22 July 2015

Charles Chaplin: My Autobiography

அண்மையில் நான் படித்த நூல் Charles Chaplin My Autobigraphy. நான் படித்த சுய வரலாற்று நூல்களில் என்னைக் கவர்ந்தது இந்நூல். சார்லி சாப்ளின் என்றால் நாம் அறிந்தது நகைச்சுவையே. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவர் மிகப்பெரிய கலாரசிகனாக இருந்ததை அறியமுடிந்தது. இளமைப்பருவம் முதல் அவர் வறுமையிலும் சோகத்திலும் உழன்றதை அறிந்தபோது  நம்மைச் சிரிக்கவைத்தவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா எனச் சிந்தித்தேன். சாதனை படைத்தவர்கள் பலருடைய வாழ்க்கை மிகவும் சோகமாகவே இருந்துள்ளது. அந்த சோகத்தைச் சரிசெய்வதற்காகவோ, மறப்பதற்காகவோ அவர்கள் தம்மை ஒரு துறையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பரிணமித்துள்ளார்களோ என எண்ணத்தோன்றுகிறது.


"என்னுடைய தாயாரின் குரல் வளம் சரியாக இல்லாத நிலையில் எனது ஐந்து வயதில் நான் மேடை ஏறும் நிலை ஏற்பட்டது.  மேடையில் என் அம்மா பாட முயற்சிக்கிறார். முடியவில்லை. ரசிகர்கள் கூச்சலிடுகிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என் அம்மா மேடையைவிட்டு இறங்கினார்.  என் அம்மாவின் நண்பர்களுக்கு முன்பாக நான் நடித்ததை முன்பு பார்த்திருந்த நாடகப் பொறுப்பாளர் என்னை என் மேடையில் அம்மா இருந்த இடத்திற்கு என் கையைப் பிடித்து அழைத்துச்சென்றார்.  என்னைப் பற்றி ஏதோ கூறிவிட்டு மேடையில் என்னை தனியாக விட்டுவிட்டு அவர் இறங்கினார். எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம். அனைவரும் அறிந்திருந்த ஜாக் ஜோன்ஸ் என்ற பாடலை நான் பாட ஆரம்பித்தேன். பாடிக்கொண்டிருக்கும்போதே மேடையை நோக்கி பணத்தாள்கள் வந்துவிழுந்தன. அப்போது நான் பாடுவதை உடனே நிறுத்திவிட்டு, பணத்தைப் பொறுக்கி எடுத்தபின்னர்தான் பாடுவேன் என்றேன். என்னுடைய இந்த செய்கை ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைத்துவிட்டது. பொறுப்பாளர் கைக்குட்டையை எடுத்துவந்து பணத்தை எடுக்க உதவி செய்தார். அவர் அதனை வைத்துக்கொள்வாரோ என்று எனக்குப் பயம் வந்தது. என்னுடைய இந்த நினைப்பை ரசிகர்களிடம் கூறவே, அவர்கள் அதிகம் சிரித்தனர். அப்போது நான் அவர் பின்னாலேயே சென்று கொண்டிருந்தேன். அம்மாவிடம் அவர் அதனைக் கொடுத்துத் திரும்பும் வரை அவரைப் பின் தொடர்ந்தேன். பின்னர் மறுபடியும் மேடைக்கு வந்து தொடர்ந்து பாடினேன். எனக்கு எந்தவித கூச்சமும் இல்லை. ரசிகர்களிடம் பேசினேன், நடனமாடினேன், அம்மா பாடுவதைப் போலப் பாடிக் காண்பித்தேன். இவ்வாறான உத்தி ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கியதை உணர்ந்தேன். மறுபடியும் ஆரவாரம், சிரிப்பு. மேடையில் பணம் அதிகமாக வந்துவிழுந்தது. அம்மா மேடைக்கு வந்து சிதறிக்கிடந்த பணத்தை சேகரித்து உதவினார். அந்த இரவுதான் நான் மேடையில் தோன்றிய முதல் நாள். என் அம்மாவிற்கோ அதுவே மேடையில் கடைசி நாள்." (பக்.17-19)

"....நான் பல வேலைகள் பார்த்துள்ளேன். இருந்தாலும் நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தொடர்ந்து இருந்தது....." (ப.76)

"கலை என்ற சொல் என் தலையிலோ, அகராதியிலோ இருந்ததில்லை. நாடகம் என்பது வாழ்வாதாரம், வேறு எதுவுமில்லை.....(ப.93)

"1909இல் பாரிஸ் சென்றேன். ஒரு வெளிநாட்டிற்குப் போவது என்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா? முதன்முதலில் பிரான்சை பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. என் கற்பனைக்கு விருந்தாக இருந்தது. ...சொல்லப்போனால் என் தந்தை சிறிதளவில் பிரான்சைச் சேர்ந்தவர் என்ற நிலையில் சாப்ளின் குடும்பம் என்பது பிரான்சிலிருந்து வந்த குடும்பமே.....(ப.108)

"...முதன்முதலாக என்னை போஸ்டரில் தனியாகப் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை...."  (ப.128)

"அக்காலத்தில் இயக்கம் என்பது எளிதானதே. வலப்புறத்திலிருந்து இடப்புறத்தைத் தெரிந்துகொண்டு உள்ளே வரும் வழி, வெளியே செல்லும் வழியை உறுதி செய்துகொள்ளவேண்டும். ஒரு காட்சி நிறைவில் ஒருவர் வலப்புறமாகச் சென்றால் மற்றொருவர் இடப்புறமாக வருவார். காமராவை நோக்கி ஒருவர் வெளியே சென்றால் அடுத்த காட்சிக்கு ஆயத்தமாக வருபவர் கேமராவின் பக்கம் தன் பின் புறம் அமைவது போல வரவேண்டும். சொல்லப்போனால் இவையெல்லாம் அடிப்படை விதிகள்.... (ப.152)

"எனக்குத் தெரிந்த யாரையும் சந்திக்காமல் இரு நாள்கள் நியூயார்க்கில் இருந்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சி, மறுபுறம் வேதனை.....ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குள் என் மன நிலை இவ்வாறு இருந்தது.150000 டாலருக்கான காசோலையைப் பெறும்போது புகைப்படம் எடுததனர். டைம்ஸ் ஸ்கொயரில் கூட்டத்தின் நடுவே நின்றேன். மின்னொளியில் டைம்ஸ் கட்டடத்தில் 'சாப்ளின் முயூட்சுவல் நிறுவனத்தோடு ஓராண்டிற்கு 6,70,000 ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார்'   என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அது எனக்கு அல்ல யாரையோ அது குறிப்பிடுகிறது என எண்ணிக்கொண்டே நான் நின்றேன். மனதை என்னன்னவோ செய்தது..  (ப.178)

"...குறுகிய காலத்தில் நான் கோடீஸ்வரனாகிவிடுவேன். எனது பணப்பெட்டியில் பணம் நிரம்ப ஆரம்பித்துவிட்டது. ஒரு பத்தாயிரம் என்பது சில வாரங்களில் பல பத்தாயிரங்களானது..........  (ப.188)

" ...வாழ்க்கையில் கஷ்டப்பட ஆரம்பித்தேன். பணம் அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தேன். சரி. இதனால் என் வாழ்க்கை முறை மாறிவிட்டதா?...அதனை நிரூபிக்க ஏதாவது செய்தாக வேண்டுமே. ஒரு செயலர், ஒரு கார்..இல்லை இன்னும் மேல்... என்ற நிலையில் வசதியை மேம்படுத்தவேண்டுமே. ஒரு நாள் கார் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காட்சியறை வழியாகச் சென்றேன். அமெரிக்காவின் அந்த நாள்களின் சிறந்த காரான எழுவர் இருக்கை கொண்ட லோகோமொபைல் கார் காட்சியறையில் விற்பனைக்குத் தயாராக இருந்தது. கடைக்குள் சென்று, இந்த கார் என்ன விலை? என்றேன். 4900 டாலர் என்றார் கடைக்கார். அதனை வாங்கிக்கொள்கிறேன் என்றேன். கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். உடனே விற்பனை என்றதும் கடைக்காரர் காரின் இன்ஜினை நீங்கள் பார்த்து சோதனையிட வேண்டாமா? என்றார். அதைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிக்கொண்டே காரில் அனுபவம் வாய்ந்தவன் போல டயரினை அழுத்திப் பார்த்தேன். வியாபாரம் முடிந்தது. ஒரு துண்டுத்தாளில் எனது பெயர் எழுதப்பட்டது. கார் எனக்குச் சொந்தமானது..... (ப.190)

தாயாரின் உடல் நலம் குறித்து படும் வேதனை, உடன் பணியாற்றியவர்களைப் பற்றி அவர் பெருமையாகக் கூறல், பழகும் பெண்களை வர்ணிக்கும் முறை, நடிப்பு என்பதற்கப்பால் தொழில்நுட்பத்திற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம், மனைவியரால் ஏற்பட்ட மன வேதனை, தொழில்ரீதியாக எதிர்கொண்ட சிரமங்கள், ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கொண்ட அனுபவங்கள், இரு உலகப்போரின் போது சந்தித்த நிகழ்வுகள், அரசியல்வாதிகளால் எதிர்கொண்ட பிரச்சனைகள், தான் படித்த படங்களைப் பற்றிய அலசல், வழக்கில் சிக்கிக்கொள்ளல், நிம்மதியற்ற வாழ்க்கை என்ற நிலையில் பலவற்றை அவர் எழுதியுள்ள விதம் படிப்பவர் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். ஒவ்வொரு சொல்லும் அர்த்தத்துடன் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு தலைப்பிலும் விவாதிக்கொண்டே  போகலாம். 

அவருடைய படங்களில் The Kid, The Gold Rush, The Circus, Modern Times, The Great Dictator   உள்ளிட்ட பலவற்றை நான் பார்த்துள்ளேன். நம்மை முற்றிலுமாக வேறு ஒரு புதிய உலகிற்கு அழைத்துச்சென்றுவிடுவார், தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலமாக. அவர் பேசும்படத்தைவிட பேசாப்படங்களையே அதிகம் நேசித்தார். ரசனையை நேசிப்பவர்களும், வாழ்க்கையை அதிகம் நேசிப்பவர்களும், எச்சூழலையும் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற விரும்புபவர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல். 

Charles Chaplin: My Autobiography, Modern Classics, Penguin Books, 2003, UK $ 10.99  

44 comments:

  1. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது தங்களின் விமர்சனம். இந்நூல் தமிழிலும் கிடைக்கிறதா...? ஐயா.நன்றி
    தம 2

    ReplyDelete
    Replies
    1. தமிழில் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. தங்களின் சுவாரஸ்ய ரசனைக்கு நன்றி.

      Delete
  2. படித்ததைச் சிறப்பாகப் பகிர்ந்து ,படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. அவருடைய படங்களை மெய் மறந்து பார்த்தது போல் அவருடைய கதையைப் படித்தபோதும் மெய் மறந்தேன். நன்றி.

      Delete
  3. சுய வரலாற்று நூல்களில் "Charles Chaplin My Autobigraphy"
    அனைவரையும் கவர்ந்திழுக்கும் அம்சங்கள் பொருந்திய நூல் என்பதை தங்களது தரமான விமர்சனம் எடுத்துக் காட்டுகிறது முனைவர் அய்யா!
    .மேலும், சாப்ளின் குடும்பம் பிரான்ஸ்- ல் இருந்து வந்தது என்ற தகவலை தங்களது பதிவின் வாயிலாகத்தான் முதன் முதலில் அறியப் பெற்றேன். வரவேற்புக்குரிய விமர்சனம். நன்றி அய்யா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. படிக்கப்படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  4. ஸ்வாரசியமான புத்தகம் என்று தெரிகிறது. எங்கள் நூலகத்தில் இருக்கிறதா என பார்க்கிறேன்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் நூலகத்தில் இருக்க வாய்ப்புண்டு. வருகைக்கு நன்றி.

