27 June 2020

தர்ப்பண சுந்தரி : எஸ்.வி.வேணுகோபாலன்

"நாம் அன்பு செலுத்திய ஒருவர் நம்மைவிட்டு விலகிச்செல்லும்போது, அவர் அதுவரை காட்டிய அன்பின் காரணமாக அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவதா அல்லது அவர்மீது கோபித்துக்கொள்வதா? அதனைக் காலம்தான் தீர்மானிக்கும். இருந்தாலும் மனது என்று ஒன்று இருந்து பாடாய் படுத்துகிறதே அதனை என்ன செய்ய?" இது தர்ப்பண சுந்தரியின் தந்தையாரின் மன நிலை மட்டுமன்று. அவரைப் போன்ற குணம் படைத்தோரின் மன நிலையே.

1979 முதல் 2019 வரை எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய 16 சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் அதிகம் பாதிப்பைத் தந்தது தர்ப்பணசுந்தரி. “என் ஜென்ம பிராரப்தம், எல்லாம் முடிஞ்சு போச்சு, கேட்காதே சுந்தரியைப் பற்றி” என்று சொல்லிக் கொண்டு அவர் அழ ஆரம்பிக்கும்போது தன் மகள் வைத்திருந்த பாசத்தை உணர முடிகிறது. எந்த அளவிற்குப் பாசம் வைத்திருந்தால் அந்த அளவிற்கு அவர் அவ்வாறு கூறியிருப்பார். ஒருவர்மீது வைக்கப்படும் பாசத்தைவிட, அதனை இழக்கும்போது அடைகின்ற சோகத்தை சொற்களால் விவரிக்க முடியாது.

 

பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும் அனைத்துமே எக்காலத்திற்கும் பொருந்துவதைப் போல இருப்பதைக் காணமுடிகிறது. குடும்பத்தில் இருந்துகொண்டு மிகவும் நெருக்கமாக பழகுதல் தொடங்கி, சமூக அவலத்தைக் கண்டு கொதித்தெழுவது வரை மிகவும் அனாயாசமாக எழுத்தைக் கையாண்டுள்ளார். ஆசிரியரின் நடை இதுதான் என்று வரையறுத்துச் சொல்லமுடியாத அளவிற்கு வெவ்வேறு நடையில் யதார்த்தத்தை நம்முன் கொண்டு வந்துள்ளார்.

இன்றோ நாளையோ என்று நிமிடங்களை யுகங்களாகக் கழித்துக்கொண்டிருக்கும் உயிரைப் போகவிடாமல் தடுக்க யத்தனிக்கின்ற பிற உயிர்களின் தவிப்பை உணர்த்துகிறது ‘கடைசி நாள் படுக்கை’. உத்தரவு வாங்கிக்கவா என்று அக்கா கேட்கும்போது அவள் சாகக்கூடாது, சாக மாட்டாள் என்ற எண்ணம் படிப்பவர் மனதில் இயல்பாகவே வந்துவிடுகிறது.

நம் மக்களின் ஈரமற்ற குணத்தை வெளிப்படுத்துகின்ற ‘தீர்த்தம்’. இக்கதையைப் படித்தபோது பாலசந்தரின் பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் வருகின்ற, பட்டினத்தில் பிழைக்கப்போன குடும்பத்தார் குடிக்க தண்ணீர் கேட்கும்  காட்சி நினைவிற்கு வந்தது.

ஏதாவது சாப்பிடாது போகக்கூடாது, உள்ளே வந்து உட்காரு என்று  ‘சூடாமணி மாமி’ சொல்வதுபோல ஏற்படுகின்ற உணர்வு பாசத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. மனதில் ஏதோ வெற்றிடம் ஏற்பட்டதைப் போல உணர முடிந்தது. இப்போதெல்லாம் மாமியைப் போன்றோரைக் காண்பது அரிது. எங்குமே வறட்டுச் சிரிப்பையும், பொருளற்ற வார்த்தைகளையேதான் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

நிறைவான வாழ்வினை வாழ்ந்து சென்றுவிட்டால்கூட சிலரது மரணங்கள் அதிக பாடத்தைத் தந்துவிடும் என்பதை உணர்த்தியது ‘முட்டுச்சந்து’.  போயிட்டாளா என்ற தாத்தா நல்லதுக்குத்தான் என்கிறார். அந்த ஒரு சொல்லில்தான் எவ்வளவு பொருள். தாத்தாவால், வேறுவழியின்றி, ஜீரணிக்க முடிந்தால்கூட படிக்கும் நம்மால் அதனை ஜீரணிக்க முடியாதுதான்.

