Showing posts with label மகாமகம். Show all posts
Showing posts with label மகாமகம். Show all posts

14 March 2017

கும்பகோணம் மாசி மகம் : 11 மார்ச் 2017

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று ஞானசம்பந்தப்பெருமான் இறைவனை நோக்கிப் பாடிய பாடலின் அடிகள் மாசிமகத்தன்று (11 மார்ச் 2017) கும்பகோணத்திற்கு மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண குடும்பத்துடன் சென்றபோது உணர முடிந்தது.

கும்பேஸ்வரராக, நாகேஸ்வரராக, சோமேஸ்வரராக, அபிமுக்தேஸ்வரராக, கோடீஸ்வரராக, கம்பட்ட விசுவநாதராக, காசி விசுவநாதராக, சோமேஸ்வரராக, கௌதமேஸ்வரராக, ஏகாம்பரேஸ்வரராக, பானுபுரீஸ்வரராக, காளஹஸ்தீஸ்வரராக, அமிர்தகலசநாதராக ......என்று எந்தவொரு பெயரிலும் எங்கள் ஈசனின் அழகு அழகேதான். கும்பகோணம் மகாமகக்குளக்கரையின் கரைகளைச் சுற்றி இறைவனும், இறைவியும் விடை மீது ஏறி சுற்றி வந்த அழகும், தீர்த்தவாரிக்காக குளத்தினை நோக்கி நின்ற அழகும், தீர்த்தவாரியின்போது அனைவரும் மகாமகக்குளத்தை நோக்கி நின்று அருள் தந்த விதமும் மனதில் நின்றன. இந்த முறைதான் பெரும்பாலும் அனைத்துக் கோயில்களின் மூர்த்திகளையும் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. குளத்தைச் சுற்றி வெளியே ஒரு முறையும், குளத்திற்குள் இரு முறை சுற்றி வந்து அனைத்து புகைப்படங்களையும் எடுத்தேன். 


















பல முறை மாசி மகத்தின்போதும், மகாமகத்தின்போதும் கும்பகோணம் சென்றாலும், ஒவ்வொரு முறையும் புதிதாகச் செல்வது போன்ற உணர்வே ஏற்படுகிறது. இப்பயணத்தின்போது என் மனைவி பாக்கியவதி, இளைய மகன் சிவகுரு, பேரன் தமிழழகன் ஆகியோர் உடன் வர எங்களின் மகாமகக்குள உலா நிறைவைத் தந்தது. எந்த தொந்தரவும் செய்யாமல் எங்கள் பேரன் தமிழழகன் குளத்தைச் சுற்றி வந்தது எங்களுக்கு வியப்பினைத் தந்தது. எல்லாம் நம் ஈசனின் செயலே. 



நன்றி 
புகைப்படம் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி, மகன் சிவகுரு

01 October 2016

கோயிற்கலை போற்றும் மகாமகம்

நவராத்திரி தொடங்கி நடைபெறும் இவ்வேளையில் மகாமகத்தின்போது நான் எழுதி வெளியான கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். கோயில்களைப் பார்ப்போம், கலைகளை ரசிப்போம். 

குடந்தை, குடமூக்கு, கும்பகோணம்

''கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினுஞ் செறிய அருங்கடிப் படுக்குவள்'' என்கிறது அகநானூற்றுப்பாடல். சங்க காலத்தில் குடந்தை என்றழைக்கப்பட்ட இவ்வூர் புகார் மற்றும் உறையூர் போல தலைநகராக இருந்திருக்க வாய்ப்புண்டு. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 51 பாசுரங்களில் 50 இடங்களில்  குடந்தை என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரியாழ்வார் ''குடந்தைக்கிடந்தானே, சப்பாணி'' என்று கூறுகிறார். ''கோவணத்துடையான் குடமூக்கு'', ''கூத்தாடி உறையும் குடமூக்கு'' என்றார் நாவுக்கரசர். கி.பி.7ஆம் நூற்றாண்டில் குடமூக்கு என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. பண்டைய இலக்கியங்களிலும் தேவாரத்திருமுறைகளிலும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களிலும் கல்வெட்டுக்களிலும் குடமூக்கு என்றே அழைக்கப்பட்டது. 



கும்பகோணம் கல்வெட்டுகளில் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப்பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் அழைக்கப்பெற்ற பெருமையுடையது இவ்வூர். பாணபுரீசுவரர் கோயில் என வழங்கும் சோமநாததேவர் கோயில் பகுதி சோமநாதமங்கலம், சோமநாத தேவமங்கலம் என்று தனி ஊராக விளங்கியது. திருக்குடமூக்கிலிருந்த அவ்வூர் பிரிக்கப்பட்டது என்பது திருக்குடமூக்கில் வேறு பிரிந்த என்ற தொடரால் அறியலாம்.

கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலின் முன் மண்டபத்துத் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்குரியதாகும். இக்கல்வெட்டின் காலம் கி.பி.1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமையாகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று முதன்முதலாக வருகிறது. அருணகிரியாரும் ''கும்பகோண நகர் வந்த பெருமாளே'' என்று கும்பகோணத்து முருகப்பெருமானைப் போற்றுகிறார். 

மகாமகப்பெருவிழா
இத்தகைய பெருமையுடைய கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழாவினை, ''பூமருவும் கங்கைமுதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்  மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்'' என்று சேக்கிழார் பெருமான் கி.பி.12ஆம் நூற்றாண்டில் தாமருளிய பெரிய புராணத்தில் எடுத்துக்கூறியுள்ளார். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கோயில்களைக் கொண்ட நகரங்களில் முக்கியமான இடத்தைப் பெறுவது கும்பகோணம். அவற்றில் மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணுகின்ற 12 சைவக்கோயில்களும், காவிரியில் தீர்த்தவாரி காணுகின்ற ஐந்து கோயில்களும் அடங்கும். மகாமகத் தீர்த்தவாரி சைவக்கோயில்களில் இரு கோயில்கள் கும்பகோணம் நகருக்கு அண்மையில் கொட்டையூரிலும், சாக்கோட்டையிலும் உள்ளன.
கோயில்களின் சிறப்பு
தமிழகத்தில், குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்கள் சிற்பம், ஓவியம், இசை, கட்டடம் என்ற பல்வேறு நிலைகளில் சிறப்பான கலையழகினைக் கொண்டு அமைந்துள்ளன. இக்கோயில்கள் நமக்கு இறையுணர்வினைத் தருவதோடு, கலையுணர்வினையும் நம்முள் எழ வைக்கின்றன. பல்லாண்டு காலமாக பற்பல காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு சிறந்த கலைப்பொலிவோடு விளங்கும் இக்கோயில்களுக்கு ஈடு இணையென இவற்றையே கூறமுடியும்.  தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும், ஆவுடையார்கோயிலும், கும்பகோணம் ராமசுவாமி கோயிலும் சிற்பக்கலையின் உச்சத்தினை எடுத்துரைக்கும் கோயில்களில் முக்கியமானவையாகும். கும்பகோணம் சார்ங்கபாணிகோயில் கருவறையும், பழையாறை சோமநாதசுவாமிகோயில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில்களில் உள்ள ரத வடிவ மண்டபங்களும் காண்போரின் கண்ணைக் கவர்வனவாகும். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில், திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்  உள்ளிட்ட கோயில்களில் மிக நுட்பமாக ஓவியங்களைக் காணலாம். திருமழபாடியில் கருவறைத் திருச்சுற்றில் ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர், வேதாரண்யம் திருமறைக்காட்டீஸ்வரர் கோயில் சுழலும் கல்தூண்கள், கும்பகோணம் வீர சைவ மடத்து வீரபத்திரர் கோயிலில் உள்ள செங்கல் கட்டுமானம், பழையாறையில் இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுத்தல் சிற்பம்  ஆகியவற்றில் கட்டடக்கலையின் நுணுக்கத்தைக் காணலாம். மகாமகம் கொண்டாடப்படும் இவ்வினிய விழாக்காலத்தில் இக்கோயில்களில் சில கோயில்களுக்குச் செல்வோம். 

கும்பகோணம் ராமசுவாமி கோயில்
காவிரியாற்றில் தீர்த்தவாரி காணும் ஐந்து மகாமக வைணவக்கோயில்களில் ராமசுவாமி கோயில் ஒன்றாகும். கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாகும். ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்த நினைவாக அவ்வரசர் இக்கோயிலைக்கட்டினார். கருவறையில் ராமர் பட்டாபிஷேகக்கோலம் கண்கொள்ளாக்காட்சியாகும்.  தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலிலுள்ள ராஜகம்பீரன் மண்டபத்தை நினைவுபடுத்துமளவு இங்குள்ள மகாமண்டபத்து சிற்பங்கள் உள்ளன. தாராசுரத்தில் ஒவ்வொரு தூணிலும் மிகச்சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. ராமசுவாமி கோயிலில் ஒவ்வொரு தூணிலும் ஆளுயர சிற்பங்கள் உள்ளன. ஒரு தூணில் நான்கு பக்கங்களிலும் ராமர், சீதை, லட்சுமணர், அனுமார் சிற்பங்கள் உள்ளன. இக்கோயில் உள் திருச்சுற்றில் ராமாயண ஓவியங்கள் காணப்படுகின்றன.

புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 15 கிமீ தொலைவில் அய்யம்பேட்டைக்கு முதல் நிறுத்தத்தில் உள்ளது புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் ஆலந்துறைநாதர் கோயில். திருவாலந்துறை மகாதேவர் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகசோழன் (கி.பி.907-955) காலத்தைச் சேர்ந்ததாகும். ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இறைவன் ஆலந்துரைநாதர், இறைவி அல்லியங்கோதை. இக்கோயிலின் கருவறைக் கோஷ்டத்தில் சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. சீதை இலக்குவனனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்து செல்லல், ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், காலசம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேடன்மீது அரிதுயில் கொள்ளும் அனந்தசயனமூர்த்தி உள்ளிட்ட பல சிற்பங்கள் உள்ளன. கம்பனின் காப்பியம் காட்டும் வாலி வதத்தின் சோகத்தை விஞ்சும் வகையில் கம்பனுக்கு காலத்தால் முற்பட்ட புள்ளமங்கைச் சிற்பம் எடுத்துரைப்பதாக குடவாயில் சுப்பிரமணியன் கூறுகிறார். விமானத்தில் பூதகணங்கள் காண்பதற்கு மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.   

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
கும்பகோணத்திலிருந்து சுமார் 11 கிமீ தொலைவில் உள்ள திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் புள்ளமங்கைக் கோயிலைப் போலவே கருவறைக் கோஷ்டங்களுக்குப் புகழ் பெற்ற கோயிலாகும்.  ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலம்  காவிரியாற்றின் வட கரையில் அமைந்துள்ளது.  இறைவன் சாட்சிநாதேஸ்வரர், இறைவி கரும்பன்ன சொல்லம்மை. புள்ளமங்கையில் உள்ளதுபோலவே சிறிய, நுட்பமான சிற்பங்களை இங்கு காணலாம். இறைவனும் இறைவியும் பல்வேறு நிலைகளில்
அமர்ந்த கோலத்தில் உள்ள பல சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. புராணக் காட்சிகள் மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்
திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர்கோயில் எனப்படும் கோயில் கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற இத்தலம் காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இறைவன் கபர்தீஸ்வரர், இறைவி பெரியநாயகி. இக்கோயிலின் முன் மண்டபத்தில் வேலைப்பாடுள்ள தூண்கள் அமைந்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் தூண்கள் சிறப்பாக அமைந்துள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இங்குள்ள அம்மன் சன்னதியில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் வளாகத்தில் உள்ள வலஞ்சுழி விநாயகர் கோயிலிலும் தூண்கள் மிகவும் வேலைப்பாடுகளோடு அமைந்துள்ளன. விநாயகர் கோயிலின் காணப்படுகின்ற கொடுங்கை ஆவுடையார் கோயிலில் காணப்படுகின்ற கொடுங்கையை நினைவூட்டுகின்றது. 

மேற்கண்டவை மூலமாக கும்பகோணம் நகரிலும் அருகிலும் உள்ள கோயில்கள் கலைகளின் இருப்பிடமாகத் திகழ்வதை அறியமுடிகின்றது. கட்டடக்கலை நுட்பங்கள் நம் கலைஞர்களின் திறனை வெளிப்படுத்துவனவாக உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்புக்கூறுகளைப் பெற்றுத் திகழ்வதைக் காணும்போது முன்னோர்கள் இறையுணர்வோடு கலையுணர்வையும் கொண்டிருந்தனர் என்பதை உணரமுடிகிறது. தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் இவ்வாறான வகையில் கலையின் நுட்பங்கள் காணப்படுகின்றன. இறையுணர்வினைப் பெறுவதற்காக மகாமகம் கொண்டாடப்படும் கும்பகோணத்திற்கு வருகின்ற இவ்வினிய வேளையில் கும்பகோணத்திலும் அருகிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று கோயிற்கலையின் பெருமையை நாம் அறிவதோடு, பிறர்க்கும் உணர்த்துவோம். கோயிற்கலையின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறையினர் பாதுகாக்க ஆவன செய்வோம். 
---------------------------------------------------------------------
கும்பகோணம் மகாமகம் 2016சிறப்பு மலரில் கோயிற்கலை போற்றும் மகாமகம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை. கட்டுரையை வெளியிட்ட இந்து சமய அற நிலையத்துறை மலர்க்குழுவினர்க்கு மனமார்ந்த நன்றி.

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் முகப்பட்டை
துணை நின்றவை
சி.பாலசுப்பிரமணியன், குடமூக்கு ஒரு நோக்கு,  மகாமகம் 1992 சிறப்பு மலர்
புலவர் செ.இராசு, குடந்தைக் கீழ்க்கோட்டக் கல்வெட்டுகள், மகாமகம் 1992 சிறப்பு மலர்
குடந்தை என்.சேதுராமன், திருக்குடமூக்கில் மகாமகம், மகாமகம் 1992 சிறப்பு மலர்
மா.சந்திரமூர்த்தி, புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004
மு.அகிலா, புனலாடும் முன் புள்ளமங்கை செல்வோம், மகாமகம் மலர் 2004
பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
மகாமகம், விக்கிபீடியா

10 May 2016

கோயில் நகரம் கும்பகோணம் : தி இந்து

21 பிப்ரவரி 2016 அன்று வெளியான தி இந்து நாளிதழின் கும்பகோணம் மகாமகப்பெருவிழா மலர் இணைப்பின் 16ஆம் பக்கத்தில் திரும்பிய திசையெல்லாம் கோபுரங்கள் : கோயில் நகரம் கும்பகோணம் என்ற தலைப்பிலான எனது கட்டுரை என் பெயரின்றி வெளியாகியுள்ளது. இக்கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். எனது கட்டுரையை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி.

கும்பகோணம் மகாமகப்பெருவிழா, தி இந்து, திருச்சி பதிப்பு, 21.2.2016, ப.16

பொதுவாக கும்பகோணத்திலுள்ளோர் முகவரி அடையாளம் கூறும்போதே கும்பேஸ்வரர் மொட்டை கோபுரம் அருகில், கம்பட்ட விஸ்வநாதர் சன்னதி, சக்கரபாணி சன்னதி, சார்ங்கபாணி சன்னதி, யானையடி, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி,  என்று கோயில்களை முன்வைத்தே கூறுகின்றனர். அந்த அளவிற்கு கோயில்கள் கும்பகோணத்திலுள்ளோர் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றன எனலாம். எந்த திசையில் நின்றாலும், இருந்தாலும் ஏதாவது ஒரு கோயில் கோபுரத்தினைக் காணும் பெருமை உடையது கும்பகோணம்.

புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை எழுதிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் (தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992) என்னும் நூல் கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலைப் பற்றியும் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற மகாமகத் திருவிழாவைப் பற்றியும் பல அரிய தகவல்களை நமக்குத் தருகிறது. கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணத்தின் சிறப்பு, மகாமகம், மகாமகத் தீர்த்தங்கள் அளிக்கும் பலன்கள், சிற்பங்களும் ஓவியங்களும், பூசைகளும் திருவிழாக்களும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் அருளிய திருக்குடமூக்குப் பதிகங்கள் உள்ளிட்ட பல தலைப்புகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலில் கும்பகோணத்திலுள்ள கோயில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை கும்பகோணம் வருபவர்களுக்கும், கோயில்களைச் சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கும் மிகவும் துணையாக இருக்கும். கும்பகோணம் நகரிலுள்ள கோயில்கள் என்று நூலாசிரியர் முக்தீஸ்வரர் கோயில், வராகப்பெருமாள் கோயில், அனுமார் கோயில் (பெரிய கடைத்தெரு, குச்சிக்கட்டிச் சந்து, சடச்சாமி மடத்தெரு), ஆஞ்சநேயர் கோயில்  (ரெட்டியாயர் அக்கிரகாரம், புவனேந்திர அக்கிரகாரம்), கும்பேஸ்வரர் கோயில், ஆண்டவப்பிள்ளையார் கோயில், ஆயத்துறை விநாயகர் கோயில், இலுப்பையடி தர்மராஜர் திரௌபதியம்மன் கோயில் (இரும்பையாடி எனக்குறிப்பிட்டுள்ளார்), உச்சிப்பிள்ளையார் கோயில், உடையவர் சந்நதி, கம்பட்ட விஸ்வநாதர் கோயில், கரும்பாயிரம் பிள்ளையார் கோயில், கற்பக விநாயகர் கோயில், கன்னிகா பரமேசுவரி கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில், குமரன் கோயில், சீரட்ட விநாயகர் கோயில், கூரத்தாழ்வார் கோயில், கொத்தன் ஒத்தைத்தெரு கோடியம்மன் கோயில், தட்சிணாமூர்த்தி சுவாமி கோயில், கௌதமேஸ்வரர் கோயில், சக்கரபாணி கோயில், சஞ்சீவிராமசாமி கோயில், சார்ங்கபாணி கோயில் (சாரங்கபாணி என்று குறிப்பிட்டுள்ளார்), சரநாராயணப் பெருமாள் கோயில், காமாட்சி சோசியர்தெரு சித்தி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இரு சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில்கள், பழனியாண்டவர் கோயில், மூன்று சோமநாதர் கோயில்கள், நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில், தைக்கால் மதகடி திரௌபதியம்மன் கோயில், வட்டிப்பிள்ளையார் கோயில், செட்டிப்படித்துறை விஸ்வநாதசுவாமி கோயில், மேட்டுத்தெரு விஸ்வநாதசுவாமி கோயில், வினைதீர்த்த செட்டி அக்கிரகாரம் விஸ்வநாதசுவாமி மற்றும் ராஜேந்திரபிள்ளையார் கோயில், பிரளயம் காத்த விநாயகர் கோயில், டபீர் தெரு ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில், எல்லையம்மன் கோயில் தெரு எல்லையம்மன் கோயில் மற்றும் திரௌபதியம்மன் கோயில், சக்கரபாணி கீழ வீதி திரௌபதியம்மன் கோயில், பகவத் விநாயகர் கோயில், வேங்கடேச அக்கிரகாரம் பட்டாபி ராமசாமி கோயில், படைவெட்டி மாரியம்மன் கோயில், முத்துபிள்ளை மண்டபம் பாடகச்சேரி இராமலிங்கசுவாமி கோயில் (கும்பகோணம் நகருக்கு வெளியே), முத்துபிள்ளைமண்டபம் பாண்டுரங்கசாமி கோயில் (கும்பகோணம் நகருக்கு வெளியே), காவிரி கரைத்தெரு பிரசன்ன வெங்கசலாபதி கோயில், காவிரிக்கரைத்தெரு பொய்யாத பிள்ளையார் கோயில், பெசண்ட் ரோடு மன்னார்சாமி கோயில், பக்தபுரி அக்கிரகாரம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், முச்சந்தி பாதாள காளியம்மன் கோயில் , யானையடி அய்யனார் கோயில், தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் சார்ங்கபாணி மேல சன்னதித்தெரு ஏகதயோகீந்தர சுவாமிகள் கோயில் என்ற நிலையில் சுமார் 60 கோயில்களைக் குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்ந்து மேற்கொண்ட தலப்பயணங்களின்போது இவற்றில் பெரும்பாலான கோயில்களைக் களப்பணியின்போது காணமுடிந்தது. இப்பட்டியலில் ராமஸ்வாமி கோயில் இல்லை. சஞ்சீவி ராமஸ்வாமி கோயில் என்று ராமஸ்வாமி கோயிலைக் குறிப்பிடுகிறார் போலுள்ளது.   நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில்,  ஏகாம்பரேஸ்வரர் கோயில் போன்ற கோயில்கள் காணப்படவில்லை. மூன்று சோமநாதர் கோயில்களில் ஒன்றாக சோமேஸ்வரர் கோயிலைக் குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு. சிவபெருமானின் பெயரை பிற நிலையில் கூறும்போது கோயில் பெயரில் சில நுணுக்கமான வேறுபாடுகளைக் காணமுடியும். அதனால் அவ்விடுபாடு இருக்க வாய்ப்புள்ளது. 

இந்நூலை அடிப்படையாக வைத்துப்பார்க்கும்போது 1992இல் சுமார் 60 கோயில்கள் இருந்ததை அறியமுடிகிறது. இந்தப் பட்டியலில் கும்பகோணத்தில் உள்ள பவானியம்மன் கோயில், தாய் மூகாம்பிகை கோயில், நந்தவனத்து மாரியம்மன் கோயில், வீரபத்திரர் கோயில், மும்மூர்த்தி விநாயகர் கோயில், பிரமன் கோயில் எனப்படும் வேதநாராயணப்பெருமாள் கோயில், திருமழிசையாழ்வார் கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களைக் காண முடியவில்லை. இருப்பினும் கும்பகோணம் நகரம்  நிறைவான கோயில்களைக் கொண்ட ஊர் என்பதனை இதன்மூலம் அறியமுடிகிறது. தொடர்ந்து தலப்பயணம் மேற்கொள்ளும்போது இன்னும் பல கோயில்களை அறிய வாய்ப்புண்டு. இவ்வாறாக கும்பகோணத்தில் உள்ள பல கோயில்களை நமக்கு அறிமுகப்படுத்திய அவருக்கு நன்றி கூறி நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்ட கும்பகோணம் நகருக்குப் பயணிப்போம். 

6 ஜனவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

12 March 2016

மகாமகம் : நினைவுப்பதிவுகள் 30+

1968, 1980, 1992, 2004, மகாமகங்களைக் கண்ட நிலையில் மகாமகத்தில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாகவும், பிறந்த மண் கும்பகோணம் என்ற நிலையிலும் ஐந்தாவதாகக் காணும் 13-22 பிப்ரவரி 2016இல் நிகழ்ந்த மகாமகத்தை முன்னிட்டு 30க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். பெரும்பாலானவை இந்த வலைப்பூவில் வெளியாகியுள்ளன. சில அச்சில் வந்து, வலைப்பூவில் பதியப்படாமல் உள்ளன. கட்டுரைகளுக்கு நேரில் சென்று செய்திகளைத் தொகுத்து உரிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. 

நன்றி..நன்றி..


இப்பதிவுகள் தொடர்ந்து வரும் மகாமகங்களிலும் நம் மனதில் நிற்கும் என நம்புகிறேன். உரிய பதிவுகளைப் படிக்க விரும்புவோர் அந்தந்த தலைப்பில் சொடுக்கலாம், படிக்கலாம். எனக்கு ஆதரவு தந்து, நான் தொடர்ந்து எழுத உதவி என்னுடன் பயணித்த நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் பேரன் தமிழழகன் பிறந்த நாளான இன்று மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். 






மகாமகம் 2016 இலச்சினை


மகாமக நினைவாக வெளியிடப்பட்டவை
 அஞ்சல் உறைகள்



அஞ்சல் அட்டைகள்
 



மேஜை காலண்டர்
 

சைவக்கோயில்கள் காலண்டர்

வைணவக்கோயில்கள் காலண்டர்

மகாமகப் பயணப்பதிவுகள் சிறப்புற அமைய ஒத்துழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

முகப்பு பின்னர் மாறிவிடும் என்ற நிலையில் பதிவிற்காக இப்பதிவு வெளியானபோது இருந்த என் வலைப்பூவின் முகப்புப்பக்கம்

10 ஜனவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

04 March 2016

ஐந்து மகாமகம் கண்ட அனுபவங்கள் : பத்திரிகை.காம்

நான் கண்ட ஐந்து மகாமகங்களைப் பற்றிய பதிவு பத்திரிகை.காம். இதழில் 1 மார்ச் 2016 அன்று வெளியாகியுள்ளது. எனது மகாமக அனுபவங்களை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி. அவ்விதழில் வெளியான கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கின்றேன். அளவில் சற்றே பெரிய கட்டுரை. பொறுமையுடன் வாசிக்க அழைக்கிறேன். 



எனக்கு நினைவு தெரிந்து நான் ஐந்து மகாமகங்களிலும் கலந்துகொண்டுள்ளேன். இதுவரை ஐந்து மகாமகங்களைப் பார்த்துள்ளேன். ஒவ்வொரு அனுபவமும் வித்தியாசமானது. 

14.2.1968 
25, சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரம். கும்பகோணத்தில் எங்கள் இல்லம் இருந்த முகவரி. அப்போது தெருவின் பெயரில் அக்கிரகாரம் என்றே இருந்தது. நான் பார்த்த முதல் மகாமகம். கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் மூன்றாம் வகுப்போ நான்காம் வகுப்போ படித்துக்கொண்டிருந்த காலம்.  அப்பள்ளி ஆசிரியர்களிடம் நான் வாங்கிய அடியை என்றுமே மறக்கமுடியாது. நம்பர் கிளாஸ் எனப்படும் நிலையில் கடைசியாகப்போகப்போக அடி, தாமதமாக வந்தால் கொக்கு போடல், தவறு செய்தால் கல் சிலேட் தலையில் உடைக்கப்பட்டு, மாட்டப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படல், இவற்றுக்கெல்லாம் பயந்து பள்ளிக்குப் போகாமல் இருந்தால் சக மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி இழுத்துச் சென்றுவிடுவர். இப்பள்ளியில் விலங்குக்கட்டை தண்டனைகூட உண்டு. (எனக்கு விலங்குக்கட்டை போடவில்லை). எங்களின் வாழ்க்கை நல்ல நெறியில் அமைய அடித்தளமிட்ட பள்ளியில் மகாமகம் பற்றி பேசிக்கொண்டார்கள். மறுநாள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் அவசியம் வந்துவிடவேண்டும் என்ற பயம் மட்டுமே. ஏதோ அரைகுறையான நினைவுகளே. பொதுவாகவே எந்த ஒரு விழாவென்றாலும் அதைப் பற்றியே பேசுவார்கள். கூட்டம்கூட்டமாகச் செல்வார்கள். கும்பகோணத்தில் நாளெல்லாம் கோயில் திருவிழா என்ற நிலையில் மகாமக விழாவிற்காகக் கிளம்பிய நினைவு உள்ளது. அவசரம் அவசரமாக வீட்டைப் பூட்டிவிட்டு குடியிருந்தவர்களிடம் சாவியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிய நினைவு உள்ளது. வேறு எந்த நினைவும் இல்லை. எங்கோ கூட்டிப்போகிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு கிளம்பிச் சென்றேன்.  செல்லும்போது நவராத்திரியின்போது ஒவ்வொரு வீடாகச் சென்று சுண்டல் வாங்கித் தின்பது நினைவிற்கு வந்தது. நவராத்திரி கொலு கொலு சுண்டல் என்று கூறிக்கொண்டே செல்வோம். மகத்திற்கு போனால் நமக்கு அதிகம் சுண்டல் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் குடும்பத்தாரோடு கிளம்பினேன்.  ஆனால் மனதிற்குள் பயம். மறுநாள் வந்து பள்ளிக்குச் செல்லவேண்டுமே என்று.    

1.3.1980
நான் பார்த்த இரண்டாவது மகாமகம். தெருவின் பெயர் இக்காலகட்டத்தில் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெரு என்று மாறி பின்னர் கே.ஜி.கே.தெரு என்றானது. புகுமுக வகுப்பும் (PUC), இளங்கலைப் பொருளாதாரமும் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் படித்து முடிந்து, தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் இரண்டாவது மகாமகம். கல்லூரிப்படிப்பு முடிந்து பணிக்குச் செல்லும் நிலை. கல்லூரிக் காலத்தில் சினிமாக் கொட்டகைகளுக்கு ஈடாக எங்களுக்குப் புகலிடம் தந்தவை கோயில்களே. அவ்வவ்போது நடைபெறும் விழாவைக் காண நண்பர் குழாமாக கோயில்களுக்குச் செல்வது எங்களுக்குப் பிடித்திருந்தது. நவராத்திரியின்போது பெரும்பாலும் அனைத்து நாள்களிலும் கோயில்களுக்குச் சென்றுவிடுவோம். ஒரே கோயிலில் ஐந்து தேர்கள், ஓலைச்சப்பரங்கள், குளத்தில் தெப்பங்கள் என்ற நிலையில் பார்க்க ஆசையாக இருக்கும். பக்தி என்பதைவிட ஏதோ ஒருவகையான கொண்டாட்டமாகவே இம்மகாமகம் எங்களுக்கு அமைந்தது. பணியில் சேர்ந்த நிலையில் அதிகம் விடுப்பு எடுக்க முடியா சூழல். இருந்தபோதிலும் மகாமகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் வழக்கம்போலவே. குடும்பத்தினருடன் சென்றேன். அதிக பரபரப்பின்றி நிதானமாக விழா நிகழ்வுகளைக்கண்டோம். கடவுள் நம்பிக்கை இல்லாத எனது நண்பர்களும்கூட மகாமகத்தில் கலந்துகொண்டு பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். தீர்த்தவாரி என்பன பற்றி அறியாமல் குளத்திற்குச் சென்றோம், குளித்தோம். வரும்வழியில் பல கடவுளர்கள் உற்சவமூர்த்தியாக ஊர்வலமாக வருவதைக் கண்டு மகிழ்ந்தோம். கல்லூரிக்காலத்தில் எங்களுக்கு படிக்கும் வாய்ப்பைத் தந்தது கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம். அக்காலகட்டத்தில் நாங்கள் அங்கு பார்த்த மகாமகம் மலர் பற்றிய நினைவு வரவே அங்கு சென்று மலரை மறுபடியும் பார்த்தேன். மூன்று மகாமகங்களுக்கு முன்பு நாங்கள் பார்த்த மலரைப் பார்த்தபோது மகிழ்வாக இருந்தது. இவை போன்ற நிகழ்வுகளே கும்பகோணம் மீதும், கோயில்கள் மீதும், மகாமகம் மீதும் எங்களுக்கு ஆர்வத்தை அதிகம் உண்டாக்கியிருந்தன என்பதே உண்மை.



18.2.1992
முதல் நாள் மகாமக ஏற்பட்டினைக் காண்பதற்காக ஊரை முழுக்கச் சுற்றி வந்தோம். எங்கு பார்த்தாலும் பக்திப்பரவசம். அதிகமான கடைகள். ஊரெங்கும் விழாக்கோலம். ஒருவரையொருவர் விசாரிக்கும்போது தத்தம் உறவினர்களோ, நண்பர்களோ வந்துவிட்டார்களா என்று ஆவலோடு கேட்டுக் கொள்வதைக் காணமுடிந்தது. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்து விழாவுக்கு அழைத்தோம். நம் வீட்டு நிகழ்வில் ஏதாவது இனிப்பு பரிமாறப்படும்போது ஆர்வமாக, அதிகமாக எடுத்துக்கொள்வதைப் போல நம்மூர் கோயில்களில் உள்ள கூட்டத்தைப் பார்த்ததும் சென்று பார்க்கும் ஆர்வம் வந்தது. மறுநாள் குளத்திற்குச் செல்லும்போது கூட்டம் அதிகமாக இருப்பதைக் காணமுடிந்தது. குளத்தில் சென்று குளித்துவிட்டு, காவிரியாற்றுக்கும் சென்றுவிட்டுத் திரும்பினோம். இம்மகாமகத்தின்போது நடைபெற்ற விபத்துமகாமக வரலாற்றில் ஆறாத ஓர் வடு.

1992 மகாமகத்திற்காக தமிழ்ப்பல்கலைக்கழக அச்சகத்தில் அச்சானதைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நம்மூர் விழாவிற்கு நாம் பணியாற்றும் இடத்தில் மலர் அச்சிடுவதைக் கண்டதும் மகிழ்ச்சி ஏற்பட்டது.  
தமிழ்ப்பல்கலைக்கழகம் புலவர் கோ.மு. முத்துசாமிபிள்ளை எழுதிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத்திருவிழாவும் என்ற நூலை மகாமகத்திற்காக வெளியிட்டது. கும்பேஸ்வரர் கோயிலைப் பற்றியும் மகாமகத்திருவிழாவைப் பற்றியும் பல அரிய தகவல்களையும் அந்நூல் கொண்டிருந்தது. அந்நூலுக்கு தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன் அணிந்துரை அனுப்பியபோது அவரிடம் நேர்முக உதவியாளராக நான் பணியாற்றிய நிலையில் மகாமகம் தொடர்பாக நாம் எழுதி ஒரு கட்டுரை வெளிவரவேண்டும் என்ற ஓர் உந்துதல் மனதில் தோன்றியது. நம்மால் முடியுமா என்ற ஐயம்கூட.   
6.3.2004
குடும்பச்சூழல் காரணமாக கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு நிரந்தரமாகக் குடியேறும் சூழலைத் தந்த மறக்கமுடியாத மகாமகம். நான் விரும்பிய கும்பகோணத்தைவிட்டு நான் சற்று விலகிச்செல்லும் நிலையில் மனதில் கனத்தைத் தந்த மகாமகம். தஞ்சாவூரில் புதிய முகவரி கிடைத்ததும் இம்மகாமகத்தில்தான். புதிய வீடு கட்டிக்கொண்டிருக்கும்போதே மகாமக நாளில் மகாமகத்திலிருந்தும், பொற்றாமரைக்குளத்திலிருந்தும், காவிரியாற்றிலிருந்தும் எடுத்துவந்த புனித நீரை மனையில் தெளித்தோம். 28, 29 பிப்ரவரி 2004 இரு நாள்கள் தஞ்சையிலிருந்து கிளம்பி கும்பகோணம் சென்றோம். 

28, 29 பிப்ரவரி 2004இல், தீர்த்தவாரிக்கு முன்பாக, என் தங்கை சுமதியின் வீட்டில் தங்கி அங்கிருந்து கிளம்பி மனைவி பாக்கியவதி, இரு மகன்கள் பாரத், சிவகுருவை அழைததுக்கொண்டு  தீர்த்தவாரி காணுகின்ற 15 சைவ, வைணவக் கோயில்களுக்கும் சென்றேன். இவ்வாறாக அழைத்துச்செல்லும்போது குடும்பத்தினருடன் இவ்வாறான ஒரு வாய்ப்பு வாழ்நாளில் இன்னுமொரு முறை அமையுமோ என்று கூறிக்கொண்டே சென்றேன். ஒத்துழைப்பு கொடுத்து குடும்பத்தினரும் உடன் வந்ததை மறக்கமுடியாது. 

கும்பகோணத்திலுள்ளோர் மகாமகத்தின்போது வெளியூரிலுள்ள நண்பர்களையும், உறவினர்களையும் தம் இல்லத்திற்கு வரவும், மகாமகத்தில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுப்பர். அவ்வாறு பல நண்பர்கள் எங்களுக்கு விடுப்பு விடுத்தனர். அவ்வகையில் தாராசுரம் மேலச்சத்திரத்திலிருந்து எனது நண்பர் எங்களுக்கு அனுப்பிய அழைப்பிதழ் 1.3.2004இல் கிடைத்தது. அழைப்பிற்கு நன்றி கூறினேன்.



மகாமகத் தீர்த்தவாரி நாளான 6 மார்ச் 2004ஆம் நாளன்று காலை 5.50க்கு நானும் எங்கள் குடும்பத்தாரும் (மனைவி பாக்கியவதி, இளைய மகன் சிவகுரு), என் தங்கை சுமதியின் குடும்பத்தாரும் (மகன் பார்த்திபன், மகள் பூங்குழலி, மாப்பிள்ளை தியாகராஜன், பேத்தி ஷிவானி) கிளம்பினோம். மூத்த மகன் பாரத்  என்னுடைய மைத்துனர் மகன் செல்வபாரதி, சகலை மகன் ராஜேஷ் ஆகியோருடன் குளத்திற்கு வந்திருந்தான். நன்றாக நெறிப்படுத்தப்பட்டு கூட்டம் செல்லும் வகையில் அமைப்புகள் காணப்பட்டன. மொட்டை கோபுரம் அருகிலிருந்து கிளம்பி பொற்றாமரைக்குளம், சோமேஸ்வரர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் வழியாக மகாமகக்குளத்திற்குச் சென்றோம். 1992இல் நடந்த விபத்தானது நல்ல படிப்பினையைத் தந்ததை உணர்ந்த நிலையில் அதிக பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைக் காணமுடிந்தது. நகரம் முழுவதும் மக்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி குளத்தை நோக்கி அனுப்பியவிதம் அருமையாக இருந்தது. போவதற்கு ஒரு வழி, வருவதற்கு ஒரு வழி என்ற நிலையில் கூட்டம் கட்டுப்பாட்டோடு இருந்தது. குளத்திலும் அவ்வாறான கட்டுப்பாடு காணப்பட்டது.குளக்கரையில் எங்கும் மக்கள் மயம். மகாமகத்தில் நீராடிவிட்டு 9.30 மணியளவில் திரும்பினோம்.

திரும்பிவந்தபின் கும்பகோணத்தின் அழகையும் பார்க்க இன்னும் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே, மறுபடியும் பார்க்கலாமா என்ற உணர்வு வரவே நான் மட்டும் மறுபடியும் மகாமகக்குளத்தைப் பார்ப்பதற்காக காலை 9.45க்குக் கிளம்பி, குளத்திற்குச் சென்றுவிட்டு காலை 12.45 வாக்கில் தங்கையின் இல்லம் வந்தடைந்தேன். இந்த மகாமகத்தின்போது ஒரே நாளில் இரு முறை மகாமகக்குளத்திற்கு நான் சென்று வந்ததை என் வாழ்நாளில் மறக்கமுடியாது.  

இம்மகாமகத்தின்போது தமிழக அரசு வெளியிட்ட மகாமகம் சிறப்பு மலரில் மலர் பதிப்புக்குழுவில் உறுப்பினராகப் பங்காற்றும் வாய்ப்பையும், அதே மலரில் சப்தஸ்தானத் தலங்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியதையும் மறக்கமுடியாது. மலர் தயாரிப்பின்போது பேரறிஞர்களுடன் பழகும் வாய்ப்பு, அரிய புகைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு, அதுவரை அறிந்திராத  நமது கலை, பண்பாடு பற்றிய அரிய செய்திகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. பார்க்காதனவற்றைப் பார்க்கவேண்டும் என்ற அவாவும் என்னுள் அப்போது எழுந்தது.

2016 மகாமகம்
2004 மகாமக மலர் பதிப்புக்குழு உறுப்பினர் என்ற நிலை, கடந்த மகாமகத்தின்போது அனைத்து தீர்த்தவாரிக்கோயில்களையும் பார்த்தமை எனக்கு நல்ல அனுபவங்களைத் தந்தது. 2016 மகாமகத்திற்கு முன்பாக குடமுழுக்கு காணும் அனைத்துக் கோயில்களையும் பார்க்க முடிவெடுத்து அனைத்துக் கோயில்களுக்கும் குடமுழுக்கு நாளிலோ அதற்குப் பின்னரோ சென்றோம். இவ்வகையில் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தவாரி காணுகின்ற 10 சைவக்கோயில்களுக்கும், ஐந்து வைணவக்கோயில்களுக்கும், கும்பகோணம் அருகே சாக்கோட்டை மற்றும் கொட்டையூரிலுள்ள இரு சைவக்கோயில்களுக்கும் சென்றோம். கோயில்களுக்குச் சென்றுவந்து அனைத்தையும் கட்டுரையாக எழுதினோம். விக்கிபீடியாவில் கும்பகோணத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட கோயில்களைப் பற்றி புதிதாகக் கட்டுரைகள் தொடங்கும் வாய்ப்பினைத் தந்தது கோயில்களில் உள்ள ஆர்வமே. தொழில்நுட்பம் வளர வளர அழைப்பு விடுப்பு என்பதானது தொலைபேசியிலும், அலைபேசியிலும், முகநூலிலும், வலைப்பூவிலும் என்றாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக நான் எழுதி வரும் வலைப்பூவில் மகாமகத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்.


13.2.2016
ஒவ்வொரு மகாமகத்திற்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதைக் காண முடிகிறது. இந்த மகாமகத்திற்காக நடைபெறும் ஏற்பாடுகளைப் பார்க்க மகாமகத்திற்கு முன்பாக பல முறை கும்பகோணம் சென்றுவந்துவிட்டேன். மகாமகத்தின் முதல் நாள் 13 பிப்ரவரி 2016 அன்று குடும்பத்தாரோடு கும்பகோணம் சென்றேன். தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களில் கொடியேற்றம் காண சிலகோயில்களுக்குச் சென்றுவிட்டு, குளத்திற்குச் சென்றோம். பேருந்துகள் ஊருக்குள் சென்றன.  கும்பேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்திற்கான ஏற்பாடு அப்போதுதான் தொடங்கியது. ஏற்பாடுகளை கவனித்துவிட்டு, ஓடத் தயாராகும் ஐந்து தேர்களைப் பார்த்தோம்.

அவ்வாறே சோமேஸ்வரன் கோயிலில் கொடியேற்றத்திற்கான ஏற்பாடு, நாகேஸ்வரன் கோயிலில் கொடியேற்றம், காசி விஸ்வநாதர் கோயிலில் கொடியேற்ற நிகழ்வு ஆகியவற்றைப் பார்த்த நிறைவோடு மகாமகக்குளத்திற்குச் சென்றோம். இரண்டாம் நாளில் மகாமகக்குளத்தில் கூட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததைக் காணமுடிந்தது. உள்ளே அனைத்துக் கிணற்றிலும் குளித்துவருவதற்கு வசதியாக கயிறு கட்டி வைத்திருந்தனர். பல இடங்களில் படிகளில் இறங்கி பலர் நீரை தலையில் தெளித்துக்கொண்டனர். நாங்கள் சிறிது நேரம் படியில் அமர்ந்து குளத்தினை அழகை ரசித்துவிட்டுக் கிளம்பினோம். 






14.2.2016 
கொடியேற்றம் கண்ட வராகப்பெருமாள் கோயில், சக்கரபாணிகோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ராமசுவாமி கோயில், சார்ங்கபாணி கோயில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் சென்றேன். நேற்றைவிட இன்று கூட்டம் அதிகமாக இருந்ததைக் கண்டேன். மகாமகக்குளத்தில் புனித நீராடிவிட்டு, பொற்றாமரைக்குளம் வந்து பின்னர் காவிரியாற்றுக்கு புனித நீராடச் செல்லும் கூட்டம் அதிகமாக இருந்தது. மறுபடியும் குளத்தைப் பார்க்க ஆசை வரவே மகாமகக்குளம் சென்று திரும்பினேன்.





22 பிப்ரவரி 2016
தீர்த்தவாரியன்று தஞ்சாவூரிலிருந்து விடியற்காலை புகைவண்டி மூலமாகப் புறப்பட்டு நான், என் மனைவி பாக்கியவதி, எங்கள் மூத்த மகன் பாரத், மருமகள் அமுதா, இளைய மகன் சிவகுரு, பேரன் தமிழழகன் ஆகியோருடன் குடும்பசகிதமாகக்  கிளம்பி, காலை 6.30 மணிவாக்கில் கும்பகோணம் சென்றடைந்தோம். மகாமக முதல் நாளில் சென்ற நாங்கள் மறுபடியும் நிறைவு நாளில் செல்வது மகிழ்ச்சியாக இருந்தது. குளத்தில் இறங்கும்போது சூரிய உதயம் மிகவும் அழகாக இருந்ததைக் கண்டோம். சூரியோதயத்தில் குளத்தை அழகாக ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு புனித நீராட ஆயத்தமானோம்.











 

 
குளத்தில் இறங்குவதற்கு முன்பாக அபிமுகேஸ்வரர்கோயிலையும் அங்கு அழகாக நின்ற தேரையும் பார்த்தோம். குளத்தில் நீராடிய பின்னர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலைப் பார்த்தோம்.  பின்னர் அங்கு வந்த தீர்த்தவாரிக்குச் சென்றுகொண்டிருந்த கொட்டையூர் கோடீஸ்வரரைப் பல்லக்கில் பார்த்தோம். அங்கிருந்து நாகேஸ்வரர் தேரையும் கோயிலையும் பார்த்தோம். அதுவரை கூட்டம் அதிகமாகவில்லை. தொடர்ந்து கூட்டம் அதிகமானது. ஆங்காங்கு குளத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமானது.  


 
  



நாகேஸ்வரன் கோயிலிலிருந்து செல்லும்போது சோமேஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். கோபுரத்தின் முன்பாக தேர் அழகாக நின்றுகொண்டிருந்தது. அதனைப் பார்த்துவிட்டு சார்ங்கபாணி கோயில் சென்றோம். அங்கும் கோபுரத்திற்கு சற்று முன்பாக தேர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம். அங்கிருந்து பெரிய தெரு வழியாகச் சென்றபோது சோமேஸ்வரர் தீர்த்தவாரிக்காக பல்லக்கில் வருவதைக் கண்டோம்.  பின்னர் பெரிய தெரு வழியாக பொற்றாமரைக் குளம் நோக்கிச் சென்றோம். அப்போது வழியில் சார்ங்கபாணியும், ராமசாமியும் தீர்த்தவாரிக்காக செல்வதைக் கண்டோம்.  அங்கிருந்து சரநாராயணப்பெருமாள் கோயில் வழியாக பொற்றாமரைக் குளம் செல்ல முயற்சித்தபோது அங்கு தடுப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் கும்பேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். அங்கு தீர்த்தவாரிக்காக கும்பேஸ்வரர் பல்லக்கில் கிளம்பி கோயிலிலிருந்து வெளியே வருவதைக் கண்டோம். பல்லக்கு, கும்பேஸ்வரர் கோயிலின் ஐந்து தேர்களுக்கு நடுவில் வந்தபோது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.




 



 
நேராக ராமசாமி கோயிலுக்குச் சென்றோம். ராமசாமி கோயிலின் முன்பாக தேர் நின்ற அழகினை ரசித்துவிட்டு, பொற்றாமரைக் குளத்திற்குச் செல்வதற்கான வழியைத் தேடிச் சென்றோம். சார்ங்கபாணி கோயில் தெற்கு வீதியில் (ராமசுவாமி கோயிலின் வலப்புறம் செல்லும் பாதை) கூட்டம் கூட்டம் பக்தர்கள் சென்றுகொண்டிருப்பதைக் கண்டோம். அக்கூட்டம் பொற்றாமரைக்குளத்திற்கு போவதை அறிந்தோம். அவர்களுடன் இணைந்தோம்.  உச்சிப்பிள்ளையார் கோயில், சோமேஸ்வரன் கோயில் வழியாக கூட்டம் பொற்றாமரைக்குளத்தை நோக்கி நகர்ந்தது. ஆங்காங்கு தடுப்பு அமைத்து இருந்தனர். பொற்றாமரைக்குளத்தில் இறங்கி புனித நீராடிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். 




பெரிய கடைத்தெரு வழியாக ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் சென்றோம். அங்கிருந்து சக்கரபாணி கோயிலுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். கோயிலின் வெளியே நின்ற தேரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து காவேரியாற்றுக்குக் கிளம்பினோம். அங்கு படித்துறைக்குச் சென்று புனித நீராடிவிட்டுக் கிளம்பினோம். பல கோயில்களையும் தீர்த்தங்களையும் பார்த்த மன நிறைவில் வராகப் பெருமாள் கோயிலாக திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கே வராகப்பெருமாள் பல்லக்கில் தீர்த்தவாரி முடிந்து பல்லக்கில் வருவதைக் கண்டோம். அவருடனேயே வராகப்பெருமாள் கோயிலுக்குச் சென்று எங்களது பயணத்தை நிறைவு செய்தோம்.  











சிற்றுந்து நிற்கும் என்று கூறப்பட்ட இடங்களில் அவற்றைக் காணமுடியவில்லை. மொட்டை கோபுரம் தொடங்கி எங்கு பார்த்தாலும் பக்தர்கள் பேருந்துக்காக நின்றனர். அவ்வப்போது சில ஆட்டோக்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தன. காத்திருந்து பார்த்தோம். சிலர் மௌனசாமி மடத்தருகே தனியார் பேருந்துகள் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் அழைத்துச் சென்றுவிடுவதாகக் கூறினர். அங்கு போய்க் காத்திருந்தோம். பயனில்லை. அதிர்ஷடவசமாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறி தற்காலிகப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் ஏறி, சுகமாக தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம். 

இவ்விழா சிறப்புற அமைய உழைத்த வகையில் அனைத்து துறையினரும் போற்றுதலுக்குரியவராகின்றனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக காவலர்கள் மிகவும் பொறுமையோடு நடந்தகொண்டவிதம் எங்களை அதிகம் ஈர்த்தது. அனைத்து நிலையிலும் நிறையே கண்டோம். 2004 மகாமகத்தின்போது சிறப்பாக வழித்தடம் அமைத்திருந்ததைக் கண்டோம். அதைவிட சிறப்பாக இம்முறை பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த முறை காணப்பட்டது போல அதிக எண்ணிக்கையில் அன்னதானம், மோர் வழங்கல் என்பது காணப்படவில்லை. ஊர் முழுக்க பெரும்பாலும் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. தெருக்கடைகள், சாலையின் ஓரத்தில் இருக்கும் கடைகளும் குறைவாகவே காணப்பட்டன. பக்தர்கள் தம் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்வதற்காக அதிக தூரம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களில் சில குறைகள் இருப்பது தவிர்க்கமுடியாததே. குறையை விடுத்து நிறைவை எண்ணி உழைத்த அனைவருக்கும் மறுபடியும் நன்றி கூறுவோம். 

நாம் இந்த மகாமகத்தில் பார்த்த கோயில்களும் அவற்றின் கலையழகும் தொடர்ந்து வரும் மகாமகங்களில் நெஞ்சில் நிறைந்திருக்கும். அந்த இனிய எண்ணங்களை நம் வருங்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச்சென்று நம் பண்பாட்டின் பெருமையை உணர்த்துவோம். 

என்னால் ஆரம்பிக்கப்பட்ட கும்பகோணம் கோயில்கள் வார்ப்புருவை விக்கிபீடியாவில்
காணலாம்.

10 ஜனவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.