14 April 2018

காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)

எனக்கு அதிசயத்தையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது அவ்வறையில் காணப்பட்ட ஒரு குறிப்பு. அழகாக பராமரிக்கப்படுகின்ற அறையின் வாயிற்கதவின் மேல் ஆங்கிலத்தில் ஸ்ரீனிவாச ராமானுஜன் படித்த அறை என்று பொருள்படும்படி காணப்பட்ட குறிப்பே அது. நாங்கள் படித்த காலத்தில் இவ்வாறான குறிப்பு காணப்படவில்லை. இந்த அறையைப் பற்றி இது தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. புகுமுக வகுப்பு படித்த காலகட்டத்தில் இதற்கு அடுத்த அறையில் நண்பர்களின் வகுப்பறை இருந்ததால் பல முறை இந்த அறையின் வழியாக சென்றது நினைவிருக்கிறது. இதையொத்த பல அறைகளுடன் ஒப்புநோக்கிய போது இந்த அறையின் சிறப்பான பராமரிப்பிற்கான காரணத்தை இப்போது அறிய முடிந்தது. தன் தளத்தில் திரு கரந்தை ஜெயக்குமார் இதன் பெருமையைப் பகிர்ந்துள்ளார். 
அடுத்து பார்க்கும்போது அந்த அறைக்கு வெளியே கணித மேதை ராஜமானுஜன் கல்விபயின்ற வகுப்பறை என்ற குறிப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் காணப்பட்டது. அப்போது தெரியாவிட்டாலும் இப்போது தெரிந்ததே என்ற மகிழ்ச்சி மனதில் ஏற்பட்டது. கணித மேதை படித்த அறையின் அடுத்து நான் படித்த வகுப்பறை இருந்ததை எண்ணிப் பெருமைப்பட்டுக்கொண்டேன்.  
அப்பகுதியில் ஒன்றோடோன்று இணைந்துள்ள நிலையில் அமைந்துள்ள வகுப்பறைகளின் அமைப்பு படிப்பதற்கான ஒரு சூழலையும் மனதில் அப்போது ஏற்படுத்தியிருந்ததை உணர முடிந்தது.   



வாயிலில் காணப்பட்டது போன்றே இப்பகுதியிலும் தூண்களிலும் உத்தரங்களின் தாங்கு பலகைகளிலும் மிக அழகான மரச் சிற்பங்கள் உள்ளதைக் காண முடியும். அடுக்கடுக்காக வரிசையாக அமைக்கப்பட்டுள்ள மர உத்தரங்களின் அழகு கட்டடங்களின் கம்பீரத்தை எடுத்துரைப்பதைக் காண முடியும்.   
வாயிலின் காணப்பட்ட தூண் சிற்பங்கள் இங்கும் தொடர்கின்றன. அதாவது மணிக்கூண்டின் தரை தளத்தின் இரு புறமும் இவ்வாறான தூண்கள் அமைந்துள்ளன. அவற்றின் நேர்த்தியும் பிற எவற்றுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு இருப்பதைக் காணலாம்.  
காலனிடமிருந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றுகின்ற (லிங்கத் திருமேனிக்கு மேலே காணப்படுகின்ற) சிவபெருமான், குடந்தைக்கிடந்தான் என்று ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாம்பணையில் அனந்த சயனத்தில் கிடக்கின்ற பெருமாள், லிங்கத்திருமேனியைப் பூசிக்கின்ற பிரம்மா உள்ளிட்ட பல மரச் சிற்பங்கள் அங்கு காணப்படுகின்றன. (சிற்பத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள பேனாவின் அளவினைக் கொண்டு சிற்பத்தின் அளவைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.)
மார்க்கண்டேயரைக் காப்பாற்றுகின்ற சிவபெருமான்
அனந்த சயனத்தில் பாம்பணையில் பெருமாள்

லிங்கத்திருமேனியைப் பூசிக்கின்ற பிரம்மா
அருகேயுள்ள மற்றொரு வகுப்பறையில் எங்களுக்கு இரண்டோ, மூன்றோ சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. முன்புறம் அரை வட்ட வடிவத்திலும் தொடர்ந்து செவ்வகமாகவும் உள்ள இந்த அறையின் மேற்பகுதியில் பால்கேனி போன்ற அமைப்பு காணப்படும். ஆசிரியர் நிற்கின்ற (அரை வட்ட வடிவப் பகுதி) பகுதியில் மாடிப்படிகள் காணப்படும். இதன் வழியாக ஏறி ஒரு சுற்று சுற்றி வந்தால் கீழே நடக்கும் வகுப்பினை நன்கு காண முடியும். வகுப்பு நடைபெறாதபோது நாங்கள் மேலே ஏறி பார்ப்பது வழக்கம்.

பால்கேனியுடன் கூடிய வகுப்பறை
இவ்வறையினை அடுத்துச் சிறிது தூரம் சென்றால் மற்றொரு வகுப்பறை காணப்படும். இந்த வகுப்பறையில் நாங்கள் படிக்கவில்லையென்றாலும் பார்த்ததுண்டு. இந்த வகுப்பறையின் கடைசி இருக்கைகள் மிக உயரத்தில் காணப்படும். விளையாட்டு மைதானத்திற்கு அருகே உள்ள இந்த வகுப்பறையில் தொடர்ந்து படிப்படியாக கீழே இறங்கிய நிலையில் பார்க்க அழகாக இருக்கும். ஆசிரியரின் பார்வையில் அனைத்து மாணவர்களும் முழுமையாகப் படும்படி சரிந்த நிலையிலான தரையில் மேசைகள் காணப்படும். இக்கல்லூரியில் இவ்வாறாக வித்தியாசமாக அமைந்த அறை இது ஒன்று மட்டுமேயாகும். 
வித்தியாசமான இருக்கை அமைப்பு கொண்ட வகுப்பறை
ஒவ்வொரு அறையாகப் பார்த்துவிட்டு முதல்வர் அறை அமைந்துள்ள கட்டடத்திற்கு வந்தேன். இக்கட்டட வராந்தாவில்தான் புகுமுக வகுப்பு சேரும் நாளன்று அதிக நேரம் காத்திருந்தது நினைவிற்கு வந்தது. 

அக்கட்டடத்தின் நடுவில் அமைந்துள்ள மாடிப்படிகளின் வழியாக இடது புறம் வழியாகச் சென்றால் நாங்கள் பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்த வகுப்பறையைக் காணலாம். முதல் தளத்தில் அமைந்துள்ளது. வகுப்பு முடிந்தபின்னரோ, வகுப்பு மாறும்போதோ இந்தப் படிகளின்வழியாகத் தான் வருவோம்.

அத்தளத்திலிருந்து எதிரே அமைக்கப்பட்டிருந்த ராமானுஜன் சிலையைப் பார்த்தோம். அதற்குப் பின் புறம் பல புதிய கட்டடங்கள் காணப்பட்டன. நாங்கள் படித்தபோது இவையனைத்தும் இல்லை.  
தொடர்ந்து அப்போது அறை எண்.44 ஆக இருந்த அறைக்குச் சென்றோம். அக்காலகட்டத்தில் இங்குதான் ஆண்டு விழாக்களும், இலக்கிய விழாக்களும் நடைபெற்றன. 

அங்கிருந்து கல்லூரியின் நூலகத்திற்குச் சென்றோம். நூலகத்தின் முன்பாக இப்போது அதிகமான மரங்களைக் காணமுடிந்தது. கல்லூரிக்காலத்தில் நூலகத்திற்கு அரிதாகவே சென்றுவந்துள்ளேன். 
கல்லூரியின் நூலகம்
நூலகத்தின் இடது புறத்தில் நாங்கள் படித்த புகுமுக வகுப்பறை இருந்தது. அதனையும் இப்போது பார்த்தேன்.  புகுமுக வகுப்பில் 1975இல் அளவையியல் (Logic) என்ற பாடத்தை நான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு தளம் மட்டுமே இருந்ததாக நினைவு. கல்லூரியில் சேர்ந்தபின் முதல் நாள் முதல் வகுப்பு எங்களுக்கு இந்த அறையில்தான் ஆரம்பமானது. பிற பாடங்களுக்காக அவ்வப்போது பிற வகுப்பறைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இளங்கலை பொருளாதாரம் படிக்கும்போதும் இந்த முறை தொடர்ந்தது. ஆகையால் கல்லூரியில் பல வகுப்பறைகளில் அமர்ந்து படித்த அனுபவம் இருந்தது.
புகுமுக வகுப்பறை அமைந்திருந்த கட்டடம்
புகுமுக வகுப்பறையின் வெளியே, நூலகத்தைக் கடந்து வந்தபோது எதிரில் இருந்த குளத்தைக் கண்டோம். நாங்கள் படித்தபோது இக்குளத்தில் எப்போதும் தண்ணீர் காணப்படும். இப்போது தண்ணீர் காணப்படவில்லை. சிறிது நேரம் குளக்கரையில் நின்றுவிட்டு கல்லூரியின் பின் புற வாயிலுக்குச் சென்றோம். 


அங்கு நண்பர் மணிவண்ணனுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு, கல்லூரி பற்றிய நினைவுகளை பரிமாறிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.   

நண்பர் மணிவண்ணன் உடன், 9 ஏப்ரல் 2017
தொடர்ந்து நான்கு மாதங்கள் கழித்து என் மனைவி திருமதி பாக்கியவதியுடன், நான் படித்த கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரிக் கால நினைவுகளை அவருடன் பகிர்ந்துகொண்டு மறுபடியும் கல்லூரியைச் சுற்றி வந்தேன்.
மனைவி திருமதி பாக்கியவதி உடன், 7 ஆகஸ்டு 2017
1854இல் துவங்கப்பட்ட இக்கல்லூரி பல கட்டடங்கள் பொலிவிழந்து, பல இடங்களில் செடிகள் முளைத்து பராமரிப்பின்றிப் பார்த்தபோது மனம் அதிகமாக நெகிழ்ந்தது. கும்பகோணத்திற்குப் பெருமை சேர்க்கின்ற இக்கல்லூரி புதுப்பொலிவினைக் காண்கின்ற நாளை இக்கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற நிலையில், ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

முந்தைய பதிவு :
காக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (1)

Abstract of the article in English
As an alumnus of the more than one and half century old Government College for Men (Kumbakonam) (1975-79) I feel that many of its magnificent and aesthetic structures need to be protected.

18 comments:

  1. நல்ல நினைவோடை. கட்டிடங்களின் நேர்த்தியும், அழகும் மனதில் தங்கி விடுகிறது.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    நல்ல நினைவலைகள். படித்த கல்லூரியை மறக்காமல் அதனை அறிமுகப்படுத்தி, அழகான படங்களுடன் விமர்சித்து பாராட்டி எங்களுடன் பகிர்ந்த பண்புகளுக்கு தலை வணங்குகிறேன்.
    மரச்சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாய் இருக்கின்றன.கட்டிடங்கள், கல்லூரியின் விசாலங்கள் போற்றுதலுக்குரியது. இன்னமும்
    தாங்கள் எதிர்பார்க்கும்படி கல்லூரியின் சீரமைப்பு பணிகள் நல்லபடியாக நடக்கும்.
    அழகான பகிர்வு. மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரியிலும் தங்களது பெருமிதமும், மகிழ்ச்சியும் வெளிப்படுவதை உணரமுடிகிறது.

    ReplyDelete
  4. ஒவ்வொரு வரியிலும் பெருமிதம் தெரிகிறது.... அருமை ஐயா....

