09 June 2025

அறம் பயில்வோம் : கு.பாலசுப்ரமணியன்

கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழக இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கட்டுரைகளின் தொகுப்பாக அறம் பயில்வோம் என்ற நூலினை வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் கு.பாலசுப்ரமணியன்.  



அறம் வளர்த்த தலைவர்கள், கல்வி, அரசியல் சமுதாயப்பார்வை, சிறுகதைகள் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூல் அறத்தைக் கற்கவும், அதனைத் தொடரவும் ஓர் உந்துதலைத் தருகிறது. பெரும்பாலானவை அறம் என்ற பின்புலத்தில் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. நூலைப் படித்து முடிந்தபின் நம்முள் அறம் என்ற சிந்தனை துளிர்த்துப் பரவுவதை உணரமுடியும். நூலின் சில கட்டுரைகளைக் காண்போம்.


முதல் உட்தலைப்பின்கீழ் காந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி உள்ளிட்ட தலைவர்களின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன. காந்தியின் தாரக மந்திரம் கரோ பஹலே, கஹோ பீச்சே..உலகம் மாசுபடுவதற்கான சுற்றுச்சூழலில் விஷம் கலப்பதற்கான அனைத்துச் செயல்களையும் செய்துகொண்டே அதைப்பற்றிப் பேசுவது நகை முரண் இல்லையா? (ப.3) காந்தியைப் பற்றிய தவறான புரிதலைப் பரப்பும் அறிவுஜீவிகளிடமிருந்து காந்தியைக் காப்பாற்றுவது நமது கடமை (ப.7). மதச்சார்பின்மையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவராக நேருவை நம்பியதால் தன்னுடன் பல வகையில் முரண்பாடு கொண்ட நேருவை அரசியல் தன் அரசியல் வாரிசாக அறிவித்தார் காந்தி. (ப.12)


நேரு, தான் ஆட்சி செய்த 17 ஆண்டு காலத்தில் வட இந்தியாவைவிட தென் இந்தியாவிலேயே அதிக செல்வாக்கு பெற்றவராக விளங்கினார். (ப.21) நேருத என்றால் நமக்குத் தோன்று மதச்சார்பின்மைதான். (ப.26) சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட ஜனநாயக சோசலிசம் என்ற ஒரு புதிய தத்துவத்தை இந்தியாவின் முன் மட்டுமல்ல உலகின் முன் வைத்தார் நேரு. (ப.31) நேரு, காமராஜரை அவரது நேர்மைக்காகவும் எளிமைக்காகவும் மதித்தார். (ப.41)


உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே காமராஜரின் சிந்தனையாக இருந்தது. (ப.50) அனைத்துக் கல்வியும் இலவசம், அனைவருக்கும் இலவசம் இதுதான் காமராஜர் ஆட்சி. (ப.59) பச்சைத்தமிழன் ஆட்சி..தரமான இலவசக்கல்வி, மது கண்டறியாத மக்கள், அரசியல் தலையிடா காவல்துறை, ஓட்டுகளை எதிர்பார்க்கா திட்டங்கள், கரைபடியா கரம்கொண்ட அமைச்சர்கள்...(ப.66)


அறமே மெய்யின்பம்..அறனையே துணை எனக்கொள்வோம் எனக் கூற பாரதி தேவை. அவ்வாறே பாரதியின் முற்போக்குச் சிந்தனைகள் இக்காலத் தேவையாகும். (ப.72)


கல்வி, அரசியல் சமுதாயப்பார்வை என்ற உட்தலைப்பில் உள்ள கட்டுரைகள் தற்கால அரசியல், பொருளாதார, சமுதாயப்பார்வையைத் தருகின்றன. தனியார்மயமாக்கப்பட்ட கல்வியால் தாய்மொழிக்கல்வி புறக்கணிப்பு, சமூகப்பொறுப்பு பற்றிய அறிவுரை நிறுத்தப்படல், கல்விச்செலவுக்காகக் கடன்பட்ட வாழ்க்கை, மனப்பாடம் செய்யும் நிலை, மாணவர்களிடம் காட்டிய கண்டிப்பு குறைவு, மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாறல், வணிக நோக்கு. (ப.93) நீட் தேர்வு மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்ட விஷம் தோய்ந்த அஸ்திரமாகும். (ப.101).

அரசியல் என்பது தொண்டா? வணிகமா? பிழைப்பா? என்றில்லாமல் அரசியல் அறம் என மாற்றப்படவேண்டும். அது அறம் சார்ந்த அரசியலை விரும்புவோர் எண்ணிக்கை மிகும் காலத்தில்தான் மெய்ப்படும். அதற்குக் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை. (ப.116)


மதம், சாதி, இனம், தீண்டாமை, மது, மூடப் பழக்கவழக்கங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிலிருந்து விடுபடும் நாளே பாரதி கனவு கண்ட விடுதலை நாள். (ப.127) லஞ்சம் உள்ள இடத்தில் ஊழலும், ஊழல் உள்ள இடத்தில் லஞ்சமும் இணைந்தே வாசம் செய்யும். இவை நமது அறப்பண்புகளை அளித்து நம்மை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றுகின்றன. (140).


நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் ஊடாக அறம் என்பதானது பரிணமிப்பதைக் காணலாம்.


இவ்வகையில் இந்நூலில் அறம் என்ற கோட்பாடானது நூல் முழுவதும் விரவியிருப்பதைக் காணமுடிகிறது. அறம் சார்ந்த வாழ்க்கை பல்வகையில் நம்மை உயர்த்தும் என்பதையும், அறத்தை உணர்ந்து பின்பற்றும்போது கிடைக்கும் விளைவுகள் நல்ல பயனைத் தரும் என்பதையும் நூலாசிரியரின் எழுத்து உறுதி செய்கிறது. நன்னெறிகள் கொண்ட ஓர் அரிய நூலைப் படித்த எண்ணத்தைத் தருகின்ற இந்நூலை வாசித்து, அறநெறியைக் கடைபிடிக்க முயல்வோம். அற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்ற நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.


தலைப்பு : அறம் பயில்வோம்   

ஆசிரியர் : கு.பாலசுப்ரமணியன் 
அலைபேசி : 
 99527 93520
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, மே 2025
விலை : ரூ.250

50ஆவது ஆண்டு விழா (5, 7, 8 ஜூன் 2025)


முதல் நாள் நிகழ்வு






இரண்டாம் நாள் நிகழ்வு










மூன்றாம் நாள் நிகழ்வு





காந்தியடிகள் நற்பணிக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அங்கு நானும், என்னுடைய நண்பர்கள் சிலரும் இந்தி வகுப்பில் சேர்ந்தோம். நான் ராஷ்ட்ரபாஷா வரை தேர்ச்சி பெற்றேன். அப்போது நான் கற்ற இந்தியானது சென்னையில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தபோதும், கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின்போதும்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேற்கொண்டபோதும்,  வட இந்தியக்கோயில்களுக்குச் சென்றபோதும். எனக்குப் பெரிதும் உதவியது. அவ்வப்போது இன்றும் துணையாக நிற்கிறது. 
அறம் பயில்வோம் நூலினை வெளியிடும் வாய்ப்பினைத் தந்த காந்தியடிகள் நற்பணிக்கழகத்திற்கு நன்றி.

----------------------------------------------------------------------------

ஒளிப்படங்கள் நன்றி : திரு குடந்தை ஆடலரசன், திரு சு.செல்வம்

----------------------------------------------------------------------------