14 February 2026

கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள்: மா.செல்வகுமார்




கும்பகோணம்-சுவாமிமலை மற்றும் அருகேயுள்ள கோயில்கள்

கும்பகோணத்தில் பெரும்பாலான தெருக்கள் கோயிலை மையமாகக் கொண்டு உள்ளதால், அங்குள்ளோர் முகவரியைக் கூறும்போதே மொட்டை கோபுரம் அருகில், கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி, கும்பேஸ்வரர் மேல வீதி என்ற வகையில் அந்தந்த கோயிலின் பெயரோடு திருமஞ்சனவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி, கீழ வீதி என்ற பின்னொட்டோடு கூறுவது வழக்கம்.

அந்த அளவிற்குக் கோயில்கள் கும்பகோணத்திலுள்ளோர் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றன. எந்தத் திசையில் நின்றாலும், இருந்தாலும் ஏதாவது ஒரு கோயிலின் கோபுரத்தினைக் காணமுடியும். தேவாரத்திலும், திவ்யப்பிரபந்தத்திலும் குடமூக்கு என்றும், குடந்தை என்றும் அழைக்கப்பட்ட இவ்வூரிலும், அருகிலுள்ள ஊர்களிலும் பாடல் பெற்ற கோயில்கள், மங்களாசாசனம் பெற்ற கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்பெறுகின்ற மகாமகம் புகழ்பெற்றதாகும். இங்கு வசிப்போர் அவ்விழாவினைத் தம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகக் கருதுவர். வாழ்வின் நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தி, முந்தைய மகாமகத்தில் வீடு கட்டினோம், கடந்த மகாமகத்தில் திருமணம் நடைபெற்றது, இந்த மகாமகத்தின்போது மூத்த மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான், மகளுக்குக் குழந்தை பிறந்தது என்றெல்லாம் பெருமையோடு கூறிக்கொள்வர்.

இத்தகு சிறப்புகளைக் கொண்ட கும்பகோணம், மகாமகம், அருகிலுள்ள கோயில்கள் ஆகியவற்றைப் பற்றி பல நூல்கள் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்துள்ளன. அவ்வகையில், மா. செல்வகுமார் எழுதியுள்ள கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள் என்னும் நூல் பொதுமக்களுக்கும், ஊரைச் சுற்றிப் பார்க்க வருகின்ற பக்தர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ள நூலாகும்.

இந்நூல் கும்பகோணம்-அமைவிடம், கும்பகோணமும் மகாமகப் புராண வரலாறும், மகாமகம்-நீராடலும் பயன்களும், மகாமகக் குளக்கரைக் கோயில்கள், அமிர்தம் பரவிய தலங்கள், கும்பம் சிதைந்தபோது தோன்றிய தலங்கள் ஆகிய தலைப்புகளில் தொடங்கி, சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில், ராமஸ்வாமி கோயில்கள், இப்பகுதியில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க சில கோயில்கள் உள்ளிட்ட தலைப்புகளைக் கொண்டுள்ளது. பின்னிணைப்புகளாக சைவ, வைணவ நவக்கிரகத்தலங்கள், பிற முக்கியத் தலங்கள், கும்பகோணம் சுவாமிமலையின் சிறப்புகள் ஆகியவை அமைந்துள்ளன.

அமிர்தம் பரவிய தலங்கள் என்ற தலைப்பில் பஞ்சகுரோசத்தலம் எனப்படுகின்ற திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கொரநாட்டுக்கருப்பூர் ஆகிய கோயில்களின் அமைவிடமும், சிறப்பும் விவாதிக்கப்பட்டுள்ளன. கும்பம் சிதைந்தபோது தோன்றிய தலங்களான ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அமிர்தகலநாதர் ஆகிய கோயில்களின் தல வரலாறு, இறைவன், இறைவி, திருவிழாக்கள் போன்ற பல கூறுகள் ஆராயப்பெறுகின்றன.

தொடர்ந்து அருகில் அமைந்துள்ள திருவெள்ளியங்குடி, சுவாமிமலை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், இன்னம்பூர், ஏரகரம், திருப்புள்ளபூதங்குடி, திருஆதனூர், திருக்கருகாவூர், திருப்புறம்பியம், திருவைகாவூர் ஆகிய தலங்களின் சிறப்புகள் பல கோணங்களில் காணப்படுகின்றன.

ஒவ்வொரு தலைப்புகளிலும் விவாதிக்கப்படுகின்ற செய்திகளும், நிகழ்வுகளும் அந்தந்தத் தலத்திற்கு வாசகர்களை அழைத்துச்செல்வதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளவற்றில் சிலவற்றைக் காண்போம்.

கும்பகோணம் வந்து வழிபட்டவர்க்கும், வர முடியாத நிலையில் நினைத்தவர்க்கும், ஒரு முறை கும்பகோணம் என்று வாயால் சொன்னவர்க்கும் பாவங்கள் நீங்கி வீட்டுலகம் வாய்க்கும். (பக்கம் 7)

உமையம்மையார் சிவபெருமானிடம் உலக உயிர்கள் வினையிலிருந்து நீங்கி மோட்ச உலகம் சேர்வதற்குரிய தலம் எது என்று கேட்டபோது, சிவபெருமான், இத்தலத்தின் பெருமையை எவராலும் உள்ளது உள்ளபடி உரைத்தல் என்பது இயலாது...உன் மனத்துள்ளும் அடியவர் உள்ளத்துள்ளும் வேத இசையிலும் நாம் விளங்குவது போல இக்குடந்தை நகரில் வீற்றிருக்கிறோம் என்கிறார். (ப.9)

ஒரே நீர்த்துறையில் பல ஆலயங்களைச் சேர்ந்த மூர்த்திகள் ஒரு பொழுதில் வந்து தரிசனம் கொடுத்தல் மிக அரிய நிகழ்வாகும். பல புண்ணிய நதிகளில் நீராடிய பயன்களை மகாமக நீராடல் நமக்குக் கிடைக்கச் செய்கிறது. (ப.18)

ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும்..காசியிலுள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணம் தீர்த்தமான மகாமகக்குளத்தில் நீராடினால் விலகும். கும்பகோணத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால்தான் அகலும்...(ப.24)

கும்பகோணத்திற்கு வரும் பக்தர்களுக்கு மிகச்சிறந்த கையேடாக அமைந்துள்ள இந்த நூல் தலத்தின் பெருமைகளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்கிறது. இவ்வாறான நூலைப் படைத்த நூலாசிரியர் இன்னும் தொடர்ந்து அருகிலுள்ள பிற தலங்களைப் பற்றி எழுதி இறைவன் அருள் பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தலைப்பு: கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள்
ஆசிரியர்: மா.செல்வகுமார் (அலைபேசி +91 99448 86468)
பதிப்பகம்: மௌவல் பதிப்பகம், மடவிளாகம் தெரு, வலங்கைமான் 612 804,திருவாரூர் மாவட்டம், அலைபேசி +91 97877 09687, +91 94888 40898
பதிப்பாண்டு: அக்டோபர் 2025
விலை: ரூ.130




-------------------------------------------------------------------------------------------
நூலில் வெளியான என்னுடைய அணிந்துரை
-------------------------------------------------------------------------------------------

29 January 2026

தஞ்சைப் பெரிய கோயிலில் திரிபுராந்தகர்: தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர் 1997









-------------------------------------------------------------------------------------------
நன்றி: தஞ்சை இராஜராஜேச்சரம் 
திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர்,  9.6.1997
-------------------------------------------------------------------------------------------

23 January 2026

காந்தியத் தடம்: பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம்

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதியுள்ள காந்தியத்தடம் என்னும் நூல் காந்தியும் அம்பேத்கரும், தீவிர இந்திய தேசியவாதிகளின் பாசறை (லண்டன் இந்தியா விடுதி), காந்தியும் லண்டன் இந்தியா விடுதியும், காந்தியும் பகத்சிங்கும், அரசியல் நிர்ணய சபை வரலாறு, காந்தியும் நேதாஜியும், காந்தி தலைமையேற்ற பெல்காம் காங்கிரஸ் 1924, காந்தியும் வ.உ.சி.யும், குருவாயூர் ஆலய நுழைவு சத்தியாக்கிரகம் 1931-32, காந்தியின் மதம் ஆன்மிகம், காந்தியத் தடம்: தென்னாப்பிரிக்கப் பயண அனுபவங்கள், தமிழ்நாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சி 1942, “மகாத்மா காந்தியைக் காப்பாற்றத் தவறினேன்”-பேராசிரியர் ஜெக்தீஷ் சந்திர ஜெயின் குறிப்புகளைப் பற்றி ஓர் அலசல், காந்தியும் பெரியாரும் என்னும் 14 தலைப்புகளையும், துணைநூற்பட்டியலையும் கொண்டு அமைந்துள்ளது. இவை சத்திய ஒளி மகாத்மா நூலிலும், சர்வோதயம் மலர்கிறது மாத இதழிலும் வெளிவந்த கட்டுரைகளாகும்.


காந்தி எக்காலத்திற்கும் உரியவர், காந்தியம் என்பதானது எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதை நூலாசிரியர் பல நிகழ்வுகளுடன் நிறுவியுள்ள விதம் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. காந்தியிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டோமோ என்று ஐயப்படுகின்ற காலகட்டத்தில் அவரை நினைவுகூர்வதானது அடுத்தடுத்த தலைமுறைக்கும், வரலாற்றுக்கும் முக்கியத் தேவையாக அமைகிறது. சிரமேற்கொண்ட ஒரு நற்பணியை நூலாசிரியர் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் மிகவும் எளிய நடையில் சான்றுகளோடு நிறுவியுள்ளதோடு, பல ஐயங்களைத் தெளிவுபடுத்தியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். காந்தியத் தடத்தில் சிறிது தூரம் நாமும் பயணிப்போம்.



“காந்தியும் அம்பேத்கரும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துகொண்டிருந்ததைப் போன்று நாமும் அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம் மனங்களில் புகழ் மணக்க வாழ்ந்து வரும் இருவரின்மேல் புழுதிவாரித் தூற்றாமல் இருப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.” (ப.39)

“இந்தியாவுக்கு வெளியே அமைந்த மிகவும் ஆபத்தான நிறுவனம் என்று இந்தியா விடுதியைப் பற்றி இங்கிலாந்து பத்திரிக்கைகள் ஏன் எழுத வேண்டும்?....இலண்டன் காவல் துறையால் ஏன் இந்தியா விடுதி தேசத் துரோக மையம் என்று கருதப்பட வேண்டும்?... இவ்விடுதியில் இருந்தோர் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்டதால், இது இவ்வாறு அழைக்கப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம்.” (ப.43)

“பகத்சிங்கின் செயல்கள் காந்தியின் அறநெறிப்பட்ட அரசியலுக்கு எதிரானது. அதனை காந்தி ஏற்காவிட்டாலும் பகத்சிங்கின் தியாகத்தை நாட்டுப்பற்று மிக்கதாகவே காந்தி கருதினார். எனினும் நாட்டுப்பற்றிற்காக தங்கள் இன்னுயிரை எவரும் இழப்பதை காந்தி ஒருபோதும் விரும்பவில்லை என்பதை அவருடைய செயல்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.” (ப.83)

“இந்திய அரசியல் நிர்ணய சபை வரலாறு நூறாண்டு கடந்தது. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் (1909) தொடங்கி, அமைச்சரவை தூதுக்குழு (1946) வரை பல்வேறு கோரிக்கைகள், தீர்மானங்கள், போராட்டங்கள் என்று பல முறை திலகர், காந்தி, நேரு, பெசண்ட் ஆகியோர் அரசியல் நிர்ணய சபையை அமைக்க வேண்டி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.… ” (ப.101)

“இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும், அந்தச் சுதந்திரத்தைக் காலதாமதமானாலும் அகிம்சை முறையில்தான் பெறவேண்டும் என்று காந்திஜி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அதற்கு மாறாக இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும், அதுவும் உடனடியாக வேண்டும், அதற்கு எந்த வழிமுறையும் ஏற்றதுதான் என்று சுபாஷ் கருதினார். சுதந்திரத்தைப் பெற சாத்வீக முறையை மட்டும் நம்பியிருக்கக்கூடாது என்று அவர் கருதினார்.” (ப.114)

“காங்கிரஸின் ஆன்மாவாகவும் வழிகாட்டியாகவும் கருதப்பட்ட காந்தி பெல்காம் காங்கிரசுக்குத் தலைமையேற்றது காங்கிரசின் வரலாற்றுப் பக்கங்களில் சிறப்பாக இடம்பிடித்தது.” (ப.126)

“தமது கொள்கைகளை முற்றிலும் ஏற்க வ.உ.சி. மறுத்திருந்தாலும் அவர்மீது காந்தியடிகள் அன்பு செலுத்திவந்தார். வ.உ.சி.யின் களங்கமற்ற உள்ளத்தை, தன்னலமற்ற தேசபக்தியை அடிகளார் அறிந்ததே இதற்குக் காரணமாகும். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே தூத்துக்குடியிலிருந்து அவரிடம் கடிதத்தொடர்புகொண்டிருந்தார் வ.உ.சி.” (ப.134)

“கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் விடுக்கப்பட்ட பிரகடனம், குருவாயூர் ஆலயத்தில் மட்டுமல்ல, இதன் விளைவாக பின்னாளில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களிலும் தீண்டத்தகாதார் நுழைய வழிசெய்தது என்றே கருதலாம்...தீண்டாமையை எதிர்த்தும், தீண்டத்தகாதாரை ஆலயங்களில் நுழையச் செய்யவும் 1933-34 ஆண்டுகளில் காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.” (ப.154)

“காந்தி தன்னை ஒரு சனாதனி என்று கூறிக்கொண்டார். ஆனால் அவர் நம்பிய சனாதன இந்து மதத்தில் காலங்காலமாகப் புரையோடிப் போயிருந்த மூட நம்பிக்கைகளைக் களைய சனாதனிகளுடன் கடுமையாகப் போராடினார்.” (ப.158)

தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்து காந்தி நடத்திய போராட்டங்கள் தொடர்புடைய இடங்களுக்கும், தென்னாப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலா தொடர்புடைய இடங்களுக்கும் நூலாசிரியர் நேரில் சென்று, அந்த அனுபவத்தை உரிய புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளவிதம் வாசிப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்நூல் என்னை சுமார் 60 ஆண்டுகளுக்கு பின்னோக்கி, காந்தியைப் பற்றிய பல்வேறு நிகழ்வுகளை எங்களிடம் கதையாகக் கூறும் எங்கள் தாத்தா ரெத்தினசாமி அவர்களை நினைவுபடுத்தியது. கும்பகோணத்தில் எங்கள் வீட்டு முதன்மை வாயிலின் நிலைக்கு மேல் புன்னகைக்கும் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை எங்கள் தாத்தா வைத்திருந்தார். அவரைப் பின்பற்றி எங்கள் வீட்டில் காந்தியின் படத்தினை நானும் வீட்டு வாயிலின் நிலைக்கு மேல் வைத்துள்ளேன். காந்தியத்தடத்தின் ஒரு விதமான தாக்கமாகவே இதனை நான் உணர்கிறேன். இந்நூலைப் படிப்போர் மனதில் அத்தடத்தில் பயணிக்கிறோமா என்ற எண்ணம் இயல்பாக எழும். அவ்வாறு பயணிக்காதோர் இனி அவ்வழியைக் கடைபிடிக்க ஓர் உந்துகோலாக இந்நூல் உள்ளது என்று உறுதியாகக் கூறலாம். இது வளரும் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டி ஆவணமாகும். வரலாற்றுக்குப் பெரும் பங்களித்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவருக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தலைப்பு : காந்தியத் தடம்
ஆசிரியர் : பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் 
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 050, தொலைபேசி 044-26251968/26258410
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, ஜனவரி 2026
விலை : ரூ.255

-----------------------------------------------------------
----------------------------------------------------------- 

15 January 2026

ஞானசம்பந்தர் வாழ்வும் வாக்கும்: பன்னிரு திருமுறைச் சான்றோர் வாழ்வியல்

தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டத்தினர் தஞ்சைப்பெரிய கோயில் அம்பலவாணர் சன்னதியில் தஞ்சாவூர் நகரச் சைவ சமயப் பேரமைப்புகளை ஒருங்கிணைத்து திருமுறைச் சான்றோர் வாழ்வும் வாக்கும் என்னும் தொடர் சொற்பொழிவினை அறிஞர் பலரைக் கொண்டு 16.6.1997 முதல் 13.7.1997 வரை 28 நாட்கள் நடத்தினர். அவ்வுரைகள் தேவாரமணி சிவ.திருச்சிற்றம்பலம் அவர்களால் தொகுக்கப்பெற்று  பன்னிரு திருமுறைச் சான்றோர் வாழ்வியல் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், சிவகமலாம்பிகை இல்லம், 435, முல்லை, புதிய வீட்டு வசதிப்பிரிவு, தஞ்சாவூர் 613 005, 1997) என்னும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றது. 

அந்நூலின் வெளியீட்டுக்குழுவில் உறுப்பினராகச் செயல்படும் நல்வாய்ப்பினையும், அதில் பெண்ணாடம் திரு அ.வடிவேலனார் அவர்களின் பொழிவினைத் தொகுக்கும் வாய்ப்பினையும் பெற்றது என் நினைவில் நிற்கும் அனுபவங்களில் ஒன்று.  








-------------------------------------------------------------------------------------------
நன்றி: பன்னிரு திருமுறைச் சான்றோர் வாழ்வியல்
தொகுப்பாசிரியர்: தேவாரமணி சிவ.திருச்சிற்றம்பலம் 
-------------------------------------------------------------------------------------------