20 February 2016

இறைவனுக்கு விலகிய நந்தி : தினமணி

19.2.2016 நாளிட்ட தினமணி நாளிதழில் இறைவனுக்கு விலகிய நந்தி என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையை வெளியிட்ட தினமணி இதழுக்கு மனமார்ந்த நன்றி. கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 



கும்பகோணத்தில் வருகிற 2016 பிப்ரவரி 13 முதல் 22 வரை மகாமகப்பெருவிழா நடைபெறவுள்ள இந்த இனிய வேளையில் ஜனவரி 29 அன்று குடமுழுக்கு கண்ட பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் செல்வோம்.

பட்டீஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரியின் தென்கரையில் உள்ள 53ஆவது தலமான பட்டீஸ்வரம் ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும். ஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துப்பந்தல் வழங்கிய தலமும் இதுவே. ஞானசம்பந்தர் முத்துப்பந்தல் பெற்ற நாள் சிறப்பான விழாவாக ஆனி மாதத்தில் முதல் நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்ததால் பட்டீஸ்வரம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
கிழக்கு கோபுரம்
ஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த நாளை நினைவுகூரும்போது இத்தலத்தின் பெருமையை அறியலாம். அன்பர்களுடன் இறைவனைப் பாடிக்கொண்டே வருகிறார் ஞானசம்பந்தர். பட்டீஸ்வரம் நோக்கி நிலத்தின்மீது அன்பர்களுடன் நடந்து வந்தருளும் ஞானசம்பந்தர், பாம்புகளாகிய மாலைகளைச் சூடிய இறைவன் அளித்த கருணைப் பெருக்கினைப் போற்றியபடியே வருகிறார். அவர் அவ்வாறு எழுந்தருள வரும்போதே இடப தேவர்களை விலக்கி இறைவன் நேர்காட்சி தருகிறார். ஆளுடையப்பிள்ளையார் வருகின்ற அழகான காட்சியைக் கண்டு ரசிப்பதற்காக இறைவன் நந்தியை விலகக் கூறுகிறார். இவ்வாறு இறைவன் கூறியதால் இங்குள்ள நந்திகள் சன்னதியிலிருந்து சற்றே விலகியிருப்பதைக் காணமுடியும். 
இரண்டாவது கிழக்கு கோபுரம் முன் விலகிய நிலையில் நந்தி
இதுபோலவே இறைவன் வேண்ட ஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய மற்றொரு தலம் திருப்பூந்துருத்தியாகும்.  திருச்சத்திமுற்றத்தின் தெற்கே அடுத்த வீதியிலும் திருமலைராயன் ஆற்றுக்கு வடகரையிலும் உள்ள இத்தலத்திற்கு அவர் எழுந்தருளும் அழகை இனிய தமிழால் வடிக்கிறார் சேக்கிழார்.  பட்டீஸ்வரம் வந்த அவர் திருவாயிலின் வெளியே வணங்குகிறான். பின் உள்ளே புகுந்து செல்கின்றார். வெற்றி பொருந்திய விடையினை உடைய இறைவனின் திருக்கோயிலை வலம் வருகிறார். வெள்ளைக்கொம்மையுடைய பன்றி வடிவமெடுத்த  திருமால் நிலத்தைக் கிளைத்தும் காணமுடியாத திருவடித்தாமரைகளைக் கண்டு திருமுன்பு தொழுகின்றார். நிலத்தில் விழுந்து எழுந்து சொல்மாலையால் இறைவனைத் துதிக்கின்றார். இவ்வாறெல்லாம் வணங்கித் தரிசித்தபின் இறைவனின் கருணைப்பெருக்கின் திறத்தினைப் போற்றுகின்றார். அப்போது அவருக்கு அளவிடற்கரிய ஆனந்தம் கிடைக்கிறது. மாறன்பாடிக்கருகே பிள்ளையார் நடந்து சென்றருளியபோது பாதத்தாமரை நொந்ததனைக் கண்ட இறைவன் முத்துச்சிவிகையருளினார். ஆனால் பட்டீஸ்வரத்திலோ  அடியாருடன் நடந்துவந்ததைக் கண்ட இறைவன் வெயிலின் வெப்பம் தணிக்க பந்தல் இட்டு அருளினார். இறைவனின் பெருங்கருணைக்கும் அவன் ஞானசம்பந்தப்பெருமான்மீது காட்டிய அன்பு அளப்பரியது.

தெற்கு கோபுரம்
இத்தகு பெருமையுடைய பட்டீஸ்வரர் கோயில் எனப்படும் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இரு கிழக்கு கோபுரங்கள், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் அமைந்துள்ளன. வடக்கு கோபுரம் வழியாக வந்தால் துர்க்கையம்மன் சன்னதியை காணமுடியும். கிழக்கு கோபுரம் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் விலகிய நிலையில் நந்தியைக் காணமுடியும். அடுத்து விநாயகர் சன்னதி, கொடி மரம் காணப்படுகிறது. இடப்புறம் கோயிலின் குளமான ஞானவாவி தீர்த்தம் காணப்படுகிறது. இக்கோயில் வளாகத்தில் வலப்புறம் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது.  
இரண்டாவது கிழக்கு கோபுரம்
தேனுபுரீஸ்வரர் சன்னதிக்குச் செல்வதற்கு இரண்டாவது கிழக்கு கோபுரத்தினைக் கடக்கவேண்டும். இக்கோபுரத்தின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். 

மண்டப முகப்பு
இக்கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அழகான மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தின் முகப்பில் இறைவனும் இறைவியும் நடுவில் இருக்க ஞானசம்பந்தர் அவர்களின் இடப்புறம் உள்ள சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இம்மண்டபத்திற்கு அருகில் உள்ள திருச்சுற்றில் பைரவருக்கான தனி சன்னதி உள்ளது. மண்டபத்தில் உள்ள நந்தியும் விலகிய நிலையில் உள்ளது. சன்னதியில் மதவாரணப்பிள்ளையார் காணப்படுகிறார். பட்டீஸ்வரர் என்றும் தேனுபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்ற மூலவர் கருவறையில் லிங்கத்திருமேனியாகக் காட்சியளிக்கிறார். நடராஜர் சன்னதி, பள்ளியறை இம்மண்டபத்தில் உள்ளன. பராசக்தி ஒற்றைக்காலில் நின்ற தவம் செய்யும் காட்சியுடன் கூடிய  தபசு அம்மனையும் இங்கு காணலாம. 

மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர், ஏரம்பரிஷி, சந்திரசேகரர், வில்வேந்திய சுப்பிரமணியர் குறிப்பிடத்தக்கவையாகும். சில தூண்களில் சிங்கம் யாளியின் உருவங்களுடன் காணப்படுகிறது. 

இறைவனை வணங்கிவிட்டு வெளியே வரும்போது இடப்புறம் அம்மனின் சன்னதி காணப்படுகிறது. அம்மன் ஞானாம்பிகை என்றும் பல்வளைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார். அம்மன் சன்னதிக்கு முன்பாக உள்ள மண்டபம் அழகான தூண்களைக் கொண்டுள்ளது. அத்தூண்களில் அழகான சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். திருச்சுற்றில் சில ஓவியங்கள் காணப்படுகின்றன.
அம்மன் சன்னதி முன் மண்டபம்

அம்மன் சன்னதி திருச்சுற்றில் ஓவியம்

அம்மன் சன்னதி திருச்சுற்றில் ஓவியம்
இறைவனையும் இறைவியையும் வணங்கிவிட்டு வெளியே வரும்போது இடப்புறம் துர்க்கையம்மன் சன்னதி காணப்படுகிறது. 

வடக்கு கோபுரம் (துர்க்கையம்மன் சன்னதி)
சன்னதியைச் சுற்றி மண்டபம் உள்ளது. சன்னதியில் துர்க்கையம்மன் நின்ற கோலத்தில் புன்னகை சிந்தும் முகத்தோடு உள்ளார். இவரை விஷ்ணு துர்க்கை என்றும் துர்க்காலட்சுமி என்றும் அழைக்கின்றனர். தன்னைச் சரணடையும் பக்தர்களுக்கு உடனே அருள் பாலிக்க காலை எடுத்து வைத்துப் புறப்படுகின்ற தோற்றத்தில் துர்க்கை நிற்கிறார். காக்கும் கரம் (அபய முத்திரை),  வழிகாட்டும் கரம் (சங்கு முத்திரை) , எதிரிகளை அழிக்கும் கரம் (சக்ர முத்திரை), வில் அம்பு போல சரியான திசையில் முயற்சி செய்யும் கரங்கள் (தனுர், பாண முத்திரைகள்), வாள் கேடயமாக விளங்கும் கரங்கள் (கட்க, கேட முத்திரைகள்), கிளியிருக்கும் கரம் (சுகர் முத்திரை) என்ற நிலைகளில் எட்டு கரங்களைக் கொண்டுள்ளார். சாந்தமான முகத்தோடு இருந்து அருள் பாலிக்கிறார்.   

கும்பகோணத்தில் பிப்ரவரி 13இல் சிவன் கோயில்களிலும், பிப்ரவரி 14இல் வைணவக்கோயில்களிலும் கொடியேற்றத்துடன் மகாமக விழா தொடங்குகிறது. பிப்ரவரி 21, 22 ஆகிய இரு நாள்களிலும் அனைத்துக் கோயில்களும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். அபிமுகேஸ்வரர் கோயிலிலும், நாகேஸ்வரர் கோயிலிலும் பிப்ரவரி 21இலும், கும்பேஸ்வரர் கோயிலில் பிப்ரவரி 22இலும் தேரோட்டம் நடைபெற்று பிப்ரவரி 22 அன்று மகாமக விழா நிறைவு பெறவுள்ள நிலையில்  அண்மையில் குடமுழுக்கு கண்ட தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கும், அங்குள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கும் செல்வோம்.
குடமுழுக்கு காணும் இரண்டாவது கிழக்கு கோபுரம்
குடமுழுக்கிற்காக அமைக்கப்பட்ட யாகசாலை

கொடி மரம், நந்தி மற்றும் விநாயகர் சன்னதி
குடமுழுக்கு காணும் தேனுபுரீஸ்வரர் விமானம்

குடமுழுக்கு காணும் ஞானாம்பிகை விமானம்

குடமுழுக்கு நாளில் துர்க்கையம்மன் சன்னதி

குடமுழுக்கு நாளில் துர்க்கையம்மன் சன்னதி
நேற்று இந்து சமய அறநிலையத்துறையால் வெளியிடப்பட்ட கும்பகோணம் மகாமகம் 2001 சிறப்பு மலர் முகப்பட்டை பற்றி பிறிதொரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் முகப்பட்டை

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் பின் அட்டை


7 comments:

  1. பட்டீஸ்வரம் திருக்கோயில்.. இனிய தரிசனம்..

    ReplyDelete
  2. அழகிய புகைப்பட தரிசனம் நன்று
    தினமணியில் இடம் பெற்ற முனைவரின் கட்டுரைக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. ஏற்கனவே பட்டீஸ்வரம் சென்றிருக்கிறேன். அனைத்தையும் ரசிக்க முடியாது அவசரமாக திரும்பி வர வேன்டிய சூழ்நிலை. இப்போது முத்துப்பந்தல், விலகிய நந்திகள், என்று பல செய்திகளைப்பற்றி அறிந்து கொண்டேன்.

    தினமணியில் உங்கள் கட்டுரை வெளி வந்திருப்பதற்கு இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. தினமணியில் உங்கள் கட்டுரை வெளி வந்திருப்பதற்கு இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சிறப்பான தகவல்கள்....

    தினமணியில் கட்டுரை வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தினமணியில் தங்கள் கட்டுரை வெளிவந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா. விலகிய நந்திகள் முத்துப்பந்தல் போன்ற சிறப்பான தகவல்கள்

    ReplyDelete