18 October 2022

ஆத்தாவின் பாசம்

1970களின் ஆரம்பத்தில், நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வீட்டில் தீபாவளிக்காக எங்கள் ஆத்தா (அப்பாவின் அம்மா) பலகாரம் செய்த நாட்களை என்றும் மறக்கமுடியாது. அருகில் நாங்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்திருப்போம். ஏதாவது கதையைச் சொல்லிக்கொண்டோ, புத்திமதிகள் கூறிக்கொண்டோ வேலையைப் பார்ப்பார்கள். "பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும், நல்லா படிக்கணும்,  உங்களுக்குள்ள அடிச்சுக்கக்கூடாது, நல்ல பழக்கவழக்கம் கத்துக்கணும்" என்ற வகையில் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் பேச்சிற்கு நாங்கள் மறுப்பேதும் கூறமாட்டோம்.  "உம்" போட்டுக்கொண்டே சாதா முறுக்கு, முள் முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை, பச்சைப்பயறு உருண்டை, கெட்டி உருண்டை (பொருள்விளங்கா உருண்டை) போன்றவற்றை அவர்கள் செய்வதைப் பார்ப்போம். எங்களையும் அறியாமல் அவர்கள் கூறிய புத்திமதிகள் மனதைப் பக்குவப்படுத்தவும், பண்படுத்தவும் பெரிதும் உதவியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 

முறுக்கினை பெரிய பித்தளைக்குவளையிலும், பித்தளைப் பானையிலும் அழகாக அடுக்கிவைப்பார்கள். பிற பலகாரங்களையும் அவ்வாறே வைப்பார்கள். சிலவற்றை சாமி படத்தின்முன்பாக வைப்பார்கள். தீபாவளிக்கு முன்பாகவே, அதனை நாங்கள் ருசிக்க ஆரம்பித்துவிடுவோம். எண்ணெய், மாவு, நெய் என்பதையெல்லாம் கடந்து மனதால் வெளிப்படுத்த முடியாத ஒரு ருசி அதில் இருக்கும். ஆத்தாவின் பாசத்தைக் கொண்டு செய்யப்பட்டதல்லவா? தீபாவளியின்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கொண்டுபோய் கொடுப்போம். 

ஆத்தாவிற்குப் பிறகு அவரது மருமகள் (எங்கள் அம்மா) ஆத்தா செய்ததைப் போலவே அதே பேச்சு, உரையாடல்களுடன் தீபாவளி பலகாரம் செய்தார்கள்.  எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். சற்று வளர்ந்துவிட்ட நிலையில் பேச்சுகளில் எங்களுக்குள் நிதானம் இருப்பதை உணரமுடிந்தது. ஆத்தா கூறிய அளவிற்கு புத்திமதி இல்லாவிட்டாலும், பரஸ்பர உரையாடல் இருக்கும். முறுக்கு மற்றும் உருண்டையை அடுக்கும்போது வெளி சுற்றிலிருந்து உள்ளே வரும்படியாக, எடுக்கும்போது உடையாமல் இருக்கும் வகையில் அடுக்குவார்கள். ஆத்தா செய்தபோது பலகாரத்தில் இருந்த அதே ருசியை அதனைக் கண்டேன்.  அக்கம்பக்கத்தில் உள்ளோருக்கும், நண்பர்களுக்கும் பலகாரத்தைத் தருவோம்.

திருமணத்திற்குப் பின் என் மனைவி, தன் மாமியார் செய்ததைப் போலவே தீபாவளி பலகாரம் செய்ய ஆரம்பித்தார். உருண்டை செய்வதை மாமியாரிடம் கற்றுக்கொண்டதாகப் பெருமையோடு கூறுவார்.  

