13 September 2026

சைவம் காட்டும் அற்புதங்கள்: குடந்தை கே.என்.நாகராஜன்

திரு குடந்தை கே.என்.நாகராஜன்,   "சைவம் காட்டும் அற்புதங்கள்" நூல் மூலமாக   63 நாயன்மார்களின் பெருமையை கவிதை வடிவில் எடுத்துக்கூறுகிறார். 


விநாயகர் வணக்கம்,  சுந்தரரின் திருத்தொண்டத்தொகை ஆகியவற்றின் தொடக்கத்துடன் உள்ள இந்த நூலில் நாயன்மார்களின் வரலாற்றை மிகவும் தெளிவாகத் தந்துள்ளார். எளிய நடை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான சுருக்கமான, அதே சமயம் செய்திகளைத் தருகின்ற வகையில் அமைந்துள்ள கவிதை வரிகள் மூலமாக நாயன்மார்களின் பிறப்பு தொடங்கி அவர்களின் சிவத்தொண்டினை எடுத்துக்கூறும் விதம் வாசிப்போரை அதில் முற்றிலுமாக லயித்துவிட வைக்குமளவு உள்ளது. 


கவிதையைப் படிக்கும்போது அவர் எவ்வளவு சிரமப்பட்டு சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை உணரமுடிகிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அந்தந்த நாயன்மார்களின் கதையைப் பற்றி கவிதையை வடிக்கின்ற அதே சமயத்தில் அது தொடர்பான ஓவியங்களை ஆங்காங்கே அமைத்துள்ளவிதம் நூலுக்கு அழகு சேர்க்கிறது. அவை, வெளிப்படுத்தும் எண்ணங்களை  வாசகரின் மனதில் மிகவும் விரைவாக சென்று சேர்க்கின்றன.

நாயன்மார்களைப் பற்றி மட்டுமன்றி மாணிக்கவாசகர், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், இராஜராஜசோழன் (திருமுறைகண்டசோழன்)  உள்ளிட்டோரைப் பற்றியும் கவிதை படைத்துள்ளார். 

சைவத்திற்கான இவருடைய தொண்டு தொடர்வதை இந்நூல் புலப்படுத்துகிறது. அறுபடை வீடு கொண்ட திருமுருகா! என்ற பாடலைக் கேட்கும்போது அறுபத்துமூவரைப் பற்றி அதுபோல் முடியுமா! என்று எண்ணியதன் விளைவே இந்நூல் என்று கூறும் நூலாசிரியர், ஈசன் திருவருளால் மென்மேலும் பல நூல்களைப் படைக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

தலைப்பு: சைவம் காட்டும் அற்புதங்கள் (கவிதைகள்) 
ஆசிரியர்: குடந்தை கே.என்.நாகராஜன்
பதிப்பகம்: அஞ்சலை வெளியீட்டகம், 4/54, கொத்தத் தெரு, மேல கபிஸ்தலம் 614 203, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், அலைபேசி 94868 83504 பதிப்பாண்டு: முதல் பதிப்பு, ஜூலை 2026
விலை: ரூ.150

No comments:

Post a Comment