19 June 2026

2000ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அறிவியல் ஆய்வுகள்

தமிழில் அறிவியல் செய்திகள் வெளிவரவேண்டும் என்ற நோக்கில் 23.12.2000 நாளிட்ட தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்து "2000ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அறிவியல் ஆய்வுகள்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை அறிக அறிவியல் இதழில் வெளியானது. 1997க்குப் பின் இவ்வாறாக, தி இந்து நாளிதழிலிருந்து மொழிபெயர்த்து நான் எழுதிய இரண்டாவது கட்டுரை இதுவாகும்.






-------------------------------------------------------------------------------------------
நன்றி: அறிக அறிவியல், மே 2001
-------------------------------------------------------------------------------------------
பிற கட்டுரைகளை வாசிக்க: கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------------

18 June 2026

அறிவியில் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை-1997இன் அரிய அறிவியல் சாதனைகள்

ஒவ்வோராண்டின் ஆரம்பத்திலும் தி இந்து ஆங்கில நாளிதழில் அதற்கு முந்தைய ஆண்டின் முக்கியமான அறிவியல் செய்திகள், கண்டுபிடிப்புகள்,  சாதனைகள் கட்டுரையாக வெளிவரும். அவ்வாறான கட்டுரைகள் தமிழில் வெளிவரவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. 1997ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக அமைந்தது. இதுதத்துவ மையத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட காலத்தில் எழுதியதாகும். 

1.1.1998இல் தி இந்து இதழில் வெளியான கட்டுரையை "அறிவியில் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை: 1997இன் அரிய அறிவியல் சாதனைகள்" என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தேன். 12-13.12.1998இல் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்ற அறிவியல் தமிழ் வளர்ச்சிப் போக்குகள் என்ற கருத்தரங்கில் அளித்தேன். அறிவியல், மொழியாக்கம் என்ற வகையில் அமைந்த அக்கட்டுரை, பின்னர் அறிவியல்தமிழ் வளர்ச்சி என்ற நூலில் இடம்பெற்றது.










கருத்தரங்கத்தின்போது மலரின் 
முகப்பும், கட்டுரையின் முதல் பக்கமும்



-------------------------------------------------------------------------------------------
நன்றி: அறிவியல்தமிழ் வளர்ச்சி, பதிப்பாசிரியர்கள்: 
முனைவர் சா.கிருட்டினமூர்த்தி, முனைவர் சா.உதயசூரியன்
-------------------------------------------------------------------------------------------
பிற கட்டுரைகளை வாசிக்க: கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------------

18.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

16 June 2026

மாசு படியும் தாஜ்மஹால்

கோயம்புத்தூரில் 17-18.5.1996இல் தமிழக அறிவியல் பேரவை சார்பாக நடைபெற்ற , நான்காம் கருத்தரங்கில் ‘‘மாசு படியும் தாஜ்மஹால்’’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தேன். இது என்னுடைய இரண்டாவது அறிவியல் கட்டுரையாகும். தி இந்து நாளிதழிலிருந்தும், பல ஆங்கில நூல்களிலிருந்தும் தரவுகளைத் திரட்டி தமிழ்த் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்தேன். தி இந்து நாளிதழில் வெளியான தாஜ்மஹால் தொடர்பான தலையங்கத்தில் வந்த முதல் சொற்றொடர் (Mumtaj would have gone into the footnote of History but for Taj Mahal) இன்னும் நினைவில் உள்ளது. துணை நின்ற நூல்களை கட்டுரையின் நிறைவுப்பகுதியில் அமைத்திருந்தேன். பின்னாளில் ஆய்வேட்டினை உருவாக்கும்போது இவை போன்ற உத்திகள் எனக்கு மிகவும் உதவின. கருத்தரங்க நாளில் வெளியான மலரில் ஆய்வுச்சுருக்கம் இடம்பெற்றது.











-------------------------------------------------------------------------------------------
நன்றி: அறிவியல்தமிழ் வளர்ச்சி, தமிழக அறிவியல் பேரவை
-------------------------------------------------------------------------------------------
பிற கட்டுரைகளை வாசிக்க: கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------------

18.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

14 June 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 'அறிக அறிவியல்' இதழின் பங்கு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட  காலகட்டத்தில் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, ஆய்வுக்கு அப்பாற்பட்டு அறிவியல் தொடர்பான கட்டுரைகளையும்  வாசிக்க ஆரம்பித்தேன். அவ்வகையில் நான் வாசித்த முதல் கட்டுரை 1995இல் அனைத்திந்திய அறிவியில் தமிழ்க் கழகம் சார்பாக நடத்தப்பெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தலைப்பிலான கருத்தரங்கில் "சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 'அறிக அறிவியல்' இதழின் பங்கு" என்ற தலைப்பிலான கட்டுரையாகும். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 7-8.10.1995இல் நடைபெற்ற அக்கருத்தரங்கில் முதன்முதலாகக் கட்டுரையை அளித்தபோது சற்று தயக்கமாக இருந்தது. இருப்பினும் சிறப்பான முறையில் வாசித்தேன். அது அச்சு வடிவில் வெளியான தொகுப்பிலும் இடம்பெற்றது. 







