16 July 2026

அனைத்துக் காலத்திற்கும் பொருந்தும் கதாநாயகன்: ஜான் செரியன்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன். தி இந்து உள்ளிட்ட ஆங்கில இதழ்களிலிருந்து பல கட்டுரைகளையும், செய்திகளையும் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ப்ரண்ட்லைன் இதழில் சே தொடர்பாக வெளியான ஒரு கட்டுரை முழுமையாக மொழிபெயர்த்ததும், அது நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் இதழில் வெளியானதும் ஒரு மறக்க முடியாத அனுபவம். அவ்விதழிலிருந்து மொழியாக்கம் செய்த கட்டுரை இது ஒன்று மட்டுமே.  என் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை மேம்படுத்திய கட்டுரைகளில் இதுவும் ஒன்று.  






-------------------------------------------------------------------------------------------
கட்டுரையின் மொழிபெயர்ப்பு 
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், நவம்பர் 2008
-------------------------------------------------------------------------------------------

12 July 2026

பாயும் ஒளி: வாழ்க, வளர்க..

நண்பர் திரு ஆர்.கண்ணன் அவர்களின் பெருமுயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு, அவருடைய மறைவிற்குப் பின் அவருடைய மகள் செல்வி சுப்ரஜா கண்ணன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்படுகின்ற "பாயும் ஒளி" இதழின் 100ஆவது இதழ் ஜூலை 2026இல் வெளியானது. 



நூறாவது சிறப்பிதழின் தலையங்கத்தில் ஆசிரியர்,  தன் தந்தை 2017இல்  ஓய்வு பெற்றபோது ஓய்வுக்காலத்தை உபயோகமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் விவாதித்தபோது ஏற்கனவே 40 வருடங்களுக்கு முன்‌ அவர் ஆரம்பித்து நடத்திய கையெழுத்து பத்திரிகையான‌ ‘நவரசம்’ இதழைத் தொடர்ந்து நடத்து முடியாத நிலை, திருவையாற்றில் நண்பருடன் இணைந்து உருவாக்கிய ‘பாரதி இயக்கம்’ அமைப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாத நிலை, இவற்றுக்கெல்லாம் காரணமாகவிருந்த தனது அரசுப் பணியின் சுமை,  தனக்கென ஒரு அங்கீகாரம் இருக்கவேண்டும் என்று அவர் விரும்பி பாயும் ஒளி என்ற இதழை ஆரம்பித்ததன் சூழல் உள்ளிட்டவற்றைப் பற்றிக் கூறுகிறார்.  


அரசியல், சினிமா ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றும், இலக்கியம், கிராமியம், அறிவியல், மொழிபெயர்ப்பு, கவிதைகள், சிறுகதை, ஆங்கிலப் படைப்புகள், உள்ளூர் நிகழ்வுகள், புகழ்பெற்றவர்களின் நேர்காணல்கள், அதிகம் அறியப்படாத தொன்மையான இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு கட்டுரைகள் அதில் இடம்பெறவேண்டும் என்றும் அவர் எண்ணியதாகக் கூறியுள்ள அவர், துரதிர்ஷ்டவசமாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவற்றை சரிவர செய்யமுடியாமல் போனதாகவும், அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது கூட தன்னை அழைத்து “பாயும் ஒளிக்கு இந்த மாதம் கட்டுரைகள் வந்தனவா? நீ எதாவது எழுதினாயா?” என்று கேட்டதாகவும், தான் எதுவும் எழுதாமல் இருந்ததை அறிந்து கோபப்பட்ட அவர், ஆங்கிலத்தில் மட்டுமே வலைப்பூவில் எழுதிவந்த தன்னை தமிழில் எழுதச் செய்தது தன் தந்தையே என்று குறிப்பிடுகிறார்.

தந்தை இவ்வுலகத்தை விட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற பணியை அவரின் ஆசிகளோடு என்றும் தொடர்வதாகப் பதிவிட்டுள்ள மகளின் எண்ணம் ஈடேற இறைவனை வேண்டுகிறேன். அவருடைய நினைவாக ஏப்ரல் 2018இல் முதல் இதழில் வெளியான தலையங்கத்தை இவ்விதழில் பகிர்ந்துள்ளார்.

ஆரம்பம் முதல் நான் இவ்விதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பல துறைகளைச் சார்ந்த கட்டுரைகளை இவ்விதழில் அவர் வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு இதழும் மெருகேறி முந்தைய இதழைவிட அடுத்த இதழைச் சிறப்பாக அமைத்து வருகிறார். படைப்பாளிகளிடமிருந்து கட்டுரைகளைப் பெறுதல், தேர்ந்தெடுத்தல், பொருண்மைப்படி வகைப்படுத்துதல், உரிய இடங்களில் புகைப்படங்களை இணைத்தல், சிறப்பாக வடிவமைத்து தேவையான வண்ணங்களைப் பயன்படுத்துதல், இதழின் முகப்பின் முக்கியமான பொருண்மைகளுக்கான உட்தலைப்புகளை அமைத்தல் என்ற நிலைகளில் மிகவும் கவனம் செலுத்தி, தந்தை வழியில் மகள் ஆற்றுகின்ற பணி போற்றத்தக்கதாகும். வாசிப்போரின் மனம் கவர்கின்ற வகையில் பக்கங்களை அமைக்கும் விதம் சிறப்பாக உள்ளது. 

