29 October 2023

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு : சிறப்பு மலர் 21-23 சூலை 2023

21-23 சூலை 2023இல் கோலாலம்பூரில் நடைபெற்ற 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையொட்டி வெளியான மாநாட்டுச்சிறப்பு மலர் பண்பாடு, கலை மற்றும் வரலாறு, இசை, இலக்கியம், சிறார் இலக்கியம், பதிப்பியல், அறிவியல் மற்றும் கணினி அறிவியல், தொல்லியல் ஆகிய பொருண்மைகளில் 390 பக்கங்களில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. 



மலேசியப் பிரதமர், கல்வியமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், துணைக்கல்வியமைச்சர், மனித வளத்துறை அமைச்சர், தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சகத் துணையமைச்சர், மாநாட்டுத்தலைவர் ஆகியோரின் வாழ்த்துகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. 

வரலாற்றறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், துறைசார்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்களிப்பினையும் இம்மலர் அருமையாக முன் வைக்கிறது. ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு கட்டுரையும் தனித்துவம் பெறுகிறது. மலரின் சில கட்டுரைகளிலிருந்து.......

"இன்றைய உலகமயமாக்கல் முறையில் பன்னாட்டு உறவால் சிலருக்கு தாய்மொழிமீது உள்ள பற்று குறைந்து வருகிறது. இது ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும்.." (ப.35)

"சங்க, காப்பியக் காலத்தில் பெருவழக்குப் பெற்றிருந்த துடி பத்திமைக் காலத்தில் உடுக்கை என்றும் அழைக்கப்பெற்றுச் சோழர் காலத்தில் ஆடலுக்குகந்த இசைக்கருவியாகத் திகழ்ந்ததுடன், சிவபெருமானின் சில கோலங்களிலும் இடம்பெற்றது... " (ப.73)

"கடல் கடந்தும் காரைக்கால் அம்மையார் பயணித்திருக்கிறாள். கம்போடியாவில் உள்ள பண்டிஸ்ரீ கோவிலில் சிவநடனக் காட்சியில் அம்மை காட்டியிருப்பது சிறப்பு.." (ப.76)

"சேவல்தான் முதன்முதலில் காலத்தால் முந்திய நூல்களில் முருகனது அடையாளம். இது ஓர் இனக்குழுக்குறி. மயில் பின்னால்தான் வருகிறது." (ப.94)

"இசை என்பது ஒன்றுதான். மெலடி, மெட்டு, சேர்ந்திசை, தூய சங்கீதம், வர்ணம், பதம், நிரவல், நம் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்டவை.. " (ப.105)

"பேச்சு முதலில் தோன்றியது என்பதும் எழுத்து பிறகு காலவரிசையில் மனிதர்கள் கண்டுபிடித்திருப்பார்கள் என்பதும் எல்லோரின் நம்பிக்கை.." (ப.134)

"காலனியக் காலத்தில் அறிவியல் சொல்லாடல்களால் கட்டப்பட்ட தேசியம் என்ற கருத்தியலுக்கு ஏற்ப இறைபக்தி, தேசபக்தியாக மடைமாற்றம் அடைந்தது. அதனால், பக்தி இயக்க மரபு தமிழில் நிகழ்ந்த வேதமதம் சார்ந்த வைதீக உணர்வை பரவலாக்கிறது." (ப.187)

"மூல மொழி தெரிந்தால் அதிலேயே படிப்பதே மேல். ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்திலேயே படிப்பதே மேல். அவ்வாறில்லாமல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்பை வாசிப்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்களடம் குறைகாண்பதையே நோக்கமாகக் கொண்டு அதை அணுகவேண்டாம்." (ப.200)

"தமிழர்கள் பன்னிரண்டு மாதங்களின் பெயர்களை, சூரியன் இயங்கும் உடுக்கணத்தின் பெயர்களாகக் கொண்டிருந்தனர்..." (ப.298)

"உலக அளவில் தனியாகப் பல வணிகச்சின்னங்கள் இருந்துவருகின்றன. சூப்பர்மென், அயர்ன்மேன், ஸ்பைடர்மேன் என நாளுக்கு நாள் அயல்நாட்டு வணிகச்சின்னங்களை கொண்டுசெயல்பட்டு வருகின்றோம். ஆனால் நமது தமிழிலிருந்து வரலாற்றுச் சின்னங்களை, கதாநாயகர்களை அடிப்படையாகக் கொண்டு, வணிகச்சின்னங்களை நாம் உருவாக்கவில்லை என்பதே உண்மை." (ப.324)

"தமிழ் விக்கிப்பீடியா தொகுப்பு குறித்துத் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள், ஆசிரியர்களிடையே உரிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் நிலை மாறவேண்டும்." (ப.329)

சங்க இலக்கியம் தொடங்கி இக்காலம் வரையிலான பல்துறை சார்ந்த மிக நுட்பமான கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்த மலரானது ஆய்வாளர்கள் முதல் அறிஞர்கள் வரை அனைவரும்  பாதுகாக்கப்படவேண்டிய மலராகும். தேவையான இடங்களில் அடிக்குறிப்புகளும், படங்களும் வாசகருக்கு  தெளிவினைத் தருகின்றன. படிக்க அயர்ச்சி தராத எழுத்துரு, வாசிப்பு வேகத்தை மேம்படுத்த ஆங்காங்கே படங்கள், கோட்டோவியங்கள், வேறுபடுத்திக்காட்ட தடித்த எழுத்துரு என்ற வகையில் ஒரு கலையியல் ரசனையாடு அமைந்துள்ளது இம்மலர். சிறப்பான முறையில் மலரை வெளிக்கொணர்ந்த மலர்க்குழுவினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.














11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பு மலர்
வெளியிட்டோர் : உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியக்கிளை, 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை 600 017, தொலைபேசி 044 28340488, மின்னஞ்சல் : 11worldtamilconf@gmail.com, www.iatrinternational.org.
மலர் தேவைக்கு : 
மலராசிரியர் திரு சுகவன முருகன், அலைபேசி 98426 47101, muruguarch@gmail.com

15 October 2023

அத்தையின் ரசனை

எங்கள் அத்தையின் குணங்களில் நான் அதிகம் ரசித்தது அவருடைய அழகியல் ரசனை ஆகும். அத்தையின்  ரசனைத்தன்மை என்னை இயல்பாகப் பற்றிக்கொண்டுவிட்டது. கும்பகோணத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் எனக்கு இவ்வாறான ஒரு ரசனையை ரசிக்கும் குணம் உடையவராக நண்பர் திரு தேணுகா அவர்களைக் கண்டேன்.  

ஒவ்வொரு நவராத்தியின்போது கொலுவின் முதல் நாள் முதல் நிறைவு நாள் வரை முழு ஈடுபாட்டுடன் இருப்பார் எங்கள் அத்தை திருமதி இந்திரா. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் அழகாக கொலு அமைய அவரே காரணம். கொலுப்படியின் இரு ஓரங்களிலும் உரிய பொம்மைகளை அளவிற்கும், வண்ணத்திற்கும் தக்கபடி முதல் படி முதல் கடைசிப்படி வரை சரியாக வைத்தல், தசாவதாரம் போன்றவற்றை உரிய வரிசையாக அமைத்தல், இல்லாத பொம்மைகளை ஒவ்வொரு ஆண்டும் வாங்கிச் சேர்த்தல், உடைந்த பொம்மைகளுக்குப் பதிலாக புதிதாக வாங்குதல் என்ற வகையில் அவருடைய ஈடுபாடு இருந்தது.   

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் நவராத்திரி கொலுவின்போது இடம்பெற்ற, அத்தை வாங்கிய, அம்மா பின்னிய பொருள்களில் உள்ளவற்றில் சில மட்டும் இன்று எங்கள் இல்ல காட்சிப்பேழையில் உள்ளது. 

அவருடைய அழகியல் ரசனையானது நவராத்திரி கொலுவில் மட்டுமல்ல. அழகான பொருள்கள் கிடைத்தால் ஆர்வத்தோடு வாங்குவார். நகையாகட்டும், ஆடையாகட்டும், அழகான பொம்மைகளாகட்டும் எதுவாக இருந்தாலும் வாங்கி விடுவார். ஆடை வகைகளை அணிந்து அழகு பார்ப்பார். என் தாயாரும் அத்தையும் மணி பின்னல் தொடங்கி காட்டன் துணி விதம் விதமாகப் பின்னுதல் மற்றும் எம்ப்ராய்டரி வேலைகள் செய்வர்.

கும்பேஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது தேரானது தெற்கு வீதியிலிருந்து மேல வீதிக்கும், அங்கிருந்து வடக்கு வீதிக்கும் திரும்பும்போது அதனை நின்று ரசிப்பார். தேரின் அழகினைத் திரும்பும்போது பார்க்கவேண்டும் என்பார்.

உறவினர்கள், நண்பர்களின் மகள்களுக்கு ஆர்வமாக விதம்விதமாக பூ தைப்பார். சாதாரணமாக பூ தைத்தல், தாழம்பூ வைத்து தைத்தல், வங்கி மாடல், பல வகைகளில் பூ தைக்கும் அழகே அழகு. வாழைப்பட்டையை சமமாக அறுத்தெடுத்து, கோர்த்த பூவை அதில் வங்கி மாடல், நேர் மாடல் என்ற வகைகளில் தைப்பார்கள். சில சமயங்களில் அழகான ஈர்க்குச்சிகளை எடுத்துக்கொண்டு அதில் வரிசையாக பூவினைச் செருகி சடையின் இரு பக்கங்களிலும் அமைத்து, நடுவில் அழகழகான வண்ணப் பூக்களை வரிசையாக அமைத்து, இடையே வண்ண நூல்களை பூப்போல சுருட்டி அமைத்து, நடுவில் மாறுபட்ட வண்ணத்தில் இடத்திற்குத் தக்கவாறு பூவையோ வண்ண நூலையோ அமைப்பார். அனைத்து வகையான பூக்களும் அதில் இடம்பெற்றுவிடும். சில சமயங்களில் கருப்பு திராட்சைப்பழம் வைத்தும் தைப்பர். நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள்கூட பூ தைப்பார்கள். பூப்பு நீராட்டு, வளைகாப்பு போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது அவர் சடை பின்னப் பார்த்திருக்கிறேன். தலை முழுக்க பூவும், வண்ண நூலும் மட்டுமே. தலையில் வட்ட வடிவ கல் பதிந்த ராக்கடி, இரு புறமும் கல் பதிந்த வட்ட வடிவ சூரியன், பிறை வடிவிலான சந்திரன் வைப்பர். நடுவில் வட்டமாக மூன்றடுக்கில் பின்னிய மல்லிகைச்சரத்தை ரிங் பால் வடிவில் அமைக்கப்பட்ட கொண்டையைச் சுற்றி அடியில் முடிச்சுப் போடுவர்.  பூ தைக்கப்படுகின்றவர் பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், பொறுமையாக இருப்பார். பூ தைத்து முடிந்தபின் பூ தைக்கப்பட்டவர் நண்பர்கள், உறவினர்களிடம் சென்று காண்பித்துவிட்டு வருவார். அதனை ஆர்வமாகப் பார்த்து அவர்கள் கருத்து கூறுவர். சில சமயங்களில் போட்டோ ஸ்டுடியோக்களில் சென்று போட்டோவும் எடுப்பர். பூ தைத்தவர், தைக்கப்பட்டவர் என்ற ஒரு பிணைப்பானது அடுத்தடுத்த குழந்தைகளுக்கு ஆர்வத்தினை இயல்பாகவே உண்டாக்கிவிடும். எப்போதாவது பூ தைத்துப் பெண் குழந்தைகளைக் காண நேரும்போது அதனை அத்தை பின்னியதோடு ஒப்புநோக்கிப் பார்த்துவிடுகிறேன்.

வளையலணி விழாவிற்காக பூ தைக்கும்போது அந்தப்பெண் அதிக நேரம் உட்கார இயலா நிலை ஏற்படும். அச்சூழலில் விழாவின் முதல் நாளே வாழைப்பட்டையில் அளவெடுத்து வெட்டி அதில் பூவை வைத்துத் தைத்து ஈரத்துணியில் சுற்றி வைத்துவிட்டு, மறுநாள் தலையில் வைத்துத் தைப்பர்.  

பிள்ளைகளின் நடவடிக்கைகள், பேச்சுகளை மனம் லயித்து ரசிப்பார். தாயக்கட்டை, பல்லாங்குழி, ஆடுபுலி, பரமபதம், பம்பரம், ஏழாங்கல், உப்புமூட்டை, கூட்டாஞ்சோறு, கோலிகுண்டு, கிச்சுகிச்சு தாம்பலம்,  கிட்டிப்புல், ஒத்தையா ரெட்டையா, ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையாம் முந்திரிக்கா, நொண்டி விளையாட்டு, கேரம் போர்டு என்ற விளையாட்டுகளை  நாங்கள் விளையாடும்போது ஆர்வமாகப் பார்ப்பார். அதிக நேரம் விளையாடும்போது திட்டியதும் உண்டு.

மீன் குழம்பு ஊற்றி சாப்பிடும்போது நமக்கும் சாப்பிட ஆசை வந்துவிடும். பொறுமையாக நிதானித்து மீனின் முள்ளை எடுத்து லாவகமாக ருசித்துச் சாப்பிடுவார். இன்னும் மீன் குழம்பை நான் அதிகம் விரும்பிச் சாப்பிட அவரே காரணம். 

மருதாணி போடுவதில் ஆர்வம் காட்டுவார். உள்ளங்கையினை அடைத்து முழுமையாகப் போடுதல், நடுவில் மட்டும் போட்டு சுற்றி சிறு ரவுண்டு வைத்தல், அனைத்து கைகளுக்கும் மோதிரம் போடுதல் என்றவாறு விதம் விதமாகப் போடுவார். மருதாணி போட்டவர்களைக் கண்டால் எவ்வாறாக போட்டுள்ளார்கள் என்று ஆர்வமாகப் பார்ப்பேன். இன்றும் எனக்கு மருதாணி வைத்தலில் ஒரு ஈடுபாடு உண்டு.    

ஆடையில், குணத்தில், பழகும் முறையில், நடத்தையில் பிறரிடம் காணும்போது அவருடைய கலையியல் ரசனையை ஆர்வத்தோடு ரசிப்பேன். குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை கொலுசு அணிந்த குழந்தை, அழகான சடைப்பின்னல், தலை நிறைய பூ, பாவாடை தாவணி, புடவை கட்டி அழகுபார்த்தல், நெற்றியில் அழகான பொட்டு, அழகான ஆடை என்ற வகையில் அவருடைய ரசனையானது நீண்டுகொண்டே இருக்கும். தாத்தா, ஆத்தாவைப் போல குழந்தைகளும், வளரும் பிள்ளைகளும் அணியும் ஆடைகளையும், ஆடை அணியும் முறைகளையும் ரசிப்பார். பிள்ளைகள் உடல் தெரிவது போன்ற ஆடை, மெல்லிய ஆடை, கருப்பு வண்ண ஆடை, முட்டிக்காலுக்கு மேல் டவுசர், ஆண் பிள்ளைகள் அதிகமாக முடி வைத்திருத்தல் நீண்ட கிருதா வைத்தல் என்பனவற்றைக் கண்டிப்பார். ஒருவரின் பண்பினை நிர்ணயிப்பதில் ஆடைக்கும், தலை முடிக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தினர். அத்தகைய பண்பாடுகளைக் கடைபிடிக்கும்போது கண்ணியமும், ஒழுங்கும் இயல்பாக வந்துவிடும் என்பதையும், அவற்றைக் கடைபிடிக்காத நிலையில் பல விளைவுகள் உண்டாகும் என்பதையும் அவர்கள் உணர்த்தினர். இன்றும் அந்த ரசனைகளையும், ஆடை முறையையும் நினைக்கும்போது அத்தையின் நினைவு இயல்பாக வந்துவிடும். அந்த நாள்கள் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்த நாள்கள். அந்நாள்களையும் நவராத்திரி கொலுவையும் மறக்கவும் முடியுமோ?

10 October 2023

பேராசிரியர் வே.இரா. மாதவன் (6.4.1952-8.10.2023)

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் வே.இரா. மாதவன் அவர்கள் 8.10.2023 அன்று இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பழகுவதற்கு இனியவர், மிகச்சிறந்த பண்பாளர், மென்மையான பேச்சுக்குச் சொந்தக்காரர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1993இல் ஆய்வில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் பல ஆசிரிய, அலுவலக நண்பர்களுடன் அவ்வப்போது என்னுடைய ஆய்வினைப் பற்றிப் பேசுவதுண்டு. அவ்வாறு நான் ஆய்வு தொடர்பாக பேசி வந்த ஆசிரியர்களில் ஒருவர் திரு வே.இரா.மாதவன் அவர்கள். அவரிடம் பேசும்போது பெரும்பாலும் கோயில்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டறிவேன். கருத்துகளை அவர் நுணுக்கமாக எடுத்துக்கூறும் விதம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். 15 ஆண்டுகளுக்கு அவருடைய நூல் தொடர்பாக நான் எழுதிய கடிதம் தி இந்து நாளிதழில் வெளியானது. சற்றே திரும்பிப்பார்ப்போம்.

2008இல் தி இந்து (ஆங்கிலம்) இதழில் வெளியான ஒரு கட்டுரையில் தமிழில் தல புராணங்கள் தொடர்பாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த நூலும் இல்லை என்ற பொருளில் ஒரு கட்டுரை வெளியானது. ("..Nobody has done any serious work on Tamil sthalapuranams.", The Vandalization of Heritage, Interview, The Hindu, Magazine Section, 10.2.2008, p.7)




அவர் எழுதிய தமிழில் தல புராணங்கள் நூலை (தமிழில் தல புராணங்கள், முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி, பாவை வெளியீட்டகம், சி1, முன்றில் சாலை, தமிழ்ப்பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகம், திருச்சி நெடுஞ்சாலை, தஞ்சாவூர், 1995) நான் படித்துள்ளேன். நாளிதழில் நான் படித்த செய்தியை அவரிடம் கூறி, இது தொடர்பாக அவ்விதழுக்கு நான் கடிதம் எழுதவுள்ளதைக் கூறினேன். அப்போது அவர் அவ்விதழில் 1997இல் வெளியான நூல் மதிப்புரையின் (Sthalapuranas in Tamil, The Hindu, 14 October 1997) படியைத் தந்தார். தொடர்ந்து அவ்விதழுக்கு நான் எழுதிய கடிதம் (More on sthalapuranams, The Hindu, Magazine, 24 February 2008) வெளியானது.

அவரைப் போன்ற அறிஞர்களுடன் விவாதம் செய்தது என் ஆய்விற்கும், வாசிப்பிற்கும் மிகவும் துணையாக இருந்தது. அவருடைய மறைவு என்னைப் போன்றோருக்குப் பேரிழப்பு.

தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் 2014இல் தமிழில் தல புராணங்கள் (நூல்) என்ற தலைப்பிலும், 2015இல் திருக்குடந்தை புராணம் என்ற தலைப்பிலும் பதிவுகளை ஆரம்பித்தேன்.

03 October 2023

விக்கிப்பீடியா 20 ஆண்டு நிறைவு : தஞ்சைக்கூடல்

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி செப்டம்பர் மாதம் 20 ஆண்டுகள் நிறைவுற்று 21ஆம் ஆண்டு துவங்குவதைக் குறிக்கும் விழா தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 23-24.9.2023இல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை திரு மா.செல்வ சிவகுருநாதன் மற்றும் திரு பி. மாரியப்பன்  (சத்திரத்தான்) ஒருங்கிணைத்தனர்.


முதல் நாளன்று (23.09.2023) விக்கிப்பீடியாவின் சிஐஎஸ்-ஏ2கே அமைப்பும், தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறையும் இணைந்து நடத்திய கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்  வி. திருவள்ளுவன் துவக்கிவைத்து தலைமையுரை ஆற்றினார். பதிவாளர் (பொ) முனைவர் சி. தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். வளர்தமிழ் புலமுதன்மையர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகிக்க, நோக்கவுரையினை திருவாரூர் கருவூல கூடுதல் அலுவலர் திரு கி. மூர்த்தி நிகழ்த்தினார். அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் முனைவர் இரா. இந்து வரவேற்புரையாற்ற விக்கிபீடியா நிர்வாகி ஸ்ரீபாலசுப்ரமணியன் நன்றியுரையாற்றினார். 

துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றல். (உடன் இடமிருந்து : விக்கிப்பீடியர் பி.மாரியப்பன் (சத்திரத்தான்), விக்கிப்பீடியர் ஸ்ரீபாலசுப்ரமணியன், பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், வளர்தமிழ்புல முதன்மையர் இரா.குறிஞ்சிவேந்தன், விக்கிப்பீடியர் கி.மூர்த்தி, அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் இரா.இந்து)

மேம்பாட்டுப்பயிற்சியின்போது பதிவு செய்த கல்லூரி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியாவில் பயனராகப் பதிந்து, புதிய கட்டுரைகளை எழுதுவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் இதில் பங்கேற்று, புதிய பயனராகப் பதியும் முறையை அறிந்துகொண்டனர். அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட துறைகளைச்சார்ந்த கட்டுரைகளைப் புதிதாகத் தொகுத்தனர். முன்னரே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தினர். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவில் தொடங்குவதற்கான உத்திகளும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன. அதற்கு முன்பாக ஒவ்வொருவரும் தம் பெயரில் பயனர் கணக்கினைத் தொடங்கினர். அவ்வாறாகத் தொடங்கப்படும் கணக்கில் பதியப்படும்போது ஒவ்வொருவரின் பங்களிப்பும் அறியவரும் என்றும், அதனால் அந்த முறையிலேயே தொடர வேண்டும் என்றும் அவர்களுக்குப் பயிற்றுநர்கள் வலியுறுத்தினர். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது, மிகவும் அணுக்கமாக விக்கிப்பீடியாவை அணுகலாம், எழுதலாம் என்பதானது பயிற்சியாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொருவரிடமும் தாமும் அதிகமாகப் பங்களிக்க வேண்டும் என்ற ஓர் அவா இருந்ததைக் காணமுடிந்தது. விக்கிப்பீடியாவைப் பற்றியும், பிற திட்டங்களான விக்சனரி, விக்கிமூலம், விக்கி பொதுவகம், விக்கி நூல்களைப் பற்றியும் பயிற்றுனர்கள் சுருக்கமாக அறிமுகம் தந்தனர்.    

தமிழ் விக்கிப்பீடியா பயிற்றுநர்களாக பார்வதிஸ்ரீ, பா.ஜம்புலிங்கம், வெ.வசந்தலட்சுமி, தகவலுழவன், மா.செல்வகுருநாதன், ஞா.ஸ்ரீதர், பி.மாரியப்பன் ஆகியோர் செயல்பட்டனர். 

முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பதிவாளர் (பொ), அறிவியல் துறைத்தலைவர், விக்கிப்பீடியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்

முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட விக்கிப்பீடியா பயனர்கள்

விழாவின் இரண்டாம் நாளன்று (24.9.2023) நடைபெற்ற பயனர்கள் கூடல் நிகழ்வில் வரவேற்புரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். சுருக்கமாக தஞ்சாவூரைப் பற்றியும், விக்கிப்பீடியாவில் என்னுடைய அனுபவத்தையும் பேசினேன். இதே மேடையில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஏப்ரல் 2017இல் பணி நிறைவு பெற்றதையும் உரையில் குறிப்பிட்டேன்.
இரண்டாம் நாள் நிகழ்வில் வரவேற்புரை 

குறிப்பிடத்தக்க பணியாற்றிய பங்களிப்பாளர்கள் என்ற வகையில் மூன்று பிரிவில் ஆறு பயனர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.  அந்த வகையில் திரு மா.செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்தேன். இவ்வாறான விருதுகள் வளர்ந்து வரும் விக்கிப்பீடியர்களுக்கும்,  ஆர்வமாக செயலாற்றும் விக்கிப்பீடியர்களுக்கும் ஓர் உந்துதலாக இருப்பதோடு, பிற விக்கிப்பீடியர்கள் ஆர்வமாகப் பங்களிக்க உதவும் என்று நம்புகிறேன்.  
விருது பெற்ற பயனர்கள்:
செயல்நயம் மிக்கவர் 
பார்வதிஸ்ரீ, நீச்சல்காரன், செல்வசிவகுருநாதன்
5000+ கட்டுரை எழுதியவர்
ஸ்ரீபாலசுப்ரமணியன், சத்திரத்தான்
அறிமுகப்பயனர்
ஷா.பத்ருநிஷா  
மா.செல்வசிவகுருநாதனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்
(இடமிருந்து) சத்திரத்தான், கி.மூர்த்தி, மா.செல்வசிவகுருநாதன், பா.ஜம்புலிங்கம்

தொடர்ந்து சரஸ்வதி மஹால் நூலகப் பண்டிதர் முனைவர் மணி.மாறன் இலக்கியம், வரலாறு, தொல்லியல் நோக்கில் தஞ்சாவூரைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையை எடுத்துரைத்தார். 
மணி.மாறனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்
(இடமிருந்து) சத்திரத்தான், தேனி.மு.சுப்பிரமணி, மணி.மாறன், பா.ஜம்புலிங்கம்
தமிழகம் முழுவதிலுமிருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கின்ற தன்னார்வப் பயனர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டு கால வளர்ச்சி, கட்டுரைப் பதிவில் முன்னேற்றம், நெறிமுறைகள், தொழில்நுட்ப மேம்பாடு, அடுத்தகட்ட நகர்வு, கட்டுரைகளின் எண்ணிக்கைகளை அதிகமாக்க மேற்கொள்ளப்படவேண்டிய முயற்சி உள்ளிட்டவற்றைப் பற்றி விவாதித்தனர்.

அவர்களுடைய பேச்சு, இன்னும் எழுதவேண்டும் என்ற ஒரு உத்வேகத்தைத் தந்தது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் அவர்கள் மறுமொழி தந்தனர். அப்போது, ஒவ்வொரு நாளும் கற்கிறோம் என்பதைப் போல பல புதிய செய்திகளையும், உத்திகளையும்  கற்றேன். 
விக்கிப்பீடியாவில் பங்களிக்கின்ற முதுகலை மாணவர்களுடன் பா.ஜம்புலிங்கம்

மதியம்  நடைபெற்ற கலைப்பயணத்தில் தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம், கலைக்கூடம், தர்பால் ஹால் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். போதிய நேரமின்மையைப் பொருட்படுத்தாது அவர்கள் ஆர்வமாக அனைத்து இடங்களையும் பார்வையிட்டனர். 




நிகழ்வின் செய்திகள் ஊடகங்களில் இடம் பெற்றன. துணைவேந்தரவர்களின் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 28 பிப்ரவரி 2024இல் உலகத்தமிழ் விக்கிப்பீடியா மாநாடு என்ற அறிவிப்பானது விக்கிப்பீடியர்களையும், தமிழின் மேன்மைக்காகப் பாடுபடுவோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்த இலக்கு நோக்கி நகர இந்த அறிவிப்பானது ஓர் உந்துகோலாக அமைந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட விக்கிப்பீடியர்கள்
சுமார் 35 ஆண்டுகளாக நான் பணியாற்றிய, சுமார் 25 ஆண்டுகளாக ஆய்வினை மேற்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தற்போது முதுகலைப் பயிலும் மாணவர்களுடன் உரையாடியது ஒரு மறக்கமுடியாத அனுபவம். இம்மாணவர்கள் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகின்றனர் என்பது பாராட்டப்படவேண்டியதாகும்.  

தி இந்து (ஆங்கிலம்), 23 செப்டம்பர் 2023


தினமணி, 24 செப்டம்பர் 2023


இந்து தமிழ் திசை, 24 செப்டம்பர் 2023

தினமலர், 25 செப்டம்பர் 2023

தினத்தந்தி, 25 செப்டம்பர் 2023


விழா அழைப்பிதழ்
 
இந்து தமிழ் திசை, 12 அக்டோபர் 2023


தினமணி, 12 அக்டோபர் 2023, ப.8


இதற்கு முன்னர் மதுரை, ஆனைக்கட்டி போன்ற இடங்களில் விக்கிப்பீடியா தொடர்பான கூடல்களில் கலந்துகொண்டபோதிலும் இதில் கலந்துகொண்டது நினைவில் நிற்கும் அனுபவமாகும். நூல் ஆய்வுப்பணி காரணமாக முழுமையாக செயல்பட முடியாவிட்டாலும், தொடர்ந்து விக்கிப்பீடியாவில் நான் எழுதி வருகிறேன். மூத்த விக்கிப்பீடியர்களின் பேச்சுகளும், வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறையினரின் ஆர்வமும் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது. நம்மால் முடிந்த வரையில புதிய கட்டுரைகளை எழுதுவோம், அதிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்துவோம்.  இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களுடன் 1.57 லட்சம் கட்டுரைகளுடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய மொழி விக்கிப்பீடியாவான தமிழ் விக்கிப்பீடியாவினை அடுத்த இலக்கிற்கு முன்னோக்கி எடுத்துச்செல்ல ஒருமித்துப் பயணிப்போம். தமிழ் விக்கிப்பீடியாவினை முதன்மை இடத்திற்குக் கொணர நாம் அனைவரும் ஒன்று சேருவோம், வாருங்கள். 

விக்கிமேனியா, மதுரை, 14 ஆகஸ்டு 2022


விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை, ஆனைக்கட்டி, 26-28 ஜனவரி 2023


நன்றி : நாளிதழ்கள், படங்களைப் பகிர்ந்தவிக்கிப்பீடியர்கள், நண்பர்கள்

12 அக்டோபர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

20 September 2023

கும்பகோணம் : சினிமா அனுபவம்

கும்பகோணத்தில் எனக்கு நினைவு தெரிந்து ஆரம்பத்தில் இருந்த திரையரங்குகள் ராஜா டாக்கீஸ் (சோமேஸ்வரன் கோயில் எதிரில்/இப்போது இல்லை), டைமண்ட் டாக்கீஸ் (இப்போது தங்கும் விடுதியாகிவிட்டது), விஜயலட்சுமி தியேட்டர் (வாணி விலாச சபா என்பர்), ஜுபிடர் தியேட்டர் (மகாமகக்குளம் அருகில்/இப்போது இல்லை) ஆகிய நான்கு மட்டுமே. 

பின்னர் நூர் மஹால் (பின்னர் செல்வம் தியேட்டர் என்றாகி தற்போது எம்.எஸ்.எம். தியேட்டர்), கற்பகம் (பின்னர் வேல்முருகன்), தேவி தியேட்டர் (பின்னர் பரணிகா), மீனாட்சி, வாசு, விஜயா ஆகிய திரையரங்குகள் கும்பகோணத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தவையாகும். இத்திரையரங்குகள் தொடர்பாக சில நினைவுகள் இன்றும் மனதைவிட்டு அகலாமல் உள்ளன.

1960களில்  மூங்கில் தட்டியில் திரைப்படச் சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) நகரெங்கிலும் ஒட்டப்பட்டிருக்கும். அதில் தினசரி மூன்று காட்சிகள், சனி, ஞாயிறு நான்கு காட்சிகள் என்று ஓரத்தில் வண்ண மையினால் எழுதப்பட்டிருக்கும். சிலவற்றில் சனி, ஞாயிறு காலைக்காட்சி மட்டும் என்ற வண்ண மை குறிப்புடன் ஆங்கில திரைப்படத்திற்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். பொற்றாமரைக்குளக்கரையில்தான் அவ்வாறான  போஸ்டர்கள் அதிகமாக இருக்கும். குளத்தின் கரையில் வெளிப்புறத்தில் சுவரையொட்டி இரு மூங்கில்களை நட்டு அதில் மூங்கில் தட்டியினை வைத்து அதில் போஸ்டர்களை ஒட்டிவைத்திருப்பர். அதைப் பார்த்து எந்தெந்தத் திரையரங்கில் எந்தெந்தப் படம் ஓடுகிறது என்று தெரிந்துகொள்வோம். இரு புறங்களிலும் எத்தனைக் காட்சிகள் என்ற விவரம் இருக்கும். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது வெற்றிகரமான 50ஆவது நாள், 100ஆவது நாள், 250ஆவது நாள் என்று சுவரொட்டிகள் சிறப்பாக அச்சிடப்பட்டிருக்கும்.

