21 November 2020

அப்பாவுக்காக... : ஜ. பாக்கியவதி

என் மனைவி திருமதி பாக்கியவதி தன்னுடைய இரண்டாவது படைப்பான  “அப்பாவுக்காக...'' என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார். அவருடைய தந்தையும் என்னுடைய மாமனாருமான திரு திருவண்ணாமலை  நாடார் (1927-1998) அவர்களைப் பற்றிய நினைவலைகளை தன்னுடைய சகோதர சகோதரிகளின் குடும்பத்தாரிடமிருந்து பெற்று ஒருங்கிணைத்துள்ளார்.  தன் தாயாரின் (திருமதி தி.தில்லையம்மாள் (1931-2017)) கைவைத்திய முறையைப் பற்றியும், இளம் வயதில் இறந்த தன் சகோதரரைப் பற்றியும் இதில் எழுதியுள்ளார். 


அவருடைய மகன்கள்/மருமகள்கள், மகள்கள்/மருமகன்கள், பேரன்கள்/பேத்திகள், கொள்ளுப்பேரன்கள்/கொள்ளுப்பேத்திகள் என்ற வகையில் சுமார் 70க்கும் மேற்பட்டோரைத் தொடர்பு கொண்டு மின்னஞ்சல், வாட்ஸ்அப், குரல்வழிப்பதிவு, கூகுள்வழிப்பதிவு என்ற பல நிலைகளில் பெற்றுள்ளார். 

பதிவுகள் தாமதமான நிலையில் உரியவர்களை அலைபேசியில் அழைத்து, நினைவூட்டி அவற்றைப் பெற்று இணைத்தார். அவ்வாறாகப் பெற்ற சுமார் 100க்கும் மேற்பட்ட பக்கங்களை மடிக்கணினியில் தானே தட்டச்சு செய்து, திருத்திய பின் மகன்களுக்கும், மருமகள்களுக்கும் திருத்தத்திற்காக அனுப்பினார். இறுதியாக ஒட்டுமொத்தமாக அதனைப் பார்க்கும்போது அவர் மேற்கொண்ட பணியினைக் கண்டு வியந்தேன்.நுணுக்கமாகவும், செறிவாகவும் இந்நூல் அமைய வேண்டும் என்ற நோக்கில் அவர் எடுத்த முயற்சி போற்றத்தக்கதாகும். 

ஒரு குடும்பத்தில் இருந்து வாழ்ந்து மறைந்தவரைப் பற்றிப் பதியும்போது அது இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும். அவர்களின் பழக்கவழக்கங்கள், வழிகாட்டல்கள், நேர்மைத்தன்மை, மனித நேயம், குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்திச்சென்ற விதம் போன்றவற்றை வளரும் தலைமுறையினர் அறிந்து கடைபிடிக்க இது போன்ற பதிவு உதவும் என்பதில் ஐயமில்லை. இந்நூலைக் காண்போர் தம் பெற்றோரைப் பற்றி எழுத மிகவும் ஆர்வம் கொள்வர். கூட்டுக்குடும்ப முறை அருகி வருகின்ற இக்காலகட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்த இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியதாகும்.

என் மனைவியின் உரையிலிருந்து : 

"...நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு என் கணவர் படிக்கச் சொன்னார். ஆனால் எனக்கு ஆர்வம் இல்லை. மகன்கள் படித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு கம்ப்யூட்டரில் தமிழ் டைப் அடிக்க கற்றுக்கொடுத்தார்கள் அவர்கள் வேலைக்குச் சென்றபிறகு தினமும் நாளிதழ்களும், நூல்களும் வாசிக்க ஆரம்பித்தேன். படிக்கவும் எழுதவும் ஆரம்பித்த நான் தொடர்ந்து என் கணவரும் மகன்களும் எழுதும் கட்டுரைகளையும், கதைகளையும் பிழைத்திருத்தம் செய்ய ஆரம்பித்தேன். தொடர் வாசிப்பு என்னை எழுதத் தூண்டியது..." 

"...கொரோனா நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த எண்ணினேன்..... எங்கள் பெற்றோரைப் பற்றி எங்களைவிட பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் எழுதியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைத்தையும் நேரடியாக நானே மடிக்கணினியில் தட்டச்சு செய்தேன்.... அப்போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது....." 