அன்று முதல் இன்று வரைஇதழைப் படித்துவிட்டு என் கருத்துகளைத் தெரிவிப்பேன். இதழ்களைத் தொடர்ந்து வாசித்தபோதும் என்னுடைய ஆய்வுப்பணி மற்றும் நூல்களின் அச்சுப்பணி காரணமாக சில சமயங்களில் பின்னூட்டம் இட முடியாத நிலையிலும் என் கருத்துகளை அவ்வப்போது இதழாசிரியரிடம் அலைபேசி வழியாகக் கூறுவேன். இதழ் செறிவாக அமைவதற்காக அவர் செலுத்துகின்ற ஈடுபாட்டினை ஒவ்வொரு இதழும் வெளிவரும்போது அறிவேன். 

ஆசிரியரான சுப்ரஜா கண்ணன் நல்ல வாசகர். பறவை ஆர்வலர். இயற்கை விரும்பி. சுற்றுச்சூழல் நேசர். இணையத்தில்,  நாம் அன்றாடம் காண்கின்ற பறவைகளை அறிமுகப்படுத்தி ஒன் மினிட் பேர்டிங் என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார். அந்த நூல் அச்சு வடிவிலும் வெளிவந்துள்ளதாக அவர் மூலமாக அறிந்தேன்.  இவற்றைத் தவிர தன்னுடைய இணையதளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். 

அண்மையில் வந்துள்ள இவ்விதழில் அரை நூற்றாண்டுக்கும் மேலான வாசிப்புப்பழக்கம் என்ற தலைப்பிலான என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது.
 
தந்தையின் ஆசியுடனும், என்னைப் போன்ற சக வாசகர்களின் ஆதரவுடனும் நூறாவது இதழ் கண்ட பாயும் ஒளி மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள்.  

-------------------------------------------------------------------------------------------
நூறாவது இதழை வாசிக்க: பாயும் ஒளி 100ஆவது இதழ்
-------------------------------------------------------------------------------------------

05 July 2026

பொன்விழா காணும் பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம்

நான் தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்ற கும்பகோணம், பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா கும்பகோணம், கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி, பாண்டியகுல நாடார்கள் உறவின்முறை திருமண மண்டபத்தில் இன்று (5.7.2026) நடைபெற்றது.



இந்த இனிய வேளையில் அக்காலத்தில் நான் அங்கு பயின்ற நாள்கள் நினைவிற்கு வருகின்றன. கும்பகோணம், அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்துக்கொண்டிருந்த காலத்தில்  (1975-79) முதலில் கும்பகோணம், ரெட்டியார் குளத்தின் கீழ்க்கரையில் இருந்த ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிலையத்தில் தட்டச்சு கற்க ஆரம்பித்தேன்.  பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் ஆரம்பித்தபின்னர், அதன் ஆரம்ப கால மாணவர்களில் ஒருவனானேன். என்னுடன் ராஜசேகரன், மோகன், மதியழகன், சங்கர், ஐயப்பன், லட்சுமிகாந்தன், தயாளன், நாராயணன், ராஜு, மைனாவதி  உள்ளிட்டோர் தட்டச்சு பயின்றனர். பலருடைய பெயர் நினைவில்லை. அப்போது பயின்ற மோகன் தற்போது சென்னையில் தட்டச்சுப் பயிற்சி நிலையம் நடத்திவருகிறார். 

தமிழ், ஆங்கில தட்டச்சுப் பயிற்சி பெற்ற காலத்தில் பிழை இல்லாமல் நான் தட்டச்சு செய்த பக்கங்கள் அவ்வப்போது அறிவிப்புப் பலகையில் இடம்பெறுவது கண்டு மகிழ்வேன். உடன் பயின்ற பலரின் தட்டச்சுப் பக்கங்களும் அவ்வாறு இடம்பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்தில் எந்த அளவிற்கு அதிகமாக பக்கங்களைத் தட்டச்சிட முடியுமோ அந்த அளவிற்குத் தட்டச்சு செய்வேன். ரெமிங்டன், ஹால்டா, காட்ரோஜ் ஆகிய  தட்டச்சுப்பொறிகளில் தட்டச்சு பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஹால்டாவில் தட்டச்சிடும்போது மிகவும் வேகமாக அடித்த உணர்வு ஏற்படும். 




பயிற்சி நிலையம் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஆசிரியர் திரு கு.பாஸ்கரன் அவர்களும், (ஜூன் 2025இல் பொன்விழா கண்ட, நான் ஆரம்பத்தில் ஹிந்தி கற்ற காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் நிறுவனரும், இந்நிகழ்வில் தலைமையுரையாற்றுகின்ற) திரு.பாலுஜி என்று நாங்கள் அழைக்கும் கு.பாலசுப்ரமணியன் அவர்களும் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் நான் படித்த காலம் முதலே எனக்கு அறிமுகம்.  எங்களுடைய வீடு சம்பிரதி வைத்தியநாதன் தெருவில் இருந்தது. பெரும்பாலான என் பள்ளி நண்பர்களின்  வீடுகள் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியிலும், பேட்டையிலும் இருந்தன. அவர்களைப் பார்க்கச் சென்ற வகையிலான தொடர்பும் ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்தியது.  