      Delete
  5. அட்டைப்படம் பார்த்ததும் சாப்ளின் இவ்வளவு அழகானவரா என்று தோன்றியது. :)

    கட்டுரைக்குப் பாராட்டும் நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. படிக்க ஆரம்பிக்கும் முன்பாக பல முறை அட்டையைத் திரும்பத் திரும்பப் பார்த்தேன். தாங்கள் கூறியதை நானும் உணர்ந்தேன். நன்றி.

      Delete
  6. அன்பின் அய்யாவிற்கு,
    சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு பற்றிய தங்களின் பதிவு அருமையாக இருந்தது. தமிழில் ’என் கதை’ என்று யூமா வாசுகி என்பவரால் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உமையாள் காயத்ரி கேள்விக்கு பதில் கிடைத்துவிட்து. நன்றி.

      Delete
  7. குறிப்பிட்ட சில பத்திகளே அவரின் மனப் போராட்டத்தை அறிய முடிகிறது ஐயா... நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சில இடங்கள் கண்ணீரை வரவழைத்துவிடும். வருகைக்கு நன்றி.

      Delete
  8. வணக்கம்
    ஐயா

    படித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.. மிக அருமையாக உள்ளது.. த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நல்ல ரசனையுடன் கூடிய நிகழ்வுகளைக் கொண்ட நூல். வருகைக்கு நன்றி.

      Delete
  9. சோதனைகளையே சாதனைகளாக்கிக் காட்டியவர் அல்லவா
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாசிப்புக் கோணத்தில் அதிகம் ரசிப்பீர்கள். நன்றி.

      Delete
  10. சார்லி சாப்லின் பற்றி அங்கும் இங்கும் சில விஷயங்கள் கேள்விப்பட்டதுண்டு, படித்ததுண்டு. முழு வாழ்க்கை வரளாறு இப்போது ஓரளவு உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது. அமெரிக்காவில் அவரை ஒரு கம்யூனிஸ்டாகவே கருதி அவருக்கு இன்னல்கள் பல கொடுத்தனர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. அவர் எதிர்கொண்ட இன்னல்கள் பலப்பல. வருகைக்கு நன்றி.

      Delete
  11. சார்லி சாப்ளின் பற்றி அருமையான பதிவு.

    ReplyDelete
  12. சார்லி சாப்ளின் பற்றி பல தகவல்கள் விக்கியிலிருந்து அறிந்திருந்தாலும், தாங்கள் இங்கு தாங்கள் சொல்லி இருப்பதிலிருந்து இன்னும் அறிந்து கொண்டோம் ஐயா. சோதனைகள் தான் ஒருவரை சாதனை படைக்க வைக்கின்றதோ....நல்ல பதிவு ஐயா...அவரைப் பற்றிச் சொல்லியமைக்கு..

    ReplyDelete
  13. இந்த அட்டையில் இருக்கும் சாப்ளின் படம் வித்தியாசமாக இருக்கின்றது. அவரைப் படங்களில் வேறு விதமாகத்தானே பார்த்திருக்கின்றோம்...அதனால்...

    ReplyDelete
    Replies
    1. தன்வரலாற்றினைப் படிக்கும்போது பல புதிய செய்திகளைத் தெரிந்துகொள்வதோடு அவர்களுடைய மன நிலையைத் தெளிவாக உணர வாய்ப்புண்டு. வருகைக்கு நன்றி.

      Delete
  14. அவரைப் போல என்னால் முன்னேற முடியாதற்கு காரணம் ,சிறிய வயதில் அவர் பட்ட கஷ்டங்கள் போல் ,நான் படவில்லை என்பதை உணரமுடிகிறது !

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமான, ஆழமான கருத்து. வருகைக்கு நன்றி.

      Delete
  15. நல்லதொரு விமர்சனம்.
    அட்டைப்படம் வியப்பைத் தந்தது எனக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அட்டைப்படம் பலருக்கு வியப்பினைத் தந்தது உண்மையே. வருகைக்கு நன்றி.

      Delete
  16. அருமை அய்யா.. நன்றி !!

    ReplyDelete
  17. சுவாரஸ்யமான நூல்! அருமையான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  18. நல்ல பகிர்வு ஐயா... அழகாக விமர்சித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  19. உலகையே சிரிக்க வைத்தவரைப் பற்றிய அறியாத தகவல்கள் அறிந்டென். அப் புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நாடகம், திரைப்படம், நகைச்சுவை உணர்வு, சோகம், வாழ்வின் விளிம்பு நிலை தொடங்கி மாற்றங்கள் என்ற பல நிலைகளில் பல படிப்பினைகளைத் தருகின்றன இந்நூல்.

      Delete
  20. அன்பின் ஜம்புலிங்கம் சார் அவர்களுக்கு,
    ஆஹா. அற்புதமான மனிதரைப் பற்றிய அறிமுகமாக அவரது சுயசரிதையிலிருந்து தேர்ச்சியான மேற்கோள்களுடன் வாசிக்கத் தூண்டி இருக்கிறீர்கள்.....நன்றியும், பாராட்டுதல்களும்...
    சார்லி சாப்ளின் கலைஞர் மட்டுமல்ல. முற்போக்குக் கலைஞர். இந்த அடைமொழி எதற்குத் தேவை என்றால், அது அவரது சமூகக் கரிசனத்தை, தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சலை, ஒடுக்குறைக்கு அஞ்சாது எதிர்த்துக் குரல் கொடுப்போம் என்ற கம்பீரத்தை வெளிப்படுத்துகிறது. அம்பலப்படுத்தல், பகடி செய்தல், அபத்தங்களைப் புட்டுப் புட்டு எடுத்து வைத்தல் மாத்திரமல்ல சாப்ளின் செய்தது....நாஜி கொடூரவாதி ஹிட்லரை நேரடியாக ஒரு பாத்திரமாகப் புனைவு செய்து நடிக்கும் அசாத்திய சாகசம் அவரிடம் இருந்தது. நவீனமயம் மக்களை எந்திரமயமாக்கி மனிதத்தைத் தொலைக்க வைக்கத் தூண்டும் என்பதை விளக்கும் படம் அவருடையது.
    சாப்ளின் வாழ்ந்த காலத்தில் மெக் கார்த்தி எனும் கடைந்தெடுத்த மக்கள் விரோத செயலாளர் அமெரிக்காவில் இருந்தான். நியாயத்தைக் கேட்கும் யாரையும் கம்யூனிஸ்ட் என்று அடையாளப்படுத்தி கொடூர தண்டனைகளுக்கு உட்படுத்துவான். சாப்ளின் தமது நேரிய பார்வை, சமூக மாற்றத்திற்கான தாகம் இவற்றுக்காக வேட்டையாடப்பட்டார். இந்தச் செய்திகள் நிச்சயமாக அவரது சுயசரிதை நூலில் இடம் பெற்றிருக்கக் கூடும். மெக்கார்த்திசம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வருணிக்கும் காலம் அது.
    மிக்க நன்றி ஐயா....எஸ் வி வேணுகோபாலன் (sv.venu@gmail.com மின்னஞ்சல் வழியாக)

    ReplyDelete
  21. வாவ். அற்புதமான விமர்சனம் தோழர்

    ReplyDelete
  22. தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  23. சிறந்த கலைஞரைச் சிறப்பாக
    நாமறிய உதவிய நல்ல பதிவு!

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    ReplyDelete
  24. வருகைக்கு நன்றி. ஊற்றுக்கு மறுமொழியினை உங்களது தளத்தில் பதிந்துள்ளேன்.

    ReplyDelete
  25. சிறந்த கலைஞர் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி! அற்புதமான விமர்சனம். தொடர வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete