Showing posts with label களப்பணி. Show all posts
Showing posts with label களப்பணி. Show all posts

28 April 2023

தட்டச்சு ஒரு கலை

தட்டச்சு என்பது ஒரு கலை. தட்டச்சு கற்பது வளரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனளிக்கும். அதிக வேகம், அதே சமயம் நிதானம் போன்றவற்றை தட்டச்சுப்பயிற்சியில் பெறலாம். புதிய சொற்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். நினைவாற்றல் மேம்படும். மொழியறிவு வளரும். தட்டச்சுத் தேர்வினை எழுதிவிட்டு, கணினியில் தட்டச்சு செய்தால் இன்னும் பல உத்திகளைக் கைக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களும், பணிக்கு விண்ணப்பிப்போரும் தம் தகுதியை மேம்படுத்திக்கொள்ள தட்டச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்தக் கோடை விடுமுறையை நன்கு பயன்படுத்தும் விதமாக மாணவர்கள் தட்டச்சுப்பயிற்சியில் இப்போதே ஈடுபட ஆரம்பிக்கலாம்.

50 ஆண்டு கால தட்டச்சு இப்போது எனக்குத் தந்த ஓர் அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நான் தட்டச்சு பயின்ற கும்பகோணம் ஈஸ்வரன் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தையும், கும்பகோணம் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

சோழ நாட்டில் பௌத்தம் நூலின் மேலட்டை


2018இல் பாரத் தட்டெழுத்துப்பயிற்சி நிலையத்தில் நிறுவனர் திரு பாஸ்கரன் அவர்களுடன்

அண்மையில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் (புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் 635 112, செப்டம்பர் 2022, அலைபேசி: +91 9842647101, +91 6374230985, மின்னஞ்சல் : editorpudhuezuthu@gmail.com) வெளியானது. அந்நூலை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் எதிர்கொண்ட அனுபவங்களில் ஒன்று தட்டச்சு தொடர்பானது.

ஆங்கில நூலுக்கான முதல் மெய்ப்பினை (ஒரு பகுதி மட்டும்/சுமார் 80 பக்கங்கள்/ஏ4 தாள்) திருத்தும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். இதனை மொழிபெயர்த்துக் கணினித்தட்டச்சு செய்யும்போது நான் கூகுளையோ, ஸ்பெல்செக்கரையோ பயன்படுத்தவேயில்லை. முழுக்க முழுக்க நேரடியாக மொழிபெயர்த்துவருகிறேன். ஐயமேற்படும்போது அகராதிகளைத் துணைகொள்கிறேன். தேவைப்படும் இடங்களில் கூடுதலாகச் செய்தியைச் சேர்க்கிறேன். இவ்வாறாக 80 பக்கங்களின் மெய்ப்புத் திருத்தப்பணியை மேற்கொண்டபோது இரு இடங்களில் மட்டுமே தட்டச்சுப்பிழை (Only two words were found with spelling mistake) இருந்தது. இவ்விரு இடங்களைத் தவிர எங்கும் சொற்பிழை காணப்படவில்லை என்பதை எனக்கு வியப்பினைத் தந்தது. வந்த சொல் பலமுறை வருதல், கூறியது கூறல், சொற்கள் இடம் மாற்றம், சாய்வெழுத்து அமைப்பு, அடிக்கோடுடன் சொல் அமைப்பு, போன்றவற்றில் பல தவறுகளும், விடுபாடுகளும் காணப்பட்டாலும் மிகவும் குறைவான சொற்பிழையே இருந்தது. இதற்குக் காரணம் கடந்த 50 ஆண்டுகளாக நான் ஈடுபட்டுவரும் தட்டச்சுப்பணி அனுபவமே என நினைக்கிறேன்.

1970களின் இடையில் முதன்முதலாக ஆங்கிலத்தட்டச்சு சேர்ந்த காலகட்டத்திலேயே தட்டச்சுத்தேர்வுக்குத் தயாராகும்போது வைக்கப்படுகின்ற வகுப்புத்தேர்வில் பல முறை நான் பிழையே இன்றி தட்டச்சு (Typed matter with NIL mistake) செய்துள்ளேன். நான் தட்டச்சு செய்தவற்றில் எத்தனை பிழைகள் உள்ளன என்பதைக்கூட கூறிவிடுவேன். அப்போதெல்லாம் தட்டச்சு செய்யும்போதே எந்த இடத்தில் தவறு வருகிறது என்பதையும் மனதில் கொண்டு, தட்டச்சு செய்யப்பட்ட தாளில் இவ்வளவு எண்ணிக்கையில் தவறு உள்ளது என்று உறுதியாகக்கூறுவேன். நான் சொல்லுமளவிற்கு தட்டச்சுப்பிழையின் எண்ணிக்கை இருக்கும். அப்பழக்கம் என்னையும் அறியாமல் இன்னும் தொடர்கிறது.

18 November 2022

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு : நிகரிலி சோழன் விருது

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், தென்னக பண்பாட்டு ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் சார்பாக 3 ஆகஸ்டு 2022ஆம் நாள் ஆடிப்பெருக்கன்று மாமன்னர் இராஜராஜ சோழர் முடிசூடிய 1037ஆவது ஆண்டு விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெத்தண்ணன் கலையரங்கில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. வரலாற்றுத்தேடல் குழுவின் தலைவர் திரு உதயசங்கர் தலைமை தாங்க,  தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் கட்டடக்கலைத்துறைத் தலைவரும் தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத்தலைவருமான முனைவர் கோ.தெய்வநாயகம்  திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சண்முக செல்வகணபதி, திரு கயிலைமாமணி செ.இராமநாதன், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் உதவிப்பேராசிரியர் முனைவர் த.ரமேஷ், இந்து அறநிலையத்துறையின் முன்னாள் செயல் அலுவலர் து.கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதே மேடையில் நானும் சிற்றுரையாற்றினேன். 



நிகழ்விற்குப் பின் பெருவுடையாருக்கும், ராஜராஜனுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அடுத்த நிகழ்வான மரபு நடையின்போது பெரிய கோயிலின் சிறப்புகளையும் கல்வெட்டுச் செய்திகளையும் சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் தெளிவாக எடுத்துரைத்தனர்.





மாலை தஞ்சை நட்ராஜ் நாட்யாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம், வீணை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழுவின் பொருளாளர் திரு ஆண்டவர் கனி நன்றி கூற விழா இனிதே நிறைவேறியது.









இவ்விழாவில் நிகரிலி சோழன் விருது வரலாற்று அறிஞர்கள், வளரும் ஆய்வாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் வழங்கப்பட்டது. நானும் இவ்விருதினைப் பெற்றேன். விருதினை எனக்கு வழங்கிய குழுவினருக்கு என் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் காலை முதல் இரவு வரை விழாவினை சிறப்பாக நடத்தினர்.  அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஒளிப்படங்கள் நன்றி: சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு


முந்தைய விருதுகள்
சித்தாந்த இரத்தினம், 1997


அருள்நெறி ஆசான், 1998

பாரதி பணிச்செல்வர், 2001







அருமொழி விருது, 2021


***************************
விரைவில் வெளிவரவுள்ள என் நூல் 

***************************

13 May 2022

கோயில் உலா : 7 மே 2022

7 மே 2022 அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த இவ்வுலாவின்போது விளமல், பெருவேளூர், தலையாலங்காடு, சிக்கல், எண்கண், தேவூர், பள்ளியின்முக்கூடல், திருவாரூர் (மூன்று கோயில்கள்) உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்றோம். அவற்றில் திருவாரூர் கோயில்கள்  முன்னர் நான் பார்த்த கோயிலாகும்.

இவற்றுள் விளமல், பெருவேளூர், தலையாலங்காடு, சிக்கல், தேவூர், பள்ளியின்முக்கூடல், திருவாரூர் ஆகிய தலங்கள் காவிரியின் தென் கரையிலுள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களாகும். எண்கண் தலத்தில் மூலவர் சிவன். அங்கு முருகனுக்காக தனி சன்னதி உள்ளது.

காலை 7.00 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து கிளம்பி, வரும் வழியில் காலை சிற்றுண்டியை முடித்தோம். நாங்கள் பயணித்த முதல் கோயிலான விளமலில் குழுவினர் இறைவனின் முன்பாக சிவபுராணம்  ஓதினோம். வழிபாட்டிற்குப் பின் தொடர்ந்து பயணித்தோம்.

பதஞ்சலி மனோகர்-யாழினும் மென்மொழியம்மை 
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்
தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் திருவாரூருக்கு அருகில் 3 கிமீ தொலைவில் உள்ளது. 
பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.


அபிமுக்தீஸ்வரர்-ஏலவார்குழலி 
ஞானசம்பந்தர், நாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்
கும்பகோணம்-திருவாரூர் சாலையில் உள்ளது. 
மாடக்கோயில்.
கௌதம முனிவர், பிருங்கி முனிவர் வழிபட்ட தலம்.
முருகப்பெருமான் வழிபட்டதால் வேளூர்.
பெருவேள் என்பவன் வாழ்ந்த இடமாதலால் பெருவேளூர்.



ஆடவல்லநாதர்-திருமடந்தை 
நாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்.
கும்பகோணம்-திருவாரூர் சாலையில் பெருவேளூர் அருகில் உள்ளது. 
கபில முனிவர் வழிபட்ட தலம்.
தாருகாவன முனிவர்கள் அனுப்பிய முயலகனை அடக்கி அவன் முதுகில் இறைவன் திருநடனம் புரிந்த தலம். 


மேற்கண்ட கோயில்களுக்குச் சென்றுவிட்டு மதிய உணவிற்குப் பின் சிக்கல் கோயிலில் சற்று இளைப்பாறினோம்.  

நவநீதேஸ்வரர்-வேல்நெடுங்கண்ணி 
திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் உள்ளது. 
மாடக்கோயில்.
மூலவருக்கு வலது புறம் முருகன் சன்னதி (சிக்கல் சிங்காரவேலர்) புகழ் பெற்றது. 
திருமால் வழிபட்ட தலம்.

இக்கோயிலில் குடமுழுக்குப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் விமானங்களும், கோபுரங்களும் மூடப்பட்டிருந்ததால் ஒளிப்படங்கள் எடுக்க முடியவில்லை. இறைவனை தரிசித்துவிட்டு அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்தோம். 

தேவபுரீஸ்வரர்-தேன்மொழியம்மை 
ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
கீழ்வேளூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது. 
மாடக்கோயில்.
தேவர்கள் வழிபட்டதால் தேவூர். 





பிரம்மபுரீஸ்வரர்-பெரியநாயகி
இங்குள்ள முருகன் சன்னதி புகழ்பெற்றது. இந்த முருகன் சிற்பத்தைச் செதுக்கிய சிற்பி எட்டுக்குடி, சிக்கல் ஆகிய முருகன் கோயில்களில் உள்ள சிற்பங்களைச் செதுக்கியவர் என்று கூறப்படுகிறது.
மூலவர், இறைவி, முருகன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. சிக்கலைப் போலவே இங்கும் மூலவர் சன்னதிக்கு இடப்புறத்தில் முருகன் சன்னதி உள்ளது. 




நாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்.
திருவாரூர் கோயிலிலிருந்து சுமார் 6 கி.மீ.தொலைவில் உள்ளது. 
ஜடாயு வழிபட்டு பேறு பெற்றதால் குருவிராமேஸ்வரம் எனப்படுகிறது.
13 மே 2022ல் குடமுழுக்கு



வன்மீகநாதர்-கமலாம்பிகை.
5 வேலி பரப்பளவுடைய கமலாலயம்.
மூவர் பாடல் பெற்ற தலம்.

அகிலேஸ்வரர்-வண்டார்குழலி.
திருவாரூர் கோயிலுக்குள் உள்ளது.

தூவாய்நாதர்-பஞ்சின்மென்னடியாள்
தேர்நிலைக்கு அருகில் கீழ வீதியில் உள்ளது.
சுந்தரர் பாடல் பெற்ற தலம்.
அண்மையில் குடமுழுக்கு ஆன கோயில்.


திருவாரூர் தொடர்புடைய, பாடல் பெற்ற மூன்று கோயில்களிலும் தரிசனத்திற்குப் பின் திருவாரூரில் இரவு சிற்றுண்டிக்குப் பிறகு சுமார் 9.30 மணிவாக்கில் கிளம்பினோம், தஞ்சாவூரை நோக்கி, மன நிறைவுடன். 

விக்கிப்பீடியாவில் உள்ள பதிவுகளில் நாங்கள் சென்ற கோயில்கள் தொடர்பாக கட்டுரைகளில் ஒளிப்படங்கள் இல்லாதவற்றில் நான் எடுத்த ஒளிப்படங்களை இணைத்து மேம்படுத்தினேன். 

துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • விக்கிப்பீடியா

முந்தைய கோயில் உலாக்கள்

15 April 2022

மயிலாப்பூர் சப்த சிவத்தலங்கள்

மார்ச் 2022இல் அறக்கட்டளைச்சொற்பொழிவிற்காகச் சென்னை சென்றிருந்தபோது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் விழா நடைபெற்றுக்கொண்டிருந்ததை அறிந்தேன்.

அப்போது எனக்குக் கும்பகோணத்தில் கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு சென்றது நினைவிற்கு வந்தது. கோயிலைச் சுற்றி பெரிய அழகான வீதிகள். அதிகாரநந்தியின்மீது கபாலீஸ்வரர் உலா வரும் காட்சியைக் கண்டு ரசித்து உடன் சிறிது தூரம் சென்றேன். அழகான பெரிய குளத்தைக் கண்டு சிறிது நேரம் அங்கே நின்றேன்.

கபாலீஸ்வரர் கோயிலுடன் தொடர்புடைய கோயில்கள் மயிலாப்பூரில் இருப்பதாகவும், அவற்றை ஒரே நேரத்தில் தரிசிப்பது சிறப்பு என்றும் கூறினர். அவை 1) கபாலீஸ்வரர் கோயில், 2) காரணீஸ்வரர் கோயில், 3) வெள்ளீஸ்வரர் கோயில், 4) மல்லீஸ்வரர் கோயில், 5) விருப்பாட்சீஸ்வரர் கோயில், 6) வாலீஸ்வரர் கோயில், 7) தீர்த்தபாலீஸ்வரர் கோயில் என்பனவாகும். இவற்றில் தீர்த்தபாலீஸ்வரர் கோயில் திருவல்லிக்கேணியில் உள்ளது. அனைத்துக் கோயில்களுக்கும் அடுத்தடுத்து சென்று சுமார் இரண்டு மணி நேரத்தில் தரிசனத்தை நிறைவு செய்தேன்.


கபாலீஸ்வரர் கோயில் விமானம்
அதிகாரநந்தியின்மீது கபாலீஸ்வரர் உலா

கபாலீஸ்வரர் கோயில் குளம்


வெள்ளீஸ்வரர் கோயில் விமானம்

மல்லீஸ்வரர் கோயில் விமானம் 

விருப்பாட்சீஸ்வரர் கோயில் நுழைவாயில்

தீர்த்தபாலீஸ்வரர் கோயில் நுழைவாயில்

வாலீஸ்வரர் கோயில் நுழைவாயில்

காரணீஸ்வரர் கோயில் விமானம்

ஏழு சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, மாதவப்பெருமாள் கோயிலுக்கும், முண்டகக்கண்ணியம்மன் கோயிலுக்கும் சென்றேன்.



அட்டவீரட்டத்தலங்கள், சப்தஸ்தானத்தலங்கள், சப்தமங்கைத்தலங்கள் என்பதைப் போல இக்கோயில்களை சப்த சிவத்தலங்கள் என்று கூறுகின்றனர். கும்பகோணத்தில் மகத்தின்போதும் பிற விழாக்களின்போதும் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுள்ளேன். அத்தகைய கோயில்களுக்குச் சென்ற நினைவினை மயிலாப்பூரில் உணர்ந்தேன். மன நிறைவோடு அங்கிருந்து திரும்பினேன்.

இவற்றுள் காரணீஸ்வரர் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில், மல்லீஸ்வரர் கோயில், விருப்பாட்சீஸ்வரர் கோயில், வாலீஸ்வரர் கோயில், முண்டகக்கண்ணியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு விக்கிப்பீடியாவில் பதிவு இல்லாத நிலையில் புதிய பதிவுகளை தொடங்கி உரிய ஒளிப்படங்களை இணைத்தேன். தீர்த்தபாலீஸ்வரர் கோயில் பதிவு இருந்த நிலையில் ஒளிப்படத்தை இணைத்தேன். இணைப்புகளைச் சொடுக்கி விக்கிப்பீடியாவில் நான் ஆரம்பித்த கட்டுரைகளைக் காண அழைக்கிறேன். தொடர்ந்து அப்பதிவுகளை மேம்படுத்துவேன்.