கால இடைவெளி எவ்வித வேறுபாட்டையும் வாசிப்பவருக்குத் தரவில்லை. குழந்தை ஏங்குவது பசிக்காகவா, தூக்கத்திற்காகவா என்ற விவாதத்தை முன்வைக்கும் ‘கோடை’, ரசனை தெரியாத உலகை வெளிப்படுத்துகின்ற ‘கவித்துவம்’, நாடகப்பாணியில் அமைந்த ‘இன்னோடு எல்லாம் முடிந்தது..’  அமைதியாக ஒரு பிரச்னையை முடிவுக்குக் கொணர்ந்த ‘சோறு’, குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும் என்பதை உணர்த்துகின்ற ‘மாநகர்ப் புதைக்குழி’, எப்பொழுதோ கூறப்படுகின்ற அறிவுரையும், அறவுரையும் ஓர் உயிரையே காப்பாற்றும் என்பதை வெளிப்படுத்துகின்ற ‘நெருப்பின் அருகே’ என்ற வகையில் ஒவ்வொரு கதையும் பொருள் பொதிந்ததாக சிறப்பாக அமைந்துள்ளது.

வாழ்வின் யதார்த்தங்களை, சிறுகதைத் தொகுப்பாகக் கொணர்ந்த ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

எஸ்.வி.வேணுகோபாலன் (94452 59691), பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018 (044-24332424, 24332924, 24356935, thamizhbooks@gmail.com),  டிசம்பர் 2019, ரூ.110

நன்றி : புக்டே தளம், அத்தளத்தில் வாசிக்க : தர்ப்பண சுந்தரி



20 June 2020

கடவுள்களுடன் தேநீர் : ஜ. பாரத்

எங்கள் மூத்த மகன் முனைவர் ஜ.பாரத் எழுதியுள்ள இரண்டாவது நூல், 40 அவதானிப்புகளைக்கொண்ட கடவுள்களுடன் தேநீர்.

இளமைக்கால யதார்த்தங்களில் தொடங்கி, சமூகத்தில் காணப்படுகின்ற அவலங்களையும், இதுதான் வாழ்க்கை என தமக்குத்தாமே அமைத்துக்கொள்கின்ற ஜோடனை வாழ்க்கையின் நிகழ்வுகளையும் முன்வைக்கிறது. உறவு மற்றும் நட்புகளின் பிரிவு மற்றும் இடைவெளி மனதில் உண்டாக்குகின்ற தாக்கங்களை அனுபவித்து எழுதியுள்ள விதம், படிக்கும் ஒவ்வொருவரும் இது தன்னோடு தொடர்புடையதோ என்று சிந்திக்க வைக்கும்படி உள்ளது.



இளமைக்காலத்தை நினைவூட்டுவதோடு, நசிந்து போகின்ற தொழிலைப் பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ‘பனையோலை நினைவுகள்’.

அத்தை இருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள், அத்தை மகளைக் கட்டியவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் என்பதை முன்வைக்கும் ‘பாராமுகம்’.

இப்போது பெரும்பாலானோர் தொலைத்துவிட்ட ‘சிரிப்பு’.

வெயிலையும் ரசித்து ஏற்கும் பக்குவத்தை வெளிப்படுத்தும் ‘வெயில்’.

நாமாகப் பறித்துச் சாப்பிடுவதைவிட அன்போடு தரப்படும் கொய்யாவின் ருசியை நினைவூட்டுகின்ற ‘கொடுப்பினை’.