-------------------------------------------------------------------------------------------
நன்றி: வளர் தமிழில் அறிவியல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
பதிப்பாசிரியர்கள்: முனைவர் இராம.சுந்தரம், முனைவர் நே.ஜோசப்
-------------------------------------------------------------------------------------------
பிற கட்டுரைகளை வாசிக்க: கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------------

18.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

12 June 2026

அறிவியல் துளி 1995, தமிழ் அகராதியியல் செய்தி மலர் 1998

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்பில் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் அனைத்திந்திய அறிவியில் தமிழ்க் கழகத்தின் சார்பாக வெளிவந்த அறிவியில் துளி இதழில் (வெளியிடுபவர் முனைவர் இராம.சுந்தரம், அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறை) "எலியைத் தின்னும் கிழப்புலி", "ஆண் குதிரை கருத்தரிக்கும்" (சனவரி 1995), "ஓட்டுநருக்கு நற்செய்தி" (மார்ச் 1996) போன்ற தலைப்புகளில் அறிவியல் தொடர்பாக சில துணுக்குகளை எழுதினேன். பின்னாளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுத இவை போன்ற பதிவுகள் உதவியாக இருந்தன.




அவ்வாறே, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் அனைத்திந்திய அகராதியியல் கழகத்தின் சார்பாக வெளிவந்த காலாண்டிதழான தமிழ் அகராதியியல் செய்தி மலர் இதழில் (வெளியிடுபவர் எச்.சித்திரபுத்திரன், இணைப்பேராசிரியர், அகராதியியல் துறை) வெளிவந்தது. அதில்   "சாமுவேல் ஜான்சன்" (சனவரி-சூன் 1998), "உலகப்பெரும் அகராதி" (சூலை-செப்டம்பர் 1998) என்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதியது நினைவில் நிற்கும் அனுபவமாகும்.   





மொழிபெயர்ப்பு, பொருள் என்ற நிலையில் சில குறைகள் இருக்க வாய்ப்புள்ளது. அக்காலகட்டத்தில் பல துறைகளில் எழுதவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இவை எழுதப்பட்டவையாகும். பின்னர் கட்டுரைகள் எழுதுவதற்கு ஓர் ஆரம்பமாக இப்பதிவுகள் அமைந்தன.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: அறிவியல் துளி, தமிழ் அகராதியியல் செய்தி மலர்
-------------------------------------------------------------------------------------------
பிற கட்டுரைகளை வாசிக்க: கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------------

18.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

10 June 2026

இயக்குநர் இமயம் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே திரைப்படத்தைப் பார்த்த முதற்கொண்டே நான் அவருடைய பரம ரசிகனானேன். அதற்கு முன்பு அரங்கேற்றம் மூலமாக கே.பாலசந்தர் ரசிகனாக இருந்த நான், பின்னர் பாரதிராஜாவின் ரசிகனாகவும் மாறினேன். 


பதினாறு வயதினிலே படம் வெளியானபோது நான் கும்பகோணம், அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். ஆத்தா நான் பத்தாவது பாஸ் பண்ணிட்டேன் என்று அறிமுகமாகும் அப்படத்தில் மயிலில் தொடங்கி சப்பாணி, பரட்டை, குருவம்மா என்ற வரிசையில் அனைவரும்  தத்தம் கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருப்பர். அதேகாலகட்டத்தில் அக்கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக்கொண்டிருந்த என் நண்பன் சந்தானகிருஷ்ணனும் நானும் இப்படத்தைப் பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருப்போம். சில வருடங்களுக்குப் பிறகு இத்திரைப்படத்தின் ரெகார்டை (வட்ட வடிவத் தட்டு) பல நண்பர்களிடம் விசாரித்துவிட்டு கடைசியில் கும்பகோணம் ராமசாமி கோயில் அருகேயுள்ள நண்பரின் கடையில் பெற்று அதை வாங்கிப் பல முறை போட்டுப்பார்த்து ரசித்தோம். அதற்கான ப்ளேயரை  எங்கு வாங்கினோம் என்று நினைவில்லை.

அடுத்து என்னை அதிகம் ஈர்த்த படம் அக்காள் மகள் தம்பி மகன் கதையைக் கொண்டமைந்த அவருடைய மண் வாசனை. அண்டை வீட்டுப்பெண் என்பார்களே அந்தளவிற்கு அதில் வரும் முத்துப்பேச்சியின் பாத்திரம் என்னை அதிகம் கவர்ந்தது. அப்படத்திற்கு முன்போ, பின்போ அவ்வாறான ஒரு படத்தை நான் பார்க்கவில்லை. பொதுவாக நான் பாலசந்தர் படங்களை ஒவ்வொரு பிரேமையும் ரசித்துப் பார்த்த நான் அந்தவகையில் ரசித்துப் பார்த்தது பாரதிராஜாவின் மண் வாசனை.

அப்படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜாவிற்கு ஒரு கடிதம் தட்டச்சுப்பொறியில் நானே தட்டச்சிட்டு அனுப்பினேன். கடிதம் முழுக்க நன்றி என்ற சொல் இடம்பெறும் வகையில் இடையில் என் கருத்துகளைக் கூறி அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் அனுப்பிய மறுமொழிக் கடிதம் இன்னும் என்னுடைய கோப்பில் உள்ளது. 




கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் போன்ற கிராமத்துக் கதைகள் மட்டுமின்றி வித்தியாசமான கதைகளைக் கொண்ட சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், போன்றவற்றை அவர் எடுத்துள்ள விதம் பார்ப்போரை வியக்க வைக்கும். இந்தப்படங்களையும் அவர்தான் எடுத்தாரா என்று நம்மை முற்றிலும் யோசிக்க வைக்கும்.

அவருடைய படத்தில் வருகின்ற மரங்கள் அழும், சிரிக்கும். திரை முழுக்க கோழிக்குஞ்சுகள், குளத்தில் பூக்கள் என்ற வகையில் அவர் ரசித்து அமைத்துள்ள பல கிராமத்துக் காட்சிகளைக் காணும்போது இயற்கை நம்முடனே கைகோர்த்து வருவது போன்ற உணர்வினை ஏற்படுத்தும். முதன்மைப் பாத்திரங்களுக்கு ஈடாக அமைகின்ற துணைக்கதாபாத்திரங்களும் முக்கியமான இடத்தைப் பெறுவர். போறாளே பொன்னுத்தாயி...என்னும்போது நாமும் உடன் போவதுபோல இருக்கும். 

கல்லூரிப்படிப்பு முடிந்து சில மாதங்களிலேயே வேலையில் சேர்ந்துவிட்டேன். கோயம்புத்தூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள டி.ஸ்டேன்ஸ் அண்ட் கோ. நிறுவனத்தில் வேலைக்காக இன்டர்வியூ செல்ல நான் ரயிலைவிட்டு இறங்கியபோது என் கண்களில் முதலில் பட்ட போஸ்டர் வறுமையின் நிறம் சிகப்பு. ராயல் தியேட்டரில் அப்படம் ஓடியதாக நினைவு. இன்டர்வியூவிற்கு போய்விட்டு அந்தப் படத்தைப் பார்த்துவிட்டே திரும்பினேன். அதே காலகட்டத்தில் சற்றொப்ப அதே கதையமைப்பில் வந்த படம் பாரதிராஜாவின் நிழல்கள். இருவரின் ரசிகன் என்ற நிலையில் இரு படங்களுமே என்னை அதிகம் ஈர்த்தன. இருந்தாலும் நேர்மறைக் கருத்துடன் முடிந்த வறுமையின் நிறம் சிகப்பு எனக்கு அதிகம் பிடித்திருந்தது.

திரைப்படத்தில் வரும் கிராமத்தையும், இயற்கைக்காட்சிகளையும் பார்க்கும்போது ஒரு ரசிகனுக்கு அந்தந்த இடமும் காட்சியும்தான் நினைவிற்கு வரும். ஆனால் பாரதிராஜா படங்கள் வந்தபிறகு கிராமத்தைச் சூழலையோ, இயற்கைக்காட்சியையோ பார்க்கும்போது பாரதிராஜாவின் படம் நினைவிற்கு வர ஆரம்பித்தது. அந்த அளவிற்கு அவர் நம்மை அதனுடன் ஒன்றிப் போக வைத்தவர். நிழல்கள், வேதம் புதிது, புதுமைப்பெண், என் உயிர்த்தோழன்  போன்ற சமூகப் பிரச்னைகளை வெளிப்படுத்தும் சூழலில் அமைந்த அவருடைய படங்கள் பல பாடங்களை உணர்த்தின.  வயதான கதாபாத்திரமாகட்டும், இளமையான கதாபாத்திரமாகட்டும் அந்தந்த பாத்திரங்களின் மூலமாக அவர் எடுத்துச்சொல்கின்ற கருத்துகள் மனதில் ஆழப்பதிந்துவிடும். அதுவே அவருடைய தனித்துவம். 

அரசியல் அவலங்களை அப்பட்டமாக எடுத்துரைக்கும் என் உயிர்த்தோழன். என்னை மன்னுச்சிடு தருமா என்ற அந்த கடைசி வார்த்தைகள். 

முதல் மரியாதை படம் பார்ப்போர் உறவின் ஆத்மார்த்தமான நெருக்கத்தை முற்றிலும் உணர்வர். திரைப்படத்தில் இவ்வாறாகக் கொணரமுடியுமா என்று யோசிக்க வைத்த படம். அவள் வருவாள், வந்துவிடுவாள் என்று கடைசியில் நம்மையும் ஆவலோடு எதிர்பார்க்க வைப்பார். அவள் தன்னுடைய காலை வீட்டிற்குள் வைக்கும்போது, படுத்துக்கிடக்கும் அவருடைய மனதிலிருந்து வெளிப்படுத்தப்படுகின்ற உணர்வுகளைக் காணும்போது அந்த யதார்த்தத்தையும் சோகத்தையும் உணர முடியும். கடலோரக் கவிதைகள் ஜெனிபர் டீச்சரையும் சின்னப்பதாஸையும் மறக்க முடியுமா? அவர்களுக்கிடையேயான அன்பின் வெளிப்பாடானது நாகரீகமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அடி ஆத்தாடி.. பாடலைக் கேட்போருடைய மனங்களும் இறக்கை கட்டிப் பறக்கும். அவ்வாறு அவர் செய்துவிடுவார். அவர்தான் பாரதிராஜா.

அண்ணன் தங்கை பாசம் தொடர்பாக பல படங்கள் பார்த்திருந்தாலும் கிழக்குச்சீமையிலேக்கு ஈடு கிழக்குச்சீமையிலேதான்.  அந்தப் படத்தில் பாத்திரங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும். போட்டி போட்டுக்கொண்டு அண்ணனும் தங்கையும் பாசத்தால் ஏங்குவர். அவ்வாறே நம் அனைவருடைய மனதிலும் ஆழப்பதிந்தவர் ஊர்ப்பெருமையா, சொத்தா, உறவா, பாசமா என்ற போட்டிக்கிடையில் அவருடைய கருத்தம்மா திரைப்படம் கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடு உண்மையை வெளிப்படுத்தும். 

சகோதரன்-சகோதரி, தந்தை/தாய்-மகள்/மகன், அத்தை மகன்-மாமன் மகள் என்ற உறவுகளும், அவை தொடர்பான எண்ணங்களும் இதயத்தின் அடியில்  ஆழப்பதிந்த அன்பின் காரணமாக அப்படியே பதிந்திருக்கும். காலம் மாறினாலும் அந்த அன்பானது என்றுமே மாறாது. பந்தபாசங்களின் அந்த அன்பு கிடைக்காமற்போனாலும் அதன் நினைவுகள் தருகின்ற சுகத்தை உணர்வால் மட்டுமே அறியமுடியும் என்பதைத் திரையில் கொணர்ந்திருப்பார் பாரதிராஜா. எவ்வளவுதான் நெருக்கமான அன்பு இருந்தாலும் ஒரு மெல்லிய கோடு போன்ற இடைவெளி இருக்கவேண்டும் என்று அவர் படத்தில் கேட்ட வசனம். அவ்வாறான இடைவெளி இல்லாவிட்டால் அந்த அன்புக்காக ஏங்கி, ஏமாற்றப்பட்டு, முற்றிலும் தன் நிலையையே இழத்தல் என்ற நிலையை அருமையாகக் கூறியிருப்பார்.    

எனக்குத் தெரிந்து இயக்குநர் பெயர் போடும்போது கைதட்டல் பெற்றவர் முதல் இயக்குநர் ஸ்ரீதர். அதற்கடுத்தபடியாக   அவ்வாறே பாலசந்தர் படங்களில் எவ்வித பின்னொலியும் இன்றி அமைதியாக அவருடைய பெயர் திரையில் தோன்றும்போது என்னையும் அறியாமல் கை தட்டியுள்ளேன். நாளடைவில் அதனை அமைதியாக ரசித்தேன். அவ்வாறே பாரதிராஜாவின் பெயரைப் பார்க்கும்போதும் என்னையறியாமல் ஒரு மகிழ்ச்சி பெறுவேன். ரசிகர்களின் மனதை எவ்வாறு உங்களால் படமெடுக்க முடிகிறது என்று அவரிடம் கேட்கத் தோன்றும். கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிகராக அறிமுகமாகி தன்னுடைய முத்திரையைப் பதிக்க ஆரம்பித்த அவர், மட்டுமன்றி தந்தை, தாத்தா போன்ற கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஸ்டுடியோ சூழலில் இயங்கி வந்த சினிமாவை வெளி உலகிற்குக் கொண்டுவந்ததோடு, அதனை கிராமத்துப்பக்கம் திருப்பி அதனையே களமாக்கி நம்முன் கொண்டு சாதனை படைத்தவர் அவர். திரைத்துறையில் அவர் அதிகம் சாதித்துள்ளார். அவருடைய படங்கள் மூலமாக அவர் என்றும் நம்முடன் வாழ்வார்.

மனதில் நிற்கும் ஆத்தா, தாத்தா

50 ஆண்டுகளுக்கு முன். கும்பகோணம், சம்பிரதி வைத்தியநாதர் தெருவில் எங்கள் வீட்டில் பள்ளிக்காலத்து நினைவுகள் அவ்வப்போது மனதில் வந்துசெல்லும். வீட்டின் நினைவாக இப்போது எங்களிடம் உள்ளது ஆத்தா, தாத்தாவின் போட்டோ மட்டுமே.

கண்டிப்பின் மறுபெயர் எங்கள் தாத்தா (திரு ரெத்தினசாமி). கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்தபோது பெரும்பாலும் தாத்தாவின் அடி வாங்கியபின்னர் தான் பள்ளிக்குச் செல்வேன். பள்ளிக்கூடம் என்றால் எனக்கு ஓர் ஒவ்வாமை. சில சமயங்களில் தாத்தா, வீட்டின் எதிரே இருக்கும் விறகுக்கடையிலிருந்து கையில் கிடைக்கும் விறகை எடுத்துக்கொண்டு விரட்ட ஆரம்பித்துவிடுவார். ஒருமுறை பள்ளிக்குச் செல்லப் பயந்து வீட்டிற்குத் திரும்பி ஓடிவந்துவிட்டேன். என்னை பள்ளிக்கு இழுத்துச்சென்று பெரிய வாத்தியாரிடம் இவனை நன்றாக அடியுங்கள். இரண்டு கண்களை மட்டும் வைத்துவிட்டு தோலை உரித்துவிடுங்கள், அப்போதுதான் சொன்னபேச்சைக் கேட்பான், நன்றாகப் படிப்பான் என்றார். அப்போது வாத்தியார்  கொடுக்கின்ற அடியே தேவலாம் என நினைத்தேன். 