பயிற்சிக்காலத்தில் தட்டச்சு செய்யும்போதும், தேர்வின்போதும், வாராவாரம் நடத்தப்படும் வகுப்புத்தேர்வின்போதும் ஆசிரியர் எங்களை அக்கறையுட்ன் கவனித்து வழிகாட்டி நடத்துவார். தட்டச்சில் தினசரி காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் குறைப்பதற்கான ஆலோசனைகளைக் கூறுவார். மாணவர்கள் உரிய நேரத்தில் வர வேண்டும் என்பதிலும் தட்டச்சு செய்யும்போது அதில் முழு கவனமும் செலுத்தவேண்டும் என்பதிலும்  கவனமாக இருப்பார். சுருக்கெழுத்து கற்கும்போது சற்றொப்ப அத்தகைய கவனத்தைச் செலுத்தி எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். பயிற்சியுடன் நாங்கள் கடைபிடித்த ஒழுங்கு தேர்வுகளில் தேர்ச்சி பெற துணைநின்றது. 

கல்லூரிப் படிப்பு முடித்த காலகட்டத்தில் ஆங்கில மற்றும் தமிழ்த் தட்டச்சில் உயர்நிலையிலும்,  ஆங்கிலச்சுருக்கெழுத்தில் கீழ்நிலையிலும்  தேர்ச்சி பெற்றேன். இத்தகுதிகள் எனக்கு உடனே வேலை கிடைக்க உதவியாக இருந்தன. படிப்பை நிறைவு செய்த சில வாரங்களில் தட்டச்சராக சென்னையில் பணியில் சேர்ந்தேன். தொடர்ந்து தஞ்சாவூரிலும், கோயம்புத்தூரிலும் பணியாற்றியபின், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து, 2017இல் பணி நிறைவு பெற்றேன். இடைக்காலத்தில், 2004இல் குடும்பச்சூழல் காரணமாகத் தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தேன்.  

கும்பகோணம் செல்லும்போது மரியாதைநிமித்தம் ஆசிரியரைச் சந்தித்துவிட்டு வருவேன். ஒரு மாணவனாகச் சேர்ந்த காலகட்டத்தில் இருந்த அதே அன்பு, பரிவு ஆகிய குணங்களை இப்போதும் அவரிடம் காணலாம். என்னைப் போல பல மாணவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அவர் இருந்துள்ளார்.  ஒரு முறை நான் சென்றபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் தட்டச்சுப் பயிற்சி நடைபெறும் சூழலையே கண்டேன். அப்போதிருந்தவாறே மாணவர்களை உரியமுறையில் கண்காணித்தல், அவர்கள் தட்டச்சு செய்த தாள்களைக் கவனமாகத் திருத்துதல், பிழைகளை உரிய முறையில் சுட்டிக்காட்டல், உரிய ஆலோசனைகளைக் கூறுதல் என்றவாறு அவர் தன் பணிகளை மேற்கொண்டிருந்தார். ஆண்டுகள் பல ஆனபோதிலும் அவருடைய செயல்பாட்டில் மாற்றமில்லை என்பதை உணர்ந்தேன். இன்னும் எங்களுடைய சந்திப்பு தொடர்கிறது. 


அவரும், குடும்பத்தாரும் எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழவும், அவருடைய சேவை தொடரவும், பொன்விழா காணும் பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் மென்மேலும் வளரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.  

50 ஆண்டுகளாக நமக்கு அவர் வழங்கிய வழிகாட்டுதல், ஆதரவு, அர்ப்பணிப்புகளை நினைவுகூறும் வகையில் முன்னாள் மாணவர்களுடன் இணைந்து அவரை கௌரவிப்பதில் ஆரம்ப கால மாணவன் என்பதில் பெருமையடைகிறேன்.  


நாங்கள் பயின்ற காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இருக்கிறதா என்று ஆசிரியர் திரு கு.பாஸ்கரன் அவர்களிடம் கேட்டபோது உடன் இப்படத்தையும், மேலும் சில படங்களையும் திரு குருகிரி மூலமாக அனுப்பிவைத்தார். படத்தில் அமர்ந்திருப்போரில் நான் (இடமிருந்து) நான்காவதாக உள்ளேன். இப்படம் அக்கால நினைவுகளை மீட்டுக்கொடுத்தது. 

-------------------------------------------------------------------------------------------
விழா நிகழ்வு
-------------------------------------------------------------------------------------------

மாலை நடைபெற்ற நிகழ்வில் காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் அமைப்பாளர் திரு கு. பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். முனைவர் பஞ்சநதம், முனைவர் லட்சுமி காந்தன், திரு ராஜாராமன், திருமதி ராஜேஸ்வரி, திரு சாகுல் ஹமீது, திரு. மணிவண்ணன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்களுடன் நானும் வாழ்த்துரை நல்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையத்தின் நிறுவனர் திரு கு. பாஸ்கரன் ஏற்புரை வழங்கினார். திருமதி. பிரபாவதி நன்றியுரை ஆற்றினார். 





ஆரம்ப காலத்தில் பயிற்சி நிலையத்தினை நால்வராக இணைந்து பணியாற்றத் தொடங்கி இன்றுவரை நட்பிலிருக்கும் நண்பர்களின் அக்காலப் புகைப்படத்தைக் கண்டு வியந்த நாங்கள் இந்நாளில் அவர்களை நேரில் கண்டு, அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது மகிழ்ந்தோம். 50 ஆண்டு கால நட்பின் இலக்கணம் எங்களை நெகிழ வைத்தது. 








விழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது. முதல் பிரிவில் 1976இல் தட்டச்சில் சேர்ந்து தொடர்ந்து சுருக்கெழுத்தும் பயின்ற நிலையில் இதில் கலந்துகொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய உரையில் கூறியதைச் சுருக்கமாகப் பகிர்கிறேன்.

"இவ்வாறான ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்த சக முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சி மிகவும் பாராட்டத்தது. கும்பகோணத்தில் எங்கள் தாத்தா, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியின் பெரிய வாத்தியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தில் பெரியவர், ஆகியவர்களைத் தொடர்ந்து திரு பாலுஜி, ஆசிரியர் திரு பாஸ்கரன் மூலமாகப் பண்பினையும், நன்னடத்தையும் கற்றுக்கொண்டேன்.

இங்கு படித்து நான் பல நிறுவனங்களில் தட்டச்சாளராகவும், சுருக்கெழுத்தாளராகவும் பணிக்கு அமர்த்தப்படும் முன்பாக நேர்முகத் தேர்வில் எதிர்கொண்ட சூழலில் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தில் ஆரம்ப காலத்தில் கற்ற கல்வி துணை நின்றது. அது எனக்குப் பெருமையே.

எந்தவொரு நிகழ்விற்கும் முன்கூட்டியே வருவது மிகவும் முக்கியமானது. அதனையும் இங்குதான் கற்றேன். பயிற்சிக்காலத்தில் பயிற்சியுடன் நான் கற்ற ஒழுங்கு, நேரந்தவறாமை உள்ளிட்ட பழக்கங்கள் என்னை உயர்த்தின. பணியில் சேர்ந்த பின் தொடர்ந்து மேற்கொண்ட தட்டச்சுப் பணியும் அதன் மேலான ஈடுபாடும் என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது.

நான் 50 ஆண்டு காலமாக படித்து வரும் 'தி இந்து' நாளிதழ் வாசிப்பு மொழிபெயர்ப்பு ஆர்வத்தைத் தூண்டியதன் காரணமாக அகராதிகளின் துணையின்றி நேரடியாக மொழிபெயர்ப்பினை செய்யும் ஓர் அரிய கலையைக் கற்றேன். இளந்தலைமுறையினர் முற்றிலும் கூகுளை நம்பியிராமல் இவ்வாறு பழக்கத்தினை மேற்கொண்டால் நினைவாற்றலும், மொழியறிவும் மேலும் வளரும்.

நேரத்தின் அருமை கருதி உரையை நிறைவு செய்கிறேன். என் சார்பாகவும், சக மாணவர்கள் சார்பாகவும் நிறுவனத்திற்கும் நிறுவனருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். உரையாற்ற வாய்ப்பு தந்த ஏற்பட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி."

விழா நிகழ்வினை டியூப்பில் காண: Bharath 50 Celebration
-------------------------------------------------------------------------------------------
நன்றி:
அந்நாளைய குரூப் புகைப்படங்கள்: பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் 
விழா புகைப்படங்கள்: முன்னாள் மாணவ-மாணவிகள்
யுட்யூப் பதிவு: காவியம் டிஜிட்டல் ஸ்டுடியோ
-------------------------------------------------------------------------------------------
16.7.2026இல் மேம்படுத்தப்பட்டது.

01 July 2026

அரை நூற்றாண்டுக்கும் மேலான வாசிப்புப் பழக்கம்

இளம் வயதில் தோன்றிய வாசிப்பானது பல பரிமாணங்களில் தடம் பதிக்க எனக்கு உதவியதை அனுபவம் மூலமாக உணர்ந்துள்ளேன். மேம்போக்காக இல்லாமல் முழுமையான ஈடுபாட்டோடு வாசிக்கப்படும்போது கற்கின்ற நுட்பங்களும், பெறுகின்ற அனுபவங்களும் எண்ணற்றவையாகும். வாசிப்பானது பல துறை அறிவை ஊட்டும். நினைவாற்றலை மேம்படுத்தும். சிந்திக்கும் திறனை வளர்க்கும். அவ்வகையில் நான் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன். 50 ஆண்டுகள் சற்றே பின்னோக்கிச் செல்வோம். 

1960கள். எங்களுடைய தாத்தா திரு ரெத்தினசாமி அவர்களின் நாத்திகம், நவசக்தி இதழ்களின் வாசிப்பானது பள்ளிக்காலத்தில் என்னுடைய வாசிப்புக்கு ஓர் ஆரம்பமானது. தாத்தாவின் நண்பர் நம்மை மேம்படுத்த வாசிப்புப்பழக்கம் உதவும் என்பார். அவ்வப்போது அவ்விதழ்களைப் படிப்பேன். 

