31 January 2020

இராஜராஜேச்சரம் குடமுழுக்கு : விமானத்தில் கலசம்

இராஜராஜேச்சரம் என்றழைக்கப்படுகின்ற பெரியகோயிலின் குடமுழுக்கு 5 பிப்ரவரி 2020இல் நடைபெறவுள்ளது. அவ்விழாவின் ஒரு பகுதியாக 30 ஜனவரி 2020 அன்று 216 அடி உயரமுள்ள விமானத்தின்மீது கலசம் நிறுவப்பட்டது. 

இறையருளால் அதனைக் காணும் பேறு பெற்றோம். அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.  




இந்தக் கலசம் கடந்த 5ஆம் தேதி விமானத்திலிருந்து எடுக்கப்பட்டு, கீழே கொண்டு வரப்பட்டு, பிற சன்னதிகளுக்கான கலசங்களுடன் திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டு தங்க முலாம் பூசும் பணி நடைபெற்று வந்தது.  தங்க முலாம் பூசப்பட்ட பின் இந்தக் கலசத்தினை மீண்டும் விமானத்தில் பொருத்தும் பணி இன்று காலையில் சுமார் 10.30 மணியளவில் தொடங்கி மாலை 3.30 மணியளவில் நிறைவு பெற்றது. 

12 உயரமுள்ள இந்தக் கலசம் எட்டு பாகங்களைக் கொண்டு அமைந்ததாகும். இவற்றில் மூன்று பாகங்கள் சற்றே எடையுடன் கூடியதாகக் காணமுடிந்தது. பிற பாகங்கள் ஒருவரே கையில் எடுத்துச்செல்லும் வகையில் இருந்தன.
பல பாகங்களாக இருந்த அவைதரை தளத்திலிருந்து விமானத்தின் உச்சிப் பகுதிக்கு மிகவும் கவனமாக எடுத்துச்செல்லப்பட்டு அமைக்கப்பட்டதை நேரில் காண முடிந்தது. 

அதற்கு முன்பாக சிவாச்சாரியார்கள், ஓதுவார்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஊழியர்கள் மூலமாக சில பாகங்கள் கயிறு கட்டி கீழிருந்து மேல் எடுத்துச் செல்லப்பட்டன. சில பாகங்களை கையிலேயே எடுத்துச் சென்றனர். இந்தக் கலசம் மகாபத்மா, ஆரடா, மகாகுடம், சிறிய ஆரடா, மலர், குமிழ் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டு அமைந்திருந்தது.  கலசத்தில் 225 கிலோ வரகு கொண்டு நிரப்பட்டது. கலசத்தின் பாகங்களை ஏற்றும்போது திரளான பக்தர்கள் குழுமியிருந்து பக்திப் பெருக்குடன் பார்த்தனர். கலசத்தின் பாகங்கள் கீழிருந்து மேலே ஏற்றப்படும்போது பலர் சிவ புராணம் பாடுவதைக் காண முடிந்தது. 









பெருவுடையார் சன்னதி கலசத்துக்கு மட்டும் 190 கிராமும், மற்ற சன்னதிகளின் கலசங்களுக்கு 144 கிராமும் என மொத்தம் 334 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.












மூலவர் விமானக் கலசம் தற்போது அமைக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட சன்னதிகளின் மீதும் தங்க முலாம் பூசப்பட்ட கலசம் பொருத்தும் பணி தொடர்ந்து இன்று (31 ஜனவரி 2020) அன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தனர். யாகசாலை பூஜைக்காக பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக அங்கே நடைபெற்று வருவதைக் காணமுடிந்தது.  வருகின்ற புதன்கிழமையன்று நடைபெறுகின்ற குடமுழுக்கினைக் காண்போம்.  ஈசன் அருள் பெறுவோம்.



புகைப்படங்கள் எடுக்க உதவி : உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி

நன்றி:
  • தஞ்சை பெரிய கோயில் விமானத்தில் கலசம் பொருத்தம், தினமணி, 31 ஜனவரி 2020
  • தஞ்சாவூர் பெரிய கோயிலின் 216 அடி உயர கோபுரத்தில் விமான கலசம் மீண்டும் பிரதிஷ்டை:   6 மணி நேரத்துக்கு பிறகு உச்சியை அடைந்தது, இந்து தமிழ், 31 ஜனவரி, 2020
  • தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தில் 12 அடி உயர தங்க கலசம் பிரதிஷ்டை, தினகரன், 31 ஜனவரி 2020
  • தஞ்சை பெரிய கோயிலில் 12 அடி உயர கலசம் பிரதிஷ்டை, தினமலர், 31 ஜனவரி 2020
  • மற்றும் பிற இதழ்கள், தளங்கள்

