13 May 2026

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.


மிகவும் நிதானமான பேச்சு, நல்ல நிர்வாகம், ஆற்றொழுக்கான உரையாற்றல், பணியாளர்களுடன் கரிசனமாகப் பழகும் மாண்பு என்ற பல நிலைகளிலும் அவருடைய குணங்கள் போற்றத்தக்கதாகும்.

என்னுடைய "படியாக்கம்" (தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை, 2004) நூலுக்கு அணிந்துரை கேட்பதற்காகச் சென்றபோது என் எழுத்துப்பணியை வியந்து பாராட்டி ஊக்கம் தந்தவர். அவர் தந்த வாழ்த்துரை என் எழுத்துப்பணிக்குத் தூண்டுகோலாக அமைந்தது.

அவருடைய மேடைப்பேச்சுகளை ஆர்வமாகக் கேட்டதுண்டு. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை எந்தப் பொருண்மையானாலும் செறிவாக, அனாயசமாக, தொய்வின்றி உரையாற்றுவார். தலைப்பையொட்டியே அவர் பேசும் விதம் சிறப்பாக இருக்கும். அவர் பேசும்போது நிகழ்விடத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுவார். அந்த அளவிற்கு இயற்கையாக அந்த உரை இருக்கும்.

விக்கிப்பீடியாவில் பதிவதற்காக அவரைப் புகைப்படம் எடுப்பதற்காகப் பெருங்குடி இல்லத்திற்கு 13.3.2022 அன்று சென்றபோது என்னுடைய தொடர் ஆய்வினையும் எழுத்துகளையும் பாராட்டினார். என் ஆய்வினைப் பற்றி விசாரித்தபோது "சோழ நாட்டில் பௌத்தம்" என்ற என்னுடைய நூலின் அச்சுப்பணி நடைபெற்றுவருவதைக் கூறினேன். அப்போது அவர் அதனை விரைந்து நிறைவேற்றும்படியும் அறிவுரை கூறினார்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(பதிவிலுள்ள புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டதாகும். )

01 May 2026

பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்: பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர் 1999

குடமுழுக்கு மலரில் வெளியான இரண்டாவது கட்டுரை. இதற்கு முன்னர் 1997இல் தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா மலரில் என் கட்டுரை வெளியானது. 








-------------------------------------------------------------------------------------------
நன்றி: பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
பதிப்பாசிரியர்: குடவாயில் பாலசுப்பிரமணியன்
-------------------------------------------------------------------------------------------

09 April 2026

யாவரும் கேளீர்: வாழ்க, வளர்க..

 அன்பு நண்பர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அனுப்பிவைத்த யாவரும் கேளீர் (ஏப்ரல் 2026) முதல் இதழ் கிடைக்கப்பெற்றேன். ஆசிரியர் உரையுடன் தொடங்கும் இவ்விதழ் பெண்ணியம் அறிதலும் புரிதலும், அமெரிக்க எழுத்தாளர் சக்தியின் தமிழ்மொழிப் பற்றும் படைப்புலகமும், ஒரு நிமிடக்கதை உணர்த்தும் பெண்ணியச் சிந்தனை, சாவித்திரிபாய் புலேயின் பெண் கல்வியை மையமிட்ட அறிவாயுத நுண்ணரசியல், பெண்ணிய நோக்கில் ஒப்பாரிப்பாடல்கள், ஆன்மீக வழி நடந்த ஆளுமை அன்னை தமிழ்ச்செல்வி தங்கம்மா, சில விலங்குகளின் பெயர்களில் சாதி பாரபட்சம், பொன்னாடை, அவர்கள் பெண் வீராங்கனைகளை, சங்க ஔவையார் பாடல்களில் வாழ்வியல் வெளிப்பாடுகள், எழுத்தாளர் கேத்தரீன் ஆரோக்கியசாமி, உடன்கட்டை ஏறுதல்-ஒழிக்கப்பட்ட வரலாறு, கழிகல மகளிர் கைம்பெண் குறித்த சிறுகதைகள் என்ற தலைப்புகளைக் கொண்ட ஆய்வுக்கட்டுரை, கதை, எழுத்தாளர் அறிமுகம் உள்ளிட்ட சிறப்பான பதிவுகளைக் கொண்டு பெண்ணிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

திருச்சியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற அங்குசம் சமூக நல அறக்கட்டளை சார்பில் பொதுக்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைளை உள்ளடக்கிய ஓர் இடைநிலை இதழாகக் கொண்டு வரும் முயற்சி இது என்று இதழாசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறார். அதன் வெளிப்பாடானது சிறந்த முறையில் இதழில் பிரதிபலிப்பதைப் படிக்கும்போது உணரமுடிந்தது.