    ReplyDelete
  5. தி. ஜானகிராமனின் 'மோகமுள்' கதாநாயகன் பாபு கூட
    இந்தக் கல்லூரியில் தான் படித்தான்.

    ReplyDelete
  6. நினைவலைகள்...

    படித்த கல்லூரிக்கு மீண்டும் செல்வது ஒரு சுகானுபவம் தான். நாங்கள் படித்தபோது கல்லூரிக்கென தனிக்கட்டிடம் கிடையாது. இப்போது தனிக்கட்டிடம் - நாங்கள் படித்தபோது இருந்த கட்டிடம் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதி... நெய்வேலிக்குச் சென்றால் சென்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  7. மிக அருமையான கட்டிடங்கள்.. நிலைவலைகள் என்றுமே நெஞ்சை விட்டு அகலாது. ஆனா பழைய கட்டிடங்களைக் கைவிட்டு விட்டார்களே.. இனி அது கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து விடுமே:(.

    ReplyDelete
  8. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


    ReplyDelete
  9. இளமைக் காலத்தில் கல்வி பயின்ற, எவ்வித கவலையுல் இல்லாத கல்லூரிக் கால நினைவலைகள் என்றுமே மகிழ்வினை வாரி வழங்கக் கூடியதுதான் ஐயா.
    இராமானஜன் படித்த வகுப்பறையும், அக்கட்டிடமும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    ReplyDelete
  10. கவலையில்லா கல்லூரிப் பருவ நினைவலைகளை அருமையாகச் சொன்னீர்கள். உள்ளுதொறும் உவப்பே.

    ReplyDelete
  11. இள‌மைக்கால நினைவலைகளை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  12. கலைநயம் நிறைந்த கலைக் கல்லூரி - காக்கப்பட வேண்டிய கலைப் பெட்டகமே - அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. மாற்றங்களே மாறாதவை என்று தெரிந்தாலும் மனம் என்னவோ மாற்றங்களை விரும்புவதில்லை

    ReplyDelete
  14. VK Rajasundaram in Kumbakonam Natives FB : The buildings to be restored. But the pity is,. Allowed to get abandoned, so that, new buildings will be built thus, politicians and contractors will get benefitted

    ReplyDelete
  15. R.v. Ramani in Kumbakonam Natives FB : அருமையான பதிவு. புகைபடங்கள்.நிறைய பண்டிதர்கள் அறிவாளி களை உருவாக்கிய பெருமை மிக்ககல்லூரி.எனது உறவினர்கள் அதில் பேராசிரியர் களாக பணியாற்றி பெறுமை அடைந்தவர்கள் சிறந்த பேராசிரியர் கள் சிரத்தை உள்ளவர்கள் பணியாற்றினார்கள்.மாணவர்கள் ஆசிரியர் களிடையே நல்லுறவு மதிப்பும் மரியாதையும் இருந்து.ஒருவிதமான கட்டுப்பாடு இருந்து வந்தது. நான் படிக்கும் போது 1957\58கூட தி.மு.க எம்.பி.செ.கந்தப்பன் தமிழாசிரியாரக இருந்தார்.ஆனால் அவரும் அரசியல் பேசமாட்டார்கள்.1966\67மொழி ப்போர்க்கு பின் எல்லா கல்லூரிகள் போல தலைகீழாக மாறி விட்டது வேதனை.

    ReplyDelete
  16. Avm Humayun Kabeer in FB :அரசு நிதி அளித்து உள்ளது விரைவில் சரிசெய்ய வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  17. நல்ல நினைவலைகள் அதுவும் நாம் படித்த கல்லூரிக்குச் சென்று அந்த இனிய நினைவுகளை அங்கு அசை போடுவது என்பத் மிக மிக நல்லதொரு நிகழ்வு. தங்களது இளமை நினைவுகளைச் சொல்லிய விதம் அழகு.

    ReplyDelete
  18. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

    ReplyDelete