எங்கள் மகன்களின் அணிந்துரையிலிருந்து : 

"...அனைத்தையும் தட்டச்சு செய்து, ஒரு வடிவத்திற்குக் கொண்டு வந்த பணியை மேற்கொண்டவர் ஒன்பதாம் வகுப்பு வரையே படித்தவர் என்பதை அறியும்போது இதனை ஒரு பெரும் சாதனையாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது..." 

"நூலுக்கான வரைவை எங்களின் பார்வைக்கு அம்மா அனுப்பியதும், 'அக்னிச் சிறகுகள்' நூலில் அப்துல் கலாம் ஒரு நாள் இரவு முழுவதும் உட்கார்ந்து ராக்கெட்டின் வடிவமைப்பைச் செய்து முடித்து தன் துறைத் தலைவரிடம் ஒப்புதல் வாங்கும் காட்சிதான் எங்கள் நினைவிற்கு வந்தது....." 

"ஒருவருடைய செல்வத்தை எடுத்துக்கொள்ள முடியும். ஒருவருடைய உழைப்பை எடுத்துக்கொள்ள முடியும். ஒருவருடைய பொருள்களை எடுத்துக்கொள்ள முடியும், ஆனால் ஒருவருடைய பெயரை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் எங்கள் தாத்தா தன் பெயரையும் முகவரி தெரியாத பல சிறு குறு வியாபாரிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளார். இதைவிட பெரிய கொடை என்னவாக இருக்க முடியும்? அவருடைய கொடையும் நல்லெண்ணமும்தான் நம்மை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது."

நூல் விவரம்: அப்பாவுக்காக..., ஜ. பாக்கியவதி, முதல் பதிப்பு, நவம்பர் 2020, தமிழ்க்குடில் பதிப்பகம், தஞ்சாவூர், ரூ.150, தொடர்புக்கு : +91 9488969722, tamilkudilpathipagam@gmail.com. 


21 ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது.

17 comments:

  1. அருமையான நூலறிமுகம்.

    வளர்வதற்கு வயது ஒரு தடையல்ல, படிப்பும் ஒரு தடையல்ல, ஆர்வமும் முயற்சியும் மட்டுமே போதும்.

    வாழ்த்துகள் தங்கள் துணைவியாருக்கு.

    ReplyDelete
  2. எழுத்தாற்றல் உள்ள குடும்பத்தினரை பாராட்ட எமக்கு தகுதி இல்லை.

    மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் தங்களது நூல்களின் வெளியீடுகள் - கில்லர்ஜி

    ReplyDelete
  3. போற்றுதலுக்கு உரிய முயற்சி

    ReplyDelete
  4. மிக அருமையாக இருக்கிறது நூல் அறிமுகம்.

    உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்கள்!

    அவர்கள் உழைப்புக்கு எல்லோரும் உறுதுணையாக இருந்தது மகிழ்ச்சி.

    மாயவரத்தில் "சிங்கமடை அய்யனார் ஸ்வீட் கடை" என்று எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது அவர்கள் எங்களுக்கு குடும்பநண்பர் ஆகி விட்டார்கள். அவர்களுக்கு ஊர் கோவில்பட்டி.

    ReplyDelete
  5. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. முதலில் மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் மனைவிக்கு!

    நூலறிமுகம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. உங்கள் குடும்பமே எழுத்தாளர்கள் குடும்பம் என்பதும் மிகச் சிறப்பான விஷயம். அவரது உழைப்பிற்கு உங்கள் குடும்பம் முழுவதுமே ஆதரவளித்து ஊக்குவித்து உறுதுணையாக இருந்ததும் மிகப் பெரிய விஷயம். அறிவிற்கும் வளர்ச்சிக்கும் நம் பெயருக்குப் பின்னால் பட்டங்களோ வயதோ எதுவும் தடையல்ல. வாசிப்பும் உழைப்பும் ஆர்வமும் இருந்தால் போதும்.

    மேலும் மேலும் நூல்கள் வெளியிட மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே

    அருமையான நூலறிமுகம்.. பல பத்திரிக்கைகளில் எழுதி, சிறந்த சாதனைகள் பல செய்துள்ள உங்கள் துணைவியாருக்கு என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.வணக்கங்கள்.

    உங்கள் குடும்பத்தில் அனைவருமே சிறந்த எழுத்தாற்றலுடன் அமைந்திருப்பது மிகவும் மகிழ்வாகவும், பெருமிதமாகவும் உள்ளது. குடும்பத்தில் அனைவரின் ஒற்றுமையும், பண்பான கல்வியறிவும் போற்றத்தக்கது. மேலும் மேலும் சிறந்த நூல்களை உங்கள் துணைவியார் வெளியிட இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. மிகவும் மகிழ்ச்சி...
    தாங்கள் சொல்வது போல ஒவ்வொருவருக்கும் அவர்களது தாய் தந்தையரைப் பற்றி எழுதத் தோன்றும்..

    இன்னும் பல சாதனைகளைப் படைக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்...

    யார் கண்டது!..

    கும்பகோணம் பேட்டையில் தங்களது முன்னோர்களும் எங்களது முன்னோர்களும் ஒன்றாக் இருந்திருக்கலாம்...

    ReplyDelete
  9. அன்பு முனைவர் ஐயா அவர்களுக்கும் அவரது மனைவி திருமதி
    பாக்கியவதிக்கும் வாழ்த்துகள்.
    நலமே வாழ்க.
    படிப்புக்கும் தமிழ்ப் புலமைக்கும்
    பெற்றோரின் வழிகாட்டல் இருந்ததால்
    அவர் உழைப்பு பரிமளிக்கிறது.
    புதல்வர்கள் தாய்க்கு உதவி செய்தது மிக நெகிழ்ச்சி. இன்னும்
    நிறைய அன்புவங்களை உங்களது திருமதி
    பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  10. பாராட்டப்பபடவேண்டியவர்.  மிகவும் அரிதான, நல்ல முயற்சி.  புத்தகத்தைப் படிக்கும் ஆவல் வருகிறது.  விபிபியில் அனுப்ப முடியுமானால் வாங்க ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. tamilkudilpathipagam@gmail.com. மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியை, தொலைபேசி விவரத்துடன் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

      Delete
  11. //என் கணவரும் மகன்களும் எழுதும் கட்டுரைகளையும், கதைகளையும் பிழைத்திருத்தம் செய்ய ஆரம்பித்தேன். தொடர் வாசிப்பு என்னை எழுதத் தூண்டியது..."// ...நீங்கள் ஒரு “பாக்கியவான்”! தொடரட்டும் .......... மேலும் மேலும்.

    ReplyDelete
  12. அருமையான நூலறிமுகம் .துணைவியார்க்கு வாம் த்துக்கள், தஞ்சை அப்பா ண்டை ராஜ்

    ReplyDelete
  13. நூல் வடிவமாக்க கடினமாக முயன்றுள்ளார். 70 நபர்களை தொடர்பு கொண்டு தகவல் சேகரிப்பு அவரின் உறுதியான உள்ளம் மெச்சத்தகுந்தது.தொடர்ந்து எழுதுக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அன்பின் அய்யா 

    மகத்தான பாராட்டுக்குரியது.... 

    திருமதி பாக்கியவதி அவர்களுக்கு, இப்படியான பெயர் வைத்த பெற்றோர் வரம் பெற்றோர். அப்படியான பெற்றோர்க்குத் தமது அருமையான நன்றி தெரிவிக்குமுகத்தான் இந்த நூலாக்கம். குடும்பப் பெரியவரை, குழந்தைகள் கொண்டாடுவதை விடவும் பேறு என்ன இருக்க முடியும்.... அது வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறையினரையும் நிற்க அதற்குத் தக என்னவாறு வளர்த்து வந்துள்ள தன்மையின் பளிங்கு பிரதிபலிப்பு அன்றி வேறென்ன...  

    ஏராளமான நூல்கள் வாசிக்காமல் அவை என்னை அன்றாடம் கேலி செய்து கொண்டிருந்தாலும், புத்தகக் காதல் கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறது... நிச்சயம், வாசிப்பேன், கூட்டாக இழுக்கும் குடும்பத் தேர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறேன்.

    எஸ் வி வேணுகோபாலன்
    9445259691

    ReplyDelete
  15. மகிழ்ச்சி ஐயா! எழுத்தாளர் குடும்பம் உங்கள் குடும்பம்! உங்கள் மனைவியின் முயற்சிகள் பாராட்டப் பட வேண்டியன. ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கும் உங்கள் குடும்பத்தைப் பார்த்து வியந்து வணங்குகிறேன்.

    ReplyDelete
  16. தங்கள் இல்லத்தரசி திருமதி.பாக்யவதி அவர்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! நல்ல எழுத்துக்கு வயதோ, சூழ்நிலையோ, படிப்போ ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆர்வமும் முயற்சியும் திறமையும் இருந்தால் எந்த வயதிலும் வெற்றியடையலாம் என்பதற்கு தங்கள் மனைவி ஒரு நல்ல உதாரணம்!!!

    ReplyDelete