ஆண், பெண் குழந்தைகள் யாராக இருந்தாலும் முட்டி தெரியும்படி உடை அணியக்கூடாது என்பார். அவ்வாறே கருப்பு நிற ஆடைகளும் அவருக்குப் பிடிக்காது. ஒருவரின் குணத்தை தீர்மானிப்பதில் ஆடையும் முக்கியம் என்பது போல செயல்படுவார். முடி அதிகமாக இருந்தால் உடனே வெட்டிவிடவேண்டும், இல்லாவிட்டால் அவரே சலூனுக்கு அழைத்துச்சென்றுவிடுவார். காது பக்கம் கிருதா முடி இறக்கமாக இருக்கக்கூடாது. இதையெல்லாம் மீறி முடிவெட்டி வந்து அடி வாங்கியது உண்டு. நல்லா படிக்கணும், நல்ல வேலைக்குப் போகணும், நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கணும் என்றெல்லாம் கூறுவார். 

எங்கள் தாத்தா, "நவசக்தி", "நாத்திகம்" ஆகிய நாளிதழ்களின் வாசகர். அவ்வப்போது சிலவற்றைப் படித்துக் காட்டுவார். அந்த வாசிப்பை பார்த்தே எனக்கு நாளிதழ் வாசிப்புப் பழக்கம் தோன்றியது. 

சினிமாவுக்குப் போகக்கூடாது, ரேடியோ கேட்கக்கூடாது, என்பன போல பல கண்டிஷன்கள். தாத்தாவுக்குத் தெரியாமல் அப்பா சினிமாவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். திரும்பியபின் இருவரும் திட்டு வாங்குவோம். தாத்தா இருந்தவரை எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. சைக்கிளும் கிடையாது.

ஆற்றில் குளிக்க ஆசையாக இருக்கும். ஆனால் ஆற்றில் போனால் நீச்சல் தெரியாமல் மூழ்கிவிடுவேன் எனப் பயந்து ஆற்றுக்கு அனுப்ப மாட்டார்கள். என் நண்பர்கள் அனைவரும் நீச்சல் தெரிந்தவர்கள். நானும் ஆசையாகக் கேட்பேன், விடமாட்டார். அதனால் எனக்கு நீச்சல் கற்கமுடியாமல் போனது.

வெளியே அழைத்துச்செல்லும்போது பெரிய வீடுகளைக் காட்டி, நீ பெரியவனாகி நன்றாகச் சம்பாதித்து இதுபோல வீடு கட்ட வேண்டும் என்பார். முடிந்தவரை கடன்வாங்கக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்.  

பாசத்தின் வடிவம் எங்கள் ஆத்தா (பிச்சாரம்மாள்). தாத்தாவைப் போலவே கண்டிப்பு இருந்தாலும் பாசம் அதிகமாகவே இருக்கும். தாத்தா அடித்து வீங்கியிருக்கும் காயங்களுக்கு மஞ்சப்பத்து போடுவார். சில சமயங்களில் சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுப்பார். சின்ன கூடத்தில் அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு கால்களை முற்றத்தில் தொங்கவிட்டுக்கொண்டு, முற்றம் வழியாக வானத்தைப் பார்த்தால் நிலா வெளிச்சம் நன்றாகத் தெரியும். நல்ல நல்ல கதைகள் கூறுவார். அடிக்கடி புத்தி கூறுவார்.  கூடத்தின் நடுவிலோ, நிலைப்படியிலோ அமர்ந்துகொண்டு நகம் வெட்டக்கூடாது, வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது, பெண் பிள்ளைகள் முடியை விரித்துப்போட்டுக் கொண்டு வீட்டில் உட்காரக்கூடாது என்பார்.  

எந்த வேலையை ஆரம்பித்தாலும் என்னை வைத்துத்தான் ஆரம்பிப்பார். பெரியவன் கைவைத்தால் நன்றாக இருக்கும என்பார். கொல்லையில் பறிக்கும் தேங்காயை வீட்டில் கொண்டு வைத்தல், வயலிலிருந்து வரும் நெல்லை குதிரில் கொட்டுதல், அரிசிப்பானையில் அரிசி கொட்டுதல், வீட்டுக்கு மளிகை சாமானுக்கு பட்டியல் எழுதுதல், மழைக்காலப் பயன்பாட்டிற்காக கொல்லை நடையின் பரணியில் சமையலுக்கான விறகை அடுக்கிவைத்தல் போன்ற வேலைகளைச் செய்துள்ளேன்.  

ஒரு முறை ஆத்தாவின் தங்கை, சின்ன ஆத்தா, எங்கள் வீட்டில் வந்து தன் அக்காளிடம் (என் ஆத்தாவிடம்) வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டே வீட்டுக்கு வந்த மருமகள் குளித்துவிட்டு தலைவிரி கோலமாக நடுவீட்டில் உட்கார்ந்திருக்கிறார், சொன்ன பேச்சைக் கேட்பதில்லை என்று அழுதார். அவருடைய வீட்டில் குலதெய்வம் இருந்தது. செவ்வாய், வெள்ளியில் பூசை போடுவார்கள். சிவராத்திரியின்போது சிறப்புப்பூசை உண்டு. அமைதியாக இருக்கும் குடும்பத்தில் இவ்வாறான ஒரு பூகம்பத்தைம் எங்கள் ஆத்தாவால் நம்பமுடியவில்லை. பின்னர் அங்கு வந்து புத்தி சொல்வதாகக் கூறியது நினைவில் உள்ளது. 

ஓட்டு இடுக்குகளில், தாழ்வாரத்தில், உத்தரத்தில், ஏதாவது சிந்தனையில் இருக்கும்போது கண்களுக்கு ஒட்டடை தெரிந்தால் உடனே விளக்குமாற்றை எடுத்து அதனை ஆத்தா தட்டிவிடுவார்கள். வீட்டில் ஒட்டடை இருக்கக்கூடாது, அவ்வாறு இருந்தால் தரித்திரம் என்பார்கள். 

விசிறியை எப்போதும் மோட்டுவளையில் செருகி வைத்திருப்பார்கள். வெயில் காலத்தில் அது மிகவும் உபயோகமாக இருக்கும்.   

தாத்தா, ஆத்தாவுடன் வெளியே நடந்துபோகும்போது ஏதாவது கதையோ, புத்திமதியோ கூறிக்கொண்டேதான் வருவார்கள். அவர்கள் அவ்வாறு கூறும்போது எங்கள் கவனம் சிதறாமல் உன்னிப்பாகக் கவனிக்கிறோமா என்று பார்ப்பார்கள். பனியில் வெளியில் சென்றால் காதுகளை மூடி மப்ளர் போல துணியைக் கட்டிக்கொள்ளவேண்டும்.

குளித்துவிட்டு, திருநீறு பூசிக்கொள்ளவேண்டும் என்பது எங்களுக்கான அன்றாட கடமைகளில் ஒன்று. நெற்றி மொட்டையாக இருக்கக்கூடாது, பெண் பிள்ளைகள் பொட்டினைத் தெரியும்படி அழகாக வைக்கவேண்டும் என்பார்கள்.  வீட்டில் வெட்டப்பட்ட நகமோ, முடியோ கண்ணில் பட்டால் திட்டுவார்கள்.   பூமி அதிருமபடி நடக்கக்கூடாது என்பார். கை காயும் வரை சாப்பிடக்கூடாது என்பார்கள். அவ்வாறே சீக்கிரம் குளித்துவிட்டு வரவேண்டும் என்பார்கள். 

ஆத்தாவோ, தாத்தாவோ கண்டிக்கும்போதோ  அதட்டும்போதோ எங்கள் அப்பா, அம்மா, அத்தை யாரும் வந்து குறுக்கே வந்து தடுக்கமாட்டார்கள், குழந்தைகளின் நலனுக்காகத்தானே என்று இருந்துவிடுவார்கள். அவர்களுடைய கண்டிப்பைப் பற்றி அப்பா, அம்மா, அத்தையிடம் நாங்கள் எதுவுமே சொல்லமாட்டோம். சொல்லவேண்டும் என்ற எண்ணமும் இருக்காது.

அவர்கள் எங்களை வளர்ந்த ஒருவகையான கட்டுப்பாடானது பிற்காலத்தில் என் முயற்சியில் நான் பணியில் சேர்ந்து, வெளியூர்களில் பணியாற்றியபோது தொடர்ந்தது. பணிநிறைவு பெற்று, இன்றுவரைகூட அந்தக் கட்டுப்பாடானது என்னை நெறிப்படுத்துவதை உணர்கிறேன். அந்த உத்தியானது நான் செய்வது சரியா என்று சிந்தித்துச் செய்யுமளவிற்கு ஒரு பக்குவத்தை என்னுள் உண்டாக்கியிருந்தது. என்னையும் அறியாமல் அவர்களுடைய அந்த கட்டுப்பாடு எனக்கு ஓர் அரணாக இருந்தது. இன்னும் இருக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்துதான் வீட்டில் பேன் போட்டார்கள், ராலிபேன் என்று நினைவு. தாத்தா இருக்கும்வரை எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. அவ்வாறே சைக்கிளும் இல்லை. வாடகைக்குக் குடியிருப்போர் வீட்டில் ரேடியோ கேட்போம். அவசர வேலைக்கு அவர்களிடம் சைக்கிளைக் கேட்டு வாங்கிக்கொள்வேன். எங்கும் நடந்துதான் செல்லவேண்டும் என்ற சூழல்.

எங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் கும்பேஸ்வரர் தெற்கு வீதியில் படிதாண்டா பரமேஸ்வரி கோயிலை அடுத்து இருந்த சின்ன ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வார்கள். (அரயூர் சுப்பிரமணிய உடையார் மருந்தகம் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை)  அல்லது அங்கே அருகேயுள்ள டாக்டர் ஹலிலுல்லா ஆஸ்பத்திரிக்கோ, கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் இருந்த டாக்டர் பாக்கியம்பிள்ளை ஆஸ்பத்திரிக்கோ அழைத்துச்செல்வார்கள். வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தென்னை மட்டையைப் பிடித்து விளையாடியபோது என் தலையில் தென்னை மட்டை விழுந்து, நான் மயக்கம்போட்டு விழுந்துவிட்டேன்.  பாக்கியம்பிள்ளை டாக்டரிடம் அழைத்துச்சென்று தையல் போட்டார்கள். தலையில் முடியுடன் சிறிது சதை தென்னையோலையில் ஒட்டியிருந்ததாகக் கூறினார்கள். 

தாத்தாவிற்கு உடல் நலம் சரியில்லை என்றால் சிங்காரம் செட்டித்தெருவில் உள்ள ஜெகதீசன் சித்தப்பா வீட்டில் சென்று போன் செய்யச் சொல்வார்கள். விஜயலட்சுமி டாக்கீஸ் எதிரேயிருந்த டாக்டர் எம்.கே.எஸ். அவருடைய காரில் எங்கள் வீட்டில் வந்து தாத்தாவிற்கு சிகிச்சை எடுத்ததைப் பார்த்துள்ளேன். 

தாத்தாவின் பழக்கம் காரணமாக என் மகன்களுக்கும். மனைவிக்கும் அந்த பழக்கத்தினை உண்டாக்கினேன். நாளிதழில் வரும் செய்திகளைப் படித்து அது பற்றி உரையாடுவது என் வழக்கம். நாளிதழ் வாசிப்பின் மூலமாகக் கிடைக்கும் பலன் மதிப்பிட முடியாததாகும். இன்று வரை தொடர்ந்து நாளிதழ்களைப் படித்து வருகிறேன். 

பெரியவர்கள் நமக்கு நல்லதைத் தான் சொல்வார்கள், செய்வார்கள் என்று புரிந்துகொள்ள சற்றே தாமதமானாலும் பிற்காலத்தில் அதனை முழுமையாக உணர்ந்து அதற்கான நல்ல பயனை நான் பெற்றுள்ளதை உணர்கிறேன்.  

06 June 2026

கோயில் உலா

தனியாகவும், குடும்பத்தினருடனும், ஆய்வாளர்களுடனும், தேவாரப்பாடல் பெற்ற தலங்கள், மங்களாசாசனம் பெற்ற தலங்கள்,  வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளிட்ட பல இடங்ளுக்கும் சென்றுவந்ததை அவ்வப்போது வலைப்பூவில் எழுதிவந்துள்ளேன். அவை தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் நூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியுள்ளேன். மேலும் ஆயிரக்கணக்கான புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளேன். வாசகர்களின் எளிமையான வாசிப்புக்காக அவற்றை கீழே தந்துள்ளேன். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் பயணமும், பதிவுகளும் தொடரும். 

தனியாகவும், குடும்பத்தினருடன், ஆய்வாளர்களுடனும்

முனைவர் வீ.ஜெயபால் குழுவினருடன்
  • 2014-2017 (சுருக்கம்)
  • ஏப்ரல் 2014 திருவாய்ப்பாடி, சேய்ஞலூர், மேலக்கடம்பூர், ஓமாம்புலியூர், கானாட்டுமுள்ளூர், திருநாரையூர், திருக்குருக்காவூர், திருமுல்லைவாயில், காழிச்சீம விண்ணகரம்
  • செப்டம்பர் 2014 கடம்பந்துறை, ஐயர்மலை, திருப்பராய்த்துறை, கற்குடி, உறையூர், முக்கீச்சுரம்
  • நவம்பர் 2014 கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருஆலம்பொழில், திருக்காட்டுப்பள்ளி, திருப்பேர்நகர், திருவானைக்காவல், திருச்சி, திருவெறும்பியூர்
  • ஜூன் 2015 திட்டை, திருக்கருக்காவூர், ஆவூர், சத்திமுற்றம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி, நந்திபுரவிண்ணகரம், திருஆதனூர், காவலூர், பஞ்சவன்மாதேவீச்சரம்
  • ஜூலை 2015 பந்தணைநல்லூர், பழமண்ணிப்படிக்கரை, திருவாழ்கொளிப்புத்தூர், திருக்குரக்குக்கா, திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், குருமாணக்குடி, கீழையூர், திருநின்றியூர், கஞ்சனூர், திருஇந்தளூர்
  • மார்ச் 2016 திருமங்கலக்குடி, திருக்கோடிக்கா, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, குத்தாலம், கொருக்கை, அன்னியூர், தேரழுந்தூர்,  உப்பிலியப்பன் கோயில்
  • நவம்பர் 2016 மயூரநாதர் கோயில், திருவிளநகர், கீழப்பரசலூர், செம்பொனார்கோவில், நனிப்பள்ளி, மேலப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, ஆக்கூர், தலைச்சங்காடு, திருநகரி, திருவாலி, திருத்தேவனார்தொகை 
  • டிசம்பர் 2016 திருப்பாலைத்துறை, தென்குரங்காடுதுறை, திருநீலக்குடி, வைகல், திருநல்லம், கோழம்பியம், தேரழுந்தூர், திருவாவடுதுறை, நாச்சியார்கோயில், திருச்சேறை 
  • ஜனவரி 2017 திருநெய்வெணை, திருவெண்ணெய்நல்லூர், திருமுண்டீச்சரம், திருஇடையார் 
  • ஜூன் 2017 கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருநள்ளாறு, திருத்தெளிச்சேரி, தருமபுரம், கொட்டாரம், வேட்டக்குடி, திருக்கடையூர்
  • ஜூலை 2017 திருக்கலயநல்லூர், மருதாநல்லூர், சிவபுரம், அரிசிற்கரைப்புத்தூர், திருநரையூர்ச்சித்தீஸ்வரம், திருப்பந்துறை, வாஞ்சியம், திருவீழிமிழலை, அன்னியூர், கருவேலி, குடவாசல், கருவாய்க்கரைப்புத்தூர், நாலூர் மயானம், திருச்சேறை, திருநாகேஸ்வரம்
  • மார்ச் 2018 திருநல்லூர், திருக்கண்ணமங்கை, நன்னிலம், திருக்கண்டீச்சரம், பனையூர், விற்குடி, கூத்தனூர், திலகைபதி, அம்பர்மாகாளம், அம்பல், திருமீயச்சூர்
  • மார்ச் 2019 சக்கராப்பள்ளி, திருப்பாம்புரம், செருகுடி, திருச்சோற்றுத்துறை, சிறுபுலியூர்,  திருமழபாடியில் நந்தி திருமணம் 
  • ஏப்ரல் 2019 அவிநாசி, திருமுருகன்பூண்டி, பவானி, திருச்செங்கோடு, வெஞ்சமாக்கூடல், கொடுமுடி, கரூர்
  • செப்டம்பர் 2019 திருமருகல், திருப்புகலூர், இராமநந்தீச்சரம், திருச்செங்காட்டாங்குடி, சீயாத்தமங்கை, திருப்பயத்தங்குடி, கரவீரம்
  • மே 2022 விளமல், பெருவேளூர், தலையாலங்காடு, சிக்கல், எண்கண், தேவூர், திருப்பள்ளிமுக்கூடல், திருவாரூர்
  • ஜூன் 2022 அவளிவணல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, கொள்ளம்புதூர், திருவிடைவாயில், கோடியக்கரை, அகத்தியான்பள்ளி, வேதாரண்யம், இடும்பாவனம், உசாத்தானம்
  • ஜூலை 2022 பரிதிநியமம், கோட்டூர், திருக்களர், சித்தாய்மூர், எட்டுக்குடி, வலிவலம், கன்றாப்பூர், கச்சினம், தண்டலை நீள்நெறி, கற்பகநாதர்குளம் , தில்லைவிளாகம்
  • ஆகஸ்டு 2022 திருவஞ்சைக்களம், கொடுங்கல்லூர், திருச்சூர்
  • செப்டம்பர் 2022 ஓகையூர், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவேதிகுடி, திருவையாறு
  • 2023 திருநெல்வேலி, நவதிருப்பதி, திருப்பூவணம், திருப்புத்தூர், திருச்சுழி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி
  • 2025 விருத்தாச்சலம், திருவட்டத்துறை, பெண்ணாகடம், திருக்கூடலையாற்றூர், எருக்கத்தம்புலியூர், ஸ்ரீமுஷ்ணம், காஞ்சிபுரம் கோயில்கள், குரங்கணில்முட்டம், திருமாகறல், திருவன்பார்த்தான்பனங்காட்டூர், அச்சிறுப்பாக்கம், திருத்தண்கா, திருவேளுக்கை, திருப்பாடகம், திருப்புட்குழி, திருவெக்கா
  • 2026 நவகைலாசம், வானமாமலை, திருக்குறுங்குடி, குற்றாலம்

     
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்/முனைவர் மணி.மாறன் உடன்

ஏடகம் குழுவினருடன்
பிற இடங்கள்

பயணம் மேற்கொண்ட இடங்கள், கலந்துகொண்ட விழாக்கள் தொடர்பாக பல பதிவுகளை, நான் எடுத்த புகைப்படங்களை இணைத்து, ஆரம்பித்துள்ளேன். கீழ்க்கண்ட இணைப்புகளைச் சொடுக்கி நான் சென்ற கோயில்கள், விழாக்கள் தொடர்பான பதிவுகளை வாசிக்க அழைக்கிறேன். 

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்: பாரதி பணிச்செல்வர் விருது

11.12.2001இல்  சென்னை, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பாக எட்டயபுரத்திலுள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 120ஆவது பிறந்த நாள் விழாவில் பாரதி பணிச்செல்வர் பட்டம் பெற்றேன். 

நிகழ்விற்கு எழுத்தாளர் சங்கத்தலைவர் கலைமாமணி விக்கிரமன் தலைமை வகித்தார். இலக்கியப் புரவலர் தினகரன் பட்டத்தை வழங்கினார். வரலாற்றறிஞர் அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

சித்தாந்த இரத்தினம் (திருவாவடுதுறை ஆதீனம், 1998), அருள்நெறி ஆசான் (தஞ்சாவூர், அருள்நெறி திருக்கூட்டம், 1998) ஆகிய விருதுகளைத் தொடர்ந்து இது நான் பெற்ற மூன்றாவது விருதாகும். 

இதுதொடர்பாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானது மனதில் நிற்கும் அனுபவமாகும். 






-------------------------------------------------------------------------------------------
நன்றி: அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை
-------------------------------------------------------------------------------------------