Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

28 December 2019

ஏடகம் வரலாற்று உலா : 7 டிசம்பர் 2019 : கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கடந்த வாரம் கோயில் உலா சென்ற நாம், இந்த வாரம் வரலாற்று உலா செல்வோம். வாருங்கள்.
தஞ்சாவூரில் இயங்கி வருகின்ற கல்வி சமூக மேம்பாட்டு மையமான ஏடகம் அமைப்பின் சார்பாக கானாடுகாத்தான் அரண்மனை, ஆத்தங்குடி அரண்மனை, ஆத்தங்குடி மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை, மருதுபாண்டியர் நினைவிடம், காளையார்கோயில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்கு வரலாற்று உலா சென்றோம். அப்போது இரு பாண்டியர் காலக் கல்வெட்டுகளைக் கண்டோம். கல்வெட்டு கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.
எங்கள் உலாவின்போது கானாடுகாத்தான் தொடங்கி பல ஊர்களுக்குச் சென்றோம். மருதுபாண்டியர் நினைவிடத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது உள்ளூரைச் சேர்ந்த திரு பாரதிதாசன் என்பவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார். அவர் அப்பகுதியில் இரு கல்வெட்டுகள் இருப்பதாகக் கூறினார். எங்களின் வரலாற்று உலா, தேடல் உலாவாக மாறியது.  
அவருடைய வழிகாட்டலில் சுமார் 1 கிமீ தொலைவிற்கு நடந்து சென்றோம். உலாவின் போது வந்த பல நண்பர்கள் கல்வெட்டினைக் காணும் ஆர்வத்தோடு உடன் வந்தனர். பாதையே தெரியாமல் செடிகளுக்குள் புகுந்து சென்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சிறிது தூரம் சென்றபின்னர் அவர் அங்கு இடிபாடான நிலையிலிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்தார். 
முன்னரே அந்தக் கல்வெட்டைப் பார்த்தாகக் கூறிய அவர், எங்கிருக்கிறது என்பதை மறந்துவிட்டார். பின்னர் அவருடன் நாங்களுக்கும் அந்தக் கட்டடத்தைச் சுற்றி வந்தும், உள்ளே சென்றும் தேடினோம். இறுதியில் அதனைக் கண்டோம்.  அவ்வாறே அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு எங்களை அவர் அழைத்துச்சென்று அங்கும் ஒரு கல்வெட்டினைக் காண்பித்தார். எங்களோடு அவர் ஆர்வமாக வந்ததும், கல்வெட்டினைப் பற்றிக் கூறியதும், தேடியதும் எங்களை வியக்க வைத்தன. கல்வெட்டுகளைச் சுத்தம் செய்து அவற்றிலிருந்து குறிப்புகளை எடுக்க அவரும் நண்பர்களும் பெரிதும் உதவினர். அவருக்கு நாங்கள் நன்றி கூறிவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.  



சிவகங்கையிலிருந்து கிழக்கில் 18 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து தெற்கில் 30 கி.மீ. தொலைவிலும் காளையார்கோயில் உள்ளது. இவ்வூரின் பழம் பெயர் கானப்பேரெயில், திருக்கானப்பேர், தலையிலங்கானம் என்பனவாகும். சங்க காலத்தில் வேங்கைமார்பன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாண்டியர்களாலும், மதுரை நாயக்க மன்னர்களாலும், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களாலும், சிவகங்கை மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. மருது சகோதரர்களுக்கு பலமிக்க கோட்டையாகத் திகழ்ந்தது. பிறகு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.
பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கானப்பேர் என்று அழைக்கப்படும் காளையார் கோயிலில் உள்ள சிவாலயத்தில் காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்ற மூன்று சன்னதிகள் உள்ளன. சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள ராஜகோபுரம் மருது சகோதரர்களால் கட்டப்பட்டது. சுந்தரேசர் ஆலயமும், காளீஸ்வரர் ஆலயம் முன்னுள்ள கோபுரமும் வரகுணபாண்டியனால் தோற்றம் பெற்றதாகும்.
சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பேரெயில் என்ற அரண் அமைத்து சிங்களப்படைகளை வென்று ஆட்சி செய்த மன்னன் வேங்கைமார்பன் ஆவான். இம்மன்னன் காலத்தில் ஆழம் நிறைந்த அகழியினையும், நிகர்ந்த பெரும் மதில்களையும், அடர்ந்த காவற்காட்டினையும் உருவாக்கி பகைவர் எளிதில் கைப்பற்ற முடியாத ஒரு பேரூராக காளையார்கோயிலைத் தோற்றுவித்தான். கடைச்சங்க காலப் பாண்டிய மன்னன் விக்கிரபெருவழுதி, பெரும்படையுடன் கானப்பேரெயிலைக் கைப்பற்றினான். கானப்பேரெயிலை சுற்றி இருக்கும் காடுகளின் அடர்த்தி தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். சோழப் பேரரசு காலத்திலும் இக்காட்டுப் பகுதி பரந்து விரிந்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரையிலும், அதேபோல் திண்டுக்கல், அழகர்கோயில் வரையிலும் பரந்த பகுதியாகும். இதன் வடக்கு எல்லையாய் கானாடுகாத்தான் அமைந்துள்ளது.
மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் தங்களின் பெரும் படையினை இவ்வூரின் வழியே வழிநடத்தி ஈழம் சென்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கி.பி.1325இல் வருகை தந்த அரபு நாட்டுப் பயணி திமிஸ்கி என்பார் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவர்தம் பயணக்குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஓர் ஊராக இவ்வூரினைப் பதிவு செய்துள்ளார்.