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப்பணியாளராக அறிமுகமாகி பல்வேறு நிலைகளில் பரிணமித்து திருச்சி, தூய வளனார் கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணி நிறைவு பெற்ற நெடுஞ்செழியனின் முயற்சி மிகவும் போற்றத்தக்கதாகும். அவர் எடுக்கின்ற முன்னெடுப்பு ஒவ்வொன்றும் சிறப்பாக அமைவதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். கவனிக்கத்தக்க அவருடைய குணங்களில் ஒன்று வளரும் இளைஞர்களையும், ஆய்வாளர்களையும் அறிமுகப்படுத்தி முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதாகும். அவருடைய மன உறுதியும், தொடர் முயற்சியும் பல ஆக்கபூர்வமான படைப்புகளை சமூகத்திற்குத் தந்துள்ளது. மேற்கொள்ளும் பணியைச் செவ்வனே செய்யவேண்டும் என்ற அவருடைய கொள்கையானது இவ்விதழில் தெளிவாக வெளிப்படுகிறது. இதற்கு முன்னரே அவர் பல நூல்கள் எழுதியுள்ளார். அங்குசம் வார இதழும், அங்குசத்தின் யுடியூப் சேனல்களும் அவருடைய ஆத்மார்த்தமான பணிமீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.

ஒரு இதழ் நடத்துவது என்பது மிகச் சிரமமான காரியமாகும். படைப்புகளைப் பெறுதல், பரிசீலித்தல், தேர்ந்தெடுத்தல், இதழில் உரிய பக்க முறைப்படி அமைத்தல் என்ற வகையில் மிகக்கவனம் செலுத்தியுள்ளதைக் காணமுடிகிறது. கண்ணைக்கவரும் வகையில் மேலட்டை, அழகான வடிவமைப்பு, பக்க அமைப்பு, கண்களுக்கு அயற்சி தராத எழுத்துரு, தேவையான இடங்களில் படங்கள் என்றவாறு திட்டமிட்டு செயல்பட்டுள்ள குழுவினரின் முயற்சி சிறப்பானதாகும்.   இவ்வாறான ஒரு பெரும் பணியைச் சிரமேற்கொண்டு அனைவரும் வியக்கும் வகையில் இதழைக் கொண்டுவந்துள்ள அவருக்கும், அவருக்குத் துணைநிற்கும் நண்பர்களுக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.


தொடர்புக்கு: யாவரும் கேளீர், அங்குசம் சமூக நல அறக்கட்டளை, 16, முதல் மாடி, வில்லியம்ஸ் சாலை, திருச்சிராப்பள்ளி 620 001, மின்னஞ்சல் angusamorg@gmail.com, அலைபேசி 94432 14142, 94888 42045

07 April 2026

உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள் விழா: ஏடகம்

தஞ்சாவூர், ஏடகம் சுவடியியல் மையத்தில் 19.2.2026இல் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற அரசர் மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கா.பாண்டியன் அவர்கள் தலைமை ஏற்றார். முனைவர் மணி.மாறன் அனைவரையும் வரவேற்க, பொருளாளர் திருமதி கோ. ஜெயலெட்சுமி நன்றி கூறினார். விழாவில் சுவடியியல் மாணவர்களும், அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நிகழ்வில் சிறப்புரையாற்றும் வாய்ப்பினைத் தந்த ஏடக நிறுவனர் முனைவர் மணி.மாறன் அவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.