எங்கள் தங்க ராஜா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவசக்தி இதழுடன்
நன்றி : கோல்டன் சினிமா

1970கள். எஸ்.எஸ்.எல்.சி. படித்தபோது என் நண்பரின் தந்தை ஆங்கிலச்சொற்றொடர்களைக் கூறி அதற்கான பொருளையும் கூறுவார். அப்போது ஆங்கில இதழை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அண்டை வீட்டில் இருந்த தி இந்து வாசகர் வீட்டிற்குச் சென்று அதனை வாசிப்பேன்.  

கல்லூரியில் படித்தபோது தட்டச்சு போன்றவற்றைக்கற்றேன். புதிய சொற்களைத் தட்டச்சிடும்போது அதற்கான பொருளை அகராதிகளில் பார்த்துத் தெரிந்துகொள்வேன். வகுப்பில் ஆசிரியர் பாடமெடுக்கும்போது தெரியாத சொற்களுக்கு விளக்கம் கேட்பேன். இல்லம், தட்டச்சுப் பயிற்சி நிலையம்,  கல்லூரி என்ற  வகைகளில் தேடலைத் தொடர்ந்தேன்.  

நாளிதழ்களில் புதிய சொற்கள் பயன்படுத்தும்விதம், தலைப்புச் செய்திக்கான எழுத்துரு வடிவமைப்பு, பக்க அமைப்பு, பத்திப் பிரிப்பு, உரிய படங்கள் அமைக்கப்படல், பெட்டிச்செய்திகள் போன்றவற்றையும்,  ஒரே செய்தி பிற இதழ்களில் பல நடைகளில் அமையும் விதத்தையும் கவனிப்பேன்.  

1980கள். வெளியூர்களில் பணியாற்றியபோதும்  நாளிதழ் வாசிப்பு தொடர்ந்தது. வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்தேன்.  வங்கித்தேர்வு தொடர்பாக நான் எழுதிய கடிதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில்  வெளியானது. தி இந்துவில் உங்கள் ஆங்கிலத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் என்ற பகுதியில் சில சொற்களுக்கான பொருளைக் கேட்டு நான் எழுதிய கடிதங்கள் என் பெயருடன் வெளியாயின.  


இந்திரா காந்தி இறந்தபோது தி இந்துவில் இந்திரா காந்தி அசாசினேட்டட் என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இந்திரா காந்தி ஷாட் டெட் என்றும் முதல் பக்கச் செய்தி வெளியாகியிருந்தது.  தி இந்து இதழின் சகோதர இதழாக அறிமுகமான பிரண்ட்லைன் இதழின் வாசகனானேன். அதிலும், இந்தியா டுடே உள்ளிட்ட பருவ இதழ்களிலும் நான் எழுதிய கடிதங்கள் வெளியாயின.  

1990கள். அடுத்து, சிறுகதை எழுத முயற்சி எடுத்தேன். முதல் சிறுகதை குங்குமம் இதழிலும், தொடர்ந்து பாக்யா, சாவி, குங்குமம், தின பூமி, கதைபூமி, மங்கையர் பூமி, இதயம் பேசுகிறது, தமிழரசி, வாசுகி, மேகலா, டி.ராஜேந்தரின் உஷா, ராஜரிஷி உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாயின. சிலவற்றுக்கு காசோலை, மணியார்டர்  மூலமாக மதிப்பூதியம் பெற்ற அனுபவமும் உண்டு. 




ஒரு முறை தி இந்து நாளிதழில் வந்த, அல்லாடி கிருஷ்ணசாமி கட்டுரையை முதல் முதலாக நேரடியாக சுமார் 65 நிமிடங்களில் தமிழ்த் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்தேன். பின்னர் இம்முறையில் பல கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்தேன். வாசிப்பு அனுபவமானது மொழியாக்க ஆர்வத்தை மேம்படுத்தியது.  

2000கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவு செய்து பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினேன். கதை எழுதுவதிலிருந்து சற்றே மாறுபட்டு, உரிய மேற்கோள்கள், சான்றுடன் எழுதும் முறையை அறிந்தேன். இக்கட்டுரைகளை கருத்தரங்குகளில் வாசித்தபோது மேடைப் பேச்சு அனுபவம் கிடைத்தது. 

2010கள். ஒவ்வொரு ஆங்கில அகராதியும் ஒவ்வோராண்டும் ஆண்டின் சிறந்த சொல்லைத் தெரிவு செய்வர். அதனைக் கட்டுரைகளாக மொழிபெயர்த்தேன். 2017ல் சிறந்த சொல் என்ற கட்டுரை தி இந்து தமிழ்ப்பதிப்பிலும், தொடர்ந்து தினமணி உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாயின.  இதே காலகட்டத்தில் தி தி கார்டியன், டெய்லி மெயில், டெய்லி எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ், டெய்லி மிர்ரர், இன்டிபென்டன்ட், தி டெலிகிராப், தி சன், தி நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பில்ட், டான் போன்ற வெளிநாட்டு இதழ்களில் வெளியான கட்டுரைகளில் செய்திகளை மொழிபெயர்த்து முன்னணி தமிழ் இதழ்களில் எழுதினேன். 



இதே காலத்தில் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் அடங்கும்.  நண்பர்கள், ஆய்வாளர்களின் நூல்களைப் பற்றிய மதிப்புரையினை புக் டே தளத்தில் எழுத ஆரம்பித்தேன்.