முதல் கல்வெட்டு:
காளையார்கோயில் சிவன் கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப்பெரும் கண்மாயின் உள் பகுதியில்,  பிற்காலத்தில் மருதுபாண்டியர்களால் கட்டப்பெற்ற நாணயசாலைக் கட்டடம் பழுதுற்று புதர் மண்டிக் கிடக்கின்றது. அதன் வாயிற்படியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த, உடைந்த நிலையில் உள்ள துண்டுக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.





வலமிருந்து:  ஜம்புலிங்கம், மணி.மாறன், பாரதிதாசன், தில்லை கோவிந்தராஜன்

  


இக்கல்வெட்டின் வரிகள் பின்வருமாறு உள்ளது.   
1.    ……………….கும் நெய்யமுது
2.    ஞ் திண்புறமாக(ம்)
3.    தொம் உடையார்
4.    டிஇமமாள்ளான அகொர
5.    பிர மா காரயன் எழுத்து
6.    இப்படிக்கு பாண்டியதேவ பிரமராயன்
உள்ளது. இது கோயிலுக்கு நெய்யமுது போன்ற தானம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

இரண்டாவது கல்வெட்டு:
இவ்வூரில் முத்துவடுகநாத தேவர் நினைவிடத்திற்கு அருகில் மற்றொரு பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது. 



இக்கல்வெட்டின் வரிகள் பின்வருமாறு உள்ளது.   


1.    ஸ்வதிஸ்ரீ ஸ்ரீதிரிபுவன……………
2.    கொனெரிமை கொண்டான்……………
3.    சதுர்போதி மங்கலம் உ……………
4.    தெவர்கு யாண்டு இரண்டு…………..
5.    ஙய கூல பொகம்…………
6.    திருவிடையாட்டம்………

உள்ளது. பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட திருவிடையாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
காளையார்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் புதிய இரண்டு துண்டுக் கல்வெட்டுகளைக் கண்டறிய முடிந்தது. இவை முழுமையாக இல்லை. இதன்மூலம் வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து கிளம்பினோம். அன்றைய நாளில் நாங்கள் உலா சென்றதைப் பற்றிய அனுபவங்களை பிறிதொரு பதிவில் காண்போம். 

 






நன்றி:
  • ஏடகம் நிறுவனர் முனைவர் மணி.மாறன்
  • திரு தில்லை. கோவிந்தராஜன்
  • கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்க உதவிய திரு பாரதிதாசன்
  • உடன் வந்ததோடு, புகைப்படம் எடுத்து உதவிய நண்பர்கள்
  • செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள்
31.12.2019 அன்று மேம்படுத்தப்பட்டது

13 July 2019

தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகம்

வங்கக்கடலோரத்தில் அமைந்துள்ள தரங்கம்பாடி பகுதியில் அண்மையில் பயணித்தபோது டேனிஷ் கோட்டை என அழைக்கப்படுகின்ற தரங்கம்பாடி கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ள கடல்சார் அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். 


  நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் டேனிஷ் இந்திய கலாச்சார மையம், தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகம் (Danish Indian India Cultural Centre, Tranquebar Maritime Museum) என்ற பெயர்ப்பலகையைக் கண்டோம். நுழைவாயிலை அடுத்து உள்ளே சென்றதும் கடல் சங்குகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதில் அவற்றைப் பற்றிய ஆன்மிக விளக்கங்கள் தரப்பட்டிருந்தன.


 அப்பகுதியைக் கடந்து உள்ளே சென்றதும் அங்கு தனியாக உள்ள ஒரு அறையின் நுழைவாயிலில் Tranquebar Maritime Museum என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

  







 அங்கு கடல் சங்குகள், அணிகலன்கள், கடலில் கண்டெடுத்த குதிரையின் வடிவம், குதிரையின் பல் போன்றவை இருந்தன. அத்துடன் பல வகையான பீங்கான் பொருள்கள் பல வண்ணங்களில், பல அளவுகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அனைத்துப் பொருள்களும் காட்சிப்பேழையில் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன. புதிய ரக கட்டு மரத்தின் மாதிரி ஒன்று மிகவும் அழகாக இருந்தது. பல அளவுகளில் மண் பானைகள், குடுவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


  
இந்த அருங்காட்சியகத்தில் காணப்படுபனவற்றில் பெரும்பாலான பொருள்கள் கடலில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதை அறியமுடிந்தது. அந்த அறையின் நடுவில் அழகான படகு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. படகினை நேரில் பார்க்க விரும்புவர்கள் இதனைப் பார்த்து படகின் அமைப்பினைத் தெரிந்துகொள்ளமுடியும். அருங்காட்சியக வளாகத்தில் இரு சிறிய படகுகள் காணப்பட்டன.
இவ்வருங்காட்சியகம் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும், மாலை 2.30 முதல் 6.00 மணி வரையிலும் இயங்குகிறது. தரங்கம்பாடிக்குச் சுற்றுலா வருபவர்கள், குறிப்பாக குழந்தைகளும் மாணவர்களும்  பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.


நன்றி
24 ஏப்ரல் 2019 பயணத்தில் உடன் வந்ததோடு, குறிப்புகள் எடுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி

இப்பகுதியில் முன்னர் நாம் பார்த்தது
தரங்கம்பாடி மாசிலாதர் கோயில்

02 February 2019

கோடியக்கரை : "அழகான பிரதேசம்"

"கோடிக்கரையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. அந்தப் பிரதேசம் மிக அழகாயிருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இச்சந்தர்ப்பத்தில் அதையும் பார்த்துவிடலாம்" என்று நந்தினி ஆசைப்பட்டதைப் போல கோடியக்கரை மீது அனைவருக்கும் ஆசை வருவது இயல்பே. அண்மையில் கோடியக்கரைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கோடியக்கரையைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையைக் காண்பதற்கு முன்பாக கோடியக்கரை பற்றி கல்கி பொன்னியின் செல்வனில் கூறுவதைப் பார்ப்போம்.  பின் கோடியக்கரை செல்வோம், வாருங்கள்.

“கோடிக்கரையிலிருந்து காவேரிப்பூம்பட்டினம் வரையில் சோழ நாட்டுக் கடற்கரையோரங்களில் வாயு பகவானின் லீலை செய்த வேலைகளை நன்கு பார்க்கும்படியிருந்தது. எத்தனையோ மரங்கள் வேரோடு பெயர்ந்தும், கிளைகள் முறிந்தும் கிடந்தன. வீடுகளின் கூரைகளைச் சுழிக்காற்று அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டு போய்த் தூர தூரங்களில் தூள் தூளாக்கி எறிந்து விட்டிருந்தது. குடிசைகள் குட்டிச் சுவர்களாயிருந்தன. கோடிக்கரைப் பகுதியில் எங்கே பார்த்தாலும் வெள்ளக் காடாயிருந்தது. கடல் பொங்கி வந்து பூமிக்குள் புகுந்து விட்டதோ என்று தோன்றியது. ஆனால் பூமிக்கும் கடலுக்கும் மத்தியில் இருந்த வெண்மணல் பிரதேசம் அந்தக் கொள்கையைப் பொய்ப்படுத்தியது. அந்த வெண்மணல் பிரதேசத்தில் ஆங்காங்குப் புதைசேறு இருந்த இடங்களில் மட்டும் இப்போது அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படிப்பட்ட இடங்களில் இப்போது மனிதனோ மிருகமோ இறங்கி விட்டால், உயிரோடு சமாதிதான்! யானைகளைக் கூட அப்புதை சேற்றுக் குழிகள் இப்போது விழுங்கி ஏப்பம் விட்டு விடும்!... சுழிக்காற்று அடித்த இரண்டு நாளைக்குப் பிறகு கோடிக்கரைக்குப் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய பரிவாரங்களும் வந்து சேர்ந்தார்கள்.”
 






 
கோடியக்கரை வன உயிரனச் சரணாலயம், (Point Calimere Wildlife and Bird Sanctuary) நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி,   நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள சரணாலயமாகும்.

17.26 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்தச் சரணாலயத்தில் பல வகையான 100க்கும் மேற்பட்ட அரிய பறவை இனங்களும், கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு போன்ற விலங்குகளும் காணப்படுகின்றன. அண்டார்டிக்கா பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருவதாகக் கூறுகின்றனர். இங்குள்ள காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் என்ற வகையினைச் சார்ந்தவையாகும். 150 வகையான தாவர வகைகளையும் இங்கு காணலாம். இங்கு 1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது.

சிறந்த புவியலாளரும், வானவியலாளருமான தாலமி 1968க்கு முன் இதனைப் பற்றிப் பேசியுள்ளார். 
போர்த்துக்கீசிய வணிகர்கள் நாகப்பட்டினத்தில் தம் வணிகத்தை ஆரம்பித்த காலகட்டமான 16ஆம் நூற்றாண்டின் இடையில் கோடியக்கரை என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்ததாகும்.
1892க்கு முன்பாக கோடியக்கரையைச் சுற்றியுள்ள காடுகள் வருவாய்த்துறை மற்றும் கோயில் டிரஸ்டிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. வன நிர்வாகம் தொடர்பாக செயல்பாடுகள் 1892இல் ஆரம்பித்தன. அப்பகுதியில் இருந்த சன்யாசி முனிவர் கோயிலுக்கு அருகிலிருந்த இடம் ஆங்கிலேயர்களால் வேட்டையாடும் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
1911இல் அப்பகுதி திருச்சி தஞ்சாவூர் வனப்பிரிவு கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.  1922இல் சென்னை அரசின் மன்னார்குடி வருவாய்த்துறை அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
1938இல் கோடியக்கரை விரிவாக்கப்பகுதிகள் தற்போதுள்ள பகுதிகளோடு இணைக்கப்பட்டன.
1950இல் இதன் கட்டுப்பாடு திருச்சிராப்பள்ளி வனப் பிரிவின்கீழும், 1957இல் தஞ்சாவூர் பிரிவின் கீழும், 1965இல் சென்னை மாநில வனத்துறை அலுவலர் அலுவலகத்தின் கட்டுபாட்டிலும் வந்தது.
1962இல் பறவையியலாளர் சலீம் அலி இப்பகுதியின் முக்கியத்துவத்தினை வெளியுலகிற்கு எடுத்துரைத்தார்.
1967இல் காப்பகம் அமைக்கப்பட்டு, தஞ்சாவூர் வனப்பிரிவின் கட்டுப்பாட்டிலும், தொடர்ந்து 1986இல் நாகப்பட்டினம் வனப்பிரிவின் கட்டுப்பாட்டிலும் செயல்பட ஆரம்பித்தது.
வேதாரண்யத்திலிருந்து உப்பினை ஏற்றுமதி செய்ய 1936இல் ரயில்வே லைன் அமைக்கப்பட்டது. 1988இல் ரயில் சர்வீஸ் நிறுத்தப்பட்டு, 1995இல் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன.  இரண்டாம் உலகப்போரின்போது ராடார் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது.
1991 முதல் ஒவ்வோராண்டும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது.
1959 முதல் பம்பாய் இயற்கை வரலாற்று அமைப்பு (The Bombay Natural History Society) பறவைகளின் வருகை குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
9 மார்ச் 1998இல் 45 மீ. (148 அடி) உயரமுள்ள புதிய கலங்கரை விளக்கம் கோடியக்கரை கடற்கரை அருகே அமைக்கப்பட்டது.
வேகமாக வருகின்ற வாகனங்களால் விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1999இல் வேதாரண்யம் கோடியக்கரை சாலையில் அதிகமான வேகத்தடுப்பான்கள் அமைக்கப்பட்டன.
26 டிசம்பர் 2004 சுனாமியின்போது 3 மீ (10 அடி) உயர கடலலைகள் கடற்கரையைத் தாக்கின. அப்பகுதி முழுவதும் கடலால் சூழப்பட்டிருந்தது. சரணாலயம் பெரிய பாதிப்பின்றி இதனை எதிர்கொண்டபோதும், பெரிய அலைகளால் 5525 பேர் நாகப்பட்டின மாவட்டத்தின் பகுதிகளில் இறந்தனர்.

கோடியக்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தை பார்வையாளர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இப்பகுதிக்கு வர ஏற்ற மாதங்களாகும். பறவைகளைப் பார்க்க விரும்புவோர் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலும், விலங்குகளைப் பார்க்க விரும்புவோர் மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலும் இங்கு வரலாம்.
கோடியக்கரை கடற்கரையில் மனைவி திருமதி பாக்யவதியுடன்
சோழர் கால கலங்கரை விளக்கத்தில் ஆசிரியர் திரு சித்திரவேலுவுடன் 
கடற்கரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாவது தொடங்கி, தொடர்ந்து கோடியக்கரை சரணாலயம் பயணித்தோம். அங்கிருந்த பசுமையான செடிகளும், இயற்கைச்சூழலும் மனதிற்கு நிறைவாக இருந்தது. ஆங்காங்கே பறவைகளையும், சில விலங்குகளையும் காணமுடிந்தது. தமிழகத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இந்த சரணாலயம் இருப்பதை அறியமுடிந்தது. 

05 January 2019

பிருந்தாவனம் பூங்கா

பல திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த பிருந்தாவன் பூங்காவிற்கு ஆகஸ்டு 2017இல் சென்றிருந்தோம். இதற்கு முன் 1980களில் கோயம்புத்தூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நண்பர்களுடன் சென்றிருந்தபோதிலும் இப்போதைய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. 






















பிருந்தாவனம் தோட்டம் கர்நாடக மாநிலத்தில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையை அடுத்து, அதளை அழகுபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு அழகான பூங்காவாகும். மாண்டியாவில், ஸ்ரீரங்கப்பட்டின வட்டத்தில், மைசூரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 143 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

1927இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1932இல் நிர்மாணப்படி முடிவுற்றது. கிருஷ்ணராஜசாகரா படிநிலைப் பூங்கா என அழைக்கப்பட்ட இப்பூங்கா 60 ஏக்கருக்கும் மேல் மூன்று படிநிலைகளைக் கொண்டு, குதிரை லாட வடிவில் முடிவடைகிறது. உலகின் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்களில் (the most beautifully laid out terrace gardens) இதுவும் ஒன்றாகும். 

காஷ்மீரில் முகலாயர் பாணியில் அமைந்துள்ள ஷாலிமர் பூங்காவின் மாதிரியையொட்டி அமைக்கப்பட்டது. இதனை சிறப்புற செயல்படுத்தியவர் அப்போதைய மைசூர் அரசின் திவானாக இருந்த சர் மிர்சா இஸ்மாயில் ஆவார். அழகான வடிவத்திற்காகவும், பலவகையான செடிகளுக்காகவும், வண்ண மயமான விளக்கொளிக்கழகிற்காகவும் திகழும் இப்பூங்கா இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இரவில் விளக்கொளியில் பூங்காவின் அழகினை ரசித்துக்கொண்டே இருக்கத்தோன்றும். 

இப்பூங்கா முதன்மை வாசல், தெற்கு பிருந்தாவன், வடக்கு பிருந்தாவன் மற்றும் குழந்தைகள் பூங்கா என்ற நான்கு பிரிவாக அமைந்துள்ளது. 

முதன்மை வாசல்
புதுதில்லியில் உள்ள இந்தியா கேட் வடிவில் அமைக்கப்பட்டது. இரு புறமும் ரோஜாப்பூ தோட்டங்கள் உள்ளன. 

தெற்கு பிருந்தாவன்
காவிரி சிலைக்கருகே இப்பகுதி உள்ளது. சிலைக்கு முன்னே உள்ள காவேரியம்மா சர்க்கிளில் பெரிய அளவிலான நீர்வீழ்ச்சி (water fountain) உள்ளது. அங்கு பல வகையான வித்தியாசமான செடி வகைகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கு காணப்படுகின்ற நீர்ச்சாரல்கள் கண்களுக்கு இதமாக உள்ளன. மாலை நேரத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இவ்விடம் காணப்படும்.

வட பிருந்தாவன்
நான்கு அழகான படி நிலைகளில் நேர்த்தியாக அமைக்கப்பட்ட பாதைகள் உள்ளன. வரிசையாக செடிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் காண்போரைக் கவர்கிறது. சிறிய நீர் வீழ்ச்சிகள் ஆங்காங்கே உள்ளன. வட பிருந்தாவனுக்கும், தெற்கு பிருந்தாவனுக்கும் இடையே காவிரியாறு ஓடுகிறது. பார்வையாளர்கள் படகுப்பயணம் செய்ய வசதியுள்ளது.

குழந்தைகள் பூங்கா
தெற்கு பிருந்தாவன் அருகே வலப்புறத்தில் குழந்தைகள் பூங்கா உள்ளது. குழந்தைகள் விளையாடவும், பொழுதைப் போக்கவும் அதிகமான வசதிகள் அங்கு உள்ளன.

விளக்கொளியில் பூங்கா
புதன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.00 மணிக்கு பூங்கா மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பூங்காவைப் பற்றிய இணைய தளங்களில் விளக்கொளி நேரம் மாறிமாறி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்துகொள்வது நலம்.

மாலை 6.30 மணி முதல் 9.00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மைசூரிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இயக்கப்படுகின்றன. பெரியவர்களுக்கும், வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.

மைசூரிலிருந்து பேருந்தில் ஒரு இனிய மாலைப்பொழுதில் பிருந்தாவன் பூங்கா வந்துசேர்ந்தோம். டிக்கட் எடுக்க வரிசையாக கூட்டமாகக் காத்திருந்தோம். சூரியன் மறையும் வேளையில் நுழைந்த நாங்கள் ரசித்துக்கொண்டே உள்ளே சென்றோம். அதிகமான மேகக்கூட்டம் காரணமாக சூரியன் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் மாலையின் உணர்வு மனதிற்கு இதமாக இருந்தது. பூங்காவினைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்தது. அகன்றும் உயரமாகவும் வளர்ந்திருந்த மரங்கள், பரந்து விரிந்து கிடக்கின்ற புல் தரை, அழகான பூக்கள், இலைகளைக் கொண்ட செடிகள் போன்றவை மிகவும் ரம்மியமாக இருந்தன. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருப்பதைக் காணமுடிந்தது. அவ்வளவு கூட்டத்தையும் அந்த பூங்கா எதிர்கொண்டதைக் காணும்போது வியப்பாக இருந்தது.  நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமானது. 

மாலையில் இருந்த அழகினை விட மாறுபட்ட அழகினை தொடர்ந்து ரசித்தோம். தொடர்ந்து மின்னொளியில் பூங்காவின் அழகைக் கண்டு வியந்தோம். ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சிகள், படிகளில் நீர் இறங்கி வரும் விதம் பூங்காவின் ரசனையை நன்கு வெளிப்படுத்தியது. மின்னொளியில் அது இன்னும் அருமையாக இருந்தது. அங்கிருந்து கிளம்ப மனமின்றி திரும்பினோம், மைசூரை நோக்கி.  

நன்றி: 
விக்கிபீடியா
http://horticulture.kar.nic.in/brindavan.htm






நன்றி:
உடன் வந்ததோடு புகைப்படம் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி மற்றும் எங்கள் இளைய மகன் சிவகுரு 

கர்நாடக உலாவில் இதற்கு முன் நாம் பார்த்தவை : 
சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர்  
மைசூர் :  மெழுகுச்சிலை அருங்காட்சியகம் 
மைசூர் மிருகக்காட்சி சாலை


-------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் இம்மாதப் பதிவு :