21 July 2026

சிவனைப் பற்றிய சிந்தனைகள்: குடந்தை கே.என்.நாகராஜன்

குடந்தை கே.என்.நாகராஜன் எழுதியுள்ள “சிவனைப் பற்றிய சிந்தனைகள்” என்னும் நூல், இறைவனைப் பற்றிய சிந்தனைகளைக் கவிதை வடிவில் கொண்டுள்ள நூலாகும். எண்ணுவதையும், எழுதுவதையும் பேரின்பமாக நினைக்கும் நூலாசிரியர் சிவனை எண்ணுவதும், எழுதுவதும் பேரின்பம் என்றும், அவனை நாடுவதும் பாடுவதும் புண்ணியமே என்றும், அதனால் கூடுவது ஆனந்த இன்பமே என்றும் கூறி தன் உள்ளக்கிடக்கையைப் பகிர்கிறார்.


சிவனைப் பற்றி மட்டுமன்றி, பார்வதி, முருகன், துர்க்கை, அம்மன் ஆகியோரைப் பற்றியும், குறிப்பிடத்தக்க பாடல் பெற்ற தலங்கள், பஞ்சபூதத்தலங்களில் உறையும் இறைவன், நால்வர், ஆகியோரின் பெருமைகளைப் பற்றியும் தான் உணர்ந்த வகையில் எழுதுகிறார். மனதில் பட்ட இறையுணர்வானது அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியுள்ள அவருடைய முயற்சி மிகவும் போற்றத்தக்கதாகும். உருப்பெறுகின்ற கவிதை வரிகள் மிகவும் ரசனையாகவும், புரிந்துகொள்ளும்படி எளிதாகவும் உள்ளது.

தமிழகத்தில் காணப்படுகின்ற முக்கியமான கோயில்களின் புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்துள்ளவிதம் நூலின் அழகினை மேம்படுத்துவதோடு அங்கு நாம் சென்றுவந்த உணர்வினைத் தருகிறது. அவருடைய சிந்தனைகளில் சிலவற்றைக் காண்போம்.

"விண்ணில் உறையும் சிவனை வேண்டி!
மண்ணில் வாழும் மனிதர் சொல்வதே!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" (ப.17)

"தினமும் உன்னை எண்ணும் மனதில்
திகழும் சிவனே! தில்லைக் கூத்தனே!
காமமும் கோபமும் கடந்து உன்னை
நெருங்கும் நெஞ்சைக் கொடுப்பாய் சிவனே!" (ப.24)

"தாயிடம் சென்று காலடி விழுந்தேன்! என்
நோயினைச் சொல்லி அவளிடம் அழுதேன்!
காய்ந்த நிலத்தில் பாய்ந்த நதியாய்
காத்திடுவாள்! என்னை துர்க்கை அம்மனே!" (ப.44)

"என்னைக் கவர்ந்த எழில் முருகனே!
அழகைக் கண்டால் கண்களில் இன்பம்!
உன்னைக் கண்டால் நெஞ்சிலே இன்பம்!
நெஞ்சினிலே இன்பம்! நினைவிலே இன்பம்!" (ப.50)

"நாளும் நாம் சொல்லும் ஓம் நமசிவாய!
மூளும் முன் வினைகளை முறியடிக்கும்! நம்மை
ஆளும் ஓம் நமசிவாய! நமக்குப்
பாலும் தேனுமாய் பரவசமாகும்!" (ப.64)

எங்கள் இல்ல நூலகத்தில் நூலாசிரியருடன் (நாள் 20.7.2026)

இறைவனை வணங்குவதால் கிடைக்கின்ற பயன்களான மன நிம்மதி, வினையிலிருந்து விடுபாடு, பெற்ற பிறவிப்பயன், தீர்ந்திடும் பழிபாவம், நீங்கும் மனச்சுமை, அவதி இல்லா வாழ்வு உள்ளிட்ட பல சிறப்புக்கூறுகளை மிக அருமையான எடுத்துக்கூறியுள்ள நூலாசிரியரின் பெருமுயற்சி போற்றத்தக்கது. அடுத்து "சைவம் காட்டும் அற்புதங்கள்" என்னும் .நூலினை எழுதி இறைப்பணி ஆற்றிவருகின்ற அவருடைய உழைப்பு இறையருளால் தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.  
 
தலைப்பு: சிவனைப் பற்றிய சிந்தனைகள் (கவிதைகள்)
ஆசிரியர்: குடந்தை கே.என்.நாகராஜன்
பதிப்பகம்: அஞ்சலை வெளியீட்டகம், 4/54, கொத்தத் தெரு, மேல கபிஸ்தலம் 614 203, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், அலைபேசி 94868 83504 பதிப்பாண்டு: முதல் பதிப்பு, ஆகஸ்டு 2025
விலை: ரூ.120

17 July 2026

ஒளிரும் தகளி-தகளி வாழ்வியல் முறைகள்: சித்தவர்மானி சமத்துவராஜன் சம்பத்

சித்தவர்மானி சமத்துவராஜன் சம்பத் எழுதியுள்ள “ஒளிரும் தகளி” என்னும் நூல், தகளி வாழ்வியல் முறைகளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்கிறது. இதுவரை எவரும் அதிகம் அறிந்திராத தகளி என்னும் சொல், அது புலப்படுத்துகின்ற பொருள் ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் தந்துள்ள விளக்கம் அதனைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தினைத் தூண்டுகிறது. சென்னைப் பல்கலைக்கழக அகராதி, 'தகளி' என்ற சொல்லுக்கு 'அகல்', 'உண்கலம்' என்ற பொருள்களைத் தருகிறது.



