26 November 2021

திருக்குறள்-சிறப்புரை : முனைவர் ரெ. குமரன்

முனைவர் இரெ.குமரன் எழுதியுள்ள திருக்குறள்-சிறப்புரை என்னும் நூல் இலக்கியப்பொருளின் நோக்கில் உரையைக் கொண்டுள்ள நூலாகும். குறளின் வரிகளுக்கேற்ற வகையில் பொருண்மைக்கேற்றவாறு பிற தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோளுடன் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரையுடன் 1330 குறளையும் ஆராய்ந்து எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உரைகள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள், குறள் முதற் குறிப்பு அகர நிரல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


"திருக்குறள் சிறப்புரை என்றது, திருக்குறளின் மெய்ப்பொருளைக் கண்டதாகாது மெய்ப்பொருள் காண்பதென்பது என்போன்றோர்க்கு எட்டாக் கனியே...! எனினும் 'ஆசைபற்றி அறையலுற்றேன்', என்பதன்றி வேறில்லை....குறள் பொருள் கூறுந்தோறும் மேலொரு இலக்கியப்பொருள் நுகரும் சிறப்பினால் இது சிறப்புரையாயிற்று எனக் கொள்க.." என்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு குறளுக்கும் தரப்பட்டுள்ள உரை வாசகர்களுக்கு தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ளது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, இரட்டைக்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், கம்ப ராமாயணம், வில்லி பாரதம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து ஒத்த கருத்துடைய பாடல்களை உரிய விளக்கத்துடன் எடுத்தாண்டுள்ளார்.

திருக்குறள் குறள் எண், பாடல் வரிகள், உரை, இலக்கியத்திலிருந்து காட்டப்படும் மேற்கோள் பாடல் வரிகள், உரிய எண், உரை என்ற வகையில் தந்துள்ளார். நூலைப் படித்து நிறைவு செய்யும்போது திருக்குறள் மட்டுமன்றி பிற நூல்களையும் படித்த உணர்வு ஏற்பட்டது. சுமார் 850 பக்கங்கள் கொண்ட இந்நூலிலிருந்து சில பாடல்களைக் காண்போம்.

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. (திருக்குறள், 20)
எவ்வகைப்பட்ட மக்களுக்கும் நீரின்றி உலக வாழ்க்கை நடைபெறாது; அந்நீரும் வானின்று வீழும் மழையேயன்றி வேறில்லை.
"கழிந்தது பொழிந்து எனவான் கண்மாறினும்
தொல்லது விளைந்து எனநிலம் வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை." (புறநானூறு, 203)
முன்பு மழை பொழிந்தோம் என்று கருதி இப்போது மழை பெய்யாது போகுமானால், முற்காலத்து விளைந்தோம் என்று கருதி இப்போது நிலம் விளையாது போகுமானால், இவ்வுலகில் எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கை இல்லாது ஒழியுமே.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (திருக்குறள், 212)
நேரிய முறையில் முயன்று ஈட்டிய பொருள் எல்லாம் இல்லார்க்கும் இயலாதவர்க்கும் வேண்டுங் காலத்து உதவி செய்தற் பொருட்டேயாம்.
"வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள." (நான்மணிக்கடிகை, 51)
வேதக் கருத்துகளை உடைய பழைய தனிப்பாடல்களும் உள்ளன, வேள்விக்கு நிகரான உதவிகளும் உள்ளன.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். (திருக்குறள், 577)
கண் உடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதவர்களாக இருப்பதில்லை; கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண் உடையவர்கள் அல்லர்.
"எழுத்து எண்ணே நோக்கி இருவரையும் கண்டு ஆங்கு
அருட்கண்ணே நிற்பது அறிவு." (அறநெறிச்சாரம், 172)
இலக்கியம், கணிதம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நூல்களை ஆராய்வதால் பயன் ஒன்றும் இல்லை; இம்மை மறுமைப் பயன்களை அளிக்கும் நூல்களையே ஆராய்ந்து கற்று, அவ்வழி கருணையோடு ஒழுகுதலே அறிவுமிக்க செயலாம்.

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. (திருக்குறள், 856)
பிறரை இகழ்வதே இன்பம் என்று கருதி, அதனை மிகவும் விருப்பமுடன் செய்வானது வாழ்க்கை, அமைதியின்றித் துன்புறுதலும் அழிவதும் விரைந்து நிகழும்.
"கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தினும் நல்ல சுனைத்து." (நாலடியார், 335)
பிறரைக் குறை கூறாவிட்டால் பேதையின் நாக்கில் தினவு ஏற்பட்டு, அரிப்பு எடுக்கும்.

மாறுபட்ட கோணத்தில் உரையினைத் தந்து திருக்குறளுக்கு மிகவும் நெருக்கமாக நம்மை அழைத்துச்சென்றுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.



நூல் : திருக்குறள்-சிறப்புரை
ஆசிரியர் : முனைவர் இரெ.குமரன் (9443340426)
பதிப்பகம்: மின்கவி, கோபி, ஈரோடு மாவட்டம் 638 452 (9626227537)
பதிப்பாண்டு: செப்டம்பர் 2021
விலை ரூ.800



02 November 2021

சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர் : கோ.தில்லை கோவிந்தராஜன்



கோ.தில்லை கோவிந்தராஜன் எழுதியுள்ள சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர் என்னும் நூல் கோயிலின் அமைப்பு, சிற்பக்கலை, கல்வெட்டுக்களால் அறியப்படுகின்ற சமூகப் பொருளாதார நிலை என்ற துணைத்தலைப்புகளைக் கொண்டுள்ளது.


நூலாசிரியர் இந்நூலில் வரலாற்றுப் பின்னணியில் ஊர்ப் பெயரின் பழமையான காரணம், கோயில் அமைவிடம், அரசர்களின் கல்வெட்டில் காணும் தானங்கள், கட்டடக்கலையில் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் எனப் படிநிலை வளர்ச்சி,  சிற்பக்கலையில் கருவறை, தேவகோட்ட, அர்த்தமண்டப, மகாமண்டப, முகமண்டபப்படிமங்கள், சப்தமாதர்கள், திருகாமக்கோட்டம், அருங்காட்சியகப்படிமங்கள் ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கிறார். மேலும், கல்வெட்டினால் அறியப்படும் சமூகப் பொருளாதார வாழ்க்கை என்ற தலைப்பில் வளநாடு, கோட்டம், கூற்றம், மங்கலம், சேரிகள், வாய்க்கால்கள், நில வகைப்பாடுகள், அளவைகள், நாணயங்கள், கல்விநிலை, குற்றமும் தண்டனையும், உலோகப்படிமங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றைப் பற்றி  ஆராய்கிறார். இந்நூலில் குறிப்பிடத்தக்க செய்திகளில் சிலவற்றைக் காண்போம்.  


“பாபநாசம் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பண்டாரவாடை என்ற ஊரைச் சேர்ந்த திருச்சேலூர் என்கிற பழைமையான கோயில் இன்று மச்சபுரீஸ்வரர் எனும் பெயரால் தேவராயன்பேட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது...........திருஞானசம்பந்தர் திருப்புள்ளமங்கையிலிருந்து திருப்பாலைத்துறை தலத்திற்குச் செல்லும் வழியில் உள்ள இத்திருக்கோயிலை வணங்கிச்சென்றமையை சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். சேல் என்பது கெண்டை மீனாகும். இம்மீன் இறைவனை வழிபட்டதால் திருச்சேலூர் உடையார் என இவ்வூர் வழங்கப்பட்டது.” (ப.3,)


“கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் திருக்கோயில் முதலாம் ஆதித்தன் (கி.பி.870-907) காலத்தில் கட்டப்பட்ட முற்கால சோழர் கலைப்பாணியைச் சேர்ந்ததாகும்.” (ப.32)


“கோயிலின் வளாகத்திலேயே திருக்காமக் கோட்டம் (அம்மன் கோயில்) அமைந்துள்ளது. திருக்காமக் கோட்டம் என்ற தனிக்கோயில் (கட்டுமானம்) கட்டும் மரபினை முதன் முதலில் தோற்றுவித்த அரசன் முதலாம் இராஜேந்திர சோழன் ஆவான் .” (ப.40)


“தொடக்ககால சோழர் கோயில்களில் மேற்குபுறத் தேவ கோட்டத்தில் அர்த்தநாரியும், லிங்கோத்பவர் எனப்படும் அண்ணாமலையார் படிமங்களில் எவையேனும் ஒரு படிமத்தினை அமைப்பதுண்டு. ஆதித்தனால் திருமால் படிமம் திருக்கட்டளையில் அமைக்கப்பட்டது. இத்திருக்கட்டளையின் சமகாலத்தைச் சார்ந்த இக்கோயிலில் மேற்குப்புற கோட்டத்தில் திருமால் நின்ற கோலத்தில் படிமம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கவொன்றாகும்.” (ப.46)


“ஆதித்தனுக்குப் பின் வந்த அரசர்கள் சண்டிகேசுவரர் படிமத்தினை வட திசையில் தெற்கு நோக்கிய வண்ணம் அமைத்தனர்.” (ப.52)


“மச்ச அவதார விஷ்ணு (திருமால்) நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் சிவனை வழிபடுவதாக அர்த்த மண்டபத்திலுள்ள தேவகோட்டத்து பிள்ளையார் படிமத்திற்கு மேலே தேவகோட்ட இரு தூண்கள் பலகைக்கு இடையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது..முகமண்டப நுழைவாயிலின் வலப்புறச் சுவற்றில் மீன் வடிவில் திருமால் சிங்கத்தை வழிபடுவதாக புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே காட்சியினை முகமண்டபத்தூண் ஒன்றிலும் காணமுடிகிறது”. (ப,57)


“விஜயாலயன் காலம் தொடங்கி உத்தமசோழன் காலம் வரை கற்றளிகளில் சிற்பங்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவும், தேவ கோட்டங்கள் மற்றும் கோட்டங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்து வரையே அமைக்கப்பட்டன. இவற்றால் கருவறையில் மூன்று தேவ கோட்டங்களும், அர்த்தமண்டபத்தில் இரண்டு தேவ கோட்டங்களும் அமைக்கப்பட்டன”. (ப.66)


“இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் அரசர்களும், அரசமாதேவிகளும், அரசியல் அதிகாரிகளும் வழங்கிய கொடையினையும் அறியமுடிகிறது. அவை மக்களின் சமூக பொருளாதார நிலைகளை எடுத்து இயம்புவனவாக உள்ளன”. (ப,68)


ஓர் அருமையான கோயிலைப் பற்றி காலவாரியாக விரிவாக ஆராயும் இந்நூலை வெளியிட்ட ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.


நூல்: சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர்
ஆசிரியர்: கோ.தில்லை கோவிந்தராஜன்
பதிப்பகம்: எம்.ஜே.பப்ளிஷிங் ஹவுஸ், 9, செ.ஜான் சர்ச் வணிக வளாகம், ராக்கின்ஸ் சாலை, திருச்சி 620 001, 0431-4038994/99434 28994
பதிப்பாண்டு: 2019
விலை ரூ.100


நன்றி: புக் டே இணையதளம்