14 March 2020

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : சிறிய திருமடல் : திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிய சிறிய திருமடலை (2673) அண்மையில் நிறைவு செய்தேன். அப்பாடலில் சில அடிகளைப் பொருளுடன் காண்போம். 



கார்ஆர் வரைக் கொங்கை, கண் ஆர் கடல் உடுக்கை,
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வின் பெருமா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பேரோர் சொலப்பட்ட மூன்று அன்றே -- ...
மேகங்கள் படிந்த மலைகளைத் தனங்களாகவும், விரிந்த கடலை உடையாகவும், ஒளிமயமான சூரியனைத் திலகமாகவும், சிவந்து கலங்கியுள்ள பெரிய ஆறுகளை ஆரங்களாகவும் அணிந்த மார்பை உடைய, பெரிய மேகமாகிய கூந்தலை உடையவளாய், நிறைந்த நீராகிய கடலை ஆடையாக உடையவளான பூமிப்பிராட்டியை அபிமான தேவதையாக உடைய உலகத்தார் சொல்லும் புருஷார்த்தங்கள் மூன்றே. (வீடு பேற்றை மறுக்கிறார்.)

...கட்டுரையா,
நீர் ஏதும் அஞ்சேல்மின்; நும் மகளை நோய்செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்;
கூர் ஆர் வேல் கண்ணீர்; உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால இலங்கை பொடிப் பொடியா வீழ்ந்தது; மற்று
ஆராலே கன்-மாரி காத்ததுதான்--ஆழிநீர்
ஆரால் கடைந்திடப்பட்டது;...
கட்டுவிச்சி வாய்விட்டுக் கூறியது :  நீர் சிறிதும் அஞ்சவேண்டா. உங்களது பெண்ணுக்கு இந்த நோயைச் செய்தவன் வேறு ஒருவனுமல்லன். அவனை நான் அறிந்தேன். கூர்மை மிக்க வேல் போன்ற கண்ணுடைய மங்கையரே! கேளுங்கள். நீர் அறியுமாறு சொல்கிறேன். இந்த வையகம் யாரால் அடியளக்கப்பட்டது? யாரால் இலங்கை பொடிப்பொடியாய் அழிந்தது? கல்மழை யாரால் தவிர்க்கப்பட்டது? கடல் நீர் யாரால் கடையப்பட்டது?

...மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடைநோவ, எத்தனையோர் போதும் ஆய்,
சீர் ஆர்  தயிர்கடைந்து, வெண்ணைய் திரண்டு அதனை
வேர்ஆர் நுதல்மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி, நன்கு அமைய வைத்து...
இவள் தயிர் கடைவதற்காக மத்தைக் கையிலே படியப் பற்றிக்கொண்ட அழகிய நுண்ணிய இடை நோவுமாறு வெகுநேரம் கடைந்தாள். அதனால் இவளது நெற்றி வியர்த்தது. இவள் கடைந்த வெண்ணெயை வேறொரு கலத்திலிட்டு நாராலான உறியில் வைத்துக் கயிற்றை உருவி வைத்தார்.


...தன் சீதைக்கு
நேர் ஆனவன் என்று ஓர் நிசாசரி--தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து, அவட்கு மூத்தோனை -- வெந்நகரம்
சேரா வகையே சிலை குனித்தான்; செந்துவர்  வாய்
வார் ஆர் வனமுலையாள் வைதேவி காரணமா,
ஏர் ஆர் தடந்தோள் இராவணனை -- ஈர் ஐந்து 
சீர் ஆர் சிரம் அறுத்துச் செற்று....
தனக்கு உயிராகிற பிராட்டிக்கு நேராவேன் என்று பிராட்டியைப் போல் அழகுபடுத்திக்கொண்டு வந்த சூர்ப்பணகையைக் கடிந்து, கூரான வாளினால் அவளது கொடி போன்ற மூக்கையும், காதுகளையும் அரிந்து அனுப்பினான். அவளுக்கு மூத்தோனாகியரகனிடம் போர் செய்து ஒருவன் அனுபவிக்கக்கூடிய நரக வேதனை யாவும் அந்தப் போரிலே அனுபவிக்குமாறு வில்லை வளைத்தான். அன்றியும், சிவந்த வாயும், அடர்ந்த தனமுமுடைய சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் செய்தான். அழகிய வலிய தோள்கள் வாய்ந்தவனான அவனது சிறந்த பத்து தலைகளை அறுத்து அவனை முடித்துக் களித்தவன்.


நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,

10 comments:

  1. பிரபந்த பாடல்கள் விளக்கம் அருமை.

    ReplyDelete
  2. சிறந்த படைப்பு
    பாராட்டுகள்

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே

    நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களும், அதன் விளக்கங்களும் படித்தேன். அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. படித்துவிட்டேன்.... கொஞ்சம் ஆழ்ந்த மனம் செலுத்திப் படிக்கலை. படித்திருந்தால் நிரடல்களையும் எழுதியிருப்பேன். உங்க பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. பத்து வருடத்திற்கு முன்பு சுஜாதா எழுதிய சமயத்தில் வாசித்த போதும் ஈர்க்கவில்லை. நீங்கள் எழுதியதை வாசிக்கும் போது உள்ளே நுழைய முடியவில்லை. காரணம் மனமும் வயதும் முதிர்ச்சி அடையாத நிலையில் இது போன்ற பொக்கிஷங்களில் உள்ள புதையலை நம்மால் கண்டு கொள்ள வாய்ப்பில்லை. நானும் 60 வயதில் இந்தப் பக்கம் வந்து விடுவேன் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    ReplyDelete
  7. வாவ்
    தொடர்க அய்யா

    ReplyDelete