25 April 2017

தமிழ்ப்பல்கலைக்கழகம் : 35 வருட நினைவுகள்

பணி நிறைவடைவதையொட்டி 28.4.2017 மாலை 3.00 மணியளவில் தமிழ்ப்பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடத்திலுள்ள பேரவைக்கூடத்தில் 
வாழ்த்தியல் விழா நடைபெறவுள்ளது. 
விழாவில் கலந்துகொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன். 
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளரைத் தவிர அனைத்துப் பதிவாளர்களையும், அனைத்துத் துணைவேந்தர்களையும் பார்த்ததும் அவர்களில் பல பேருடன் பணியாற்றியதும் இந்த 35 வருடங்களில் கிடைத்த அனுபவங்களில் முக்கியமானவை. இவ்வினிய வேளையில் அவற்றை பகிர்வதில் மகிழ்கிறேன்.

கைகொடுத்த தட்டச்சும் சுருக்கெழுத்தும்
தமி்ழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த நாளை (16.8.1982) என்றும் நான் மறவேன். பணியில் சேர்வதற்கு முன்பாக நடைபெற்ற எவ்வித தயக்கமும் இன்றி அமைதியாகத் தட்டச்சிட்டேன். சுருக்கெழுத்துப் பத்தி வாசிக்கப்படும்போதும் அதே நிதானத்தைக் கடைபிடித்தேன். அனைத்திலும் நான் முன்னணியில் இருந்ததாகத் தெரிவித்தனர். 

தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகள் தட்டச்சுப்பணி
1983வாக்கில் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளின் (Statutes of the Tamil University) வரைவினை தட்டச்சிடும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. அப்பணியைத் தந்தபோது துணைவேந்தரவர்கள் "மிகவும் கவனம். இதைப் பற்றி யாரிடமும் விவாதிக்கக்கூடாது. நுணுக்கமாகத் தவறின்றி செய்யவேண்டும்" என்றார். துணைப்பதிவாளர் முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் வழிகாட்டலில், என் ஆரம்ப காலப் பணிகளில் எனக்குக் கிடைத்த அபூர்வமான வாய்ப்பாகவும், மறக்கமுடியாத பணியாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளை தட்டச்சிடும் பணி அமைந்தது. இப்பணிக்காக அனைவரின் பாராட்டையும் பெற்றேன்.

ஓவியத்துறை
நான் பணியில் சேர்ந்து சில மாதங்களில் ஓவியத்துறை சார்பாக இந்திய அளவிலான ஒரு கருத்தரங்கின்போது ஓர் அறிஞருக்கு வழங்கவேண்டிய மதிப்பூதியத்தைத் தவறுதலாக பிறிதொரு அறிஞருக்கு வழங்கிவிட்டேன்.  புலத்தலைவரும், துறைத்தலைவருமான முனைவர் ஏ.எஸ்.ராமன் அவர்கள், "தவறு வருவது இயல்பே. இதுபோன்ற பணிகளைச் செய்யும்போது சற்று கவனமாக இருக்கவேண்டும்". என்றார். எனக்கு அது ஒரு சரியான பாடமாக இருந்தது. இவ்வாறு ஒரு துறை இருந்ததே பலருக்கு இப்போது தெரிய வாய்ப்பில்லை.  
(புகைப்படம் நன்றி : Tamil University-A Profile 1983)
கல்வெட்டுத் துறை
பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் கல்வெட்டுத்துறை சார்பாக நடைபெற்ற சிந்து வெளி எழுத்துக் கருத்தரங்கிற்காக (Indus Script Seminar) உரிய ஏற்பாடுகளைச் செய்தபோது லண்டனிலிருந்து வந்திருந்த அறிஞர் கீனியர் வில்சன் (Dr Kinnier Wilson) என்பவருடைய கடவுச்சீட்டை அலுவலக நண்பர் இடம் மாற்றிவைத்துவிட்டு அதனை நாங்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் பட்ட மன உளைச்சல் ஒரு கசப்பான அனுபவமாகும். இதே கருத்தரங்க பொறுப்பாளர் முனைவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பல ஆண்டுகள் கழித்து நான் மேற்கொண்ட சோழ நாட்டில் பௌத்தம் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டினை மனம் திறந்து பாராட்டியவர் ஆவார்.

நீண்ட சொற்றொடரில் நன்றி
Tamil Civilization இதழை அனுப்பிவைக்கும்படி வட இந்தியாவிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அப்போதிருந்த பதிவாளர் முனைவர் சு.செல்லப்பன் அவர்கள், உரிய மறுமொழியினை தட்டச்சிட்டுக் கொண்டுவரும்படி கூறினார். எவ்விதத் தவறுமின்றி அதனை நான் தட்டச்சிட்டு அவரிடம் கொடுத்தேன். என் நினைவிலிருந்து.... "While acknowledging with thanks the receipt of your letter cited above we wish to state that the quarterly research journal of Tamil University, Tamil Civilization, is in print and would be sent to you in due course, for which the relevant details regarding the subscription rates issue is enclosed for ready reference". இப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பாகவும் உள்ளது.  

பணியின் மீதான பொறுப்பு
தமிழ்ப்பல்கலைக்கழகம், 25.8.1982ஆம் நாளிட்ட கடிதத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தர்களுக்குத் தந்த கடிதத்தில், எங்களின் பொறுப்பை உணர்த்திய, சொற்றொடர்: "...The officers and Academic Staff are requested to utilise the services of the Stenographers as per their Secretaries in the best way just in the Foreign Countries. The Stenographers should be trained for in that way. In the absence of the Officers or Academic Staff, the stenographers posted to work under their control should be able to manage the Section as Secretaries efficiently." பணியில் சேர்ந்த காலத்தில் பணிப்பொறுப்பானது பிற பணி நிலைகளிலிருந்து வித்தியாசமாக அது எங்களுக்கு அப்போது தோன்றியது. பல்கலைக்கழகம் அப்போது எங்களுக்குத் தந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சொற்கள் அப்பணியின் இன்றியமையாமையை உணர்த்தின. 

துணைவேந்தர் வருகையும், என் தாமதமும் (அலுவலகத்தொடர்பு அல்ல)
1 செப்டம்பர் 1985இல் தஞ்சாவூர் கீழ வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வாக கொண்டிராஜபாளையத்தைக் கடந்துகொண்டிருந்தபோது துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் வந்து காத்துக் கொண்டிருப்பதாகக் கூறினர். ஆமை வேகத்தில் வந்த மாப்பிள்ளை ஊர்வலம் திருமண மண்டபத்தை அடையும்போது தாமதமாகிவிட்டது. "வந்து, காத்திருந்ததாகச் சொல்லுங்கள்" என்று அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு அவர் திரும்பிச்சென்றதாக அறிந்தேன். அவரிடம் நேரில் வாழ்த்து பெறமுடியவில்லை. திருமணத்திற்கான விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தபின்னர் அவருடைய அலுவலகத்தில் சென்று தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவித்துவிட்டு வந்தேன்.    

தமிழ் சிவிலிசேசன்
தமிழ்ப்பல்கலைக்கழக ஆங்கிலக் காலாண்டிதழானTamil Civilization இதழுக்கான முகப்பட்டை வடிவமைக்கப்படும்போது என்னால் மேற்கொள்ளப்பட்ட ப்ளாக் தயாரிப்பு, அட்டை வடிவமைப்பு உள்ளிட்ட பல ஆயத்தப் பணிகள் மறக்கமுடியாதவை. முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அவர்கள் வடிவமைப்பில் நேர்த்தி, எழுத்துருவில் தெளிவு, உள்ளடக்கத்தில் உலகளாவிய தரம், ஆடம்பரமற்ற அதே சமயம் பார்வைக்கு உயர்ந்த தரம் என்ற நிலையிலும், திருவனந்தபுரத்திலிருந்து வெளிவரும் ISDL இதழின் அமைப்பிலும் அமையவேண்டும் என்று பதிவாளர் வழியாக ஆணையிட்டிருந்தார். முதல் இதழ் வெளியானதும் கட்டுரையாளர்களுக்கு இதழின் படியும், கட்டுரைப்படிகளும் (offprints) அனுப்பும்போது பெற்ற அனுபவமும்கூட மறக்கமுடியாதனவாகும். 