கேத வீட்டிலிருந்து சொல்லாமல் கிளம்பும்போது நமக்குள் வரும், நமக்கும் சாவுக்கும் சம்பந்தமே இல்லாதது போன்ற உணர்வினைப் பகிரும் ‘புள்ளி’.

ஒரு மாபெரும் ஆளுமையை சென்றபிறகே உணர வைத்துச் சென்ற ‘விதை’.

நெடுநாள் நண்பனைக் கண்டுபிடிக்க வழியினைத் தேடுகின்ற ‘நட்பு’.

வெறுமையின் வெளிப்பாடாக ஊமை வலியைத் தருகின்ற, கண் முன் தொலைந்துகொண்டிருக்கின்ற அருமையான கலையான ‘சர்க்கஸ்’.

அம்மாவை சின்ன வயது அம்மாவாக பார்க்க வைக்கின்ற ‘வானொலிப்பெட்டி’

ஒரு அரைவேக்காட்டை ஆளாக்கிய ஆசிரியையான ‘பொற்செல்வி’.

குழந்தைப் பருவத்தின் ஒட்டுமொத்த நினைவுகளையும் பிணைப்பையும் வெளிப்படுத்துகின்ற ‘உரிமை’.

என்றும் வாசனை வீசுகின்ற உறவினை உறுதி செய்யும் ‘தாய்மாமன்’.

மனித தெய்வங்களுடன் அமர்ந்து டீயும் மெது வடையும் சாப்பிடும் வாய்ப்பினைத் தந்த ‘கடவுள்களுடன் தேநீர்’.

நாம் நம் விரல்களால் அமுக்கும் ஒவ்வொரு ப்ளஷும் நம் எதிர் கால இந்தியாவை தண்ணீர் இல்லாத காட்டிற்கு தள்ளிக்கொண்டேயிருக்கும் மைல்கல் என்பதை நினைவுபடுத்தும் ‘தண்ணீர்ப்பஞ்சம்’.

ஒவ்வொரு வருடமும் இன்னொரு தீபாவளியாக தவறாமல் கொண்டாடிய, தேரோட்ட நினைவுகளைத் தருகின்ற  ‘ஆடிப்பெருக்கு’.

நுகர்வுப்பசியோடு அலைகின்ற, செயற்கைத்தனத்தோடு சூப்பர்மார்க்கெட்டில் பொருள் வாங்கும் நிலையை வெளிப்படுத்துகின்ற ‘கல்கண்டு’.

அன்பளிப்பின் வெளிப்பாட்டைத் தருகின்ற, சந்தோஷம் துக்கம்ன்னு இப்படி எல்லா நேரத்துலயும் கூடவே இருந்த ‘கைக்கெடிகாரம்’.

நேர்மையான முறையில் வியாபாரம் செய்பவர்களின் நிலையை முன்வைக்கின்ற ‘போளி தாத்தா’.

ஆத்தா மற்றும்  பாட்டியிடம் வளர கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்ற ‘கடவுள் முன்’.

பேரா.கோ.விஜயராமலிங்கம் ஐயா அவர்கள் நூலின் அணிந்துரையில் “நம்மைச் சுற்றி நடப்பவற்றை எல்லோரும் பார்க்கிறோம். இவர் அவற்றின் உள்ளே சென்று உன்னிப்பாக அவதானித்திருக்கிறார்” என்று மதிப்பீடு செய்துள்ள விதம் அருமை.

நூலாசிரியரின், சமூகத்தில் காணப்படுகின்ற இடைவெளியைச் சுட்டிக் காட்டும் முயற்சிக்கு வாழ்த்துகள்.

ஆசிரியர் ஜ.பாரத் (99620 65436), பதிப்பகம் : ஜீவா படைப்பகம், 351MIG, NH1, நக்கீரர் தெரு, மறைமலைநகர், காஞ்சீபுரம் 603 209 (9994220250), ஜுன் 2020, ரூ.120, மின்னூல்: அமேசான்


6 ஜுன் 2020 அன்று நூலின் முதல் படியை திரு சீனிவாசன் அவர்களும், திரு சரவணன் அவர்களும் பெற்ற இனிய தருணங்கள் (இ-வ: சீனிவாசன், பாரத், சரவணன்), அவர்கள் இருவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.  

நன்றி  : எழுத்துக் குடும்பம், இந்து தமிழ் திசை, 2 ஜனவரி 2021


21ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது

12 June 2020

வாசகர்களை ஈர்க்கும் டேப்ளாய்ட்கள்

பத்திரிகைகள் ப்ராட்ஷீட்  (23.5" x 29.5"), பெர்லினர்  (12.4" x 18.5"), டேப்ளாய்ட்   (11.0" x 16.9"), டேப்ளாய்ட் அளவில் உள்ள காம்பாக்ட் என்ற நான்கு வகைகளில் உள்ளன. ப்ராட்ஷீட் பெரும்பாலும் ஆறு பத்திகளைக் கொண்டிருக்கும். அதற்கென ஒரு பாரம்பரிய முறையைக் கொண்டு ஆழமாகவும், நுணுக்கமாகவும் செய்தியை அணுகும். படித்தவர்கள் மத்தியில் ப்ராட்ஷீட் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். காம்பேக்ட் என்பது டேப்ளாய்ட் அளவினைப் போன்றதேயாகும். தரம் மற்றும் உயர்நிலை என்ற வகையில் தனித்து வெளிப்படுத்திக் கொள்வதற்காகவும்,  டேப்ளாய்ட் இதழியல் என்பதிலிருந்து சற்றே வேறுபடுத்திக் காண்பித்துக் கொள்வதற்காகவும், டேப்ளாய்ட் இதழியல் என்பதிலிருந்து வேறுபடுத்திக்கொள்ள விரும்புவதாலும் காம்பேக்ட் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றில் டேப்ளாய்டை ப்ராட்ஷீட்டின் பாதி என்பர். இருந்தாலும் இந்த வரன்முறையை முற்றிலும் உண்மை எனக் கூறிவிடமுடியாது. ஏ3 அளவிற்கும் டேப்ளாய்ட் அளவிற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. ஏ2 தாளில் டேப்ளாய்டை அச்சடிக்கும்போது நாளடைவில் பொருத்தமாகிவிடுகிறது.  நாளிதழ் அளவுகளைக் குறிக்கப்படும் டேப்ளாய்ட், டேப்ளாய்ட் இதழியலையும் குறிக்கிறது.

1880களில் காணப்பட்ட, எளிதாக உட்கொள்ளக்கூடியதாகவுள்ள, தாராளமாகக் கிடைத்த டேப்ளாய்ட் மாத்திரைகளைக் குறிக்கவே முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, சீனா, ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் டேப்ளாய்ட் அளவிலான இதழ்கள் வெளிவருகின்றன.

21ஆம் நூற்றாண்டு டேப்ளாய்டின் நூற்றாண்டு என்று வர்ணிக்கப்படுகிறது. இதழியல் வரலாற்றாளர்கள் டேப்ளாயிடியசம் என்பதானது ஐந்து முக்கியமான சகாப்தங்களைக் கடந்து வந்ததாகக் கருதுகிறார்கள். முதல் சகாப்தமான 19ஆம் நூற்றாண்டின் 30 வருடங்கள்   பென்னி பிரஸ் என்ற நிலையில் மலிவான அச்சு, அச்சுத்துறை மற்றும் அஞ்சல் துறை வளர்ச்சி, பரபரப்பான செய்திகளின் வாசிப்பாளர்கள் என்ற வகையில் அமைந்ததாகும். இரண்டாவது சகாப்தமான 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலங்கள், பத்திரிகை அதிபர்கள் கோலோச்சிய காலமாக அமைந்தது. அக்காலத்தில் புலன் விசாரணையிலான செய்திக்கான முறைகள் கடைபிடிக்கப்பட்டு, பரபரப்புச் செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. மூன்றாவது சகாப்தமான 20ஆம் நூற்றாண்டின் 20 வருடங்கள், சுதந்திர, கவலையற்ற, ஜாஸ் பண்பாடு பரவிய காலமாகும். வானொலி விரிவடைந்துகொண்டிருந்த இக்காலகட்டத்தில் டேப்ளாய்ட் அச்சிதழின் ஊடாக ஜாஸ் இதழியல் போட்டியிட்டு செய்திகளைக் கொணர ஆரம்பித்தது. நான்காவது சகாப்தமான 20ஆம் நூற்றாண்டின் 70களில், தொலைக்காட்சியின் வரவு இதற்கு ஒரு போட்டியாக அமைந்தது. ஐந்தாவது சகாப்தமான 20ஆம் நூற்றாண்டின் 90கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அச்சு ஊடகத்தில் மட்டுமின்றி மின்னூடகத்திலும், கணினிமூலமாக தகவல் பெறும் நிலையிலும் டேப்ளாய்ட் பரவலாகப் பேசப்பட ஆரம்பித்தது.

டேப்ளாய்ட் அதன் ஆரம்ப கால நிலையிலிருந்து பல பரிமாணங்களைக் கடந்து, வாழ்வின் ஓர் அங்கமாக மாறி வந்துகொண்டிருக்கிறது. டேப்ளாய்ட் இதழியல், பரபரப்பான அல்லது உணர்வுபூர்வமான செய்திகளைக் கொண்டுவருகின்ற இதழ்களோடு தொடர்புடையது. சுருக்கமான, எளிதாகப் படிக்கக்கூடிய, அதே சமயத்தில் மிகைப்படுத்தப்பட்ட வடிவில் செய்தியைத் தருவதாகும். டேப்ளாய்டில் ஐந்து பத்திகளுக்கு மேல் இருக்காது. நகரங்களில் வாழ்வோர் பேருந்தில் செல்லும்போது எடுத்துச்செல்லவோ, படிக்கவோ எளிதாக இருப்பதால் இதனைப் படிக்க ஆரம்பித்தனர்.

அமெரிக்காவில் 1970களில் பெரும்பாலான டேப்ளாய்டுகள், வார இதழ்களாயின. அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க ப்ராட்ஷீட்களாக தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் போன்ற ப்ராட்ஷீட் இதழ்களைக் கூறலாம். அச்சு விலையேற்றம் காரணமாக பல ப்ராட்ஷீட் இதழ்கள் தம் அளவினை குறைக்க ஆரம்பித்தன. 2008இல் தி நியூயார்க் டைம்ஸ் இதழும், தொடர்ந்து தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் ஆகிய இதழ்களும்  அளவினைக் குறைத்தன.  பின்னர் அதன் நடையும், தரமும் மாறி அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக 2000க்குப் பிறகு பெரும்பாலான இதழ்கள் வாசிக்க எளிதாக அமைவதாகக்கூறி, டேப்ளாய்ட் வடிவிற்கு மாற ஆரம்பித்துள்ளன.

நியூயார்க் வேர்ல்ட் இதழின் பதிப்பகத்தாரான ஜோசப் புலிட்சர், இலண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் இதழின் நிறுவனரான ஹாம்ஸ்வொர்த் என்பவரை அழைத்து அவ்விதழை ஒரு நாளைக்கு வடிவமைத்துத் தரும்படி கூற, வழக்கமான பத்திரிகைக்கு மாறாக, அதன் பாதி அளவில் அவர் வடிவமைத்த இதழ் ஜனவரி 1, 1901இல் வெளியானது.

அப்போது அது 20ஆம் நூற்றாண்டின் பத்திரிகைள் என்று வர்ணிக்கப்பட்டது. இதழை வடிவமைத்தபோது அவர், அளவிற்கு முக்கியத்துவம் தராமல், சரியான முறையில் முழுமையாக அச்சிடும் இடத்தைப் பயன்படுத்தல் என்பதை இலக்காகக் கொண்டு, சிறிய அளவிலான கட்டுரைகள், சிறிய பத்திகள், எளிதான சொற்றொடர்களைக் கொண்டு அவ்விதழை அமைத்திருந்தார். 1903இல் அவர் இலண்டனில் டெய்லி மிர்ரர் என்ற டேப்ளாய்டை ஆரம்பித்தார். டேப்ளாய்டில் காணப்படுகின்ற சிகப்பு முகப்புப்பட்டையினை அவ்விதழில் காணலாம். அதில் குற்றச்செய்திகள், மனித சோகங்கள், பிரபலங்களின் கிசுகிசுக்கள், விளையாட்டு, நகைச்சுவை, புதிர் போன்றவற்றுடன் அதிக எண்ணிக்கையில் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அக்காலகட்டத்தில் டெய்லி ஸ்கெட்ச் மற்றும் டெய்லி கிராபிக் இதழ்கள் அவருடைய இந்த உத்தியைப் பயன்படுத்த ஆரம்பித்தன. 

20ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இலண்டனின் பெரும்பாலான ப்ராட்ஷீட் இதழ்களான தி இன்டிபெண்டன்ட், தி டைம்ஸ், தி ஸ்காட்ஸ்மேன் போன்றவை அளவைச் சுருக்கி காம்பேக்ட்டிற்கு மாறின.  இலண்டனில் டெய்லி எக்ஸ்பிரஸ், டெய்லி மிர்ரர், டெய்லி ஸ்டார், டெய்லி மெயில், சன், தி மெயில் ஆன் சன்டே (ஞாயிறு),  சன்டே எக்ஸ்பிரஸ் (ஞாயிறு) ஆகியவை டேப்ளாய்ட் வடிவில் வெளிவருகின்றன. 

தி மான்செஸ்டர் கார்டியன் என்ற பெயரில் வெளிவந்து, பின்னர் பெயர் மாற்றம் பெற்ற கார்டியன் இதழ் ப்ராட்ஷீட் (1821-2005), பெர்லினர் (2005-2018) இதழில் வெளியாகி 2018 முதல் டேப்ளாய்ட்டாக அல்லது வெளியாகிறது.

மாறாக ஐரோப்பாவின் மிகப்புகழ் பெற்ற ஜெர்மன் டேப்ளாய்டான பில்ட் வழக்கமான டேப்ளாய்டைவிட சற்றுப் பெரிதாக அதே சமயத்தில் ப்ராட்ஷீட்டைவிட சற்றுச் சிறிதாக அச்சிடப்பட்டது. அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்ற அவ்விதழ் அளவில் ப்ராட்ஷீட், நடையில் டேப்ளாய்ட் என்ற பெயரைப் பெற்றதாகும். ஜெர்மானிய மொழியில் பில்ட் என்றால் படங்களைக் குறிக்கும். புகைப்படங்களை அதிகம் கொண்டிருந்ததால், அதற்கு அப்பெயர் சூட்டப்பட்டது.

8 ஜுன் 2020 அன்று வெளியான பில்ட்

பிரிட்டனில் டேப்ளாய்டுகள் முகப்புப்பக்கத்தில் சிகப்பு வண்ணப்பட்டையைக் கொண்டிருக்கும். அமெரிக்க டேப்ளாய்டுகளைவிடவும் அவை அதிக அளவிலான உணர்வுபூர்வ செய்திகளையும் கொண்டிருக்கும். இதன் காரணமாக பல பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்து, இலண்டனில் இது தொடர்பாக சில விதிமுறைகளை நிர்ணயிக்கப்பட்டன.

இந்தியாவில் வெளிவருகின்ற பத்திரிகைகள் பெரும்பாலும் ப்ராட்ஷீட் அளவில் வெளிவருகின்றன. 1941 முதல் வெளிவந்த பிளிட்ஸ் இந்தியாவிலிருந்து வெளிவந்த முதல் டேப்ளாய்ட் என்ற பெருமையினைப் பெற்றது. ஆங்கிலம், இந்தி, உருது, மராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த அவ்விதழ்  1990களின் இடையில் நின்றுவிட்டது.

இந்தியாவிலிருந்து டேப்ளாய்டாக வெளிவந்த/வெளிவருகின்ற இதழ்கள் தி ஆஃடர்னூன் டிஸ்பேச் கூரியர், (ஆங்கில நாளிதழ், மும்பை, 1985 முதல்), எபேலா (பெங்காளி நாளிதழ், கொல்கத்தா, 2018 வரை), கேரள கௌமாண்டி (மலையாள மாலை நாளிதழ், 2006 முதல்), ராஷ்ட்ர தீபிகா (மலையாள மாலை நாளிதழ், 1992 முதல்), பிரபஞ்சன் சாங்கட் (உருது நாளிதழ், ஆக்ரா, 2008 முதல்), நியூடெல்லி டைம்ஸ் (ஆங்கில வார இதழ், புதுதில்லி, 1991 முதல்), மெட்ரோ நவ் (ஆங்கில காலை நாளிதழ், 2006-2009) என்பனவாகும். இந்தியாவில் முதன்முதலாக பெர்லினர் அளவில் வெளியான இதழ் மிண்ட் (ஆங்கில நாளிதழ், புதுதில்லி, 2007), 2016இல் ப்ராட்ஷீட்டாக மாறியது.

தமிழகத்தில் தற்பொழுது வாசிக்கப்படுகின்ற நாளிதழ்கள் பெரும்பாலும் ப்ராட்ஷீட் வகையைச் சார்ந்ததாகும்.  தினமணி இதழின் அளவு தோராயமாக 21.0" x 26.5" ஆகும். தமிழகத்தில் சிறப்பு நிகழ்வுகளின்போது சில இதழ்கள் டேப்ளாய்ட் அளவிலான இணைப்பினை வெளியிடுகின்றன. ஆனந்த விகடன் வார இதழ், சில ஆண்டுகளுக்கு முன் சகோதரப்பதிப்பாக ஜுனியர் போஸ்ட் என்ற இதழை டேப்ளாய்ட்டில் வெளியிட்டது.

எங்கள் தாத்தா ஜ. ரத்தினசாமி, நவசக்தி நாளிதழ் மற்றும் போல்ஸ்டார் நாளிதழ்களின் வாசகர் ஆவார். 1960களில் அவ்விதழ்களைப் பார்த்ததும், அவற்றுள் டேப்ளாய்ட் அளவில் வெளியான போல்ஸ்டார் நாத்திகம் இராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததாகவும் நினைவு.

வாசகர்கள் இலவச இணையதளத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்துவிட்டதால் அண்மைக்காலமாக ப்ராட்ஷீட்டாகட்டும், டேப்ளாய்ட்டாகட்டும் இரண்டுமே கடினமான சூழலை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இணைய வசதி எளிதில் கிடைக்கின்ற நிலையில் மிக விரைவில் ப்ராட்ஷீட் பத்திரிகைகள், டேப்ளாய்ட் அளவில் இணையத்தில் படிக்க வாய்ப்புகள் பெருக ஆரம்பித்துள்ளன. இணைய தளங்களில் ப்ராட்ஷீட், கிட்டத்தட்ட டேப்ளாய்ட் அளவிற்கே மாற ஆரம்பித்துவிட்டது எனலாம். அச்சிதழைவிட இணைய இதழ் கண்ணைக் கவரும் வகையில் தலைப்புச் செய்திகள், பார்க்க ஆவலைத்தூண்டுகின்ற வண்ணங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைக் கொண்டு வெளிவர ஆரம்பித்துள்ளன. உதாரணமாக தி நியூயார்க் டைம்ஸ் இதழின் இணைய இதழ் நான்கு பத்திகளைக் கொண்டு, கிட்டத்தட்ட டேப்ளாய்ட்டைப் போலவே காட்சியளிக்கிறது. இரண்டாவது பத்தியானது மற்ற மூன்று பத்திகளைவிடவும் சற்றே அகலமாக இருக்கிறது. அந்த வகையில் நோக்கும்போது ப்ராட்ஷீட் நிலையிலான ஆழ்ந்த, பரந்த வாசிப்பு என்பதானது குறைய ஆரம்பித்து, டேப்ளாய்ட்டின் பக்கம் அனைவரும் திரும்பிப்பார்க்கின்ற நேரம் வந்துவிட்டது எனலாம்.

பரபரப்பான, உணர்வுபூர்வமான செய்திகளைத் தருகின்ற இதழியல் என்ற நிலையிலிருந்து மாறி அனைவரும் படிக்கும் வகையிலான செய்திகளைக் கொண்டு வருகின்ற இதழ், வாசிக்கவும் கையாளவும் எளிதான இதழ் என்ற வகையில் தற்போது டேப்ளாய்ட் இதழியலின் பயணம் தொடர்கிறது. போதிய விளம்பரம் இன்மை, அதிகமாக விற்பனையாகா நிலை போன்றவற்றின் காரணமாக அச்சு இதழிலிருந்து இணைய இதழிற்கான மாற்றம் வந்துவிட்ட நிலையில் மிக விரைவில் தமிழ்ப் பத்திரிகைகளும் காம்பேக்ட்டிலிருந்து டேப்ளாய்டுக்கு மாற அதிகமான வாய்ப்புகள் உள்ளன, அச்சு வடிவில் மட்டுமன்றி, இணைய இதழாகவும்.   

நன்றி : தினமணி, வாசகர்களை ஈர்க்கும் டேப்ளாய்ட்கள், 11 ஜுன் 2020


06 June 2020

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கடிதங்கள்

குடும்பத்திற்காக ஒரு பெண் கஷ்டப்படுகிறாள் என்ற கதையின் விமர்சனத்தைக் கேட்டதும், நான் பார்த்த திரைப்படம் அரங்கேற்றம் (1973). அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இளம் வயதிலேயே குடும்பப்பொறுப்பு என்பதை உணர்த்தி நாங்கள் வளர்க்கப்பட்டதால் இப்படம் என்னை ஈர்த்துவிட்டது என நினைக்கிறேன். பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியில் வந்தபோது அன்னியோன்னியமானவரை விட்டுப்பிரிந்து வருவதைப் போல உணர்ந்தேன்.

கதையின் நாயகியான லலிதாவிற்கு மட்டுமல்ல, முதன்முதலாக நான் பார்த்த பாலசந்தரின் திரைப்படம் என்ற வகையிலும் எனக்கு அரங்கேற்றம்தான். குடும்ப நிலையின் காரணமாக பணிக்குச் சென்று, காலச்சூழலால் தடம்மாறி தன்னையே இழந்த லலிதாவை ஒரு தாயாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ நினைக்க முடிந்ததே தவிர ஒரு கதாபாத்திரமாக நினைக்கமுடியவில்லை, இன்றுவரை. நான் விரும்பிப்பார்த்த, இன்னும் பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் முதன்மையானது இத்திரைப்படம். அரங்கேற்றத்தை அடுத்து அவள் ஒரு தொடர்கதையில் தொடங்கி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருடைய பெரும்பாலான திரைப்படங்களை "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்று திருவள்ளுவர் தோன்றுவது முதல் இறுதிக்காட்சி வரை பொறுமையாக அமர்ந்து பார்த்து, ரசித்துப் பார்த்தது மறக்க முடியாத அனுபவங்கள்.  





கே.பாலசந்தரின் 90ஆம் பிறந்த நாளில் (9 ஜுலை 2020) அவரைப் பற்றி ஆவணப்பட இயக்குநர் திரு ரவிசுப்பிரமணியன் இயக்கும் ஆவணப்படம் வெளிவரவுள்ள நிலையில், பல்வேறு காலகட்டங்களில் அவர் பட்டங்களையும், விருதுகளையும் பெற்றபோது (மதிப்புறு டாக்டர் பட்டம், அழகப்பா பல்கலைக்கழகம், 2005, மதிப்புறு டாக்டர் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகம், 2007, இந்திய அரசின் தாதாசாஹிப் பால்கே விருது 2011) அவருக்கு நான் எழுதிய கடிதங்களையும், அதற்கு அவர் தந்த மறுமொழிகளையும் பகிர்வதில் மகிழ்கிறேன்.