01 September 2020

அவள் விகடன் நேர்காணல்

எங்களின் திருமண நாளான இன்று (1 செப்டம்பர் 2020), அவள் விகடன் இதழில் மகளிர் தினத்தையொட்டி வெளியான என்னுடைய கருத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.


தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளேன். பணிக்காலம் தொடங்கி பணி ஓய்வு பெற்ற காலம் வரை பல சூழல்களை எதிர்கொண்டு வந்துள்ளேன். குடும்ப வாழ்க்கையில் திட்டமிடல் என்பதை முக்கியமானதாகக் கருதி வருகிறேன். அதற்குக் காரணம், என்னை வளர்த்த என் அத்தை கூறியதே. அவர், “இப்படித்தான் வாழ வேண்டும் என்று உள்ளது, எப்படியும் வாழலாம் என்றும் உள்ளது. இதில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்பவர்கள் சற்றே சிரமப்படுவார்கள்” என்பார். இருந்தாலும் அதை ஒரு அடிப்படையாக எடுத்துக்கொண்டேன். அப்போது என்னால் மிகவும் இயல்பாக இருக்க முடிந்தது. பள்ளி, கல்லூரி, படிப்பு என்ற ஒவ்வொரு நிலையிலும் அவர்களுடைய அந்த உத்தியானது என்னை நெறிப்படுத்தியது.

அடுத்தபடியாக என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுபவர் என்னுடைய மனைவி. வளரும்போது நம் பெற்றோர், அத்தை என்ற நிலையில் இருந்து வளர்த்தார்கள். திருமணத்திற்குப் பின் மனைவியின் பங்களிப்பு மிகவும் அதிகம் என்பதை அறிகிறேன். சற்று நான் அதிகமாகக் கோபப்படுவேன். அவ்வாறு கோபப்படும்போது, “அவ்வளவு கோபப்பட்டால் அனைத்தும் கெட்டுவிடும், கொஞ்சம் நிதானமாக இருக்கவேண்டும்” என்று கூறுவார். என்னுடைய மனைவி பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் குடும்பத்தில் காணப்படுகின்ற ஏற்ற இறக்கங்களை அறிவார். சற்று நேர்மாறாக, என் குடும்ப சூழல் வேறு என்ற நிலையில் வளர்ந்த காலகட்டத்தில் பல சிரமங்களை எதிர்கொண்டேன்.

படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் என் நண்பரின் சகோதரி சொல்லுவார், “நீ படித்துக் கொண்டிருக்கும்போதே உனக்கென்று பணம் சேர்த்துக்கொள்.  அப்பொழுதுதான் பின்னர் நீ வேலைக்குப் போகும்போது உதவியாக இருக்கும்.” எனக்கு அவர் சொன்ன வார்த்தைகள் எப்பொழுதும் என் மனதில் இருக்கும். இன்றுகூட நான் பணம் சிறிது சேகரித்து வைத்திருக்கிறேன், பணத்தில் சிறிது எச்சரிக்கையாக இருக்கிறேன் என்று சொன்னால் அதற்குக் காரணம் அவர் அப்போது கூறிய கருத்துதான்.

என் சகோதரியைப் போலவே, என் அத்தையைப் போலவே என் மனைவி எங்கெங்கெல்லாம் நான் கொஞ்சம்  தடம் மாறும்போது “இப்படிச் செய்வதைவிட அப்படிச் செய்யலாம்” என்று கூறுவார். அதனால் பிறருடைய கோபத்திற்கு ஆளாகாமலும், வாழ்க்கையில் சீராக நடத்தவும் முடிந்தது. கோபத்தை விடுத்து வாழ்க்கையில் இயல்பாக நடந்துகொள்வது அவசியம் என்பதை உணர்த்துவார். நாம் சாதிக்க வேண்டியது என்ன? என்பதைச் சிந்தித்து அதனை இலக்காக வைத்துப் பயணிக்க அவர் எனக்குத் துணையாக இருக்கிறார்.

விளையாடிக்கொண்டிருந்த காலத்தில், படித்துக்கொண்டிருந்த காலத்தில் நல்லாப் படி, சரியா நேரத்தை செலவு செய் என்று சொன்ன அக்கா, நம் மனதில் ஆரம்பத்தில் விதையை விதைத்த அத்தை, இப்பொழுது தொடர்ந்து இப்படி இருந்தால்தான் வாழ்க்கையை நல்லபடியாக நடத்தலாம் என்று சொல்கின்ற, வழிகாட்டலுக்கு முக்கியமாக உள்ள, என்னுடைய மனைவி. இவர்களெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.  

இவர்களெல்லாம் இல்லாவிட்டால் நான் இந்த அளவிற்கு நான் வந்திருக்கமுடியாது. 1000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஏழு நூல்கள், 30 சிலை கண்டுபிடிப்புகள் என்ற அளவில் தமிழகத்தில் முக்கியமான நிலைக்கு வந்ததற்குக் காரணம் என் சகோதரி, என் அத்தை, என் மனைவி. இவர்கள் கூறிய கருத்து மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் இளம் வயதில் எனக்கு ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த ஓர் ஆழமான பதிவுதான் என்னை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இந்த நிலையில்தான் மற்றவர்களுக்கு நாம் உதாரணமாக இருக்க முடிகிறது. அலுவலகம் செல்வதாக இருக்கட்டும், ஆய்வுப்பணியாக இருக்கட்டும், எழுத்துப்பணியாக இருக்கட்டும், என் மனைவி என் அத்தையையும், என் நண்பரின் சகோதரியையும் தாண்டி இன்னும் கைகொடுத்துக் கொண்டு வருகிறார். அதனால்தான் வாழ்க்கையில் வெற்றி என்ற தளத்தின் இலக்கை நோக்கி இன்னும் நான் செல்கிறேன். எங்களுடைய குடும்பம் சீரான நிலையில், பணக் கஷ்டமின்றி, சிக்கனத்தைக் கடைபிடித்து ஒரு முன்னுதாரணமாக சென்றுகொண்டிருக்கிறோம். இந்த நிலையில் என் மனைவியை நான் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.  என் அத்தையையும் நினைவுகூர்கிறேன். இந்த இனிய நாளில் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நன்றி.

என் மனைவி ஜ.பாக்கியவதி எழுதியுள்ள நூல் கோயில் உலா




17 comments:

  1. சிறப்பான கருத்துகள்...
    என்றன்றும் நலம் வாழ்க...

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    இன்று திருமணநாள் காணும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இன்று போல்,வரும் எல்லா வருடந்தோறும் திருமணநாள் கொண்டாடி சிறப்புடன் இவ்விதமே வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அன்பான உறவுகளின் வார்த்தைகளை மதித்து, அதை நினைவில் கொண்டு வாழ்க்கையில் நீங்கள் கண்ட உயர்ந்த பண்பான நிலை குறித்து அவள் விகடன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி சிறப்பாக உள்ளது. அதன் ஒவ்வொரு வரிகளிலும் உங்களுடைய நற்பண்புகள் விளக்கமாகத் தெரிகின்றன. மிக்க மகிழ்ச்சி.

    உங்களுக்கும், உங்களை வாழ்வில் பண்புள்ளவராக இருக்கச் செய்ய ஆலோசனைகள் வழங்கிய உங்கள் அன்பான குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். அதை எங்களுடன் பகிர்ந்திருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. மனம் நிறை மணத்திரு நாள் வாழ்த்துகள் முனைவர் ஐயா.
    தங்கள் மனைவிக்கும் வாழ்த்துகளையும் நல் ஆசிகளையும் சொல்லுங்கள்.
    இத்தனை உத்தமமான குடும்பம் வாய்ப்பதே ஒரு பாக்கியம் . தங்கள் மனையாளும்

    நற்குணங்கள் பூண்டவராக அமைந்திருப்பது
    இறையருளால் தான்.
    இன்னும் பல்லாண்டு தங்கள் நற்பணிகள் தொடர்ந்து
    நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட வாழ்வு பெற இறை அருள வேண்டும்.

    ReplyDelete
  4. ஒரு மனிதனின் (திருமணம் ஆனபிறகுதான் ஒருவன் மனிதனாகிறான்) வாழ்க்கைப் படகு சீராகச் செல்ல துடுப்பு போன்றவள்தான் மனைவி என்றால் மிகையல்ல. சிறப்பாக சுருக்கமாக அதனைப் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள். பாராட்டுகள்.

    பொதுவாக ஆண்களுக்குக் கோப குணம் அதிகம். அதனை ஆற்றுப்படுத்துவது மனைவி என்பவள்தாம்

    ReplyDelete
  5. முனைவர் அவர்களுக்கு இனிய திருமண நன்நாள் வாழ்த்துகள். தங்களது வெற்றிக்கு துணை நின்றவர்களை குறிப்பிட்டது அருமையான தன்னடக்கம்.

    மேலும் சிறப்புற்று வாழ வாழ்த்துகள்.

    //இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்பவர்கள் சற்றே சிரமப்படுவார்கள்//

    அற்புதமான உண்மை, எனது அனுபவத்திலும் உண்மை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் இல்லத்தரசிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
    என் மகனுக்கும் இன்று தான் திருமண நாள்!

    ReplyDelete
  7. இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
    சிக்கனமும் , சேமிப்பும் இல்வாழ்க்கையை நல்லபடியாக நடத்த உதவும் .
    உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களை இன்று பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
    அவள் விகடன் நேர்காணலுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மனம் நிறைந்த மணநாள் நல்வாழ்த்துகள் ஐயா. காணொளியும் காலையில் கண்டேன்.

    ReplyDelete
  10. வாசிக்க வாசிக்க மன நிறைவு. தம்பதியருக்கு மணநாள் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  11. வாழ்த்துகள்.
    //1000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஏழு நூல்கள், 30 சிலை கண்டுபிடிப்புகள்....// நல்ல உயரம் சென்றுள்ளீர்கள். மேலும் உயர வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. திருமண நாளில் நல்ல பேட்டி. ஒரு வண்டியின் இரு சக்கரங்கள் போல ஒருமித்த கருத்துகளின் உங்கள் பயணம் மேலும் மேன்மையுற வாழ்த்துகள்

    ReplyDelete
  13. 1000 கட்டுரைகள், ஏழு நூல்கள், 30 சிலை கண்டுபிடிப்புகள் என்பது விளையாட்டல்ல.தங்களின் சாதனை அளப்பரியது ஐயா.

    ReplyDelete
  14. அன்பின் அய்யா 
    அருமை...அருமை..திருமண நாள் வாழ்த்துக்கள்....இதே செப்டம்பர் மாதம் 11ம் தேதி எங்கள் திருமண நாள்...எஸ் வி வேணுகோபாலன் - எம் ராஜேஸ்வரி இணையராக உங்களுக்கு எங்கள் அன்பு வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறோம்...
    உங்களை முன்னிறுத்துவதை விடவும் உங்களது அனுபவிச் சுவடுகளின் அத்தனை சிறப்புக்கும் பங்களிப்பு உற்ற உறவினர், அன்பர்கள் முக்கியமாக உங்கள் வாழ்க்கை இணையர் என்பதை உள்ளார்ந்த முறையில் பதிவு செய்து கொண்டாடி இருக்கிறீர்கள்...
    அன்பின் பெருமிதம் பொங்க வாழ்த்துகள் !

    எஸ் வி வேணுகோபாலன் 
    94452 59691 

    ReplyDelete
  15. Sir
    Congratulations. Happy wedding anniversary to you and mam and please keep achieving.....
    Mohanraj N C

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் ஐயா - முதுவை ஹிதாயத் - துபாய்

    ReplyDelete
  17. Nice article, good information and write about more articles about it.
    Keep it up
    success tips in tamil

    ReplyDelete