தமிழ்க்கலை
தமிழில் ஒரு காலாண்டிதழ் வரவேண்டும் என்று முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அவர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அதற்கான குறிப்பினைத் தட்டச்சு செய்யும் வாய்ப்பினைப் பெற்றேன். Tamil Civilization என்பதற்கு இணையாக தமிழ் சிவிலிசேசன் (ஆங்கிலத்தில் உள்ளபடியே தமிழில்), தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலை என்ற பெயர்கள் (தலைப்புகள்) பரிந்துரைக்கப்பட்டன. இறுதியாக தமிழ்க்கலை என்ற பெயர் துணைவேந்தரால் தெரிவு செய்யப்பட்டது. 


Literary History in Tamil 
1982இல் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய Literary History in Tamil என்ற ஆங்கில நூலின் வரைவை தட்டச்சு செய்யும்போது  அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாகும். நூலின் தலைப்பு Literary History of Tamil என்றுதானே ஐயா இருக்கவேண்டும் என்று நான் கேட்க அதிலிருந்து இது சற்றே மாறுபட்டது, ஏன் வேறுபட்டதும்கூட என்றார். அவ்வாறே, அந்நூலில் Prologue, Epilogue என்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். அதைப் பற்றிக் கேட்டதற்கு அவர், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் முன்னுரை மற்றும் முடிவுரை என்பதையே இது குறிக்கும் என்றார். அப்போது அவர் கொடுப்பதை அப்படியே பலர் தட்டச்சு செய்துவிடுவர் ஆனால் இவ்வாறான ஐயங்களை சிலரே கேட்கின்றனர் என்று கூறி என்னைப் பாராட்டினார். 

ஆயுள் தண்டனைக் கைதியின் ஆர்வம்
1985வாக்கில் வேலூர் மத்திய சிறையிலிருந்த ஆயுள் தண்டனைக்கைதி ஒருவர் பல்கலைக்கழக வெளியீடுகள் மீது ஆர்வம் கொண்டு தனக்கு அனுப்பும்படி கடிதம் அனுப்பியிருந்தார். துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களுடைய ஆணைப்படி தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர் கட்டணம் பெறப்படாமல் அன்பளிப்பாக அவருடைய எண் குறிப்பிடப்பட்டு வேலூர் சிறை முகவரிக்கு தமிழ்ப்பல்கலைக்கழக தொடர்ந்து அனுப்பிவைக்கப்பட்டது.

பதிப்புத்துறை
பதிப்புத்துறையில் பணியாற்றியபோது ஒவ்வொரு மாதமும் வெளிவருகின்ற செய்தி மலருக்காக செய்திகளைத் திரட்டுவதும், தட்டச்சு செய்வதும், விடுபாடின்றி உறுப்பினர்களுக்கு அனுப்பிவைப்பதும் முக்கியமான பணியாக இருந்தது. விழா நிகழ்வுகளை  வடிவமைக்கவேண்டிய முறை, புகைப்படங்களை வெளியாரிடமிருந்து பெறும்போது நன்றி கூறும் முறை உள்ளிட்ட பலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிருந்த ஒரு துணை ஆசிரியர், "ஆங்கில செய்தி மலரை ஜம்புலிங்கம் பார்த்துவிட்டால் அச்சுக்கு அனுப்பிவிடலாம்" என்பார். He proposed a vote of thanks (vote of thanks என்பதற்கு முன் சேர்க்க),   A two-day seminar was held....(two-days அல்ல) என்பன போன்ற பல சொல் அமைப்புகளைக் கற்கும் வாய்ப்பும் அப்போது கிடைத்தது.    

மொழியியல் துறை

மொழியியல் துறையில் பணியாற்றியபோது சொற்கள் மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதில் (குறிப்பாக ஆங்கிலத்தில்) உள்ள முறைகளைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. புதிய சொல் தேடலும், துறை ஆசிரியர்களுடன் அது பற்றி விவாதிப்பதும் அக்காலகட்டத்தில் அதிகரித்தது.  

அன்பளிப்பு இதழ்கள் 
வாசிப்பினை ஊக்குவிக்கவும், பிற இதழ்களுக்கு ஆதரவு தரவும் தமிழ் சிவிலிசேசன் மற்றும் தமிழ்க்கலை இதழ்களுக்கு உறுப்பினர் கட்டணம் செலுத்தியவர்களுக்கு தமிழ்ப்பொழில், செந்தமிழ், கலைக்கதிர், விஞ்ஞானச்சுடர் உள்ளிட்ட ஐந்து மாத இதழ்கள் 200 எண்ணிக்கை பெறப்பட்டு அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. பெயர்ப்பட்டியலைத் தயாரித்து, உள்நாடு, வெளிநாடு என பிரித்து விடுபாடின்றி அனுப்பும் பணியானது சற்றே சிரமமாக இருந்தாலும் குறையின்றி அப்பணி மேற்கொள்ளப்பட்டது.  

Embodiment of Tamil Culture
2006இல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையைக் கொண்ட Embodiment of Tamil Culture என்ற கையேட்டை தட்டச்சிடும் பணியை மேற்கொள்ளும்படி துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம் அவர்கள் பணித்தார்கள். பல துறைகளிலிருந்து செய்திகளை ஒன்றுதிரட்டவும், வடிவமைக்கவும், தட்டச்சு செய்து சிறு கையேடாக ஆக்கவும் மேற்கொண்ட வாய்ப்பு மறக்கமுடியாததாக அமைந்தது. ஒவ்வொருவர் நடையிலிருந்தனவற்றை சீராக ஒரே நடைக்குக் கொண்டு வர அபரிமிதமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.    

குடியரசுத்தலைவர் கலந்துரையாடல் கேள்விகள் தட்டச்சு
24 செப்டம்பர் 2006இல் நடைபெற்ற தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வுகளின் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக குடியரசுத்தலைவர் மேதகு  ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களுடன் மாணவர்களின்  கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடியரசுத்தலைவரிடம் மாணவர்கள் கேட்கும் கேள்விகளைத் தட்டச்சு செய்யும் பணி நான் பணியாற்றிய பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. கேள்விகளைத் தனித்தனித்தாளில் தட்டச்சிடப்பட்டு குடியரசுத்தலைவர், கேள்வி கேட்கும் மாணவர், மாணவர்களை நெறிப்படுத்தும் பேராசிரியர் ஆகியோரிடம் வழங்கப்படும் வகையில் தயாரிக்கப்பட்டு, அமைப்பாளர்களிடம் தரப்பட்டன. கூடுதலாக சில படிகளை நான் எடுத்து தனியாக ஒரு கோப்பில் வைத்தேன். உடன் இருந்த நண்பர் திரு ராஜராஜன் அதற்கான காரணத்தைக் கேட்டாபோது அவசரத்திற்கு உதவும் என்றேன். மறு நாள் விழா தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்பாக விழா அமைப்பாளர்கள் அவசரமாக வந்து கலந்துரையாடலுக்கான கேள்விகளை மேடையில் கேட்பதாகக் கூறினர். முதல் நாள் அனுப்பிய விவரத்தைக் கூறியபோது அது அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் உடனே அனுப்பிவைக்கும்படியும் கேட்டனர். அவற்றை அச்செடுக்க முயற்சி மேற்கொண்டபோது கணிப்பொறி இயங்காமல் (complete shut down and dead) நின்றுவிட்டது. சமயோசிதமாக நான் எடுத்துவைத்திருந்த படிகள் எங்களுக்கு உதவின. அவற்றை விழா நடக்கும் இடத்திற்கு அனுப்பிவைத்தோம்.     

தேசிய தர மதிப்பீட்டுக்குழு அறிக்கை 
தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக்குழு (NAAC-National Assessment and Accreditation Council) வருகையை முன்னிட்டு உரிய அறிக்கை தயாரிக்கும் பணியின்போது தட்டச்சு மற்றும் தொகுப்பு பணி என்னால் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக அனைத்து ஆசிரியர்களின் கல்விப்பணி, பல்கலைக்கழகம் தொடர்பான கல்வி மற்றும் அலுவல் பணியமைப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்று வடிவமைத்து, அவர்கள் தந்த வடிவத்தில் தட்டச்சு செய்து அறிக்கை தயாரித்தபோது பெற்ற அனுபவம் ஓர் அரிய  ஆய்வு நூலை ஆதாரங்களுடன் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த அறிக்கையை பெங்களூரிலுள்ள அலுவலகத்தில் சென்று சேர்த்தபோது பெற்ற அனுபவம் என்றுமே என் வாழ்க்கையில் மறக்க முடியாதது.  

தேர்வுப்பிரிவு
தேர்வுப்பிரிவில் பணியாற்றியபோது ஆயிரக்கணக்கில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வேடுகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆய்வாளர்கள் ஆய்வேட்டை அளிக்க வரும்போது படிவம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டள்ளதா என்பதை உறுதி செய்தபின் ஆய்வேட்டின் தலைப்பு, வடிவம், பக்கத்தலைப்புகள், அடிக்குறிப்பு தந்துள்ள விதம், முன்னுரை மற்றும் முடிவுரையில் விவாதிக்கப்பட்டவை ஆகியவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரமிருப்பின் அப்போதே உரிய ஆய்வாளரிடம் அது பற்றி விவாதிப்பதையும் பழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆய்வாளர்களுடனான நல்லுறவை மேம்படுத்தவும், பல பொருண்மைகளைப் பற்றி அறியவும் இக்காலகட்டம் எனக்கு மிகவும் உதவியது. 


.....................அனுபவங்கள் தொடரும்
நன்றி
திரு மா.கௌதமன், தமிழ்ப்பல்கலைக்கழக முதல் நிலை நூலகர் (பணி நிறைவு)
(தமிழ் சிவிலிசேசன் மற்றும் தமிழ்க்கலை  மேலட்டைகளின் புகைப்படங்கள்)
துணை நின்றவை
Tamil University-A Profile, 1983 
Embodiment of Tamil Culture, Tamil University, 2006
பிறருடைய தளங்களில் என்னைப் பற்றிய பகிர்வுகள்

14 comments:

  1. பணி அனுபவங்ளின் நிறைகள் மற்றும் சிறு குறைகளையும் கூட குறிப்பிட்டுள்ளது மிக அருமை.
    வாழ்த்துகள் ஐயா.


    ReplyDelete
  2. இன்னும் மூன்று நாட்களில் பணி நிறைவு. வாழ்த்துகள் ஐயா. ஒய்வு நாட்கள் வாழ்க்கை இனிதாக அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஒவ்வொரு விடயத்தையும் அழகாக செதுக்கி பதிவிட்டு இருப்பது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி காண்பிக்கின்றது...

    தொடர்கிறேன்....
    த.ம.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் அய்யா!

    ReplyDelete
  5. தங்களுடைய மலரும் நினைவுகளில் நானும் மகிழ்வுடன் பங்கெடுத்துக் கொண்டேன்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  6. அய்யா, வணக்கமும் வாழ்த்துகளும்.
    புதுக்கோட்டையிலிருந்து கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் தங்களின் “விடைநல்கு விழா” நிகழ்வில் பங்கேற்க வருவோம். சந்திப்போம்.
    அரசுப்பணியிலிருந்து விலகி, தமிழ்ச் சமூகப் பணயில் முழுநேரப் பணியேற்புவிழா அல்லவா?

    ReplyDelete
  7. உண்மையில் இதுவொரு நிறைவான வாழ்த்தியல் விழாதான். தாங்கள் ஒரு நேர்த்தியான பணியாளர் என்பதில் மேலும் பெருமைப்படுகிறோம். வணக்கங்களும் வாழ்த்துக்களும் அய்யா!

    ReplyDelete
  8. you are satisfied with the service

    ReplyDelete
  9. தங்களின் பணி அனுபவங்கள் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. சிறப்பான நினைவுகள் ஐயா. மன நிறைவுடன் பணியிலிருந்து விடைபெறப் போகும் தருணம்... மகிழ்ச்சியுடன் தமிழ்ப்பணி தொடரட்டும்....

    ReplyDelete
  11. அனைத்துப் பதிவாளர்களையும் பார்த்த நீங்கள் ,பணி ஓய்வுக்குப் பின் முழு நேரப்பதிவாளராக வாழ்த்துகள் :)

    ReplyDelete
  12. அனுபவங்கள் தொடர வேண்டும் - அவை
    சிறந்த வழிகாட்டலின் களஞ்சியமே - அதனை
    மின்நூலாக்கி வெளியிடுவோம்.

    ReplyDelete
  13. மறக்காமல் இருக்கும் அலுவலக விஷயங்களை விரைவில் நூலாக்கம் செய்யுங்கள் என்பது என் வேண்டுகோள். தமிழில் இத்தகைய நூற்கள் குறைவு. இனிமேல்த தங்களின் ஓய்வுக்காலம் தமிழுக்கு மட்டுமே உரிமையாகட்டும் என்று எதிர்பார்க்கிறேன்!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete