குடந்தை கே.என்.நாகராஜன் எழுதியுள்ள “சிவனைப் பற்றிய சிந்தனைகள்” என்னும் நூல், இறைவனைப் பற்றிய சிந்தனைகளைக் கவிதை வடிவில் கொண்டுள்ள நூலாகும். எண்ணுவதையும், எழுதுவதையும் பேரின்பமாக நினைக்கும் நூலாசிரியர் சிவனை எண்ணுவதும், எழுதுவதும் பேரின்பம் என்றும், அவனை நாடுவதும் பாடுவதும் புண்ணியமே என்றும், அதனால் கூடுவது ஆனந்த இன்பமே என்றும் கூறி தன் உள்ளக்கிடக்கையைப் பகிர்கிறார்.
சிவனைப் பற்றி மட்டுமன்றி, பார்வதி, முருகன், துர்க்கை, அம்மன் ஆகியோரைப் பற்றியும், குறிப்பிடத்தக்க பாடல் பெற்ற தலங்கள், பஞ்சபூதத்தலங்களில் உறையும் இறைவன், நால்வர், ஆகியோரின் பெருமைகளைப் பற்றியும் தான் உணர்ந்த வகையில் எழுதுகிறார். மனதில் பட்ட இறையுணர்வானது அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியுள்ள அவருடைய முயற்சி மிகவும் போற்றத்தக்கதாகும். உருப்பெறுகின்ற கவிதை வரிகள் மிகவும் ரசனையாகவும், புரிந்துகொள்ளும்படி எளிதாகவும் உள்ளது.
தமிழகத்தில் காணப்படுகின்ற முக்கியமான கோயில்களின் புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்துள்ளவிதம் நூலின் அழகினை மேம்படுத்துவதோடு அங்கு நாம் சென்றுவந்த உணர்வினைத் தருகிறது. அவருடைய சிந்தனைகளில் சிலவற்றைக் காண்போம்.
"விண்ணில் உறையும் சிவனை வேண்டி!
மண்ணில் வாழும் மனிதர் சொல்வதே!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" (ப.17)
"தினமும் உன்னை எண்ணும் மனதில்
திகழும் சிவனே! தில்லைக் கூத்தனே!
காமமும் கோபமும் கடந்து உன்னை
நெருங்கும் நெஞ்சைக் கொடுப்பாய் சிவனே!" (ப.24)
"தாயிடம் சென்று காலடி விழுந்தேன்! என்
நோயினைச் சொல்லி அவளிடம் அழுதேன்!
காய்ந்த நிலத்தில் பாய்ந்த நதியாய்
காத்திடுவாள்! என்னை துர்க்கை அம்மனே!" (ப.44)
"என்னைக் கவர்ந்த எழில் முருகனே!
அழகைக் கண்டால் கண்களில் இன்பம்!
உன்னைக் கண்டால் நெஞ்சிலே இன்பம்!
நெஞ்சினிலே இன்பம்! நினைவிலே இன்பம்!" (ப.50)
"நாளும் நாம் சொல்லும் ஓம் நமசிவாய!
மூளும் முன் வினைகளை முறியடிக்கும்! நம்மை
ஆளும் ஓம் நமசிவாய! நமக்குப்
பாலும் தேனுமாய் பரவசமாகும்!" (ப.64)
 |
| எங்கள் இல்ல நூலகத்தில் நூலாசிரியருடன் (நாள் 20.7.2026) |
இறைவனை வணங்குவதால் கிடைக்கின்ற பயன்களான மன நிம்மதி, வினையிலிருந்து விடுபாடு, பெற்ற பிறவிப்பயன், தீர்ந்திடும் பழிபாவம், நீங்கும் மனச்சுமை, அவதி இல்லா வாழ்வு உள்ளிட்ட பல சிறப்புக்கூறுகளை மிக அருமையான எடுத்துக்கூறியுள்ள நூலாசிரியரின் பெருமுயற்சி போற்றத்தக்கது. அடுத்து "சைவம் காட்டும் அற்புதங்கள்" என்னும் நூலினை எழுதிவருகிறார். அவருடைய எழுத்துப்பணி சிறக்க எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகிறேன்.
தலைப்பு: சிவனைப் பற்றிய சிந்தனைகள் (கவிதைகள்)
ஆசிரியர்: குடந்தை கே.என்.நாகராஜன்
பதிப்பகம்: அஞ்சலை வெளியீட்டகம், 4/54, கொத்தத் தெரு, மேல கபிஸ்தலம் 614 203, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், அலைபேசி 94868 83504 பதிப்பாண்டு: முதல் பதிப்பு, ஆகஸ்டு 2025
விலை: ரூ.120
நூலாசிரியரின் "சைவம் காட்டும் அற்புதங்கள்"
திரு குடந்தை கே.என்.நாகராஜன், "சைவம் காட்டும் அற்புதங்கள்" நூல் மூலமாக 63 நாயன்மார்களின் பெருமையை கவிதை வடிவில் எடுத்துக்கூறுகிறார்.
விநாயகர் வணக்கம், சுந்தரரின் திருத்தொண்டத்தொகை ஆகியவற்றின் தொடக்கத்துடன் உள்ள இந்த நூலில் நாயன்மார்களின் வரலாற்றை மிகவும் தெளிவாகத் தந்துள்ளார். எளிய நடை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான சுருக்கமான, அதே சமயம் செய்திகளைத் தருகின்ற வகையில் அமைந்துள்ள கவிதை வரிகள் மூலமாக நாயன்மார்களின் பிறப்பு தொடங்கி அவர்களின் சிவத்தொண்டினை நூலாசிரியர் எடுத்துக்கூறும் விதம் வாசிப்போரை அதில் முற்றிலுமாக லயித்துவிட வைக்குமளவு உள்ளது.
கவிதையைப் படிக்கும்போது அவர் எவ்வளவு சிரமப்பட்டு சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை உணரமுடிகிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அந்தந்த நாயன்மார்களின் கதையைப் பற்றி கவிதையை வடிக்கின்ற அதே சமயத்தில் அது தொடர்பான ஓவியங்களை ஆங்காங்கே அமைத்துள்ளவிதம் நூலுக்கு அழகு சேர்க்கிறது. அவை, வெளிப்படுத்தும் எண்ணங்களை வாசகரின் மனதில் மிகவும் விரைவாக சென்று சேர்க்கின்றன.
சைவத்திற்கான இவருடைய தொண்டு தொடர்வதை இந்நூல் புலப்படுத்துகிறது. ஈசன் திருவருளால் நூலாசிரியர் மென்மேலும் பல நூல்களைப் படைக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சைவத்திற்கான இவருடைய தொண்டு தொடர்வதை இந்நூல் புலப்படுத்துகிறது.
(சைவம் காட்டும் அற்புதங்கள்-கவிதைகள், குடந்தை கே.என்.நாகராஜன், அஞ்சலை வெளியீட்டகம், 4/54, கொத்தத் தெரு, மேல கபிஸ்தலம் 614 203, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், அலைபேசி 94868 83504, ஜூலை 2026, ரூ.150)
22.7.2026இல் மேம்படுத்தப்பட்டது.