புதிய திரைப்படம் வரும்போதோ, பல நாள்கள் ஓடியதற்காகவோ, திரைப்படம் முடியும் நாளைத் தெரிவிக்கவோ சிறிய தள்ளுவண்டி உள்ள ஒரு வண்டியில் போல இரு பக்கமும் போஸ்டரை வைத்து கூவிக்கொண்டே செல்வர்.  சில சமயங்களில் அந்த திரைப்படத்தின் நோட்டீசையும் தூக்கி எறிந்துக்கொண்டும், வருவோர் போவோரிடம் கொடுத்துக்கொண்டும் செல்வர். இரு பக்கமும் தட்டியைக்கொண்ட அந்த சிறிய தள்ளுவண்டியில் இரு சிறிய இரும்பு சக்கரத்தில் ஓடும். சில சமயங்களில் இரட்டை மாடு பூட்டிய வண்டியிலும் அவ்வாறு சென்றதைக் கண்டுள்ளேன். 

ராஜா டாக்கீஸ் ஆரம்பக்காலத்தில் திரைப்படங்கள் அதிகமாகப் பார்த்தது இங்குதான்.   52 பைசாவில் அங்கு சினிமா பார்த்த நினைவு.  பார்வையாளர்கள் பகுதி முழுமையாக குறுக்கே ஒரு சுவற்றால் பிரிக்கப்பட்டிருக்கும். ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமும் அமர்ந்திருப்பர். நான்காவதோ, ஐந்தாவதோ படிக்கும்போது நான் பார்த்து நினைவிலுள்ள முதல் பாலசந்தர் படம் இரு கோடுகள். அப்படம் பார்த்துவிட்டு வந்தபின் சிங்காரம் செட்டித்தெருவில் நண்பனுடைய வீட்டில் அப்படத்தின் டைட்டில் கார்டு அடுத்தடுத்து இரு கோடுகள் பற்றி பேசிய நினைவு உள்ளது. அப்போது பாலசந்தரைப் பற்றித் தெரியாது. உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம் திரையிடப்பட்டபோது வாசலில் தட்டியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் வாசகர்கள் டிக்கெட் எடுத்துக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும் என்று எழுதியிருந்தது. பால பாரதம் என்ற புராணத் திரைப்படம் வந்தபோது எங்கள் அத்தை அதில் உள்ளதுபோல் உடன்பிறந்தோர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றார். இந்தித் திரைப்படமான பாபியை இங்குதான் பார்த்தேன்.  நான் அதிகம் ரசித்த அவள் ஒரு தொடர்கதை  இங்கு பார்த்தேன். அதனைப் பார்க்கப்போகும்போது திரையரங்கத்தின் வெளியே இருந்த சுவரொட்டிகளை அதிக நேரம் நின்று பார்த்தது நினைவில் உள்ளது. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தை மிகவும் ஆர்வத்துடன் பார்த்தேன். சிவாஜி வாரம், எம்ஜிஆர் வாரம் என்று படம் வெளியிட்டார்கள். சிவாஜி வாரத்தின்போது ஒரு நாளைக்கு ஒரு படமும், எம்ஜிஆர் வாரத்தின்போது இரு ஒரு படமும் திரையிட்டார்கள்.

விஜயலட்சுமி தியேட்டர் இங்கு அவ்வப்போது பார்த்துள்ளேன். ஒரு காலகட்டத்தில் சிவாஜிகணேசனின் பழைய திரைப்படங்களை இங்கு தொடர்ந்து வெளியிட்டார்கள். அப்போது ஊட்டி வரை வரவு இங்கு பார்த்தேன். சிவாஜிகணேசன் நடித்த விளையாட்டுப்பிள்ளை இங்கு பார்தத நினைவு. இங்கு பார்த்த பிற படங்கள் நினைவில் இல்லை.

டைமண்ட் டாக்கீஸ் இங்கு அதிகமாகப் படம் பார்க்கவில்லை. அவ்வாறே இங்கு பார்த்த படங்களும் நினைவில் இல்லை.

ஜுபிடர் திரையரங்கம் வீட்டிலிருந்து அதிக தொலைவிலிருந்த தியேட்டர் இதுதான். இதில் அரங்கேற்றம் பார்த்த நினைவு. பின்னாளில் நான் பாலசந்தர் ரசிகனாக மாறியதற்கான ஆரம்பம் இப்படமே. இதன் முதன்மைப்பாத்திரமான  லலிதா (பிரமிளா) நம் அண்டைவீட்டுப் பெண் போல இருப்பார். அந்தப்படத்திற்குப் போய்வந்தபின்னர் வீட்டில் அதுபோன்ற படத்திற்குப் போகக்கூடாது என்று திட்டு வாங்கினேன். இப்படத்தைப் போலவே என்னை முற்றிலும் மறந்து நான் ரசித்த மற்றொரு படம் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை. என் மனதில் அதிக தாக்கத்தை இப்படம்  உண்டாக்கியது.  

நூர் மஹால் எனக்கு விவரம் தெரிந்து முதன்முதலாக கட்டப்பட்ட திரையரங்கம் நூர் மஹால். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை கல்லூரி நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து பார்த்தேன். இந்தத்திரைப்படத்தைப் போல வேறு எதையும் அதிக நண்பர்களுடன் ஒரே நேரத்தில், ஒரே காட்சியில் பார்க்கவில்லை. இத்திரைப்படத்திற்கு இந்திரா அத்தையும் வந்த நினைவு. பாலசந்தர் ரசிகன் என்ற நிலையில் இப்படத்தை அதிகம் ரசித்தேன்.  "ஏழு ஸ்வரங்களுக்குள்......" பாடல் என்னை அதிகம் ஈர்த்தது.

கற்பகம் ராஜா டாக்கீஸைவிட மிகவும் நெருக்கமாக வந்தது கற்பகம் தியேட்டர். தியேட்டர் கட்டுமானப்பணியின்போது அங்கு அப்பாவுடன் சென்று பார்த்துள்ளேன். கட்டட வடிவமைப்பு அழகாக இருக்கும். கட்டடப்பணியாளர்கள் விரும்பியதற்காக தியேட்டர் முன்பு ஒரு தென்னை மரத்தை உள்ளது உள்ளபடியே, வெட்டாமல் வைத்துவிட்டார்கள். துவக்கவிழாவின்போது அதில் இருந்த தேங்காய்களுக்கும் வண்ணமிட்டிருந்தனர். முதல்முறையாக திரை மேலே செல்லும் உத்தியை இத்தியேட்டரில் அறிமுகப்படுத்தினர். தொங்கும் திரையில் வண்ண விளக்குகள் எரிய, மெல்லிசையின் பின்புலத்தில் திரை மேலே தூக்கும். அந்த சத்தத்தை வைத்தே அருகிலுள்ளோர் டிக்கட் எடுக்க வந்துவிடுவர்.

தியேட்டரின் திறப்பு விழா நாளில் திருமலை தென்குமரி திரைப்படத்தை முதல் சிறப்புக் காட்சியாகத் திரையிட்டனர்.  அதனைப் பார்த்துவிட்டு வந்து வீட்டில் பெருமையாகப் பேசினேன்.  ராஜபார்ட் தங்கதுரை வந்தபோது அதில் வந்த ஒரு பாத்திரமாக திருப்பூர் குமரனைப் போல சிவாஜிகணேசன் கொடியைக் கையில் பிடித்தபடி நிற்க ஒரு பெரிய கட் அவுட்டை (மாட்டு வண்டியோ, டிராக்டரோ நினைவில்லை) வைத்துத் தெருவெல்லாம் சுற்றிவந்தனர். திருப்பூர் குமரனின் கையில் இருந்த கொடி தனியாக, துணிக்கொடியாக, செருகப்பட்டு பறந்துகொண்டிருந்தது. ஒரு வித்தியாசமான உத்தியாக அதனைப் பேசினர். தங்கப்பதக்கம் நிறைவு நாளன்று படத்தில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் வந்திருந்தனர் பெருமையாகப் பேசப்பட்டது. அந்தப்புகைப்படங்களை அத்தியேட்டரில் பார்த்துள்ளேன். நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தை என்னுடைய எல்லா நண்பர்களுடனும், தனியாகவும் பல முறை பார்த்துள்ளேன். இதன் கதாநாயகி சோனாவுக்காக (ஜெயப்ரதா) நானும் நண்பர் சந்தானகிருஷ்ணனும் சேர்ந்து பலமுறை பார்த்துள்ளோம்.  கடைசி நாள் கடைசி காட்சி முடிந்தபின்னர் எங்கேயும் எப்போதும் பாடலை மட்டும் மறுபடியும் திரையிட்டார்கள். எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

இத்தியேட்டரில் ஆபரேட்டராகப் பணியாற்றியவர் சில காலம் எங்கள் வீட்டில் குடியிருந்தார். அவருடன் சென்று ஆபரேட்டர் ரூமைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இரு கார்பன்களை நெருக்கமாகக் கொணர்ந்து அதில் வரும் ஒளியில் படம் ஓடுவதைப் பார்த்துள்ளேன். கார்பன் என்பதானது கருப்பு நிற மெழுகுவர்த்தி போல இருக்கும். கார்பன் குறையக்குறைய வேறு கார்பனை கையில் எடுத்துக்கொள்வர். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே வண்ண நிறம் தீட்டப்பட்ட கண்ணாடியை பாடல் காட்சியிலும் பிற காட்சிகளும் மாற்றி மாற்றிக் காண்பிப்பர். திரையில் அக்காட்சி வித்தியாசமாகத் தெரியும். அதை ஆபரேட்டர் செய்தபோது அவர் அறையிலிருந்துகொண்டே திரையிலும் பார்த்தேன்.