தான் கற்றதை, உணர்ந்ததை அனைவருக்கும் சென்றுசேரும் வகையில் மிகவும் எளிமையான நடையில் தகுந்த உதாரணங்களோடு விளக்கும் ஆசிரியர் இந்நூல் மூலமாக ஒரு சிறந்த வாழ்வியில் முறையினை அறிமுகப்படுத்தியுள்ளார். 

பல முக்கியமான சொற்களுக்கான பொருளை ஆங்கிலத்திலும், சில இடங்களில் கூடுதல்  விளக்கத்தையும்  தந்துள்ள விதம், குணங்களையும், செயல்பாடுகளையும், உரிய இடங்களில் அட்டவணை மூலம் விளக்கியிருக்கும் முறை, பல்வகை யோகாசன நிலைகளுக்கான செய்முறையையும் பயன்களையும் அடுத்தடுத்து அமைத்துள்ள பாங்கு, யோகாசன செய்முறை பற்றிய பட விளக்கங்கள்  போன்றவை இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள மிகச் சிறந்த உத்திகளாகும். நூல் வடிவம், அமைப்பு, தலைப்புப்பிரிப்பு, பின்னிணைப்பு ஆகியவை அமைத்துள்ள விதம் சிறப்பு.     

தன்னை அறிய தலைப்படு, பல்லிளிக்கும் ஓநாய், மாற்றம் ஒன்றே மாறாதது, வழிபாடு அனைத்தும் (மூட) நம்பிக்கை சார்ந்ததே, அன்பே தகளியா, மன ஒழுங்கு, தேடலே வாழ்க்கையின் இனிமை, வாழ்வொழுங்கு, வீடு, கனவு இல்லம், பொது ஒழுங்கு, இயற்கையுடன் இசைவு, நாளொழுங்கு, உடல் ஒழுங்கு என்ற துணைத்தலைப்புகளைத் தந்துள்ள விதம் மனதில் பதியும் வகையில் உள்ளது. அவர் கூறுகின்ற தகளி வாழ்வியல் முறைகளைக் காண்போம். 

“தகளி வாழ்வியலின் அடிப்படை உடலை வலுப்படுத்திட அல்ல. முதலில் உள்ளத்தையும் பின்னர் உடலையும் வலுப்படுத்துவதே ஆகும். உள்ளம் தெளிவானால் உடல் உபாதைகள் பெருமளவு குறைந்துவிடும். உள்ளம் தெளிவடைய முதலில் நான் என்பது ஒன்றுமில்லை என்பதை அறிவுப்பூர்வமாக உணர்ந்துகொள்ள வேண்டும். அந்த உணர்வினை கைவரப் பெற உதவிடும் உன்னதக் கலையே தகளி வாழ்வியல்.” (பக்கம். 18)

“...ஒருவன் தன்னைத் தெரிந்துகொண்டால் அவனுக்கு அழிவே இல்லை. நாம் நம்மை உடலாக மட்டும் பார்க்கும்போதுதான் மரணம், நோய் மற்றும் துன்பங்களுக்கு அஞ்சுகிறோம். நாம் அழியாத 'சக்தியின் துளி' என்பதை உணரும்போது பயம் விலகி, பேரானந்தம் பிறக்கிறது...” (ப. 22)

“...சமூகக் கட்டமைப்பில் இன்றும் நீடித்து வரும் ஒரு மிக ஆழமான சமூக அநீதி மற்றும் அதிகாரப் படிநிலையினை தற்காலச் சடங்கு முறைகள் கொண்டிருப்பதனால் அவற்றைத் தவிர்த்தலே நல்லறமென தகளி வாழ்வியல் கருதுகிறது...” (ப. 37)

“தகளி வாழ்வியல் என்பது அன்பு-ஆர்வம்-இன்பம்-ஞானம் என்ற வரிசையில், ஒரு மனிதனின் ஆன்மிக மற்றும் உளவியல் வளர்ச்சியைப் படிநிலைப்படுத்தும் மிகச்சிறந்த சூத்திரமாகும்.” (ப. 50)

“தகளி என்பது அகல் விளக்கு (மண்ணால் ஆன விளக்குத் தட்டு). அதாவது, நம்மிடம் இருக்கும் 'அன்பு' தான் அந்த விளக்குத் தட்டு. ஆன்மிகப் பயணத்திற்கு அடிப்படை அன்புதான். அதுவே மற்றவற்றைத் தாங்கும் ஆதாரக் கருவி…” (ப. 52)

“...அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களையும்  தகளி வாழ்வியல் தத்துவார்த்த தளத்தில் நின்று நோக்காது வாழ்வியல் தளத்தில் நின்று நோக்கிடுமாறு கற்பிக்கின்றது.…” (ப. 71)

“...தகளி வாழ்வியலில் வீட்டிற்கு முன்னால் மரம் வளர்ப்பது வெறும் அலங்காரம் அல்ல, அது ஒரு வாழ்வியில் நெறி” (ப. 96)

“ஒரு வீட்டிற்குள் நுழைந்ததும் அங்குள்ள புத்தக அடுக்குகளைப் பார்த்தே, அந்த வீட்டில் வாழ்பவர்களின் ரசனை, சிந்தனை மற்றும் ஆளுமையை எடைபோட்டு விடலாம் …” (ப. 99)

“சித்த மருத்துவத்தின்படி, நீரை நேரடியாகத் தலையில் ஊற்றக்கூடாது. முதலில் பாதங்கள், பிறகு முழங்கால்கள், இடுப்பு, தோள்பட்டை என நனைக்கவேண்டும். இறுதியாகவே தலையில் தண்ணீர் ஊற்றவேண்டும். இது உடலில் உள்ள வெப்பம் மெதுவாகத் தலை வழியாக வெளியேற உதவும்.” (ப. 129)

“உடல் மற்றும் மனதை சீராகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் வைத்துக்கொள்ள தகளி வாழ்வியில் சில எளிய முறை யோகாசன நிலைகளைப் பரிந்துரைக்கிறது...” (ப. 136)

முறைபடுத்தப்பட்ட வாழ்க்கை நெறியே நூலின் மையப்புள்ளியாக உள்ளது. நேர்மறை சிந்தனையும், செயல்பாடும் சிறந்த வாழ்க்கையின் இலக்கணமாக அமைவதை இந்நூல் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறது.  அரிய கருத்துகளைப் பல்வேறு சான்றுகளுடனும், உதாரணங்களுடனும் தந்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். சிறந்த நெறிமுறைகளை மற்றவர்களும் கடைபிடிக்கவேண்டும் என்ற நன்னோக்கில் நூலைப் படைத்துள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நாமும் தகளி வாழ்வியல் முறையைக் கடைபிடிக்க முயற்சிப்போம். 

எங்கள் இல்ல நூலகத்தில் நூலாசிரியருடன் (நாள் 20.5.2026)

தலைப்பு: ஒளிரும் தகளி-தகளி வாழ்வியல் முறைகள் 
ஆசிரியர்: சித்தவர்மானி சமத்துவராஜன் சம்பத்
பதிப்பகம்: முடிவிலி, ராம் நகர், ஆறாவது குறுக்கு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 613 004, அலைபேசி 94870 28739, மின்னஞ்சல் samppathtnj37@gmail.com
பதிப்பாண்டு: முதல் பதிப்பு, ஜூலை 2026
விலை: ரூ.200

-------------------------------------------------------------------------------------------
நூல் வெளியீட்டு விழா நிகழ்வு
-------------------------------------------------------------------------------------------

இன்று  தஞ்சாவூர், பெசண்ட் லாட்ஜில் நூல் வெளியீட்டு விழா, மாலை 6.00 மணியளவில் தொடங்கி நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் நூலை வெளியிட அதனைப் பெறும் நல்வாய்ப்பினைப் பெற்றேன். சக நண்பர்களும், ஆய்வாளர்களும், வரலாற்றறிஞர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு பாராட்டு வழங்கினர். 









19.7.2026இல் மேம்படுத்தப்பட்டது.

16 July 2026

அனைத்துக் காலத்திற்கும் பொருந்தும் கதாநாயகன்: ஜான் செரியன்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன். தி இந்து உள்ளிட்ட ஆங்கில இதழ்களிலிருந்து பல கட்டுரைகளையும், செய்திகளையும் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ப்ரண்ட்லைன் இதழில் சே தொடர்பாக வெளியான ஒரு கட்டுரை முழுமையாக மொழிபெயர்த்ததும், அது நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் இதழில் வெளியானதும் ஒரு மறக்க முடியாத அனுபவம். அவ்விதழிலிருந்து மொழியாக்கம் செய்த கட்டுரை இது ஒன்று மட்டுமே.  என் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை மேம்படுத்திய கட்டுரைகளில் இதுவும் ஒன்று.  






-------------------------------------------------------------------------------------------
கட்டுரையின் மொழிபெயர்ப்பு 
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், நவம்பர் 2008
-------------------------------------------------------------------------------------------

12 July 2026

பாயும் ஒளி: வாழ்க, வளர்க..

நண்பர் திரு ஆர்.கண்ணன் அவர்களின் பெருமுயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு, அவருடைய மறைவிற்குப் பின் அவருடைய மகள் செல்வி சுப்ரஜா கண்ணன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்படுகின்ற "பாயும் ஒளி" இதழின் 100ஆவது இதழ் ஜூலை 2026இல் வெளியானது. 



நூறாவது சிறப்பிதழின் தலையங்கத்தில் ஆசிரியர்,  தன் தந்தை 2017இல்  ஓய்வு பெற்றபோது ஓய்வுக்காலத்தை உபயோகமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் விவாதித்தபோது ஏற்கனவே 40 வருடங்களுக்கு முன்‌ அவர் ஆரம்பித்து நடத்திய கையெழுத்து பத்திரிகையான‌ ‘நவரசம்’ இதழைத் தொடர்ந்து நடத்து முடியாத நிலை, திருவையாற்றில் நண்பருடன் இணைந்து உருவாக்கிய ‘பாரதி இயக்கம்’ அமைப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாத நிலை, இவற்றுக்கெல்லாம் காரணமாகவிருந்த தனது அரசுப் பணியின் சுமை,  தனக்கென ஒரு அங்கீகாரம் இருக்கவேண்டும் என்று அவர் விரும்பி பாயும் ஒளி என்ற இதழை ஆரம்பித்ததன் சூழல் உள்ளிட்டவற்றைப் பற்றிக் கூறுகிறார்.  


அரசியல், சினிமா ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றும், இலக்கியம், கிராமியம், அறிவியல், மொழிபெயர்ப்பு, கவிதைகள், சிறுகதை, ஆங்கிலப் படைப்புகள், உள்ளூர் நிகழ்வுகள், புகழ்பெற்றவர்களின் நேர்காணல்கள், அதிகம் அறியப்படாத தொன்மையான இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு கட்டுரைகள் அதில் இடம்பெறவேண்டும் என்றும் அவர் எண்ணியதாகக் கூறியுள்ள அவர், துரதிர்ஷ்டவசமாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவற்றை சரிவர செய்யமுடியாமல் போனதாகவும், அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது கூட தன்னை அழைத்து “பாயும் ஒளிக்கு இந்த மாதம் கட்டுரைகள் வந்தனவா? நீ எதாவது எழுதினாயா?” என்று கேட்டதாகவும், தான் எதுவும் எழுதாமல் இருந்ததை அறிந்து கோபப்பட்ட அவர், ஆங்கிலத்தில் மட்டுமே வலைப்பூவில் எழுதிவந்த தன்னை தமிழில் எழுதச் செய்தது தன் தந்தையே என்று குறிப்பிடுகிறார்.

தந்தை இவ்வுலகத்தை விட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற பணியை அவரின் ஆசிகளோடு என்றும் தொடர்வதாகப் பதிவிட்டுள்ள மகளின் எண்ணம் ஈடேற இறைவனை வேண்டுகிறேன். அவருடைய நினைவாக ஏப்ரல் 2018இல் முதல் இதழில் வெளியான தலையங்கத்தை இவ்விதழில் பகிர்ந்துள்ளார்.

ஆரம்பம் முதல் நான் இவ்விதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பல துறைகளைச் சார்ந்த கட்டுரைகளை இவ்விதழில் அவர் வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு இதழும் மெருகேறி முந்தைய இதழைவிட அடுத்த இதழைச் சிறப்பாக அமைத்து வருகிறார். படைப்பாளிகளிடமிருந்து கட்டுரைகளைப் பெறுதல், தேர்ந்தெடுத்தல், பொருண்மைப்படி வகைப்படுத்துதல், உரிய இடங்களில் புகைப்படங்களை இணைத்தல், சிறப்பாக வடிவமைத்து தேவையான வண்ணங்களைப் பயன்படுத்துதல், இதழின் முகப்பின் முக்கியமான பொருண்மைகளுக்கான உட்தலைப்புகளை அமைத்தல் என்ற நிலைகளில் மிகவும் கவனம் செலுத்தி, தந்தை வழியில் மகள் ஆற்றுகின்ற பணி போற்றத்தக்கதாகும். வாசிப்போரின் மனம் கவர்கின்ற வகையில் பக்கங்களை அமைக்கும் விதம் சிறப்பாக உள்ளது. 

அன்று முதல் இன்று வரைஇதழைப் படித்துவிட்டு என் கருத்துகளைத் தெரிவிப்பேன். இதழ்களைத் தொடர்ந்து வாசித்தபோதும் என்னுடைய ஆய்வுப்பணி மற்றும் நூல்களின் அச்சுப்பணி காரணமாக சில சமயங்களில் பின்னூட்டம் இட முடியாத நிலையிலும் என் கருத்துகளை அவ்வப்போது இதழாசிரியரிடம் அலைபேசி வழியாகக் கூறுவேன். இதழ் செறிவாக அமைவதற்காக அவர் செலுத்துகின்ற ஈடுபாட்டினை ஒவ்வொரு இதழும் வெளிவரும்போது அறிவேன். 

ஆசிரியரான சுப்ரஜா கண்ணன் நல்ல வாசகர். பறவை ஆர்வலர். இயற்கை விரும்பி. சுற்றுச்சூழல் நேசர். இணையத்தில்,  நாம் அன்றாடம் காண்கின்ற பறவைகளை அறிமுகப்படுத்தி ஒன் மினிட் பேர்டிங் என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார். அந்த நூல் அச்சு வடிவிலும் வெளிவந்துள்ளதாக அவர் மூலமாக அறிந்தேன்.  இவற்றைத் தவிர தன்னுடைய இணையதளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். 

அண்மையில் வந்துள்ள இவ்விதழில் அரை நூற்றாண்டுக்கும் மேலான வாசிப்புப்பழக்கம் என்ற தலைப்பிலான என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது.
 
தந்தையின் ஆசியுடனும், என்னைப் போன்ற சக வாசகர்களின் ஆதரவுடனும் நூறாவது இதழ் கண்ட பாயும் ஒளி மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள்.  

-------------------------------------------------------------------------------------------
நூறாவது இதழை வாசிக்க: பாயும் ஒளி 100ஆவது இதழ்
-------------------------------------------------------------------------------------------

05 July 2026

பொன்விழா காணும் பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம்

நான் தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்ற கும்பகோணம், பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா கும்பகோணம், கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி, பாண்டியகுல நாடார்கள் உறவின்முறை திருமண மண்டபத்தில் இன்று (5.7.2026) நடைபெற்றது.



இந்த இனிய வேளையில் அக்காலத்தில் நான் அங்கு பயின்ற நாள்கள் நினைவிற்கு வருகின்றன. கும்பகோணம், அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்துக்கொண்டிருந்த காலத்தில்  (1975-79) முதலில் கும்பகோணம், ரெட்டியார் குளத்தின் கீழ்க்கரையில் இருந்த ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிலையத்தில் தட்டச்சு கற்க ஆரம்பித்தேன்.  பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் ஆரம்பித்தபின்னர், அதன் ஆரம்ப கால மாணவர்களில் ஒருவனானேன். என்னுடன் ராஜசேகரன், மோகன், மதியழகன், சங்கர், ஐயப்பன், லட்சுமிகாந்தன், தயாளன், நாராயணன், ராஜு, மைனாவதி  உள்ளிட்டோர் தட்டச்சு பயின்றனர். பலருடைய பெயர் நினைவில்லை. அப்போது பயின்ற மோகன் தற்போது சென்னையில் தட்டச்சுப் பயிற்சி நிலையம் நடத்திவருகிறார். 

தமிழ், ஆங்கில தட்டச்சுப் பயிற்சி பெற்ற காலத்தில் பிழை இல்லாமல் நான் தட்டச்சு செய்த பக்கங்கள் அவ்வப்போது அறிவிப்புப் பலகையில் இடம்பெறுவது கண்டு மகிழ்வேன். உடன் பயின்ற பலரின் தட்டச்சுப் பக்கங்களும் அவ்வாறு இடம்பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்தில் எந்த அளவிற்கு அதிகமாக பக்கங்களைத் தட்டச்சிட முடியுமோ அந்த அளவிற்குத் தட்டச்சு செய்வேன். ரெமிங்டன், ஹால்டா, காட்ரோஜ் ஆகிய  தட்டச்சுப்பொறிகளில் தட்டச்சு பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஹால்டாவில் தட்டச்சிடும்போது மிகவும் வேகமாக அடித்த உணர்வு ஏற்படும். 




பயிற்சி நிலையம் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஆசிரியர் திரு கு.பாஸ்கரன் அவர்களும், (ஜூன் 2025இல் பொன்விழா கண்ட, நான் ஆரம்பத்தில் ஹிந்தி கற்ற காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் நிறுவனரும், இந்நிகழ்வில் தலைமையுரையாற்றுகின்ற) திரு.பாலுஜி என்று நாங்கள் அழைக்கும் கு.பாலசுப்ரமணியன் அவர்களும் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் நான் படித்த காலம் முதலே எனக்கு அறிமுகம்.  எங்களுடைய வீடு சம்பிரதி வைத்தியநாதன் தெருவில் இருந்தது. பெரும்பாலான என் பள்ளி நண்பர்களின்  வீடுகள் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியிலும், பேட்டையிலும் இருந்தன. அவர்களைப் பார்க்கச் சென்ற வகையிலான தொடர்பும் ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்தியது.  

பயிற்சிக்காலத்தில் தட்டச்சு செய்யும்போதும், தேர்வின்போதும், வாராவாரம் நடத்தப்படும் வகுப்புத்தேர்வின்போதும் ஆசிரியர் எங்களை அக்கறையுட்ன் கவனித்து வழிகாட்டி நடத்துவார். தட்டச்சில் தினசரி காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் குறைப்பதற்கான ஆலோசனைகளைக் கூறுவார். மாணவர்கள் உரிய நேரத்தில் வர வேண்டும் என்பதிலும் தட்டச்சு செய்யும்போது அதில் முழு கவனமும் செலுத்தவேண்டும் என்பதிலும்  கவனமாக இருப்பார். சுருக்கெழுத்து கற்கும்போது சற்றொப்ப அத்தகைய கவனத்தைச் செலுத்தி எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். பயிற்சியுடன் நாங்கள் கடைபிடித்த ஒழுங்கு தேர்வுகளில் தேர்ச்சி பெற துணைநின்றது. 

கல்லூரிப் படிப்பு முடித்த காலகட்டத்தில் ஆங்கில மற்றும் தமிழ்த் தட்டச்சில் உயர்நிலையிலும்,  ஆங்கிலச்சுருக்கெழுத்தில் கீழ்நிலையிலும்  தேர்ச்சி பெற்றேன். இத்தகுதிகள் எனக்கு உடனே வேலை கிடைக்க உதவியாக இருந்தன. படிப்பை நிறைவு செய்த சில வாரங்களில் தட்டச்சராக சென்னையில் பணியில் சேர்ந்தேன். தொடர்ந்து தஞ்சாவூரிலும், கோயம்புத்தூரிலும் பணியாற்றியபின், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து, 2017இல் பணி நிறைவு பெற்றேன். இடைக்காலத்தில், 2004இல் குடும்பச்சூழல் காரணமாகத் தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தேன்.  

கும்பகோணம் செல்லும்போது மரியாதைநிமித்தம் ஆசிரியரைச் சந்தித்துவிட்டு வருவேன். ஒரு மாணவனாகச் சேர்ந்த காலகட்டத்தில் இருந்த அதே அன்பு, பரிவு ஆகிய குணங்களை இப்போதும் அவரிடம் காணலாம். என்னைப் போல பல மாணவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அவர் இருந்துள்ளார்.  ஒரு முறை நான் சென்றபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் தட்டச்சுப் பயிற்சி நடைபெறும் சூழலையே கண்டேன். அப்போதிருந்தவாறே மாணவர்களை உரியமுறையில் கண்காணித்தல், அவர்கள் தட்டச்சு செய்த தாள்களைக் கவனமாகத் திருத்துதல், பிழைகளை உரிய முறையில் சுட்டிக்காட்டல், உரிய ஆலோசனைகளைக் கூறுதல் என்றவாறு அவர் தன் பணிகளை மேற்கொண்டிருந்தார். ஆண்டுகள் பல ஆனபோதிலும் அவருடைய செயல்பாட்டில் மாற்றமில்லை என்பதை உணர்ந்தேன். இன்னும் எங்களுடைய சந்திப்பு தொடர்கிறது. 


அவரும், குடும்பத்தாரும் எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழவும், அவருடைய சேவை தொடரவும், பொன்விழா காணும் பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் மென்மேலும் வளரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.  

50 ஆண்டுகளாக நமக்கு அவர் வழங்கிய வழிகாட்டுதல், ஆதரவு, அர்ப்பணிப்புகளை நினைவுகூறும் வகையில் முன்னாள் மாணவர்களுடன் இணைந்து அவரை கௌரவிப்பதில் ஆரம்ப கால மாணவன் என்பதில் பெருமையடைகிறேன்.  


நாங்கள் பயின்ற காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இருக்கிறதா என்று ஆசிரியர் திரு கு.பாஸ்கரன் அவர்களிடம் கேட்டபோது உடன் இப்படத்தையும், மேலும் சில படங்களையும் திரு குருகிரி மூலமாக அனுப்பிவைத்தார். படத்தில் அமர்ந்திருப்போரில் நான் (இடமிருந்து) நான்காவதாக உள்ளேன். இப்படம் அக்கால நினைவுகளை மீட்டுக்கொடுத்தது. 

-------------------------------------------------------------------------------------------
விழா நிகழ்வு
-------------------------------------------------------------------------------------------

மாலை நடைபெற்ற நிகழ்வில் காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் அமைப்பாளர் திரு கு. பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். முனைவர் பஞ்சநதம், முனைவர் லட்சுமி காந்தன், திரு ராஜாராமன், திருமதி ராஜேஸ்வரி, திரு சாகுல் ஹமீது, திரு. மணிவண்ணன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்களுடன் நானும் வாழ்த்துரை நல்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையத்தின் நிறுவனர் திரு கு. பாஸ்கரன் ஏற்புரை வழங்கினார். திருமதி. பிரபாவதி நன்றியுரை ஆற்றினார். 





ஆரம்ப காலத்தில் பயிற்சி நிலையத்தினை நால்வராக இணைந்து பணியாற்றத் தொடங்கி இன்றுவரை நட்பிலிருக்கும் நண்பர்களின் அக்காலப் புகைப்படத்தைக் கண்டு வியந்த நாங்கள் இந்நாளில் அவர்களை நேரில் கண்டு, அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது மகிழ்ந்தோம். 50 ஆண்டு கால நட்பின் இலக்கணம் எங்களை நெகிழ வைத்தது. 








விழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது. முதல் பிரிவில் 1976இல் தட்டச்சில் சேர்ந்து தொடர்ந்து சுருக்கெழுத்தும் பயின்ற நிலையில் இதில் கலந்துகொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய உரையில் கூறியதைச் சுருக்கமாகப் பகிர்கிறேன்.

"இவ்வாறான ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்த சக முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சி மிகவும் பாராட்டத்தது. கும்பகோணத்தில் எங்கள் தாத்தா, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியின் பெரிய வாத்தியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தில் பெரியவர், ஆகியவர்களைத் தொடர்ந்து திரு பாலுஜி, ஆசிரியர் திரு பாஸ்கரன் மூலமாகப் பண்பினையும், நன்னடத்தையும் கற்றுக்கொண்டேன்.

இங்கு படித்து நான் பல நிறுவனங்களில் தட்டச்சாளராகவும், சுருக்கெழுத்தாளராகவும் பணிக்கு அமர்த்தப்படும் முன்பாக நேர்முகத் தேர்வில் எதிர்கொண்ட சூழலில் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தில் ஆரம்ப காலத்தில் கற்ற கல்வி துணை நின்றது. அது எனக்குப் பெருமையே.

எந்தவொரு நிகழ்விற்கும் முன்கூட்டியே வருவது மிகவும் முக்கியமானது. அதனையும் இங்குதான் கற்றேன். பயிற்சிக்காலத்தில் பயிற்சியுடன் நான் கற்ற ஒழுங்கு, நேரந்தவறாமை உள்ளிட்ட பழக்கங்கள் என்னை உயர்த்தின. பணியில் சேர்ந்த பின் தொடர்ந்து மேற்கொண்ட தட்டச்சுப் பணியும் அதன் மேலான ஈடுபாடும் என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது.