17 comments:

  1. மிக மிக நன்றி முனைவர் ஐயா. மாபெரும் சரித்திர நிகழ்ச்சி.
    நல்ல முயற்சிகள் அற்புதமாக வெற்றி பெரும்.
    இறை வழிபாடு நம்மை நல்வழிப்படுத்தும்.
    நாடு செழிக்கும். மக்கள் நலம் பெறுவர்.
    தங்களுக்கும் மனைவி திருமதி பாக்கியவதிக்கும் மனம் நிறை நன்றி.
    படங்கள் அற்புதம்.

    ReplyDelete
  2. அழகிய புகைப்படங்களின் வழி எம்மையும் தரிசிக்கும் பாக்கியத்தை தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. தாங்கள் கூறியிருக்கும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருவிழாவில் கலந்து கொள்ள இயலாத குறையைத் தங்கள் பதிவு நீக்கியுள்ளது...

    ReplyDelete
  4. வரம் பெற்று வந்தவர்கள் காணக்கூடிய நிகழ்வுகள்.
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. படங்கள் அருமை
    மகிழ்நதேன் ஐயா

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    அற்புதமான நிகழ்வு. கோபுர தரிசனங்கள்
    கண்டு கொண்டேன். அனைத்துப் படங்களும் நன்றாக இருந்தன. அங்கு சென்று தரிசிக்க முடியாத குறையை தங்கள் பதிவு போக்கி யது. சிவ. சிவ எனக் கூறி தரிசித்து ஆனந்தமடைந்தேன். மிக்க மகிழ்வாக உள்ளது. பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. இறக்கி வைக்கப்பட்டிருந்த கலசத்தை (புகைப்படங்களை) வாட்ஸாப்பில் அனுப்பியிருந்தார்கள் நண்பர்கள்.  உங்கள் தளத்தில் அழகிய படங்கள் வாயிலாக மீண்டும் பொருத்தப்பட்டிருப்பதையும் பார்க்க முடிந்ததில் சந்தோஷம்.

    ReplyDelete
  8. பெருவுடையார் கோவிலுக்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு யானைக்குட்டி வாங்க வேண்டும் என்று ஒரு தஞ்சை நண்பர் வாட்ஸாப் அனுப்பியிருந்தார். 

    ஏனோ?

    ReplyDelete
  9. படங்கள் மூலம் நிகழ்வுகள் சிறப்பு... நன்றி ஐயா...

    ReplyDelete
  10. படங்கள் மூலம் நேரில் கலந்து கொண்ட உணர்வு.


    அடுத்து குடமுழுக்கினை இறை அருளால் கண்டு எங்களையும் காணவையுங்கள்.

    நன்றி.

    ReplyDelete
  11. நான் நேரில் சென்று பார்க்க முடியவில்லையே என்ற குறையை உங்கள் பதிவு போக்கி விட்டது. படங்களும் விரிவான விபரங்களும் மிக அருமை!

    ReplyDelete
  12. பார்க்க முடிந்ததைப் ப்கிரவும் செய்ததற்கு நன்றி சார்

    ReplyDelete
  13. உங்கள் மூலம் நாங்களும் கண்டுகாண முடிந்தது முனைவர் ஐயா. மிக்க நன்றி.

    சிறப்பான நிகழ்வுகளை உங்கள் மூலம் கண்டு களித்தோம்.

    ReplyDelete
  14. எவ்வளவு எஃபர்ட்.. அதை நேரில் பார்ப்பதுபோல் படம் பிடித்துப் போட்டதற்கு நன்றி சார். கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற பிரார்த்தனைகள். எங்களுக்கும் சேர்த்து நீங்கள் இருவரும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.:)

    ReplyDelete
  15. மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படங்கள் எடுத்து உதவிய உங்கள் மனைவிக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். கலசம் அமைத்தது பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். துரையின் பதிவிலும் பார்த்தேன். இங்கே நீங்கள் நேர்முக வர்ணனையே கொடுத்திருக்கிறீர்கள். வர்ணனையும் அனைத்துப் படங்களும் அருமையாக இருக்கின்றன. நேரில் பார்க்க முடியாத குறையைத் தீர்த்து விட்டது.

    ReplyDelete
  16. மிக அழகிய காட்சிகளை எங்களுக்கும் காண தந்தமைக்கு நன்றிகள் ஐயா...

    ReplyDelete