2020கள். இதழ்களின் வடிவமைப்பின் மூலமாக, இதழ்கள் வாசகர்களைச் சென்றடைய மேற்கொள்ளும் ரசனை உத்தியை அறியமுடியும். வெளிநாட்டு இதழ்களின் வடிவமைப்பு, டேப்ளாய்ட் இதழ்களின் முக்கியத்துவம், பெரிய எழுத்து பயன்பாடு, ஆக்ஸ்போர்டு காற்புள்ளி போன்ற பதிப்பு, அச்சு நடை தொடர்பாகக் கட்டுரைகள் எழுதினேன்.   


தி இந்து நாளிதழை 50+ வருடங்களாகவும், கார்டியன் இதழை 15+ வருடங்களாகவும் வாசிக்கிறேன். வெளிநாட்டு செய்திகளில் காணப்படுகின்ற நம் நாட்டு செய்திகளைக் கவனமாக வாசிப்பேன்.

கைப்பேசியிலும், மடிக்கணினியிலும் பல முன்னணி தமிழ், ஆங்கில நாளிதழ்களை வாசிக்கிறேன். குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவர் என்பனவற்றுக்கு அப்பாற்பட்டு செய்திகளை அணுகுகிறேன். இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோரின் சமூக இணையதள பக்கங்களைத் தொடர்கிறேன்.     

இதுவரை 2,000+ கட்டுரைகளையும், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட 10 நூல்களையும் எழுதியுள்ளேன். தாத்தா மூலமாக ஆரம்பமான வாசிப்புப்பழக்கமானது, வாசகர் கடிதத்தில் தொடங்கி தற்போது குடியரசு தலைவர், குடியரசுத் துணைத்தலவர் ஆகியோரிடமிருந்து பாராட்டுக்கடிதங்கள் வாங்கும் வரை என்னை முன்னேற்றியுள்ளது. என்னுடைய வாசிப்பும், மொழிபெயர்ப்பும், எழுத்துப்பணியும் தொடரும். வாசிப்பை நேசிப்போம்.

-------------------------------------------------------------------------------------------

நன்றி: பாயும் ஒளி 100ஆவது இதழ்
-------------------------------------------------------------------------------------------

29 June 2026

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம்: நினைவுகூர்வோம், நினைவு நாளில்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக 16.8.1982இல் பணியில் சேர்ந்து, உதவிப்பதிவாளராக 2017இல் பணி நிறைவு பெற்றேன்.   

நான் பணியில் சேர்ந்தபோது முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் முதல் துணைவேந்தராக இருந்தார். அவருடைய காலகட்டத்தில்  அங்கு பணியாற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாகும். அவருடைய நேரடி வாய்மொழி ஆணைப்படி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளைத்  தட்டச்சு செய்யும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுமார் 100+ பக்கங்களை  ஆங்கிலத்தில் ஸ்டென்சிலில் தட்டச்சு செய்து, 150 படிகள் செராக்ஸ் எடுத்து அப்பணியை நிறைவு செய்தேன். தட்டச்சு செய்யும்போது பல புதிய ஆங்கிலச்சொற்களையும், விதிகள் தொடர்பாக பல நுணுக்கங்களையும் அறியும் வாய்ப்பினைப் பெற்றேன். அப்போதிருந்த துணைப்பதிவாளரும், பதிவாளரும் இந்தப் பணிக்கு எனக்கு ஊக்கம் தந்தனர்.  இருக்கைப் பணிகளுடன் இதனை மேற்கொண்டேன். 

இந்த பின்புலத்தோடு நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய கடிதங்களில் சிலவற்றை. அன்னாரின் நினைவு நாளில் (29.6.2009)  நினைவுகூர்வோம்.

1.1.83இல் அவர் எங்களுக்கு அனுப்பிய கடிதம் அவருடைய திட்டங்களை முன்வைத்ததோடு, எங்களுக்குப் பணியாற்ற ஊக்கம் தந்தது.

“இன்று ஆங்கில ஆண்டுப்பிறப்பு. பல்கலைக்கழகம் பயன்பெறுமாறு உழைத்தற்கு, எல்லா நலன்களையும் தங்களுக்குத் தருமாறு இறைவனை வேண்டுகிறேன். போன ஆண்டில் பல்கலைக்கழக அமைப்பில் பல முனைகளில் முன்னேற்றமும் சில முனைகளில் சடைவும் நாம் கண்டோம். பல நிறுவனங்களின் ஒத்துழைப்பும், பல குழுக்களின் அனுமதியும், தனி மனிதர்கள் பலரின் மனம் நிறைந்த உழைப்பும் இன்றியமையாத தேவையாக இருந்ததால் சில துறைகளிற் போதிய முன்னேற்றத்தை நாம் பெறவில்லை. இந்தக் குறையை இந்த ஆண்டு சரி செய்ய நாம் எல்லா முயற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

என் கால வரம்பில் 492 பணி நாட்கள்தான் எஞ்சியுள்ளன. இதுவரை 362 பணிநாட்கள் அதாவது 45% கழிந்துள்ளன. மீதமுள்ள நாட்களில் பெரும்பகுதியும் 1983-இல் அடங்கியிருப்பதால் கட்டிடங்கள் முழு உருவம் பெற்று, பல்கலைக்கழகத் துறைகள் அனைத்தும் முழுமையாக இயங்கி, பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி பெற்று, உலகத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வு மையங்களுள் ஒன்றாக தமிழ்ப் பல்கலைக்கழகம் திகழுமாறு செய்யவேண்டும். பல்கலைக்கழக ஆய்வு நூற்கள் பல வெளிவந்து பாராட்டப்பட வேண்டும். அருங்காட்சியகமும், நூலகமும் அறிஞர்களுக்குப் பயன் பெறுமாறு அமைதல் வேண்டும்.

