18 November 2022

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு : நிகரிலி சோழன் விருது

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், தென்னக பண்பாட்டு ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் சார்பாக 3 ஆகஸ்டு 2022ஆம் நாள் ஆடிப்பெருக்கன்று மாமன்னர் இராஜராஜ சோழர் முடிசூடிய 1037ஆவது ஆண்டு விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெத்தண்ணன் கலையரங்கில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. வரலாற்றுத்தேடல் குழுவின் தலைவர் திரு உதயசங்கர் தலைமை தாங்க,  தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் கட்டடக்கலைத்துறைத் தலைவரும் தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத்தலைவருமான முனைவர் கோ.தெய்வநாயகம்  திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சண்முக செல்வகணபதி, திரு கயிலைமாமணி செ.இராமநாதன், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் உதவிப்பேராசிரியர் முனைவர் த.ரமேஷ், இந்து அறநிலையத்துறையின் முன்னாள் செயல் அலுவலர் து.கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதே மேடையில் நானும் சிற்றுரையாற்றினேன். 



நிகழ்விற்குப் பின் பெருவுடையாருக்கும், ராஜராஜனுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அடுத்த நிகழ்வான மரபு நடையின்போது பெரிய கோயிலின் சிறப்புகளையும் கல்வெட்டுச் செய்திகளையும் சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் தெளிவாக எடுத்துரைத்தனர்.





மாலை தஞ்சை நட்ராஜ் நாட்யாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம், வீணை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழுவின் பொருளாளர் திரு ஆண்டவர் கனி நன்றி கூற விழா இனிதே நிறைவேறியது.









இவ்விழாவில் நிகரிலி சோழன் விருது வரலாற்று அறிஞர்கள், வளரும் ஆய்வாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் வழங்கப்பட்டது. நானும் இவ்விருதினைப் பெற்றேன். விருதினை எனக்கு வழங்கிய குழுவினருக்கு என் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் காலை முதல் இரவு வரை விழாவினை சிறப்பாக நடத்தினர்.  அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஒளிப்படங்கள் நன்றி: சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு


முந்தைய விருதுகள்
சித்தாந்த இரத்தினம், 1997


அருள்நெறி ஆசான், 1998

பாரதி பணிச்செல்வர், 2001







அருமொழி விருது, 2021


***************************
விரைவில் வெளிவரவுள்ள என் நூல் 

***************************

09 November 2022

தகைசால் தமிழர்



முகநூலில் என் பெயரை கும்பகோணம் ஜம்புலிங்கம் என்று மாற்றியமைக்கு தமிழ்நாடு புலவர் பேரவையின் தலைவர் திரு வை.வேதரெத்தினம் அவர்கள் வாழ்த்து... நன்றி ஐயா....

தகைசால் தமிழர் !

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 1959 –ஆம் ஆண்டு பிறந்தவர் திரு.ஜம்புலிங்கம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி 30-04-2017 அன்று ஓய்வு பெற்றவர் !
பணியில் இருந்து கொண்டே படித்து மதுரை, காமராசர் பல்கலைக் கழகத்தில் 1995- ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 1999 – ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றவர் !
தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சோழநாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம் போன்ற தனது வலைப்பூக்களில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவையன்றி, தமிழ்ப் பொழில், தினமணி போன்ற இதழ்களிலும், விக்கிபீடியா மின்ம ஊடகத்திலும் ஆயிரத்துக்கும் மிகையாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார் !
அருள் நெறி ஆசான், பாரதி பணிச் செல்வர் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ள இவர் Dr.B.JAMBULINGAM என்ற பெயரில் முகநூல் தொடக்கி இயக்கி வந்தார் !
“தமிழ்நாடு புலவர் பேரவை” முன்னெடுத்து வரும் ”தமிழுக்கு மாறுவோம்” என்னும் இயக்கத்தினால் ஈர்க்கப்பெற்ற இவர் தனது முகநூல் கணக்கினை “கும்பகோணம் ஜம்புலிங்கம்” என்ற பெயரில் தமிழுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார் !
பணிவோய்வுக்குப் பின் தஞ்சை, கீழவாசலில் வாழ்ந்து வரும் இந்தத் தகைசால் தமிழரை வளமோடு, நலமோடு வாழ்வாங்கு வாழ்கவென உளமாற வாழ்த்துவோம் !
வாழிய செந்தமிழ்ச் செல்வரே ! வாழிய நீவிர் வளமோடு, நலமோடு, பொலிவோடு, புகழோடு நீடு வாழ்க !
-----------------------------------------------
அன்புடன்,
வை.வேதரெத்தினம்,
தலைவர்,
தமிழ்நாடு புலவர் பேரவை,
[திருவள்ளுவராண்டு: 2053, துலை (ஐப்பசி) 23]
{09-11-2022}
---------------------------------------------


01 November 2022

சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும்

சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும் என்னும் நூல் எஸ்.ஜி.வித்யா சங்கர் ஸ்தபதியைப் பற்றிய அறிமுகம், நேர்காணல், கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிற்பக்கலையைப் பற்றிய அவருடைய கருத்துகளைக் காண்போம். 

"பெரும்பாலும் என்னுடைய படைப்புகளில் என் தாய்நாட்டு மணம் கமழ வேண்டும், இந்தியக் கலை கலாச்சாரத்தை எல்லா நாட்டவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே செய்யவே ஆசைப்படுகிறேன், செய்தும் வருகிறேன். எனது வளர்கலை சிற்பத்தை ஒரு வெளிநாட்டவர், ஒரு கலைப்பிரியர் வாங்கிச்செல்லும்போது அந்தச் சிற்பத்தில் உள்ள இதிகாச புராண வழிகளை இந்திய மரபு வந்த இதன் நிகழ்ச்சி, கதை, அதன் அடிப்படையில் இருக்கும் அந்த சிற்பம் செல்லும் இடம் எல்லாம் இந்திய மணம் கமழும் என்பது அய்யமில்லை...." (பக்கம் 13)

"இந்தியாவில் என்ன இல்லை? என்று கூறமுடியும். அயல்நாடுகளில் உள்ள கியூபிசம் முப்பரிமாணம் இயற்கை செயற்கை மற்றும் பல இசங்கள் இங்கு இந்தியாவில் இல்லையா? அதைவிட அதிகமாக இருக்கிறது. இதைக்கூர்ந்து ஆராய்ச்சிகள் செய்து வெளிக்கொண்டுவந்து புதிய வளர்கலை சிற்பங்களாக செய்ய முயற்சிக்கிறேன்...." (ப.15)

"கலை ஓவியங்களும், சிற்பங்களும் நாம் வாதிப்பதற்காக செய்யப்படவில்லை. கலைப்பொருளை உருவாக்கும் கலைஞனின் முயற்சி அது ரசிக்கப்படவேண்டும் என்பதே. ஒவ்வொரு கலைஞனும் தன் மன திருப்திக்காக கலைப்பொருள்களை உருவாக்கினாலும், அவற்றை ரசிக்கும் ரசிகனால்தான் முழு திருப்தி அடைகிறான்...." (ப.29)

"ஒரு தட்டையான தகடு என்கிற ஒரு பரிமாணத்தை வைத்து முப்பரிமாணத்துல சிற்பமாகக் கொண்டு வந்துகாட்டினது நான் ஒருவன்தான் 1964இல். அதற்கு அப்புறம்தான் என் சக நண்பர்கள் எல்லாம் அதைச் செய்ய ஆரம்பித்தார்கள்...." (ப.44)

"இங்கிருக்கிற நடராஜர் சிலை லண்டனுக்குப் போனா அது தமிழ்நாட்டுச் சிற்பம் என்று சொல்லுகிறான். ஆனால் லண்டனிலிருந்தோ, நியூயார்க்கிலிருந்தோ வீனஸ் சிலையைக் கொண்டு வந்தால் இங்கிருக்கு யாருக்கும் தெரியாது. அது யாராவது படித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். படித்தவர்கள் சொன்னால்தான் தெரியும்...." (ப.47)

"நவீன படைப்புகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டாலும் எனது தந்தையாரிடம் மரவுழி சிற்ப சாஸ்திரங்களை இலக்கண சுத்தமாகக் கற்றவன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் நான் கிறுக்கனாகத் தெரியலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை மரபின் அம்சம் மாறாமல் புதுமை நிகழ்த்துபவனாகவே என்னை நான் உணருகிறேன்....." (ப.74)

"நான் காலத்திற்கேற்ப சிந்தித்தேன். செப்புக்குடங்களின்மீது செய்யப்படும் நகாசு வேலையை மாற்றியதைத்தான் எனது முதல் படைப்பு என்று சொல்லமுடியும்......நடராஜர் சிலையை 'ப்ரேக்' செய்தேன். இதுபோன்ற துணிச்சலான படைப்புகளில் எனக்கான தனித்தன்மையை எடுத்துக்கொண்டேன்....தெள்ளத் தெளிவாக சிற்ப மரபுகளைக் கற்றுத் தேர்ந்த பிறகே உடலில்லாத கை, கால்களில்லாத புதிய படைப்புருவங்களை கற்பனை செய்கிறேன். என்னுடைய சிற்பங்கள் ராகம் தொலைத்த பாடல்கள் போலத் தெரியலாம். ஆனால் அதன் உயிரில் சிற்ப மரபுகள் படிந்திருக்கின்றன....." (ப.86). 

நூல் : சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும்
விலை ரூ.600
ஆசிரியர் : எஸ்.ஜி.வித்யா சங்கர் ஸ்தபதி
பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, தொலைபேசி : 044-25361039
பதிப்பாண்டு: முதல் பதிப்பு, செப்டம்பர் 2019




சிற்பகலாரத்னம் கலைச்செம்மல் திரு வித்யா சங்கர் ஸ்தபதி (முன்னாள் முதல்வர். அரசு கவின்கலைக் கல்லூரி. கும்பகோணம்) அவர்களை நானும், அவரது மாணவர் மற்றும் என் நண்பரான சிற்பக்கலைஞர் திரு ராஜசேகரும் கும்பகோணத்தில் 9 செப்டம்பர் 2022இல் அவருடைய இல்லத்தில் சந்தித்த இனிய தருணங்கள்.