த்தைகளை நான் பார்த்தது ஸ்ரீவித்யா இறந்தபோது என நினைக்கிறேன். அதனைப் பல முறை படித்தேன், இவருக்காகவும், ஸ்ரீவித்யாவிற்காகவும்.

கட்டுரை வெளிவரும் நாளன்று ராண்டார் கை எழுதியுள்ள மதிப்புரையை முதலில் படித்துவிட்டு, பின்னர்தான் தி இந்து நாளிதழின் முதன்மைப்பக்கங்களைப் படிக்க ஆரம்பிப்பேன்.



நான் பல முறை ரசித்துப் பார்த்த திரைப்படங்களில் ஒன்று பத்து கட்டளைகள்(Ten Commandments) ஆங்கிலத்திரைப்படம். அத்திரைப்படம் வெளியான 50ஆவது ஆண்டு நினைவாக அவர் இவ்விதழில் (A Randor Guy, Memorable Milestone, The Hindu, Friday Review, 8.6.2007, p.1) எழுதிய கட்டுரையை அப்போது நான் நேரடியாக 70 நிமிடங்களில் மொழிபெயர்த்தேன், அவருடைய எழுத்தின்மீது உள்ள ஆர்வம் காரணமாக. இன்னும் அதனைப் பாதுகாத்து வருகிறேன். (இந்த மொழியாக்கத்தில் நிறைகுறைகள் இருக்க வாய்ப்புள்ளது), நான் மொழிபெயர்த்த, நினைவில் நிற்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று.




7 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.