20 December 2014

வாழ்வின் விளிம்பில் : G.M. பாலசுப்ரமணியம்

மதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் சந்திப்பில் நண்பர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அப்போது வலைப்பதிவர்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் நிகழவுள்ள வலைப்பதிவர்களின் சந்திப்பில் மேலும் பல புதியவர்களைச் சந்திப்போம். சந்திப்பின்போது  பெற்ற அனுபவத்தில் ஒன்று அவர்களைச் சந்தித்ததும், அவர்களுடைய நூல்களைப் படித்ததும் ஆகும். மதுரை விழாவில் மூத்த வலைப்பதிவர்களில் ஒருவரான ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவருடைய நூலை அவர் தந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.  


அவருடைய வாழ்வின் விளிம்பில் 16 சிறுகதைகளைக் கொண்ட அருமையான நூல். இதனை நூல் என்பதைவிட வாழ்க்கைப் பதிவு என்று கூறலாம். மிகவும் இயல்பாக அவர் எழுதியுள்ள விதம் படிப்பவர்களை மிகவும் ஈர்க்கச் செய்யும். நகாசு இல்லாமல் நறுக்காகவும் உள்ளன இவரது எழுத்துக்கள். 

"அப்பா, உங்கள் வாழ்க்கையில் என்னவோ நடந்திருக்கிறது. சொந்தங்கள் எல்லாம் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். நீங்களும் எதையோ மறைக்கறாப்போலத் தோன்றுகிறது. என்னவென்று சொல்லலாமில்லையா, நானும் வளர்ந்துவிட்டேன் இல்லையா." (ப.126) என்ற வரிகளைப் படிக்கும்போது ஏதோ நம் வீட்டில் நம் மகள் நேரில் நம்மைப் பார்த்துக் கேட்பதைப் போலத் தோன்றும். இதுவரை நாம் நம் மகளிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று உணரும் அளவு ஒரு குற்ற உணர்வு படிக்கும் வாசகர் மனதில் எழுகிறது. இதுதான் அவருடைய வெற்றி எனலாம். இவ்வாறான, அன்றாட வாழ்வில் காணலாகும் நிகழ்வுகளை அவர் நம்முடன் பகிர்ந்துள்ளார்.

கதை கதையாக இருந்துவிட்டால் அதில் விறுவிறுப்பு ஏது? அவ்வாறே வாழ்க்கை வாழ்க்கையாக அமைந்துவிட்டாலும்தான். ஏற்றஇறக்கங்கள், இன்ப துன்பங்கள் என்ற நிலைகளில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்பது எண்ணிலடங்கா. சில நிகழ்வுகள் நம்மை அதிகம் பாதிக்கும். சில நிகழ்வுகள் எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காது. என்ற நிலையில் அவருடைய சிறுகதைகள் உள்ளன.

"ரங்கசாமிக்கு சாவைக் கண்டு பயம் கிடையாது. சாவது என்பது என்ன...? நிரந்தரத் தூக்கம்...அவ்வளவுதானே. ஆனால், சாவின் முழு வீச்சையும் அதை எதிர்கொள்பவன் எப்படித் தாங்குகிறான்...- யாருக்குத் தெரியும்? செத்தவர் அனுபவங்களைச் சொல்ல முடியுமா?.... " (ப.7) என்ற வரிகளில் கதாபாத்திரத்தின் மூலமாக மரணத்தை எதிர்கொள்ள உள்ளவர் கொள்ளும் மன நிலையை நம் முன் கொணர்கிறார்.

"பகுத்தறிவு என்று பேசினாலேயே அது கடவுள் மறுப்பைக் குறிப்பதுதான் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் இடத்தில் சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களில், அது எவ்வளவுதான் கூடுதல் புரிதலும், நட்பும் இருக்கும் நண்பனிடம்கூட விவாதிக்க முடிவதில்லை....." (ப.25) இது கதாபாத்திரத்திற்கும் மட்டுமல்ல நமக்கும் முற்றிலுமாகப் பொருந்துவன.  அன்றாடம் நாம் எதிர்கொள்வன.

"எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல் இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே என்று கவலை கொள்வதில் எந்தப் பலனும் இல்லை...." (ப.33) என்ற வரிகள் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் படிப்பதை நினைவூட்டுகின்றன.  காலங்கடந்து சிந்திக்கப்படுபவையால் எந்த பயனும் இல்லை என்பதை இவ்வரிகளில் அனாயசமாக எடுத்துரைக்கிறார்.  

"அவள் ஏன் அழவேண்டும்? அழுகை என்பதே ஒரு வடிகால்தானே. அழட்டும் நன்றாக அழட்டும். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ. எல்லோருக்கும் தெரிந்ததுதானே. மனித உணர்வுகளுக்கு அழுகையும் அதன் பின் வரும் மறதியும் வரம்தானே. இருந்தாலும் ஏறத்தாழ 50 வருட தாம்பத்திய வாழ்வில் கைகோத்துக் கூடவே வந்தவர் திடீரென்று இல்லை என்றாகிவிட்டால்....எத்தனை எத்தனை நினைவுகள். எத்தனை எத்தனை கனவுகள். ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து வருகிறதே...." (ப.115). ஏக்கம், வருத்தம், சோகம் என்ற பல்வேறு வகையான மன உணர்வுகளைப் பதியும் ஆசிரியர், படிப்பவர் மனத்தை நெருடுவதைப் போல சொற்றொடர்களைக் கையாண்டுள்ள விதம் நம்முடைய பாட்டியின் மடியில் நாம் படுத்துக்கொண்டிருக்கும்போது நமக்கு ஆதரவாக நம்மை வருடுவதைப் போல மனதுக்கு சுகமாக உள்ளது.   

அந்தந்த இடத்திற்கேற்ற வழக்குச்சொற்களை பயன்படுத்தும்போது அடைப்புக்குறிக்குள்ளோ, வெளியிலோ ஆசிரியர் தந்துள்ளவிதம் பாராட்டத்தக்கது. 
"அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள நாயர் மேனோன் குடும்பங்களில் சம்பந்தம் (தொடுப்பு) வைத்துக்கொள்வார்கள். அது அனுமதிக்கப்பட்ட ஒரு வழக்கம்......" (ப.69)
"ஏஏஏய்ய்ய், அதெல்லாம் பதுவில்லை (வழக்கமில்லை). அவர் நம் வீட்டில் சம்பந்தம் வைப்பதே பெருமை அல்லவா?......" (ப.72)

இந்த அருமையான நூலை, வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதற்காக வாசிக்க அழைக்கிறேன். வாசிப்போம். வாருங்கள்.

வாழ்வின் விளிம்பில்  (சிறுகதைகள்), G.M. பாலசுப்ரமணியம், மணிமேகலைப் பிரசுரம், 7 (ப.எண்.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017, தொலைபேசி 24342926, 24346082

26 comments:

  1. விமர்சனம் அருமை... அவரின் அனுபவங்களை ரசித்து விட்டேன் ஐயா...

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம்..

    ReplyDelete
  3. விமர்சனம் மிக மிக அருமை ஐயா! நிச்சயமாக வாங்கிப் படிக்கின்றோம். ஜிஎம்பி சாரின் எழுத்துக்கள் அறிவு பூர்வ்மாகவும், நறுக்கென்றும், அவரது மனப்பாங்கை எந்தவிதா சாயமோ, பூச்சோ இல்லாமல் உண்மையை னேர்மையை பறைசாற்றுவதாகத்தான் இருக்கும். அதுதான் அவரது எழுத்தின் வெற்றி! ஐயா.

    நாங்கள் மதித்துப் போற்றும் பதிவர்.

    "பகுத்தறிவு என்று பேசினாலேயே அது கடவுள் மறுப்பைக் குறிப்பதுதான் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் இடத்தில் சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களில், அது எவ்வளவுதான் கூடுதல் புரிதலும், நட்பும் இருக்கும் நண்பனிடம்கூட விவாதிக்க முடிவதில்லை....." (ப.25) இது கதாபாத்திரத்திற்கும் மட்டுமல்ல நமக்கும் முற்றிலுமாகப் பொருந்துவன.// மிகவும் சரியே ஐயா.

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம் ஐயா...
    என்னிடம் கில்லர்ஜி அண்ணா கொடுத்தார். இன்னும் படிக்கவில்லை. வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
  5. படிக்கத் தூண்டும் விதமாக தங்களின் விமர்சனம் அமைந்திருக்கிறது.

    ReplyDelete
  6. நல்ல பதிவு அய்யா, நான் அந்த நூலை வாங்க மறந்துவிட்டேனே..!

    ReplyDelete
  7. அருமையான விமர்சனம் ஐயா
    நானும் இந்நூலைப் படித்து மகிழ்ந்திருக்கின்றேன்
    நன்றி

    ReplyDelete
  8. அருமையான விமர்சனம். நானும் இன்னும் படிக்க வில்லை. அடுத்த தமிழக பயணத்தில் வாங்க வேண்டும்.

    ReplyDelete
  9. விமர்சனம் அருமை ஐயா..

    ReplyDelete
  10. மூத்த பதிவர் ஜி எம் பி அவர்களின் 'வாழ்வின் விளிம்பில்' என்ற சிறுகதை தொகுதியை மிகவும் முதலில் படித்து கருத்துரை எழுதியவன் என்ற முறையில் உங்கள் பதிவு எனக்கு மகிழ்ச்சியான மறு வாசிப்பு அனுபவத்தை தருகிறது. சில கதைகளில் அவரது எழுத்து நடை மிக வேகமானதாகும். தனது அடுத்த நூலை இந்த 2015 ஆண்டில் அவர் வெளியிட வேண்டும் என்று நாம் வற்புறுத்துவோமாக !

    ReplyDelete
  11. நல்ல விமர்சனம்

    ReplyDelete
  12. கதைகளின் வரிகளை அடுத்தடுத்து எடுத்துச் சொல்லி அதன் மூலம் உங்கள் பார்வையை நகர்த்திக் கொண்டு போன விதம் அருமை. மூத்த பதிவர் ஜிஎம்பிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஜி எம் பி அவர்களின் இந்த நூலில் உள்ள கதைகளை படித்து விட்டேன். சில வித்தியாசமான களங்களை கொண்டவை.பாசாங்கற்ற எழுத்து நடையில் கதைகள் சிறப்பாக அமைந்துள்ளன
    நல்ல மதிப்புரை வழங்கி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. அய்யா G.M.B அவர்கள் வித்தியாசமான, மாற்றுச் சிந்தனைகளை தைரியமாக தனது பதிவுகளில் சொல்லும் சிந்தனையாளர். வித்தியாசமான அவரது ”வாழ்வின் விளிம்புகள்” நூல் பற்றி சிறப்பாகவே விமர்சனம் தந்துள்ளீர்கள். சுருக்கமாகவே இருந்தாலும் விளக்கமாகவே உள்ளது. முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  15. அன்பின் ஜம்புலிங்கம் - ஒவ்வொரு விமர்சனமும் அருமை - கதைகளை உடனடியாகப் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். புத்தகத்தினை வாங்கிப் படிக்க வேண்டும். படிப்போம்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  16. வணக்கம்
    ஐயா.
    விமர்சனம் அருமையாக உள்ளது படிக்க வேண்டிய புத்தகம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. ஐயா வாழ்வின் விளிம்புகள் நுலின் தங்களது திறனாய்வு படித்ததும் இந்நுலினை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலைத் துண்டுகிறது. பாட்டியின் மடிமீது உறங்கும்போது ஆதரவாக வருடுவதைப் போன்று என்பது ஆனந்தமாக உள்ளது. எனது பாட்டியின் நினைவு வந்தது. நன்றி.

    ReplyDelete
  18. நூல் விமர்சனம் அருமை அய்யா!
    நுட்பமான செய்திகளை கோடிட்டு காட்டிய பாங்கு அழகு!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  19. வணக்கம்!

    "உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை" - இது பழமொழி
    "உணவிட்ட விவசாயிகளுக்கு, வாழ்த்தும், நன்றியும் சொல்வதற்கு
    "குழலின்னிசை"- வலைப் பூ பக்காமாய் வாருங்களேன்!

    "இன்று விவசாயிகள் தினம்" (23/12/2014)

    நன்றி!

    ReplyDelete
  20. ஆம் அருமையான நூல்தான் நண்பரே ஐயாவின் ஒவ்வொரு வரிகளும் வைரமாக ஜொலித்தது உண்மையே....
    நல்ல விமர்சனம்

    ReplyDelete
  21. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  22. நண்பரே வலைச்சரத்தில் தாங்கள் படிக்காத எனது கடைசி பதிவு தங்களுக்கு பதில் சொல்லி இருக்கிறேன் இனைப்பு கீழே...
    தலைப்பு மன்னிப்பு கோரலும், நன்றி கூறலும்.

    http://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_21.html

    ReplyDelete
  23. ஐயா நான் அந்த நூலை வங்காமல் வந்துவிட்டோமே
    என்று இப்போதுதான் தோன்றுகிறது.

    ReplyDelete
  24. அய்யாவிற்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  25. அன்பின் ஜம்புலிங்கம் ஐயாவுக்கு வணக்கம் என் சிறுகதைத் தொகுப்பை வாசித்து கருத்துக்கள் எழுதியதற்கு நன்றி. என் போன்றவர்கள் நூலெழுதி வெளியிடுவது எந்த லாப நோக்கும் இல்லாதது. பலரும் ப்டிக்க வேண்டும் என்னும் ஆவலே உந்து சக்தி.உங்கள் இந்த விமரிசனம் பலரையும் படிக்கத் தூண்டும் என்று நம்புகிறேன் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete