25 July 2022

திண்ணை : ஜ.பாரத்

எங்கள் மூத்த மகன் முனைவர் ஜ.பாரத் (9962065436) எழுதியுள்ள மூன்றாவது நூல் திண்ணை.

நேர்மையையும், ஒழுங்கினையும் கடைபிடித்து வாழும் ஒருவர் பிறருக்கு வித்தியாசமாகவே தோன்றுவார். இருந்தாலும் அவர் தன் இருப்பினை சமூகத்தில் ஆழமாகவே பதிந்துவிட்டுச்செல்வார், வெற்றிகரமாக. அதனை நுணுக்கமாக எடுத்துரைக்கிறது இப்புதினம். தஞ்சாவூரின் பறவைப்பார்வை, டெல்டா பகுதியின் செழிப்பு, வணிகத்தின் இரு பக்கங்கள், உழைப்பின் முக்கியத்துவம், உறவுகளின் சிறப்பு, நிகழ்வுகளை வாசகர் முன்கொண்டுவருகின்ற உத்தி ஆகியவற்றின் பின்புலங்களோடு அருமையான கருவைக் கொண்டு படைத்துள்ளவிதம் போற்றத்தக்கது.  

பாத்திரங்களின் படைப்பும், உரையாடலும், போக்கும் நம்மை நிகழ்விடத்திற்கு அழைத்துச்செல்வதை உணர்த்தும் பத்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.  

"கல்லாவில் முருகேசன் அமர்ந்திருக்க, ஆதிமூலம் சீனிவாசனிடம், குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு தம்பி. நம்ம வியாபாரம் எப்பவும் அப்படிப்பட்டதில்ல........என்றார்." (ப.15)

"முழுவீச்சில் கணக்குப் புஸ்தகங்களையும், சிட்டாக்களையும் தேடிக்கொண்டிருந்தவருக்கு இந்த தடை பெரிய எரிச்சலையூட்டியது. இப்படி நிரூபித்து என்ன செய்யப்போகிறார்? வயது மூப்பு. முன் மாதிரி வேலையில் கவனம் இல்லாமை, சோர்வு. ஆனால், நேர்மையை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருந்தார் ஆதிமூலம்." (ப.21)

"அச்சச்சோ, அப்படியெல்லாம் இல்ல மாமா, மனசு கேக்க மாட்டுது. திண்ணையக் கடந்து காலையிலயும், சாயங்காலமும் வாசல் தொளிக்கப் போகும்போதெல்லாம் அவரு அங்க கெடந்தது நெனப்புக்கு வந்து நிக்கிது. என்ன செய்ய. நான் வாங்கி வந்த வரம் அப்படி. கோயிலுக்குப் போனா மனசு கொஞ்சம் தெம்பா இருக்கு." (ப.53)

"கல்யாணம் பண்ணிக்கிறதோ, கொழுந்த பெத்துக்கிறதோ வாழ்க்கையில்ல. அதுக்கெல்லாம் அப்பறம் நாம எப்படி வாழுறோங்கிறதுலத்தான் இருக்கு. அதுலத்தான் நீ எனக்கு வாங்கிக் கொடுக்கப்போற பேரு இருக்கு." (ப.57)


முனைவர் சு.மாதவன் அவர்களின் அணிந்துரையிலிருந்து:

திண்ணை என்னும் குறியீடாக வருபவர் இதில் வரும் தாத்தா கணக்குப்பிள்ளை ஆதிமூலம் ஆவார். ஒவ்வொரு திண்ணையும் ஒவ்வொரு விதம்; வீட்டின் குணத்திற்கு (வடிவம்) ஏற்ப திண்ணை அமைந்திருக்கும். ஆதிமூலம் வீட்டுத் திண்ணை நல்லறத் திண்ணை; சீனிவாசனின் திண்ணை பதுக்கலின் உரத்திண்ணைமுதலாளித்துவம் ஈவிரக்கமற்ற லாபம் பார்க்கும்; சேர்க்கும். தொழிலாளித்துவமும், நடுத்தட்டு வர்க்கமும் மனிதச்சேவை உணரும்; திணறும்

இந்நூல் ஒரு குறும் புதினம்தான்எனினும் இது அரும் புதினம்கீழவாசல் வணிக வாழ்க்கையை அப்படியே படம் பிடித்திருக்கிற இந்தக் குறும் புதினம் நம்மை அதனோடு வாசிப்பு வாழ்க்கை நடத்த வைக்கிறது. முதலாளி சீனிவாசனின் வணிக அதர்மமும் ஆதிமூலத்தின் வாழவியல் அறமும் உரசி உரசிக் கடைசியில் ஆதிமூலம் எனும் கணக்குப்பிள்ளையைக் காவு வாங்கிவிடுகிறது என்பதை எண்ணும்போதுகாசுஎன்றாலே பொய் என்பதன் உண்மையை உணரவைக்கிறது.

இப்புதினத்தைப் படிக்கப் படிக்க நெஞ்சம் முழுவதும் தஞ்சை நிறைகிறது. இப்புதினத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கியாரும் ஒரே மூச்சில் முடிக்க முடியும். அவ்வளவு மன நெருக்கத்தைத் தஞ்சையில் வாழ்ந்த எனக்குத்தந்தது. தஞ்சையில் வாழ வாய்ப்பில்லாமல் வேறு ஊர்களில் வாழ்பவரும் புதினத்துக்குள் புழக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு வரலாற்றுச் சித்திரமாக இப் புதினம் நெஞ்சில் விரிகிறது; காட்சியாக்கும் கலைச் சொற்களில் நிறைகிறது.

நூலினை சுமார் 40 ஆண்டு கால நண்பர் திரு.ந.பக்கிரிசாமி, [கண்காணிப்பாளர் (பணி நிறைவு), பொது நூலகத் துறை, தஞ்சாவூர்] அவர்கள் வெளியிடல்
(உடன் நூலாசிரியர்)

தொடர்புக்கு:   +91 99620 65436/+91 94889 69722,  tamilkudilpathipagam@gmail.com

நவம்பர் 2021, ISBN: 978-93-5578-276-2, 94 பக்கங்கள், ரூ.140


திண்ணையை எந்த அஞ்சல் கட்டணமும் இல்லாமல் நூல் விலையான ரூ.140ல் பெற ஆகஸ்ட் 2022க்கு முன் கீழுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பலாம். கூகுள் பே மூலம் பணம் அனுப்ப: UPI ID sindhumathionline@oksbi

9

21 July 2022

கோயில் உலா : 2 ஜூலை 2022

2 ஜூலை 2022இல் அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். இந்த, இவ்வாண்டின் மூன்றாவது கோயில் உலாவில் பரிதிநியமம், கோட்டூர், திருக்களர், சித்தாய்மூர், எட்டுக்குடி,  வலிவலம்,  கன்றாப்பூர், கச்சினம், தண்டலை நீள்நெறி, கற்பகநாதர்குளம் , தில்லைவிளாகம் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களுக்குச் சென்றோம். இவற்றில் எட்டுக்குடி (சுப்பிரமணியசுவாமி) மற்றும் தில்லைவிளாகம் (வீரகோதண்டராமர்) ஆகிய கோயில்கள் தவிர பிற கோயில்கள் தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத் தலங்களாகும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைந்துள்ள இக்கோயில்கள் அனைத்தும் நான் முதல் முறை பார்க்கின்ற கோயில்களாகும். 

பரிதிநியமத்தில் குழுவினர் சிவ புராணம் ஓத அங்கிருந்து கோட்டூர் சென்றோம். வளரும் இளம் நாதஸ்வரக்கலைஞர்களின் திறமையைக் கண்டு ரசித்தோம். பின் பயணத்தைத் தொடர்ந்தோம். எட்டுக்குடியில் மதிய உணவுக்குப் பின் சற்றே ஓய்வெடுத்தோம்.

1) பரிதிநியமம், தஞ்சாவூர் மாவட்டம்  
பரிதியப்பர்-மங்களநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூர் அருகில் உள்ள தலம். 

2) கோட்டூர், திருவாரூர் மாவட்டம்  
கொழுந்தீஸ்வரர்-தேனார்மொழியாள் 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டியிலிருந்தும், மன்னார்குடியிலிருந்தும் இத்தலத்திற்கு வரலாம். 



3) திருக்களர், திருவாரூர் மாவட்டம்  
களர்முளைநாதர்-இளங்கொம்பன்னாள் 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையில்  உள்ள தலம். 

4) சித்தாய்மூர் (திருச்சிற்றேமம்), நாகப்பட்டினம் மாவட்டம்  
பொன்வைத்தநாதர்-அகிலாண்டேஸ்வரி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலத்தம்பாடியிலிருந்து  3 கிமீ தொலைவில் உள்ள தலம். 

5) எட்டுக்குடி , நாகப்பட்டினம் மாவட்டம்  
சுப்பிரமணியசுவாமி  

6) வலிவலம், நாகப்பட்டினம் மாவட்டம் 
மனத்துணைநாதர்-வாளையங்கண்ணி 
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கீவளூர் வழி சென்று இத்தலத்தை அடையலாம்.


7) கன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்), திருவாரூர் மாவட்டம் 
நடுதறியப்பர்-மாதுமையம்மை 
நாவுக்கரசர் பாடல் பெற்றது
நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி சாலையில் சாட்டியக்குடி கூட்டுரோட்டில் பிரியும் சாலையில் 2 கிமீ சென்று ஆதமங்கலம் அடுத்து கோயில்கண்ணாப்பூர் கூட்டுரோடு என விசாரித்து அங்கிருந்து வலப்புறம் பிரியும் சாலையில் 1 கிமீ சென்றால் தலத்தை அடையலாம்.

8) கச்சினம் (கைச்சினம்), திருவாரூர் மாவட்டம்  
கைச்சினேஸ்வரர்-வெள்வளைநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள தலம்.


9) தண்டளை நீள்நெறி (தண்டலச்சேரி), திருவாரூர் மாவட்டம்  
நீள்நெறிநாதர்-ஞானாம்பிகை 
ஞானசம்பந்தர், பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள தலம்.


10) கற்பகநாதர்குளம் (கடிக்குளம்), திருவாரூர் மாவட்டம் 
கற்பகநாதர்-சௌந்தரநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டி தொண்டியக்காடு சாலையில் இத்தலம் உள்ளது.



11) தில்லைவிளாகம், திருவாரூர் மாவட்டம்  
வீர கோதண்டராமர் 


ஒவ்வொரு பயணத்திலும் கிடைக்கின்ற அனுபவங்கள் மனதில் நிற்கும் வகையில் உள்ளன. இந்த உலாவும் அவ்வாறே அமைந்தது.

vட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவராக முருகன், வள்ளி தெய்வானையுடன் மயிலின்மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் சௌந்திரேஸ்வரர் சன்னதியும், இடது புறத்தில் ஆனந்தவல்லியம்மன் சன்னதியும் உள்ளன. (எண்கண்ணில் மூலவராக  பிரம்மபுரீஸ்வரர் உள்ளார். முருகனுக்கு தனி சன்னதி உள்ளது.) வலிவலம் கோயிலைப் பார்த்தபோது கீவளூர் கேடிலியப்பர் கோயில் நினைவிற்கு வந்தது. சற்றொப்ப அக்கோயிலைப் போலவே இருந்தது. கற்பகநாதர் கோயிலில் நந்தி மண்டபம் கோயிலுக்கு முன் இருந்ததைக் கண்டோம். தில்லைவிளாகம் ராமர் கோயில் இப்பகுதியிலுள்ள பஞ்சராமர் தலங்களில் (முடிகொண்டான் ராமர், அதம்பார் கோதண்டராமர், பருத்தியூர் ராமர், வடுவூர் கோதண்டராமர் ஆகியவை பிற ராமர் கோயில்கள்). கருவறையில் உலோகத்திருமேனியாக இருந்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமார் சிற்பங்கள் எங்களை அதிகம் ஈர்த்துவிட்டன. முதன்முதலாக கருவறையில் இங்குதான் உலோகத் திருமேனியை பார்த்தேன். ராமபிரானை வழிபட்டுவிட்டு, உலாவினை நிறைவு செய்தோம். அங்கிருந்து கிளம்பி இரவு சுமார் 10.30 மணியளவில் தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.

துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • விக்கிப்பீடியா

14 July 2022

கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச்சங்கம் மரபு நடை : 3 ஜூலை 2022

கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச்சங்கம் என்ற அமைப்பானது அண்மையில் கும்பகோணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அச்சங்க நிர்வாகிகள் அறிமுக விழாவும் ஆலயம் அறிவோம் வரிசையில் முதல் மரபு நடையும் 3.7.2022 ஞாயிற்றுக்கிழமை காலை கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. 


சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் கோ. தெய்வநாயகம் குத்துவிளக்கேற்றி நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். பக்தி இயக்க காலம் தொடங்கி சோழர் காலம் வரையிலும் பின்னர் தொடர்ந்து தற்போது வரையிலும் கும்பகோணம் தமிழக வரலாற்றில் ஓர் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருவதையும், அவ்வாறே திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இக்கோயிலும் பல்வேறு கால கட்டங்களில் பல மாற்றங்களைக் கடந்து வந்ததையும்  எடுத்துக் கூறினார்.  

சங்கத்தின் தலைவர் திரு பால.சிவகோவிந்தன் தலைமை தாங்கினார்.  நிறுவனரும் செயலாளருமான கும்பகோணம் ஆ.கோபிநாத் கும்பகோணத்திலும், அருகிலும் உள்ள கோயில்களைப் பற்றிய முக்கியத்துவத்தினை உள்ளூர் வாசிகளான அந்தந்த பகுதி மக்களிடம் கொண்டு சேர்த்தல், கோயில்களைப் பாதுகாக்கவேண்டிய முக்கியத்துவத்தினை வலியுறுத்துதல், ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள தனித் தன்மைகளையும் சிறப்புத் தன்மைகளையும் வெளியுலகிற்குக் கொணர்தல், கோயிலிலுள்ள கல்வெட்டுச் செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துக்கூறல், கோயிலை நன்கு பராமரித்தல்  உள்ளிட்ட சங்க நோக்கங்களை  எடுத்துக்கூறினார். 

சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான ஆலயம் அறிவோம் என்ற வரிசையில் நாகேஸ்வரன் கோயிலில் நடைபெற்ற முதல் மரபு நடையின்போது கோயில் விமானத்தின் சிறப்பான அமைப்பு, திருச்சுற்றிலும், கோட்டங்களிலும், பிற இடங்களிலும் உள்ள சிற்பங்கள், சிற்றுருவ ராமாயணச் சிற்பங்கள் ஆகியவற்றின் நுணுக்கங்களை தெய்வநாயகம் எடுத்துரைத்தார். சிற்பங்களை நுட்பமாக ஆழ்ந்து பார்க்கும்போது பல புதிய பரிமாணங்களைப் பெறலாம் என்றும் ஆழ்ந்து நோக்கலும், உற்றுநோக்கலும் தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார். 

கோயிலில் உள்ள கல்வெட்டுகளைப் படித்துக்காட்டி அனைவரையும் சோழர் காலத்திற்கு அழைத்துச் சென்றார், கும்பகோணம் கோபிநாத்.

நிகழ்வின் நிறைவில் பொருளாளர் முனைவர் சீ.தங்கராசு சங்கம் தொடர்ந்து மரபு நடையினை நடத்தும் என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் உள்ளூர் பிரமுகர்கள், வரலாற்று ஆர்வலர்கள், தொல்லியல் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 

சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்தல்  (இடமிருந்து) சீ.தங்கராசு, கோ.தெய்வநாயகம், பால. சிவகோவிந்தன், கும்பகோணம் கோபிநாத்.



நிகழ்வின்போது, பார்வையாளராகச் சென்றிருந்த என்னை சங்கத்தார் மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தி, நெகிழவைத்தனர். கும்பகோணத்தில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து அனைத்துக் கோயில்களுக்கும் சென்ற அனுபவத்தையும், தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் கும்பகோணத்திலுள்ள பெரும்பாலான கோயில்களைப் பற்றி எழுதிய அனுபவத்தையும் குறிப்பிட்டுப் பேசி, வாய்ப்பு தந்தமைக்காக நன்றி கூறினேன்.



தொடர்ந்து சங்கம் மென்மேலும் வளர்ந்து வரலாற்றுக்கு முக்கியமான பங்கினை அளிக்கவும், மரபு நடை சிறக்கவும்  என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒளிப்படங்கள் நன்றி : கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச்சங்கம்

11 டிசம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.

11 July 2022

அம்மாப்பேட்டை பஞ்சபூதத் தலங்கள்

1990களின் இடையில், திருவாவடுதுறை ஆதீனம் நடத்துகின்ற சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பில் ஆரம்பகாலத்தில் ஆசிரியராக அறிமுகமான. சித்தாந்தச் செம்மணி திரு ச.சௌரிராஜன் ஐயா அவர்களை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாப்பேட்டையில் அவருடைய இல்லத்தில் சந்திக்கச் சென்றேன். இதற்கு முன்பாக அங்கு சென்றிருந்தபோதிலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. புதுக்கோட்டையில் வலைப்பதிவர் மாநாட்டில் அறிமுகமான, கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகப் இணைப்பேராசிரியர் பா.சக்திவேல் அவர்களை அங்கு சந்தித்தேன்.

இருவருமே என் பௌத்த ஆய்விற்கும், பிற எழுத்துப்பணிக்கும் ஊக்கம் கொடுத்துவருபவர் ஆவர். ஆய்வு, கோயில் உலா, விக்கிப்பீடியா, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல பொருண்மைகளில் உரையாடினோம். பின்னர் அங்குள்ள உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு நாங்கள் மூவரும் சென்றோம். பல ஆண்டுகளுக்கு முன்னர், குடமுழுக்கு (2005) ஆவதற்கு முன்பாக, அக்கோயிலுக்கு சௌரிராஜன் ஐயாவுடன் நான் சென்றுள்ளேன்.

அருணாச்சலேஸ்வரரையும், தர்மசம்வர்த்தனியையும் தரிசனம் செய்தோம். இறைவியின் பின்புறத்தில் சுவற்றில் உள்ள ஸ்ரீசக்கரம், கஜபிருஷ்ட அமைப்பிலிருந்த விமானம், அப்பகுதியில் அரிதாகக் காணப்படுகின்ற தனுசு சுப்பிரமணியர்,  நடுவில் உள்ள சூரியனைப் பார்க்கும் வகையில் அமைந்துள்ள நவக்கிரக சன்னதி, விக்கிரமாகாளியின் செப்புத்திருமேனி,  பங்குனி மாதம் 14 முதல் 16ஆம் தேதி வரை சூரிய ஒளியானது மூலவர்மீதும விழுவது உள்ளிட்ட பல சிறப்புகளைக் கண்டேன். 2005 குடமுழுக்கிற்குப் பின்னர் தற்போது கோயில் அடுத்த குடமுழுக்கிற்குத் தயாராவதாகக் கூறினர்.

கோயிலில், அம்மாப்பேட்டை பஞ்சபூதத்தலங்களில் இத்தலம் அக்னித்தலமென்றும், அம்மாப்பேட்டையைச் சுற்றி  பிற தலங்கள் உள்ளன என்றும், விக்கிரம சோழன் இப்பகுதியில் பஞ்சபூதத்தலங்களை நிர்மாணித்து வழிபட்டதாக அப்பகுதியில் கூறப்படுவதையும் அறிந்தேன்.  செவிவழிச் செய்தியாக கிடைக்கின்ற சில செய்திகள் நமக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடுவது இயற்கையே. மூவரும் பிற கோயில்களுக்குச் செல்வது குறித்து விவாதித்தோம். 

அம்மாப்பேட்டை பஞ்சபூதத்தலங்களாக அம்மாப்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில் (அக்னி), அம்மாப்பேட்டை பூலோகநாதர் கோயில் (மண்), சாலியமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் (வாயு), சாலியமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோயில் (ஆகாயம்), செண்பகபுரம் கோயில் (நீர்) ஆகியவை கூறப்படுகின்றன. 

அம்மாப்பேட்டை அருணாச்சலேஸ்வரர்தர்மசம்வர்த்தனி கோயில் நுழைவாயில் (பஞ்சபூதத்தலம் : அக்னி)

கஜபிருஷ்ட வடிவில் விமானம்

குடமுழுக்கிற்குத் தயாராகும் அம்மாப்பேட்டை பூலோகநாதர்–பூலோகநாயகி கோயில் (பஞ்சபூதத்தலம் : மண்)


சாலியமங்கலம் காளஹஸ்தீஸ்வரர்–ஞானாம்பிகை கோயில்  (பஞ்சபூதத்தலம் : வாயு)
 

சாலியமங்கலம் சிதம்பரேஸ்வரர்–சிவகாமசுந்தரி கோயில்  (பஞ்சபூதத்தலம் : ஆகாயம்)

முதல் நான்கு கோயில்களையும் பார்த்துவிட்டு ஐந்தாவது தலமான செண்பகபுரம் எனப்படுகின்ற ஜம்பகபுரத்தில் சிவன் கோயிலைத் தேடிச் சென்றபோது அவ்வாறாக எந்தக் கோயிலும் இல்லை என்று அப்பகுதியில் கூறினர்.  பூண்டிக்கு தெற்கில்புன்னைநல்லூருக்கு 5 கிமீ கிழக்கில் உள்ள செண்பகபுரத்தில் இடிபாட்டுடன் கூடிய கோயிலின் கட்டுமானப்பகுதியைப் பார்த்தோம்.  அங்கு இந்தக் கட்டுமானத்தைத் தவிர வழிபாட்டில் உள்ள சிவன் கோயில் எதுவுமில்லை என்று கூறினர். 

செண்பகபுரம் ஜம்புகேஸ்வரர்  கோயில் (?)  (பஞ்சபூதத்தலம் : நீர்)


இடிபாடான நிலையில் மரங்களுக்கிடையே ஒரு கோபுரத்தையும், சுற்றுச்சுவரையும் மட்டுமே அங்கு காணமுடிந்தது. மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்ததால் உள்ளே செல்லமுடியவில்லை. அடுத்தடுத்த களப்பணியில் செண்பகபுரத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்ற ஜெண்பகேஸ்வரர் கோயிலைத் தேட உள்ளோம். அதற்கு இறையருள் துணைநிற்கும் என்று நம்புகிறோம். 


அம்மாப்பேட்டை கோயிலில் (இடமிருந்து வலமாக) ச.சௌரிராஜன், ஜம்புலிங்கம், சக்திவேல்

நன்றி: திரு கி.சிவஞானசம்பந்தம், சிவாச்சாரியார்
மற்றும் ஊர் மக்கள்

*****************************************

அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரர் கோயில் தொடர்பாக முனைவர் சக்திவேல் எழுதியுள்ள கட்டுரை 12.10.2023 நாளிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் வெளியாகியுள்ளது. (இதழ் வெளியான நாள் 29.9.2023)







29 செப்டம்பர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.