நான் 50 ஆண்டு காலமாக படித்து வரும் 'தி இந்து' நாளிதழ் வாசிப்பு மொழிபெயர்ப்பு ஆர்வத்தைத் தூண்டியதன் காரணமாக அகராதிகளின் துணையின்றி நேரடியாக மொழிபெயர்ப்பினை செய்யும் ஓர் அரிய கலையைக் கற்றேன். இளந்தலைமுறையினர் முற்றிலும் கூகுளை நம்பியிராமல் இவ்வாறு பழக்கத்தினை மேற்கொண்டால் நினைவாற்றலும், மொழியறிவும் மேலும் வளரும்.

நேரத்தின் அருமை கருதி உரையை நிறைவு செய்கிறேன். என் சார்பாகவும், சக மாணவர்கள் சார்பாகவும் நிறுவனத்திற்கும் நிறுவனருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். உரையாற்ற வாய்ப்பு தந்த ஏற்பட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி."

விழா நிகழ்வினை டியூப்பில் காண: Bharath 50 Celebration
-------------------------------------------------------------------------------------------
நன்றி:
அந்நாளைய குரூப் புகைப்படங்கள்: பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் 
விழா புகைப்படங்கள்: முன்னாள் மாணவ-மாணவிகள்
யுட்யூப் பதிவு: காவியம் டிஜிட்டல் ஸ்டுடியோ
-------------------------------------------------------------------------------------------
16.7.2026இல் மேம்படுத்தப்பட்டது.

01 July 2026

அரை நூற்றாண்டுக்கும் மேலான வாசிப்புப் பழக்கம்

இளம் வயதில் தோன்றிய வாசிப்பானது பல பரிமாணங்களில் தடம் பதிக்க எனக்கு உதவியதை அனுபவம் மூலமாக உணர்ந்துள்ளேன். மேம்போக்காக இல்லாமல் முழுமையான ஈடுபாட்டோடு வாசிக்கப்படும்போது கற்கின்ற நுட்பங்களும், பெறுகின்ற அனுபவங்களும் எண்ணற்றவையாகும். வாசிப்பானது பல துறை அறிவை ஊட்டும். நினைவாற்றலை மேம்படுத்தும். சிந்திக்கும் திறனை வளர்க்கும். அவ்வகையில் நான் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன். 50 ஆண்டுகள் சற்றே பின்னோக்கிச் செல்வோம். 

1960கள். எங்களுடைய தாத்தா திரு ரெத்தினசாமி அவர்களின் நாத்திகம், நவசக்தி இதழ்களின் வாசிப்பானது பள்ளிக்காலத்தில் என்னுடைய வாசிப்புக்கு ஓர் ஆரம்பமானது. தாத்தாவின் நண்பர் நம்மை மேம்படுத்த வாசிப்புப்பழக்கம் உதவும் என்பார். அவ்வப்போது அவ்விதழ்களைப் படிப்பேன். 

எங்கள் தங்க ராஜா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவசக்தி இதழுடன்
நன்றி : கோல்டன் சினிமா

1970கள். எஸ்.எஸ்.எல்.சி. படித்தபோது என் நண்பரின் தந்தை ஆங்கிலச்சொற்றொடர்களைக் கூறி அதற்கான பொருளையும் கூறுவார். அப்போது ஆங்கில இதழை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அண்டை வீட்டில் இருந்த தி இந்து வாசகர் வீட்டிற்குச் சென்று அதனை வாசிப்பேன்.  

கல்லூரியில் படித்தபோது தட்டச்சு போன்றவற்றைக்கற்றேன். புதிய சொற்களைத் தட்டச்சிடும்போது அதற்கான பொருளை அகராதிகளில் பார்த்துத் தெரிந்துகொள்வேன். வகுப்பில் ஆசிரியர் பாடமெடுக்கும்போது தெரியாத சொற்களுக்கு விளக்கம் கேட்பேன். இல்லம், தட்டச்சுப் பயிற்சி நிலையம்,  கல்லூரி என்ற  வகைகளில் தேடலைத் தொடர்ந்தேன்.  

நாளிதழ்களில் புதிய சொற்கள் பயன்படுத்தும்விதம், தலைப்புச் செய்திக்கான எழுத்துரு வடிவமைப்பு, பக்க அமைப்பு, பத்திப் பிரிப்பு, உரிய படங்கள் அமைக்கப்படல், பெட்டிச்செய்திகள் போன்றவற்றையும்,  ஒரே செய்தி பிற இதழ்களில் பல நடைகளில் அமையும் விதத்தையும் கவனிப்பேன்.  

1980கள். வெளியூர்களில் பணியாற்றியபோதும்  நாளிதழ் வாசிப்பு தொடர்ந்தது. வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்தேன்.  வங்கித்தேர்வு தொடர்பாக நான் எழுதிய கடிதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில்  வெளியானது. தி இந்துவில் உங்கள் ஆங்கிலத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் என்ற பகுதியில் சில சொற்களுக்கான பொருளைக் கேட்டு நான் எழுதிய கடிதங்கள் என் பெயருடன் வெளியாயின.  


இந்திரா காந்தி இறந்தபோது தி இந்துவில் இந்திரா காந்தி அசாசினேட்டட் என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இந்திரா காந்தி ஷாட் டெட் என்றும் முதல் பக்கச் செய்தி வெளியாகியிருந்தது.  தி இந்து இதழின் சகோதர இதழாக அறிமுகமான பிரண்ட்லைன் இதழின் வாசகனானேன். அதிலும், இந்தியா டுடே உள்ளிட்ட பருவ இதழ்களிலும் நான் எழுதிய கடிதங்கள் வெளியாயின.  

1990கள். அடுத்து, சிறுகதை எழுத முயற்சி எடுத்தேன். முதல் சிறுகதை குங்குமம் இதழிலும், தொடர்ந்து பாக்யா, சாவி, குங்குமம், தின பூமி, கதைபூமி, மங்கையர் பூமி, இதயம் பேசுகிறது, தமிழரசி, வாசுகி, மேகலா, டி.ராஜேந்தரின் உஷா, ராஜரிஷி உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாயின. சிலவற்றுக்கு காசோலை, மணியார்டர்  மூலமாக மதிப்பூதியம் பெற்ற அனுபவமும் உண்டு. 




ஒரு முறை தி இந்து நாளிதழில் வந்த, அல்லாடி கிருஷ்ணசாமி கட்டுரையை முதல் முதலாக நேரடியாக சுமார் 65 நிமிடங்களில் தமிழ்த் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்தேன். பின்னர் இம்முறையில் பல கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்தேன். வாசிப்பு அனுபவமானது மொழியாக்க ஆர்வத்தை மேம்படுத்தியது.  

2000கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவு செய்து பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினேன். கதை எழுதுவதிலிருந்து சற்றே மாறுபட்டு, உரிய மேற்கோள்கள், சான்றுடன் எழுதும் முறையை அறிந்தேன். இக்கட்டுரைகளை கருத்தரங்குகளில் வாசித்தபோது மேடைப் பேச்சு அனுபவம் கிடைத்தது. 

2010கள். ஒவ்வொரு ஆங்கில அகராதியும் ஒவ்வோராண்டும் ஆண்டின் சிறந்த சொல்லைத் தெரிவு செய்வர். அதனைக் கட்டுரைகளாக மொழிபெயர்த்தேன். 2017ல் சிறந்த சொல் என்ற கட்டுரை தி இந்து தமிழ்ப்பதிப்பிலும், தொடர்ந்து தினமணி உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாயின.  இதே காலகட்டத்தில் தி தி கார்டியன், டெய்லி மெயில், டெய்லி எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ், டெய்லி மிர்ரர், இன்டிபென்டன்ட், தி டெலிகிராப், தி சன், தி நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பில்ட், டான் போன்ற வெளிநாட்டு இதழ்களில் வெளியான கட்டுரைகளில் செய்திகளை மொழிபெயர்த்து முன்னணி தமிழ் இதழ்களில் எழுதினேன். 



இதே காலத்தில் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் அடங்கும்.  நண்பர்கள், ஆய்வாளர்களின் நூல்களைப் பற்றிய மதிப்புரையினை புக் டே தளத்தில் எழுத ஆரம்பித்தேன்.

2020கள். இதழ்களின் வடிவமைப்பின் மூலமாக, இதழ்கள் வாசகர்களைச் சென்றடைய மேற்கொள்ளும் ரசனை உத்தியை அறியமுடியும். வெளிநாட்டு இதழ்களின் வடிவமைப்பு, டேப்ளாய்ட் இதழ்களின் முக்கியத்துவம், பெரிய எழுத்து பயன்பாடு, ஆக்ஸ்போர்டு காற்புள்ளி போன்ற பதிப்பு, அச்சு நடை தொடர்பாகக் கட்டுரைகள் எழுதினேன்.   


தி இந்து நாளிதழை 50+ வருடங்களாகவும், கார்டியன் இதழை 15+ வருடங்களாகவும் வாசிக்கிறேன். வெளிநாட்டு செய்திகளில் காணப்படுகின்ற நம் நாட்டு செய்திகளைக் கவனமாக வாசிப்பேன்.

கைப்பேசியிலும், மடிக்கணினியிலும் பல முன்னணி தமிழ், ஆங்கில நாளிதழ்களை வாசிக்கிறேன். குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவர் என்பனவற்றுக்கு அப்பாற்பட்டு செய்திகளை அணுகுகிறேன். இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோரின் சமூக இணையதள பக்கங்களைத் தொடர்கிறேன்.     

இதுவரை 2,000+ கட்டுரைகளையும், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட 10 நூல்களையும் எழுதியுள்ளேன். தாத்தா மூலமாக ஆரம்பமான வாசிப்புப்பழக்கமானது, வாசகர் கடிதத்தில் தொடங்கி தற்போது குடியரசு தலைவர், குடியரசுத் துணைத்தலவர் ஆகியோரிடமிருந்து பாராட்டுக்கடிதங்கள் வாங்கும் வரை என்னை முன்னேற்றியுள்ளது. என்னுடைய வாசிப்பும், மொழிபெயர்ப்பும், எழுத்துப்பணியும் தொடரும். வாசிப்பை நேசிப்போம்.

-------------------------------------------------------------------------------------------

நன்றி: பாயும் ஒளி 100ஆவது இதழ்
-------------------------------------------------------------------------------------------