03 October 2023

விக்கிப்பீடியா 20 ஆண்டு நிறைவு : தஞ்சைக்கூடல்

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி செப்டம்பர் மாதம் 20 ஆண்டுகள் நிறைவுற்று 21ஆம் ஆண்டு துவங்குவதைக் குறிக்கும் விழா தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 23-24.9.2023இல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை திரு மா.செல்வ சிவகுருநாதன் மற்றும் திரு பி. மாரியப்பன்  (சத்திரத்தான்) ஒருங்கிணைத்தனர்.


முதல் நாளன்று (23.09.2023) விக்கிப்பீடியாவின் சிஐஎஸ்-ஏ2கே அமைப்பும், தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறையும் இணைந்து நடத்திய கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்  வி. திருவள்ளுவன் துவக்கிவைத்து தலைமையுரை ஆற்றினார். பதிவாளர் (பொ) முனைவர் சி. தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். வளர்தமிழ் புலமுதன்மையர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகிக்க, நோக்கவுரையினை திருவாரூர் கருவூல கூடுதல் அலுவலர் திரு கி. மூர்த்தி நிகழ்த்தினார். அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் முனைவர் இரா. இந்து வரவேற்புரையாற்ற விக்கிபீடியா நிர்வாகி ஸ்ரீபாலசுப்ரமணியன் நன்றியுரையாற்றினார். 

துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றல். (உடன் இடமிருந்து : விக்கிப்பீடியர் பி.மாரியப்பன் (சத்திரத்தான்), விக்கிப்பீடியர் ஸ்ரீபாலசுப்ரமணியன், பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், வளர்தமிழ்புல முதன்மையர் இரா.குறிஞ்சிவேந்தன், விக்கிப்பீடியர் கி.மூர்த்தி, அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் இரா.இந்து)

மேம்பாட்டுப்பயிற்சியின்போது பதிவு செய்த கல்லூரி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியாவில் பயனராகப் பதிந்து, புதிய கட்டுரைகளை எழுதுவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் இதில் பங்கேற்று, புதிய பயனராகப் பதியும் முறையை அறிந்துகொண்டனர். அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட துறைகளைச்சார்ந்த கட்டுரைகளைப் புதிதாகத் தொகுத்தனர். முன்னரே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தினர். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவில் தொடங்குவதற்கான உத்திகளும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன. அதற்கு முன்பாக ஒவ்வொருவரும் தம் பெயரில் பயனர் கணக்கினைத் தொடங்கினர். அவ்வாறாகத் தொடங்கப்படும் கணக்கில் பதியப்படும்போது ஒவ்வொருவரின் பங்களிப்பும் அறியவரும் என்றும், அதனால் அந்த முறையிலேயே தொடர வேண்டும் என்றும் அவர்களுக்குப் பயிற்றுநர்கள் வலியுறுத்தினர். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது, மிகவும் அணுக்கமாக விக்கிப்பீடியாவை அணுகலாம், எழுதலாம் என்பதானது பயிற்சியாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொருவரிடமும் தாமும் அதிகமாகப் பங்களிக்க வேண்டும் என்ற ஓர் அவா இருந்ததைக் காணமுடிந்தது. விக்கிப்பீடியாவைப் பற்றியும், பிற திட்டங்களான விக்சனரி, விக்கிமூலம், விக்கி பொதுவகம், விக்கி நூல்களைப் பற்றியும் பயிற்றுனர்கள் சுருக்கமாக அறிமுகம் தந்தனர்.    

தமிழ் விக்கிப்பீடியா பயிற்றுநர்களாக பார்வதிஸ்ரீ, பா.ஜம்புலிங்கம், வெ.வசந்தலட்சுமி, தகவலுழவன், மா.செல்வகுருநாதன், ஞா.ஸ்ரீதர், பி.மாரியப்பன் ஆகியோர் செயல்பட்டனர். 

முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பதிவாளர் (பொ), அறிவியல் துறைத்தலைவர், விக்கிப்பீடியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்

முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட விக்கிப்பீடியா பயனர்கள்

விழாவின் இரண்டாம் நாளன்று (24.9.2023) நடைபெற்ற பயனர்கள் கூடல் நிகழ்வில் வரவேற்புரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். சுருக்கமாக தஞ்சாவூரைப் பற்றியும், விக்கிப்பீடியாவில் என்னுடைய அனுபவத்தையும் பேசினேன். இதே மேடையில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஏப்ரல் 2017இல் பணி நிறைவு பெற்றதையும் உரையில் குறிப்பிட்டேன்.
இரண்டாம் நாள் நிகழ்வில் வரவேற்புரை 

குறிப்பிடத்தக்க பணியாற்றிய பங்களிப்பாளர்கள் என்ற வகையில் மூன்று பிரிவில் ஆறு பயனர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.  அந்த வகையில் திரு மா.செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்தேன். இவ்வாறான விருதுகள் வளர்ந்து வரும் விக்கிப்பீடியர்களுக்கும்,  ஆர்வமாக செயலாற்றும் விக்கிப்பீடியர்களுக்கும் ஓர் உந்துதலாக இருப்பதோடு, பிற விக்கிப்பீடியர்கள் ஆர்வமாகப் பங்களிக்க உதவும் என்று நம்புகிறேன்.  
விருது பெற்ற பயனர்கள்:
செயல்நயம் மிக்கவர் 
பார்வதிஸ்ரீ, நீச்சல்காரன், செல்வசிவகுருநாதன்
5000+ கட்டுரை எழுதியவர்
ஸ்ரீபாலசுப்ரமணியன், சத்திரத்தான்
அறிமுகப்பயனர்
ஷா.பத்ருநிஷா  
மா.செல்வசிவகுருநாதனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்
(இடமிருந்து) சத்திரத்தான், கி.மூர்த்தி, மா.செல்வசிவகுருநாதன், பா.ஜம்புலிங்கம்

தொடர்ந்து சரஸ்வதி மஹால் நூலகப் பண்டிதர் முனைவர் மணி.மாறன் இலக்கியம், வரலாறு, தொல்லியல் நோக்கில் தஞ்சாவூரைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையை எடுத்துரைத்தார். 
மணி.மாறனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்
(இடமிருந்து) சத்திரத்தான், தேனி.மு.சுப்பிரமணி, மணி.மாறன், பா.ஜம்புலிங்கம்
தமிழகம் முழுவதிலுமிருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கின்ற தன்னார்வப் பயனர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டு கால வளர்ச்சி, கட்டுரைப் பதிவில் முன்னேற்றம், நெறிமுறைகள், தொழில்நுட்ப மேம்பாடு, அடுத்தகட்ட நகர்வு, கட்டுரைகளின் எண்ணிக்கைகளை அதிகமாக்க மேற்கொள்ளப்படவேண்டிய முயற்சி உள்ளிட்டவற்றைப் பற்றி விவாதித்தனர்.

அவர்களுடைய பேச்சு, இன்னும் எழுதவேண்டும் என்ற ஒரு உத்வேகத்தைத் தந்தது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் அவர்கள் மறுமொழி தந்தனர். அப்போது, ஒவ்வொரு நாளும் கற்கிறோம் என்பதைப் போல பல புதிய செய்திகளையும், உத்திகளையும்  கற்றேன். 
விக்கிப்பீடியாவில் பங்களிக்கின்ற முதுகலை மாணவர்களுடன் பா.ஜம்புலிங்கம்

மதியம்  நடைபெற்ற கலைப்பயணத்தில் தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம், கலைக்கூடம், தர்பால் ஹால் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். போதிய நேரமின்மையைப் பொருட்படுத்தாது அவர்கள் ஆர்வமாக அனைத்து இடங்களையும் பார்வையிட்டனர். 




நிகழ்வின் செய்திகள் ஊடகங்களில் இடம் பெற்றன. துணைவேந்தரவர்களின் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 28 பிப்ரவரி 2024இல் உலகத்தமிழ் விக்கிப்பீடியா மாநாடு என்ற அறிவிப்பானது விக்கிப்பீடியர்களையும், தமிழின் மேன்மைக்காகப் பாடுபடுவோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்த இலக்கு நோக்கி நகர இந்த அறிவிப்பானது ஓர் உந்துகோலாக அமைந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட விக்கிப்பீடியர்கள்
சுமார் 35 ஆண்டுகளாக நான் பணியாற்றிய, சுமார் 25 ஆண்டுகளாக ஆய்வினை மேற்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தற்போது முதுகலைப் பயிலும் மாணவர்களுடன் உரையாடியது ஒரு மறக்கமுடியாத அனுபவம். இம்மாணவர்கள் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகின்றனர் என்பது பாராட்டப்படவேண்டியதாகும்.  

தி இந்து (ஆங்கிலம்), 23 செப்டம்பர் 2023


தினமணி, 24 செப்டம்பர் 2023


இந்து தமிழ் திசை, 24 செப்டம்பர் 2023

தினமலர், 25 செப்டம்பர் 2023

தினத்தந்தி, 25 செப்டம்பர் 2023


விழா அழைப்பிதழ்
 
இந்து தமிழ் திசை, 12 அக்டோபர் 2023


தினமணி, 12 அக்டோபர் 2023, ப.8


இதற்கு முன்னர் மதுரை, ஆனைக்கட்டி போன்ற இடங்களில் விக்கிப்பீடியா தொடர்பான கூடல்களில் கலந்துகொண்டபோதிலும் இதில் கலந்துகொண்டது நினைவில் நிற்கும் அனுபவமாகும். நூல் ஆய்வுப்பணி காரணமாக முழுமையாக செயல்பட முடியாவிட்டாலும், தொடர்ந்து விக்கிப்பீடியாவில் நான் எழுதி வருகிறேன். மூத்த விக்கிப்பீடியர்களின் பேச்சுகளும், வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறையினரின் ஆர்வமும் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது. நம்மால் முடிந்த வரையில புதிய கட்டுரைகளை எழுதுவோம், அதிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்துவோம்.  இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களுடன் 1.57 லட்சம் கட்டுரைகளுடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய மொழி விக்கிப்பீடியாவான தமிழ் விக்கிப்பீடியாவினை அடுத்த இலக்கிற்கு முன்னோக்கி எடுத்துச்செல்ல ஒருமித்துப் பயணிப்போம். தமிழ் விக்கிப்பீடியாவினை முதன்மை இடத்திற்குக் கொணர நாம் அனைவரும் ஒன்று சேருவோம், வாருங்கள். 

விக்கிமேனியா, மதுரை, 14 ஆகஸ்டு 2022


விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை, ஆனைக்கட்டி, 26-28 ஜனவரி 2023


நன்றி : நாளிதழ்கள், படங்களைப் பகிர்ந்தவிக்கிப்பீடியர்கள், நண்பர்கள்

12 அக்டோபர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

7 comments:

  1. அருமையான பதிவு..

    மேலும் சிறப்பெய்த வேண்டும்..

    வாழ்க.. வாழ்க..

    ReplyDelete
  2. வாழ்த்துகள் ஐயா. தங்களின் பணி தொடரட்டும்

    ReplyDelete
  3. அருமையான நினைவுகளை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் ஐயா. நன்றியும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    நிகழ்வினை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அருமையான நினைவுகள் ஐயா தாங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ! அன்றைய தினம் புதிய அனுபவமாக அமைந்தது. மிக்க நன்றி

    ReplyDelete