போர்க்காலத்தில், படையினரிடையே எவ்வளவு ஒத்துழைப்புத் தேவையோ அதைப்போல் பல்கலைக்கழக வாழ்வுப் போராட்டத்தில் உங்கள் முழு ஒத்துழைப்பும் வெற்றிக்குத் தேவை. இந்த ஆண்டில் அதனைப் பரிசாகத் தருமாறு வேண்டி உங்களை வாழ்த்துகிறேன். இங்ஙனம், அன்பன், வ.அய்.சுப்பிரமணியம்”.

19.6.84இல், முதல் மூன்றாண்டு பணிக்கால நிறைவு நாளில் “பெறுநர் எல்லா உடனுழைப்போர்களும்” என்று முகவரியிட்டு அனுப்பிய கடிதம் பல்கலைக்கழகத்தோடு அவர் இருந்த ஆத்மார்த்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.



“ஏறத்தாழ மூன்றாண்டுக் காலமாக, எல்லோரும் இணைந்து, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உழைத்து உதவியதற்கு முதன் முதலாக நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். தமிழ்மொழி உணர்வால், தஞ்சையிலும், பிற இடங்களிலும் பொறுப்பேற்ற ஒவ்வொருவரும் தமது கடமையைச் செம்மையாகச் செய்துள்ளனர் என்ற நினைவு எனக்குப் பெருமை தருகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்திற் செய்தன சிலவாயினும் செய்யவிரும்புவன மிகப் பலவாகும். ஒரு நிறுவனத்திலுழைப்பவர்களுக்குக் குறைகள், மனத்தாங்கல்கள் இல்லாமல் இருக்காது. அவற்றைப் பெரிதாக்கிப் பகைமையை வளர்த்து, செயற்திறமையை குறைப்பது ஒன்று. அவற்றை மறந்து, இணைந்து, ஆக்க வேலைகளுக்குத் துணை நின்று உழைப்பது மற்றொன்று. இரு வழிகளில், இதுவரை இரண்டாவது வழியைப் பின்பற்றிப் பணியாற்றிய நீங்களனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டுகிறேன்..... என்றேனும் தனி மனித வாழ்வு அல்லது நிறுவனம் என்ற இரண்டில் ஒன்றை அழிக்கும் நிலை ஏற்பட்டால், நம்மையே நாம் அழித்து நிறுவனத்தைக் காத்த பெரு நிலையை உலகறியச் செய்ய வேண்டும். இதை மறந்துவிடாதீர்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. மணமான பெண்களை அவளுடைய கணவன் வீட்டிற்கு அனுப்பும் தாய், தந்தையரைப் போல் இன்று நான் நிற்கின்றேன். பிறந்தகத்தின் பெருமை பேசாது, புக்ககத்தின் பெருமை பேசி, கணவனையும், அவனைச் சார்ந்தோரையும் பேணி, அறவுணர்வுடன் வாழுமாறு கூறி வழியனுப்பும் பெற்றோர் போன்று, புதிய துணைவேந்தரின் நிர்வாகத்திற்கு எல்லா வகையான ஒத்துழைப்பையும் தந்து என்னைப் பெருமைப்படுத்துக. தொண்டால் தமிழ்ப் பல்கலைக்கழகம் வளர்ந்துள்ளது என்ற இன்சொல்லைக் கேட்டு மகிழுமாறு எனக்குதவுக. தமிழுலகம் உங்களை நன்றியுடன் பாராட்டும். தெய்வம் துணை நிற்கும்”.

பொதுவாக நாங்கள் அலுவலகக்குறிப்பினை அனுப்பும்போது அலுவலர்களின் பெயர்களை வரிசையாகத் தட்டச்சிட்டுவிட்டு, மாண்புமிகு துணைவேந்தரவர்கள் என்று தட்டச்சிடுவோம். இரண்டாவது பணிக்காலத்தில் அவர் எங்களுக்கு அனுப்பிய 1.10.1984 நாளிட்ட சுற்றறிக்கையில்  “துணைவேந்தர் பதவிக்கு முன் ‘மாண்புமிகு’ என்றும் ஆங்கிலத்தில் ‘ஆணரபிள்’ என்றும் அச்சடிப்பதையும், தட்டச்சு செய்வதையும், மேடையில் கூறுவதையும் அருள்கூர்ந்து நிறுத்திவிடுமாறு, கலைமகள் விழா தொடங்குவதற்குமுன் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.” பின்னர் நாங்கள் அலுவலகக்குறிப்பு தட்டச்சிடும்போது துணைவேந்தரவர்கள் என்றே குறிப்பிட ஆரம்பித்தோம்.  