முதன்முதல் சினிமாஸ்கோப் என்ற பெருமையுடன் ராஜராஜ சோழன் திரைப்படம் வந்தபோது அத்திரைப்பட சுவரொட்டிகளில் கு.காமராஜ், மு.கருணாநிதி ஆகியோரின் வாழ்த்து இரு பக்கங்களிலும் இடம்பெற நடுவில் கதாநாயகனான சிவாஜி கணேசனை ராஜராஜசோழனாகக் காணமுடிந்தது. எந்த தியேட்டர் என நினைவில்லை.

தேவி, மீனாட்சி, விஜயா, வாசு, காசி போன்ற தியேட்டர்களில் அதிகம் படம் பார்க்க வாய்ப்பில்லை. 

அண்ணாலக்ரஹாரம் ரத்னா, தாராசுரம் சூரியகாந்தி (பின்னர் பெயர் மாறியதா எனத் தெரியவில்லை) போன்ற டூரிங் டாக்கீஸ்களில் அவ்வப்போது லைசென்ஸ் முடியும்போது படத்தின் சுவரொட்டியில் "எமது வந்தனோபசார கடைசி படம்" என்று துண்டுச்சீட்டில் ஒட்டியிருப்பார்கள். அவ்வாறு கடைசியாக வெளியான சில படங்களுக்கு அப்பா அழைத்துச்சென்றுள்ளார். லைசென்ஸ் புதுப்பிக்கும் கால இடைவெளியில் திரைப்படங்கள் வெளியிடப்படமாட்டாது. அவ்வாறான கடைசி படம் நல்ல படமாக இருந்தால் அப்பா அழைத்துச்சென்றுவிடுவார். அவ்வப்போது படச்சுருளை மாற்றும்போது மின்விளக்குகளைப் போட்டுவிடுவர். மறுபடியும் படச்சுருளை இயக்க படம் தொடரும். ஒரு முறை படச்சுருள் அறுந்ததாகக் கூறி அவ்வாறு படத்தைப் பாதியில் நிறுத்தினர். பின்னர் படச்சுருளில் ஊக்கைப் போட்டு இணைத்து ஓட்டினர். அந்த ஊக்கு திரை முழுக்க பெரிதாகத் தெரிந்தது. படத்தின் பெயர் நினைவில்லை. 

 அப்பாவுடன் சினிமா

சினிமாவுக்கு அழைத்துக்கொண்டுபோய் பிள்ளையைக் கெடுக்கிறான் என்று எங்கள் அப்பாவை, ஆத்தாவும், தாத்தாவும் அடிக்கடித் திட்டிக் கொண்டிருப்பார்கள். அப்பா எதையும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டார். அவர் என்னை பல ஆங்கிலப்படங்களுக்கும் இந்திப்படங்களுக்கும் அழைத்துச்சென்றுள்ளார். அப்பழக்கம் காரணமாக என் மகன்களையும், மனைவியையும் ஆங்கிலப்படங்களுக்கு அழைத்துச்செல்ல ஆரம்பித்தேன்.

பீஸ் சால் பாத் என்ற இந்தித் திரைப்படம் பார்த்து அதிகம் பயந்தது இன்னும் நினைவில் உள்ளது. இந்த வரிசையில் விக்டோரியா 203, யாதோன் கி பாராத் (தமிழில் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே), தீவார் (தமிழில் ரஜினிகாந்த் நடித்த தீ), பே ஈமான் (தமிழில் சிவாஜிகணேசன் நடித்த என் மகன்) போன்ற இந்தித்திரைப்படங்களைப் பார்த்துள்ளேன். அவர் அப்போது சொல்லி, பின்னாளில் நான் பார்த்த படங்களில் ஒன்று டன் கமாண்ட்மெண்ட்ஸ் என்ற பிரம்மாண்டமான ஆங்கிலப்படமாகும். ஆங்கிலப்படத்தாக்கம் காரணமாக பென்ஹர், கிளியோபாட்ரா, டே ஆப் தி ஜேக்கல்,  உமர் முக்தார் போன்ற படங்களை விரும்பிப் பார்த்தேன். டே ஆப் தி ஜாக்கல் புதினத்தையும் படித்துள்ளேன். படத்தைவிட புதினம்தான் என்னை அதிகம் ஈர்த்தது.

அண்ணாலக்ரஹாரம் ரத்னா தியேட்டரில்  நவராத்திரி படத்திற்கு வீட்டிற்குத் தெரியாமல் அப்பா என்னை அழைத்துச் சென்றுவிட்டார். வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள தியேட்டர். நடந்தே சென்று வந்தோம். எங்கள் வீட்டில் சைக்கிள் கிடையாது. திரும்பிவந்தபின் ஆத்தாவும், தாத்தாவும் என்னை திட்டிய திட்டை மறக்கவே முடியாது. அடிக்காமல் விட்டுவிட்டனர்.

டி32 என்ற ஆங்கிலத்திரைப்படம் காலைக்காட்சி பார்க்க நூர்மஹால் தியேட்டருக்கு அழைத்துச்சென்றார். நேரடியாக கவுண்டரில் டிக்கட் வாங்கிக் உள்ளே வந்தபோது சிவாஜிகணேசன் நடித்த இரு மலர்கள் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சிவாஜி கணேசனின் ரசிகரான  அப்பாவுக்கு வெளியே வர மனமில்லை. இருந்தாலும் அவர் ஆங்கிலப்படத்தை விரும்பிப்பார்ப்பார். படத்தைப் பார்த்து வெளியேவந்தபின்னர்தான் அப்பா வெளியே போஸ்டரில் எழுதி இருந்ததைப் பார்த்தார். படப்பெட்டி வராததால் டி32 படத்திற்குப் பதிலாக இரு மலர்கள் திரையிடப்படுகிறது என்று சுவரொட்டியில் நீல வண்ண மையால் எழுதப்பட்டிருந்தது. (பெரும்பாலும் சுவரொட்டிகளில் நீல வண்ணத்தையே காணமுடியும். சில சமயங்களில் சிகப்பும், கருப்பும் இருக்கும்)

ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தில் ராஜபார்ட்டாக சிவாஜிகணேசன் நிற்கும் ஆளுயரப் போஸ்டரை அப்பா வாங்கி எங்கள் வீட்டில் ஒட்டிவைத்திருந்தார். 

ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்திற்கு முதலில் சாப்பாட்டு ராமன் என்று பெயர் வைத்ததாகவும், பின்னர் பெயரை மாற்றியதாகவும் அப்பா கூறினார்.

ஒரு முறை சிவாஜிகணேசனின் புதிய படம் ஒன்றைப் பார்ப்பதற்காக அப்பா சென்றபோது ஒரே கூட்டமாக இருந்ததாகவும், தான். தனியாக ஓரமாக நின்று கூட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்ததாகவும், போகலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவரை கவனித்துக்கொண்டிருந்த தியேட்டர் பணியாளர் ஒருவர் அவரை உள்ளே தனியாக அழைத்துச் சென்று டிக்கெட் வாங்கிக்கொடுத்து படத்தைப் பார்க்கச் சொன்னதைப் பெருமையாக சொல்வார். அது எந்தப்படம் என எனக்கு நினைவில்லை. 

சிவாஜிகணேசன் நடித்த, அவருடைய 100ஆவது படமான நவராத்திரி வரையிலான 100 படங்களிலிருந்தும் 100 புகைப்படங்களைக் கொண்ட ஒரு நூலை அப்பா பாதுகாப்பாக வைத்திருந்தார். அட்டைப்படத்தில் சிவாஜி100 என்று இருந்தது. 

21 செப்டம்பர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

06 September 2023

பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும் : முனைவர் ஆ. ராஜா

முனைவர் ஆ. ராஜா எழுதியுள்ள "பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும்" என்ற நூல் ஆலங்குடி வட்டாரப்பகுதியில் நுண்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள், இராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றுப்படுகையில் நுண்கற்காலத் தடயங்கள், கொடுமணல் அகழாய்வுகளும், தொல்பொருட்களும், கீழடி அகழாய்வுகள், பல்லவர் கால மூத்த தேவி சிற்பம், அளவையியல் மரபில் மரக்கால், பெரியபட்டினத்தின் தொன்மையும், வரலாறும், இராமநாதபுரம் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம், கடல்சார் வரலாற்றைக் காட்டும் தொன்மையான நங்கூரங்கள், கலை, பண்பாட்டுத் தளத்தில் சோமேசுவரர் திருக்கோயில், தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்காயர்கள், சேதுபதி கல்வெட்டுகள் காட்டும் முத்துக்குளித்தல் என்ற உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. கட்டுரைகள், தலைப்புக்கேற்ற வகையில் உரிய சான்றுகளுடனும், ஏராளமான தகவல்களுடனும், 50க்கும் மேற்பட்ட படங்களுடனும் உள்ளன. அனைத்தும் பழந்தமிழர் வாழ்வியலோடும், வரலாற்றோடும் தொடர்புடையனவாக உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.




"......பரந்துபட்ட தமிழகத்தின் தொன்மைச்சிறப்புகளை வெளிப்படுத்தும் செய்திகளைக் கள ஆய்வு மற்றும் சேகரிப்பின் அடிப்படையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவா என்னுள். அதன் விளைவாக விளைந்ததே இந்நூல்" என்று ஆசிரியர் என்னுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய அவா ஓரளவிற்குப் பூர்த்தியடைந்ததைக் கட்டுரைகள் உணர்த்துகின்றன.

"ஆலங்குடி வட்டாரத்தில் கண்டறியப்பட்டுள்ள நுண்கற்காலப் பண்பாட்டிடங்களின் தன்மையை ஒப்புநோக்கும்போது இதற்கு முன்னர் இம்மாவட்டத்தில்  கட்டுரை ஆசிரியர் கண்டறிந்த நுண்கற்காலப் பண்பாட்டு இடங்களை ஒத்துள்ளன......." (ப.2)

"கொடுமணலிலுள்ள வாழ்விடப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்டபோது, அகழாய்வுக்குழிகளின் பல நிலைகளில் சுவரின் அடிப்பகுதிகள், வீட்டுத்தரை எச்சங்கள், செங்கற்கள், கூரை ஓடுகள், மரத்தூண் ஊன்றப்பட்ட குழிகள், அடுப்புப்பகுதிகள் ஆகியவற்றோடு கொல்லர் உலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன." (ப.16)

"...கீழடி சங்க கால மக்கள் வாழ்ந்த வாழ்விடப்பகுதியாகும். இங்கு கிடைத்த சான்றுகள் சங்க கால மக்களின் வாழ்வியலையும், வரலாற்றையும் நமக்கு உணர்த்துகிறது....இப்பண்பாடானது கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதால், சிந்துச்சமவெளி நாகரிகத்திற்கு இணையாகவே கீழடி நாகரிகத்தைக் கருதலாம்." (பக்.24, 33)

"மூத்த தேவி சிற்பம் தமிழகத்தில்  பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கின்றன. இன்று வழிபாடு குறைந்த இத்தெய்வம் பல்லவர் காலத்தில் மூத்ததேவியாகவும், தாய்த்தெய்வமாகவும் வழிபாட்டு நிலையில் இருந்துள்ளது.....இந்த வகையான மூத்ததேவி சிற்பம் தமிழகத்தில் தற்போது பெரும்பான்மையான இடங்களில் ஊருக்கு வெளிப்புறங்களில் வைத்து வழிபடும் நிலையினைக் காணமுடிகிறது...." (ப.36)

"வேளாண்மையில் மரக்கால் என்பது நம்பிக்கை சார்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. நெல் அறுவடையின்போது தூற்றிக் குவித்த நெற்பொலியில் மரக்காலால் முதலில் நெல்லை அளந்து தெய்வத்திற்காக எடுத்து வைப்பர். அது நம்பிக்கை சார்ந்ததாகும்......" (ப.49)

"கடல் பயணத்தின்போது கலங்களை நிறுத்துவதற்கு நங்கூரங்கள் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இரும்பு நங்கூரங்கள் பயன்படுத்துவதுபோல் தொடக்கக் காலத்தில் கல்லிலான நங்கூரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது." (ப.68)

"கி.பி.14-15ஆம் நூற்றாண்டுகளில் மரக்காயர்கள் இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைக்கு அருகாமையிலுள்ள பகுதிகளில் தங்களின் குடியேற்றங்களை அமைத்திருந்தனர் என்பதை இப்பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அதேபோன்று கிழக்குக் கடற்கரையில் உள்ள நாகூர், நாகபட்டினம், சுந்தரபாண்டியபட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற பகுதிகளிலும் மரக்காயர்களின் குடியேற்றங்கள் இருந்துள்ளன." (ப.90)

"சங்க காலம் தொட்டே கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழக மக்கள் கடலில் மூழ்கி முத்துக்குளித்து, முத்துக்களைச் சேகரித்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். முத்துக்குளித்தலில் பழந்தமிழர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் முத்துக்குளித்தல் எனும் தொழிலானது பிரதானத் தொழிலாக சங்க காலத்திலும் அதைத் தொடர்ந்து இடைக்லங்களிலும் இருந்துள்ளன." (ப.96)

நூலாசிரியர், களப்பணி மூலம் பெற்ற தகவல்களை உரிய இடங்களில் சிறப்பாகத் தந்துள்ளார்.  முந்தைய அறிஞர்களின் கூற்றுகள் உரிய சான்றாக ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. அவை விவாதப்பொருளுக்கு அதிகம் துணை நிற்பதை அறிய முடிகிறது. பழந்தமிழரின் வாழ்வியலையும், வரலாற்றையும் பல்வேறு கோணங்களில் நோக்கி, வடிவம் தர பெருமுயற்சி மேற்கொண்டு, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும்
ஆசிரியர் : முனைவர் ஆ. ராஜா (அலைபேசி 97869 19046)
பதிப்பகம் : காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு,டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600 024 (044-23726882/98404 80232) 

10 August 2023

தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள் : சு. திருநாவுக்கரசு

சு. திருநாவுக்கரசு எழுதியுள்ள தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள் என்ற நூல்  அழகியல், அழகியலும் சிற்பக்கலையும், மரபுச் சிற்பக்கலைக் கோட்பாடுகள், தொல்காப்பியத்தில் எண்வகை மெய்ப்பாடுகள், நவீன சிற்பக்கலைக் கொள்கைகள், சிற்பக்கலையில் இசக்கோட்பாடுகள், முடிவுரை என்ற உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அவர் நூலில் வெளிப்படுத்தியுள்ள அழகியல் கோட்பாடுகள் சிலவற்றைக் காண்போம்.

"அழகியல் கோட்பாடுகள் என்பதனை வரையறுக்கும்போது அறிவுசார் துறைகளிலும், இயற்கையிலும் மற்றும் மனிதனின் செயல்பாடுகளிலும் கலைத்துறையில் பார்க்கும் மெய்யியல் அனுபவம் என்று கூறலாம்." (ப.2)

"தமிழகத்தில் அழகியல் கோட்பாடு இதுவரை தனியாக தோற்றுவிக்கப்படவில்லை எனக் குறிப்பிடலாம். ஆனால் அழகு மற்றும் அழகியல் தொடர்பான சிந்தனைகளும், ஆதாரங்களும் அதிகமாக இலக்கியங்கள் வாயிலாகப் பெறப்படுகின்றன. தொல்காப்பியம் முதலாக வழிவழியாக வந்த இலக்கிய மரபுகள் அழகியல் கோட்பாடுகள் அட,ங்கியுள்ளதாகக் காணப்படுகின்றன." (ப.5)

"......ஒரு காலைப்பொழுது இயற்கைக்காட்சியை வரையும்பொழுது காலைப்பொழுது ஒவ்வொரு கலைஞனுக்கும் மாறுபட்ட காட்சியாக இருக்கும். ஒரே இடக்காட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்களுக்கும் வித்தியாசங்கள்., மாற்றங்கள் பல நிகழ்கின்றன. அதேபோல் ஒளி, நிழல் வித்தியாசம் அடைகிறது. இக்காரணத்தை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு கலைப்படைப்பும் முன்னால் படைக்கப்படாத கலைப்படைப்பாகத் தோன்றுகிறது. அவ்வாறே சிற்பக்கலைப் படைப்பும் தோன்றுகிறது எனக் கருதலாம்." (ப.31)

"சிற்பிகள் விளக்கத்தன்மையோடு நின்றுவிடாது உணர்வுகளை அழகிய தன்மையோடு கோடுகளைக் கொண்டு சிற்பங்களைப் படைக்கின்றனர். அதனால் சிதைந்துபட்ட சிற்பத்தின் ஒரு பகுதி கிடைப்பினும் நம்மால் அதனை இரசிக்க முடிகிறது." (ப.39)

"கோயில் சிற்பங்களில் காணப்படும் சிற்ப உருவங்களை அமைப்பதற்கு மிக முக்கியமானது தாள அளவு ஆகும். சிற்பங்களுடைய பல்வேறு உறுப்புகளின் நீள அகலங்களை ஒப்புநோக்கி, தொடர்புபடுத்தி இலக்கணம் கண்டு, சிற்பங்களை அழகுறச் சமைக்க, சிற்பத்தின் முக உயர அளவையே சிற்பக் கலைஞர்கள் கைக்கொண்டுள்ளார்கள்." (ப.45)

"சாந்தம் அல்லது சாந்தரசம் என வடமொழியில் கூறப்பட்டுள்ளதனைத் தொல்காப்பியர் கூறவில்லை. ஒருவேளை அதையும் வெளிப்படுத்தாத அல்லது வெளிப்படுத்தக்கூடாத அமைதியை மெய்ப்பாடுகளில் கூறவேண்டாம் என்று கூறாது விட்டிருக்கலாம் என்றாலும் அமைதி அல்லது சாந்தம் என்னும் ரசத்தைக் கலைகளில் காணலாம். உதாரணமாக புத்தர், சிவபெருமான் முதலியோர் தியான நிலையில் காட்டப்பட்டிருக்கும் சிற்பங்களைக் கூறலாம்.....தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகளும் கோயிற்சிற்பங்களில் மற்றும் தற்காலத்தில் செய்யும் கோயில் சிற்பங்களிலும் நவீன சிற்பங்களிலும் வெளிப்படுகின்றன...." (ப.75)

"மேலை நாட்டுக் கலை விமர்சகர்கள் மேலை நாட்டு சிற்பங்களில் ஓவியங்களில் இசங்களைப் பிரித்து வகைப்படுத்தியுள்ளனர். ஆனால் தமிழகச் சிற்பக்கலையில் பிரித்துக்கூறாமல் மேலை நாட்டவர் கூறும் அத்துணை இசங்களும் பிரித்து ஆய்வுபடுத்தாமல் கலந்து காணப்படுகிறது...." (ப.91)

"தமிழகக் கோயில் கலையில் சிற்பங்கள் சமயம் சார்ந்தவை. அதாவது தத்துவம், கலை, சமயம் ஒன்றோடொன்று பிணைந்து காணப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் நவீனச் சிற்பக்கலையுடன் ஒப்பிடுகையில் கலை கலைக்காகவே என்ற கூற்று ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது எனலாம்." (ப.107)

"தொல்காப்பியத்தின் எண் வகை மெய்ப்பாடாக ரசம் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டாகப் பிரித்துக் குறிப்பிடுகிறார்." (ப.118)

நூலாசிரியர், வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களையும்,  அழகியல் மற்றும் சிற்பக்கூறுகள் மற்றும் கோட்பாடுகள் தொடர்பான சொற்களையும் தெளிவிற்காக ஆங்கிலத்திலும்,  ஓவிய மற்றும் சிற்ப அமைப்பு, வடிவங்கள் தொடர்பான முறையைப் பற்றி அடைப்புக்குறிக்குள் தமிழிலும்  தந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. பல வகையான இசக்கோட்பாடுகளைப் பற்றி விவாதிக்கும்போது புனைவியல் என்ற நிலையில் நூலாசிரியர் தான் வடித்த சிற்பத்தின் ஒளிப்படத்தைத் தந்துள்ள விதம் கலையின்மீதான அவருடைய ஈடுபாட்டினை வெளிப்படுத்துகிறது. அழகியல் கோட்பாடுகள் அழகியல் தன்மையோடு நூலில் இடம்பெற்றுள்ளது. வாசகர்கள் ரசனையோடு தம்மை ஈடுபடுத்திப் படிக்கும் வகையில் சிறப்பான நூலைப் படைத்துள்ள ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள்
ஆசிரியர் : சு. திருநாவுக்கரசு (அலைபேசி 95009 78191)
பதிப்பகம் : தாழி புத்தகக் கடை, 33, செங்குந்தர் வீதி, புதுச்சேரி
ஆண்டு : 2021
விலை : ரூ.200



ஜூன் 2023இல் தஞ்சாவூரில் நூலாசிரியர் நடத்திய மனிதர்களும் ஆடுகளின் நிகழ்வுகளும் என்ற தலைப்பிலான தனி நபர் ஓவியக்கண்காட்சியில் நூலாசிரியர் தந்த அன்பளிப்பு

நூலாசிரியர் நடத்திய கண்காட்சி பற்றிய பதிவு:

28 July 2023

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 2023 : வாசிப்பை நேசிப்போம்

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் (14-24 ஜூல்2023) நாள்தோறும் இலக்கிய அரங்கம், பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான போட்டிகள், பள்ளி/கல்லூரி/கிராமியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை-சிந்தனை அரங்கம் ஆகியவை இடம் பெற்றன. 


நான்காம் நாள் நிகழ்வான இலக்கிய அரங்கில் காலை 10.30 மணியளவில்  வரலாற்று அறிஞர் திரு அய்யம்பேட்டை என் செல்வராஜ் அவர்கள் "திருவிசைப்பாவும் தமிழும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து "வாசிப்பை நேசிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினேன். நூல்கள் மற்றும் இதழ்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தினையும், படிப்பதைப் பழக்கமாகக் கொள்ளவேண்டிய அவசியத்தையும், அந்தந்த இதழின் தளத்தில் சென்று படிக்கவேண்டிய முறையையும். சமூக வலைதளங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டியதையும் எடுத்துக்கூறினேன். 50 ஆண்டு கால நாளிதழ் வாசிப்பு, வாசகனாக இருந்த என்னை கட்டுரைகளையும், நூல்களையும் எழுத உதவியாக இருந்தது என்பதையும் பகிர்ந்துகொண்டேன்.      

முன்னதாக, அரங்கின் நெறியாளர் புலவர் மா.கோபாலகிருஷ்ணன் பொழிவாளர்களை அறிமுகப்படுத்தினார். சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் முனைவர் மணி.மாறன் நன்றி கூறினார்.



மூத்த பத்திரிக்கையாளர் கோ.சீனிவாசன் நினைவுப்பரிசு வழங்கல். உடன் (வ) அய்யம்பேட்டை செல்வராஜ், கோபாலகிருஷ்ணன், மணி.மாறன்




உரையை கீழ்க்கண்ட யுடியூப் இணைப்பில் கேட்கலாம்.


புத்தகத் திருவிழாவில் ஓர் அங்கமாக தஞ்சாவூர் மாவட்டம், கிளைச்சிறைகள், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பாக சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர் என்ற வேண்டுகோளுடன் அமைக்கப்பட்டிருந்த அரங்கில்  எங்கள் இல்ல நூலகத்திலிருந்து 250 நூல்களைப் புத்தக தானமாக வழங்கியுள்ளேன். அதனைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.