இந்தத் தீபாவளிக்காக பலகாரங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் ஆத்தாவிற்கு நாங்கள் உதவியது, ஆத்தா சொன்ன புத்திமதி, பாத்திரங்களில் அடுக்கியது அனைத்தும் நினைவிற்கு வந்தன. முதலில் சாதா முருக்கையும், முள் முருக்கையும்,  காசிப்பானையிலும், பயத்தம்பருப்பு உருண்டையை மற்றொரு பாத்திரத்திலும் அடுக்கினேன். சில முறுக்குகளையும், உருண்டைகளையும் சாமி படத்தின்முன் வைத்துவிட்டு, ஒவ்வொன்றையும் ருசி பார்க்க ஆரம்பித்தேன். அதில் எங்கள் ஆத்தா வைத்தபோது இருந்த ருசியையே உணர்ந்தேன். அதனை என் மனைவியிடம் பகிர்ந்தபோது என் கண்ணில் லேசாக கண்ணீர்த்துளி. என் ஆத்தாவின் அருகில் இருப்பதைப் போல இருந்தது. ஆத்தாவின் பாசமும், வாசமும் அருகில் இருப்பதைக் கண்டேன். நம் முன்னோர்கள் நமக்கு இட்டுச்சென்றது  இந்த நல்ல பழக்கங்களும், பாசமும், பண்பாடும்தான். அந்நாள்கள் சில நொடியில் வந்தன. சிறிது நேரம் வானத்தில் பறப்பதுபோல இருந்தது. சுய நினைவிற்கு வர சற்றே நேரமானது. 

15 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

9 comments:

  1. நெகிழ்ச்சியான அனுபவங்கள். தீபாவளிக்கு அதற்குள் பலகாரம் செய்யத் தொடங்கியாச்சா?!

    ReplyDelete
  2. எண்ணெய், மாவு, நெய் என்பதையெல்லாம் கடந்து மனதால் வெளிப்படுத்த முடியாத ஒரு ருசி அதில் இருக்கும். ஆத்தாவின் பாசத்தைக் கொண்டு செய்யப்பட்டதல்லவா?//

    அப்படியே இதை வழி மொழிகிறேன். என் பாட்டியும் இப்படித்தான்.

    உங்கள் அனுபவங்கள் வாசித்து மனம் நெகிழ்ந்தது. அதோடு என் பாட்டி, அம்மா இவர்களின் நினைவும் கூடவே வந்தது.

    தீபாவளி வாழ்த்துகள்.,

    கீதா

    ReplyDelete
  3. எனது கருத்துரை ?

    ReplyDelete
  4. // எண்ணெய், மாவு, நெய் என்பதையெல்லாம் கடந்து மனதால் வெளிப்படுத்த முடியாத ஒரு ருசி அதில் இருக்கும். ஆத்தாவின் பாசத்தைக் கொண்டு செய்யப்பட்டதல்லவா?..//

    உண்மை.. உண்மை..

    மனதை நெகிழ்விக்கும் நினைவுகள்..

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. தங்களின் மலரும் நினைவாக தீபாவளி நினைவுகளை தங்களின் பாட்டி, அம்மாவுடன் இணைத்துச் சொல்லியது மனதை நெகிழ்த்தியது.

    அந்தக் காலத்தவர்களின் உழைப்பே தனி. அவர்களின் பொறுமையும், பக்குவமும் என்றும் நம் மனதை விட்டு அகலாதது.

    /நம் முன்னோர்கள் நமக்கு இட்டுச்சென்றது இந்த நல்ல பழக்கங்களும், பாசமும், பண்பாடும்தான். அந்நாள்கள் சில நொடியில் வந்தன. சிறிது நேரம் வானத்தில் பறப்பதுபோல இருந்தது. சுய நினைவிற்கு வர சற்றே நேரமானது. /

    உண்மை. உண்மை. பதிவை படிக்கையில் என் விழிகளும் கசிகின்றன. பெரியவர்களின் பாரம்பரியங்களை அப்படியே பின்பற்றி வாழும் தங்கள் மனைவிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. மனம் ஏங்கும் அழகிய இனிய நினைவுகள்...

    ReplyDelete
  7. நெகிழ்ச்சியான நினைவலைகள்

    ReplyDelete
  8. " எண்ணெய், மாவு, நெய் என்பதையெல்லாம் கடந்து மனதால் வெளிப்படுத்த முடியாத ஒரு ருசி அதில் இருக்கும்.
    உண்மை தான்!
    மனதை நெகிழ வைத்தது உங்கள் பதிவு! கூடவே, சிறு வயதின் இனிய நினைவுகளை கொஞ்ச நேரம் மீண்டும் அசை போட வைத்தது!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ஐயா... காலத்தின் மாற்றம் தானே ஐயா..

    ReplyDelete