தொடர்புடைய பதிவு:


-------------------------------------------------------------------------------------------
நன்றி: ஏடகம், ராஜ்நியூஸ்
-------------------------------------------------------------------------------------------

24 March 2026

சித்தர் கருவூரார் அருளிய பூஜா விதி: பதிப்பாசிரியர் வீ.ஜெயபால்

தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலின் கருவூரார் சன்னதியில், அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக சித்தர் பெருவிழாவின் 33ஆம் ஆண்டு நிகழ்வின் ஓர் அங்கமாக அருள்மிகு சித்தர் கருவூரார் அருளிய பூஜா விதி (பதிப்பாசிரியர் சித்தாந்த வித்யாநிதி முனைவர் வீ.ஜெயபால்) என்னும் நூல் 19.4.2008இல் வெளியிடப்பட்டது.  

இந்நூலில் தஞ்சாவூர், பெரிய கோயிலில் அருள்பாலித்து வரும் கருவூர் சித்தரின் வரலாறும், அவருடைய அற்புதங்களும், அவர் அருளிய பூஜாவிதி என்னும் நூலுக்கான உரையும் இடம்பெற்றுள்ளதோடு கருவூர் சித்தரின் யோக அனுபவங்களும் தெளிவாக்கப்பட்டுள்ளதாகப் பதிப்பாசிரியர் கூறுகிறார்.  

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றினைப் பெற்றேன். தலைமையுரையாற்றியதும், விழா தொடர்பான செய்தி நாளிதழில் வெளியானதும் நெஞ்சில் நிற்கும் அனுபவம்.

இதற்கு முன்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகத் தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் 18.9.1998இல் சிவப்பிரகாசம் குறித்து உரையாற்றியுள்ளேன். 







-------------------------------------------------------------------------------------------
நன்றி: அகத்தியர் சன்மார்க்க சங்கம், தஞ்சாவூர், 
தினமலர் 
-------------------------------------------------------------------------------------------

16 March 2026

வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் நினைவு தமிழ்ப்பரிதி விருது: ஏடகம்

தஞ்சாவூரில் ஏடகம் சார்பாக அரித்துவாரமங்கலம் பெரும்புலவர், புரவலர் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் நினைவு தமிழ்ப்பரிதி விருது வழங்கும் விழா 5.1.2025இல் நடைபெற்றது.  

இவ்விழாவில் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், முனைவர் கி.தங்கவேல், கவிஞர் ப.திருநாவுக்கரசு ஆகியோர் இவ்விருதினைப் பெற்றனர். இவ்விழாவில் வாழ்த்துரை வழங்குவோரில் ஒருவராக விருதாளர்களை வாழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றேன். 













-------------------------------------------------------------------------------------------
நன்றி: ஏடகம், நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------

13 March 2026

கங்கை கொண்ட சோழீச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள கங்கை கொண்ட சோழீச்சரம் என்னும் நூல் கங்கை கொண்ட சோழீச்சரம்-திருக்கோயிலமைப்பும் வரலாறும், கட்டடக் கலைச் சிறப்புகள், எழில்மிகு சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், கருவூர்த் தேவரும் கங்கைகொண்ட சோழீச்சரத்துப் (திருவிசைப்பா) பதிகமும், கல்வெட்டுச் சாசனங்கள் என்னும் ஆறு தலைப்புகளையும், பின்னிணைப்புகளாக கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடிமாதத்து ஆதிரை நாளே, கல்வெட்டில் கங்கை கொண்ட சோழப்பேராறு என்னும் இரு பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது.


திருக்கோபுரம் தொடங்கி கோயிலின் ஸ்ரீவிமானம், மகாமண்டபம் ஆகியவை உள்ளிட்ட கட்டடக்கூறுகளின் உரிய தரை வரைபட அமைப்புகள், 19ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்ட இரண்டாம் இராஜகோபுரத்தின் படம் உள்ளிட்ட படங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. துவாரபாலகர் தொடங்கி கோயிலில் காணப்படும் சிற்பங்கள், பிற நாடுகளிலிருந்து கொணரப்பட்ட சிற்பங்கள் ஆகியவற்றின் கலைப்பாணி ரசனையுடன் விளக்கப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறை உள்ளிட்ட இலக்கியங்களிலிருந்து எடுத்தாளப்படுகின்ற மேற்கோள்கள் விவாதிக்கப்படுகின்ற பொருண்மைக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்துள்ளன. உரிய இடங்களில் அக்காலத்திய சோழர்காலப் பெருங்கோயில்களுடன் ஒப்பு நோக்கி நூலாசிரியர் நுணுக்கமாகத் தந்துள்ள விதம் அக்கோயில்களை நம் மனக்கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. அவருடைய நூலின் துணையுடன் கங்கை கொண்ட சோழீச்சரம் செல்வோம்.



“…இக்கோயிலிலுள்ள இப்பெருவேந்தனின் மூன்றாம் மகனான வீரராஜேந்திரனின் கல்வெட்டுச் சாசனம் அப்பேரரசனின் தந்தை இராஜேந்திர சோழன் தன் 23ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1035இல்) கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் இத்திருக்கோயிலுக்கென கொடுத்த நிவந்தங்களைப் பட்டியலிட்டுக் குறிப்பிடுகிறது. அதனால் இத்திருக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலந்தொட்டுத் திகழ்கின்றது என்பது உறுதியாகின்றது…” (பக்கம் 9)

“…கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் இப்பெருங்கோயில் மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழனால்தான் எடுக்கப்பெற்றது என்பதை 1987ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் எசாலம் என்னும் ஊரிலுள்ள இராமநாதேசுவர சுவாமி கோயில் வளாகத்துள் புதையுண்டிருந்து வெளிப்பட்ட இராஜேந்திர சோழனின் 25ஆம் ஆண்டு (கி.பி.1037) செப்பேட்டுத் தொகுதியில் குறிக்கப்பெற்றுள்ள செய்தி இதனை உறுதி செய்கின்றது….” (ப.9)

“தஞ்சாவூர் இராஜராஜேச்சரம், தாராசுரம் ஐராவதீஸ்வரம், திருபுவனம் கம்பகரேஸ்வரம் போன்ற சோழர்காலப் பெருங்கோயில்களின் கட்டுமான அமைப்பை நோக்கும்போது எல்லா ஆலயங்களிலும் கிழக்கு நோக்கிய பிரதான வாயிலில் இரண்டு இராஜகோபுரங்கள் இருப்பதைக் காணலாம்….இக்கோயில்களுடன் கங்கை கொண்ட சோழீஸ்வரமாம் இவ்வாலயத்தை ஒப்பிட்டு நோக்கும்போது பண்டு திருச்சுற்று மாளிகையுடன் இணைந்த திருமதிலில் ஒரு இராஜகோபுரமும், அதற்கு வெளியே அதனினும் உயர்ந்ததோர் கோபுரம் ஒன்றும் இருந்ததற்கான தடங்களைக் காணமுடிகின்றது.” (ப.13)

“திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் வளாகத்தின் உள்ளேயே தென்கயிலாயம் என்ற கற்றளியும், வடகயிலாயம் என்ற கற்றளியும் இருப்பதுபோன்றே கங்கை கொண்ட சோழீச்சரத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.” (ப.15)

“புறத்தோற்றத்தில் ஒன்பது அடுக்குடைய கட்டுமானமுடையதாக ஸ்ரீவிமானம் காணப்பெற்றாலும் உள்கட்டுமான அமைப்பு அவ்வாறு அமைந்தது அன்று.” (ப.18)

“கங்கை கொண்ட சோழீச்சரத்து சிற்பப் படைப்புகளுக்கும் தஞ்சை இராஜராஜேச்சரத்துப் படைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தஞ்சைப் பெருங்கோயிலை வடிவமைக்கும்போது அப்பெரும்பணியில் மாமன்னன் இராஜராஜனோடு இணைந்து பணியாற்றியவன் இராஜேந்திர சோழனாவான்.” (ப.35)

“எப்படி இருப்பினும் மேல்பாடி கல்வெட்டு இராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆடிமாதத்து ஆதிரையே என்று கூறுவதோடு, அங்கு அவ்விழா எவ்வாறு கொண்டாடப் பெற்றது என்பதை விவரிக்கும் ஓர் அரிய ஆவணம் என்பதில் ஐயமில்லை. ” (ப.194)

“கங்கை கொண்ட சோழீஸ்வரர் திருக்கோயிலுக்கு உரியனவாகத் தற்போது 23 செப்புத்திருமேனிகள் உள்ளன….. இவற்றில் ஆறு திருமேனிகள் மட்டும் இராஜேந்திர சோழன் காலத்தில் வடிக்கப்பெற்றவையாகும்.” (ப.117)

“சோழ நாட்டில் காவிரியிலிருந்து சோழப் பெருமன்னர்களால் தோற்றுவிக்கப்பெற்ற ஆறுகளுக்கு முடிகொண்ட சோழப் பேராறு, விக்கிரம சோழப் பேராறு, வீரசோழப் பேராறு, கீர்த்திமான் ஆறு, சூடாமணியாறு போன்ற பெயர்களைச் சூட்டினர் என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. இன்றளவும் அப்பெயர்கள் மக்கள் வழக்கில் இருப்பது போற்றுதற்குரியதாகும்.” (ப.196)

“பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி, திருச்சி மாவட்டத்திற்கும், அரியலூர் மாவட்டத்திற்கும் பாசனம் தந்து கொள்ளிடப் பேராற்றின் உபநதியாகத் திகழும் கங்கைகொண்ட சோழப்பேராறு எனும் உப்பாற்றினை மீண்டும் பழைய பெயராலேயே அரசு தன் ஆவணங்களில் பதிவு செய்து அழைக்குமானால் நம் பழைய வரலாற்றினை மீண்டும் மக்கள் அறிந்திட உதவியாய் இருக்கும்.” (ப.197)

பெருமுயற்சி மேற்கொண்டு நூலாசிரியர் ஆவணப்படுத்தியுள்ள அரிய புகைப்படங்கள் நூலுக்கு அழகுசேர்ப்பதோடு, நம் முன்னோர்களின் கலைப்படைப்புகளை ரசித்து உணரும் வகையில் அமைந்துள்ளன. பல குறிப்பிடத்தக்க நூல்களின் மூலமாக ஆய்வாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிமுகமானவர் நூலாசிரியர். அவருடைய ஒவ்வொரு நூலும் பல முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளும் அளவிற்குத் தரவுகளுடன் உள்ளவையாகும். தொடர்ந்து, இந்நூலின் மூலமாக வரலாற்றுக்குப் பெரும் பங்களித்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவருடைய எழுத்துப்பணி தொடர எல்லாம்வல்ல இறையருளை வேண்டுகிறேன்.

தலைப்பு : கங்கை கொண்ட சோழீச்சரம்
ஆசிரியர் : குடவாயில் பாலசுப்ரமணியன்
பதிப்பகம் : அன்னம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, கைபேசி 7598306030
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, 2026
விலை : ரூ.400
-----------------------------------------------------------
-----------------------------------------------------------


நூலாசிரியரிடம் நூலைப் பெற்ற இனிய தருணம் (22.2.2026)

05 March 2026

சைவ சித்தாந்த நன்னெறி: ச.சௌரிராசன்

சித்தாந்தச் செம்மணி, சிவத் தமிழ்ச் செல்வர் ச.சௌரிராஜன் எழுதியுள்ள சைவ சித்தாந்த நன்னெறி என்னும் நூல் அருளாசியுரை, வாழ்த்துரை, அணிந்துரை, முன்னுரை ஆகியவற்றுடன் சைவ சித்தாந்தம், அடிப்படைச் செய்திகள், குரு மரபு, சைவ சித்தாந்த சாத்திரங்கள், பதி உண்மை-இயல்பு, பசு உண்மை-இயல்பு, ஆணவ மல உண்மை-இயல்பு, கன்ம மல உண்மை-இயல்பு, மாயா மல உண்மை-இயல்பு, இறைவன்-சிவசத்து, குருநாதர் ஞானத்தை உணர்த்தும் முறை, சீவன் முத்தரின் வாழ்வும் சாதனைகளும், பாச நீக்கம், சிவப்பேறு, அணைந்தோர் தன்மை என்னும் 15 தலைப்புகளையும் கொண்டு அமைந்துள்ளது.


திருவாவடுதுறை ஆதீனம் நடத்துகின்ற சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பின் ஆசிரியராக நூலாசிரியர் சைவ அன்பர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். இந்தப் பயிற்சி வகுப்பில் மாணவராக நானும் இருந்தது எனக்குக் கிடைத்தப் பெரும் பேறாகும். சைவ சித்தாந்தக் கருத்துகளை சரியான உதாரணங்களோடு மிகவும் நிதானமாக மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் வகுப்பில் அவர் கூறுவதைக் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. தொடர்ந்து சைவப்பணியாற்றிவருகின்ற அவர், தன்னுடைய பல்லாண்டு அனுபவத்தை அனைவருக்கும் சென்று சேரும் வகையில் நூலாக்கித் தந்துள்ளவிதம் போற்றத்தக்கதாகும். ஒரு பறவைப்பார்வையாக நூலைக் காண்போம்.

“….பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருள்களும் என்றும் உள்ள அனாதி நித்தியப் பொருள்கள் என்று சைவ சித்தாந்தம் ஆய்ந்து கூறுகிறது. இந்தக் கருத்தைத் திருமூலதேவ நாயனாரும் ‘பதியினைப் போல் பசு பாசம் அனாதி’ என்று அருளிச் செய்துள்ளார்.” (பக்கம்.9)

“தண்ணீரின் சிறப்பு இயல்பு குளிர்ச்சி. தண்ணீர் நெருப்போடு தொடர்பு கொள்வதன் காரணமாகச் சுடு நீர் ஆகிறது. குளிர்ந்த நீர் நெருப்போடு தொடர்பு கொண்டு சுடுநீர் ஆகிய நிலை நீரின் பொது இயல்பு. அந்தத் தன்மை நீண்ட நேரம் நிலைப்பது இல்லை. சிறிது நேரம் கழித்துத் தனது இயற்கை இயல்பான குளிர்ச்சி நிலையை அடைந்துவிடுகிறது. ஆகவே நீருக்குக் குளிர்ச்சி, சிறப்பு இயல்பாகவும், சூடு பொது இயல்பாகவும் அமைகிறது. இதுவே சைவ சித்தாந்தம் சிறப்பு, பொது இயல்புகளுக்குக் கூறும் இலக்கணம் ஆகும்.” (ப.17)

“காட்டில் மானைப் பிடிக்கச் செல்பவர்கள், தங்கள் வீட்டில் பழக்கிய மானைக் காட்டிற்குத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். அந்த மானைக் காட்டி, காட்டில் உள்ள மான்களைப் பிடிப்பார்கள். இவ்வாறு மானைக் காட்டி மானைப் பிடிப்பார் போல, உயிர்களை உய்விக்கச் சிவபெருமானே மானுடச் சட்டை தாங்கிக் குருநாதனாக வருகிறான்.” (ப.20)

“மானிடப் பிறவியின் பயன் சிவ வழிபாடே ஆகும். வழிபாட்டிற்காக அமைந்துள்ள மகேசுவரத் திருமேனிகளின் மேன்மையை அறிந்து வழிபடுவது அளவில்லாத நன்மைகளைத் தரும்.” (ப.104)

“உடம்பைத் தனக்கு இடமாகக் கொண்டு, உடம்பிற்கு வேறாய், இன்ப துன்பங்களை அறிந்து அனுபவித்து வருகின்ற அறிவுப்பொருளே உயிர் அல்லது ஆன்மா என்று சைவ சித்தாந்தம் தெளிவாகக் கூறுகிறது.” (ப.151)

“சித்தாந்த சைவம் பேச்சுக்குரிய தத்துவங்களைக் கொண்டது அல்ல; வாழ்வுக்குரிய நெறிகளைப் போதித்து, வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவது ஆகும். எனவேதான் வழிபாட்டிற்கு அடிப்படையாக ஒழுக்க நெறி நிற்றலைச் சைவம் வலியுறுத்துகிறது.” (ப.236)

“சைவ சாதனங்களில் நாம ஜபம் மிகச் சுலபமானது. அம்மையப்பரின் திருப்பெயரைச் சொல்லக் குழந்தைகளாகிய நம் எல்லோருக்கும் உரிமை உண்டு. அம்மையப்பரின் திருப்பெயரைச் சொல்வது குழந்தைகளாகிய நமக்குக் கடமையாகிறது.….சிவாயநம சிவாயநம என்று அவனது திருப்பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் ‘இவன் என்னைப் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டே இருக்கிறான். நாம் தரிசனம் தரும் வரை அழைப்பதை நிறுத்தமாட்டான். இவனுக்குத் தரிசனம் தந்து அருள் புரிய வேண்டும்’ என்று நினைத்துச் சிவபெருமான் நேரே வந்து தரிசனம் தருவார்…” (ப.458)

“…திருநீறு அணிந்து கொள்பவர்களை வினைகள் அணுகாது; உடல் சுத்தமாகும்; நெற்றியிலே சிவபெருமான் சக்தியோடு இருந்தருள்வார்; முகத்திலே திருமகள் (லட்சுமி) தாண்டவம் செய்வாள். மனத்திலே சஞ்சலம் வராது; நித்தியமான பேரானந்தப் பெருவாழ்வு கிடைக்கும். மேலும், திருநீறை அணிபவரைச் சிவசக்தி வடிவம் என்றே கூறலாம்…..” (ப.500)

சித்தாந்தத்தைக் கற்று அதன்படி நடந்தால் முத்திப்பேறு மட்டுமல்லாமல் இவ்வுலக வாழ்வும் கூட அமைதி நிறைந்ததாக அமையும் என்று முன்னுரையில் கூறும் நூலாசிரியர், சைவ சித்தாந்தக் கருத்துகள் அனைவருக்கும் சென்றுசேரவேண்டும் என்ற நன்னோக்கில் மிக எளிமையாக நூலைப் படைத்துள்ளார். அவருடைய எழுத்துப்பணியும், சைவப்பணியும் தொடர்ந்து சிறக்க எல்லாம்வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.

தலைப்பு : சைவ சித்தாந்த நன்னெறி
ஆசிரியர் : சித்தாந்தச் செம்மணி, சிவத் தமிழ்ச் செல்வர் ச.சௌரிராஜன்
பதிப்பகம் : மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை, 13/37, மேல சாலைக்காரத் தெரு, அம்மாப்பேட்டை 614 401, தஞ்சாவூர் மாவட்டம், அலைபேசி 94865-76561/99440-13133
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, 2017
விலை : ரூ.350
--------------------------------------------------------------------

இடமிருந்து: நூலாசிரியர் ச.சௌரிராஜன், பா.ஜம்புலிங்கம், பா.சக்திவேல்
(அம்மாபேட்டை, அருணாசலேஸ்வரர் கோயில், 6.6.2022)
--------------------------------------------------------------------

03 March 2026

மெய்கண்ட சித்தாந்த சாத்திரம் (சொற்பொழிவுகள்): சிவப்பிரகாசம்

தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் சித்தாந்த சாத்திரங்களான 14 நூல்களைப் பற்றி சைவ நெறியாளர்கள் 14 மாதக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றினர். அதில் 18.9.1998இல் சிவப்பிரகாசம் குறித்து உரையாற்றும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். பின்னர், சொற்பொழிவுகள் நூல் வடிவம் பெற்றது. அதில் என்னுடைய உரையின் அச்சு வடிவம் வெளியானது. 

உமாபதி சிவாச்சாரியார் அருளிய  சிவப்பிரகாசம்







முதன் முதலாக தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் இவ்வாறான ஒரு உரையாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும், அச்சொற்பொழிவுகள் இடம் பெற்ற தொகுப்பில் என் கட்டுரை இடம் பெற்றதும் எனக்குக் கிடைத்தப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.     



-------------------------------------------------------------------------------------------
நன்றி: சைவ சித்தாந்தப் பெருமன்றம், தஞ்சாவூர் 
-------------------------------------------------------------------------------------------