இரண்டாவது முறை பொறுப்பேற்று சில மாதங்களுக்குப் பின் அனைத்துப்பணியாளர்களுக்கும் அனுப்பிய 24.12.84 நாளிட்ட சுற்றறிக்கையில் நிறுவனத்திற்காகத் தன்னை அழித்துக்கொள்ளல் என்ற உணர்வினை வெளிப்படுத்தியிருந்தார். 

“22.9.84 பிற்பகல் முதல் எனது இரண்டாந் தவணைப் பொறுப்பேற்றவுடன் உங்களனைவருக்கும் எழுத நினைத்திருந்தேன். விடுப்பிற் சென்ற நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் ’ஏன் இவ்வாறு நடந்தது, நான் செய்த தவறு யாது? ’ என்ற மனப்போராட்டம் தணியச் சில வாரம் தேவைப்பட்டன. ’என்னாய்வு வாழ்வு பாழாய்விட்டதே என்ற குற்ற உணர்வும்’ ஓரளவு தொல்லை தந்தது. என்னைப் பற்றியே நான் அறிந்துகொள்ளாத நிலையால் ஏற்பட்ட தளர்ச்சி நிலை. இனிவரும் முப்பத்து மூன்று மாதங்களிற் சில குறிக்கோளை உங்கள் ஒத்துழைப்புடன் நான் நிறைவேற்றியாக வேண்டும்…….

…….சென்ற தவணை என் கொள்கைகளிலும், செயற்பாட்டிலும் இணங்காத எவரும், என் பதவி விலகல் கடிதத்தை, நாளிட்டு, வேந்தருக்கு அனுப்பும் உரிமையுண்டெனத் தெரிவித்து நேர்முக உதவியாளரின் அறையில் வைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் பயன்படுத்தவில்லையே என்ற வருத்தம் உண்டு. இந்தத் தவணையும் அவ்வாறு பதவி விலகல் கடிதம் அஞ்சல் தலையுடன் வைக்கப்பட்டுள்ளது. கொள்கையில் மாறுபடுவோர் யார் வேண்டுமானாலும், நாளிட்டு அதனை அஞ்சற் பெட்டியில் இடலாம். இம்முறை மற்றொரு உரிமையை உங்களிடம் நான் பெற விரும்புகிறேன். ஆய்வாளர், அலுவலகப்பணியாளர் முதலியவர்களின் பணி எனக்கு மன நிறைவு தராது இருப்பின் நானே அந்த பதவி விலகல் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் இடும் உரிமையையும் நான் மேற்கொள்ள விரும்புகிறேன்………..

’நிறுவனத்தைக் காத்தற்குத் தன்னையே அழித்துக்கொண்டான்’ என்ற புதிய அறநெறியை இன்று முதல் நாம் தோற்றுவிப்போம்”.

பொறுப்பை ஒப்படைத்த 31.7.1986இல், அவர் ஆய்வாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் அனுப்பிய வாழ்த்துக்கடிதம் வாசிப்போரை மனம் நெகிழவைக்கும்படி இருந்தது.



“இன்று (31.7.86) மாலை ஐந்து மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து ஆய்விற்காக நான் திருவனந்தபுரம் செல்கிறேன். பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல் பிறர்கையில்  மகிழ்ச்சியுடன் விட்டுச்செல்லும் உணர்வு ஏற்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களனைவருடன் உழைத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில் ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது. இணைந்த செயல்பாடும் உறவுமுறையும், தமிழுக்காகச் செய்கின்றோம் என்ற மன நிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இவற்றிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்…..

……தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியை தமிழர் அனைவரும், ஏன், பிற மாநிலத்தவர்கூட  உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல்மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில் அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும். தளர்ச்சியிருப்பின் என் முகம் வாடும்.

அன்றுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதித்தால் நான் காலமானபின் என்னுடற் சாம்பலின் இம்மியளவைத் தஞ்சை தென் வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த மரத்தடியிலும், காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர். புதைத்திடுக. நீங்களனைவரும் வளமுற வாழ்த்துகிறேன்.”


அன்னாருடைய அஸ்தியின் ஒரு பகுதி அவர் விருப்பப்படி துணைவேந்தர் இல்ல வளாகத்தின் அருகேயுள்ள மரத்தடியில் புதைக்கப்பட்டு அதில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

அவருடைய கடிதம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டட முகப்பில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்ப் பல்கலைக்கழகம் தழைத்தோங்க வித்திட்ட அம்மாமனிதரை இந்நாளில் நினைவுகூர்வோம். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 24.5.2021இல் நடைபெற்ற இரண்டாவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, அவர் முதுமுனைவர் பட்டம் பெற்ற அதே நாளில் அதே மேடையில் முனைவர் பட்டம் பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். 


பட்டமளிப்பு விழாவிற்கு முன்பாக வந்த நாளிதழ் செய்தி 
(நன்றி :The Hindu,  22.5.2001)


பட்டமளிப்பு விழாவிற்கு அடுத்த வந்த நாளிதழ் செய்தி 
(நன்றி :The Hindu , 25.5.2001)


தமிழ்ப் பல்கலைக்கழக முகப்பு, புகைப்படங்கள் நன்றி: 
Tamil University-A Profile, 1983 
தமிழ்ப் பல்கலைக்கழக வரலாறு (1981-2006), 2006 

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------